மதிப்புரை | ||
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள் | ||
தியடோர் பாஸ்கரன | ||
பறவைகளை அவதானித்தல் (bird watching) என்றால் என்ன? ஒரு பறவையின் அழகால், அதன் அசைவுகளால், குரலால் ஈர்க்கப்பட்டுச் சில சமயங்களில் அதை நாம் ஓரிரு வினாடிகளாவது நின்று கவனித்தது உண்டு அல்லவா? இதன் நீட்சிதான் இந்த ஆர்வம். இந்த ஈர்ப்பு அக்கறையாக மாறிப் புறவுலகைப் பற்றிய கரிசனத்திற்கும், புரிதலுக்கும் நம்மை இட்டுச் செல்கிறது. ஒரு பறவையைப் பார்க்கும்போது எழும் முதல் கேள்வி “இது என்ன பறவை?” இந்தக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறது புள்ளினம் பற்றிய மற்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம். அதன் இயல்பு, நடவடிக்கை, குரலோசை, இரைதேடும் முறை, இனப்பெருக்கம் செய்யும் காலம் என நம் கேள்விகள் விரிகின்றன. இவற்றுக்கு விடைதருவதோடு, புள்ளினம் பற்றிய நமது ஆர்வத்தை வளர்ப்பது தான் பறவைகளைப் பற்றிய கையேடுகளின் நோக்கம். இத்தகைய ஈடுபாடு புறவுலகிற்கும் நமக்கும் பாலமாக அமைகிறது. புள்ளினங்களின் வாழ்விடத்தைப் பற்றி, வாழ்முறை அறிய முற்படும்போது சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கிறோம். இயற்கையில் ஒன்றுக்கொன்றிருக்கும் பிணைப்புகள் பற்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. நாகர்கோவிலில் வாழும் பறவையியலாளர் ராபர்ட்டும் அவருடைய மனைவி ஷைலஜாவும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் நீர்ப்பறவைகள் பற்றிய இந்த இருமொழிக் கையேடு சிறப்பாக அமைந்துள்ளது. நீர்நிலைகளில் பறவைகளை அவதானிப்பது காடு போன்ற மற்ற பகுதிகளைவிட எளிது. பரந்த இடம். நாம் ஓரிடத்தில் இருந்து பைனாகுலர் மூலம் நிதானமாகப் புள்ளினங்களைப் பார்க்கலாம். பறவைகளும் அங்கேயே இருக்கும். சிறவி, உள்ளான் போன்ற வலசை வரும் பறவைகளை அவதானிக்கவும் ஏரி, குளங்கள் சிறந்த இடங்கள். அதிலும் உவர்ப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கும் முகத்து வாரங்கள், காயல் நீர்ப்பரப்புகள் (lagoon) அரிய பூநாரை போன்ற நீர்ப்பறவைகள் பலவற்றை ஈர்க்கின்றன. 1942இல் சலிம் அலி இந்தியப் பறவைகள் பற்றிய கையேட்டு நூலை (The Book of Indian Birds) வெளியிட்டு ஒரு பெரிய இயக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அதற்கு முன்னரே பிரிட்டிஷ் இந்திய அரசில் பணிபுரிந்த ஆங்கில அதிகாரிகள் சிலர் பறவைகளைக் கவனித்துக் கையேடுகள் சில எழுதினார்கள். மருத்துவராகப் பணி புரிந்த ஜெர்டன், காவல்துறையில் வேலைசெய்த விஸ்லர், ஐ.சி.எஸ் அதிகாரியாக இருந்த டக்ளஸ் டிவார் போன்றோர் எழுதிய அரிய நூல்கள் இந்தியாவின் புள்ளினச் சிறப்பை உலகிற்குக் கொண்டுசென்றன. இன்று அந்நூல்களின் ஒவ்வொறு பிரதியும் சோழர்காலச் செப்பு சிலைகள்போல விலைபோகின்றன. சலிம் அலியின் கையேடு பதினைந்து பதிப்புகள் வந்த பிறகும் இன்றும் அதற்கு வரவேற்பு குறையவில்லை. இந்தியச் சுற்றுச்சூழல் இயக்கத்தில் சலிம் அலியின் கையேட்டிற்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. சலிம் அலியின் மாணவரும் அவருடன் பல பதிற்றாண்டுகள் பணிபுரிந்த ஒருவரும் சேர்ந்து எழுதியிருக்கும் நூல் தமிழகத்தின் நீர்ப்புலப் பறவைகள்/ Wetland Birds of Tamil Nadu நூலாசிரியர்களான ராபர்ட் - ஷைலஜா தம்பதி மும்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் நாகர்கோவிலில் குடியேறினர். ராபர்ட் இந்தியாவின் பறவை ஆய்வாளர்களில் ஒரு முன்னோடி. பறவையியல் துறையில், பிணந்தின்னிக் கழுகுகளைப் பற்றிக் கள ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். விமானங்கள் வானில் பறவையுடன் மோதி இடருறும் பிரச்சினை பற்றி ஆராய்ந்து அரசுக்கும், வான் படைக்கும் அறிக்கை அளித்தவர். நீர்நிலைகளில் பார்க்கக் கூடிய 147 புள்ளினங்கள் பற்றி 215 புகைப் படங்கள் அடங்கிய இருமொழிக் கையேடு இந்நூல். தமிழகத்திலுள்ள பதினான்கு பறவைச் சரணாலயங்களும் நீர்நிலைகளைச் சார்ந்திருக்கின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் விவர ஞானத்தின் அடிப்படையில் கச்சிதமாக எழுதப்பட்ட, அருமையான, ரத்தினச் சுருக்கமான குறிப்புகள் மூலம் நீர்ப்புலப் பறவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் காணக்கூடிய மூன்று வெண்கொக்குளை வேறுபடுத்தி அடையாளம் காண்பது பற்றித் தரப்பட்டிருக்கும் குறிப்பை எடுத்துக்காட்டாகக் கூறலாம். வலசை வரும் பறவைகளைப் பற்றிய நிலப்படம் எளிமையாக இந்தப் பயணங்களை விளக்குகிறது. முன்னர் வந்த கையேடுகளில் பற்வைகள் ஓவியமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. வெகுவேகமாக, வெளிச்சம் மிகக்குறைவாக இருந்தாலும் படமெடுக்கக் கூடிய டிஜிடல் காமிராக்கள் காட்டுயிர் ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக வந்த பிறகு பெருவாரியான காட்டுயிர்க் கையேடுகளிலும் புகைப்படங்கள்தாம் பயன்படுத்தப்படுகின்றன. பறவை அவதானிப்பில் இன்று ஆர்வம் அதிகமாகியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்நூலின் ஒரு சிறப்பு பரிமாணமம் புகைப்படங்கள். கிளமெண்ட் ஃபிரான்சிஸ் போன்ற நாட்டின் தலைசிறந்த காட்டுயிர்ப் புகைப்பட நிபுணர்கள் பலரின் படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, தாமரைக்கோழி ஒன்று பறக்கும் நிலையில் உள்ள படத்தில், நீர்த்தாவர இலைகளின் மேல் நடப்பதற்கு ஏதுவாகத் தகவமைப்பில் உருவாகியுள்ள நீண்ட விரல்கள் தெளிவாகத் தெரிகின்றன. (இந்தப் பறவை நீரில் மிதக்கும் இலைகளின் மேல் நடந்துசெல்வது நீரின் மேல் அது நடப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் அதற்கு ‘ஜீசஸ் பறவை’ என்று பாப்புவா நீயுகினியில் பெயர்). அதேபோல் தரைக் கூட்டிலுள்ள ஆள்காட்டிக் குருவியின் படமும் துல்லியமாக உள்ளது. எல்லாப் படங்களுமே தெளிவாக, இயற்கையான, அழுத்தமான வண்ணங்களுடன் அமைந்துள்ளன. ஆனால் படங்களின் பின்புலத்தை (background) போட்டோ ஷாப் மூலம் நீக்கிவிட்டது படத்தின் சிறப்பைக குறைக்கிறது. காட்டுயிரைக் காட்டும் புகைப்படத்தின் முக்கியப் பரிமாணம் பின்புலம். அது அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் (habitat) காட்டுகிறது. பூநாரை இரை தேடும் பரந்த, ஆழமற்ற நீர்நிலைகள், மரத்தில் அமரும் மீன்கொத்தி இவற்றைப் படங்கள் காட்டலாம். பறவையின் தமிழ்ப் பெயர்கள் பற்றி ஒரு நல்ல குறிப்பை ஆசிரியர் தருகிறார். புள்ளினங்களின் பெயர்கள் பற்றிக் குழப்பம் நிலவுவதைக் குறிப்பிடுகிறார். முப்பதுகளில் நிக்கொலாஸ் என்ற ஆங்கில அதிகாரி தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து மும்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சஞ்சிகையில் (Journal of BNHS) இரண்டு கட்டுரைகளை வெளியிட்டார். தமிழக வனத் துறை அதிகாரி எம்.ஏ.பாட்சா 150 பறவைகளின் தமிழ்ப் பெயர்களை ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1952இல் வெளியான கலைக்களஞ்சியத்தில் மா.கிருஷ்ணன் ஐம்பது பறவைகளைப் பற்றி எழுதிய குறிப்புகளைத் தொகுத்துப் பெருமாள்முருகன் பறவை உலகம் என்ற நூலை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணன், தமிழகச் சுற்றுலாத் துறைக்காக எழுதிய வேடந்தாங்கல் சரணாலயம் என்ற நூலையும் அதிலுள்ள தமிழ்ப் பெயர் பட்டியலையும் இதில் பெருமாள்முருகன் சேர்த்துள்ளார். க. ரத்னம் தனது தமிழ்நாட்டுப் பறவைகள் (2002) என்ற நூலில் பல பாரம் பரியப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் பெயர்கள் எல்லாமே புழக்கதிலிருப்பவை. இட்டுக்கட்டப்பட்டவையோ அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையோ அல்ல. இதில் பல பெயர்களை ராபர்ட் பயன்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக purple heronஇன் தமிழ்ப் பெயர் செந்நாரை. செந்நீலக் கொக்கு அல்ல. Grey heron சாம்பல் கொக்கு அல்ல சாம்பல் நாரை. கொக்கு என்று நாரைகளைக் குறிப்பிடுவது தவறு. Painted Stork சங்குவளை நாரை, வர்ண நாரை அல்ல. ஐபிஸ் என்றழைக்கப்படும் பறவையின் தமிழ்ப் பெயர் அன்றில். ‘அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது’ என்று பாரதி குறிப்பிட்டார். இவை எல்லாமே இன்றும் புழக்கத்திலிருக்கும் பழைய பெயர்கள். அதே போல் பாரம்பரிய, இன்றும் புழக்கத்தில் இருக்கும் பெயர்களான உழவாரக்குருவி (Swift) தகைவிலான் குருவி (Swallow), தாமரைக்கோழி (Pheasant tailed jacana), சிறவி, கிழுவை (Common teal) பவளக்கால் உள்ளான் (Black-winged stilt) போன்ற பல பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை. கிராமத்து மக்களிடையே இன்றும் பல பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன. நீலகிரி மாயார் பள்ளத்தாக்கில் கள ஆய்வுசெய்து வரும் பாரதிதாசன் பிணந்தின்னிக்கழுகு என்று குறிப்பிடப்படும் vultureஐ மக்கள் பாறு கழுகு என்றழைப்பதைப் பதிவுசெய்திருக்கிறார். சில தமிழ்ப் பெயர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாமல் புழக்கத்திலிருக்கின்றன என்பது வியப்புக்குரியது. குறளிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல் வெல்லும் இதில் பிரச்சினை என்னவென்றால், சில பறவைகளுக்குத் தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. கொண்டைலாத்திக்கு எழுத்தாணிக் குருவி என்றும் சுடலைக்குயிலுக்குப் பருத்திக்குயில் என்றும் பெயர்கள் உண்டு. சில பறவைகளுக்குத் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர் இருக்கும். இது நம் மொழிவளத்தின் ஒரு பரிமாணம் என்று நான் கருதுகிறேன். நமது பாரம்பரிய வகைப்பாட்டியல் இன்றைய மேற்கத்திய வகைப்பாட்டியலிலிருந்து வேறுபட்டது என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். உயிரியிகளின் தமிழ்ப் பெயர்கள் மறைவதற்குப் பல காரணங்கள். ஆங்கில வழிக்கல்வி அதில் முக்கியமானது. ஆங்கிலப் பெயர்கள் மூலமே மாணவர்கள் தங்களைச் சுற்றிலும் உள்ள காட்டுயிர்களை அடையாளம் காண்கிறார்கள். தமிழ்நாட்டில் காட்டுயிர் பற்றி ஆராய்கிறவர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்தவர்களே. ஆகவே அவர்களும் தமிழ்ப் பெயர்களில் அக்கறை காட்டுவதில்லை. சத்திமுத்தப் புலவரின் புகழ்பெற்ற ‘நாராய் . . . நாராய்’ பாடலில் குறிப்பிடப்படும் பறவை செங்கால் நாரையா (White Stork) அல்லது சங்குவளை நாரையா (Painted Stork) என்ற கேள்வியை ஆசிரியர் எழுப்பியுள்ளார். ஐம்பதுகளில் Esquire என்ற ஆங்கில மாத இதழில் இந்தப் பாடல் பற்றிய ஒரு கட்டுரையை மா.கிருஷ்ணன் எழுதினார். வலசை போகும் ஒரு பறவையினத்தை எப்படித் துல்லியமாகக் கவிஞர் வர்ணிக்கிறார் என்று வியந்து எழுதினார். இந்த நாரையின் முக்கியமான அடையாளங்கள் சிவப்பு நிறக்கால்கள், பவள நிறம் கொண்ட, பனங்கிழங்கின் உட்பாகம் போன்ற அலகு, அலகின் நிறம் பவளம். இது செங்கால் நாரை என்பதில் என்ன சந்தேகம்? கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பு With coral-red beak, sharp tapered/ Like the split tuber of the sprouting palmyra என்கிறது. சுற்றுச்சூழல் இயக்கத்திற்கும் சூழலியலுக்கும் இந்நூல் ஒரு சீரிய பங்களிப்பாகும் பறவைகளைக் கவனிக்கும் பழக்கம் தமிழ் வாசகர்களிடையே வளர வழி வகுக்கும். அந்த ஈடுபாடு, சீக்கிரமே காட்டுயிர் பேணல், புறவுலகில் அக்கறை என விரிவடையக்கூடும். கண்ணையும் மனத்தையும் கவரும் துல்லியமான புகைப்படங்கள், அருமையான நூல் உருவாக்கம். தமிழகத்தில் பறவை களை ஈர்க்கும் நீர்ப்புலங்களின் பட்டியல் ஒன்றும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. நூலின் குறிப்பிடப்படும் எல்லாப் பறவைகளின் அறிவியல் (லத்தீன் மொழி) பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இது முழுமையான களக் கையேடு. | ||
(பாங்கிவிடுதூது.)
16. | அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல் |
வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளு மறுத்ததுண்டேற் | |
குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக் கோதைநல்லீர் | |
சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்று சாற்றுமினே. |
சமஸ்கிருதத்தின் ஆதிகவி அன்றில் என்னும் கரிஞ்சம்/க்ரௌஞ்ச பறவைகளின் சோகம்பற்றிப்பாடியதால் காவிய சந்தம் பிறந்தது.காவிய சந்தம் பிறந்த கதை - தெய்வத்தின் குரல்சில சந்த வகைகள்,---------
தாராபுரம் தியடோர் பாஸ்கரன் ஜூலியா லெஸ்லி கட்டுரைக்கான எதிர்வினையைப் படித்து மகிழ்ந்தார்.தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றி திரு. பாஸ்கரனின் நூல்மதிப்புரை:
மதிப்புரை ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்
தியடோர் பாஸ்கரன்
////
ஐபிஸ் என்றழைக்கப்படும் பறவையின் தமிழ்ப் பெயர் அன்றில். ‘அன்றில் சிறு பறவை ஆண் பிரிய வாழாது’ என்று பாரதி குறிப்பிட்டார். இவை எல்லாமே இன்றும் புழக்கத்திலிருக்கும் பழைய பெயர்கள்.
அன்றிலென்பது, ஒருபறவை. அது, எப்பொழுதும் ஆணும்பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப்பொறாமல் ஒன்றை யொன்று இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன் துணையைக்கூடாவிடின் உடனே இறந்துபடும். இதனை வடநூலார் க்ரௌஞ்சம் என்பர்.
///குடைந்து குடைந்து கண்டுபிடித்துவிட்டீர்கள் !!! பாராட்டுகள் திரு. கணேசன். இந்த மேற்கோள்களைப் படித்து ..கிரௌஞ்சம் = அன்றில் = ஐபிஸ் = male Indian Black Ibis என்றே எனக்கும் தோன்றுகிறது.///
கிராமத்து மக்களிடையே இன்றும் பல பெயர்கள் வழக்கத்திலிருக்கின்றன.
///என்றும் கிரப் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்பறவை பல பெயர்களிலும் வழங்கப்பட்டிருக்கலாம்.ஆனால் நீங்கள் தெளிவுபடுத்தியத்தை ஜூலியா லெஸ்லி யுடன் பகிர்ந்துகொள்ள முடியாமல் போனது வருத்தம் தருவது. தெரிந்திருந்தால் அம்மையார் நிச்சயம் மகிழ்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது...... தேமொழி