கனக வல்லி கமழ்பதம் வாழ்க - திருவெவ்வுள் கனகவல்லி தாயார் துதி
(கட்டளைக் கலிப்பா)
இனியள் எங்கள் இருந்துணை ஆனவள்,
… இலங்கும் எவ்வுள் இருந்துல காள்பவள்,
வினைக டிந்து மிடிமையும் மாய்ப்பவள்,
… விழையும் நன்மை விரைவினில் சேர்ப்பவள்,
மனம்நி றைந்த மகிழ்வினை வார்ப்பவள்,
… வரும் பிணிக்கு மருந்தெனக் காப்பவள்,
கனிவு மிக்க கடைவிழிப் பார்வையள்
… கனக வல்லி கமழ்பதம் வாழ்கவே.
புவனம் யாவும் புரந்திடும் தாயவள்,
… புனித நான்மறை வான்பொருள் ஆனவள்,
குவியும் அன்புடன் கூவித் துதிப்பவர்
… குறைகள் தீர்த்தருள் கூரும் குணத்தினள்,
எ(வ்)வுள் இராகவன் மார்பினில் வாழ்பவள்,
… எழில்நி லாவென வாண்முகம் வாய்ந்தவள்,
கவிதை யாவிலும் ஓர்களிப் பானவள்
… கனக வல்லி கமழ்பதம் வாழ்கவே.
- இமயவரம்பன்