அன்பு கணேஸ் அண்ணா
இதோ கவிஞர் வாலி அவர்களின் கவிதை தட்டச்சிய வடிவம்...
கவிஞர் வாலி அவர்களின் கவியரங்க ஈழம் பற்றின கவிதை
இதுகாறும் இங்கு கவிஞர்களைப் பற்றிக் கவிஞர்கள் பாடினார்கள்..
இவர்களது ஈரத்தமிழில் ஆழ்ந்து ஈங்குள்ளோர் ஆடினார்கள்.
இந்த ஈரத்தமிழ சற்று ஈழத்தமிழ் பற்றியும் எண்ணவேண்டும்.
முள்ளி வாய்க்கால்த் தமிழன் விடி வெள்ளி வாய்க்காமல் தவிக்கிறானே
அவன் விடியலுக்காய் அருந்தமிழ் வெளிச்சங்கள் பண்ண வேண்டும்
உள்ள சோகங்களிலேயே உச்ச சோகம் யாதெனில்
தன் இனம் தகர்க்கப்பட்டிருப்பதை ஓரினம் ஓராதிருப்பது தான்
தண்ணீர்க்கடல் நடுவே கண்ணீர் கடலாக
தென் திசையில் தொன்மைக் குடிகள்
நம் தொப்புள் கொடிகள்
வாடை அவிழ்க்காத தமிழ் வஞ்சியின் ஆடையைச்
சிங்களக் காடை அவிழ்த்தான்..
அவளது கற்பைக் கவிழ்த்தான்
காடையரை நோக்கி தலைக்கு மேல் கரங்களைத் தூக்கி
வழிபட்டாள் வேண்டினாள் விடவில்லை
கிளிபட்டாள் கிளிநொச்சித் தமிழச்சி
கள்ளிருக்கும் மலர்க் கருங்குழலால் மைதிலியின் காதல்
உள்ளிருக்கும் எனத் ஊடுருவித் தேடியதாம்
இராவணன் நெஞ்சை இராகவன் வாளி
அஃதே போல் அங்கே
தம்பி தம்பி என்று தமிழர்கள் விழிக்கும்
தலைவனைக் காணாது
களைத்துப் போன காடையர் படை தமிழர் நெஞ்சை
துளைத்துப் பார்த்ததாம் துப்பாக்கித் தோட்டாவால்
உள்ளே தம்பி ஒளிந்திருக்கலாம் என நம்பி
வெள்ளைக் கொடி விரித்த படி
சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை
சமைத்துச் சாப்பிட்டன சிங்களர் படை
அங்கு புத்தனே நடத்துகிறான் பிரியாணிக்கடை
யுத்தம் முடிந்த பிறகு கடலளவு
இரத்தம் வடிந்த பிறகு
நேர்ந்தது என்ன என்பதை நேர்முகக் காட்சியாய்
இதோ இதோ என்று காட்டியது இங்கிலாந்து டிவி
அந்த அக்கிரமங்களைப் பார்த்து
ஐயோ ஐயோ என்று அலறுகின்றது நம்முடைய ஆவி
அங்கே முள்வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கே கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை
இல்லை இதற்கு இணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப்பிழையானால் அதைத் திருத்தலாம்'
இது அச்சப்பிழை யார் இதைத் திருத்துவது
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்
பலிக்காதிருந்ததில்லை பாரதியின் எந்தச் சொல்லும்
இத்துடன் நிறைவுறுகிறது இந்தப் பாட்டரங்கம்
நன்றி வணக்கம்.