தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கருவூரும் ஒன்று. கைத்தறி நெசவுத் தொழிலுக்கு சிறப்பு பெயர் பெற்றது இவ்வூர்.
சங்க இலக்கியங்கள் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையில் கருவூர் அமைந்துள்ளது எனக் குறிப்பிடுகிறது. தமிழக சமூக பொருளாதார பெருமை வரலாற்றுக்கு சேர்க்கும் வகையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றை தன்னகத்தே கொண்டு சிறப்பாக விளங்குகிறது கருவூர்.
கருவூரின் தொன்மைச் சிறப்பு:
பெருங்கற்காலம் என்ற இரும்புக்கால பண்பாட்டில் இருந்து (3000 ஆண்டுகளுக்கு முன்) கருவூரின் தொன்மை வரலாறு துவங்குகிறது. பெருங்கற்கால சான்றுகளாக விளங்கும் ஈமச் சின்னங்களான கல்வட்டம் - கல்குவை போன்றவை கருவூரைச் சுற்றி உள்ள புகளூர், காருடையாம்பாளையம், கொத்தமங்கலம், மலைக்கோவிலூர், வேட்டமங்கலம், நெடுங்கூர், பவித்திரம், பரமத்தி, வெஞ்சமாக்கூடலூர் போன்ற பல ஊர்களில் இத்தகைய ஈமச் சின்னங்களைக் காணலாம். அரவக்குறிச்சி அருகே நெடுங்கூர் என்ற ஊரில் காணப்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னம் 2006 - 07- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்யப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மண்மேடுகள்:
கருவூரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் "நத்தமேடு" என அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க மண்மேடுகள் காணப்படுகின்றன. இவைகளில் இருந்து கிடைக்கும் தொல்பொருள்கள் கருவூரின் தொன்மை வரலாற்றுக்கு சான்றளிப்பவையாகத் திகழ்கின்றன. மணவாசி, பஞ்சமாதேவி, சோமூர், திருமுக்கூடலூர், புதுக்கோட்டை, பழைய செயங்கொண்ட சோழபுரம், மகாதானபுரம், மேட்டுத் திருக்காம்புலியூர் போன்ற பல ஊர்களில் இத்தகைய மண்மேடுகள் காணப்படுகின்றன.
கருவூருக்கு அருகில் திருக்காம்புலியூர் - அழகரை போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் காவிரிக்கரை நாகரிகத்தின் பண்பாட்டுச் சிறப்பின் ஒரு பகுதியை வெளிப்படுத்தியுள்ளன என்று கூறினால் மிகையாகாது. சங்கரமலை அய்யர் மலையில் காணப்படும் சமண சமய சான்றுகள் மாயனூர் அருகே காணப்படும் மாயனூர் மதிற்கரை போன்றவை கருவூரில் தொன்மைக்கு சான்றாகவும், பெருமையளிப்பவையாகவும் விளங்குகின்றன.
இலக்கிய குறிப்புகள்:
கருவூர் ஆன்பொருநை ஆற்றுக் கரையில் இருந்தது என்றும் சேரர்களின் தலைநகராக விளங்கியது என்றும் "கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமாவியல் நகர் கருவூர் முன்துறை' என அகநானூறு கூறுகிறது. பெருங்டுங்கோ கருவூரிலிருந்து ஆட்சி செய்தான் - ஆன்பொருநை ஆற்றின் கரையில் இருந்த வஞ்சி நகரை தலைநகராக கொண்டான் என புறப்பாட்டில் கூறப்படுகிறது.
சேர, சோழ மன்னர்கள் கருவூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணலாம். காவிரி ஆற்றோடு ஆன்பொருநையும் குடவனாறும் கலக்கும் கடல் போன்றவன் செங்குட்டுவன் என பதிற்றுப்பத்து புகழ்ந்து கூறுகிறது. திருமுக்கூடல் கருவூரின் அருகில் உள்ளது. இங்கே காவிரி ஆற்றுடன் ஆறும் ஆன்பொருநை (அமராவதி) ஆறும் கலக்கின்றன.
அயல் நாட்டவர் குறிப்பு:
கிரேக்க நிலநூல் வல்லுனரான தாலமி என்பார் "கொரேவூரா" என்ற ஓர் இடத்தினைக் குறிக்கிறார். உள்நாட்டு நகரங்களில் கொரேவூரா (கருவூர்) இருந்தது என்பதை அவர் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
வரலாற்றுச் சான்றுகள்: கருவூரின் வரலாற்றுக் குறிப்பை வேள்விக்குடி செப்பேடு, சீவரமங்கலம் செப்பேடு, தளவாய்ப்புரச் செப்பேடு போன்ற வரலாற்றுச் சான்றுகளில் காணப்படுகிறது.
கருவூர் சோழர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. சோழர்களின் குல மரபில் முதல் தனிநகர் எனச் சிறப்பித்து கூறப்படுகிறது. சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதை "மன்னிய அநபாயன சீர் மரபில் மாநகரமாகும் தொன்னெடுங் கருவூர்' எனச் சேக்கிழார் பெருமான் - எறிபத்தர் வரலாறு வழியே அறிய முடிகிறது. புகழ்ச்சோழரும் கருவூரை ஆட்சி செய்திருக்கிறார்.
தொடர்ந்து ராஜராஜ சோழன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், விக்ரமச்சோழன், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. கருவூர் மூன்றாம் குலோத்துங்;க சோழன் காலத்தில் "முடி வழங்கு சோழபுரம்' என அழைக்கப்பட்டதையும் அறிகிறோம். பின்னர் போசள மன்னர்கள், பிற்கால பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டது.
வரலாற்று புகழ்மிக்க ஆங்கிலேய - மைசூரு போர்களில் கரூர் பகுதியும் முக்கிய இடம் பெற்று விளங்கும். சங்கக் காலத்தில் இருந்து தொடர்ச்சியான கருவூரின் வரலாற்றினை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். கருவூர் வரலாற்றினை பேரூர் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம், கருவூர் தலபுராணம் ஆகியவையும் எடுத்துக் கூறுகின்றன. மேலும் ஆதிபுரம், கருவைப்பதி, வஞ்சுளாரண்யம், கர்ப்புரம், பாஸ்கரபுரம், வீரசோழபுரம், சண்மங்கல சேத்திரம் என்ற பெயர்களாலும் இவ்வூர் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் அறிகிறோம்.
கல்வெட்டுகளில்..:
கருவூர் அருகே காணப்படும் புகளூர் ஆறு நாட்டார் மலையில் காணப்படும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தமிழ் எழுத்துகளில் காணப்படும் கல்வெட்டில், 1. கோ ஆதன் சேரலிரும்பொறை, 2. அவன் மகன் பெருங்கடுங்கோ, 3. அவன் மகன் இளங்கடுங்கோ என்ற மூன்று மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் குறிக்கப்படும் மன்னர்களே இங்கே கல்வெட்டில் காணப்படுகின்றனர்.
கருவூர் - வஞ்சி: கரூரில் இரண்டு நடு கற்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் "ரவி கோ கலியமகந் கருவூரிடை ஆநிரை கொள எறிந்து பட்டான்', "ஸ்ரீ வஞ்சி வேளடியான்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 8 - 9-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர் கருவூர் வஞ்சி என்றும் அழைக்கப்பட்டு வந்தது என்பது புலனாகிறது. மேலும் அருகிலுள்ள நெரூர் பெருமாள் கோயில் கல்வெட்டில் "வஞ்சி மாநகரான கருவூர்' என்றும் அரங்கநாதர் கோயில் கல்வெட்டில் வஞ்சி " ஸ்ரீ வைஷ்ணவரோம்' என்று குறிப்பிடப்படுவதால் கருவூர் என்றும் வஞ்சி என்றும் 12-ஆம் நூற்றாண்டு வரை வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.
காசுகள் - மோதிரங்கள்: அமராவதி ஆற்றில் பண்டைய காசுகள் பண்டைய தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் முத்திரைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் கொல்லிப்பொறை, கொல்லிரும்பொறை, மாக்கோதை எனப் பெயருடன் காணப்பட்ட காசுகள் மிகச் சிறப்பானவை. மேலும் இங்கு கிடைத்த மோதிரங்களில் தித்தன், பேர் அவதான், தாயன் ஓதலன் போன்ற பெயர் பொறிக்கப்பட்ட தங்கம் - வெள்ளி மோதிரங்கள் கருவூரின் தொன்மைக்குச் சான்றாக விளங்குகின்றன. மேலும் இவ்வூரில்தான் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன என்பது பெருமையளிக்கக் கூடியதாகும்.
அகழ்வாராய்ச்சி
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கரூவூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1973-74, 1977, 1979, 1996-ஆம் ஆண்டுகளில் இங்கு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து அகழ்வாராய்சியை மேற்கொண்டது. கருவூரின் தொன்மைக்குச் சான்றாக பண்டைய தமிழ் (பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டட அமைப்பின் ஒரு பகுதி, மணிகள் போன்ற பல பொருள்கள் கிடைத்தன.
எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் சாதன் கடியதா' என 12 எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு குற(று) கல் என்பவை மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை இங்கே தொல்லியல்துறையால் அமைக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காட்சியகத்தில் காணலாம்.
பண்டைய வணிக பெருவழியில் கருவூர் அமைந்திருந்ததால் பல மன்னர்கள் வெளியிட்ட காசுகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. சங்கக் கால மோதிரங்கள் - காசுகளும் கிடைத்துள்ளன. வளங்கொழிக்கும் வாணிக நகரமாக கருவூர் திகழ்ந்துள்ளது. கருவூர் என்றே இலக்கியங்களிலும் - கல்வெட்டுகளிலும் குறிக்கப்படும் இவ்வூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி "சங்கக் கால சேரர் தலைநகர்" இதுவே என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdpXma2x69QZNpJSKD5h0nvwAdQh_pYDugdv5-DQGqVQw%40mail.gmail.com.
நல்ல ஆதார பூர்வமான கட்டுரை. நன்றி, திரு கணேசன்.சங்கரன்On Tue, Oct 18, 2022 at 11:48 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:ஆற்றங்கரையில் உள்ள வஞ்சி (கருவூர்) சங்க காலத்தில் சேரர்கள் தலைநகராக இருந்தது.
நல்ல ஆதார பூர்வமான கட்டுரை. நன்றி, திரு கணேசன்.சங்கரன்