வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு

213 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
May 14, 2022, 10:53:19 PM5/14/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்
ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ001. வேட்கைப் பத்து: பகுதி 1
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
(திணை: மருதம்: தோழி தலைவனிடம் சொன்னது)
.
நூல் அறிமுகம்: ஐங்குறுநூறு
• 3-6 அடிகளில் அகவற் பாவால் பாடப்பட்டது.
• மூன்றடிச் செய்யுட்களும் அமைந்து மருதம் முதல் திணையாகக் கொண்ட நூல்.
• திணை நிரல்: மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை.
• பாடியோர் முறையே: ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார்.
• திணைக்கு 100 பாடல்கள், மொத்தம் 500 (129,130 கிடைக்கவில்லை).
• பாடல்களைத் தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
• தொகுப்பித்தவர்: யானைக்கட்சேய் மாந்தரஞ்ச்சேரல் இரும்பொறை.
• கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார்
• பொழிப்புரை தேவையில்லாத எளிய சொற்கள், இனிய ஓசையுடன்.
• சிறிய சொற்களில் இயற்கை வருணனை, தமிழர் வாழ்வியல், மனப் போக்குகள்.
• சங்க இலக்கியம் பயிலத் தொடங்கும் மாணவர்களுக்கு முதல் நூலாகலாம்.
.
பின்னணி
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றான். பின்னர் அது தீய ஒழுக்கம் என்று தெளிந்து மீண்டு தன்னில்லம் நுழைகிறான். ஊடல் கொள்ளாது தலைவி அவனை ஏற்றுக் கொள்கிறாள்.
.
தோழியிடம் தலைவன் தான் தீநெறிச் சென்ற காலத்தில் எவ்வாறு இருந்தீர்கள் என்று கேட்கத் தலைவியும், தோழியர்கள் நாங்களும் என்னவெல்லாம் விழைந்திருந்தோம் என்று தோழி சொல்வதை ஓரம்போகியார் பத்துப் பாடல்களில் பாடுவதாலும், ஒவ்வொரு பாடலிலும் வேட்கை என்னும் சொல் வருவதாலும் இப்பதிகம் வேட்கைப் பத்து என்று அழைக்கப் படுகிறது.
.
குறிப்புரை
• பாடல்கள் யாவையும் சிறியனவாகையால் ஐந்தைந்தாக ஒரு வெண்பாவில் தொகுத்து.
• ஐந்து மூலப் பாடல்கள் ஒரே கலிவெண்பா யாப்பில்.
வெண்பாக்கள் பொருள், உள்ளுறை உவம விளக்கம் பொதிந்தவை.
• மூலத்தில் ஓரிரு அடிகள் கொண்ட தலைவியின் வேட்கைகளைத் தொகுத்து முதலாவதாக.
• தோழியர்கள் வேட்டன தொகுத்து அடுத்ததாக.
• மூலப் பாடல்களுக்கு அருஞ்சொற் பொருள் மட்டும்.
.
★★★
மருதம்: வேட்கைப் பத்து (1-5)
(கலிவெண்பா)
தீதற நாட்டைத் தெரிந்தே புரந்தருள
ஆதனும் வாழ்க அவினியும் வாழ்க!
விருந்தினர் ஓம்ப விளைகநெற் செய்யே!
இரவலர்க் கீய நிறைகபொற் காசு! (1)
வரத்துநீர் ஆர்ந்து வயல்கள் விளைந்து ... 5
இரவலர் யாருமே இல்லாது போமே! (2)
சிசுவும் விருந்தும் சிறந்தே பொலியப்
பசுவும் பகடும் பலவாய்ப் பெருகுக! (3)
ஆர்த்தபகை வர்புல் லரிசியை உண்ணுக
பார்ப்பனர் வேதம் பரவி ஒலிக்க! (4) ... 10
செறுபசி யின்றிச் சிறக்கமனை வாழ்வே
உறுபிணி யாவையும் ஓடுக தூரம்!
இறைஞ்சிவேட் டாளிவை இல்லத் தலைவியே! (5)
.
தேன்மலர்க் காஞ்சி திகழும் குலமகள்
மீன்புலால் போல விளங்கும் விலைமகள் ... 15
வேணுமெனும் வாழ்வை விழையூரன் வாழ்கவே
பாணன் தலைவனைப் பாடுவன் வாழ்கவே! (1)
பல்லிதழ் நீலமாய்ப் பார்க்கும் குலமகள்
புல்லிய நெய்தலைப் போன்ற விலைமகள்
கொண்டொழுகும் ஊரில் குடியிருப்போன் நட்பது ... 20
வண்டுபோல் ஆயின் வழிவழிச் சீர்மிக! (2)
வித்துழவர் பானல் விளைநெல் குலமகள்
கொத்துமலர் வாசனை கூடும் விலைமகள்
நெல்லுடன் பூக்கள் நிறைந்தவூர் வாழ்வோனின்
இல்லற வாழ்க்கை சிறந்தே பொலிக! (3) ... 25
பயன்படாக் கன்னற்பூ வாகும் பரத்தை
பயன்மிகக் காய்நெற் பயிராம் குலமகள்
ஆர்ந்தவூர் வாழும் தலைவனின் மார்பது
நீர்வய லாம்பொதுமை நேரா திருக்க! (4)
முதலையின் போத்தாய் முகிழ்த்த இளைஞர் ... 30
பொதுமகளாம் முற்றிய மீன்கள் புசித்துமகிழ்
தண்துறை ஊரானைத் தாங்குகின்ற தேரெங்கள்
முன்கடை நின்றவன் மூழ்குக இல்லறம்
என்பனவாய் எங்கள் விழைவு. (5)
.
அரும்சொற் பொருள்
(1) ஆதன்: தந்தை, அவினி: மகன்; செய்: வயல்; பாணன்: தலைவனின் தூதனாம் பாடகன்.
(2) நீலம், நெய்தல்: மலர்கள்
(3) பகடு: எருமை; பானல்: வயல்
(4) கன்னற்பூ: பூத்தாலும் காய்க்காத கரும்பின் பூ
(5) செறுபசி: வருத்தும் பசி; உறுபிணி: உடலுக்கு வரும் நோய்கள்; முதலையின் போத்து: முதலைக் குட்டி; முன்கடை: வீட்டின் தலைவாயில்.
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
மருதம்: வேட்கைப் பத்து (1-5)
.
வாழி ஆதன்! வாழி அவினி!
நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே. ... 1
.
வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க என வேட்டேமே. ... 2
.
வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன்மனை        
வாழ்க்கை பொலிக எனவேட் டேமே. ... 3
.
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு            
பழனம் ஆகற்க எனவேட் டேமே. ... 4
.
வாழி ஆதன் வாழி அவினி
பசிஇல் ஆகுக பிணிசேண் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்துறை ஊரன் தேர்எம்
முன்கடை நிற்க எனவேட் டேமே. ... 5
.
அருஞ்சொற் பொருள்
(1) யாயே: கற்புக்கடம் பூண்ட தலைவி என்பதால் தாய்; யாமே: நானும் பிற தோழியரும்; நனைய: அரும்புகள் நிறைந்த; யாணர்: செல்வர்; பாணன்: தலைவனின் தூதனாம் பாடகன்.
(2) கேண்மை: நட்பு;
(3) பகடு: எருமை; வித்திய: விளைச்சல் எதிர்நோக்கி வித்துக்களை இட்ட; பூக்கஞல்: மலர்கள் மிக்கு மணம் பரப்பும்;
(4) புல்லார்க: புல்லரிசிச் சோற்றை உண்க; பூத்த கரும்பு: பூத்தாலும் காய்க்காத கரும்பின் பூ; கழனி, பழனம்: வயல்.
(5) சேண்: தொலைவில்; முதலைப் போத்து: முதலைக் குட்டி; முன்கடை: வீட்டின் தலைவாயில்.
.
★★★★★

lns2...@gmail.com

unread,
May 15, 2022, 7:18:58 AM5/15/22
to சந்தவசந்தம்
வேட்கைப் பத்து கலிவெண்பா மிகவும் அருமையாக அமைந்துள்ளது.

Srini

sai...@gmail.com

unread,
May 15, 2022, 10:52:09 PM5/15/22
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, ஸ்ரீனி அவர்களே!
ரமணி

sai...@gmail.com

unread,
May 15, 2022, 10:52:45 PM5/15/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
ஐ001. வேட்கைப் பத்து: பகுதி 2
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
(திணை: மருதம்: தோழி தலைவனிடம் சொன்னது)
.
மருதம்: வேட்கைப் பத்து (6-10)
(கலிவெண்பா)
தீதற நாட்டைத் தெரிந்தே புரந்தருள
ஆதனும் வாழ்க அவினியும் வாழிய!
வேந்தன் பகையெலாம் வீழ்ந்தே தணிவதாக
வேந்தனின் வாணாள்பல் லாண்டாய் மிகுவதாக! (6)
நல்லறம் பேணுதல் நாட்டில் சிறக்கவே
அல்லறம் முற்றிலும் நீங்குகஅ ழிந்தே! (7)
அரசுமுறை நீதிதவ றாதாட்சி செய்க
திருட்டினை விட்டுத் திருடர் திருந்துக! (8)
இன்னற மாகவே இல்லறம் ஆற்றவே
நன்மை பெருகுக தீமையிலா தாக! (9)
அறம்பொருள் இன்பம் அகன்றே பெருக
உறுகதப் பாதே முழுதாய் மழையே
மழையால் பொருள்சேர் வளமிகுக என்றே
விழைந்தாள் பலவகை வீட்டுத் தலைவி! (10)
.
அகன்றநீர்ப் பொய்கை அரும்பும் கமலம்
உகந்தகுளிர் நீர்த்துறை ஊரன் தலைவியைச்
சொந்தமனை யாய்க்கொள்ளும் சூழலுற்றுக் கேட்கவே
எந்தையும் சம்மதித் தில்லறம் கூடவே! (6)
பஞ்சுத் தலைப்பூ மருதமரம் பார்த்தேதன்
குஞ்சுகள் ஒன்ற உறையும் குருகிருக்கும்
தண்துறை ஊரன் தலைவியைத் தன்னூர்க்குக்
கொண்டுசெலும் நாளது கூடிவர வேட்டோமே! (7)
ஆர்த்தெழும் காற்றில் அசைவுறும் மாங்கிளை
பார்த்தே அழகுமயில் பாங்காய் அமர்ந்தே
உறையூரில் வாழ்பவன் சூளுரையிப் போது
நிறைவாய் நிகழ்ந்தே நிலைகொள வேட்டோம்! (8)
கயலுண்ட நாரை களநெற்போர் தங்கும்
அயலானாய்ப் போன தலைவனவன் தன்னில்லம்
தண்டுறை ஊரன்கேள் நாரைபோல் நாற்றமாய்
அம்பலம் ஆகா திருக்க விழைந்தோமே! (9)
பூத்தமா வோடு புலால்மீன் மகளிரைச்
சேர்த்தவூர் வாழ்வோன் செறிந்தே விரைவாய்த்
தலைவியைத் தன்னூர்க்குக் கொண்டுசெல வேட்டோம்
குலவுமொழித் தோழியர் கூட்டு. (10)
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 001, ஓரம்போகியார்
மருதம்: வேட்கைப் பத்து (6-10)
.
வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க வெனவேட் டேமே. ... 6
.    
வாழி யாதன் வாழி யவினி
அறநனி சிறக்க வல்லது கெடுக
எனவேட் டோளே யாயே யாமே
உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும்
தண்டுறை யூரன் றன்னுார்க்
கொண்டனன் செல்க வெனவேட் டேமே. ... 7
.
வாழி யாதன் வாழி யவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூக்கஞ லுாரன் சூளிவண்
வாய்ப்ப தாக வெனவேட் டேமே. ... 8
.
வாழி யாதன் வாழி யவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்டுறை யூரன் கேண்மை
அம்ப லாகற்க வெனவேட் டேமே. ... 9
.    
வாழி யாதன் வாழி யவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்டுறை யூரன் றன்னொடு
கொண்டனன் செல்க வெனவேட் டேமே. ... 10
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 16, 2022, 10:10:17 PM5/16/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்
ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
.
ஐ011. தாய்க்குரைத்த பத்து
ஐங்குறுநூறு 101-110, அம்மூவனார்
(திணை: நெய்தல்: தோழி செவிலித் தாயிடம் சொன்னது)
பின்னணி
களவுக்குப் பின் பொருளீட்டப் பிரிந்த தலைவன் வருவானா என்று ஐயுற்ற செவிலித் தாய்க்கு, அவன் தேரில் வந்து மணம் கேட்டுத் திருமணம் நிகழ்ந்து அவர்களுக்கோர் மகனும் பிறந்ததைத் தோழி செவிலித் தாய்க்குச் சுட்டிக் காட்டுகிறாள்.
.
அம்மூவனார் எழுதிய தாய்க்குரைத்த பத்து பாடல்களின் நிகழ்வுகள் அவை நிகழ்ந்த நாள் வரிசையில் அல்லாது வேறு விதமாகக் கீழுள்ளவாறு தொகுக்கப் பட்டுள்ளன. இதற்கான காரணம் அறிந்தோர் சொல்லலாம்.
.
101. தலைவன் தேர் வருகை
102. தேர் மணியோசை
103. திருமணம் நிகழ்தல்
104. செல்வ மகன் பிறப்பு
105. தலைவன் மணம் கேட்டுவரப் பெற்றோர் சம்மதித்தல்
106. தலைவன் பிரிவால் தலைவிக்குப் பசலை நோய்
107. தலைவியின் வருத்தத்தில் தோழி கவலை
108. இவள் தோளையே துறந்தான் எனில் பிற மகளிர் தோள் என்னாகும்?
109. பிரிந்தபோது அவன் கூறிய இன்மொழி எம்நெஞ்சில்!
110. ஊழ்வினையால் வேறொரு ஆடவனை மணக்க நேருமோ?
.
வெண்பா விளக்க நிரல்
நிகழ்வுகள் அவை நிகழ்ந்த நாள் வரிசையில் கீழ்க்காணும் மூலப் பாடல் எண்களில் வருவனவாகப் பத்து வெண்பாக்களில் எழுதியுள்ளேன்.
106, 107, 108, 109, 110, 101, 102, 105, 103, 104.
.
களவினால் பசலை படர்ந்தாள்!
(பஃறொடை வெண்பா)
01:106
அன்னைவாழி! கேளாய்! அவர்நாட்டுத் தோலடிக்கால்
அன்னம் துணையாய்க் கருதி மிதிக்கும்
குளிர்கடல் சங்குவெண்மை கொண்டிவள் மேனி
களவில் பசுமைகொளக் காண்நீ செவிலி
உளமகிழ ஆவன செய்.
[தோலடிக்கால்: பாதத்தில் தோலுறை]
.
இரவில் கண்துயிலாள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
02:107
அன்னைவாழி! கேளாய்! அவர்நினைவில் என்தோழி
மென்பசலை நெற்றி! மெலிந்தனள் காமநோய்!
தண்கடல் மோதுமலை தன்கா(து) இரவொலிக்கக்
கண்துயிலாள்! கொண்டேன் கவல்!
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 101, அம்மூவனார்
நெய்தல்: தாய்க்குரைத்த பத்து (101-110)
(நிகழ்வுகளின் நாள் வரிசையில்)
106    
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர்நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்கடல் வளையினும் இலங்கும்இவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
.
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6
.
107    
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என்தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து,
தண்கடல் படுதிரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
.
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 17, 2022, 10:44:06 PM5/17/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்
ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ011. தாய்க்குரைத்த பத்து
ஐங்குறுநூறு 101-110, அம்மூவனார்
(திணை: நெய்தல்: தோழி செவிலித் தாயிடம் சொன்னது)
.
இவளது தோள்போல் வேறெது!
(அளவியல் இன்னிசை வெண்பா)
03:108
அன்னைவாழி! கேளாய் விழைந்திதை! உப்புநீர்
மென்முள்ளி பூத்தகுளிர் வேலைநீர்ச் சேர்ப்பனிவள்
தோளைத் துறந்தனன் என்றால் பிறமகளிர்
தோளென்ன வாகுமோ சொல்!
[வேலை: கடல்; சேர்ப்பன்: நெய்தல் நிலத் தலைவன்]
.
பலநாள் மனத்தில் வரும்!
(ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா)
04:109
அன்னைவாழி! கேளாய் விழைந்திதை! நெய்தற்பூ
தொன்னீர்க் கொடிபடர்ந்தே தூம்புமலர் சேர்ப்பனவன்
என்தலைவி தோள்துறந்தே இன்முகனாய்ச் சென்றதினம்
பன்னாளெம் உள்ளம் படர்ந்தே வருவதால்
இன்னமும் ஐயமுறல் ஏன்?
[தொன்னீர்: கடல்; தூம்பு: உட்டுளை]
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 101, அம்மூவனார்
நெய்தல்: தாய்க்குரைத்த பத்து (101-110)
(நிகழ்வுகளின் நாள் வரிசையில்)
108    
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண்கடல் சேர்ப்பன்
எம்தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?
.
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8
.
109    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை, எவன்கொல்
பல்நாள் வரும்,அவன் அளித்த பொழுதே?
.
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 18, 2022, 11:15:38 PM5/18/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்
ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ011. தாய்க்குரைத்த பத்து
ஐங்குறுநூறு 101-110, அம்மூவனார்
(திணை: நெய்தல்: தோழி செவிலித் தாயிடம் சொன்னது)
.
ஊழ்வினை நிகழ்த்துமோ வேறு?
(பஃறொடை வெண்பா)
05:110
அன்னைவாழி! கேளாய் விழைந்திதை! புன்னைமலர்
பொன்போல் நிறம்விரிந்து பூக்கும் துறைவனை
என்தலைவிக் கேயென்றோம் யாமே எனினுமிந்த
ஊரோ பிறிதொன்றைக் கூறுவதை ஊழ்வினையவ்
வாறே நிகழ்த்துமோ வேறு!
.
அதோபார், அவன்தேர்!
(பஃறொடை வெண்பா)
06:101
அன்னைவாழி! கேளாய் விழைந்தே! அதோபாராய்!
தன்வரைவிற்(கு) ஈட்டுபொருள் கொண்ட தலைவன்தேர்
பச்சையடப் பங்கொடி மேல்ஊர்ந்தும் ஏறியும்
இச்சையுடன் நெய்தல் சிதைத்துவரும் நின்மகள்
ஆர்ப்பில் அலர்பேசி னோர்வாய் அடங்கிநிற்க
பூப்போன்ற மையுண்ட கண்ணில் பொருந்துநோய்
தீர்ப்பதாய்க் கொண்கனிவன் தேர்.
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 101, அம்மூவனார்
நெய்தல்: தாய்க்குரைத்த பத்து (101-110)
(நிகழ்வுகளின் நாள் வரிசையில்)
110    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! புன்னை
பொன்நிறம் விரியும் பூக்கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ்ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?
.
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
.
101    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந்து ஆகிய கொண்கன் தேரே.
.
அறத்தோடு நின்றபின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 20, 2022, 12:13:35 AM5/20/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ011. தாய்க்குரைத்த பத்து
ஐங்குறுநூறு 101-110, அம்மூவனார்
(திணை: நெய்தல்: தோழி செவிலித் தாயிடம் சொன்னது)
.
தேர்மணிக் குரல்!
(ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா)
07:102
அன்னைவாழி! கேளாய் விழைந்தே! நமதூரில்
மன்னும் பெருங்கடல் வாழ்புட்கள் ஆனாதே
தன்னிரை தேடித் தவித்தேதுன் புற்றதுபோல்
தன்றலைவன் தேடித் தவித்த தலைவியின்
துன்பம் துயரம் அறவே அகன்றவள்
இன்புறக் கேட்குமவன் தேர்மணி ஓசையில்
நன்மை விளையுமிஞ் ஞான்று,
[ஆனாதே: இடைவிடாதே; ]
.
சிவந்ததவள் நெற்றி!
(ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா)
08:105
அன்னைவாழி! கேளாய் விழைந்தே! முழங்குகடல்
நன்முத்தை வெண்மணல் நாடி இறைக்க,அவை
மின்னுதற் போல விரைந்துபொருள் சேர்த்தவன்
தன்னழகுத் தண்துறைச் சேர்ப்பனவன் வந்ததில்
பொன்னின் சிவந்தே பொலியுமிவள் நெற்றியை
நன்றாக நீகாண் நலம்.
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 101, அம்மூவனார்
நெய்தல்: தாய்க்குரைத்த பத்து (101-110)
(நிகழ்வுகளின் நாள் வரிசையில்)
.
102    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! நம்ஊர்
நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும்,அவர் தேர்மணிக் குரலே.
.
இதுவும் அது. 2
.
105    
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.
.
அறத்தொடு நின்றபின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 20, 2022, 9:47:13 PM5/20/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ011. தாய்க்குரைத்த பத்து
ஐங்குறுநூறு 101-110, அம்மூவனார்
(திணை: நெய்தல்: தோழி செவிலித் தாயிடம் சொன்னது)
.
மணம்நிகழ மீண்டது அழகு!
(பஃறொடை வெண்பா)
09:103
அன்னைவாழி! கேளாய் விழைந்தே! குளிர்துறையில்
புன்னையொடு ஞாழலும் பூக்கும் தலைவன்
இவளுக்கே சொந்தமென இன்றுமண வாளன்
இவள்மேனி மாந்தளிர் இவ்வாறு மீண்டதுகாண்
இந்த மணத்தால் இனியிவர்கள் வாழ்வினில்
வந்துறும் நன்மையெ லாம்.
.
செல்வனும் பிறந்தான்!
(பஃறொடை வெண்பா)
10:104
அன்னைவாழி! கேளாய் விழைந்திதை! நம்மூரில்
கங்குற் பொழுதுபலர் கண்ணுறங்கச் சோர்ந்திவன்
நள்ளென் றொலிதேரில் நட்புடன் வந்தவனைக்
கொள்வதா என்றே குழப்பத்தில் ஐயுற்றாய்!
நன்மணம் கொண்டே நலமாய்த் தலைவனில்லம்
இன்றுன் மகளொரு செல்வனையும் பெற்றெடுத்தாள்
செல்வமிக்க கொண்கனின் செல்வனது ஊர்காணாய்
எல்லாம் இனிதாக இன்று.
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 101, அம்மூவனார்
நெய்தல்: தாய்க்குரைத்த பத்து (101-110)
(நிகழ்வுகளின் நாள் வரிசையில்)
103    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று,இவள் மாமைக் கவினே.
.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3
.
104    
அன்னை, வாழி! வேண்டு,அன்னை! நம்ஊர்ப்
பலர்மடி பொழுதின், நலம்மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.
.
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 24, 2022, 9:53:21 PM5/24/22
to சந்தவசந்தம்
ஐ241. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: நெய்தல்: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
 

sai...@gmail.com

unread,
May 29, 2022, 12:14:13 AM5/29/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ31. செலவழுங்குவித்த பத்து
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(திணை: பாலை: பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனுக்குச் சொல்லியது)
.
பின்னணி
(வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை விளக்கம்)
செலவழுங்குவித்தல்
• செலவு என்றால் தலைவன் தன் மனையினின்று பொருளீட்டப் பிரிந்து செல்லும் பயணம்.
• அழுங்குதல் என்றால் மனம் சோர்தல்; அழுங்குவித்தல் என்றால் விலக்குதல்.
• எனவே, தலைவன் செலவை மேற்கொள்ளாதவாறு விலக்குதல்.
.
பொருள்
• கற்பு நெறி இல்லற வாழ்விற்குப் பொருள் முக்கியம்.
• அப்பொருள் ஆற்றுநீர்ப் பெருக்குபோல் வரவும் நிலைபேறும் உடையதாகல் வேண்டும்.
• பொருள் என்றது உணவு முதல் கல்வி ஈறாகப் பல்வகை.
.
வினை
• பொருளின் ஆக்கம் பொருளீட்டும் வினையின்றி அமையாது.
• பொருளும் வினையும் பயக்கும் பயனை நுகரும் இடம் மனை.
• பொருளும் வினையும் உள்ள இடம் மனைக்குப் புறம்பே யாகும்.
• வினை என்பது பொருளைச் செய்தற்குரிய தொழில் முதல்
• நாடுகாத்தற்குச் செய்யும் போர்த்தொழில் ஈறாக எல்லாத் தொழிலும்.
.
பொருளைச் செய்தல்
• நாட்டில் விளையும் பொருளை மிகுமாறு வளம்படுத்தல்.
• மிக்க பொருளைக் குறைந்த நாடுகட்குக் கொண்டு சேறல்.
• இல்பொருளை உள்பொருள் நாடுகளிலிருந்து கொணர்தல்.
• நாட்டிடையே முறைசெய்து அறம் வளர்த்தலும்
• குறைகடிந்து நிறைவு செய்தலும் இவ்வினை வகையே.
.
★★★
(பஃறொடை வெண்பா)
நெடிதுவளர் வெள்ளோத் திரத்துவெண்பூங் கொத்தைக்
கடத்தற் கரியதாம் பாலை வழிச்செல்வோர்
வெம்மையின் தாக்கத்தால் மேனிவருத் தம்குன்ற
தம்தலை உச்சியில் தாங்கி அணிந்துசெல்வர்
அவ்வெல்லை நீகடந்து செல்நிகழ்(வு) ஆனதென்றால்
மைவரை நாடனே நின்மனை யாள்மிக
மெய்வருத்தம் கொள்வாள் உளம்.
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
அரும்பொருள் செய்வினை போகலாம் அற்று
பெரும்தோள் அரிவையின் பேறும் தடுப்பதே
செல்லா திருத்தல் சிறப்பாம் இவளழ
மெல்லம் புலம்ப பிரிந்து. ... 302
.
[மெல்லம்புலம்பன்: நெய்தல் நிலத்தலைவன்]
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(பாலை: செலவழுங்குவித்த பத்து)
.
மால்வெள் ளோத்திரத்து மைஇல் வால்இணர்
அரும்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை இறக்குவை ஆயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே. ... 301
.
அரும்பொருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெரும்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. ... 302
.
★★★★★


sai...@gmail.com

unread,
May 30, 2022, 1:35:11 AM5/30/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ31. செலவழுங்குவித்த பத்து
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(திணை: பாலை: பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனுக்குச் சொல்லியது)
.
(பஃறொடை வெண்பா)
புதியமட் பாண்டநிறம் போல்கனிந்த ஆலம்
அதனை அடைந்த பறவைகளைக் காத்து
அதனின் பிரிந்துசெல் லாதே தடுத்தற்போல்
உன்னுடன் என்னையும் கூட்டிச்செல் காளையே
தன்தன்மை மாறியே தண்சுரமாம் பாலையே!
(வெஞ்சுரப் பாதையை விண்டுரைக்க லாகாதார்
வஞ்சியர் என்றே தலைவன் அறிவதால்
தஞ்ச மடைந்தாள் தடுத்து). ... 303
.
ஆநிரை நீர்பருகக் கோவலர் கோல்தொட்ட
நீர்நிறை பள்ளத்தில் நீர்வௌவும் யானைவாழ்
கல்நிறை பாதைநீ செல்லும் பிரிவினை
மெல்லியல் மேகக் கருங்கூந்தல் பாவை
அதிர்ந்தே உடல்நலிவாள் ஆடவனே வேண்டாம்
குதிரைதுணை என்னும் துணிவு.. ... 304
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(பாலை: செலவழுங்குவித்த பத்து)
.
புதுகலத்து அன்ன கனிய ஆலம்
போகிறனை தடுக்கும் வேனில் அரும்சுரம்
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே. ... 303
.
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர் பத்தல் யானை வௌவும்
கல்அதர் கவலை செல்லின் மெல்இயல்
புயல்நெடும் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல் வல்லா தீமே. ... 304
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 30, 2022, 11:05:03 PM5/30/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ31. செலவழுங்குவித்த பத்து
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(திணை: பாலை: பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனுக்குச் சொல்லியது)
.
(பஃறொடை வெண்பா)
கொடிய பசியில் தழைகள் குறைந்தும்
பிடிதழுவி வாடும் களிறு பிறபுலம்
நாடாதே நிற்கும் நலிவுகொள் குன்றுசெல்லல்
ஆடா தழுங்குசுடர்த் தோள்வளை ஆடவள்
துன்புற விட்டே தொலைப்பயணம் மேற்கொளல்
என்ன பயன்தருமோ இஃது. ... 305
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
வெல்லும் தலைவ வியன்சுரம் நீகடந்தால்
பல்வட மேகலை பாவையிடை வாட
விழவுமணக் கூந்தலிடை வீழ்மா நிறத்தாள்
அழுகை ஒலிக்கும் குழல். ... 306
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(பாலை: செலவழுங்குவித்த பத்து)
.
களிறு பிடிதழீஇ பிறபுலம் படராது
பசிதின வருந்தும் பைதுஅறு குன்றத்து
சுடர்த்தொடி குறுமகள் இனைய
எனைபயம் செய்யுமோ விடலைநின் செலவே. ... 305
.
வெல்போர்க் குரிசில்நீ வியன்சுரம் இறப்பின்
பல்காழ் அல்குல் அவ்வரி வாட
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவுஒலி கூந்தல் மாஅ யோளே. ... 306
.
குறிப்பு
வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
அல்குல்:
• இடைக்கும் முழந்தாளுக்கும் இடையிலுள்ள உடற்பகுதி.
• பழந்தமிழ் நூல்கள் கிடைத்தல் அருமையாயினமையின்
• இடைக்காலத்தார் இதற்குப் பிழைபொருள் கற்பித்துப் பேதுற்றனர்.
• இது சிறுபான்மை ஆடவர்க்கும் வழங்கும்:
கொள்வீர் அல்குலோர் கோவணம்!
—ஞானசம். 54:3.
• அல்குல் என்பது ஆகுபெயராய் மேகலையையும் குறிக்கும்.
.
★★★★★

lns2...@gmail.com

unread,
May 31, 2022, 9:09:07 AM5/31/22
to சந்தவசந்தம்
அழகு.

ஜக4நம் (जघनम्) என்ற ஸம்ஸ்கிருத வழக்கும் அல்குலைப் போலவே என்று தெரிகிறது. ப்ரதிபூர்ணம் ஜக4நம் (प्रतिपूर्णं जघनं) aka broad hips i.e.,  அகன்ற அல்குலை உடையவள் என்று அயோத்தியா காண்டத்தில் கைகேயி மந்தரையை (கூனியை) புகழ்கிறாள்.

Srini

sai...@gmail.com

unread,
May 31, 2022, 9:51:11 AM5/31/22
to சந்தவசந்தம்
பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
ரமணி

sai...@gmail.com

unread,
Jun 1, 2022, 12:57:22 AM6/1/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ31. செலவழுங்குவித்த பத்து
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(திணை: பாலை: பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனுக்குச் சொல்லியது)
.
தலைவன் ஈட்டிய பொருளைத் தோழி பழித்துச் சொன்னது
(பஃறொடை வெண்பா)
.
காற்றில் உரசிக் கடைமரம் மூங்கிலிடை
ஊற்றாய் எழுநெருப்பு குன்றெங்கும் வீசப்
புலியும் வெருவியே போகும் தொலைவாய்!
வலிமிகு பாலை வனம்சென் றனையோ?
பொருளிது நன்றில் புரிந்துகொள் கொண்க!
பிரிந்துசென்றே பாவையைப் பெற்ற பொருளில்
அருளிலை இல்லை அறம். ... 307
.
திரள்கருங் கூந்தல் சிறந்தமென்ம னத்தாள்
பிரியா திருப்பினது பேதைமை யன்று
மலர்பூங்கொத் தாய்க்கால் வலியெறுழ் பூக்கள்
பலவாய்ப் பரவி ஒளிரும் முருகனமர்
குன்றினில் வேனில் குறையாதே செய்துநீ
எங்களை விட்டுப் பிரி. ... 308
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(பாலை: செலவழுங்குவித்த பத்து)
.
ஞெலிகழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அரும்சுரம் செலவயர்ந் தனையே
நன்றுஇல கொண்கநின் பொருளே
பாவை அன்னநின் துணைபிரிந்து வருமே. ... 307
.
பல்இரும் கூந்தல் மெல்இய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரிஇணர்
கால்எறுழ் ஒள்வீ தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. ... 308
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 2, 2022, 1:09:04 AM6/2/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ31. செலவழுங்குவித்த பத்து
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(திணை: பாலை: பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனுக்குச் சொல்லியது)
.
வேனிற் பருவத்தில் வெஞ்சுரம் தாண்டியே
ஆனபொருள் ஈட்ட அயர்ந்தனை இப்பயணம்
உன்னை விரும்பி உறையும் இவள்முதற்சூல்
தன்னில் தழைக்கும் சிறுவன் முறுவலில்
ஆழ்வதின் இன்பம் தருவதோ கல்சரியப்
போழ்ந்த மலையின் பொருள். ... 309
[போழ்ந்த: பிளந்த]
.
பொற்காசு கோத்துப் பொலிநிரை பாண்டிலணி
அற்பவிடை மேகலை அல்குல் அணிந்தே
இலங்குவளை மென்தோள் இழைதல் நெகிழ
வலியப் பிரிந்தே மலைவழிநீ சென்றால்
அரிதாம் இவள்நுதல் காணல் அழகாய்
புரிந்துகொள் வாயிவள் போக்கு. ... 310
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 301-310, ஓதலாந்தையார்
(பாலை: செலவழுங்குவித்த பத்து)
.
வேனில் திங்கள் வெம்சுரம் இறந்து
செலவயர்ந் தனையால் நீயே நன்றும்
நின்நயந்து உறைவி கடும்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே. ... 309
.
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மென்தோள் இழைநிலை நெகிழ
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலைஇவள் ஆய்நுதல் கவினே. ... 310
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 3, 2022, 9:54:08 AM6/3/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ41. முல்லை: செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(திணை: முல்லை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தவளாய் நற்றாய்க்குச் சொல்லியது)
.
பின்னணி
(வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை விளக்கம்)
செவிலி கூற்றுப் பத்து.
• தலைமகள் மணம் செய்தபின்னர் செவிலி அடிக்கடி மணமனை காணச் செல்வாள்.
• அங்கவள் கண்ட மணமக்கள் வாழ்க்கை நலமும்,
• காதலும், பிறவுமாகிய சிறப்பைக் கண்டு
• மகிழ்ந்த உள்ளத்தவளாய்ப் போந்து
• நற்றாய்க்குக் கூறும் பத்துப் பாக்கள் செவிலி கூற்றுப் பத்து.
.
நற்றாய்
• தலைமகளை ஈன்று புறந்தந்தவள்.
.
செவிலித்தாய்
• தலைமகளை வளர்த்து நினைவு, சொல், செயல் ஆகிய
• மூன்றன் பயிற்சியால் தலைமைப் பண்புடையவளாகச் செய்வாள்.
• இளமைப் போதில் நடையும் மொழியும் கற்பிப்பாள்.
• விளையாடும் செவ்வியில் தன்மகளை அவட்கு உயிர்த்தோழி ஆக்கி
• அவளது தலைமைப் பண்புகளை மாண்புறச் செய்வாள்.
• தலைமகள் களவுநெறியில், அவள், தன்மகள் (தோழி)
• இருவர் செயல்களைக் கண்காணித்து வேண்டும் துணையைச் செய்வாள்.
• தலைமகள் களவொழுக்கம் அறியாது தாய்-தந்தை
• அவள் கருத்துக் கொவ்வாத மணவினை கருதுவராயின்
• நாணத்தால் தலைமகள் தன் களவொழுக்கம் தோழி தவிரப் பிறரிடம் சொல்லாள்.
• தோழி வாயிலாகக் காதல் ஒழுக்கம் உணர்ந்துகொள்வதில் முன்னிற்பாள்.
• தலைமகள் கற்புநெறி வழுவாது, தான் காதலித்த
• தலைமகனைக் கரணமொடு நிகழும் வதுவையிற் கூடி
• மனையறம் புரிவதைக் காண்பதில் வேட்கை மிகுவாள்.
.
தோழி
• செவிலித் தாய்க்கு மகள்.
• பேதைப் பருவம் கடந்து தலைமகள் காமச் செவ்வி நிகழும் பருவமெய்துங்கால்
• தோழி விளையாடும் ஆயமகள் ஆதலுடன் தலைமகட்கு
• அறிவும் அறமும் அறிந்துரைக்கும் உயிர்த் துணைவி ஆவாள்.
• தலைமகள் களவொழுக்கத்தில் தலைமகனை
• ஆற்றுப் படுத்துவது தோழியின் முக்கிய செயல்.
.
தலைமகள்
• களவில் முளைத்த காதல் கற்பில் மனையறமாய் மாண்புற்று,
• அறவோர்க் களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கு எதிர்தல்,
• விருந்து புறந்தருதல் ஆகிய செயல்வகைகளால் தழைத்து,
• மக்கட் பேறாகாப் பயத்தல் கண்டு செவிலி பேருவகை அடைவாள்.
.
(பஃறொடை வெண்பா)
மறியிடை கண்ணயரும் மான்பிணை போல
அறமனைப் பிள்ளை நடுவைத்(து) உறங்கும்
இருவரையும் காண விளையும் இனிமை
கருநீல வான்சூழ்ந்த காசினியில் மேலுலகில்
தேவரும் இத்தகு காட்சியைக் காணுதல்
ஆவ(து) அரிதாம் மிக. ... 401
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
புதல்வனைத் தாயணைக்கத் தானவள் பக்கம்
முதுகணைத்துக் கொண்கனவன் மூழ்கிக் கிடப்பது
பாணர் நரம்பொலிக்கும் யாழிசை போலினிதாய்க்
காணும் மனையறப் பண்பு. ... 402
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(முல்லை: செவிலி கூற்றுப் பத்து)
.
மறிஇடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை முனிவுஇன்றி
நீல்நிற வியல்அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறல்அரும் குரைத்தே. ... 401
.
புதல்வன் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்பும்மார் உடைத்தே. ... 402
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 4, 2022, 8:25:50 AM6/4/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ41. செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(திணை: முல்லை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தவளாய் நற்றாய்க்குச் சொல்லியது)
.
(பஃறொடை வெண்பா)
கைத்தலம் பற்றிய காதலிபோல் அன்புள்ளம்
மெய்த்தகை கொண்டெழுந்த மைந்தன்பால் தோயும்
அகன்பெரும் சீர்கொளும் தந்தை பெயரைத்
தகைந்துபெறும் பிள்ளை தளர்நடை கொண்டே
முறுவலின் இன்நகை மூளத்தள் ளாடி
சிறுதேர் உருட்டுதல் கண்டு. ... 403
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
வாணுதல் இல்லாள் மகனுக்குப் பால்தரத்
தானவள் பின்னால் முதுகைத் தழுவுவான்
இன்மணத் தண்மலர் முல்லை நிலத்தினில்
குன்றுபல சூழ்நாட்டின் கோன். ... 404
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(முல்லை: செவிலி கூற்றுப் பத்து)
.
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன்பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்நகை பயிற்றி
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. ... 403
.
வாள்நுதல் அரிவை மகன்முலை ஊட்டத்
தான்அவள் சிறுபுறம் கவையினன் நன்றும்
நறும்பூ தண்புறவு அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. ... 404
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 5, 2022, 1:10:12 AM6/5/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ41. செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(திணை: முல்லை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தவளாய் நற்றாய்க்குச் சொல்லியது)
.
(பஃறொடை வெண்பா)
பாண்டில் விளக்காம் பகலோன் சுடர்போலும்
பாண்டில் விளக்கின் பருத்தசுடர் போலும்-இல்
லாண்டாள் நலம்குன்றா தானாள் மனைவிளக்காய்
கார்மிகு முல்லை களிமலர் சூழ்ந்திருக்கும்
ஊர்க்கோன் புதல்வற்குத் தாய். ... 405
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
அஞ்சனக்கண் பிள்ளைவிளை யாடத் தலைமகன்
வஞ்சி தழுவி மகிழ்ந்திருந் தானவன்
வண்டுகள் தூளாய்ந்து தேன்கொள் மலர்களைக்
கொண்டமுல் லைநிலக் கோன். ... 406
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(முல்லை: செவிலி கூற்றுப் பத்து)
.
ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக்(கு) ஆயினள் மன்ற கனைப்பெயல்
பூபல அணிந்த வைப்பின்
புறவுஅணி நாடன் புதல்வன் தாயே. ... 405
.
மாதர் உண்கண் மகன்விளை யாட
காதலி தழீஇ இனிதுஇருந் தனனே
தாதுஆர் பிரசம் ஊதும்
போதுஆர் புறவின் நாடுகிழ வோனே. ... 406
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 6, 2022, 3:01:25 AM6/6/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ41. செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(திணை: முல்லை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தவளாய் நற்றாய்க்குச் சொல்லியது)
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
நயந்த மனையவள் நன்கு தழுவி
நயந்தரும் பாணர் நவில்யாழ் இசைநுகர்ந்(து)
இன்புற்று வாழும் இவன்வைப்பு மாரியால்
மென்புலமாம் முல்லை நிலம். ... 407
.
முல்லைப்பண் யாழ்ப்பாணர் மோதமொடு பாடினர்
முல்லைமலர் உச்சியில் வாணுதல் மங்கைகொள
இல்லத்தில் பிள்ளையுடன் இன்புற் றிருந்தனன்
ஒல்லாமை இல்லாத கோன். ... 408
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(முல்லை: செவிலி கூற்றுப் பத்து)
.
நயந்த காதலி தழீஇ பாணர்
நயம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்புல வைப்பின் நாடுகிழ வோனே. ... 407
.
பாணர் முல்லை பாடச் சுடர்இழை
வாள்நுதல் அரிவை முல்லை மலைய
இனிதுஇருந் தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. ... 408
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 7, 2022, 1:07:11 AM6/7/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ41. செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(திணை: முல்லை: கடிமனைச் சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தவளாய் நற்றாய்க்குச் சொல்லியது)
.
(அளவியல் இன்னிசை வெண்பா)
புதல்வனைத் தந்தையவன் புல்லினான் மென்சொல்
புதல்வனின் தாயவளோ புல்லியிருந் தாளிவரை
இவ்வா றினிதாக மூவர் கிடந்தநிலை
இவ்வுலகிற் காணல் இனிது. ... 409
.
(பஃறொடை வெண்பா)
மனைமுன்றில் மாலை குறுங்கால்கொள் கட்டில்
மனைவி துணையாய் அருகிருக்கப் பிள்ளையிவன்
மார்பின்மேல் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்(கு) உகந்தே பொலிவுறும் பாணர்
வழுவிலா யாழிசை யாம்.. ... 410
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 401-410, பேயனார்
(முல்லை: செவிலி கூற்றுப் பத்து)
.
புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிது மன்றவர் கிடக்கை
நனிஇரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே. ... 409
.
மாலை முன்றில் குறும்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென்பிணித்து அம்ம பாணனது யாழே. ... 410
.
★★★★★
 
Reply all
Reply to author
Forward
0 new messages