சிங்கார சென்னையின் பிறந்தநாள் பயணம்......😍❤️
மதரேசப்பட்டணம், மதராசபட்டணம் மெட்ராஸ், சென்னை எனப் பல பெயர்களையும் பல கதைகளையும் கொண்டிருந்தாலும் வரலாற்றில் துல்லியமான ஆவணங்கள் எதுவும் இருக்கின்றனவா என்று கேட்டால் தெரியவில்லை.
1996ம் ஆண்டு சென்னை என்ற பெயர் மாற்றம் பெற்ற நம் "சிங்கார சென்னை" வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற வாய்மொழிக்குச் சிறிதும் குற்றம் செய்யாமல் பல மொழிகள், பல இனங்கள், பல தொழில்கள், பல உணவு, பண்பாடுகள் வழிபாடுகள் என எல்லாவற்றிலும் பற்பல வேறுபாடுகளோடு வண்ணமயமக
அழகுற மிளிர்கின்ற பெருமை மிகு மெட்ராசுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம். 😍😍
மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த வட சென்னையை நோக்கிய மரபு பயணத்தில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற பின் நுழைவாயில் சரியாக 5.45 க்கு பயணம் திட்டமிட்டபடி தொடங்கியது.
வங்கக் கடலின் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரங்களில் மிக முக்கியமானதும் இந்திய தேசத்தின் நான்காவது மிகப் பெரிய தலைநகரம் சென்னை.
தனித்துவமான நகரில் எத்தனையோ வரலாற்றுக் கூறுகளை நாம் தினம் தினம் கடந்து சென்றாலும் அவற்றின் தொன்மையறியாது சாதாரண கட்டிடங்களாய் நகர்ந்து சென்று விடுகிறோம்.
அத்தகைய மனநிலையை மாற்றி ஒவ்வொன்றையும் உற்று நோக்க வைத்த, பயணத்தில் தொடங்கிய இடத்திலேயே அறியக் கிடைத்த முதல் செய்தி,
நெசவுத்தொழில் ஏற்றுமதியை மிக முக்கிய வியாபாரமாகச் செயல்படுத்த விரும்பிய ஆங்கிலேயர்கள், பணியாளர்களுக்கு ப்ளாக் டவுன் என்று வாழ்விடத்தை உருவாக்கி அவர்களை அங்குக் குடியமர்த்திப் பாதுகாப்பு கருதி 6 எல்லை தூண்களையும் கட்டமைக்கின்றார்கள்.
அவற்றுள் இன்று எஞ்சி இருப்பது டேர் ஹவுஸ் முன் நிமிர்ந்து நிற்கும்15 அடி உயரமுள்ள ஒரே ஒரு எல்லைக்கல் மட்டுமே.
அந்த எல்லைக்கல்லின் வடிவமைப்பு மற்றும் நோக்கம் குறித்துப் பல தகவல்களை அறிய முடிந்தது.
முதலாம் உலகப்போரை நேரடியாக எதிர் கொண்ட இந்திய நாட்டின் முக்கிய நகரம் நம் சென்னைதான்.
இங்கிருந்த இங்கிலாந்து படைகளின் கட்டுமான பணிகளைத் தாக்கும் நோக்கில் ஜெர்மனியப்படை
திரண்ட போது களம் இறங்கிய 'எஸ் எம் எஸ்' எம்டன் கப்பல் சென்னை நகரை 150-க்கும் மேற்பட்ட குண்டுகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் செய்தது.
அதன் பின் எஸ் எம் எஸ் எம்டன் ஆஸ்திரேலியா வில் அதே வருடம் வீழ்த்தப்பட்டுக் காணாமல் போனது என்று புன்னகையோடு சொல்லி முடித்தார் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி அவர்கள்.
அதற்கான நினைவுச் சின்னத்தை ஒவ்வொருவரும் தனித்தனியே பின் குழுவாக அலைபேசிக்குள் பதிவு செய்து கொண்டு, அங்கிருந்து மாடிப் பூங்காவில் அமைந்திருக்கும் தூக்கு மேடைகளைப் பார்வையிட விரைந்தோம்.
சென்னை தனக்குள்ளே பல செய்திகளை வைத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் பெயர்கள் மட்டுமே உள்ளது செய்தி சொல்ல வேறெதுவும் மிஞ்சி இருப்பதில்லை.
அப்படித்தான் மாடி பூங்காவும் காட்சியளித்தது. ஆனாலும் காட்சியில் இல்லாதவற்றை வரலாற்றை மிக
அருமையாக
அடுக்கடுக்காய் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்கள் விவரிக்க குழுவினரோடு வாய்ப்பிளக்க நானும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பக்கத்தில் இருக்கும் வால்டன் சாலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு, எலிபன்ட் கேட் மற்றும்
மூலக்கொத்தளதிற்குமான தொடர்பு எனப் பல தொடர்புகளை தொடர்ந்து விவரித்தார்.
சென்னைக்கிருந்த அச்சுறுத்தல்களில் தன்னை பாதுகாக்கும் பெரும் பணியை கூவம் நதி செய்ததைச் சென்னை வாசிகள் உணர்ந்திருந்தால் இன்று கூவம் அழுக்கு படிந்த அண்டமருக்கும் அனாதையாக இருந்திருக்காது.
பிரெஞ்சுக்காரர்களினாலும் மற்றும் ஹைதர் அலியின் படைகளாலும் ஏற்படும் முற்றுகை தாக்குதலை எதிர்கொள்ள கிழக்கிந்திய கம்பெனி, சுவர் கட்டி நகரத்தைப் பாதுகாக்கும் எண்ணத்தில் கோட்டைச் சுவர்களில் அமைத்துக் கண்காணிப்பு கோபுரங்களையும் நுழைவாயில்களையும் அமைத்தது.
இதன்படி பழைய சிறைச்சாலை வழியாக சுவர் 1772 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு ஏழு நுழைவாயில்கள் என்றும் சொல்லப்படுகின்றது.
இங்கு மிஞ்சி இருக்கும் ஒரே ஒரு எச்சம் இந்த மாடி பூங்கா மட்டுமே இதன் வரலாற்றுப் பின்புலம் அறியாத நாம் இதனை எந்த அளவில் கட்டணமற்ற கழிப்பிடமாக மாற்றியுள்ளோம்?
மூக்கை பிடித்துக் கொண்டு வரலாற்றைக் கேட்டு முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
உயிர்களிடத்தில் பேரன்பு காட்டிய பேரன்பாளன், திருமிகு சென்னை என சென்னைக்குப் புகழாரம் சூடிய இளகிய மனம் படைத்த வள்ளலாரின் இல்லம் நோக்கி பயணம் தொடர்ந்து பின், புத்தகங்களை நோக்கி......
புத்தக வாசனையைச் சுவாசிக்கத் தெரிந்த எவரும் மோர் மோர்க்கெட்டில் கால் பதிக்காமலிருந்திருக்க மாட்டார்கள்.
1900 ஆண்டுகளில் கட்டப்பட்ட வணிக வளாகம் 1985 இல் ஏற்பட்ட பெரும் தீயினால் முற்றிலும் சாம்பலாகிப் போன வரலாற்றுக் கட்டிடத்தை மிக ஏக்கத்தோடு கரன் கார்க்கி தன் சிறுவயது அனுபவங்களையும் சேர்த்து சுவைபட விளக்கினார்.
இன்று மின்சார ரயில்களின் நடைமேடையாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பொம்மை கட்டிடத்தை பார்த்து நீண்ட நெடிய விளக்கம் கேட்டபின் அங்கிருந்து நகர்ந்து செல்ல ஏனோ மனம் சற்று தயங்கி நெடுநேரம் அங்கு எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டது.
பின் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காசிமேட்டிற்குள் நுழைந்தோம். தமிழ் திரையுலகம் வடசென்னை பற்றி நம் மனதில் ஒரு பெரிய காட்சியை அமைத்து ஆழப் புதைத்து வைத்திருக்கிறது.
அந்த காட்சிகளை அப்படியே தூர்வாரி புதிய காட்சிகளை உள் செலுத்துவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.
பெருங்கடலின் அழகில் வரிசை கட்டி நின்ற படகுகள் அவற்றைப் பயணத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்த மீனவர்கள் கடல் மாதா அழகில் திளைக்க,
மக்களின் பின்புலத்தைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பொருளாதாரத்திற்கு எந்த அளவில் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை மறக்காமல் நினைவு படுத்துவது தான் அந்த மக்களுக்குச் செய்யும் பெரும் கடமை.
இந்தியப் பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்களிப்பை நாம் அறிவோம் அந்த வகையில் மிகப்பெரிய மீன்பிடி வளாகத்தைக் கொண்டிருக்கும் காசிமேடு எந்த அளவில் பொருளாதாரத்திற்குள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
அதைப்பற்றி நாம் தேடிப் படிக்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிக ஆழமாகத் தனது கருத்தைப் பதிவு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவி சுபாஷினி அவர்கள் தான் எழுதி வெளியிட்ட
மெட்ராஸ் 1726 என்ற புத்தகத்தைக் கரன் கார்க்கி அவர்களுக்கு வழங்கி அந்த நிமிடங்களைச் சிறப்புச் செய்தார்.
நயிம் பிரியாணியைச் சுவைத்து விட்டு, பெரியார் திடல். முற்றிலும் மெய்மறந்து பார்ப்பதற்குக் கேட்பதற்கும் அறிவியலும் ஆர்ப்பாட்டங்களும் ஆச்சரியங்களும் கொட்டி கிடக்க உள்வாங்கிக் கொள்ள, நண்பர் பிரின்ஸ் என்னரசு பங்கு அளப்பரியது.
அருங்காட்சியகத்தைச் சுத்தி காட்டும் பொறுப்புணர்வோடு மிகப் பெருமிதத்தோடும் பணிவோடும் தமிழறிவோடும் தமது கருத்துக்களை அழகாக எடுத்துக் கூறி சில மணி நேரங்கள் எங்களை கட்டி போட்டு விட்டார்.
பெருங்கடலோடு சங்கமித்து அன்றைய தேடல் நிறைவுற்றது.
மிக
அருமையான
ஏற்பாடு அற்புதமான நேரம் மேலாண்மை ஒவ்வொருவரும் தனித்தனி பொறுப்புகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைமைத்துவப் பண்பு என தமிழ் மரபு அறக்கட்டளையின் சகோதரிகள் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்கள்.
மிக
அருமையான
ஆக்கபூர்வமான நாளாக அமைத்துக் கொடுத்தமைக்கு தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் அதன் தலைவர் சுபாஷினி அவர்களுக்கும் அன்பும் நன்றிகளும்.