"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.
முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழைக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடு கடவுள். அறிவு கடவுள். முருகணின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.
"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" என பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.
மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது. மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.
மனம் என்பது என்ன..?
மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தை கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.
அப்படியெனில் மனம் ஒரு புலனா..?
மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்வைந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தொண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.
மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?
உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.
மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?
ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?
நாளை தொடர்வோம்.....