பட்லூர் வாகீசுவரர் கோயில்
அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு
அனுலோமர், பிரிதிலோமர் என கலப்பின சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாக காட்டப்படுகின்றது. அனுலோமர் உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர், இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசியகுல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் அனுலோமர் எனப்பட்டனர். கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப் படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பல வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.
அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை என்பது தான். இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ எப்போதோ எதோ ஒரு காலத்தில் எதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்பு சாதியர் தானே ஒழிய ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்பு சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணரமுடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்பு சாதியார் அல்லர் என்பதே உண்மை. இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர் கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக பிரதிலோமராக குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்பு சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்கமாட்டார்கள் எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை, ஏனென்றால் அவர் தம்பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம் கலப்பு சாதியர் அல்லர்.
ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் பல தொல்லியல் வல்லுநர்கள் இந்த உண்மையை சற்றும் எண்ணிப்பாராமல் கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல இவர்களும் இதற்கு எடைமதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றதாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடுகின்றது.
உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில் குறிப்பாக சத்திரியர், வணிகர் என்போர் மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிக் பெண்கள் மூலம் கலப்பு பிள்ளைகளுக்கு வழிகோளினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கை தீர்த்து வைக்கிறான். இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான். மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர் பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.
பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்கு பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிரமணரல்லாத பூசகராக காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.
ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரச்சேர்ந்த வெளி யிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்கை பூசகர்; ஏரி - குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.
விளக்கம்: கொங்கு சோழன் வீரராசேந்திரனின் 29+9 =38 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊர்ரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிகொடுத்தனர். அதற்கு பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இவ்ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழுஉரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில் இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.
பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றை தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சி பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3ல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்கு தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.
பார்வை நூல்: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு பட்டிகைக் கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீரராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _
திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப்பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு - பாயும்
விளக்கம்: கொங்கு சோழன் வீரராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.
பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.
பார்வை நூல்: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.
கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு.
1. _ _ _ _ ம
2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _
வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்
விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.
பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82
எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்.
1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.
விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்
விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.
கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 - 1800), க.பன்னீர்செல்வம், 2018. ARIEp 1938 B. No 492
இந்த பாரசிவர் பின்னாளில் பிராமணராக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு சான்றாக ஒரு கல்வெட்டு. அப்படியானால் பாரசிவர் மெல்ல மெல்ல பிராமணரில் கலந்து கரைந்து விட்டனர் என்று தெரிகின்றது.
பெரிய ஓலைப்பாடி பசுபதீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச்சுவர் பட்டிகை, முப்பட்டைக் குமுதம், ஜகதி 11 வரிக் கல்வெட்டு
1. ஸ்வஸ்திஸ்ரீ தி(ருபுவன)ச் சக்கரவத்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வல்ல(பதேவற்கு யாண்டு _ _ _ )வது
2. கும்ப நாயற்று பூர்வ பக்ஷத்து த்ரயோதஸியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற _ _ _ (நாள் மிலாடாகிய)
3. ஜநநாதவள நாட்டுப் பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டு சேதிமண்டலமான சிங்கமலைப்பற்று ஓலைப்பா
4. டியில் உடையார் திருவண்ணாமலை உடையாரைப் பூசிக்கும் நம்பிமாரில் பாரஸிவ
5. ன் காஸ்யப பட்டற்க்கு இ ஓலைப்பாடியில் பெரிய ஏரியில் கழனியில் வதிக்கு கிழக்கு வாய்க்காலுக்கு _ _ _ வடக்கு _ _ _
6. நான் கெல்லைக்கு உட்பட்ட நிலம் குழி சத_ _ இக்குழி ஆயிரமும் இன்நிலத்துக்கு நீர்ப்பாச்சி வாய்க்கால் உரிமை தூ உரிமை
7. இந்நிலத்துப் பயன்படு மரம்களும் உள்பட யிக்குழி சத_ _ மும் உதக பூர்வமாகக் குடுத்தோம் யிந்த நிலத்துக்கு வரும் கடமை குடிமை பொ
8. ன் வரி நிலவழி காணிக்கை மாமடி வல்லாளதேன் காணிக்கை காத்திகைப் பச்சை பிள்ளையார் நோன்பு
9. வாசல் வினியோகம் நாட்டு வநியோகம் சந்து விக்கிரகம் முகம் பார்வை நல்லெருது தோணிகை கவிந்திகை திருஎழுத்து தேவை ஊர்
10. வினியோகம் மரநோன்பி தேவை மற்றும் ஏப்பேர்ப்பட்ட சகல உபாதிகளும் கழித்து தமக்கும் புத்திரற்க்கும் பாத்யமாக முதலடங்
11. கலும் இறையிலியாக யின்நாள் முதல் ஸர்வமான்யமாக அநுபவிக்கும் படி வரியிலார் கணக்கிலும் நிறுத்தும்படியும் சொல்லிவிட்டோம் _ _ _ (கல்வெட்டு இடைஇடையே சிதைந்துள்ளது)
மதுரை ஆண்ட மாறவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியன் (1308 -1342) வளர்பிறை கும்ப ராசி வெள்ளிக் கிழமை சனநாத வளநாட்டில் தென்பெண்ணைக்கு வடகரையில் அமைந்த ஓலைப்பாடி இறைவர் திருவண்ணாமலையாருக்கு பூசனை ஆற்றும் நம்பி (பிராமணர்)மாரில் ஒருவரான பாரசிவன் காஸ்யப பட்டனுக்கு ஓலைப்பாடியில் உள்ள பெரிய ஏரிக்கு அருகில் ஆயிரம் குழி நிலம் எல்லா வகை வரியும் நீக்கி இறையிலியாக தந்து, மாமனார் வல்லாள போசளர் காணிக்கை உட்பட தந்து அதை வழிவழியாக பிள்ளை, பேரன் என்று தொடர வேந்தன் ஆணைஓலை தந்தான்.
பார்வை நூல்: பெரிய ஓலைப்பாடி அருள்மிகு சௌந்தர்ய நாயகி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு, முனைவர் இல. தியாகராஜன்
நாகை மாவட்டம் மாயவரம் வட்டம் புஞ்சையில் அமைந்த கோயில் கல்வெட்டு.
1. ஸ்வஸ்த்திசிரி சிரி திருபுவனச்சக்கரவத்திகள் சிரிஇராசாதிராசதேவருக்கு யாண்டு மூன்றாவது கற்கடகநாயற்று _ _ _ _
2. ஆக்கூர் நாட்டு உடையார் திருநந்திப்பள்ளி உடையார் கோயில் மூலபிரத்தி ஆதிசண்டேசுவருளால் இக்கோயிலில் சிரிமாகேஸ்வரக்கண்காணி செய்வார்களும்சிரிகாரியஞ்செய்வார்களும் கோயில் கணக்கரும்இவ்வூர்
3. அனுலோம ரதகாரனாந கண்மாளரில் திருச்சிற்றம்பலமுடையான் சேவதவநப் பெருமாளான ராஜநாராயண ஆரவாரியுனுக்கும் நாயகன் திருநடம்புரிஞ்சாநாந மூலபரிஷை வாரியனுக்கும் ராசேந்திர சோழநல்லூரும் திருநந்திப்பள்ளியும் மரத்தச்சக்காணி
4. _ _ _ _ பட்டன் சிரி ராமநாத திருநந்திப்பள்ளி பெருந்தச்சனுக்கு கணவதிசங்கர தேவனான ராசேந்திர சோழப் பெருங்கொல்லனும் தட்டாரில் கல்பகந் கந்தாழியான அஞ்ஞூற்றுவப் பெருந்தட்டானும் கல்தச்சரில் திருவகத்திப்பள்ளி _ _ _
5. அதியநாயகப் பெருந்தச்சனுக்கும் அருமொழிதேவந் உடையாநாந தழுவக்குழஞ்சப் பெருந்தச்சனுக்கும் இந்தமையே தருவான் ஆண்டவன் தேசாந்திரச்சிற்றம்பலப் பெருந்தச்சனுக்கும் நம்பி தாழியான திருமாளிகைப் பெருந்தச்சனுக்கும்
6. அம்பலக்கூத்தன் பெரியனான நாலாயிர பெருந்தட்டானுக்கும் _ _ _ _
இரண்டாம் இராசாதிராசனுக்கு மூன்றாவது ஆட்சிஆண்டில் (கி.பி. 1166) ஆக்கூர்நாட்டில் அமைந்த திருநந்திப்பள்ளி கோயில் இறைவரான மூலவரது அருளால் இக்கோயிலில் சிவனடியார்களுகான மேற்பார்வை செய்பவர்களும் கோயில் திருப்பணிகள் கண்காணிப்பவரும் கோயில் கணக்கரும் இவ்வூரில் வாழும் அனுலோமன் தேர்வடிக்கும் (ரதகாரன்) கம்மாளரில் திருச்சிற்றம்பலமுடையான் சேவதவநப் பெருமாளான ராஜநாராயண ஆரவாரியுனுக்கும், நாயகன் திருநடம்புரிஞ்சாநாந மூலபரிஷை வாரியனுக்கும், ராசேந்திர சோழநல்லூரும் திருநந்திப்பள்ளியும், மரத்தச்சக்காணி உடைய_ _ _ _ பட்டன் ஸ்ரீராமநாத திருநந்திப்பள்ளி பெருந்தச்சனுக்கு கணவதிசங்கர தேவனான ராசேந்திர சோழப் பெருங்கொல்லனும் தட்டாரில் கல்பகந் கந்தாழியான அஞ்ஞூற்றுவப் பெருந்தட்டானும், கல்தச்சரில் திருவகத்திப்பள்ளி _ _ _ அதியநாயகப் பெருந்தச்சனுக்கும் அருமொழிதேவந் உடையாநாந தழுவக்குழஞ்சப் பெருந்தச்சனுக்கும் இந்தமையே தருவான் ஆண்டவன் தேசாந்திரச்சிற்றம்பலப் பெருந்தச்சனுக்கும் நம்பி தாழியான திருமாளிகைப் பெருந்தச்சனுக்கும் அம்பலக்கூத்தன் பெரியனான நாலாயிர பெருந்தட்டானுக்கும் என்று தொடரும் கல்வெட்டு இதற்கு மேல் சிதைந்துவிட்டதால் முழுச்செய்தியைஅறிய முடிவில்லை ஆனால் இந்த விசுவகர்மாக்கள் அல்லது பஞ்ச கம்மாளர்கள் பற்றிய அரிதான கல்வெட்டில் அனுலோம என்ற சொல்லாட்சி நேரடியாக இடம்பெற்றுள்ளது. பாரசிவர் பற்றிய கல்வெட்டுகளில் அனுலோமர் என்ற சொல் இடம்பெறவில்லை.
பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 - 1800), க.பன்னீர்செல்வம், 2018. ARIEp 1925 B. No 189.
|
--
--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின், thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்
---
You received this message because you are subscribed to the Google Groups "தோழமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thiru-thoazham...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஏற்பிசைவு (recognize). சிறப்பு
கல் தச்சர்களுக்கு வருமானம் என்ன?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.