உளவுத் துறை என்பதை spying தொடர்பாக வைத்துக் கொள்ளுவதே நல்லது.
intelligence என்பதற்கு நுண்ணறிவு என்ற சொல்லை அண்ணா பல்கலைக் கழக
கணிச்சொற் தொகுதியில் பார்த்தேன். கூர்மதி, கூரறிவு, நுண்ணறிவு போன்றவை
ஒருபொருட் சொற்கள் தாம்.
intelligence போன்றவற்றிற்குத் துறைதோறும் ஒரு மொழியாக்கம் உருவாக்குதில்
எனக்கு உடன்பாடு கிடையாது. அவை பொதுப்படையான சொற்கள். எனவே, பல்வேறு
துறைகளிலும் ஒரு சொல் இருப்பதே நல்லது. அதனால் தான் நுண்ணறி என்று
வினைத்தொகையாய் இங்கு எழுதினேன்.
ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் நான் விதப்பான சொல்லைப் படைப்பதாக நீங்கள்
பொருள் கொள்ளுகிறீர்கள். அப்படிக் கிடையாது. தமிழில் பல் பொருள்- ஒரு
சொல், ஒரு சொல் - பல் பொருள் என்ற நிலைப்பாடு பாடல், யாப்பு
போன்றவைக்குச் சரிவரும். அதனின்றும் மேல்வந்து, அறிவியற் துறையிலும்
பயன்பட வேண்டுமானால் சொற்துல்லியம், சொற்கூரகை என்பது மிகவும் தேவையானது.
அவை இல்லாது போனால் எழுதுவதில் பொருட் குழப்பமே ஏற்படும். எனவே இந்தக்
கருத்துக்களைச் சொல்லாக்கம் செய்யும் போது ஆழ்ந்து வலியுறுத்துவேன்.
அவ்வளவு தான்.
பொதுவாய், இருப்பதை மத்தும் வைத்துப் பூசி மெழுகுவதைக் கூடியவரைத்
தமிழ்க் கட்டுரைகளில் நான் தவிர்ப்பவன், அதே பொழுது நான் எழுதுவது
படிப்போரை மிரளச் செய்யும் என்று நினைப்பது மிகைக் கூற்றாகவே எனக்குத்
தென்படுகிறது. நான் 100 பேரை மகிழ்ச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டிலும்
10 பேருக்குப் புரியவைக்க வேண்டும் என்று முயலுபவன். ஆர்வம் இருப்பவர்கள்
என்னைப் புரிந்து கொண்டுதான் வருகிறார்கள். கலைச்சொல்லை இன்ன
காரணத்திற்காக இப்படி உருவாக்கினோம் என்ற விளக்கத்தையும், சுற்றியுள்ள
கதைகளையும் சொல்லும் போது அந்தச் சொல் படிப்போரால் இயல்பாக உள்வாங்கப்
படத்தான் செய்கிறது. அந்த வகையில் நான் பரிந்துரைத்த பல சொற்கள் தமிழ்க்
குமுகாயத்தில் (தமிழ் இணையக் குமுகாயத்திலும்) உள்வாங்கப்
பட்டிருக்கின்றன. சொற்களின் ஏற்பு/ ஏற்காமை பற்றி நான் என்றுமே கவலைப்
பட்டதில்லை. எது நிற்குமோ, அது நிற்கட்டும். எது மறையுமோ, அது
மறையட்டும். இவை இயற்கை/செயற்கை, ஆங்கில ஓசை என்றெல்லாம் ஒருசிலர்
சொல்லுவதையும், இன்னுஞ் சிலர் தூற்றுவதையும் கூட நான்
பொருட்படுத்துவதில்லை. அவர்கள் மனத்தில் இருக்கும் முன்னுள்ளிய
சிந்தனைகளை நான் களைவும் வேண்டியதில்லை. என் தன்னிலை விளக்கம் கொடுத்துக்
கொடுத்தே சலித்துப் போனேன். எனவே இப்பொழுது பெரும்பாலும் அத்தகைய
விளக்கங்களைக் கொடுப்பதில்லை.
agency என்பதற்கு முகவம் என்ற சொல்லையே பாவாணர் 30,40 ஆண்டுகளுக்கு முன்
பரிந்துரைந்திருந்தார். முகவம் என்பது ஒருவரை முகப்படுத்தல் என்று பொருள்
கொள்ளும். நானும் அதை முன்னாற் புழங்கியிருக்கிறேன். இப்பொழுது அதைத்
தவிர்த்து, அகவம் என்பதையே பரிந்துரைக்கிறேன். அகைத்தல் = செலுத்துதல்.
அகவித்தல் என்பதும் செலுத்துதல் என்ற பிறவினையை உணர்த்தும். அகவம் என்ற
சொல் எந்த வினையில் எழுந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெயர்ச்சொற்
சரமாய்க் கூட்டுச் சொற்களைப் படைப்பது தமிழ்மொழியின் அமைப்பிற்குஒத்து
வராது.. நாம் சொற்களைப் படைக்கும் போது, உள்ளே பொதிந்திருக்கும்
வினைச்சொல், அது தன்வினையா பிறவினையா, செய்வினையா, செயப்பாட்டு வினையா,
எந்த ஈறு வேண்டும், ஓர் ஈறு போறாதா, சொற்சுருக்கம் இருக்கிறதா, என்று
உணர்ந்து உருவாக்குவது நல்லது.
சிறகு என்பது side, wing என்பதற்குத் தமிழில் உள்ள பழஞ் சொல் தான். சிறகு
போன்ற அலகு சிறகம் என்று சொல்லப் பட்டது. (side என்ற மேலைச் சொல்லும்
சிறகு என்ற தமிழ்ச்சொல்லும் வரலாற்று மொழியியலின் படி தொடர்புள்ளவை தான்.
தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள சொல்லுறவுகள்
ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அதைக் கூர்ந்து கவனிக்கத் தான் நாம்
அணியமாய் இல்லை. அந்த அளவிற்கு 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம்
நூற்ராண்டில் முதற்பாதியிலும் மாக்சு முல்லர், வில்லியம் சோன்சு,
எல்லீசு, கால்டுவெல், ஆகியோர் முன்னிறுத்திய ஆக்கங்களும் மற்றம் வடமொழி
மயக்கமும் நம்மைக் கட்டிப் போட்டு இருக்கின்றன. இன்று புதிதாய்ப்
பிறந்தோம் என்று எண்ணி மூலங்களைப் படிக்காமல், வழிநூல்களையும்,
உரைகாரர்களையும் மட்டுமே படித்துக் கிளைப்பிள்ளைகளாகவே
ஆகிவிடுகிறோம்..) . .
ஆய்வாளர் என்ற சொல் 1967க்குப் பின் ஒரு வேகத்தில் தமிழகத்தில் எழுந்த
சொல். operator க்கு இயக்குநர் என்ற சொல் அக்காலத்தில் எழுந்தது போல,
inspectorக்கு ஆய்வாளர் என்பதும் எழுந்தது. கிடைக்கும் செய்திகளை, நடந்த
நிகழ்வுகளை உள்நோக்கி, அதாவது ஆழ்ந்து நோக்குவதே inspection. அதை ஆய்வு
என்று சொல்லுவது அதைத் தேவையற்றுப் பெரிதாக்குவது ஆகும். ஆய்விற்குள்
அடங்குவது உள் நோக்கு. ஆய்விற்கு என ஒரு தேற்றம் (theory) உண்டு.
உள்நோக்கிற்கிற்குத் தேற்றம் தேவையில்லை. நீங்கள் ஒரு பொறியாளர்/
அறிவியலாளர் எனில் இந்த வேற்பாடு உங்களுக்கு நன்றாகவே துலங்கும்.
[பொதுவாய் முன் பரிந்துரைக்கப் பட்ட சொற்களை மீண்டும் சீர்தூஉக்கிப்
பார்ப்பதில் தவறு இல்லை. 1967/70 தலைமுறை உணர்ச்சி மிகுந்த தலைமுறை;
ஆனால் அப்பொழுது தமிழகம் அறிந்த செய்திகள், நுண்ணறிவு பல்வேறு
காரணங்களால் குறைந்தே இருந்தது. 67/70 களிற் பரிந்துரைக்கப்
பட்டவையெல்லாம் தொடக்கூடாத பொருட்களோ, காத்தே தீரவேண்டிய மரபுகளோ அல்ல.
நானும் அந்தத் தலைமுறைக் காரன் தான். இன்றைக்குப் பகுத்தறிந்து ஏற்கக்
கூடியதை ஏற்று, மாற்றவேண்டியதை மாற்றுவது நல்லது.]
அன்புடன்,
இராம.கி..
On Aug 4, 10:07 pm, Ravishankar <
ravishankar.ayyakka...@gmail.com>
wrote: