நன்றி: திரு. ஜ்யோவ்ராம் சுந்தர்
Posted by
ஜ்யோவ்ராம் சுந்தர்
on Tuesday, March 23, 2010
/
Labels:
நேர்காணல்
எம் யுவனை சொல்புதிது இதழுக்காக ஜெயமோகன் எடுத்த நேர்காணல் இது.
’பிரபஞ்சம், கவிதை - ஒரு கவிஞன்’ என்ற தலைப்பில் சொல் புதிது ஏப்ரல் 2001
இதழில் வெளியானது. எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ’இலக்கிய
உரையாடல்கள்’ புத்தகத்தில் இந்நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
புத்தகத்தைக் கொடுத்தும், வெளியிட கவிஞர் எம் யுவனிடம் அனுமதியும் வாங்கிக்
கொடுத்த பைத்தியக்காரனுக்கு நன்றி.
பெரிய நேர்காணல் இது. நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிடுகிறேன். இனி
முதல் பகுதி...
முதலில் சில அடிப்படைகளை வகுத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாமென்று
நினைக்கிறேன். ’கவிதை என்றால் என்ன?’ என்பது பற்றி உங்களிடம் ஏதாவது
நிர்ணயம் உண்டா?
’கவிதை என்பது என்ன? ’ என்பது பற்றி நிர்ணயம், யாருமே செய்ய முடியாது என்று
படுகிறது. கருத்தாக்கமாக கவிதை பற்றிய நிர்ணயங்கள் பல ஏற்கனவே
சொல்லப்பட்டிருக்கின்றன. பலராலும், பல மொழிகளிலும் இவற்றால் ஏதேனும் ஒன்றை
நம்பி இப்படியிருப்பதுதான் கவிதை என்று ஓர் அளவுகோலை உருவாக்கிக் கொண்டு,
அதன்படி கவிதையை நிர்ணயிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். காரணம்,
இவ்வாறு சுவீகரித்துக்கொண்ட அளவுகோலை முறிக்கும் கவிதை ஒன்று மறுநாளே
படிக்கக் கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. செய்யுளுக்கும்
கவிதைக்குமான அடிப்படை வேறுபாடு இதுவே. செய்யுளை நிர்ணயிக்க இலக்கணம்
சார்ந்த உபகரணங்கள் உள்ளன. குறிப்பாக தமிழில் இவ்வுபகரணங்கள்
விதிவிலக்குகளுக்கு உரிய சலுகைகளோடு உள்ளன.
கவிதை நிர்ணயம் பெருமளவும் பாடுபொருளை ஒட்டியே நிகழ்வதற்குச் சான்றுகளும்
தமிழில் நிறைய உண்டு. சித்தாந்த அடிப்படையிலான கவிதை பாவனைகள் கவிதை என்று
கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. கவிதைக்குரிய அடிப்படை
லட்சணங்கள் எதுவும் இல்லாத பிரகடணங்கள், சவால்கள், முற்றுமுடிவான
கூற்றுகள், தழுதழுப்புகள் கவிதை என்று முன்வைக்கப்படுவதும்
அங்கீகரிக்கப்படுவதும் முந்தைய காலங்களை விட தமிழில் இப்போது அதிகமாகப்
பார்க்க முடியும்.
ஒரு நிமிடம்... இப்போது எவையெல்லாம் கவிதை அல்ல என்று சொன்னீர்கள்.
கவிதைக்குரிய அடிப்படை லட்சணங்கள் சில உள்ளதாக... நான் கேட்டது அதுதான்.
அந்த நிர்ணயம் என்ன? குறைந்தபட்சம் நீங்கள் கவிதை எனும்போது எதை
உத்தேசிக்கிறீர்கள்?
என் நிர்ணயம் புறவயமானதோ நிரந்தரமானதோ அல்ல. ‘புறவயமாக நிர்ணயிக்க
முடியாது’ என்றுதான் கூறினேன். அது அந்தந்த கவிதை சார்ந்து, வாசிப்பின்போது
நான் உருவாக்கிக் கொள்வது.
ஆனால் ஒரு பொது விவாதத்தில் அந்தப் பொதுத் தளத்திற்காகவேனும் நாம் ஒரு
நிர்ணயத்திக்கு வந்தாக வேண்டியுள்ளதல்லவா?
அப்படி நான் நினைக்கவில்லை. கவிதை என்று நான் சொல்லும்போது,
எதிர்முனையில் இருப்பவன் தன் அனுபவம் மூலம் அதை உணர முடியும். புறவயமான
வரையறைகள் இல்லாமலேயே விவாதம் நடக்க முடியும்.
இப்பிரச்சனை காரணமாகவே ஆதி முதல் விமர்சகர்கள் கவிதையை அதன் வடிவமாகவே
உருவகித்து புறவயமாக மாற்றிக் கொண்டார்கள்...
கவிதை என்பது அதன் வடிவமா? அல்லது பாடுபொருளா என்ற கேள்வியும் நிரந்தரமாகவே
இருந்து வந்திருக்கிறது. இவ்வாறு பிரித்துப் பேசுவது ஒரு வசதிக்காக
மட்டுமேயன்றி அப்படி இரண்டாக இருப்பதில்லை. வடிவமும், பாடுபொருளும்
வெவ்வேறாக தென்பட முடியாத இசைவைக் கொண்டிருப்பது கவிதை. பாடுபொருள்
கவிஞனின் நிலைப்பாடு சார்ந்து வாழ்வின் எந்த முனையைப் பற்றியும் எந்தவிதமான
தீர்மானத்துடனும் செயல்பட முடியும். வடிவத்துக்கு ஒரு வரலாற்றுப்
பின்புலம், நீங்கள் புறக்கணிக்கவே முடியாத ஒரு வரலாற்றுப் பின்புலம் -
இருக்கிறது.
இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. கவிதையும் கவிதையனுபவமும்
வேறானவை. ‘கவித்துவம்’ என்பது, சிறுகதை, நாடக, சிலசமயம்
விமர்சனக்கட்டுரைகள் மற்றும் அன்றாட வாழ்வியல் காட்சிகள் இவற்றில்கூட
இருந்துவிட முடியும். உண்மையில் கவித்துவத்தை உள்ளடக்காத எதையும் ஒரு
சீரிய நுகர்வோன், ‘கலை’ என்றே ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால், கவித்துவம்
கவிதை என்ற அந்தஸ்தை அடைவதற்குச் சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும்.
ஆக, நாம் கவிதை என்று பேசமுடிவதெல்லாம் கவிதையியல் பற்றி மட்டுமே. இந்த
அர்த்தத்தில்தான் வார்த்தைகளின் அடங்காச் சுனையை உள்ளடக்கிய பிரமிளின்
கவிதைகளையும் சொற்களின் அதீத மௌனம் சுமந்த நகுலனின் கவிதைகளையும் நாம்
கவிதை என்ற ஒரே சொல்லின் பின்னணியில் வைத்துப் பேசுகிறோம். அது போலவே,
இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவுநிலை பற்றி ஆன்மிக மொழியில் பேசும்
தேவதேவனின் கவிதைகளையும், தொழில்நுட்பத்துக்கும் மனிதனுக்குமான உறவுநிலை
பற்றிப் பிரதானமாக கவனம் கொள்ளும் பிரம்மராஜன் கவிதைகளையும் ஒரே தட்டில்
வைத்துப் பேசுகிறோம்.
என்னைப் பொருத்தவரை கவிதையை ஒரு ‘நுண் அனுபவம்’ என்பேன். அதன் நுண்மை
மிகவும் காத்திரமானது. கவிதை புரிவதற்கு முந்தின நிலையிலேயே, கவிதையின்
உட்பொருளும் அதன் விஸ்தீரணமும் விளங்கிவிடுவதற்கு முன்னமே, கவிதையுடன் ஓர்
உறவு ஸ்தாபிதமாகிவிடுகிறது. அந்த உறவை விவரிக்கும்போதுதான் தரவித்தியாசம்
பற்றிய, ஏற்றலும் மறுத்தலும் பற்றிய விவாதங்கள் தொடங்குகின்றன. அவை,
பெரும்பாலும் கவிதை சாராதவை. வாழ்வியல் பற்றி, சித்தாந்தம் சார்ந்தும்
சாராமலும் வாசகனோ விமர்சகனோ கொள்ளும் நிலைப்பாடுகள் சார்ந்தவை. ஆகவே,
கவிதை பற்றிய பேச்சில் ஒருதலைப்பட்சமாக ஆகிவிடுபவை அவை.
என் கேள்வியை மீண்டும் முன்வைக்க விரும்புகிறேன். ‘கவித்துவம்’ கவிதை
என்ற அந்தஸ்தை அடைவதற்கு, சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும் என்கிறீர்களே
அவை யாவை?
தேவதச்சனிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, கவிதை என்பது, ‘ஒரு மாற்று
கணித மொழி’ என்றார், அது ‘சரி’ என்றே படுகிறது.
வரையறை செய்யப்பட்ட கணித மொழியின் தருக்கத்தின் வழியாக அறிவுத்துறைகள்
பயணிக்கின்றன. மாறாக, மொழி ஊடகம் வழியாக பிரம்மாண்டமான அ-தருக்கத்தை
முன்வைப்பதைக் கவிதை எனலாம். ‘ஜென்’ கவிதைகளைச் சிறந்த உதாரணமாகச்
சொல்லலாம்.
அவன் வனத்தில் நுழையும்போது
சருகுகள் நொறுங்குவதில்லை
நீரில் இறங்கும்போது
வளையங்கள் கிளம்புவதில்லை
இந்தக் கவிதையை உணர்வுகொள்ள நடைமுறைத் தருக்கங்கள் எதுவுமே உதவாது.
இப்போது கிட்டத்தட்ட ஒரு வரையறையை நெருங்கி விட்டோம் என்று படுகிறது.
கவிதையின் மொழி வரையறுக்கப்பட்டதல்ல என்கிறீர்களா? இந்தக் கவிதையில் ‘வனம்’
என்றால் எது என்று நிர்ணயித்துவிட முடியாது...
அறிவுத்துறைகளின் அடிப்படை அலகு, ‘ஒரு சொற்றொடர் அல்லது கருத்து’.
கவிதையின் அடிப்படை அலகு, ‘ஒரு வார்த்தை’. பிற துறைகள் அடிப்படை அலகை
வகுத்து, (குறைந்தபட்சம் அக்குறிப்பிட்ட தளத்திற்கு மட்டுமாகவாவது) முன்
வைத்துவிட்டு மேலே பேச ஆரம்பிக்கின்றன. கவிதை, அது வரையிலான எல்லா
வரையறைகளையும் நிராகரித்துவிட்டு மேலே பேச ஆரம்பிக்கிறது. இதைத்தான்
அ-தர்க்க நிலை என்றேன்.
அக அனுபவமான கவிதையைப் புறவய வடிவமாக வகுத்து முன்னால் வைத்துக்கொண்டு
பேச ஆரம்பிக்கிறோம். கவிதையியல் தொடங்குவதே இங்குதான். உங்கள் பார்வையில்
இவ்’வடிவம்’ என்பது எப்படிப்பட்டது? அது ஒரு மொழிக்கட்டுமானமா?
உட்குறிப்புகளின் (அல்லது தொனிகள்) குறைந்தபட்ச புற அடையாளங்களின்
தொகுப்பா?
கவிதை மட்டுமல்ல, காண் உலகம் பற்றிய அவதானிப்புகள் எல்லாமே அக
அனுபவங்கள்தான் என்பது என் கருத்து. நிறக்குருடு என்ற பார்வைக்குறைபாடு
என்னிடம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சிவப்பு என்று
குறிப்பிடும் நிறம், என் பார்வையில், நீங்கள் நீலம் என்று குறிப்பிடும்
நிறமாகத் தெரிகிறது. ஆகவே, படிப்படியாக நான் “அது சிகப்பு நிறமே!” என்று
பொது ஒப்பந்தத்துக்கு வந்து சேர்கிறேன். இதை வேறு எங்கும் சரிபார்த்துக்
கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எண்ண ஓட்டங்கள், தரிசனங்கள் சம்பந்தமாகவும் இதே
குழப்பம் இருக்கிறது. நிசர்க தத்த மகராஜ் சொல்கிறார், ‘நான் மட்டுமே
இருக்கிறேன். என்னைத்தவிர மற்றொன்று இருப்பதற்கான அத்தாட்சியும் என் புலன்
அனுபவங்களை ஆதாரமாகக்கொண்டு நான் வழங்குவதே’ என்று.
அதாவது, பிம்பத்துடன் பேசிக்கொண்டிருக்கும் ‘பிம்பம்’ நான். என் சரீர
உணர்வுகள் யாவும் பிம்பத்தின் உணர்வுத் தோற்றங்கள் மட்டுமே என்பது
போலாகிறது.
சொல்லல் - கேட்டல் என்ற இருமுணைகளுக்கு இடையே ஒரு சமரசப் புள்ளி உருவாவதன்
வழியாகவே தொடர்பு மொழி ஸ்தாபிதமாக முடியும். எனவே, கவிதை மட்டுமல்ல
சொல்லல்; பேசுதல் என்ற பணிகளேகூட ஒரு பொதுமொழிக் கட்டுமானத்தை உற்பத்தி
செய்வதுதான். கேட்பவனை மறந்த சொல்லல் அதீத இருண்மைக்கும், கேட்பவன் பற்றிய
அதீதக் கவனம் வெளிறிப்போன எளிமைக்கும் இட்டுச் செல்கிறது.
கவிதையைப் புறவயமாக நிர்ணயிக்க, தமிழ்க் கவிதையின் வரலாறு குறித்த பயிற்சி
அவசியம். ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை வாசிக்கவும் அளவிடவும் கவிதை
பற்றிய அன்றைய பார்வையும் அணுகுமுறையும் போதுமானதாக இருக்கவில்லை.
தொடர்ந்து ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும்
அவரை ஒட்டி தன் சொல்லல் முறையை வளர்த்துச் சென்ற தி.சோ.வேணுகோபாலன், எஸ்.
வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் கவிதை முயற்சிகளும் ந. பிச்சமூர்த்தியின்
கவிதையியலுடன் ஒரு நெருக்கத்தை உருவாக்கின. ஆனால், இன்று யூமா. வாசுகியின்
கவிதைகளை அனுபவம் கொள்ள ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளுடனான நெருக்கம்
மட்டும் போதாது. தொடர்ந்து ஐம்பது வருடங்களாக, தமிழ்க் கவிதை நகர்ந்து
வந்துள்ள தடத்தைப் பற்றிய உன்னிப்பான கவனம் வேண்டும்.
ஆகவே, ‘வடிவம்’ என்பது இப்படிப்பட்ட ஒரு பொதுப்புரிதலின் தளத்தில்
உருவாகிவரும் ஒன்று என்று கூறலாமா?
இம்மாதிரி வரையறுத்துக் கொள்வதன் அவசியம் என்ன என்பதே என் கேள்வி. கவிதையை
அளக்க அப்படி பொதுவான அளவீடுகள் அவசியமில்லை. உருவாக்கப்படும் அளவீடு,
கவிதையை வகைப்படுத்த உதவலாமே ஒழிய கவிதையனுபவத்தைத் துய்க்க உதவும் என்று
தோன்றவில்லை. வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கொன்று
நேரதிரான சொல்லல் முறைகளைக் கவிதையாக உணர்வது சாத்தியமாகவே இருக்கிறது.
கவிஞனின் அந்தரங்க உணர்ச்சிநிலை, அவனது சிந்தனையின் வீரியம், இவற்றோடு அவன்
பிரத்தியேகமாக உருவாக்கும் அழகியல் கோணம் இவற்றின் வழியாக ஒரு கவிதை,
கவிதையாக நிறுவப்படுகிறது. இம்மூன்று அம்சங்களின் கலப்பு விகிதத்தில்
தென்படும் வித்தியாசங்களே ஒரு கவிஞனிடமிருந்து இன்னொரு கவிஞனை
வேறுபடுத்திக் காட்டுகின்றன.
நவீனக் கவிதைக்கு, மிகத் தோராயமாகவேனும் ஒரு இலக்கண அமைப்பைக் கற்பிதம்
செய்ய முடியுமா?
நவீனக் கவிதை, தன் தொடர்ந்த வளர்ச்சிப் போக்கில் மரபுக் கவிதைக்கு ஈடாக,
தன் இரகசிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டே போகிறது. ஆனால், இவை சொற்களின்
இருப்பு, இணைப்பு தொடர்பான இலக்கணங்கள் அல்ல. மாறாக, அர்த்தங்களின்
இருத்தல், இணைத்தல் மற்றும் சிதைத்தல் சார்ந்தவை.
சிறந்த ஒரு கவிஞன், தன் கவிதைகளுக்கென்று அதுநாள் வரை புழங்கியிராத ஒரு
புதிய இலக்கணத்தைக் கட்டமைக்கக் கூடியவன். உதாரணமாக, பிரமிளின் ‘காவியம்’
கவிதை. ஆனால், இந்தக் கவிதையும் பிரமிளின் ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’
கவிதையும் ஒரே சொல்லல் முறையில் வருபவை அல்ல. அதன் காரணமாகவே ஒரேவிதமாகப்
புரியக்கூடியவையும் அல்ல.
ஆக, புறவயமாகக் கவிதையை அணுகும் பதற்றமும் வடிவரீதியான தேடலும் வாசகனுடையதோ
கவிஞனுடையதோ அல்ல. அது விமர்சகனுடையது.
இன்று கவிதையின் சவால் நவீனத்துவ காலகட்டத்து வடிவச் செம்மையை மீறி
நவீனத்துவத்தால் புறக்கணிக்கப்பட்ட பரவசம், ஆவேசம் போன்ற உணர்வுகளைத்
தொடத்துடிப்பதாக மாறியுள்ளது. உங்கள் கவிதைகள் நவீனத்துவத்தின் எல்லையை
மீறாதவையாக, கனகச்சிதமான நவீனத்துவ மாதிரிகளாக உள்ளன. இது பற்றி என்ன
கூறுகிறீர்கள்?
என் கவிதைகளை நவீனத்துவக் கவிதைகளா அல்லது பின் நவீனத்துவ கவிதைகளா
என்றெல்லாம் பொருத்திப் பார்ப்பது என் வேலையல்ல என்று தோன்றுகிறது. என்
பெரும்பாலான கவிதைகளை இருவிதமாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். என்னைப்
பொருத்தவரை கூர்மையான அனுபவங்களை வெளியிட நான் தேடும் ஒரு வடிவம் ‘கவிதை’
என்று மட்டுமே கூறுவேன்.
கவிதையை வகைப்படுத்த ஒரு புறாக்கூடுகளின் தொகுப்பு வடிவம் (Pigeon-Hole
set-up) உருவகிக்கப்பட்டுள்ளது. இன்ன கவிதை, இன்ன இசம் என்று பிரித்து
ஒவ்வொரு கூடுக்குள் போடப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட இசத்தின்மீது
பற்றும் அறிவும் இருப்பவர்கள், கவிதையைவிடவும் இசத்தின்மீது விசுவாசம்
காட்டுபவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.
அந்தப் புறாக் கூட்டமைப்பின் துவாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய
பொதுச்சட்டகம் பற்றியதே என் அக்கறை.
’இசம்’ என்பது பொதுவாகச் சொல்லும்போது பல நுட்பங்கள் தவறிவிடுகின்றன.
இங்கு நான் கூறவருவது ஒரு கருத்தியல் அடையாளம் பற்றியது அல்ல. இது
கவிதையின் சமகாலத்தன்மை பற்றிய கேள்வி. கவிதை பிரச்சினைப்படுத்தும்
விஷயங்களை, அதற்குரிய வழிமுறைகள் ஆகியவற்றுக்கும் பிற சமகால
அறிவுத்துறைகளின் பிரச்சினைக்களங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது.
சமகாலத்தன்மை, பிற துறைகளுடன் உரையாடல் போன்றவை கவிதையின் நிபந்தனைகள்
அல்ல. கவிதையின் செயல்தளமே வேறு. பிற அறிவுத்துறைகளில் கூறப்படும்
விஷயங்களை maxims, axioms-ஆக குறைத்துப் புரிந்துகொள்வது சாத்தியம்.
விஞ்ஞானம், மதம் சார்ந்த ஒரு பெரும் கொள்கையை ஒரு வாய்ப்பாடாகவோ ஒரு
பிம்பமாகவோ மாற்றிவிடலாம். உதாரணம், ‘ஒளிவருடம்’, ‘கடவுள்’, ‘இருத்தல்’
போன்ற சொற்கள். கவிதையில் அது சாத்தியமல்ல. கவிதையில் அப்படி ஒன்று
நிர்ணயிக்கப்பட்ட உடனேயே அது அர்த்தமற்ற ஒலியாக மாறி கவிதையைவிட்டு வெளியே
நிற்கத் தொடங்கிவிடுகிறது.
பிற துறைகளில் கூறுபவன், பெறுபவன் என்ற இருநிலை திட்டவட்டமானது. கூறப்படாத
ஒன்று பெறப்பட்டது என்று, அங்கு கற்பனையே செய்யமுடியாது. கவிதையில்
அவ்வேறுபாடு துல்லியமல்ல. பெறுபவன்தான் பல சமயம் கவிதையை உருவாக்கிக்
கொள்கிறான். பெறுபவன், தன்னிடம் கூறப்பட்ட அனைத்தையும் தாண்டிச் செல்லவும்
கூடும். பொதுமைப்படுத்தல், குறைத்தல், அறுதியிடுதல் முதலியவை
அறிவியக்கத்தின் அடிப்படைகள். அவை கவிதையில் சாத்தியமேயல்ல.
அறிவியக்கத்தின் பிராந்தியத்திலேயே கவிதை இல்லை.
கவிதையில் அதன் அனுபவதளத்தில் நான் இல்லை என்ற நிலையே உள்ளது.
கவிதையனுபவத்துடன் அதை அறியும் தன்னிலை கலந்து அழிந்துவிடுகிறது. அதை
வகுப்பவன் அவ்வனுபவத்தில் இருந்து தன்னை மீட்டு வெளியே வந்து அதை
அறிவார்த்தமாக விளக்க ஆரம்பிப்பவன். அவன் விமர்சகனேயொழிய, வாசகனோ கவிஞனோ
அல்ல.
யுவன், நீங்கள் இப்போது செய்வது என்ன தெரியுமா? கவிதை இயலை
நிராகரிக்கும் ஒரு கவிதை இயலை உருவாக்க முயல்கிறீர்கள்.
கவிதையைப் பற்றிய எல்லாப் பேச்சுமே கவிதை இயல் ஆகிவிடுகிறது. கவிதை
கவிதையியலிடமிருந்து முடிவின்றி தப்பித்து ஓடியபடியேதான் இருக்கிறது.
இதைத்தான் சொல்ல முயல்கிறேன்.
சரி, கவிதையியலின் தேவையை, அது கவிதை தொடங்கிய காலம் முதல்
இருந்துகொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் ஒப்புக்கொள்கிறீர்களா?
ஆமாம். எல்லா நுண்கலைகளுக்கும் அகவய அனுபவங்களுக்கும் அப்படியொரு
அறிவார்ந்த தளம் உள்ளது. சங்கீதத்துக்கு இருக்கிறதே...
அதாவது நுட்பங்கள், மீறல்கள் எல்லாம் ஒருபக்கமிருக்க, ஒரு குறைந்தபட்ச
நிர்ணயத்தை நாம் தொடர்ந்து உருவாக்கியபடியே இருக்க வேண்டுமல்லவா? கோடுபோட்ட
பிறகுதானே தாண்ட முடியும்?
ஒரு சிறந்த கவிதையை ஒட்டி அப்படி ஒரு நிர்ணயத்தை உருவாக்கினால், உடனே அது
பிறிதொரு சிறந்த கவிதையை நிராகரிக்க ஆரம்பித்துவிடும். இதுதான் பிரச்சினை.
ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல் வெளியில்...
-- என்ற வரியில் ஒரு உக்கிரமான காட்சிவடிவம் உள்ளது.
அதோ அந்த புல்
உட்காந்த இடத்திலேயே வளர்கிறது...
-- என்ற வரியில் சுத்தமாக காட்சியனுபவம் இல்லை. அது கருத்துதள பரவசம்
மட்டுமே. இரண்டுமே மேலான கவிதைகள்.
நீங்கள் இப்போது கவிதையியலை எளிமைப்படுத்துகிறீர்கள். இரண்டு விஷயங்கள்
முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். 1. காலாவதியாகிவிடும் என்று தெரிந்தே
கவிதையியலாளன் தன் நிர்ணயங்களை உருவாக்குகிறான். அவை காலம் சார்ந்தவை,
பிரதி சார்ந்தவை. 2. கவிதையின் மீறல்களுக்கு தொடர்ந்து இடம் விடுகிறான்.
‘வழுஉ’ என்பது மிக முக்கியமான ஒரு கவிதையியல் கருதுகோள்...
கவிஞனாக என் வேலை, விதிகளை மீறுவது மட்டும்தான்...
உங்கள் சொந்த விதிகளை மீறுகிறீர்களா?
என் ஒவ்வொரு கவிதையையும் அதற்கான முயற்சி என்றே கூறுவேன். ‘வேறு ஒரு
காலம்’ முன்னுரையில்கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
இன்னொரு விஷயம், கவிதையியலாளனுக்கு, கவிதை நிகழ்வது அகவயமான தளத்தில்
என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது. உதாரணமாக, ரசங்கள்
(மெய்ப்பாடுகள்) கருகா, பீபத்சம், எல்லாம் என்ன? மன உணர்வுகள்தானே?
அவற்றைப் படைப்பின் வடிவ இயல்பாக உருவகப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார்கள்.
காரணம், வடிவம் மட்டுமே புறவயமானது. கவிதையில் விவாதிக்கத்தக்கது அது
மட்டுமே..
கவிதை நிகழ்வது, வாசகனும் கவிஞனும் ஒன்றாகும் ஒரு மாயத்தருணத்தில். அதை
அப்படியோ இப்படியோ குறுக்குவது கவிதைக்கு எதிரானதேயாகும்.
(மேலும்...)
நன்றி : எனி இந்தியன் பதிப்பகம் மற்றும் சொல் புதிது
--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.
--சென்ஷி