அன்றைய வையாபுரியின்
இன்றைய ஜெயமோகன்களே!
ஆரியம் எல்லாம் ஆறிப்போனது.
ஆரியன் சொன்ன
திராவிடம் மட்டும்
திராவகமாக சுடுவது ஏனோ?
கரையான்களிடமிருந்து
தமிழைக்காத்த
உத்தம் புத்திரர் உ.வே.சா எனும்
உயர்ந்தவர் மீது செய்யும்
சத்தியம் இதுவே!
உன்னைப்போன்ற
பொ(ய்)ம்மை அறிவு ஜீவிகள்
என்னும்
கரையான்களிடமிருந்து
செந்தமிழ் காப்போம்.
செம்மொழி காப்போம்.
இமயவரம்பன்
வில்லும் அம்பும்
விளையும் தெங்கின்
பச்சை வளமும்
கேரளம் ஆனது.
"சேரலாதனை"
சேரலா சேரலா என
சொல்லிப்ப்பார்த்தால்
"கேரளா" ஒலிக்கும்.
ஆனால்
கட்டுக்கதையின்
பரசுராமர்கள்
எறிந்த கோடரியே
கேரளம் என்று
கேடு கெட்ட சரித்திரம் சொல்லி
ஊடுருவிவிட்ட
உலுத்தர்கள் கூட்டமும்..அதற்கு
உடுக்கையடிக்கும்
உனது எழுத்துகளும்
ஒழியட்டும் தொலையட்டும்
ஓங்கு தமிழ் நாட்டில்.
விப்ர நாராயணனின்
விஸ்வரூபமே
எல்லாம் விளக்கும்
எழுந்திடு தமிழா
தெளிந்திடு தமிழா
என
குடுமிகளின்
"குழப்பஸ்தான்" ஒன்றை
கூவி விற்கும்
எழுத்துவணிகனே!
எடுபடாது உந்தன்
எட்டுநூலின்
எட்டுத்தொகைத் தந்திரம்.
ஆத்திக வாதம்
வடமொழிக்குள்ளே தமிழை
சிறை பிடிக்க வந்தது.
நாத்திக வாதமோ
அந்த சிறை மீட்க வந்தது.
மணிப்பவள நடையில்
தாயம் உருட்டி
தாக்குதல் தந்தது.
சங்கத்தமிழிலும்
இதன் சாயல் இருந்தது.
இருப்பினும்
சங்கத்தமிழ் அந்தணர்
சான்றோர்களாகி
செம்மொழி தந்தனர்.
வடமொழி கூட
இன்தமிழ் நாற்றுகள்
ஊன்றியதாலே
விளைந்த பயிர்தான்
அறிவீரோ!
அதையும்
பயிராக உயிராக
காத்தனர் தமிழர்.
இன்றைய அந்தணர்
தமிழையே
களையாக எண்ணி
கடும்பகை காட்டிடும்
அரசியல் சூழ்ச்சிகள்
ஆயிரம் ஆயிரம்
செய்கின்றார்.
"பன்னிரு முறைகளும்"..தமிழ்ப்
பன்னீர் மொழிகள் தான்.
இதை
கோவிலில் ஊற்றிக்
கும்பிட்டால் என்ன?
என்று
கேட்டால் கூட
தீட்டு என்கிறார்...இத்
தீமை களையவே
அணி திரள்கின்றோம்.
ஆத்திகம் என்னும்
ஆத்திரம் கொண்டு நம்மை
அமிழ்த்திடலாம் என
ஆள வந்திடும் கூட்டங்களே!
ஆத்திகம் கூட நாத்திகம் தான்
நாத்திகம் கூட ஆத்திகம் தான்..என
ஓர் சிந்தனைப் படை கொண்டு
வென்றிடுவோம்.
தமிழின் தொன்மை
அமிழ்ந்தது அன்று
குமரிக்கண்டம்
கடலில் மூழ்கி.
அதிலும் கூட
கிண்டலும் கேலியும்
உந்தனுக்கு.
உப்புக்கண்டம் போட்டுத்தின்ன
குமரிக்கண்டம் தானா
உனக்கு கிடைத்து.
குமரிக்காரன் என்பதால்..நீ
தமிழைப்படுகொலை செய்ய
பட்டா போட்டுத் தந்தது யார்?
ஜெயமோகனின்
சட்டைப்பைக்குள் இருப்பதா ?..அந்த
குமரிக்கண்டம்..தமிழ்
குமுறிய கண்டம் !
கண்ணகி சிலையையும்
கடலில் போட
சதிகள் செய்தது உன் கூட்டம்.
பகவதி அம்மனாய் வந்த
பத்தினியின் கொடுந்தீ
பற்றிக்கொள்ளட்டும்..உங்கள்
சதிகள் மீது.
"பதிற்றுப்பத்து"ச் சுவடிகள் அங்கே
அழகு மலையாள இலக்கியமாய்
பழகும் பாங்கை அறிவாயா?
சமஸ்கிருதம் எனும்
சல்லாத்துணியில்
மூடிக்கிடக்கும் அந்த
மூங்கை மொழியின்
விழிகள் அங்கே திறக்கட்டும்!...தமிழ்
விளக்கும் அங்கே சுடரட்டும்.
வெள்ளையன் வந்தான்..அவனை..
சுட்டுக்கொல்லு..என
காளியை வைத்து
வெறிகள் வளர்த்த
கள்ளச்சூழ்ச்சியின் கூட்டம் இது.
கி.மு.மூவாயிரம்
ஆண்டுகள் முன்னே
"நகரம்" வளர்த்தவன்
நமது பாட்டனே!
இளக்காரம் வேண்டாம்
அது வடமொழிச்சொல் அல்ல.
"நகர்" "அசை"என்ற
வினைச்சொல் வேரின்
தமிழ் ஒளிச்சொல்லே!
"நாகரிகம்" என்பதும்
நம் மொழிச்சொல்லே!
"யாரோ..எவனோ
உயரே இருப்பவன்"
"தேவன்" என்பவன்.
அந்த தேவன் கட்டிய நகரமோ
என்று வியந்த கூட்டம்
அங்கு வழங்கும் மொழியையே
"தேவ நாகரி"என்றது.
அதன் அடிச்சுவட்டில்... தமிழின்
அறி சுவடி இருந்தது.
ஆராய்ச்சியாளர்கள்
அடித்துச் சொல்லியும்..இவர்களது
அடைத்த காதுகள் திறக்கவில்லையே!
தானே தோன்றியது
சம்ஸ்கிருதம் என்றால் அது
"ஸ்வயம்பூ பாஷை"
என்றல்லவா அழைக்கப்படவேண்டும்.
பல மொழி கொண்டு
"சமைத்ததாலே"..அது
சமஸ்கிருதம் ஆயிற்று.
வேத மொழி எனும்
வாய் ஒலி வடிவம்
தேவ நாகரியில் எழுத்துரு பெற்றது.
மூவாயிரம் ஆண்டுக்கும்
முன்னே முகிழ்த்தது
வேதம் என்றால்
மிக மிக பிற்கால
நூற்றாண்டுகளில் வாழ்ந்த
"சாயனாச்சசாரியார்"தான்
உரை தர வேண்டுமா?
நம் குறிஞ்சிக்கபிலர் கூட
மறை மொழியனைத்தையும்
உரை மொழி யாக்கி
உலவ விட்டிருக்கலாம்.
குறிஞ்சிக்கபிலனே
சாக்கியம் தந்த கபிலனா?
விடைகள் கிடைக்கும் வரை
இது கேள்வியாகவே இருக்கட்டும்.