தேவகோட்டை, ஜூலை :
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி ரித்திகா வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் சுகன்யா பேசுகையில், "காமராசர் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் தலைவர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களும் பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கியவர் காமராசர். " என்றார்.
மேலும், காமராசர் எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் அங்குள்ள பள்ளிகளைப் பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், அரசு அதிகாரிகள் சுயநலமின்றி பொதுநலனுக்காகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் சிறுவயதிலிருந்தே சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் சந்தேகங்கள், பிரச்சினைகள் மற்றும் உணர்வுகளை பெற்றோர், ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தனது தந்தை உடல் மாற்றுத்திறனுடன் இருந்தபோதிலும் கல்வியின் மூலம் முன்னேறி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதை எடுத்துக்காட்டாகக் கூறி, கல்வியே வாழ்க்கையை உயர்த்தும் சக்தி என்பதை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும், மொபைல் போன்களின் தேவையற்ற பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், பிறருடன் தங்களை ஒப்பிடாமல், தங்களது திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
விழாவையொட்டி காமராசரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கனரா வங்கி முதன்மை மேலாளர் சுகன்யா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
காமராசர் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார்.
பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழாவில், தேவகோட்டை கனரா வங்கி முதன்மை மேலாளர் சுகன்யா, கவிதை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.