பரங்குன்று

13 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 16, 2025, 5:52:19 AM (7 days ago) Dec 16
to Santhavasantham
பரங்குன்று - பரன் + குன்று. பெயரிலே, பரன் என்ற வடசொல்லும், குன்று என்ற
தென்சொல்லும் கலந்து தலப் பெயர் அமைந்துள்ளது. பரன் என்பது யார் என அறிய,
சில ஆண்டுகளுக்கு முன்னே கிடைத்த அழகிய தமிழ் பிராமிக் கல்வெட்டு
உதவுகிறது. முற்காலப் பாண்டியரின் வழிபாடு கூறும் இக் கல்வெட்டு பற்றி
விரிவாகக் கட்டுரை எழுதவியலும். அக் கல்வெட்டும், அதன் விளக்கமும் காண,
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5/mode/2up
(Section 4.0. And, Figure 9)

திருமுருகில் முருகனைப் பாடியுள்ளது. அதன் பின்னர் சிவத் தலமாகப் பெருமை
பெறுகிறது. சுந்தரர் எப்பொழுதும் போல, சிவனுடன் கிண்டல் பேசுவதாகப்
பதிகத்தை அமைத்துள்ளார். அதில் இறுதிப் பாட்டில் ஒரே ஒருமுறை பரங்குன்றம்
என்கிறார். அழகான சுந்தரர் தேவாரம்:
https://aathirainayagan.blogspot.com/2015/07/02.html

திருப்பரங்குன்றத் தேவாரம், சம்பந்தர்.
https://shaivam.org/to-practise/thirugnanasambandhar-thevaram-thiruparankundram-nitalarcoti/

சேற்றூர் மு. ரா. அருணாசலக் கவிராயர் தொகுத்த திருப்பரங்கிரிப் பிரபந்தத்
திரட்டு முக்கியமான தொகுப்பு. அதில் தெரியவரும் முக்கியச் செய்திகள் சில
கூறலாம்.
குடைவரைக் கோயிலாக அமைந்த குகைக் கோயில்களில் பிரதானம் சிவபெருமானுக்கே.
இதனைத் தான் தேவாரமும் காட்டுகிறது.

https://aathirainayagan.blogspot.com/2015/07/01.html
கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது
மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம்
நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள
பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள்
மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம். பல படிக்கட்டுகளை ஏறி
கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில்
இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை,
முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு
நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய
வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில்
சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும்
அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று
தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை
மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு
அமைந்துள்ளது.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 19, 2025, 10:37:14 AM (4 days ago) Dec 19
to Santhavasantham
தமிழரின் மிகப் பெரிய திருவிழாக்களாய் பொங்கல், தீபாவளி இன்றுள்ளது. ஆனால், சங்க நூல்களில் இவைபற்றி விளக்கங்கள் காணோம். ஓணம், உள்ளிவிழா பற்றிச் சிறு குறிப்புகள் உண்டு. உள்ளிவிழா இப்போது மணற்கொள்ளை ஆகும் காவேரிக் கரையில் கொங்கர் சலங்கை மணிகளைக் கட்டி ஆடுவதைக் கூறியுள்ளனர். ஊளி/உள்ளி விழா தான் இன்றைய ஹோளி/ஹோலி பண்டிகை. தமிழ்நாட்டில் எழுதிய ஶ்ரீமத் பாகவதம் ஆழ்வார்கள் காலத்தின் பின் ஏற்பட்டது. வடமொழியில் மிகப் பிரபலமாக விளங்கும் பக்தி இலக்கியம். இதில் ஹோளி விழா பற்றி வருகிறது. https://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html

மிகப் பெரிய அளவிலே பல இடங்களில் சங்க நூல்கள் பாராட்டிப் பேசும் திருவிழா கார்த்திகை தீபம் தான். இந்தியாவின் பண்டை வானியலில் தேர்ந்தெடுத்த முக்கிய விழா இஃது. சிந்து-வானி நாகரீக முத்திரைகளிலேயே அறுமீன் எனப்படும் கார்த்திகை மீன்(Pleiades)வந்துவிடுகிறது. 6 என்ற எண்ணுடன் மீன் காட்டப்படும் சிந்து முத்திரை காண்க. கார்த்திகை   நட்சத்திரம் பௌர்ணமியில் பொருந்தும் மாதம் கார்த்திகை மாதம். வட நாட்டில் கார்த்திகைப் பூர்ணிமா என ஹிந்துக்களும், சமணர்களும் காலங்காலமாகக் கொண்டாடும் விழா இது.
https://en.wikipedia.org/wiki/Kartika_Purnima
https://timesofindia.indiatimes.com/city/rajkot/Pilgrims-flock-Palitana-for-Kartik-Poornima-yatra-/articleshow/5190238.cms
(பாலிதன மலை, பவநகர் மாவட்டம், ஆதிபகவன் (ஆதிநாதர்/ருஷபநாதர்; குறள் 1)  சதுர்மாத விரதம் முடிந்து மலையேறிக் கொண்டாடும் கார்த்திகை பௌர்ணமி/தீப விழா).

அறம் = தருமம். தரும சத்திரம் = அறச்சாலை, தர்ம சாலை. எனவே, அறம் (அ) தர்மம் = கொடை (தானம்/ஈகை) என்பது ஒரு பொருள்.  அறம் என்றாலே Feeding house; அறச் சாலை. அறத்துக்குப் புறத்தன் (T.A.S. i, 9).

           என்பி லதனை வெயில்போலக் காயுமே
           அன்பி லதனை அறம் - குறள்.
இங்கே, அறம் = தரும தேவதை. பத்மாவதி, பார்சுவநாதரின் யக்‌ஷி, தர்மவத்சலா எனப்படுகிறாள். ஆத்திசூடியை அவ்வை தொடக்கத்தில் பார்சுவநாதரை வணங்கிப் பாடியுள்ளார். அவ்வை கன்னடத்தில் அப்பை (abbe) என வரும். சிரவணபெளகுளத்தை ஆக்கிய சாமுண்டராயனின் சகோதரி புளி அப்பை/அவ்வை தங்கி உயிர்நீத்த இடம் கொங்குநாட்டு விஜயமங்கலம் எனக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

தியாகம் tiyākam , n. < tyāga. Offering, gift, donation, present; கொடை. (பிங்கலந்தை நிகண்டு) . தியாகம் = தானம் என்ற பொருளில் கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்களில் பரக்கக் காணலாம்.

நற்றிணையில் கார்த்திகை தீப நாளில் தர்மம்/தியாகம்
---------------------------------------

 பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
 மா மலை விடரகம் கவைஇக் காண்வர
 கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை
 *அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்*
 செல் சுடர் நெடும் கொடி போலப்
 பல் பூம் கோங்கம் அணிந்த காடே - 202

உரை: பெரிய மலையின் பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டு மிக்க அழகாகத் தோன்றுவதைக் காண்பாயாக! வாழ்க சிறுபெண்ணே!  கார்த்திகை மீன்களோடு கூடிய தருமம்/தியாகம் செய்வதற்கான முழுத்திங்கள் (பௌர்ணமி. அதாவது, கார்த்திகைப் பூர்ணிமை)  நாளில் வரிசையாகச் செல்லும் சுடர்களைக் கொண்ட நீண்ட கொடி போன்ற விளக்குகளைப் போல பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்கள் அழகுசெய்யும் காடு உன் தந்தைக்குரியது.

தொல்லியலில் பார்த்தோமானால், சாமுண்டராயன், சிரமணபெலகுளத்தில் நிறுவிய தீபத்தூண் கார்த்திகை தீபோத்சவத்தின் போது, உணவும், இனிப்புகளும், கொடையும் வழங்குமிடமாக இருந்துள்ளது. பாகுபலி (கோமடேஸ்வரர்) முன்னால் மண்டபம், அதன் முன்னால் உள்ள தியாகத ஸ்தம்பம் (Tyagada Stambha) இது.  விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது தீபஸ்தம்பம் மிக உயரமாக ஹம்பி மாநகரில் ஜிநாலயத்திலும், விட்டலராயர் கோயிலிலும் எடுத்துள்ளனர். இவை இரண்டு ஸ்தலங்களிலும் ஜைனர்களும், ஹிந்துக்களும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது தர்மம்/தியாகம் நிறையக் கொடை அளிக்கும் விழாவாக இருந்திருக்கும். கன்னட வரலாற்று நூல்களில் பார்க்கவேண்டும்.
https://x.com/naa_ganesan/status/2001705949019467889

கர்நாடகத்தின் தியாகத கம்பம் போலவே, சமணர்கள் நிறுவிய மதுரையைச் சுற்றியுள்ள தீபத்தூண்கள் மூன்றிலும் மலையுச்சியில் இனிப்புகளும், நூல்களும் கொடையாகப்  பள்ளி மாணவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இது கார்த்திகை தீப நாளில் நிகழ்ந்தது என்பதை நற்றிணைப் பாடல் நன்கு விளக்குகிறது.

மேலும் அறிய, ஆராய இழைகள்:
Deepa Stambhas of Jains
https://x.com/naa_ganesan/status/2001609474499383365

திருப்பரங்குன்றம் விளக்குத் தூண்
https://x.com/naa_ganesan/status/1997109694532669685

ஸ்டாலின் ராஜாங்கம் (மதுரை) கட்டுரை:
https://x.com/naa_ganesan/status/2001373321238319583

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 22, 2025, 8:01:41 AM (yesterday) Dec 22
to Santhavasantham
மலை மேல் விளக்கு
------------------

கார்த்திகை தீபம், பௌர்ணமி அன்று நிகழ்வது. குன்றின் மேல் விளக்கீட்டை 2000 ஆண்டுகளாய் இலக்கியம் குறிப்பதென்ன? சங்க நூல்கள் மலை மேல் விளக்கு கார்த்திகை தீபத்து அன்று ஒளிர்வதைப் பதிவிட்டுள்ளன.  அகநானூற்றில் இரண்டு பாடல்களைப் பார்ப்போம். பின்னர், பழமொழி நானூறு, சிந்தாமணி, முத்தொள்ளாயிரம், சோணாசலமாலை.

(1)

“பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந்தோரே”
                – (அகம்: 185: 8 – 13)

பசுமை அற்றுப்போகும்படி வெப்பமுற்ற பருக்கைக் கற்கள் உறுத்துகின்ற பரப்பினையுடைய வேனில் காலத்துப் பாலைநிலத்துக் கடப்பதற்கரிய வழியாகிய அவ்விடத்தில், மழை வறந்துபோனதால் அருவிகள் இல்லையாகிப்போன உயரமான சிகரங்களின் பக்கத்தில் பெரிய கார்த்திகைத் திருவிழாவின்போது ஏற்றப்படும் விளக்குகள் போல, பலவும் ஒன்றாய் மலர்ந்த இலையில்லாத இலவமரங்களைக் கொண்டு உயர்ந்த நிலையையுடைய சிறந்துவிளங்கும் மலைகளைக் கடந்துசென்றவர்.

பல மலைகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் மிகப் பெரிய திருவிழா திருவண்ணாமலையில் தான்.

(2)
   அகநானூறு 17
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் 15
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுரக் கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி 20
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே

கடுமையான ஞாயிற்றின் கதிர்கள் முறுகிய மூங்கில் நிறைந்த வறண்ட மலைகளில்,
பெரும் களிறு உரசிய மண்ணையுடைய நடுப்பகுதியைக் கொண்ட யா மரங்களை உடைய,
அரிய பாலைநிலத்தில் கிளைத்துச் செல்லும் வழிகளையுடைய நீண்ட பாதையின் ஓரங்களில்,
நீண்ட நடுப்பகுதியை உடைய இலவமரங்களில் பூத்து முடிந்த பல மலர்கள் -
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (அணைவது)போன்று - காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் -
மேகங்கள் தங்கும் பெரிய மலைகள் எதிர்நிற்கும் வழியில்
http://tamilconcordance.in/SANG-17A.html#17

https://x.com/naa_ganesan/status/2001373321238319583
"கார்த்திகை தீபம் : சமண மரபால் செழுமைப்பட்ட நீத்தார் வழிபாடு, பக். 6,
"கார்த்திகை தீபநாளில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் ஆகிய ஊர்களில் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களின் மலைகளிலும் தீபம் ஏற்றப்படுகின்றது. உதாரணத்திற்கு சில ஊர்களைச் சொல்லலாம். திருப்பரங்குன்றம், அரிட்டாபட்டி, வெள்ளரிபட்டி, வந்தவாசி, பொன்னூர், நார்த்தாமலை, குடுமியான்மலை, ஜம்பை, கீழ்வைத்தியநாதன் குப்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட ஊர்கள். இந்த ஊர்களிலுள்ள மலைகளில் கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் ஊராரால் தீபம் ஏற்றப்படுகிறது. பல ஆண்டுகளாகப் பரவலாக இருந்துவரும் மரபு இது. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரையிலும் கார்த்திகை தீப நாளில் இரவில் சென்னையிலிருந்து பங்களூருக்கு ரெயிலில் சென்றால் தூரத்து மலைகளின் உச்சியில் தீபமெரிவதைச் சாதாரணமாக பார்த்துச் செல்ல முடியும் என்று கூறுகிறார் தியோடர் சு. பாஸ்கரன்." (ஸ்டாலின் ராஜாங்கம்)

(3)
Kartikai Deepam festival is an ancient heritage from Indus Astronomy. Due to syncretism between Jainism and Shaivism, this tradition is carried on by both religions. Tamils in India preserve many ancient traditions from these two syncretic traditions: (1) Brahmi script from North brought via Karnataka, then Kongunad (2) JyeSThaa devi worship. Nowhere in India, so many Jyeshta sculptures now abandoned as in TN etc., (3) In the Palitana Jain temples, Kartik Poornima is celebrated by 1000s of devotees. There are hints about Kartikai Deepam on mountain tops in Sangam literature itself. Kartikai Deepam celebrations

வெ. வேதாசலம், எண்பெருங்குன்றம்; ஐராவதத்தின் தமிழ் பிராமி க்ளாஸிக், ... போன்ற நூல்களை மக்கள் வாசிக்கவேண்டும். அரிட்டாபட்டி, குயில்குடி, பரங்குன்று - மூன்றிலும் சமணர் விளக்குத் தூண்கள் பற்றிப் பேசுகையில், இன்னொரு சமண ஆசான் எழுதிய பாடல் நினைவுக்கு வரும்.

வஞ்சி மாநகர் அரண்மனையில் வாழ்ந்த இளங்கோ அடிகள் போல, அரச வங்கிசத்தினராக வாழ்ந்தவர் முன்றுறை அரையனார். இவர் சமணர். இயற்பெயர் தெரியவில்லை. நான்காம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தார். அப்போது வழக்கில் இருந்த பல ஆயிரம் பழமொழிகளில் சிறந்தன 400-ஐத் தெரிந்தெடுத்து "பழமொழி நானூறு" அரிய நூலைச் செய்தார்.  நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் எனத் தெளிவாகிறது.  வையை ஆற்றங்கரையில் இருந்த "திருமருத முன்றுறை" என்னும் மருத மரம் சூழ்ந்த ஊரினர் ஆகலாம்.

     "பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
      பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
      முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
      இன்றுறை வெண்பா இவை." - (பழமொழி நானூறு - தற்சிறப்பு பாயிரம்

அசோக மரத்து நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.
https://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=45&auth_pub_id=49&pno=1

எழுத்தாளர் சு. தி. பாஸ்கரன் 60 ஆண்டுகளாய் மலைகள், பாறைகளில் களப்பயணம் செய்பவர். அவர் கூறுவது, தீபம் ஏற்றப்படும் மலைகளில் எல்லாம் தீர்த்தங்கரர் பாதங்கள் இருக்கின்றன. உ-ம்: அண்ணாமலை, பகவதிமலை (வேலூர்). இதுபற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் உண்டு. முன்றுறை அரையனாரும், கார்த்திகை தீப விழா குன்றுகளின் உச்சியில் கொண்டாடப்படுவதைக் கூறும் பழமொழியைப் பயன்படுத்தி உள்ளார்.

  கன்றி முதிர்ந்த கழியப்பல் நாள்செயினும்
  என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்
  ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும்குற்றம்
  குன்றின்மேல் இட்ட விளக்கு.  - பழமொழி நானூறு (204)
   
குற்றங்கள் பலவற்றைக் கனிந்து முதிர்ந்த நிலையில் பலவாகப் பல நாள் செய்தாலும், சிறியார் செய்தவை என்றும் தெரியாது; அது அவர் இயல்பு என விட்டுவிடுவர். ஆனால் உயர்ந்தவர் செய்யும் குற்றம் ஒன்றே ஆனாலும் அது குன்றின் மேல் வைத்த விளக்குப் போல எல்லாருக்கும் தெரியும்.

(4) Seevaka Chintamani, by Tiruttakka Thevar of Dharapuram, is an important epic in Tamil. Dharapuram is Rajarajapuram, and Cheras were made to relocate there from Vanji (Karur) by imperial Cholas' rise. The great Jain Kshatrya vEL of Kongunadu showed that the Viruttam meter from Sanskrit can be used to write Tamil  kaavya-s, and wrote the 3000+ verse epic, he showed the way for later works like Kampan, Periyapuranam, various stala puranas etc etc., Like Jaina Pazamozi nAnURu, Tiruttakka Devar also sings his religion's practice of lighting lamps on Deepa Thoons on mountain tops.

 குன்றுகளில் விளக்கேற்றும் வழக்கம் (திருப்பரங்குன்றம் மறைமுகக் குறிப்பு)
சங்க காலத்திலும், அதற்குப் பிந்தைய நீதி நூல்களிலும், மலைகளின் மீதும் குன்றுகளின் மீதும் விளக்கு ஏற்றும் வழக்கம் இருந்ததைக் குறிப்புகள் காட்டுகின்றன.

சீவக சிந்தாமணி (சங்க மருவிய கால நூல்) ஒரு காட்சியை விவரிக்கும்போது:
"குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்"

விளக்கம்: குன்றின் மீது ஏற்றப்பட்ட கார்த்திகை விளக்கைப் போல (ஒளிவீசும்) என்று உவமை கூறப்படுகிறது. இது மலைகளின் மீது விளக்கு ஏற்றும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்ததைக் காட்டுகிறது.

தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறு உரைப்ப, குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன, கடி கமழ் குவளைப்  பைந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்து பொங்கி
நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான்

(5) முத்தொள்ளாயிரம்

 குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல்
நாடறி கௌவை தரும்.

மலை மேல் தீபன் எரிவது நாட்டுக்கே தெரியும் என்கிறது இந்த வெண்பா.

(6) சோணசைல மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாசர் (17-ம் நூற்றாண்டு)

மடலவிழ் மரைமாட் டெகினென வருகு
      மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே. (5)
 
மரை-தாமரை; முதற்குறை. எகின்-அன்னம். கார்த்திகைத் தீபம் செந்நிறம் வாய்ந்து ஓங்கியும், பிறை வெண்ணிறம் வாய்ந்து கூனியுமிருத்தலின், அவற்றைச் செந்தாமரை மலரும் அன்னமுமாக உருவகித்தார். https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0830.html

நினைத்தாலே முக்தி தரும் புராணச் சிறப்புடன் கூடிய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதன் சிறப்பைக் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பலவாறு பாடியுள்ளார். அன்றே, அதை ஓர் ஆன்மிகச் சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்திய பெருமை, சிவப்பிரகாசர் அத்தலத்தைப் பற்றி எழுதிய "சோனாசைலமாலை' என்னும் நூலுக்கே உண்டு.  இன்று, பௌர்ணமி தோறும் மலைவலம் சிறப்புள்ளது போல கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலும் உள்ளதை அந்நூல் கூறுகிறது. நிலவானது முழுநிலவாய் மலையின் உச்சியில் தோன்றும்போது ஏற்றப்படும் தீபத்தைக் கற்பனை செய்யும் சிவப்பிரகாசர், தாமரை மலரை நெருங்கும் அன்னம்போல் உள்ளதாகக் கற்பனை செய்யும்போது செந்நிறமான தீப விளக்கு தாமரை போலவும் வெண்ணிற முழுநிலவு வெண்ணிற அன்னம் போலவும் உள்ளதாம். மேலும்,கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவர் அகத்து இருள் அனைத்தும் சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோணசைலனே கயிலை நாயகனே..  என்ற பாடலில் உலக விளக்குகள் எல்லாம் புற இருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கோ புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க வல்லதாய் இருக்கும் அற்புதத்தைச் சிவப்பிரகாசர் கூறுகிறார்.இந்தக் கார்த்திகை விளக்கு ஏற்றப்பெறும் திருவண்ணாமலையை மனிதர்கள் சுற்றி வரக் கால்களை அவர்கள் பெற்றுள்ளதுபோல் நமக்குக் கால்கள் இல்லையே என்று மேலுலகத்துத் தேவர்கள் வருத்தமும் பொறாமையும் அடைவதாகச் சிவப்பிரகாசர் திருவண்ணாமலையின் மலை வழிபாட்டைச் சிறப்பிக்கிறார்.
https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/Dec/09/திருக்கார்த்திகை-2612643.html

இந்தப் பாடல்களைப் பார்த்தால், சமணர்கள் தாம் தெளிவாக மலை மீது இடும் கார்த்திகை விளக்கைப் பாடியமை (சிந்தாமணி, பழமொழி நானூறு) புலனாகும். அதனாற்றான், அரிட்டாபட்டி, குயில்குடி, பரங்குன்றம் மூன்று மலையுச்சிகளிலும் இருப்பது சமணர்கள் வைத்த தீபத்தூண் என்றும், சிரவணபெளகுளத்தில் பாகுபலி சிற்பத்தின் முன் உள்ள "தியாகத ஸ்தம்பம்" என்னும் அழகிய வேலைப்பாடமைந்த தீபஸ்தம்பத்துடன் ஒப்பிடத்தக்கது எனவும் குறிப்பிட்டேன். விஜயநகர் சாம்ராஜ்யத்தின் போது சமண, ஹிந்து தீப ஸ்தம்பங்கள் அளவால் மிகப் பெரிதாகின.

பழ விறல் மூதூர்

தமிழ்ச் சங்க நூல்களில் பல பாடல்களில், "பழ விறல் மூதூர்" என்ற மரபுத்தொடர் வருகிறது. விறல், விறலி, ஜினன், அருகன் என்னும் சொற்களின் பொருளையும், சங்க காலத் தொல்லியல் சான்றுகளையும் வைத்துப் பார்க்கிறபோழ்து இதன் பொருள் ஒருவாறு விளங்குகிறது. ஒரே ஒரு பாடலில், பழ விறல் மூதூர் மலையில் விளக்கு எரிவதைப் பாடியுள்ளனர். இது அண்ணாமலையில் நிகழும் கார்த்திகை தீபம் என்று கொள்ள இடமுண்டு. "பழ விறல் மூதூர்" மரபுத்தொடரின் முக்கியத்துவத்தை உணர்த்த, வஞ்சி மாநகர் [1] அரண்மனையில் தமிழ், வடமொழி, கன்னடம், பிராகிருதம், ... கற்றுத் துறைபோகிய இளங்கோ அடிகள்தாமும், மூவேந்தர் தலைநகரைச் சொல்லுங்கால் இத்தொடரைப் பயன்படுத்தியமை சிறப்பாக உள்ளது.  அவரது சமயத்துக்கும், "பழ விறல் மூதூர்" என்னும் தொடரின் பொருட்கும் என்ன தொடர்பு எனப் பின்னர் ஆராய்வோம்.

கார்த்திகை தீபம் அடிப்படையில் பண்டை இந்தியாவின் வானியல் தொடர்புடையதாகும்.
https://bbc.com/tamil/articles/c5129x990zgo
https://x.com/naa_ganesan/status/2000513451035181503

Raju Rajendran

unread,
4:43 AM (8 hours ago) 4:43 AM
to vall...@googlegroups.com
நன்று

திங்., 22 டிச., 2025, 6:31 PM அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf25S7cDG_mmu1aqh%3D4m1RsjAGsnrAd5zPKbbBM9Xsapw%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages