கண்ணாடி வேர் சொல்
தொடக்க காலத்தில் கண்ணாடி எரிமலைப் பளிங்குப் பாறை (obsidian), உலோகம் ஆகியவற்றை நன்றாக மெருகேற்றி உண்டாக்கப்பட்டன. கண்ணாடியின் தேவை ஒருவர் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள உதவுவதாகும். இதற்கு தமிழில் முதலில் ஆடி என்று சொல் உருவானது. சரி ஆடி என்று ஏன் அழைத்தனர்?
ஆடை என்பது பாலில் படரும் அல்லது படியும் திரள் ஆகும். அது போல ஒருவரது உருவம் இந்த மெருகேற்றிய கல் அல்லது உலோகத் தட்டில் படர்வதை வைத்து தான் ஆடி என்ற சொல்லை உருவாக்கி உள்ளனர் ஆதி தமிழர். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் கையில் எடுத்தால் கை வெடவெடுப்பில் உருவம் ஆடுவதை வைத்து ஆடி என்று குறித்ததாக சொல்கிறது. இது பொருந்தாது; நகைப்பிற்கு உரியது. எல்லாம் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட சொல்லாய்வு.
ஆடி இருக்கும் போது கண்ணாடி என்ற சொல் எதற்கு உருவானது? ஆடி என்ற சொல்லின் நேர் பொருளை மக்கள் காலப்போக்கில் மறந்ததால் அதை இன்னும் தெளிவுபடுத்த ஆடியுடன் கண் என்ற சொல்லை முன்னே பொருத்தினர். கண் - பொருந்துதல் கருத்தில் பின்னாளில் ஏற்பட்ட முன்னொட்டு. ஆடி = ஆடை - உருவம் படரும் அல்லது படியும் கல் அல்லது தட்டு. கண் என்ற முன்னொட்டும் அதே படிதல் அல்லது படர்தல் பொருள் கொண்டதே. தமிழருக்கு எதையும் இரண்டு இரண்டாக சொல்லிப் பழகிப் போய்விட்டது. அதனால் கண்ணாடி ஆகிவிட்டது ஆடி.
இந்த ஆடிக்கு இன்னொரு சொல் உண்டு. அது அத்தம் என்பது. அத்தம் என்பதற்கு பொருந்துதல், ஒட்டுதல் என்ற பொருள் உண்டு. இதாவது, எதிரே உள்ள உருவம் இதன் மேற்பரப்பில் ஓட்டினார் போல் தோன்றும். இன்றும் தெலுங்கில் இச்சொல்லே பேச்சு வழக்குச் சொல். உலக மொழிகளில் கண்ணாடி குறித்த சொல் பல்வேறு கருத்தில் உண்டானதாக தெரிகின்றது. எதிரடித்தல் (reflect) என்ற பொருளில் கூட உலக மொழிகளில் இதற்கு சொல் உருவாகி உள்ளன. தமிழில் படிதல், படர்தல் என்றால் விழுதல் ஆகும். இதாவது, குனிந்து தெளிந்த நீரைப் பார்த்தால் அதிலே உருவம் படிவது அல்லது படருவது நல்ல சான்று.