
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பட்டி 6 வரி நடுகல் கல்வெட்டு
கம்மிய - கருமார் (அ) கைவினைஞன், blacksmith / craftsman; தழமன் - தழல் என்றால் நெருப்பு. எனவே உலைக்கு நெருப்பை பேணுபவன்; சேவகன் - படைத்தலைவன்
விளக்கம் : நுளம்ப வேந்தன் சிவமாறனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண மன்னன் மாவலி வாணராயன் கங்க நாட்டை (தகடூர்) ஆண்டு கொண்டிருக்கையில் வைடும்ப அல்லது தெலுங்கு சோழன் மன்னன் இந்திரன் தகடூர் மேல் படை கொண்டு வந்த போது இந்த வாணனுக்கு அடிபணிந்த ஆட்சியாளன் மறவனுடைய படைத்தலைவனாக உள்ள கண்ணனூருடைய கருமான் உலைக்கு நெருப்பு எரிப்பவன் வீரசாவடைந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் போர்க்கருவி செய்பவனாய் இருந்திருப்பான் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஒவ்வொரு படையும் தனியே தனக்கென கருமாரை வைத்திருந்தன என்று தெரிகிறது. அதே நேரம் படையெடுத்து வருபவன் முதலில் அழிப்பது ஆயுதம் செய்பவரை ஆயுத சாலையைத் தான் என்பதை இக்கல்வெட்டு நமக்கு சுட்டுகிறது.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 348, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அங்குத்திசுனை 7 வரி வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு.
ஆளுடைய - தலைமை செய்யும்; போ ஐயன் - வில் வேடுவர் தலைவன், bowman. போ + அன் = போவன் அல்லது போயன் என் ஆகும். போ என்பது வளைந்த வில்லை குறித்தது. ஆங்கிலச் சொல் Bow உடன் தொடர்புடையது.
விளக்கம் : மேலுள்ள ஒட்டம்பட்டி கல்வெட்டுக்கு முற்பட்ட 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. மாவலி வாணனை சிவமாற நுளம்பன் வென்று ஆட்படுத்துவதற்கு முன் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். சிவமாறன் ஊத்தங்கரை மேல் படையெடுத்து ஊரை அழித்த போது போயர் தலைவனுக்கு மூத்த மகன் துட்டப்பன் அதில் வீரசாவடைந்தான். அவன் தம்பி முழித்தயன் இந்த நடுகல்லை செய்வித்தான். சிற்பி வென்றி சிரியன் இந்த கல்லையும் எழுத்தையும் செதுக்கி நிறுத்தினான். இதில் மான் வேட்டையாடுவது போன்ற உருவ பொறிப்பு போயர் வேட்டுவர் என்று சுட்டுகிறது. இவர்கள் போர்த் தொழிலை ஏற்றவர்கள். இந்த பழங்குடிகள் பின்னாளில் தருமபுரியில் குடியேறிய தெலுங்கு ஒட்டருடன் கலந்துவிட்டனரோ? ஏனெனில் இவர் பெயரை இன்று ஒட்டர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று பேரவை காணொளி
இராமாநாதபுரம் மாவட்டம் முதுகுடி ஊர் அருகில் உள்ள கருங்குளம் ஏரி 16 வரிக் கல்வெட்டு
பழி - தீவினை; அணை - கரை; தபானவ - வறண்ட புஞ்சை; மானி - மதித்து; போவி - செல்வதாக
விளக்கம் : மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 34 ஆவது ஆட்சி ஆண்டு 1302 இல் இராமநாதபுரம் முதுகுடி ஊருக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் கரை உடைந்து விட்டது. இந்த உடைப்பை இந்த ஊர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் கரைவெட்டி தடுத்தான். அதில் அவன் இறந்துவிடுகிறான். இதனால் பரிவுற்ற ஊர் மக்கள் அவன் மகளுக்கு நெய்த்தோர்பட்டியாக குளக்கரைக்கு ஒட்டி அரைமா வறண்ட புஞ்சை நிலத்தை கொடுத்தனர். இதை சந்திரன் சூரியன் உள்ள கால அளவும் மதித்து செல்வ வேண்டும் என்று குறித்தனர். நெய்தோர்பட்டி என்ற குறிப்பு பெரிய தேவ பள்ளன் இந்த கரையை பாதுகாப்பதில் எடுத்துக் கொண்ட உயிர் சேதத்திற்காக கொடுத்திருக்கலாம்.
பார்வை நூல்: கொங்கு இதழ் 25. செ இராசு திசம்பர் 1972
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சின்னத்தாமல்செறு கிராமத்தில் கற்பலகையில் செதுக்கிய நடுகல்லில் உள்ள 8 வரி கல்வெட்டு.
அடியகன் - ஏவலன், தொண்டன்; பம்மாண்டி - பறை அடிப்பவன்; நத்தம் - நெய்த்தோர்பட்டி நிலம்
விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டுக் குறிப்போ இல்லாத தனி நடுகல் கல்வெட்டு. வீரன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். செல்லைவூரரின் ஏவலன் பறையடிப்பவனின் அடியாள் வீரன் ஊரில் அட்டகாசம் செய்த யானையைக் கொன்று தானும் வீரச்சாவடைந்து விடுகிறான். அதற்காக அவன் வீட்டாருக்கு நெய்தோர்பட்டி நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. வீரன் பெயர்க் குறிப்பு இல்லை. பம்மாண்டை பெயரும் இல்லை.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக்.130, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் 7 வரி நடுகல் எருது பிடி கல்வெட்டு
எருது விளையாடி - காளை அடக்கி; கோ - ஆனேறு, நூல் கோற்றல்; உரி - களைதல், கழற்றுதல்
விளக்கம் : மன்னன் பெயர் ஆண்டு குறிப்பு விளையாடிய காரணம் ஏதும் இல்லாத நடுகல் கல்வெட்டு. ஆத்தூர் கருமந்துறையில் 400 ஆண்டுகள் முன் நடந்த எருது பிடித்து கழுத்தில் கட்டியதை உருவும் போட்டியில் விளையாடிய போது அந்த எருது முட்டி சங்கன் சாவடைந்தான். இவனது மூத்த மகன் இதன் நினைவாக நடுகல் நட்டான். இதே விளையாட்டாக இருந்ததாலோ என்னவோ அவன் "கோவுரி" என்ற அடையுடன் அழைக்கப்படுகிறான். இன்றைய சல்லிக்கட்டு அக்காலத்தே கொங்கில் கோவுரி எனப்பட்டது.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 15, பக். 14 த நா தொ து வெளியீடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு
தெருட்டு - அறிவிப்பு; கொல்லாறு - ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை - குடியிருப்பு; நாட்டாத்து - ஊர்;
விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்து விட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை. _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்த பிரம்மதேயத்தின் வடக்கு குடியிருப்பை அறிந்து கொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனை குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பார சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாக கருத்து தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதை கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது 7 ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13 ஆம் நூற்றாண்டின் "நாயனார் திருமுகப்படி திருமுகூர் நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை" எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.
இக்கல்வெட்டில் இடம்பெறும் பெருமகன் என்ற சொல் வேந்தனை குறிக்கும் பருமன் என்ற சொல்லுக்கு முந்து நிலைச் சொல் ஆகும். இலங்கையில் உள்ள கல்வெட்டுகளில் பெரும, பருமக ஆகிய சொற்கள் 2000 ஆண்டுகள் முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கப்பலூர்ப்பட்டியில் உள்ள 23 வரி கல்வெட்டு
ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்குச் செல்லா நின்ற யாண்டு அ (8). இவ்வாண்டு (பெரு)மாள் கீழ் வாழ்ந்து மழநாட்டான் மூர்க் கூற்றத்துக் கீழ்கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பறையாசாரிகள் மக னிருத்தி விரதி (சூரன்) றந்தையாரையுந் தாயாரையுஞ் சாத்திச் செய்வித்த கிணறும் வட்டும்.
பெருமாள் - மன்னன்; காடிக்காரம் - நெருப்புக்கல், ஆயக்கல், silver nitrate acid; நிருத்தி - தேய்க்கும், அழிக்கும்; நெருப்பு அறை - நெருப்புக் கல்; வட்டு - நீர் முகக்கும் கலன்
விளக்கம் : மன்னன் கோக்கண்டன் மாந்தரனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு. இவன் களப்பிர மன்னன் என்றும் சேரன் என்றும் இரு வேறு கருத்து நிலவுகிறது. இந்த மன்னன் கீழ் நேரடியாக பணி செய்து வாழ்பவனான மழநாட்டான்மூர் கூற்றத்தின் கிழக்கில் எதகம்பாடி ஊரைச் சேர்ந்த நெருப்புக்கல் உரைக்கும் நெருப்புக் கல் ஆசாரி வெள்ளான் கூத்தனுடைய மகன் விரதி சூரன் என்பவன் தன் தந்தையையும் (வெள்ளான் கூத்தன்) தாயையும் நினைவில் கொண்டு பொது மக்கள் பயனுற கிணறும் நீர்கலனும் செய்தான். இவனும் இவன் தந்தையும் உலோக பணியோடு (metallurgy) தொடர்புடையவர் போலும்.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 85, ஆண்டு: 2011 பக்.4 & இதழ் 66 பக். 42, ஆண்டு: 2005
குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் புலியூர்க் குறிச்சி கிராமத்தில் உள்ள உதயகிரிக் கோட்டை 13 வரி கிருத்துவர் கல்லறைக் கல்வெட்டு
பரதேசி - வெளிநாட்டு; நினை - அஞ்சலி; வலிய - பெரிய; கப்பித்தான் - படையணி தலைவன், captain; செரிய - சிறிய; ஆற்பனா - ஆத்மா;
விளக்கம் : திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி தச்சு வீரர் திலெனாய் (Euastachius Benedictus de Lannoy (1715 - 1777). இவருடைய மகன் சிறிய கப்பித்தான் யுவான் யஸ்தாக்கி யோவென் தொ தெலுனு (Yuvan Euastace Johannes de Lannoy) கொல்லம் ஆண்டு 921 (1745) இல் ஆவணி மாதம் 12 நாள் செவ்வாய் கிழமையில் பிறந்தவர். இவர் தமது 19 வயதில் கொல்லம் ஆண்டு 940 (1764) இல் சித்திரை மாதம் 22 நாளில் திங்கட் கிழமை அன்று களக்காட்டுப் போரில் காயமடைந்தார். பின் 8 மாதம் 17 நாள் கழித்து 941 (1765) இல் புரட்டாசி மாதம் 9 ஆம் நாளில் 20 ஆம் வயதில் உடலை விட்டு ஆவி பிரிந்தது. அவருடைய ஆன்மாவுக்கு ஆறுதலாக உலகத்தில் வாழும் வெள்ளை நாட்டவரே இங்கு நின்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்க . ஆமென்!! இவர் தமிழகத்தில் குடி இருந்ததால் உரோமன் கத்தோலிக்க முறைப்படி புதைக்கப்பட்டாலும் இவரது பிறப்பும் இறப்பும் தமிழில் எழுதப்பட்டது. இவருக்கு பின்னர் இறந்த தந்தை திலெனொய் மகனுக்கு அருகேயே புதைக்கப்பட்டு அவரது கல்லறை ஆவணம் (epithet) தமிழ், இலத்தின் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9 ஆண்டு 2006
மயிலாடுதுறை மாவட்டம் திருவீழிமிழலை (திருவிந்தளூர் செப்பேடு பக்கம். 186)
நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றிருபத்தொன்றினால் வரியிலிட்டுக் குடுத்தபடியும் நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றினால் கங்கைகொண்ட சோழபுரத்தில் நம் வீடு முடிகொண்டசோழநில் தெற்கில் மறைவிடக் கூடத்தில் நாம் கூறை உடா நிற்க விக்கிரம சோழபாண்டியந் நமக்குச் சொல்லி நூற்று முப்பத்தின்மர் சதுர்வேதி பட்டர்களுக்கு ப்ரஹ்மதேய இறையிலியாக குடுப்பித்த சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் _ _ _
வரியிலிட்டு - எழுதிக் கொடுத்த; வீடு - அரண்மனை; கூறை உடா - ஆடை உடுத்தாமல்
விளக்கம் : முதலாம் இராசேந்திர சோழனின் மகன் வேந்தன் இராசாதிராசனுக்கு 35 ஆம் ஆட்சி ஆண்டில் 121 ஆம் நாளில் எழுத்தில் எழுதிக் கொடுத்த அறிவிப்பு ஆணை யாதெனில், எனக்கு 35 ஆம் ஆட்சி ஆண்டில் நாள் 100 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் என் அரண்மனை முடிகொண்ட சோழனில் தெற்கு திசையில் இருந்த மறைவிடக் கூடத்தில் நான் ஆடை ஏதும் உடுத்தாமல் (இலங்கோடுடன்) நின்றுருக்க விக்கிரம சோழபாண்டியன் என்னிடம் சொல்லியதால் 130 சதுர்வேதம் கற்ற பிராமணர்களுக்கு பிரம்மதேய இறையிலிக் கொடையாக கொடுக்கப்பட்ட ஊர் சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் ஆகும்.
வேந்தன் எண்ணெய்க் குளியலாட எண்ணெய் பூசி இருந்ததால் ஆடை உடுத்தாமல் இருந்திருக்கலாம். மேலும் அமைச்சன் அல்லது அணுக்க செயலன் விக்கிரம சோழபாண்டியன் இப்படி மறைவிடம் செல்லும் வகையில் வேந்தனுக்கு நெருங்கிய குருதி உறவினனாக இருத்தல் வேண்டும். முதலாம் இராசேந்திரன் தனது மகனை மதுரைக்கு ஆட்சியாளனாக அமர்த்திய போது அவனுக்கு சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டினான் என்பதில் இருந்து இது உறுதியாகிறது. இராசாதிராசன் 100 ஆம் நாளில் இந்த கொடைக்கு ஒப்புதல் அளித்தாலும் ஓலை ஆணை என்னவோ 21 நாள் கழித்து தான் எழுதி வழங்கப்பட்டது. ஆக அதன் ஏற்பாட்டிற்கு இத்தனை நாள் ஆகியுள்ளது.
பார்வை நூல்: கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுக்கள் பக். 101 இல. தியாகராஜன்.
சதிகல் கல்வெட்டு (இடம் கொங்கின் வடமேற்கு பகுதியாக இருக்கலாம் ஊர் பெயர் தெரியவில்லை)
வீரபிரதாப ஸ்ரீ _ _ _ _ ராயமகாராயர் பிருத்விராச்சசியம் செய்திருக்க சக வருஷம் 1339 ஆவது ஹேவிளம்பி சம்வத்சரத்து பாத்திரபதசுத்த பஞ்சமி ஸ்ரீ சகலாட்சபுரத்தும் ரெ _ _ மகன் புக்கரன் ஸ்வரக்கத்தன் ஆனதில் அவன் பெண்டாட்டியர் மூவர் தோளும் கையும் கொடுத்த கம்பம்
சொர்க்கத்தன் - இறந்து சொர்க்கம் புகுந்தவன்
விளக்கம் : விசயநகர வேந்தன் வீர விஜயராய மகாராயர் மண்ணுலகு ஆண்டு கொண்டிருந்த சக ஆண்டு 1339 (கி.பி.1417) இல் ஏவிளம்பி ஆண்டில் பாத்திரபத சுத்த பஞ்சமி அன்று ஸ்ரீ சகலாட்ச புரத்தும் ரெ _ _ மகன் புக்கரன் இறந்து சொர்க்கம் ஏகினபடியால் அவனது மூன்று மனைவியரும் உடன்கட்டை ஏறி மாண்டதன் நினைவாக தோளும் கையும் கொடுத்த கம்பம் நாட்டப்பட்டது.
இறந்த பெண்டிரின் நினைவாக இவ்வாறான சிற்பம் அல்லது சதிக்கல் கல்வெட்டுகளுடன் இருப்பது தமிழகத்தில் மிக அரிது. சதிக்கல் கருநாடகத்தில் அதிகமாக காணப்படுகிறது.
பார்வை நூல்: செந்தமிழ் தொகுதி 3 & தென்னிந்திய வீரக் கற்கள், பக். 379-380, வெ. கேசவராஜ்
ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு இ- ருபத்தேழாமாண்டு சேரமா
- னார் படை விழிஞத்து புறத்து
- விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
- ப்பான் வர பெருமானடிகளுள
- ன்பு மீக்குள இரண கீர்த்தி[யு]
- ம் அமர்க்கழியும் உள் வீ
- ட்டினொற்றைச் சேவகர் கோட்
- டை அழியாமை காத்தெறி
- ந்து பலரும் பட்ட இ
- டத்து இரணகீர்த்தி உள்
- வீட்டுச் சேவகன் கொழுவூ
- ர்க் கூற்றத்துப் பெருமூர்
- த் தாதம் பெருந்திளை [அ]
- த்திரத்தாற் பலரோடுங்
- குத்திப் பட்டான் இரு
- பது கமாளி சேவகன்
விடு - திரிந்து; உழக்க - அழிக்க; ஒற்றை - ஒற்றர் படை; தாதம் - மூலப்படை; திளை - போர்ப்படை, அத்திரம் - அம்பு; இருபது - பதுங்கு படை, மறைந்து தாக்கும் படை, Ambush; கமாளி - பிரிவு, Division (கமர் - நிலப்பிளவு. எனவே கம் என்றால் பிரிவு. கம் + ஆளி = கமாளி - பிரிவினன்; சேவகன் - படைத்தலைவன்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் திண்டிவனம் அருகே கிடைத்த 3 வரி நடுகல் கல்வெட்டு
- கம்பப் பெருமாள் ஆனையாடின
- கொந்தளத்து இவ்வூர் அழிந்த நாள்
- பட்டான் இவ்வூர் கோதுபத்தி மாத்ரகன்.
கொந்தளத்து - அமளிகுமளி, turmoil; கோதுபத்தி (கோடு+பத்தி) - குலையாக பிரித்த படையணிப் பிரிவு, army division; divide as a battalion; மாத்ரகன் - அளவிடுபவன், surveyor, assessor
விளையாட்டு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு
- _ _ _ ஆற்றுந பெருமகன் உய
- ர் பிரம்மதாய்ய பெற்றமை தெருட்டு
- கொல்லாறு விட நடந்து கொண்
- டார் மணற்குடி பார்ப்பார் சா
- ன்றார். வடக்குஇருக்கை அறி நாட்டா
- த் தெல்லையாக நட்ட கல்
தெருட்டு - அறிவிப்பு; கொல்லாறு - ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை - குடியிருப்பு; நாட்டாத்து - ஊர்;
விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்து விட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை. _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்த பிரம்மதேயத்தின் வடக்கு குடியிருப்பை அறிந்து கொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனை குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பார சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாக கருத்து தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதை கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது 7 ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13 ஆம் நூற்றாண்டின் "நாயனார் திருமுகப்படி திருமுகூர் நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை" எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.
இக்கல்வெட்டில் இடம்பெறும் பெருமகன் என்ற சொல் வேந்தனை குறிக்கும் பருமன் என்ற சொல்லுக்கு முந்து நிலைச் சொல் ஆகும். இலங்கையில் உள்ள கல்வெட்டுகளில் பெரும, பருமக ஆகிய சொற்கள் 2000 ஆண்டுகள் முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளன.
பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33