முன்னொரு நாளிலே, ‘மாலதி‘ என்பவள், தன்னுடைய மாற்றாளின் மகவுக்குப் பாலூட்டினாள். பால் விக்கிப் பாலகன் மரித்தான். மாலதியும், “பார்ப்பானோடு அவன் மனையாளும் என்மேல் அடாத பழி கூறுதலைவிட்டு, ஏற்புடைய உண்மையைச் சொல்வார்களே!” என்று ஏங்கினாள். மக மகவை எடுத்துக் கொண்டு, கற்பகத்தரு நிற்கும் கோயில், ஐராவதம் நிற்கும் கோயில், பலதேவரின் கோயில், பகற்பொழுதுக்கு வாயிலோனான சூரியனின் கோயில், ஊருக் குரிய தேவதை இருக்கும் கோயில், வேலவனின் கோயில், வச்சிரப்படை நிற்கும் கோயில், பாம்பணையான் வீற்றுள்ள கோயில், அருகன் கோயில், சந்திரன் கோயில் ஆகிய இடம் எல்லாம் சென்றாள். ‘தேவர்களே! எனக்குற்ற நோயினைத் தீருங்கள் எனவும் அழுதழுது வேண்டினாள்; யாதும் பயனில்லை.
அதன்பின், பாசண்டச் சாத்தனின் கோயிலை மாலதி அடைந்தாள். அவன்பால் குழந்தை உயிர்பெற வரம் வேண்டிப் பணிந்து பாடுகிடந்தாள். அவ்விடத்தே, பிறரைப் பழிக்கும் அழகுடைய ஓர் இளங்கொடிபோல இடாகினிப் பேய் ஒன்று வந்து, அவள்முன் தோன்றிற்று.