சிறுகதைக் கொத்து

308 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 8, 2014, 10:44:36 PM10/8/14
to mint...@googlegroups.com, classr...@gmail.com, vall...@googlegroups.com
அப்பச்சி சொன்ன கதைகள்: காசின் அருமை

-----------------------------------------------------------------------------


தன் மகன் கருப்பஞ்செட்டி காசருமை தெரியாமல் வளர்வதில் சாத்தப்ப செட்டியாருக்கு மிகுந்த வருத்தம். சிக்கனமும், சேமிப்பும் நகரத்தார்களின் இரண்டு கண்கள் என்று அவர் அடிக்கடி சொல்வார். சிறுகக்கட்டிப் பெருக வாழவேண்டும் என்பார்.

அனால் அவர் மகன் கருப்பஞ்செட்டியிடம் அதெல்லாம் எடுபடவில்லை! அவன் நின்று பேசமாட்டான். காது கொடுத்து எதையும் கேட்க மாட்டான். அவன் தாயார் சிகப்பி ஆச்சி, அவனைச் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். சாத்தப்ப செட்டியார் தம்பதிகளுக்குத் திருமணமாகி10 ஆண்டுகள் கழித்து, அவன் பிறந்ததால் ஆச்சிக்கு அப்படியொரு
பாசம். கண்ணை மறைக்கும் பாசம்.

காலம் 1941ம் ஆண்டு. ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்து வெளிவந்த சபாபதி என்னும் திரைப்படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அந்தப் படத்தில் வரும் கதாநாயகனைப் போலவேதான் நம் கருப்பஞ்செட்டியும் இருந்தான். குணம், அறிவு என்று இரண்டிலுமே அச்சு அசலாக அப்படியேதான் இருந்தான். தோற்றத்தில் மட்டும் வாட்டசாட்டமாக இருப்பான். வயது 16. படிப்பு எட்டாம் வகுப்போடு சரி. அதற்குப் பிறகு படிப்பு ஏறவில்லை.

அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்ததால், நகரத்தார்கள் புதிதாக எதையும் செய்யாமால் இருப்பதை வைத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சாத்தப்ப செட்டியாரின் வீடு நகரச் சிவன் கோயிலுக்கு அருகில் கீழக்கொரட்டியார் தெருவில் இருந்தது. பங்கு போட்டுக்கொள்ள யாருமில்லை. முழு  வீடும் அவருடையதுதான். கீழ ஊருணிக்கரையில் ஒரு சின்ன தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தின் முன் பகுதியில் இருந்த தகரக் கொட்டகையில் ஒடு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். சீமை ஓடுகள். தேக்கு மரச் சட்டங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு வேண்டிய சாமான்கள்.உதவிக்கு நான்கு வேலையாட்களை வைத்திருந்தார்.

நாட்டு ஓடு, நம் கணினி கீ‍போர்டில், எண் ஒன்பது மற்றும் பூஜ்ஜியம் ஆகியவற்றில் இருக்கும் round bracket போன்ற வடிவில், அரை அடிக்கும் சற்று குறைவான‌ நீளத்தில் இருக்கும். இன்று இந்த வகை ஓடுகளைக் காண்பது அறிதாய் இருக்கிறது.

சீமை ஓடு, வளைந்து நெளிந்து, அளவில் பரீட்சை அட்டை போல‌,இப்பொழுது இருக்கும் அநேக வீடுகளில் இருப்பது. இவ்விருவ‌கை ஓடுக‌ளும் ஆர‌ஞ்சு நிற‌த்தில், க‌ண்க‌ளைக் க‌வ‌ரும் வ‌ண்ண‌மாக‌ இருக்கும். புதிதாக‌ வேய்ந்த‌ ஓடுக‌ள் நாள் செல்ல‌ச் செல்ல‌, ம‌ழையிலும், வெய்யிலிலும் ஆங்காங்கே க‌ருத்திருக்கும். 'வெய்யில்ல அலையாதப்பா கருத்துருவ' என்று இதைப் பார்த்து தான் சொன்னார்களோ என்னவோ! ஆரஞ்சில் கருமையும், ஒருவகையில் அழ‌கைக் கூட்டும் வித‌மாக‌வே இருக்கும்.

ஆனால் சாத்தப்பண்ணனின் ஒரே கவலை அவருடைய மகன்தான். கடைக்கு வந்து தொழிலைக் கற்றுக் கொள்ளப்பா என்றபோது முடியாது என்று மறுத்துவிட்டான். நீ சும்மா திட்டிக் கொண்டே இருப்பாய், உங்களிடம்  யார் வேலை பார்ப்பது என்று சொல்லிவிட்டான். வேறு இடத்திலும் வேலைக்குச்  செல்ல மறுத்துவிட்டான். இரண்டு வருடம் போகட்டும் என்று அவரும் விட்டு விட்டார்.

அவனுக்கு நிறைய நண்பர்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்விடுவான். மாலை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான். ஒரு புத்தம் புது ராலி  சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார். சைக்கிள்கள் எல்லாம் வெள்ளைக்காரன் தேசத்தில் இருந்துதான்

அப்போது வரும். டைனமோ, காற்று அடிக்கும் பம்ப் என்று எல்லா உபரி சாதனங்களையும் கொண்ட அற்புதமான சைக்கிள் அது. காலையில் கிளம்பு முன் சாத்தப்ப அண்ணனிடம் வந்து நிற்பான். முகப்புப் பெட்டகசாலையில் இருந்து முதல் நாள் குறிப்புக்களைச் சிட்டையில்  ஏற்றிக்கொண்டிருக்கும் அவர் நிமிர்ந்து பார்த்தவுடன் கையை நீட்டுவான். அன்றையக் கைச் செலவிற்கு, அதாவது பாக்கெட் மணி கேட்டு நிற்பான். அவரும் எழுதாத ஒப்பந்தப்படி ஒரு ஒத்த ரூபாய்க் காசை எடுத்துக் கொடுத்து அனுப்பி விடுவார்.

தங்கம் பவுன் 38 ரூபாய் விற்ற காலம் அது. ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் அதிக மதிப்புடையது. ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவிற்கு காலைப் பலகாரம் சாப்பிடக்கூடிய காலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாதம் 15 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் கிடைக்கும்  காலம் அது. அவன் இப்படிக் காசருமை தெரியாமல் தினமும் ஒரு ரூபாயை வீணடிக்கின்றானே என்று வருத்தப்படுவார்.

ஒருநாள் அதற்கு முடிவு கட்ட விரும்பியவர், அவனிடம் பேச்சுக் கொடுத்தார்:

“நான் ஒரு சின்ன வேலை சொல்கிறேன். செய்கிறாயா?”

அவன் பதில் சொன்னான். “முடிந்த வேலை என்றால் செய்கிறேன்”

ஒரு ஒத்த ரூபாய்க் காசை அவன் கையில் கொடுத்தவர், சொன்னார்.
” இந்தக் காசை நம் வீட்டுக் கிணற்றில் போட்டு விட்டு வா”

அவன் சற்றுக் கூட யோசிக்கவில்லை, தயங்கவில்லை. தங்கள் வீட்டு முகப்பில் இருக்கும் கிணற்றில் போட்டு விட்டு உடனே திரும்பி வந்தான்.

வந்து நின்றவனிடம் தொடர்ந்து சொன்னார் அவர்: “நாளை முதல் உன் கைச் செலவிற்கு நான் இரண்டு ரூபாய் தருகிறேன். ஆனால் இன்று நீ வெளியே சென்று சம்பாத்தித்து ஒரு ஒற்றை ரூபாயைக் கொண்டு வா பார்க்கலாம்”

“அவ்வளவுதானே, இன்று மாலைக்குள் ஒரு ரூபாய் சம்பாத்தியத்துடன் வருகிறேன்” என்று சொன்னவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டான்.

                          *********************************

சொல்வது எளிது. ஆனால் செயல் படுத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது கருப்பஞ் செட்டிக்கு வெளியே சென்றவுடன்தான் புத்தியில் உறைத்தது.

சில கூலி வேலைகளைச் செய்து அப்பணத்தைத் தேற்றிவிடலாம் என்று முடிவு செய்தவன், அடுத்த தெருவில் இருக்கும் ஒரு செல்வந்தர் வீட்டிற்குச் சென்று, அவரிடம் ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

வயதுதான் 16 ஆனதே தவிர ஆள் தோற்றத்தில் வாட்ட சாட்டமாக இருபது வயது இளைஞன் போல இருப்பான்.

இவனை ஏற இறங்கப் பார்த்தவர், கார் ஒட்டத் தெரியுமா? என்று கேட்டார். அவர் வீட்டில் இரண்டு கார்கள் இருந்தன.

“தெரியாது” என்று சொன்னவன். கார்களைக் கழுவி சுத்தம் செய்து தருகிறேன். கூலியாக ஏதாவது கொடுங்கள் என்றான். பரிதாபப்பட்ட அவர் அந்த வேலையைச் செய்யும்படி பணித்து, அதற்கு வேண்டிய துணி, வாளி, ஆகியவற்றைக் கொடுத்ததோடு, தண்ணீர் பிடிக்கும் இடத்தையும் காட்டினார்.

ஒரு மணி நேரத்தில் அவற்றைச் செய்து முடித்தான். அவரும் அதற்குச் சன்மானமாக இரண்டு அணாக்களைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டு கிளம்பியவன், கல்லுக்கட்டியில் இருந்த பெரிய மளிகைக் கடைக்குச் சென்று அதே போல ஏதாவது கூலி வேலை கொடுங்கள் என்றான். இவன் டிப்டாப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு சந்தேகப் பட்ட கடைக்காரர்,” ஏம்ப்பா மூடை தூக்குவாயா? வெளியே வாகனத்தில் இருக்கும் பருப்பு மூட்டைகளை
உள்ளே கொண்டு வந்து அடுக்க வேண்டும். செய்வாயா?” என்று கேட்டார்.

அதெல்லாம் செய்வேன் என்று சொன்னவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வேலையைச் செய்து முடித்தான். கொஞ்சம் சிரமாமகத்தான் இருந்தது. ஆனால் மனதில் நுழைந்த வீம்பு காரணமாக அதைச் செய்து முடித்தான். மொத்தம் 20 மூட்டைகள். மூட்டைக்குக் காலணா வீதம் கடைக்காரன் 4 அணாக்களைக் கொடுத்தான்.

இப்படியாகத் தொடர்ந்து வேலை பார்த்ததில் மாலை 4 மணிக்குள் 15 அணாக்கள் சம்பாதித்துவிட்டான். உடல் களைத்து விட்டது. ஆனாலும் மன உறுதி காரணமாகத் தாக்குப் பிடித்து நின்றான். மதியம் சாப்பாட்டிற்காக செலவழித்த ஒரணா போக மீதி பதினான் கணாக்கள் பைக்குள் இருந்தன.

இன்னும் இரண்டணாக்கள் வேண்டுமே?

பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே அப்போது வந்திறங்கிய பெரியவரிடம் இருந்த பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களைப் பார்த்துவிட்டு, அய்யா இவற்றை நான் தலைச்சுமையாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் இறக்கி வைக்கிறேன்  என்றான். அவரும் பேரம் பேசியவர் கடையில் சம்மதித்து முத்துப் பட்டணத்தில் உள்ள தன்னுடைய வீடுவரை அவனைத் தூக்கிவர விட்டவர். கடைசியில் ஒரு அணாவைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். திரும்பவும் பேருந்து நிலையம். மீண்டும் இது போல ஒரு தலைச் சுமை. ஒரணாக் கூலி.

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. ஒரு ரூபாய் சேர்ந்து விட்டது!

வீட்டிற்குத் திரும்பும் வழியில் கொப்புடையம்மன் கோவில் வாசலில் இருந்த கடையில், சில்லறைகளைக் கொடுத்து விட்டு ஒற்றை ரூபாய்க் காசாக அதை மாற்றி வைத்துக் கொண்டு, பாதி ஓட்டமும் பாதி நடையுமாக மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வந்தவுடன், வீட்டில் முகப்பில் அமர்ந்திருந்த தன் தந்தையாரிடம், கையை நீட்டி காசைக் காட்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவன் தந்தையார், சொன்னார்: ”இந்தக்  காசைக் கொண்டு போய் நம் வீட்டுக் கிணற்றில் வீசி விட்டு வா!”

அவனுக்குக் கடுப்பாகி விட்டது. அத்துடன் கோபமும் தலைக்கு ஏற, காட்டுக் கூச்சலாய் கத்த ஆரம்பித்துவிட்டான்:

”என்ன அப்பச்சி? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? எத்தனை இடங்களில் கூலி வேலை செய்து இந்தக் காசை சம்பாதித்தேன்  தெரியுமா? நான் பட்ட கஷ்டங்கள் உங்களுக்குத் தெரியுமா? இதைக்  கொண்டு போய் கிணற்றில் வீசச் சொல்கிறீர்களே?”

”இன்று காலையில் நான் கொடுத்த காசை மட்டும் சத்தமில்லாமல்  வீசி விட்டு வந்தாயே? இப்போது எதற்கு இத்தனை சத்தம்?”

அவனுக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மெளனமாக நின்றான்.

அவனுடைய தந்தை மெல்லிய குரலில்  அவனுக்குப் புரியும்படி சொன்னார்: “யாருக்கும் காசு சும்மா வராது. கஷ்டப்பட்டால்தான்  வரும். நான் காலையில் உன்னிடம் கொடுத்த பணமும், தினமும்  உன்னிடம் கொடுக்கும் பணமும் நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதுதான். வேலையில் நஷ்டம் வராது. ஆனால் தொழிலில், வியாபாரத்தில் நஷ்டமும் வரும் தெரியுமா? பல சமயங்களில் கடனாகக் கொடுத்த சரக்கிற்குப் பணம் வராது. அதை வராத கணக்கில், நஷ்டக் கணக்கில் தான் எழுத வேண்டியதிருக்கும் தெரியுமா? நான் ஒன்றும் உட்கார்ந்து கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை. ஓடியாடி கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கின்றேன். அதை முதலில் நீ புரிந்து 
கொள்!”

தந்தை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவனைச் சம்மட்டியால் அடிப்பதைப் போன்று இருந்தது. எல்லாம் பிடிபட ஆரம்பித்தது.

“நாளை முதல் நானும் உங்களுடன் நம் கடைக்கு வருகிறேன். எனக்கு ஒரு வேலை கொடுங்கள். என்ன வேலை வேண்டுமென்றாலும் கொடுங்கள்!”என்று அவன் சொல்லச் சொல்ல அவனுடைய தந்தை பிரமிப்பிற்கு ஆளானார். தன்னுடைய ஒரு நாள் சோதனை ஓட்டம் அவனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறித்து சந்தோஷத்திற்கும் ஆளானார்.

அவனுக்குக் காசின் அருமை ஒரே நாளில் தெரிந்ததைக் குறித்து  மிகவும் சந்தோஷத்திற்கு ஆளானார். அனுபவம்தான் பெரிய வாத்தியார் என்பதையும் அதுதான் எந்த மனிதனையும் மாற்றக் கூடியது என்பதையும் தன் மகன் மூலம் அவர் உணர்ந்து கொண்டார்.

-----------------------------------------------------------------------------
எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது ஒன்பதாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி எனது
நடையில் எழுதியுள்ளேன். அத்துடன் இந்தச் சிறுகதை சென்ற மாதம்
மாத இதழ் ஒன்றில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றதாகும்.
உங்களுக்கு அறியத் தருவதற்காக அதை இன்று வலையில் ஏற்றி உள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார் (சுப்பையா வீரப்பன்)


-----------------------------------------------------------------------------
எனக்கு பிடித்த இணையதள எழுத்தாளர்களில் ஒருவர். கருத்து தெரிவிக்கும் பொழுது எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்தால் அவருக்கும் பயனளிக்கும்.

*******அனைவரும் உங்களுக்குப் பிடித்த கதைகளையும், கதைகள் பற்றிய கருத்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.*******


வேந்தன் அரசு

unread,
Oct 9, 2014, 7:05:18 AM10/9/14
to vallamai, மின்தமிழ், classr...@gmail.com
நல்ல கருத்துள்ள கதை.

8 அக்டோபர், 2014 10:44 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Nov 8, 2014, 3:19:43 AM11/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இங்கிவளை யான் பெறவே!
_________________________________________________________________________________

இக்கதையில் ஒரு பெண்ணை பெற்றோர், கணவன் என குடும்பமே ஏமாற்றுவதை சித்தரிக்கிறார் கதாசிரியர்.

அவர் பெண் எழுத்தாளராக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். ............

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2014, 3:22:19 AM11/8/14
to vallamai, min tamil
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?

--

தேமொழி

unread,
Nov 8, 2014, 3:27:10 AM11/8/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
எழுத்து நடையை வைத்து கண்டுபிடிக்கலாமே...

பரிசு பெறும் எழுத்தாளர் வரிசையில் இருப்பவரே.

ஒரு தீபாவளி இதழில் வெளிவந்தது. 


..... தேமொழி



On Saturday, November 8, 2014 12:22:19 AM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?
2014-11-08 13:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இங்கிவளை யான் பெறவே!
_________________________________________________________________________________

இக்கதையில் ஒரு பெண்ணை பெற்றோர், கணவன் என குடும்பமே ஏமாற்றுவதை சித்தரிக்கிறார் கதாசிரியர்.

அவர் பெண் எழுத்தாளராக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். ............

..... தேமொழி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 9, 2014, 12:35:25 AM11/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, November 8, 2014 1:35:39 AM UTC-8, tsparu2001 wrote:

நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,

அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன் .



இந்தக் கதையை எழுதியவர், கீதாவும் பார்வதியும்  எண்ணியது போல ஷைலஜா தான் ...

மைதிலி நாராயணன் என்ற பெயரில் எழுதி இருக்கிறார்.

<<< கதை PDF கோப்பாக இணைப்பில் ....>>> 

..... தேமொழி
short story - ingivaLai yaan peRavae.pdf

தேமொழி

unread,
Jan 21, 2015, 6:38:56 PM1/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஏணி

-- நிர்மலா ராகவன்.


டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?"

"என்னது?"

முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: "எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த மாணவிங்களும் சரி". குரலில் ஆழ்ந்த வருத்தத்தை மீறி கோபம் வெளிப்பட்டது. தோல் நிறத்தால் மட்டும் தாங்கள் எவ்விதம் மட்டமாகிவிட முடியும் என்று விளங்காத குழப்பமும்கூட கலந்து வந்தது.

இன்னொரு பெண் அவளுடன் சேர்ந்துகொண்டாள்:  "டீச்சர் நடக்கறபோது, தலையை நிமிர்த்தி நடக்கறீங்க! எல்லாரும் ஒங்ககிட்ட மரியாதையா இருக்காங்க. அந்த மாதிரி நாங்களும் ஆகமுடியுமா?"

கடந்த வாரம் தலைமை ஆசிரியை மிஸஸ்.கூ புவனாவை அழைத்து, 'நம்ப பள்ளியில் ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கணும்னு எல்லா மாணவிகளும் பல தடவை என்கிட்ட வந்து கேட்டுட்டாங்க. அதில நீங்கதான் பொறுப்பு ஏத்துக்கணும்னும் சொல்லிட்டாங்க. இருபது, முப்பது பேருக்காக ஒரு சங்கம் எதுக்குன்னு நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தும் கேக்கலே!' என்று கூறியபோது, புவனாவிற்கு எதுவும் புரியவில்லை. 

இப்போது சங்கத்தின் முதல் கூட்டத்திற்கு வந்தபோதுதான் அப்படி ஒரு வினா, மாணவிகளிடமிருந்து. 

அவளைப்போல நடக்க வேண்டுமாமே! 

தற்பெருமையுடன், எதிரிலிருந்தவர்களைப் பார்த்துப் பரிதாபமும் எழுந்தது. ஆரம்பப் பள்ளிகளில் மலாய்மொழி படித்திருந்த இவர்களுக்குத் தேவையானது தமிழ்மொழிப் புலமை இல்லை. ஒரு மனிதர் பிறருக்கு அளிக்க வேண்டிய அடிப்படை மரியாதை. எதனால் இவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது? வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றிருந்த அவளுக்கு அவர்களுடைய பிரச்னை புரியத்தான் இல்லை.

"ஆறாம் வகுப்புவரை இந்தமாதிரி எதுவும் கிடையாதா?" என்று கேட்டாள். 

வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்கிருந்த எல்லா மாணவிகளும் பக்கவாட்டில் தலையை ஆட்டினர். உதடுகள் பிதுங்கின, சுய பச்சாதாபத்தில்.

யோசனையுடன், "எத்தனை பேர் தமிழ்ப் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

ஒரு கைகூட மேலெழவில்லை.

ஆச்சரியம் தாங்காது, "ஒருத்தர்கூட இல்லையா?" என்று அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வதுபோல் மீண்டும் வினவ, மெள்ள மெள்ள கரங்கள் உயரத் தொடங்கின.

புவனாவிற்கு மெல்லப் புரிய ஆரம்பித்தது. தமிழ்ப் பள்ளிகளில் படித்திருப்பதே அவமானகரமான செயல் என்ற நினைப்பில் இவர்கள் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்!

"கைதூக்க இவ்வளவு நேரமா? இல்ல, எங்கே படிச்சோம்னு மறந்துபோச்சா?" என்று வேடிக்கையாகக் கேட்க, அவர்களின் முகத்தில் இருந்த இறுக்கம் கணிசமாகக் குறைந்தது. "தமிழ் நம்ப தாய்மொழி. அதில பேசவும், படிக்கவும் எதுக்கு வெட்கப்படணும்? நம்ப மொழி நமக்கே தெரியாவிட்டால்தான் கேவலம்!" என்று அடித்துச் சொன்னாள் ஆசிரியை. தொடர்ந்து, "இந்த இங்கிலீஷ் இப்போதான் நானூறு, ஐந்நூறு வருஷமா இருக்கு. நம்ப தமிழோட வயசு என்ன தெரியுமா?" என்று ஒரு சிறு புதிர் போட்டுவிட்டு, தானே விடையும் அளித்தாள்: "இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால எழுதின திருக்குறளே தமிழிலதானே இருக்கு! இப்ப அமெரிக்கா, ஐரோப்பாவிலகூட அதோட மொழிபெயர்ப்பை விரும்பிப் படிக்கறாங்களாம்!"

முதலில் கைதூக்கப் பயந்தவர்கள் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். தமிழில் பேச மட்டுமே முடிந்த சிலர், அதிலும், 'தமிழ் பேசத் தெரியுமா?' என்ற கேட்கக்கூடாத கேள்வியை யாராவது அசந்தர்ப்பமாகக் கேட்டுவிட்டால், 'கொஞ்சம் கொஞ்சம்!' என்று சாதாரணமாக அலட்டிக் கொள்பவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொண்டார்கள். தம்மை இக்கட்டில் மாட்டிவிட்ட ஆசிரியைமீது கோபம்கூட வந்தது.

"நம்ப சம்மதம் இல்லாம யாரும் நம்மை தாழ்த்திவிட முடியாது. புரிஞ்சுக்குங்க!"

"டீச்சர்! நாங்க எப்பவாவது பாவாடை கட்டினா, 'தங்கச்சி பாவாடை!'ன்னு மத்த பிள்ளைங்க கேலி செய்யறாங்க!" அழாதகுறையாக கமலவேணி கூறினாள். ஒல்லியான உருவம், கண்களில் எப்போதும் கலக்கம், நல்ல கறுப்பு என்று அவளை ஒரே பார்வையில் எடைபோட்டாள் ஆசிரியை.

"இதில கேலி செய்ய என்ன இருக்கு? பாவாடை-சட்டை, புடவை இதெல்லாம் நம்ப கலாசார ஆடை. மத்தவங்க அவங்க முறைப்படி ஏதேதோ உடுத்திக்கலியா?" புவனா  வேலைக்கு வரும்போது புடவையைத் தவிர வேறு எதுவும் அணிந்ததில்லை.

எல்லோர் முகத்திலும் புன்னகை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்துகொண்டதைக் கவனிக்கத் தவறவில்லை புவனா.

பிறர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்று மனோதத்துவ ரீதியாக விளக்கத் தொடங்கினாள்: "மத்தவங்க வித்தியாசமா இருந்தா, சில பேருக்கு அதில ஒரு பயம் -- எங்கே நாம்ப செய்யறதிலே குத்தம் கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு. நாம்ப அவங்களைச் சொல்றோமோ இல்லியோ, அவங்க முந்திக்கறாங்க! அவ்வளவுதான்". 

"பொறாமை, இல்ல டீச்சர்?" முதல் வரிசையிலிருந்த பெண் கேட்டாள். 

"உன் பேர் என்ன?"

"உமா தேவி, டீச்சர்!" டீச்சரின் பார்வை தன்மீது பட்டுவிட்ட சந்தோஷத்துடன் பதிலளித்தாள் அந்த மாணவி. 'கொஞ்சம் குண்டு, நீண்ட இரட்டைப் பின்னல், குறுகுறுப்பான கண்கள்,' என்று குறித்துக்கொண்டாள் புவனா. 

"பொறாமை, அவநம்பிக்கை, ஏதோ ஒண்ணு. அவங்க பேச்சை எல்லாம் கேட்டு மனசு தளர்ந்தா, நமக்குத்தான் நஷ்டம்!" 

இப்போது எல்லோருமே நிமிர்ந்தனர். புவனா "அ ஆ இ ஈ," என்று ஆரம்பித்தாள்.

அவர்கள் அதைத் திரும்பச் சொன்னபோது, இனிய கானமாக ஒலித்தது.



"டீச்சர்!"

புவனா திரும்பினாள். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்ததாலோ, என்னவோ,  தமிழ்ப் பெண்கள் பெரும்பான்மையும் வகுப்பில் பேசாமடந்தைகளாக இருந்ததை அவளறிவாள். ஏற்கெனவே இளக்காரத்துக்கு ஆளான தாம் ஏதாவது சொல்லப்போக, அது தவறாக இருந்துவைத்து, பிறரது கணிப்பில்  மேலும் தாழ்ந்துவிடுவோமோ என்ற பயமே அவர்கள் நாவைக் கட்டிப் போட்டிருந்தது என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இப்போது வலியவந்து ஒரு பெண் பேசுகிறாள் என்றால், அதுவே ஒரு நல்ல அறிகுறி என்று அவளுக்குப் பட்டது.

"என்ன துர்கா?"

அந்தப் பெண் ஏகமனதாக தமிழ்ச் சங்கத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததில், புவனாவிற்கு அவளுடைய பெயர் தெரிந்திருந்தது. 

"நான் எங்க போனாலும், நம்ப சங்கத்தில இருக்கறவங்க எல்லாரும் 'அக்கா, அக்கா'ன்னு கூப்பிட்டு, சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்காங்க, டீச்சர். என் கிளாசில இருக்கறவங்க கேலி செய்யறாங்க!"

"நாளைக்கு நான் அவங்ககிட்ட சொல்றேன்," என்று புவனா உறுதி கொடுத்ததும்தான் துர்கா நிம்மதியுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

புவனாவுக்குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆனால் துர்காவிடம் அல்ல. அவளைத் தொந்தரவு செய்வதாக அவள் கருதிய பிறர், 'ஒரு வழியாகத் தமக்கும் ஒரு ஊன்றுகோல் கிடைத்ததே!' என்ற பூரிப்படைந்திருந்தது அவளுக்குப் புரியும் வயதாகவில்லை, பாவம்! 

அவர்களது வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ்ச் சங்கத்தில் நாலைந்து தடவைகள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றுவிட்டு, அதன்பின், நோட்டுப் புத்தகத்தை வெளியில் எடுக்கத் தயக்கம் காட்டி, 'கிளாசில நாள் முழுவதும் படிக்கிறோமே, டீச்சர்!' என்று சாக்குப்போக்கு சொன்னார்கள் அம்மாணவிகள்.

புவனாவுக்குக் கோபம் வரவில்லை. தன்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் தாம் எப்படி பிறர் மதிக்க வாழவேண்டும் என்ற அடிப்படைக் கல்விதான். தமிழ் மொழியைக் கற்பதால் அது எப்படி இயலும் என்ற நிராசையே அவர்களிடம் மிகுந்திருந்தது.

அதிகம் வற்புறுத்தாமல், "ஒங்களோட பிரச்னை என்னன்னு ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க!" என்று அடுத்த கட்டத்தில் இறங்கினாள். "மொதல்லே ஒங்க பேரு.."

"என் பேரு கலைவாணி. நான் ஒரு நாள் பள்ளிக்கூடத்துக்கு என்னோட கொலுசை எடுத்திட்டு வந்தேன்..," என்று ஒரு பெண் ஆரம்பிக்கவும், கோபமாக இடைமறித்தாள் புவனா. "சம்பந்தமில்லாத சாமான்களை எடுத்திட்டு வரக்கூடாதுன்னு பள்ளி விதிமுறை. தெரியாது?"

"அன்னிக்கு டான்ஸ் கிளாஸ் இருந்திச்சு, டீச்சர். ஆனா, நான் சொல்லச் சொல்ல கேக்காம,  வழக்கம்போல என் பையைச் சோதனை செய்யறப்போ, அதைப் பாத்துட்டு, எடுத்திட்டுப் போயிட்டாங்க ப்ரிஃபெக்ட்ஸ்!"

"என் பொட்டு சிவப்புக் கலரில இருந்ததால, அதை அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்!" உமா தேவி. "கறுப்புப் பொட்டுதான் வைக்கணுமாம். கல்யாணமானவங்கதான் சிவப்புப் பொட்டு வைக்கலாமா, டீச்சர்?"

'வாயாடி!' என்று தலையை ஆட்டிக்கொண்ட புவனா எதுவும் பதிலளிக்கவில்லை. 

சிறு வயதில் ஏற்பட்ட விபத்தால் தான் பிள்ளை பெற முடியாது என்பதால் கல்யாணமே வேண்டாம் என்றிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் புடவை நிறத்திற்கேற்ப, சிவப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம் என்று எல்லா வண்ணங்களிலும் பொட்டு வைத்துக்கொள்கிறோம். இதற்கெல்லாம் விதிமுறைகளா வகுப்பார்கள்? அவரவர் விருப்பம் என்று விட்டுவிட வேண்டியதுதான். எல்லாவற்றுக்கும் கண்டித்தால், மாணவ மாணவியர்க்கு பள்ளிக்கூடமே வெறுத்து விடாதா!

"என் நெத்தி பூராவும் விபூதி இட்டிருக்கேன்னு அழிக்கச் சொன்னாங்க, டீச்சர்! தினமும் காலையில குளிச்சதும், விபூதி பூசணும்னு அப்பா சொல்வாரு! சின்ன வயசிலேருந்து பழக்கம்!" விக்னேஸ்வரி.

புவனா மென்மையாகப் புன்னகைத்தாள். அவளே மீண்டும் சிறுபெண்ணாகி, தன் தாயுடன் பேசுவது போலிருந்தது. நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தும், அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இன்றும் லேசாக வலித்தது.

அன்று பொங்கல் பண்டிகை என்று அவள் அதிசயமாக வளையலும், பொட்டும் அணிந்து பள்ளிக்குப் போக, எதுவும் கேளாது, அவள் கன்னத்தில் அறைந்தாள் தலைமை ஆசிரியை. மத்தியானம் அழுதபடியே அவள் வந்ததைப் பார்த்த தாய்தான் என்னமாக அதிர்ந்து போனாள்! அந்த விவகாரத்தை அத்துடன் விடாது, கல்வி இலாகா, தமிழ், ஆங்கில தினசரிகள் எல்லாவற்றுக்கும் தகவல் கொடுத்தாளே! தலைமை ஆசிரியை கண்டிக்கப்பட்டு, உடனே வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றப்பட்டாள்.

விரைவிலேயே, "இன்னிக்கு வளை போட்டுக்க, புவனா!" பள்ளிக்குப் போகுமுன் அம்மா சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்கள் நான்கை நீட்ட, பெண் பயந்தாள். திரும்பவும் அடி வாங்கவா!

"போட்டுக்க, சொல்றேன்," அம்மா மிரட்டினாள். 

அம்மாவின் எதிரில் இப்போது அணிந்து கொண்டுவிட்டு, பள்ளிக்கூடத்தில் கழற்றிவிடலாமா என்று புவனாவின் யோசனை போயிற்று. அவளுடைய மனத்தைப் படித்தவளாக, "யாராவது கழற்றச் சொன்னா, 'இந்துப் பெண்கள் வளை போட்டுக்கணும்'னு எங்கம்மா சொன்னாங்கன்னு சொல்லு!" என்று சொல்லியும் கொடுத்தாள் தாய்.

அம்மா சொன்னபடிதான் நடந்தது. முன்பே பிரச்னையை எதிர்பார்த்திருந்ததால், அதைச் சமாளிக்கத் தெரிந்தது. "எங்கம்மா சொன்னாங்க...," என்று திரும்பத் திரும்ப அதையே சொன்னாள், ஒவ்வொரு முறையும் எதிராளியின் வலிமை குறைவது புரிய. அவளுக்கே வியப்பு உண்டாகும் விதமாக, புதிய தலைமை ஆசிரியை அந்த இடத்துக்கு வந்து, "என்ன தகறாறு இங்கே?" என்று விசாரித்து, இரு தரப்பினரது வாதத்தையும் கேட்டு, இறுகிய முகத்துடன், "புவனா வளை போட்டுக்கட்டும், விடு," என்று தகறாறு செய்த  மாணவியிடம் கூறினாள்.

அம்மா ஆவலுடன் வாசலிலேயே காத்திருந்தாள். "என்ன ஆச்சு?"

சிரித்தபடி தனது வெற்றியை விளக்கினாள் மகள்.

மறுநாள், "வளையைக் கழட்டி வெச்சுடு!" என்று தாய் சாதாரணமாகக் கூற, "பின்னே எதுக்கும்மா நேத்து அவ்வளவு சண்டை போடச் சொன்னீங்க?" என்று அழமாட்டாக் குறையாகக் கேட்டாள் மகள்.

"நம்ப பக்கம் நியாயம் இருந்தா, நாம்ப எதுக்கும் பயப்பட வேண்டியதில்ல. அதுக்காகப் போராடணும். அது ஒனக்குப் புரியணும்னுதான்!"

தாய் கூறியது அப்போது முழுமையாகப் புரியவில்லை எனினும், புவனா தைரியமாக உணர்ந்தாள். தான் தவறு செய்யாதிருக்கும்வரை பிறருக்கு எதற்காக அஞ்சுவது என்ற அறிவு வந்தது. தலை நிமிர்ந்து நடந்தாள். அஞ்சி, அவமானம் செய்யப் பார்த்தவர்களை அலட்சியம் செய்தாள். தனிமையிலேயே வாழ்வைக் கழிக்க நேர்ந்தவளுக்கு அந்த படிப்பினை மிகவும் உபயோகமாக இருந்தது.

இப்போது, தாயிடம் கற்ற பாடங்களை பிறருக்குப் போதிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது!

"நான் முதல் நாளே சொன்னமாதிரி, நம்பளை மத்தவங்ககிட்டேயிருந்து ரொம்ப வித்தியாசப் படுத்திக்கிட்டா, அவங்களுக்குப் பயம் வந்துடும். நம்பளை மிரட்டுவாங்க. கூடியவரைக்கும், பள்ளி விதிமுறைகளை மீறாம நடந்துக்குங்க. கறுப்புப் பொட்டு வைக்கலாம். விபூதியும் ஓகே. நான் பெரிய டீச்சர்கிட்ட கேட்டுட்டேன். ஆனா, ஒளவையார்மாதிரி வேண்டாமே!"

இந்த ஒளவையார் ஜோக்கிற்கு எல்லாப் பெண்களும் சிரித்தார்கள்.

ஒரு மெல்லிய குரல் பின்னாலிருந்து தயங்கித் தயங்கி வந்தது: "நாங்க மஞ்சள் பூசிக்கிட்டு, பயங்கரமா இருக்கோமாம்". அந்தத் தமிழ்ச் சங்கத்திற்கு 'குறைகளை வெளிப்படுத்தும் இடம்' என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். "என் பேர் காமாட்சி, டீச்சர்!" என்று அந்தப் பெண் சேர்த்துக் கொண்டாள்.

"நமக்குத் தெரியும், மஞ்சள் பூசினா, முகத்தில முடி வளராது, பரு வராதுன்னு. இதைப் பாக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டுத் திரியமுடியுமா? சாயங்காலம் முகத்தைக் கழுவறபோது மஞ்சள் பூசிக்கலாமே! காலையில ஸ்கூலுக்கு வரப்போ எதுக்கு?" என்றாள் புவனா, நைச்சியமாக.   

இன்னொரு குறை வெளிவந்தது: "கிளாசில மத்த பொண்ணுங்கல்லாம் எங்களைப்  பக்கத்தில ஒக்கார விடமாட்டேங்கறாங்க, டீச்சர்!"

ஆத்திரம் எழுந்தது புவனா டீச்சருக்கு. "ஏனாம்?"

"எங்க தலையில பேன் இருக்குமாம். எங்க முடி நாறுதாம்!"

புவனா பெருமூச்சு விட்டாள். "நானே ஒங்ககிட்ட இதைப்பத்தி சொல்லணும்னு இருந்தேன். தலைக்கு கடலை எண்ணை பூசினா, பழக்கம் இல்லாதவங்களுக்கு நாத்தமாத் தோணும். அது வேணாம், வேற ஏதாவது வாசனைத் தைலம் வெச்சுக்கலாம்னு டீச்சர் சொன்னாங்கன்னு அம்மாகிட்ட சொல்லுங்க, என்ன?" என்றாள் பக்குவமாக. மாணவிகளுக்கு மட்டுமின்றி, அவர்களது தாய்மார்களுக்கும் தான் வழிகாட்டியாக விளங்குகிறோம் என்று அவள் புரிந்து வைத்திருந்தாள். "பேன் இருந்தா, அதுக்கு மருந்து இருக்கு. இல்லே, தலைகாணிமேல துளசியைப் போட்டுக்கிட்டு படுக்கலாம். நாம்ப சுத்தமா, புத்திசாலியா இருந்தா, தானே எல்லாரும் கிட்ட வரமாட்டாங்களா!"

அவர்களது இளம் முகத்தில் நம்பிக்கை ரேகை.

"வெளிர் நிறத்தில உடை போட்டுக்குங்க. மத்தவங்கமாதிரி ஒங்க நடையுடை பாவனையும் இருந்தா, தானே அவங்க ஒங்களை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க!"



அடுத்த வாரம், டீச்சருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு பெண்கள் முடியைக் கட்டையாக வெட்டிக் கொண்டிருந்தனர்! 

"என்ன, புது ஃபேஷன்!" என்று புன்சிரிப்புடன் புவனா கேட்க, "ரொம்ப வேர்த்துக் கொட்டுது!" என்று இல்லாத வியர்வையைத் துடைப்பதுபோல் பாவனை காட்டினாள் உமா தேவி. தான் சிவப்புப் பொட்டு இட்டுக் கொண்டதால் பிரச்னை எழுந்தது என்ற பெண். 

"அம்மா முந்தியெல்லாம் முடி வெட்டிக்கக் கூடாதும்பாங்க. இப்ப, டீச்சரே சொன்னாங்கம்மா, 'மத்தவங்கமாதிரி நாம்பளும் இருந்தாத்தான் அவங்க நம்பளை ஃப்ரெண்டா ஏத்துப்பாங்க'ன்னு அப்படின்னு சொன்னதும், 'சரி'ன்னுட்டாங்க!" சங்கத் தலைவி துர்கா உண்மையைக் கூறினாள்.

பிறருடன் இணைந்து  வாழ, நமது தனித்தன்மையை இழக்க வேண்டியதன் அவசியம் என்ன? துர்கா ஆத்திரப்பட்டாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

அடுத்து அவர்கள் ஏற்பாடு செய்யவிருந்த கலைவிழாவில் பிற இன மாணவிகளும் பங்கேற்று, மிக ஒற்றுமையாக எல்லாரும் இயங்குவதைக் கண்டு, தான் சொல்லிக்கொடுத்தது வீண்போகவில்லை என்று பூரிப்படைந்தாள் புவனா. 

"இந்தப் பாட்டுக்கா ஆடப் போறீங்க?" ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் புவனா.

சினிமாப் பாட்டு என்றாலும், சற்று விரசம் இல்லாமல் இருக்கக்கூடாதா!

"எங்களுக்கு இதுதான் தெரியும்," துடுக்காகப் பேசினாள் மாலா. "டீச்சர் வேணாம்னா, நான் ஆடலே!"

புவனாவிற்கு ஆழ்ந்த வருத்தம் உண்டாயிற்று. "அதில்லம்மா. ஒங்க டான்ஸ் ஏன் இவ்வளவு ஆபாசமா இருக்குன்னு யாராவது கேட்டா, நான் என்ன பதில் சொல்றது?"

"வாங்கடி!" சினிமா கதாநாயகன் பாணியில் மாலா கையை வீச, அவளைப் பின்தொடர்ந்து போனார்கள் ஐந்து பெண்களும். 

அவர்களையே பார்த்தபடி வாயடைத்துப்போய் நின்றாள் புவனா. தன்னை இவர்களுள் ஒருத்தியாகப் பாவித்துத்தானே இவர்களுக்கு வழிகாட்டுகிறோம்! சிலருக்கு ஏன் தன்மேல் இவ்வளவு காட்டம்? ஒருவேளை, எல்லாரிடமுமே இப்படித்தான் நடந்துகொள்ளத் தெரியுமோ இவர்களுக்கு?

அவள் நீண்ட காலம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. ஓரிரு வருடங்களில் உத்தியோக மாற்றல் கிடைக்க, புவனாவுக்கும், அந்தப் பள்ளிக்கும் தொடர்பு அற்றுப்போயிற்று.  என்றாவது அந்தத் தமிழ்ப்  பெண்களின் நினைவு வரும். இப்போது எல்லாரும் தன்னைப்போல் படிப்பு முடிந்து, வேலை பார்ப்பார்கள். ஒருவேளை, தன்னைப்போல்  இல்லாது, கல்யாணமாகி வீட்டில் இருக்கிறார்களோ, என்னவோ என்றெல்லாம் அவர்களைச் சுற்றி எண்ணத்தை ஓட்டுவாள். 

சிலர் மரியாதை இல்லாது பேசினார்கள். அது தன் குறையால் அல்ல. அவர்களுடைய தாழ்மை மனப்பான்மையே அப்படி பார்ப்போரிடமெல்லாம் சண்டை போடத் தூண்டுகிறது என்பது புரிந்திருந்ததால், அவர்களிடம் விரோதம் பாராட்டத் தோன்றவில்லை. 

அந்தக் கொலுசுப் பெண் -- அவள் பெயர் என்ன? சாமர்த்தியமான பெண். தினமும் வந்து வந்து, தன்னிடம் ஏதாவது கற்றுப்போவாளே! மிகவும் மரியாதையாக நடந்துகொள்வாள். அவள்  புத்திசாலி,  டீச்சருடைய அபிமானத்திற்கு   ஆளானவள் என்றே மற்ற பெண்களுக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது.

அவளுக்கு விடை அளிப்பதற்கென்றேபோல் நாளிதழில் அந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. குறிப்பிடத்தக்க அரசியல்வாதியாகி விட்டாளா இவள்! குட்டையும், பரட்டையுமான முடி. பாழ் நெற்றி. பக்கத்திலேயே அவளுடைய தேர்தல் வெற்றியைப் பாராட்டும் வகையில் அவள் வாயில் கேக்கை ஊட்டும் கணவர்.

'எனக்குத் தமிழ் மொழியும், நமது கலாசாரமும் மிகவும் பிடிக்கும்,' என்று பேட்டியில் அவள் சொல்லி இருந்தது புவனா டீச்சருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாணவி! இன்று நாடே பாராட்டும் வண்ணம் பெயரும், புகழுமாக இருக்கிறாள்! 

ஏதோ உந்துதலின்பேரில், உடனே அந்தக் கட்சியை அழைத்தாள், தொலைபேசியில். "நான் உமாவோட டீச்சர். புவனா டீச்சருன்னு சொன்னா, அவளுக்கு.. ம்.. அவங்க புரிஞ்சுப்பாங்க".

"யாரோ புவனாவாம். ஒங்க  டீச்சர்னு சொல்றாங்க! ஒங்ககூடப் பேசணுமாம்மா!"

"இப்ப நேரமில்லன்னு சொல்லு. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம நான் யாரையும் பாக்கறது கிடையாதுன்னு சொல்லத் தெரியாதா ஒனக்கு?" என்று உதவியாளனிடம் எரிந்து விழுந்ததும், கூடவே, "யாராவது கொஞ்சம் வசதியா, செல்வாக்கோட  இருந்தா, வந்துடுவாங்களே, சொந்தம் கொண்டாடிக்கிட்டு!" என்று சொன்னதும் தன் காதில் விழவெனவே அவ்வளவு உரக்கச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று புவனாவிற்கு நன்றாகவே புரிந்தது.

என்றோ எழுந்த வினாவிற்கு அன்று விடை கிடைத்தது. பிறரை மதிக்கத் தெரியாது, தம்மைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மரியாதை கிட்டுவதில்லை. அதை வன்முறையால், பதவியால் பெறத் துடிக்கிறார்கள்!

நடுங்கும் கரத்தால் ஃபோனைக் கீழே வைத்தாள். மனம் குமுறியது. 'நான் பெறாத குழந்தைகளாக அவர்களைக் கருதி இருக்கலாம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, நான் ஒரு கருவி. அவ்வளவுதான். அதோ, அந்த ஏணிமாதிரி. மேலே ஏற்றிவிட்டதுடன் என் கடமையும் தீர்ந்தது'. 

ஏமாற்றமும், அவமானமும் ஒருங்கே எழுந்து, கண்ணீராக மாறின. இனிமேல் எந்த மாணவ மாணவியரிடமும் பற்று கொள்ளாது, அவர்கள் எக்கேடு கெட்டால் என்னவென்று, புத்தகங்களிலுள்ள பாடங்களை மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். 

வாசலிலிருந்து ஒலித்த குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது: "அம்மா! இன்னிக்குப் புல் வெட்டலாங்களா?"

"வெட்டுப்பா," என்று பதில்குரல் கொடுத்த புவனாவிற்கு சட்டென ஞாபகம் வந்தது. வழக்கமாகப் புல் வெட்டும் பெருமாள் போன மாதம்  வந்திருந்தபோது, அவனுடைய நான்கு வயது மகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப தான் பொறுப்பேற்றுக் கொள்ளுவதாகச் சொன்னோமே! 

அவசரமாகத் தனது 'செக்' புத்தகத்தை வெளியே எடுத்து, அந்தக் குழந்தைக்கு ஓராண்டுக்கான சம்பளப் பணத்தைப் பூர்த்தி செய்யும்போதே சொல்லவொணாத திருப்தி எழுந்தது அவளுக்குள். இன்னொரு தமிழ்க் குழந்தையின் நலனுக்கு வழிவகுத்தாயிற்று!

'ஏணிகள் வளைவதில்லை,' என்று ஏதோ தோன்ற, புன்சிரிப்பு எழுந்தது. 

(மலேசிய பாரதிதாசன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, 2004)





தேமொழி

unread,
Dec 11, 2015, 10:46:13 PM12/11/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=33366


நம்மில் ஒருவர்….

  • Friday, March 15, 2013, 5:03

பார்வதி இராமச்சந்திரன்

ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன்,  அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.

நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.

அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.

‘உனக்குப் புரியாதும்மா!!!!’

அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு  மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.

கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம்,  கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.

முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.

‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.

‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’

அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.

தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.

‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.

அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.

அதனால் இருவரில்  ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.

கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.

கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.

ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும்  கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.

கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.

‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.

அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’

என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.

மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.

‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவ‌ரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும்,  மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த‌ வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.

ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.

‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’

‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’

‘அதானா, செரி இந்தாங்க‌ ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’

‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’

‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’

நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து,  சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.

தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா,  த‌ன்  அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.

இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,

‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,

‘இல்லடா கணபதி,  பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!!  ..பாட்டி.

‘அதனால என்னா… ரவியும்  ஒயரங் கம்மிதான‌.. செரியா இருக்கும்ல’.

பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச்  சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க‌. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே  வச்சிரலாம் நிச்சியம். என்னா?’  என்று அடுக்க…

அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.

‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.

இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.

கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.

‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’

‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’

‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு..  நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’

‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’

‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.

‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’

‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’

‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல‌ அத செய்யல,  இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’

‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’

‘ஆத்தி!!!, அப்ப  ஒன்னோட வந்த  யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’

இறுதியாக தாத்தாவின்  வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.

இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.

ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.

‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.

ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.

‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.

‘இல்லடி..இங்கதான்  ஏன்?’.

‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.

சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.

விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி,   வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.

அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன்  தெருவில் இறங்கினார்.

அதே நேரத்தில், ஒரு தெரு நாய்,  வீதியின் கோடியில் இருந்த‌ பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து  பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.

கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது.  அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.

பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று.  தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.

அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த   ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க,  திருமணம் செய்து வைத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.

‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.

 

தேமொழி

unread,
Dec 11, 2015, 10:50:40 PM12/11/15
to மின்தமிழ், vall...@googlegroups.com
நாளும் கோயிலும் 

- நிர்மலா ராகவன்
(இவ்வார வல்லமையாளர் நிகிதா ஆசாத்தைப்பற்றி அறிந்ததும் எழுந்த கற்பனை)

ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.

மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”

இல்லேஹம்சாநாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமாஎந்தக் கோயில்லேன்னு சொன்னே?”எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”

காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய்தனக்குள்.

ஹம்சா மேலே எதுவும் பேசவில்லைபேசப் பிடிக்கவில்லைஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள்கைதன்னையுமறியாமல்அபிநயம் பிடித்தது.

அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்குமாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.

`தீட்டுஎன்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?

ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில்காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்துஅக்காலங்களில் பெண்களைத் தனியேவிலக்கிவைத்திருக்கலாம்இப்போது என்ன வந்தது!

பள்ளிக்கோஅல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டதுஆனால்கோயில்களில் மட்டும் பழையவிதிமுறைகளை மாற்றாமல்கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்துவெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்மாத விலக்கு வந்த பெண்களும்,பெருநோய் வந்தவர்களும் ஒன்றாகையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?

அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.

ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்ததுயாராவது ஒரு மாணவி, `டீச்சர்இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான்எத்தனை ஆர்வம்நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.

 

பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்துஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.

பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லைகுடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட  அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான்நாட்டிய வகுப்பு -- பூஜை இல்லாத நேரங்களில்.

அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் -- இலவசம் என்பதைக் கேள்விப்பட்டுஆனால்எதிலும் அவர்களுக்கு துடிப்போபுதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோஇருக்கவில்லைஎப்போதும் வாயில் விரல்நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போஉத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்எட்டு வயதிலேயே கூனலாஇவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.

எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோபசியா இருந்தாலோ சொல்லத் தெரியாதுவாயிலே விரல் போட்டுப்பாங்க!’

தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்துஅவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.

`நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோஇல்லையோவயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும்சிரிப்பும்அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.

ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்கடீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.

சில நாட்கள்ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு

ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்குஇயற்கையான ஒரு செயல்அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து.., என்றெல்லாம் பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள்.

நம்ப உடம்பைஉயிரைகடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம்இல்லியாஅவரோட செயலே தப்புங்கிறமாதிரிஇயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டுகோயிலுக்கு வராமஇருந்துடாதீங்கஎவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர்தெரியுமா?” என்று சந்தடி சாக்கில்ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லிதன்தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.

அப்பெண்களின் முகம் தெளிந்ததுதமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.

ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.

ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்கடாக்டர்வெக்கமா இருக்கு!” குரல்அழுகையாக வந்தது.

பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள்உதடுகள் பிதுங்கின

அலட்சியமாக் கையை வீசினாள்அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றதுசாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள்தன்இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.

எல்லாரும் நிம்மதியும்வெட்கமுமாகச் சிரிக்கஒரு பெண், “இரண்டுதானேடாக்டர்?” என்று சிரிப்புடன் வினவடாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரிஇரண்டுவளைவுகள்தான்!”

சிரிப்பு பலத்ததுஇப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

சில சமயம் ஆட முடியலேவலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.

ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணிமோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லுதினமும் குடிச்சாகருப்பை வலுவாகும்.

சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.

அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சாவெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லுஇந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காமஎக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!

அதன்பின்வீட்டில் பாட்டியோஅம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டுஎந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.

நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சாசரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்)அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள்மாணவிகளுடன்அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.

இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!

தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள்தயங்கித் தயங்கி. “டீச்சர்எனக்கு இப்போ பீரியட்நான் ஆடலாமா?”

தாராளமாஆனாயார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம்என்ன?”

ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்துபெருமுயற்சியுடன் கற்ற கலைஇப்போது  பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறதுஅது நழுவி விடுமோஎன்ற கவலை இனி இல்லை!

சரிடீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன்டீச்சர் -- டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”

ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும்காமாட்சி புரிஞ்சுக்குவா!”

யாருடீச்சர்?”

காமாட்சி அம்மன்!”

!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.

“தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே! என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானேகோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம்அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .  

கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள்

முகத்தில் புன்னகை  படரபுடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள். தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா. உடல் லேசானதுபோல் இருந்தது. 

 

தேமொழி

unread,
Jan 11, 2016, 10:36:10 PM1/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
தாம்பத்யம்

- ஜெயகாந்தன்.

தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல்-ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்க்ஷாக்கார-கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.

அந்த ஐந்து ருபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம். முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை-பூர்வீகமாகவே அல்ல - தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்

ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம். இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும் 'சேத்துவெச்சிக்கிறதுக்கும்' என்னாமச்சான் வித்தியாசம்? என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?

அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள்திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் பயிர் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த இருக்கவே இருந்தது பிளாட்பாரம். கந்தல் பாய், மண் சட்டிகள். கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது. ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.

அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்துவிடும்?. அது நகர்ந்தது

பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அதுநகர்ந்தது.

நாகரிகம் நெளிந்துநகர்ந்துகொண்டிருந்த அந்த விதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக்கொண்டிருந்தாள்

"நான் அனாதை ஆயிட்டேனே" என்று கதறிக்கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் "அழாதே, நான் இருக்கிறேன்" என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்துநிற்பதைக் கண்டவுடன் கோவென்று கதறினாள். அவன் அவளைத் தேற்றினான்.

வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.

'நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே," என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுதுகொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. என் கண்ணான உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன் என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.

அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த அடுப்புக்காரிகளெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரிவராது. பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்), பேசிக் கொண்டார்கள். 

மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டனா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக்கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்துவிடுவான். பகலெல்லாம் கூலி வேலை. மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும் எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் பட்டிக்காட்டுத்தனம் இருந்தது.

‘சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். கடைசியில் எப்படியோ காசு சேர்ந்துவிட்டது.

சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து மவராசியா வாழணும். என்று ஆசிர்வதித்தாள்.

என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?..." என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன். சிறுவர்கள் சிலர் அவனிடம் வெகுமானம் கேட்டனர்.

அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை வெகுமானம் அளித்தான்.

லோன்ஸ்குயர்பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்துகொண்டிருந்தது.

ஓரணாகடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.

பார்க்குக்கு எதிரே மாதாகோயில் சுவர் ஒரமாகக் கட்டை வண்டி கைவண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன்நிலைத்துவிட்ட அடுப்பில் மீன் குழம்புகொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்துநின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் துளிலும் அடுப்பில் கனன்ற தீ  ஜூவாலை - நாற்புறமும் சுழன்று நெளிந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி-படர்ந்துபட்டுப் பிரகாசித்தது.

அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.

"ஏ குட்டி கொஞ்சம் நெருப்பு எடு, ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கேட்டான்.

'ஐய. கூப்பிடறதைப் பாரு. குட்டியாமில்லே, குட்டி என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக்கொண்ட மருதமுத்து, அவள்கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில், "கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்," என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, "கையை வுடு மச்சான். அடுப்பிலே கொழம்புகொதிக்குது." என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளுரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

"ஊஹூம், சொன்னாத்தான்."

"இனிமே என்னை என்னா கேக்கறது?" என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோநமைத்தது. உடல் முழுவதும் சிலிர்த்தது. சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள்- எல்லாம் நடுத்தெருவில்தான்! ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்," என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து

சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.

மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்பு கனிந்துகொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை. 

ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மெள்ள மெள்ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்துநின்றாள். தன் பின்னால் அவள் வந்துநிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து தான் துங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்துகொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மெளனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளுர என்னவோ உரசிக்கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவதுபோல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மெளனம் சிரிப்பை மூட்டியது. அவன் அடக்கிப் பார்த்தான். அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்துகளுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். 

"ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு" அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்துகொண்டான்.

நல்ல நிலவு.

நிலாவெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது.

பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்துகொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்புமருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக்கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினுடே, ரவிக்கையில்லாத கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.

ரஞ்சி! 

அவள் பெருமூச்சு விட்டாள்.

விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை, அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.

"வுடு மச்சான்," என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.

எதிரிலிருக்கும் முஸ்லிம் ரெஸ்டாரண்ட் இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.

"சீச்சி. இந்தப் பார்க்ரொம்ப நாஸ்டியாப் போச்சு," என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது, ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.

"நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா? என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.

அவனும் பெருமூச்சு விட்டான்.

"கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக்கெடக்கலாமில்லே. சீச்சி இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கினு தெருவிலே புள்ளை பெத்துக்கினு தெருவிலே செத்தும் போறது," என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. 

அவன் மெளனமாய் இருந்தான். சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்.

"என்னாபண்றது ரஞ்சி?... அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை - அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும்  நம்ம விதி இப்படி," என்று வருத்தத்தோடு புலம்பினான். 
"என்னாமச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே, காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாதுபோலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே. நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா..?"

'இனிக்கும் இன்ப இரவே நீ வாவா...' என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது. ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள்நடமாட்டம் அதிகம் இல்லை.

மணி பன்னிரண்டு அடித்தது.

பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களும், கிழட்டு மாடுகளும் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.

பார்க்கில் நிசப்தம் நிலவியது. மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான். ரஞ்சி. தூங்கிட்டியா?"

'இல்லே..."

ஒனக்குக் குளிருதா?

'உம்'

இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள். போர்த்தியிருந்த புடவை மெள்ளமெள்ள அசைந்தது. "மச்சான்...."  அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.

திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது

"ஐயோ..." என்று பதறினாள் ரஞ்சி.

"காருதான். போயிடும்." அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம் கார்சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளும் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.

மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்துகொண்டிருந்தது.

மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான். ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது.

மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது யார்மீது ஆத்திரப்படுவது?

கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.

மணி ஒன்று அடித்தது. 

முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்க்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன். அப்புறம் என்ன சொல்றே?"

வா, சாமி. நல்ல ஸ்டூடன்ஸீங்கதான் பிராமின்ஸ் சார். வண்டியிலே ஏறு சார். போவும்போது பேசிக்குவோம்."

மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்க்ஷா .

தூ... இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் கயிதைக்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி? என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.

"என்ன மச்சான் திட்டறே?"

'ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் துக்கம் வரல்லியா. உம். எப்படி வரும்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.

நிலவுமேகத்தில் மறைந்தது.

ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.

ஒரே அமைதி.

பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன விடிந்துவிட்டதுபோன்ற பிரமை போலும். சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்துநின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக்கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. 

மணி இரண்டு அடித்தது.

ரஞ்சி.

............

ரஞ்சி.

'உம்."

பெஞ்சு காலியாயிருந்தது. செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது. 
"டக். டக. டக்"

முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

"டக் டக். டக் டக்." ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.

'ஏய், யாரது? எழுந்து வாம்மே' என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக-மிருகத்தனமான-மனித உணர்ச்சிகளிலிருந்து மனித நாகரிகத்தின் புதை குழிக்குஅவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. 

அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.

'வெளியே வாம்மே' என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.

"பயம்மா இருக்கே மச்சான்." என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கைபிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"பயப்படாதே வா, ரஞ்சி"  என்று அவள்கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன்நின்றிருந்தான்.

"யார்ரா நீ?" என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.

"வந்து .. வந்து கூடைக்காரன், சாமி."

'ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே'  என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்துநின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது. 

"ஏம்மே. இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?" என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். 

அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன், "ரஞ்சிதம், சாமி" என்றாள். 

"சார். சார்." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.

"நீ ஒண்னும் பயப்படாதே, இவதான் என்னைக் கூப்பிட்டான்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்," என்றான் போலீஸ்காரன்.

ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.

"நாங்கபுருஷன், பெஞ்சாதி சாமி." என்று பதறினாள் ரஞ்சிதம் .
போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.

"சத்தியமாத்தான் சாமி. இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க" என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.

சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை. அவன் சட்டம் இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி என்றுதான் கற்றுக்கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.

அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன். அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.

'உம், நட நட'. அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம் என்று அவளைத் தள்ளினான்.

"ஐயா. ஐயா...' என்ற அந்தக் காதல் 'குற்றவாளி' ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.

ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்புபோல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. 
ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் பக் பக் என்று நெஞ்சு துடித்தது.

எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்துசெல்லும் சட்டத்தின் காலடியோசை.

அதோ, டக். டாக். டாக். டக்.


***************************************

தேமொழி

unread,
Jan 19, 2016, 11:08:33 PM1/19/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஒருகாம்பிருதலையும் பூ



-- நரசய்யா


[ திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!]


“கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ”

பெருந்தொகை பாட்டு எண் 1800

அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )

சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

********

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

“புஷ்பவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

“சீ” * * * *

திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டுகயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!


நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65668


About the Author

நரசய்யா

நரசய்யா has written 3 stories on this site.

இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கப்பலில் மாலுமியாக இவர்தம் நெடிய வாழ்க்கைப் பயணம் பல சாதனைகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





தேமொழி

unread,
Jan 22, 2016, 12:13:30 AM1/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

மரத்தடியில் முக்கனிகள்

-- சீதாலட்சுமி

மரத்தடியில் முக்கனிகளும் அமர்ந்திருந்தனர். மா, பலா, வாழை. வாழையிடம் ஒரு வாட்டம். மேலும் மாங்கனியைப் பார்த்த பார்வயில் நேசமில்லை. பலா அதனைக் கவனித்துவிட்டது.

“என்ன வாழையம்மா, வாடிப்போயிருக்கீங்க ?மனதிலே ஏதோ ஒண்ணு உங்களை உருத்திக்கிட்டு இருக்கு. வெளி வந்துடட்டும். பாரம் போய்டும்” என்று சாமர்த்தியமாக விசாரித்தது பலாக்கனி..

“நன்றி கெட்ட ஜனங்கள். காலம் பூராவும் அவங்களுக்குக் கிடைக்கற மாதிரி இருக்கேன். குறைச்ச காசுக்குக் கிடைக்கும். பழங்கள் வரிசை போடறப்போ என் பேரையில்லே முதல்லே போட்டிருக்கணும். நீங்க ரெண்டு பேரும் சீசன் பழங்க. மாம்பழத்துப் பேரை முதல்லே போடலாமா ?” கேள்வியை ஆத்திரத்துடன் கேட்டது வாழை.
மாங்கனி சிவந்து விட்டது.

“முதல்லே பேரைப் போட்டுட்டு மொத்து மொத்துனு அடிக்கறாங்களே அது கண்ணுக்குத் தெரியல்லியா?” என்று வருத்ததுடன் கேட்டது மாங்கனி. பலாக்கனிக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது.
“ஆஹா, இன்னிக்குப் பொழுது போகும். கதை கிடைச்சிருச்சு. “என்று  மனத்திற்குள் நினைத்தது. . அதன் தோற்றத்திற்கேற்ற புத்தி. உள்ளும் புறமும் வித்தியாசம்.. “அதென்ன மாங்கணி, உன்னை யாரு மொத்தறாங்க” என்று கனிவான குரலில் கேட்டது பலா.  வாழைக்கனி மவுனமாக நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தது. மாம்பழத்தின் கதை
நாரதர் ஒரு மாம்பழத்தைக் கைலாயத்திற்கு எடுத்துச் சென்றது அவர் தவறு.மகேசனே ஆனாலும் மனைவி மக்களை விட்டுச் சாப்பிடுவாரா ? குழப்பத்தை உண்டு பண்ணவே ஒற்றைக் கனியைச் சிவனிடம் கொடுத்தார்..வந்து
தொலைந்தது பரிசோதனை.

உலகைச் சுற்றி முதலில் வரும் பிள்ளைக்கு மாங்கனி. இது குசும்புதானே. உடனே சுட்டிப் பிள்ளை முருகன் மயிலில் பறந்துவிட்டான். பாவம் விநாயகர். பார்த்தார். அப்பா, அம்மாவைச் சுற்றினால் யோசனை சொல்லுவார்கள் என்று நினைத்து ஒரு வலம் வந்தார். அவ்வளவுதான். அவரை உற்சாகப் படுத்த எல்லோரும் கை தட்டினார்கள். பிள்ளையார் மேல் இரக்கங் கொண்டு, அப்பா அம்மாவைச்  சுற்றினால் உலகம் சுற்றியதற்குச் சமம் என்று சொல்லி விட்டார் ஒருவர்.

பிள்ளையார்குட்டியும் உடனே அதையே சொல்லிவிட்டது. குழந்தைகள் சில நேரம் கிளிப் பிள்ளைகள் மாதிரி சொன்னதைத் திருப்பிச்  சொல்லுவார்கள்..மாம்பழம் அவர் கைக்கு வரவும் அப்பாவியாய்த் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார். பொடிப்பைய்யன் வந்துவிட்டான். பார்த்தான். எல்லோரும் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்/ காரமான பொடியன்.

அவ்வளவுதான்.ஆடைகளைத் தூர எறிந்தான். ஆபரணங்களையும் வீசி எறிந்தான். கட்டிய கோவணத்துடன் பழனி மலைக்குப் பறந்து விட்டான்.(அக்காலத்தில் ஜட்டி கிடையாது. அதுதான் கோவணத்துடன் பறந்தான். கோவணத்தாண்டி என்ற பட்டம். ஜட்டி போட்டிருந்தால் ஜட்டி ஆண்டி என்று பெயர் வந்திருக்கும்)
இத்தனைக்கும் நாரதர்தான் மூலகாரணம். மாம்பழம் வாங்கினா  ஆண்டியாய் விடுவான்னு கேலி பேசினா வருத்தம் வராதா மாம்பழத்துக்குச் சிவன் மேலும் கோபம் அவர் இன்னொரு இடத்திலும் விளையாடியதால்தான் கேலி நிலைத்து விட்டது.

நம்ம சாலமன் பாப்பைய்யா பட்டி, மன்றத்தில் ராஜா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவார்னு கவலை வேறு.
பலாக்கனி கேட்டுக் கொண்டதால் இன்னொரு கதையயும் மாங்கனி சொல்லிற்று. காரைக்காலில் புனிதவதின்னு என்று ஒரு அம்மா. நல்லவங்க. பசின்னு யார் வந்தாலும் சோறு கொடுப்பாங்க. அவங்க புருஷன் ஒரு வியாபாரி.
அடிக்கடி வெளியூர் போய்டுவான். ஒருதபா ரெண்டு மாம்பழம் வாங்கிக் கிட்டு வந்து பொண்ஜாதியிடம் கொடுத்தான்.
கைலாயத்தில் ஒரு மாம்பழம். காரைக்காலில் ரெண்டு மாம்பழம்.  இந்த சிவனுக்கு எப்படி குசும்பு.எல்லாம் அவரோட விளையாட்டு. (நம்ம சிவனை நம்ம நாட்டுக்குப் பிரதம மந்திரியாக்கிடலாமான்னு பலா மெதுவாக் கேட்டது. மாவோ கதை சொல்லுவதிலே கவனம். கதை தொடர்ந்தது)  புனிதம்மா புருஷன் வெளியிலே போயிருந்தப்போ ஒரு சாமியார்  “பசி” ன்னு வந்தார். சோறு இல்லை. ஒரு மாம்பழத்தை அவருக்குக் கொடுத்தாங்க.பசிக்கு அதாவது கிடச்சதேன்னு சாப்பிட்டுட்டு சாமியார் போய்ட்டார்.

போன புருஷன் வீட்டுக்கு வந்தான். நல்ல வேளை சாமியார் போனவுடன் அந்த அம்மா சமையல் முடிச்சிட்டாங்க. (இந்தக் காலம்னா ரெஸ்டாரண்ட்டுக்குப் போகலாம்னு சொல்லிடுவாங்க, புருஷனும் பயந்து போய் கூட்டிட்டு போவான். இந்த ஆம்புள்ளங்களுக்கு வேணும். என்னமா ஆட்டிவச்சாங்க. காலம் மாறிடுச்சுடோய்ய்ய்ய் .பயந்து நடங்க
மாம்பழ மனத்தில் இடையில் இப்படி ஒரு நாதம்) சாப்பிட உட்கார்ந்தார் அய்யா. சாப்பாட்டு இலையில் ஒரு மாம்பழம் கொண்டு வச்சாங்க. பழத்தை ருசி பார்த்தவன் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டுட்டான்..

பொண்டாட்டி சாப்பிட இருக்கட்டும்னு புருஷன் நினைக்கல்லே. விவஸ்தைகெட்ட மனுஷன். அவள் சாமியார் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். ஒண்ணும் பேசாம உள்ளேபோய்ட்டு சிவன் அய்யாவை நினச்சு அழுதா. (ஆமாம் , இந்தப் பொம்பளைங்களுக்கு எப்படி பொசுக்குன்னு அழுகை வருது. அமெரிக்காவிலே
பிரிசிடெண்டுங்க பொண்டாட்டிங்க மேடையிலே புருஷன் ஜெயிச்சா அழுதுடுவாங்களாம் ஆனால் கிளிண்டன் பொண்ஜாதி அழமாட்டாங்களாம்ஆனால் அவரு அழுதுடுவாராம். அவருக்கு நல்ல மனசுய்யா) சிவன் அய்யாவுக்கும் இரக்கம் வந்து ஒரு பழம் கொடுத்தாரு. (அது இரக்கமா, இல்லே புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்
கட்டும்ங்கற நினைப்புதான். கைலாயத்திலே அண்ணன் தம்பிச் சண்டை இங்கே புருஷன் பொண்டாட்டி சண்டை.கடவுளுக்குக் கூட fighting பார்க்க ஆசைதான்.

தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து விபரம் கேட்டான். பாவம் அந்த அம்மா. இந்தக் காலமா இருந்தா அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா, டி. வி பாக்கறாங்களே. அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன் “அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே. என் முன்னால் இன்னொண்ணு வரவழச்சு காட்டு”னு சொல்லிட்டான். “சரிதான் போய்யா” என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக் கிட்டே இருந்தாரே. உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு மாம்பழம் வந்துடுச்சு. புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான்.

ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான். அப்போ அவன் ஒண்ணும்
பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவந்தான் வரல்லே. புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க. தைரியசாலிதான். கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள் இருந்திருப்பாங்க. வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை
எலும்புப் பேயாக்கிடம்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே.

புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி  பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான். இதுதான் சரணகதிபோல. ஆம்புள்ளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து ஒரெ கதைதான். இது மனுஷங்க விவகாரம். அம்மா விஷயத்துக்குப் போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க .வூட்டுக்கு வந்து காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு. கடவுள் கிட்டே புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற
மலைக்குப் போயி , தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.  இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு. விளையாடறது இந்த சாமிகள். குற்றம் சொல்றது மத்தவங்களை.

மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது. “மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி போட முடியுமா? கவலையை விடு” என்று வாழைக்கனி ஆறுதல் கூறியது. “எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும் ஒரு காலம் வரும் “ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார். நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை
இப்பொழுது பலாக்கனிக்கு நேரம் “என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா ?” என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.

நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா? சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார். “அதெல்லாம் ஒன்றுமில்லை “ என்றார் நாரதர்.

“சாமி , நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா? சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க. “ என்று மெதுவாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து பேசியது பலா, “சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு.
ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும் பொழுது போகும் “ நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது. “நான் போய்ட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் நாரதர்.
“எங்கே போறாரு “ என்று ஆவலுடன் கேட்டது வாழை. பலாவோ , “வேடிக்கை பாருங்க “ என்று மட்டும் கூறியது.
போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார். “ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட
எட்டிப் பார்க்க முடியாது “ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

“என்ன நடந்தது” என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கணி. “ வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான். கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்ட பேரு வரவச்சாரில்லே . இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்” பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது. மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன. “பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு.

நாம ஒத்துமையா இருந்தா போதும் “என்று மாங்கனி கூறியது. மாங்கனியின் பேச்சு இனித்தது.


நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளையின் "தமிழ் மரபு விக்கி" 
http://www.heritagewiki.org/index.php/சீதாலட்சுமி_-_மரத்தடியில்_முக்கனிகள்


About the Author

சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர்.



தேமொழி

unread,
Feb 11, 2016, 9:38:57 PM2/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அரைவேக்காட்டு ஆத்திகன் - ஒரு பெரிய கதை ! 

-- கோவி. கண்ணன்.

ஒரு ஊரில் பழுத்த ஆன்மிகவாதி என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த பக்தன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் விஷ்ணு பூஜை செய்த பிறகே உணவு எடுப்பது வழக்கம். ஓரளவு தானம் செய்யும் பழக்கம் உள்ளவன். கிருஷ்ணா இராமா என்று சொல்லிவிட்டு உதவி கேட்டால் உடனே இயன்றதைச் செய்துவிடுவானாம். 

ஒருநாள் 75 வயது மதிக்கத் தக்க கிழவர் நடந்து வந்தவர் இந்த ஆன்மிக வாதியின் வீட்டின் முன் பசி மயக்கத்தால் விழுந்துவிட்டாராம். உடனடியாக பதறிய அந்த ஆன்மிகவாதி, அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து விட்டு, 

"பகவானே இந்த முதியவருக்கு உதவி செய்ய எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, பெரியவரே பாருங்கள், கடவுள் இருக்கிறார், இல்லை என்றால் நீங்கள் என்வீட்டு வாசலில் விழுந்து இருக்கமாட்டீர்கள், உடனடியாக உங்களுக்கு உதவியும் கிடைத்திருக்காது" என்றானாம் 

இதைக் கேட்டப் பெரியவர் திடுக்கிட்டார், காரணம் அவர் ஒரு நாத்திகர். 

"ஐயா நான் நாத்திகன், நீங்கள் ஒரு மனிதனாக என்னை மதிப்பதாக இருந்தால் நீங்கள் தரும் உணவை ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் கொள்கைக்கு எதிரானவன், எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது" என்றாராம் 

இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட ஆன்மிகவாதி, மேலே கைகூப்பி 

"நான் ஒரு நாத்திக மூடனுக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, உன்னை நிந்திப்பவருக்கு உணவு அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்தப் பெரியவரை நோக்கி, 

கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக 

"உன்னைப் போன்ற நாத்திக மடையர்களுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்கு உதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்குப் பாவம் நீங்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட 

பெரியவர் வசைகளால் குறுக்கிப் போய்......மௌனமாக வெளி ஏறிவிட்டாராம். 

இன்னும் கோவம் தீராத, அந்த ஆன்மிகவாதி புலம்ப ஆரம்பித்து 

"கடவுளே இது என்ன சோதனை, ஒரு நாத்திகனுக்கு உணவு அளித்துத் தவறு செய்ய இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் ஒளி வெள்ளம். 

அந்த ஆத்திகனுக்கு முன்னால் பகவான் கிருஷ்ணர் தோன்றி, 

"முட்டாளே ! தினமும் என்னை நிந்தித்தாலும் அந்த முதியவனுக்கு 75 வயது வரை எவர் மூலமாவது தொடர்ந்து உணவு அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாகச் சென்ற போது மயங்கி விழுந்த காரணத்தினால் கிழவனைப் பட்டினி போட்டுவிட்டாயே, கிழவனுக்கான இன்றைய உணவு உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் "  என்றாராம். 

பேச்சே எழாமல் தன் தவற்றை உணர்ந்த ஆத்திகன் கண் முன்னே நிற்கும் கடவுளைப் பார்க்கக் கூட வெட்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்துத் தலைகுனிந்தானாம். 

குறிப்பு: இந்தக் கதை ஜக்கிவாசுதேவ் அவர்களின் நூலில் இருந்து படித்தது, பேச்சுரையில் சிறிது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு ஆன்மிக அரும்பெரும் வியாதி, என்கிற நினைப்பில் நாத்திகம் குறித்து தூற்றுவோர்க்கு அர்ப்பணமாக்குகிறேன். 

உடுக்க உடையும், படுக்க இடமும், உழைக்காத செல்வமும், அகதி / தாழ்த்தப்பட்டவன் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் ஆன்மிகம் பேசலாம். பகவான் புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தான் இந்துவா ?



About the Author:

கோவி. கண்ணன்:  என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்


தேமொழி

unread,
Feb 13, 2016, 11:06:27 PM2/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அணையா நெருப்பு!

--கமல்ஹாசன்


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’ நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.

‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.

விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன். காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல். என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல். என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு. என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது'.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின. அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.






விகடனில் வெளியான தேதி:   மே 28, 2006 

பகிர்வுக்கு நன்றி: http://paarima.blogspot.com/2006/05/blog-post_114847700826610698.html




About the Author:

தேவையா?


தேமொழி

unread,
Feb 20, 2016, 2:50:41 AM2/20/16
to வல்லமை
__________________________________________________________________________________________



Reply all
Reply to author
Forward
0 new messages