--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
யார் அந்தக் கதாசிரியர்? ? அல்லது ரியை?
2014-11-08 13:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
நானும் நினைச்சேன் ஷைலாக்காதான்னு!,
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
பார்வதி இராமச்சந்திரன்
ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன், அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் பெட்டி அது.
‘நம் குடும்பத்தில் ஒருவராக இருப்பவரின் வியாபாரத்தை முடக்குவதா?’ என்பது போன்ற வாசகங்களுடன், வாக்குப் பெட்டிக்கு அருகில் இருந்த பேனர்கள் என் கருத்தைக் கவர்ந்தது.
அருகிலிருந்த என் மகள், சிரித்தவாறு, ‘ஒரு கடை வச்சிருக்கிறவர் எப்படி நம் குடும்பத்தில ஒருத்தர் மாதிரி ஆக முடியும்?, காசு கொடுத்து பொருள் வாங்குறோம், அவ்வளவு தானே?’ என்றாள். அவள் கையை அழுத்தியவாறு சொன்னேன்.
‘உனக்குப் புரியாதும்மா!!!!’
அவள் சிறுமி, ஊர் விட்டு ஊர் மாறும் வேலையுடைய என் கணவருடன், நிரந்தரமாக, ஓரிரண்டு வருடத்திற்கு மேல் ஒரு ஊரிலும் இருந்ததில்லை. ஆகையால், அவளுக்கு அந்த வாசகத்தின் மகத்துவம் புரியவில்லை என நினைத்துக் கொண்டேன்.
கடையிலேயே ஒரு வாக்குச் சீட்டை வாங்கி, வாக்களிக்கையில், என் மனம், கணபதி மாமாவை நினைத்துக் கொண்டது. முகமெல்லாம் சிரிப்பாக, எப்போது பார்த்தாலும் ‘என்னா பாப்பா?’ என்று அன்போடு அரவணைக்கிற, எப்போது கடைப்பக்கம் போனாலும் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் தருகிற அந்த முகம், எங்கள் குடும்பத்தோடு மட்டுமல்லாமல், ஊரில் எல்லோருடனும் வைத்திருந்த நல்லுறவு என ஒவ்வொன்றாக நினைவு வந்தது. அவர் கதையை பாதியிலிருந்து மட்டுமே நான் அறிவேன். என் பாட்டி, சித்திப் பாட்டி, மாமா, அப்பா என உறவுகள் சொல்லிக் கேட்டதே நிறைய.
முதன் முதலில் மாமா எங்கள் வீட்டுக்கு வந்ததை ஒரு ஆச்சரியம் போல் சொல்வாள் பாட்டி.
‘ஒரு நா வாசல்ல, ஒரு நடுவயசு மனுஷரும் சின்ன பையனும் நின்னா. ஊருக்குப் புதுசுன்னு பாத்த ஒடனே பளிச்சுன்னு தெரிஞ்சது. உள்ள வரலாமான்னுட்டு யோஜனை பண்ணிண்டு நின்னார் பாவம். ஒன் தாத்தா பாத்துட்டு, ‘வாங்கோ உள்ள’ன்னதும் அப்படி ஒரு ஆச்சரியம் அவர் மொகத்துல.
‘வெளியூர்லயிருந்து பொழைக்க வந்துருக்கோம், சின்னதா ஒரு மளிகை வக்கலாம்னு. நீங்க பெரியவங்க ஆதரிக்கணுன்னு’ கேட்டுண்டார். தாத்தா ஒடனே சரின்னுட்டார். பக்கத்துல இருந்த பையனப் பாத்து, ‘ஒம் பேரென்ன?’ன்னார். ‘கணபதி’ன்னு கணீர்னு வந்தது பதில். ‘படிக்கறியா’ன்னார்.’
அந்தக் கேள்விக்கு பதில் வரவில்லையாம். காரணம் கொஞ்சம் நெருடலானது. கணபதி மாமாவின் கால் விரல்கள் வித்தியாசமாக இருக்கும். வலக்காலில் இரண்டு விரல்கள் இருக்காது. கூடப்படிக்கும் பையன்களின் கேலிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டிருக்கிறார்.
தாத்தா, உடனே அறிவுரை கூறியதோடல்லாமல், அப்போது சின்ன பையனாயிருந்த மாமாவை அழைத்து ‘வெங்கி, நாளைக்கு இந்தப் பையனையும் ஒன்னோட அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேத்துடு, செல்லத்துரை வாத்தியார்ட்ட நான் சொன்னேன்னு சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார். பூஜையறையிலிருந்து பழங்களை எடுத்து, கணபதி மாமாவின் இருகரங்களிலும் கொடுத்திருக்கிறார் பாட்டி.
‘மொகத்துல சிரிப்பப் பாக்கணுமே, பொன்னாட்டம் வாங்கிண்டுது கொழந்தை ‘!!.
அப்போது துவங்கியது. கடையிலும் அப்பாவுக்கு உதவியாக இருந்தாராம் கணபதி மாமா. சிட்டை(லிஸ்ட்) படி மளிகைப் பொருட்களை அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது. சின்ன பற்று வரவு புத்தகத்தில் கையெழுத்து வாங்க வருவது என்று எல்லா வேலைகளும் செய்வார். அதனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக எங்கள் இல்லத்தில் ஒரு மகன் போலவே ஆனார். வெங்கி மாமாவுக்கு ‘கணா’, என் அப்பா, சித்தப்பாவுக்கு ‘அண்ணே’, என் தாத்தாவுக்கு ‘கணபதி’, என் சின்னத்தாத்தா(தாத்தாவின் தம்பி) மட்டும் மிக நெருக்கமாக ‘பிள்ளைவாள்’ என்பார். அதென்னமோ மாமாவின் மேல் அலாதி பாசம் அவருக்கு. வயதுக்கு மீறிய தோழமை இருவரின் நடுவேயும். இருவருக்கும் பயணம் செய்வதில் அடக்கமாட்டாத ஆசை. ஏதாவது குடும்ப விசேஷங்கள், திருவிழாக்களுக்காக கணபதி மாமா வெளியூர் செல்ல வேண்டி வந்தால், சின்னத் தாத்தாவும் புறப்பட்டு விடுவார். இருவரும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்து, அருகில் இருக்கும் எல்லா ஊர்களையும் பார்த்து விட்டுத் திரும்புவது வழக்கம். அதைப் போலவே கணபதி மாமாவும் செய்வார்.
அதனால் இருவரில் ஒருவர் வெளியூர் சென்றுவிட்டு, ஊர் திரும்பத் தாமதமானால், பரஸ்பரம் விசாரித்துக் கொண்டு அமைதி காண்பது இருவர் வீட்டு வழக்கமும்.
கணபதி மாமா, தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படிப்பை பள்ளியிறுதியோடு நிறுத்திக் கொண்டார். உடனே திருமணமும் ஆயிற்று. நிறையக் குழந்தைகள் கணபதி மாமாவுக்கு.
கணபதி மாமாவைப் போலவே அவர் மனைவி மீனாட்சி அக்காவும். கலகல என்று இருப்பார். இருக்கும் இடமே திருவிழாப்போல இருக்கும்.
ஊரில் யார் வீட்டுக்கு யார் வந்தாலும் கணபதி மாமாவுக்குத் தெரிந்துவிடும்.
கடைக்கு வருகிறவர்களிடம், காசு வாங்கினோம், பொருளைக் கொடுத்தோம் என்றிருப்பது அவரால் முடியாது.
‘யாரு, அக்காவா, என்னா சேமியா வேணுமா?, தாரேன். பாயாசம் வைக்கிறதுக்கா இல்ல உப்புமாவா?. பாயாசமா? அப்ப சீனி வேணும்ல? இருக்கா?. டே, அந்த சேமியாவ எடு!!, ஆமாக்கா, என்ன விசேசமா?!!, ஆரு வந்திருக்காங்க, நாத்தனாரா?, அதான் பாயாசமா!!, என்னா சும்மாத்தான் ஊரு பாக்கவா இல்ல வேற விசேசம் ஏதாச்சும் உண்டா?, என்னா பொண்ணு கேக்க வந்திருக்காகளா?, என்னா மெல்ல சொல்லுறீக, சட்டுப்புட்டுன்னு பண்ணிறலாம்ல!! வயசும் ஆச்சுல்ல பாப்பாவுக்கு, மாமா என்னா சொல்லுறாரு?,’ என்று கோர்வையாக விசாரிப்பார்.
அன்று சாயங்காலமோ, மறுநாளோ கடைக்கு வந்த அக்காவின் வீட்டுக்காரரைப் பார்க்க நேர்ந்தால், வாசாலகமாக, ‘வாங்க மாமா, என்னா கடப்பக்கமே ரொம்ப நாளா காணும்?’
என்று துவங்கி, ஒரு சுற்று பேசி விட்டு, ‘ஆமா, என்னா எப்ப பாப்பா கல்யாணத்துக்கு சமையல் சாமா(ன்) சிட்டை தரப்போறீக?, நேத்தென்னாமோ, ஒறமொறை வந்திருந்தாக போல’ என்று விஷயத்துக்கு வருவார்.
மாப்பிள்ளை பிடித்தம் இல்லை என்றால் தலையிடமாட்டார். மாறாக, பண விஷயத்துக்காக தவங்குகிறது என்றால் ‘கிடுகிடுவென’ உதவியில் இறங்குவார்.
‘நீங்க கவலப்படாதீங்க, நக நட்டுக்கு, துணிமணிக்கெல்லாம் எவ்வளவு தேவப்படுது?, மண்டபச்செலவு பத்தி பெரச்சனையில்ல, “அங்கயற்கண்ணி” ல சொல்லிரலாம். சமயல் பாத்திரத்துலருந்து, கூட்டிப் பெருக்குற ஆள் வரக்கும் இருக்கு, பாத்துக்கிரலாம். நம்ம ஒறமொறைதான் மண்டபம் வச்சிருக்கிறவரு. நாஞ்சொன்னா செரிம்பாரு. சமயலுக்கு ஆள மட்டும் பாருங்க, சாமா(ன்) செட்டு அத்தனையும், மஞ்சப்பொடிலருந்து, வெத்தல பாக்கு வரக்கும் நாங்கொணாந்து போடுறேன், பெறகு மொள்ளமா கொடுங்க, இப்ப என்னா?, வேற என்னா செலவு?’ என்று அலச ஆரம்பிப்பார். செட்டியார் கடையில், தவணை முறைக் கடனுக்கு ஏற்பாடு செய்வதிலிருந்து எல்லாவற்றிற்கும் உதவிக்கு நிற்பார். கண்டிப்பாய், ஏதேனும் ஒரு சிறிய செலவேனும் தன் பொறுப்பில் ஏற்பார். அநேகமாக, அது பூவாகத்தானிருக்கும். கல்யாணத்திற்கு வேண்டிய பூச்சரம், மாலைகள், உதிரிப்பூ எல்லாவற்றையும் தன் செலவில் வாங்கித் தருவார். திருமணம் முடிந்து, மணமக்களை வண்டி ஏற்றி அனுப்புவது வரை அந்த வீட்டு மனுஷனாக உடனிருப்பார்.
ஒரு முறை பாட்டி சொன்னாள் என்று ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கப் போனது நன்றாக நினைவிருக்கிறது. சொன்னதும் உடனே எடுத்துக் கொடுக்கவில்லை.
‘என்னா பாப்பா வந்திருக்கீக, அண்ணன் இல்லையா, வள்ளி எங்க போனா?’
‘அண்ணா மாமா வீட்டுக்குப் போயிருக்கார். வள்ளி மார்க்கட்டுக்கு!!’
‘அதானா, செரி இந்தாங்க ஆரஞ்சு மிட்டாயி, எப்பவாச்சும் தானே ஹார்லிக்ஸூ வாங்குறது நம்ம வீட்டுல, ஆமா, ஆராச்சும் விருந்து வந்திருக்காங்களா?’
‘இல்லல்ல… பக்கத்தாத்து சுந்தரம் மாமா இல்ல, அவர ஆஸ்பத்திரில சேத்துருக்கா… தாத்தா பாக்கப் போறா.. அங்க குடுத்து விடத்தான்’
‘அப்டியா, செரி நீங்க போயி பாட்டிக்கிட்ட நா(ன்) கொண்டாரேன்னு சொல்லுங்க!’
நேரே வீட்டுக்கு வந்து, என்ன ஏது என்று விசாரிப்பதோடு நிற்க மாட்டார். சுந்தரம் மாமாவின் வீட்டுக்குப் போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டுச் செய்வதோடு, சுந்தரம் மாமா ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை, எப்போது டவுன் பக்கம் போனாலும், தன் சைக்கிளில், அவர் வீட்டிலிருந்து, சாப்பாடு மற்ற சாமான்கள் எடுத்துப் போய், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் கொடுப்பார்.
தன் கல்யாணமும் அவரால் தான் நடந்தது என்பாள் அம்மா. எங்கே பிள்ளைக்கு கல்யாணமானால், மருமகள் வந்து பிரித்து விடுவாளோ என்ற காரணமற்ற பயத்தினால், அப்பாவின் கல்யாணத்தை ஏதேனும் சாக்கு சொல்லி தள்ளிப் போட்டுக்கொண்டே போனாளாம் பாட்டி. பெண் பார்க்கும் வரை வந்தால் கூட ஏதாவது காரணம் கண்டுபிடித்து ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவாளாம். தாத்தா எவ்வளவு சொல்லியும் பாட்டிக்கு உறைக்கவில்லை. அப்பா, தன் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை.
இராமநாதபுரத்தில், அம்மாவைப் பெண்பார்த்து வந்ததும், வழக்கம் போல் பாட்டி காரணம் தேட ஆரம்பிக்க, அப்போது, சாமான் கொண்டு வந்து கொடுக்க வந்த கணபதி மாமா,
‘என்னங்கப்பா, பொண்ணு பாக்கப் போனீங்கல்ல, நல்ல விசயம்தான?’ என்று தாத்தாவிடம் ஆரம்பித்தாராம்.,
‘இல்லடா கணபதி, பொண்ணு கொஞ்சம் குள்ளமாட்டமா இருக்கு!! ..பாட்டி.
‘அதனால என்னா… ரவியும் ஒயரங் கம்மிதான.. செரியா இருக்கும்ல’.
பாட்டி பதில் பேசாமல் இருக்க, ‘இந்தா பாருங்க அம்மா, ரவி வயசுல, எனக்கு கலா சடங்காயிருச்சு… இன்னம் கலியாணமுடிக்காம இருந்தீங்கன்னா, அது பிள்ளைகள வளத்தி நிமுத்த வயசு வேணாமா… இன்னம் சின்னப் புள்ளையா…. ஒங்களுக்கு பேரம்பேத்தி வேணுங்குற ஆச இருக்குதா இல்லையா?, என்ன மாதிரி சின்னவங்க, ஒங்ககிட்ட செரி, தப்பு எடுத்துச் சொன்னா நல்லாவா இருக்கு?.. ஏம்ப்பா… ரவிக்கு பொண்ணு புடிச்சுருக்குல்ல… அப்ப ஆக வேணுங்குறத பாக்கலாம்ல… அம்மா ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க. நீங்க ஒண்ணு பண்ணுங்க… போயி, பொண்ணு புடிச்சுருக்குன்னு ஒரு தந்தி குடுத்துருங்க…. இப்பமே நிச்சயம் பண்ணினாத்தான் செரி வரும். இல்லன்னா மார்கழி வந்துரும். வர ஞாயித்துக்கெழம முகூர்த்த நாளுன்னு பாத்ததா ஞாபகம். அத செரிபாருங்க. செரியா இருந்துச்சுன்னா, அன்னைக்கே நிச்சியம் பண்ணிரலாமான்னும் ஒரு வரி சேருங்க…. நாம் போயி, ‘அங்கயற்கண்ணி’ல ஒரு வார்த்த சொல்லிர்றேன். அங்கயே வச்சிரலாம் நிச்சியம். என்னா?’ என்று அடுக்க…
அப்பா, சின்னதாய்த் தலையசைக்க, பாட்டியின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, தாத்தா, ‘அப்படியே செய்துடுவோம், நான் உங்கூடவே வரேன். என்ன தந்தி ஆபீசுல இறக்கி விட்டுடு…’ என்று கணபதி மாமாவின் சைக்கிளில் ஏறிச் சென்று தந்தி அடித்து விட்டு வந்தாராம்.
‘அவர் மட்டும் பூனைக்கு மணி கட்டலைன்னா… அறுபதாம் கல்யாணம்தான் உங்கப்பாவுக்கு’ என்று சிரிப்பாள் அம்மா.
இது போல், கணபதி மாமா வீட்டுக் கல்யாணம் தாத்தாவால் நிச்சயம் செய்யப்பட்டதும் நடந்ததுண்டு.
கணபதி மாமா, தன் மக்கள் எல்லாரையும் உறவிலேயே மணமுடித்துக் கொடுத்து வந்தார். . கிட்டத்தட்ட எல்லா அக்கா தங்கை உறவிலேயும் கொள்வினை கொடுப்பினை உண்டு. மீனாட்சி அக்காவுக்கு, தன் ஐந்தாவது பிள்ளையை, தன் அண்ணன் மகளுக்கு மணமுடிக்க வேண்டும் என ஆசை. ஆனால், எதனாலேயோ ‘ஒன் ஒறவுல சம்மந்தம் வேணாம்’ என்று சொல்லிவிட்டார் என கண்ணைக் கசக்கிக் கொண்டு தாத்தாவிடம் வந்து நின்றார் மீனாட்சி அக்கா.
‘ஏண்டா, அவ சொல்றதும் ஞாயந்தானே!!’
‘அப்பா, அது சும்மா சொல்லுது… எத்தன பெரச்சன வந்துச்சு அவுங்களாலன்னு ஒங்களுக்கும் தெரியுந்தான…’
‘ஆமா, அதுக்கென்ன பண்றது.. அவங்கப்பா செஞ்சதுக்கு புள்ளை என்ன பண்ணுவான் சொல்லு.. நீரடிச்சு நீர் விலகாது. நாளக்கு அவ சொந்தத்துலயும் ஒருத்தர் வேணுன்னு நெனைக்கறா…’
‘அதுக்காக, இவங்கண்ணன்ட்ட நாம் போயி என்னா பேசுரது…’
‘அது ஒண்ணும் பெருசுல்லா.. சொல்லிவுட்டா அவங்களே வருவாங்க…’ என்றார் அக்கா.
‘எல்லாந் திட்டம் போட்டு வச்சாச்சா?’
‘ கணபதி… நீ கொஞ்சம் இறங்கி வா.. இத்தன நாள் ஒங்கூட சம்சாரம் பண்ணி இருக்கா.. இந்த ஒண்ணுல விட்டுக்குடுத்துடேன்..’
‘ நாளப்பின்ன, அண்ணன் வீட்டுல அத செய்யல, இத செய்யலன்னு இவளே பேசுவாப்பா..’
‘அதொண்ணுமில்ல… எங்க பொறந்தவூட்டுல யான மேல அம்பாரிகட்டி சீர் செய்வாங்க’
‘ஆத்தி!!!, அப்ப ஒன்னோட வந்த யானய முழுங்கிட்டுதா நீ இத்தத்தண்டிக்கு ஆனியா!’
இறுதியாக தாத்தாவின் வார்த்தைக்காக, சம்மந்தத்துக்கு ஒத்துக் கொண்டாராம் கணபதி மாமா.
இப்படி, ஊரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான நபராக, நல்லது கெட்டதுகளில் பங்களிப்புச் செய்து கொண்டு, ஊரே தன் குடும்பமாக வாழ்ந்தார். அவரை வேற்றாளாக நினைத்துப் பார்க்க முடியாது யாராலும். ‘உபகாரம்னா, கணபதி’ என்று பேரெடுத்திருந்தார்.
ஆயிரம் இருந்தாலும், கணபதி மாமாவுக்குத் தான் கால் விரல்கள் பற்றிக் குறையான குறை உண்டாம். தனிமையில், சின்னத் தாத்தாவிடம், நிறைய வருத்தப்பட்டிருக்கிறாராம்.
‘விடுடா.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணமிருக்கும்.. இதனால, ஒனக்கு என்ன கொறைஞ்சு போச்சு?’ என்பாராம் சின்னத் தாத்தா.
ஆனால், காரணம் எவ்வளவு கொடூரமானது என்பதை விதியைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.
ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு இரவு திரும்ப வேண்டிய கணபதி மாமா, மறுநாள் ஆகியும் வராததால், மீனாட்சி அக்கா, எங்கள் வீட்டுக்கு விசாரிக்க வந்தார்.
‘சித்தியம்மா, சித்தப்பா ஊருக்கா?’.
‘இல்லடி..இங்கதான் ஏன்?’.
‘இல்ல, அவரு திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வரக்காணும், சித்தப்பா கூட ஊரப்பாக்கப் போயிட்டாராக்கும்னு வந்தேன்’.
சித்திப்பாட்டி திகைத்தாள். இப்படி நடந்ததே இல்லை. ‘வந்துருவான்டி, வேற ஏதாவது வேலையாயிருக்கும்’ சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சின்னத்தாத்தா வந்துவிட்டார்.
விஷயம் தெரிந்து அவரும் யோசித்தார். ‘சரி, நீ போயிட்டு வா, மீனாட்சி, வந்துடுவான்னே நினைக்கிறேன். இல்லன்னா நா சாயரட்சை கிளம்பிப் போய் விசாரிக்கிறேன்.
அக்கா, போனதும், ‘பருவதம், எனக்கு என்னமோ பண்றது. ஒண்ணும் மனசுக்கு சரியாப்படலை. நான் சரவணப் பொய்கைப் பக்கம் போய்ட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு கலங்கிய முகத்துடன் தெருவில் இறங்கினார்.
அதே நேரத்தில், ஒரு தெரு நாய், வீதியின் கோடியில் இருந்த பதினாறு கால் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த தெருக்காரர்களின் முன்பாக, இரைக்க, இரைக்க ஓடிவந்து ஒரு பொருளைக் கொண்டு போட்டு விட்டு ஓடியது. அது ஒரு மனிதக் கால். வலது கால். வித்தியாசமான விரல் அமைப்புகளோடு இருந்த அதில் இரு விரல்கள் இல்லை.
கொஞ்ச நேரத்தில் தெருவே அலறியது. தாத்தா உட்பட தெருவாசிகளுக்குத் தகவல் பறந்தது. அப்பாவும், சித்தப்பாவும், மாமாவும், கண்ணீருடன் தெருவில் பதறி ஓடியது நினைவிருக்கிறது. நாய் சென்ற வழியை உத்தேசமாகத் தொடர்ந்து கொண்டு, ஒரு ஊகத்தில் ஊர் எல்லையில் இருந்த இரயில்வே லைனை அடைந்த போது அத்தனை பேருக்கும் ஒரு கணம் இதயம் நின்று தான் விட்டது. ஊருக்குப் போய்த் திரும்பிய கணபதி மாமா, இரவில், ஆளில்லா இரயில்வே லைனைக் கடக்க முற்பட்ட போது, இரயில் வந்து தூக்கியடித்திருக்கிறது. அவர் உடலின் முன் பாகம் சிதையாமல் இரயில்வே லைனுக்குப் பக்கத்தில் கிடந்ததைத் தூக்கி வந்தார்கள்.
பாட்டி, அம்மா, சித்தி எல்லாரும் கணபதி மாமா வீட்டுக்கு ஓடினார்கள். ஊரே கதறி அழுதது. சின்னத் தாத்தாவின் துயரம் சொல்லில் அடங்குவதாயில்லை. மீனாட்சி அக்கா..?, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர் எழவே இரண்டு நாட்கள் ஆயிற்று. தாத்தா, கணபதி மாமாவின் மூத்த மகன் ராமுவின் பக்கத்திலேயே இருந்து எல்லாம் செய்ய வைத்தார்.
அதன் பின், மீனாட்சி அக்கா, தன்னை ஆச்சரியப்படும் விதத்தில் தேற்றிக் கொண்டு சோகத்தில் இருந்து மீண்டது, கடைப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது, திருமணமாகாமல் இருந்த ஒரு மகள் மற்றும் இரு மகன்களுக்கு ஊர்க்காரர்கள் அனைவரும் முன்னிற்க, திருமணம் செய்து வைத்தது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வீட்டில், ஊரில் கணபதி மாமாவின் இடத்தை நிரப்பியது என எல்லாமுமே மிகச் சாதாரண வாக்கியங்களால் சொல்லிவிடுகிற விஷயமில்லை. ஒவ்வொன்றும் சரித்திரம்.
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, அம்மா சொன்னாள் என்று கணபதி மாமாவின் கடையில் வெல்லம் வாங்கச் சென்றேன். அது இப்போது பல்பொருள் அங்காடியாகியிருந்தது. ராமு அண்ணா கல்லாவில் இருந்தார். நான் போனதும், நிமிர்ந்து பார்த்தவர், ‘ஆத்தி, ஆரு ரவி சித்தப்பா மகளா, என்னா ஊர மறந்து போயிட்டீக, வரப்போக இருக்க வேணாமா வீட்டுப் பொண்ணுக?’ என்று அன்பாகவும் உரிமையாகவும் விசாரித்தவர், புறப்படும் போது, வெல்லத்தோடு இரு பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் சேர்த்துக் கொடுத்தார்.
‘எதுக்குண்ணே?’ என்ற போது, ‘வச்சுக்க பாப்பா, வீட்டுல புள்ளைங்களுக்குக் கொடு, மறுக்கா எப்ப வரியோ? வாங்கிக்க!!!’ என்ற போது, என் கையில் இருந்த பிஸ்கட், க்ஷண நேரத்திற்கு ஆரஞ்சு மிட்டாயாகத் தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கையில், கடைச் சுவரில், சீரியல் செட்டுக்களால் சட்டமிடப்பட்ட படங்களில் கணபதி மாமாவும் மீனாட்சி அக்காவும் சிரித்தார்கள்.
ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது.
மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”
“இல்லே, ஹம்சா. நாளைக்குக் கோயில்ல ஆடப்போறியே..,” மீதியைச் சொல்லாமல் விட்டாள். “ஆமா, எந்தக் கோயில்லேன்னு சொன்னே?”“எங்க கிளாஸ் நடக்கிற கோயில்லதான்!”
“காமாட்சி அம்மன் கோயில்!” என்று சொல்லிக்கொண்டாள் தாய், தனக்குள்.
ஹம்சா மேலே எதுவும் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. ஒரு பாட்டை மனதிற்குள் பாடியபடி அங்கிருந்து நகர்ந்தாள். கை, தன்னையுமறியாமல், அபிநயம் பிடித்தது.
அப்போதைக்கு அம்மாவிடமிருந்து தப்பித்துப்போனால் போதும் என்றிருந்தது அவளுக்கு. மாடியிலிருந்த தனது அறையை நோக்கிப்போனாள்.
அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் மேலெழுந்தது.
`தீட்டு’என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களை மட்டமாகவே நடத்தப்போகிறார்கள்?
ஆதிமனிதன் குகையில் வசித்த காலத்தில், காட்டு விலங்குகள் ரத்த வாடையை முகர்ந்து குகைக்குள் வந்துவிடுமே என்று பயந்து, அக்காலங்களில் பெண்களைத் தனியேவிலக்கிவைத்திருக்கலாம். இப்போது என்ன வந்தது!
பள்ளிக்கோ, அல்லது வேலைக்கோ வெளியே போகும் பெண்கள் வீட்டில் தனித்து விலக்கி வைக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், கோயில்களில் மட்டும் பழையவிதிமுறைகளை மாற்றாமல், கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
சில கோயில்களில், `இவர்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது!’ என்று ஒரு பெரிய பட்டியல் தயாரித்து, வெளியிலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்! மாத விலக்கு வந்த பெண்களும்,பெருநோய் வந்தவர்களும் ஒன்றா? கையில்லாத ரவிக்கை அணிபவர்களுக்கு மட்டும் பக்தி இருக்கக்கூடாதா?
அவளுடைய ஆத்திரத்திற்கு முட்டுக்கட்டை போடவேபோல் தொலைபேசி அழைத்தது.
ஹம்சாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது. யாராவது ஒரு மாணவி, `டீச்சர்! இன்னிக்கு பரத்நாட்யம் க்ளாஸ் இருக்கா?’ என்று கேட்பாள்! முதலில் வரவே யோசித்தவர்களுக்கு இப்போதுதான்எத்தனை ஆர்வம்! நினைத்துப்பார்க்கவே பெருமையாக இருந்தது அவளுக்கு.
பரதநாட்டியம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே எட்டக்கூடிய ஓர் உயரம் என்ற எழுதப்படாத விதிமுறையை எதிர்த்து, ஹம்சா அந்த வகுப்பை ஆரம்பித்திருந்தாள்.
பெரிதாக இடம் எடுத்து நடத்த வழில்லை. குடிசைகளுக்குப் பதிலாக்க கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் நிறைந்த அவ்விடத்தில் அவர்களுக்கென இருந்த ஒரு சிறு கோயில் பிரகாரம்தான்நாட்டிய வகுப்பு -- பூஜை இல்லாத நேரங்களில்.
அக்கம்பக்கத்திலிருந்த குடும்பங்களிலிருந்து மாணவிகள் வந்தார்கள் -- இலவசம் என்பதைக் கேள்விப்பட்டு. ஆனால், எதிலும் அவர்களுக்கு துடிப்போ, புதியதாக ஒன்றைக் கற்கும் ஆர்வமோஇருக்கவில்லை. எப்போதும் வாயில் விரல். நிமிர்ந்து நிற்கக்கூட தெம்போ, உத்வேகமோ இல்லாதவர்களாக இருந்தார்கள். எட்டு வயதிலேயே கூனலா! இவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று அயர்ந்தே போனாள் ஹம்சா.
எப்போதோ அம்மா சொன்ன ஒன்று நினைவுக்கு வந்தது: `சின்னப்பிள்ளைங்களுக்குத் தாகமா இருந்தாலோ, பசியா இருந்தாலோ சொல்லத் தெரியாது. வாயிலே விரல் போட்டுப்பாங்க!’
தன்னுடைய தோழிகள் சிலருடன் கலந்தாலோசித்து, அவர்களுக்குச் சாப்பிட எதையாவது கொடுக்க ஏற்பாடு பண்ணினாள்.
`நாட்டியம் கற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ, வயிறாரச் சாப்பிட்டுவிட்டாவது போகட்டுமே!’ தான் பசியே அறியாது வளர்ந்திருந்ததில் சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.
வெளியில் எங்கும் கிடைக்காத தோழமையும், சிரிப்பும், அறிவும் அங்கு கிடைப்பதை உணர்ந்தவர்களுக்குச் சில மாதங்களிலேயே உணவில் ஆர்வம் குறைந்துபோயிற்று.
ஆரம்பத்தில் எதையும், `எனக்கு? எனக்கு?’ என்று பிடுங்கியவர்கள்கூட, `நீங்களும் சாப்பிடுங்க, டீச்சர்,’ என்று உபசாரம் செய்யக் கற்றுக்கொண்டார்கள்.
சில நாட்கள், ஓரிரு பெண்கள் வகுப்புக்கு வராததன் காரணத்தை (`அக்கா சுத்தமில்லே!’) யார்மூலமாவது சொல்லி அனுப்பியபோதுதான் அந்த யோசனை எழுந்தது ஹம்சாவுக்கு.
ஒங்க ஒடம்பைப்பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். நீங்க தீட்டுன்னு நினைக்கிறது தப்பான உணவாலேயோ, ஆரோக்கியக் குறைவாலேயோ கிடையாது”.
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்பதைத்தான் உணர்த்துகிறது மாதாந்திர உதிரப்போக்கு. இயற்கையான ஒரு செயல்! அதற்கு ஆயிரம் தப்பு கண்டுபிடித்து.., என்றெல்லாம் பெண்கள் மருத்துவரான சுந்தரவல்லி அந்த வகுப்புக்கு வந்து விளக்கினாள்.
நம்ப உடம்பை, உயிரை, கடவுள் குடுத்ததுன்னு ஏத்துக்கறோம். இல்லியா? அவரோட செயலே தப்புங்கிறமாதிரி, இயற்கையா நடக்கிற இதுக்குக்காக பயந்துக்கிட்டு, கோயிலுக்கு வராமஇருந்துடாதீங்க. எவ்வளவு கஷடப்பட்டு ஒங்களுக்கு டான்ஸ் கத்துக்குடுக்க வராங்க டீச்சர், தெரியுமா?” என்று சந்தடி சாக்கில், ஹம்சா படும்பாட்டையும் குறிப்பிட்டாள் சுந்தரவல்லி. தன்தோழியைப்பார்த்துக் கண்ண்டித்தாள்.
அப்பெண்களின் முகம் தெளிந்தது. தமக்காகப் பாடுபடும் இரு பெண்மணிகளையும் பார்த்து நட்புடன் சிரித்தார்கள்.
ஏன் இப்படி கூனிக்கிட்டு நடக்கறீங்க?” உரிமையுடன் அதட்டினாள் சுந்தரவல்லி.
ஒரு துணிச்சலான பெண் தங்கள் தர்மசங்கடமான நிலைமையை வெளிப்படுத்தினாள்: “எல்லாரும் எங்க ஒடம்பையே மொறைச்சுப் பாக்கறாங்க, டாக்டர்! வெக்கமா இருக்கு!” குரல்அழுகையாக வந்தது.
பிற மாணவிகளும் தலையை ஆட்டினார்கள். உதடுகள் பிதுங்கின
அலட்சியமாக் கையை வீசினாள், அந்த சிறப்பு விருந்தினர். “அதுக்கென்ன பண்றது? சாமி நமக்கு அப்படி அழகான ஒடம்பை நமக்குக் குடுத்திருக்கு!” என்று புன்சிரிப்புடன் கூறியவள், தன்இருகரங்களால் மூன்று வளைவுகளைக் காட்டினாள்.
எல்லாரும் நிம்மதியும், வெட்கமுமாகச் சிரிக்க, ஒரு பெண், “இரண்டுதானே, டாக்டர்?” என்று சிரிப்புடன் வினவ, டாக்டர் யோசிப்பதைப்போல் பாவனை காட்டினாள். “நீ சொல்றது சரி. இரண்டுவளைவுகள்தான்!”
சிரிப்பு பலத்தது. இப்போது எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.
சில சமயம் ஆட முடியலே. வலிக்குது,” என்று ஒரு பெண் சுட்டினாள்.
ஒங்கம்மாவை கருஞ்சீரகத்தை வறுத்துப் பொடி பண்ணி, மோரிலே கலக்கிக் குடுக்கச் சொல்லு. தினமும் குடிச்சா, கருப்பை வலுவாகும்”.
சொல்லக்கூடாத அந்த வார்த்தையைக் கேட்டதும் எல்லாரும் வெட்கத்துடன் சிரித்தார்கள்.
அறிவுரை தொடர்ந்தது: “ரொம்ப வலிச்சா, வெந்நீர் ஒத்தடம் குடுக்கச்சொல்லு. இந்தமாதிரி சமயங்களிலே சுருண்டு படுக்காம, எக்சர்சைஸ் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்!”
அதன்பின், வீட்டில் பாட்டியோ, அம்மாவோ ஆட்சேபித்ததையும் மீறிக்கொண்டு, எந்த நாட்களிலும் கோயிலுக்கு வந்து நாட்டியம் கற்றுக்கொள்ளத் துணிந்தார்கள் அப்பெண்கள்.
நான்கு பேர் பார்க்க நாட்டியமாடும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹம்சா, சரஸ்வதி பூஜையன்று (அன்று தான்டாக்டர் சுந்தரவல்லியின் உபயம்)அவர்கள் ஆட ஏற்பாடு செய்திருந்தாள். மாணவிகளுடன், அவளும் ஆடவேண்டும் என்று கோயில் குருக்கள் விண்ணப்பித்திருந்தார்.
இப்போது அம்மா அவள் மனத்தைக் கலைத்துவிட்டாள்!
தொலைபேசியில் ரஞ்சனி பேசினாள், தயங்கித் தயங்கி. “டீச்சர்! எனக்கு இப்போ பீரியட். நான் ஆடலாமா?”
“தாராளமா! ஆனா, யார்கிட்டேயும் இதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம், என்ன?”
ஒவ்வொரு வகுப்புக்கும் தவறாது வந்து, பெருமுயற்சியுடன் கற்ற கலை! இப்போது பல பேர் பார்க்க தன் திறமையை வெளிப்படுத்த ஒரு தருணம் வந்திருக்கிறது. அது நழுவி விடுமோஎன்ற கவலை இனி இல்லை!
“சரி, டீச்சர்!” என்ற சிறுமியின் குரலில் அலாதி நிம்மதி. “ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன், டீச்சர் -- டீச்சர் என்ன சொல்வீங்களோன்னு!”
ஹம்சா சிரித்துக்கொண்டாள். “குளிச்சுட்டு வந்தா போதும். காமாட்சி புரிஞ்சுக்குவா!”
“யாரு, டீச்சர்?”
“காமாட்சி அம்மன்!”
“ஓ!” அப்பெண் புரிந்தவளாகச் சிரித்தாள்.
“தைரியமா ஆடு. அதான் முக்கியம். ஏதாவது மாத்தி, தப்பா ஆடினாலும் பரவாயில்லே. அடிச்சு விட்டுடணும். என்னைத் தவிர, யாருக்கும் அது தெரியப்போறதில்லே!” என்று, பல முறை வகுப்பில் சொன்னதையே திரும்பச் சொன்னாள் ஹம்சா. “காமாட்சி அம்மனும் நம்பளைமாதிரி ஒரு பொண்ணுதானே! கோவிச்சுக்க மாட்டா!” தனக்கே தைரியம்அளித்துக்கொள்வதைப்போல் இருந்தது .
கணினியில் பதிவு செய்திருந்த பாட்டை ஒலிக்கவிட்டாள்.
முகத்தில் புன்னகை படர, புடவைத்தலைப்பை இழுத்துச் சொருகிக்கொண்டாள். தரையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, பயிற்சியில் இறங்கினாள் ஹம்சா. உடல் லேசானதுபோல் இருந்தது.
[ திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின் அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!]
“கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
அறிவா ரறிவா ரறியா ரறியார்
ஒருகாம் பிருதலையும் பூ”
பெருந்தொகை பாட்டு எண் 1800
அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
(கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று இறங்குக்காற் பாடியது )
சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!
அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.
********
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!
அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.
“புஷ்பவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.
சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’
“சீ” * * * *
திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”
தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும் சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப் பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!
அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?
ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டுகயிற்றையும் சுற்றிக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65668
நரசய்யா has written 3 stories on this site.
இலக்கியப் பயணத்தில் அரை சதம் (50 ஆண்டுகள்) கடந்து வந்து எழுத்துலகில் பெரும் சாதனை புரிந்து, எண்ணற்றோருக்கு வழிகாட்டியாகவும் இருப்பவர் திரு. நரசய்யா அவர்கள். எளிமையும், தன்னடக்கமும் தன்னகத்தேக் கொண்ட இவரது அனுபவம் வாய்ந்த எழுத்துகளும், தெளிந்த ஆய்வுக் கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும், வருங்கால எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்றால் அது மிகையாகாது. இவருடைய முதல் தமிழ் சிறுகதை, தாம் தமிழ் மொழியை முழுமையாக அறியாத காலத்தில் எழுதிய கதையே, 1964ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஆனந்த விகடன் முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று ஒன்பது கதைகள் முத்திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கப்பலில் மாலுமியாக இவர்தம் நெடிய வாழ்க்கைப் பயணம் பல சாதனைகள் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர்.