கொஞ்ச நாள் வாய்ப்பாட்டுடன் ஹார்மொனியமும் கற்றுக்கொண்டேன், ஒரு பாட்டு வாத்யாரிடம். சிறு வயதில், தந்தையின் ஏற்பாட்டில். அப்பொழுதெல்லாம் அந்த வாத்யார் ஸ்வரக் கட்டைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்து பிரமிப்பாய் இருக்கும். ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்குப் போகும் போதோ அல்லது ஒன்று விட்டு ஒன்றுக்குத் தாவும் போதோ இரண்டு ஸ்வர வீடுகளும் கூடவே வந்து பிரிவுபசாரம், வரவேற்பு விருந்துபசாரம் இரண்டையும் ஒரே சமயம் கலந்து செய்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்து வாசிப்பார். அடேயப்பா...என்று ஒரு மலைப்பு. நானும் கொஞ்சமாக அதைப் போல் முயற்சி செய்தால் அது குளிரில் நடுங்கும் கிழவியின் சொற்கள் போல் அலையலையாக வந்து கடுப்படிக்கும். அவர் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் போகப் போக கைவரும் என்பார். அந்தத் தான்சேனுக்கு நான் ஒரு மஹாராஜா.
சிறு வயதில் பிரமிக்கும் ஒன்று விழிப்பு ஏற்பட்டதும் எப்படி விரஸமாகக் காட்சியளிக்கிறது! அவர் வாசித்த முறை எப்படியென்றால் ஸ்வரங்கள் எல்லாம் நன்றாக மொந்தைக்கள்ளைக் குடித்துவிட்டு, ‘அண்ணாச்சி....நீ தனியாவே போகக் கூடாது..ஆமா சொல்லிட்டேன்...’ என்று கட்டித் தழுவி, தடுமாறி இழைந்து நெளிந்து குலாவுவது போன்ற வேலை.
It is a mart of doping the notes.
அதுவும் ஹார்மொனியத்தில் இது போன்ற சில்லரை வேலை நன்றாகவே செய்யலாம்.
அது போல் வாய்ப்பாட்டிலும் நம்மவர்கள் ஸ்வரங்களைச் செங்கல் ஜல்லி போல் பயன்படுத்தி ஏதாவது கட்டடம் எழுப்பும் கொளுத்து வேலைதான் கற்று வைத்திருக்கிறார்களே அன்றி, தூய ஸ்வர தேவதைகளின் அழகிய உடலை, அந்தத் தேவதைகள் சப்தம் என்னும் நதியில் பிறந்த மேனிக்குக் குளிக்கும் போது மர இடுக்களிலிருந்து ஒளிந்து பார்க்கும் சாகசங்களைச் செய்து பார்ப்பதே இல்லை. எல்லாம் சமத்துப் பிள்ளைகள்! அனா ஆவன்னா அஃகன்னா வரைக்கும் பார்க்காமல் சொல்லும்.
நானும் இந்த ஸ்வர தேவதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்கள் காடுகளில் திரியும் போது, அருவிகளில் சுதந்திரமாகக் குளிக்கும் போது காணும் வாய்ப்பு கிட்டாதா என்று யோசித்ததுண்டு. ஆனால் நான் பார்க்க நேர்ந்த இசையெல்லாம் ஒரே ஸ்வரக்கட்டு கிட்டங்கியாக அங்கப்ரதக்ஷிணம் கணக்காக உருண்டனவேவொழிய நிற்கக் கூட இங்கு இசையின் கொழுந்துகளுக்கு நாம் வாய்ப்பளிப்பதில்லை என்பது போல் பட்டது.
எனக்கு என்னவோ நம்மிசைகளில் இந்த ஓவர் பக்தி உணர்ச்சி இசை உணர்வு என்பதையே மழுங்க அடித்து, மானிடத்தைப் புதைத்த இடத்தில் ஓங்கிப் படரும் கொடிகளோ இவர்கள் கட்டும் ஸ்வர வரிசைகள் என்ற ஐயம்தான் எழுகிறது. தூய இசையை மீட்டெடுப்பதற்கு என்றே நாம் ஒரு தடவை அவதாரம் செய்தால்தான் என்ன என்ற வீண் எண்ணம் குடிக்காத போதை உளறலாய் எப்பொழுதாவது ஆதங்கம் என்ற வகையில் எழுகிறது.
ஆனால் ஏதோ கொஞ்சம் சில விதயாசமான வாத்ய விநோதர்களும், வீணை பாலசந்தர் போன்று, இல்லாமல் இல்லை. ஆனால் அது தொலைந்து போன இடத்தில் தட்டுப்படும் தடயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஸ்வர தேவதைகள் காட்டின் ஆழத் தனிமையில், பொங்கும் ஒலி வெள்ளத்தில், ஒளிரும் முழு திருமேனிகளுடன், அந்தத் திருமேனிகளின் பூரித்த அத்தனை லாவண்யங்களுடனும் குளிப்பதை ஒரு சமயம் தர்சனம் செய்யத்தான் செய்தேன். அது எப்பொழுது என்றால் செர்கய் ராக்ஹ்மனினோஃப் (Sergei Rachmoninoff) அவர்களின் இசை ஊழியில்தான். அவருக்கு முன்னால் பிதாமகர் ச்ட்செய்கோவ்ஸ்கி போன்றவர்களும் உண்டு. ஆனால் வியாசரைப் பார்த்தால் அப்சரசுகள் குளிக்கும்போது தங்களை மூடிக்கொண்டது போன்று ஸ்வரங்கள் அவர்களிடத்தில் எல்லாம் always in attire. ஆனால் படுபாவி, ராக்ஹ்மனினோஃப் விஷயத்தில் என்றால் அந்த தேவதைகள் எல்லாம் சுதந்திரமாக, சுய ரூபத்தில் முழுமையாகத் திரிகின்றன. வேண்டாம் நீங்களே கேட்டுப் பாருங்கள் --
***