தமிழ்க் கல்வெட்டுகள் பலவாக இருப்பதற்கு காரணம் இந்த சந்தி விளக்கும் நந்தா விளக்கும் ஆகும் இவை இருத்திரா விட்டால் தென்னிந்தியாவில் கல்வெட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போயிருக்கும், குறிப்பாகத் தமிழக் கல்வெட்டுகள்.
சந்தி விளக்கு எளிய மக்கள் தந்த சிறு கொடைகளால் ஏற்றப்பட்டவை. இந்த சந்தி விளக்குகள் கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருந்தன. அவற்றுக்கு தனித்தனியே பெயர்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு நெய் தர என்றே தனித்தனி இடையர்கள் இருந்தனர். இன்னின்னார் இந்த இந்த அளவு நெய் தருவோம் என்று உறுதிகூறும் போது அவர்கள் பெயரும் குறிக்கப்படுகின்றன. (காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2 ல் அருளாள (வரதராஜ) பெருமாள் கோவிலில் நந்தா விளக்கு எரிக்க பெரும்பாலார் 32+1 மாடுகளை வழங்கியபோது அக்கல்வெட்டில் இன்னின்ன விளக்கிற்கு இன்னின்ன கோனார் நெய் தருவதாக உறுதி தந்தனர் என்று அவரவர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவை சந்தி விளக்குகள்)
நந்தா விளக்குகள் தனிப்பட்ட ஆளின் வேண்டுதலுக்காக ஏற்றப்பட்டன. இந்த நந்தா விளக்கு ஏற்ற 90 அல்லது 96 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் செல்வரானால் 32 ஆவும் ஒரு காளையும் தருவர். அருளாள பெருமாள் கோயிலில் நந்தா விளக்கிற்கு ஆட்டை விட ஆக்களை தந்தவரே மிகுதி. ஏனென்றால் அவர்கள் வேந்தன், மன்னன், அரைசன் நாட்டு கிழான் ஆகியோர் ஆவர். இதில் வணிகரும் உண்டு. *அருளாளப் பெருமாள் 16 ஆம் நூற்றாண்டில் பேரருளாளர் என்று அழைக்கப் பட்ட நேரத்தில் சமற்கிருத கல்வெட்டில் வரதராஜ என்று மொழிபெயர்த்து குறிக்கப்பட்டதே இன்று பரவலாகிவிட்டது. அருளாள என்ற தமிழ்ப் பெயர் மங்கி மறைத்து விட்டது).
இந்த நந்தா விளக்கிற்கு மட்டும் ஏன் 90 அல்லது 96 ஆடுகள், 32 மாடுகள் என்ற கட்டாயக் கணக்கு ஏற்பட்டது? இது மண்டல் பூசையாக இருக்க வேண்டும் என்று உரைத்திருந்தேன். அரை நந்தா விளக்கு எரிக்க 45 ஆடுகள் என்ற கருத்து இதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்றேன். நந்தா விளக்கு காலையும் மாலையும் எரிக்கப்பட்ட விளக்கு. அப்படியானல் தான் 90ஐ 2 ஆல் வகுக்க 45 என்ற ஒரு மண்டலக் கணக்கு வரும் என்றேன்.
நந்தா விளக்கு இருபொழுதும் எரிக்கப்பட்ட விளக்கு என்பதற்கு பெரும்பாலான கல்வெட்டில் குறிப்பு இல்லை. ஆனால் நான் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8 வேண்டுமென்று கேட்ட போது தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 8 ஐ தவறாகக் கொடுத்தார் விற்பனையாளர். நானும் அதை பார்க்காமல் பக்கம் 69 இல் இருந்த கல்வெட்டு பாடத்தை மளமளவென்று எழுதிக் கொண்டு மேலே பார்த்த பொழுது தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி கோவில் என்று இருந்தது. எனக்கு தேவை பார்த்தசாரதி கோவில் கல்வெட்டு தான் ஆதலால் நான் தப்பான கல்வெட்டு ஒன்றை எழுதிக் கொண்டதை உணர்ந்து நூலை வாங்காமல் திருப்பிக்கொடுத்து விட்டேன். அந்த கல்வெட்டில் தான் நந்தா விளக்கு இருபொழுது எரிக்கப் பட்ட விளக்கு என்பதற்கு சான்று கிடந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு - -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு
வைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை
பெருமானடிகள் - வேந்தர், போகி - சிவிகை, முட்டாமே -அணைக்காமல்
விளக்கம்: சோழப்பெரு வேந்தனுக்கு சிவிகை (பல்லக்கு) சுமக்கும்
நங்கை சாத்த பெருமான்
30 பொன் கழஞ்சு கொடுக்க இரவிலும் பகலிலும் அணைக்காமல் நந்தா விளக்கு எரிப்போம் என்று சபையோர் உறுதி கூறுகின்றனர். முட்டாமே என்ற சொல்லாட்சி அரை நொந்தா விளக்கு என்ற பெயரில் பாதியிலேயே அணைக்கப்படுவதில்லை மாறாக மாலை அல்லது காலையில் எதோ ஒரு பொழுதில் எரிக்காது இருப்பதே அரை நந்த விளக்கு என்பதற்கும் சான்றாக உள்ளது.
இது போல இன்னும் சில கல்வெட்டுகள் கிட்டினால் ஓமம் யாகம் போன்றவை நிகழ்த்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட விளக்கு என்பதை மெய்ப்பிக்க வெகு நாள் ஆகாது.