திருப்புகழ் பதிப்பிக்கப்பட்ட வரவாறு

6 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Feb 26, 2026, 11:04:22 PM (12 days ago) Feb 26
to vallamai
நமக்குப் பெயர் தெரியாத எத்தனையோ தமிழ் ஆர்வலர்கள் எந்த அரசியலும் செய்யாமல் உன்னதமான தமிழ்ப் பணி செய்துள்ளனர். அவர்களை அடையாளம் காட்டும் போது பொதுவெளியும் தமிழ்ப் பணி செய்கிறது. 

https://www.facebook.com/share/p/1CCVGaRu61/

/// இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்த 24 வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா ?

அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல் திருப்புகழ் ஆகும்.  திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன; அதாவது கிடைத்துள்ளன.  இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும்.  இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். 
திருப்புகழிலுள்ள இசைத் தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை .....என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.

அத்தகைய திருப்புகழ் நமக்குக் கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்ற தொண்டும் ஆர்வமுமே காரணமாக அமைந்தது. 
அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார் .

திருப்புகழ் நமக்குக் கிடைக்க சுவையான ஒரு காரணமும் உள்ளது. அது குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.  எழுத்தாளர் ரெங்கையா முருகன் என்பவரால் எழுதப்பட்டிருப்பது கீழே உள்ள பகுதி. இந்தப் புகைப்படமும் அவர் பெருமுயற்சி எடுத்துத் தேடியெடுத்ததாகத் தெரிகிறது.
அதை இப்போது பார்ப்போம்.

'வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ்ப் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை
வாளுவமே தினம் வேல்வி யாலிலில்
புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே"

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் உ.வே.சா.விடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாகப் புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவசிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்துத் திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.///

அண்ணாமலை சுகுமாரன் 
25/2/18 Repost 25/2/2026

நன்றி:   தி இந்து 
படம்:   அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை  திருப்புகழ்

அரசியல் கலப்பற்ற தமிழ்ப் பணிக்குத் தலை வணங்குவோம். 

தெரிவு:சக
Reply all
Reply to author
Forward
0 new messages