/// பூமிப்பந்தில் இந்தக் காலம் மேற்குலகுக்கானது; அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உலக வழக்கமாகி விடுகின்றது. அவ்வகையில் இன்று அன்னையர்தினம் (நேற்று) என சொல்லிவிட உலகெல்லாம் அன்னையருக்கான வாழ்த்துகள் குவிகின்றன.
இந்து புராணங்கள், இதிகாசங்கள், அதன் அடையாள வரலாறுகள் என எங்கு திரும்பினாலும் அன்னையின் பெருமையினைச் சொல்லிக் கொண்டே இருந்ததைக் கவனிக்கலாம்.
தாய் என்பவள் ஒருநாள் மட்டுமல்ல; ஒவ்வொரு நொடியும் வணங்கபட வேண்டியவள் என்பது இந்த மண் சொன்ன போதனை. தாய்க்கு பாரதமும் இந்துமதமும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்?
சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு
"நானோடக்ஷனம் தானாம் ந
திதிட்ரவாடசி சாம
ந காயாத்திரிய பர மந்ரா
ந மதுர்தெய்வதம் பரம்"
அதாவது தானியமும் தண்ணீரும் கொடுப்பதை விடக் கொடை இல்லை; துவாதிசியினை விட நல்ல நாள் இல்லை; காயத்ரியினை விட மேலான மந்திரம் இல்லை; தாயை விடச் சிறந்த தெய்வம் இல்லை
ஆம்; "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்று சொன்ன மதம் இந்துமதம்.
நிலம், ஆறு என சகலத்திற்கும் தாய்ப் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது. தாயை அது உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது.
இந்து மத அமைப்பு தாய்க்குக் கொடுத்த இடம் அலாதியானது. ராமாயணமும் மகாபாரதமும் அதைத் தான் சொல்கின்றன. ராமனும் பாண்டவர்களும் அப்படித் தாயைத் தொழுதிருக்கின்றார்கள். தாயிடம் செய்த சத்தியத்திற்காக உயிரையே விட்டிருக்கிறான் கர்ணன்.
சிற்றன்னையின் கோரிக்கைக்காக காடு புகுந்தான் ராமன். கண்ணனுக்கும் யசோதைக்குமான பந்தம் பாரதம் முழுக்கக் கிடக்கின்றது. அயோத்தியின் தாய்மார்கள் ராமனைத் தங்கள் மகனாகவே கருதியதையும் அது காட்டிற்று.
அதே பாரதம் ஒரு அன்னை எப்படி இருக்கக் கூடாது என காந்தாரியையும் காட்டிற்று.
பரசுராமரிடமும் அது தாய்ப் பாசமே தவத்தின் உச்சம் என்பதைக் காட்டிற்று.
இந்துமதம் "மாதா, பிதா, குரு, தெய்வம்" வரிசையில் அன்னையை முதல் இடத்தில் வைத்தது.
தாய் தந்தையினை தோளில் சுமந்தவன் பெரும் முனிவரை விட வலிமையானவன் எனபதை ஸ்ரவணன் பாத்திரத்தில் காட்டிற்று.
அன்னையைப் பணிபவன் பக்தி தன்னை விடப் பெரிதென அகத்தியர் வாயாலே அது சொல்ல வைத்தது.
பாண்டுரங்கன் கதை முதல் பல கதைகளில் அன்னையின் பக்தி தவஞானிகளை விட சிறந்தது என சொல்லவைத்தது.
காரைக்கால் அம்மையாரை சிவனுக்கே தாய் என்றது. சிவனும் அவரைத் "தாயே" என அழைத்தார். ஆம்; சிவனுக்கும் ஒரு பெண் தாயாக முடியும் எனச் சொன்னது இந்துமதம்.
நாயன்மார்களில் சம்பந்தரை வளர்த்த இசைஞானியாரையும் அவரது தியாகத்தின் பலனால்; 'நாயன்மார்' எனப் பேரிடம் கொடுத்தது.
தாயின் பெருமையை அவ்வளவு தெளிவாகச் சொன்ன அம்மதம்; லோகமாதா எனப் பெரும் சக்தியைத் தாய்வடிவில் தான் கண்டது.
அக்கால இந்து சமூகம் தாயின் பெருமையைச் சொல்லப் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அக்காலத்தில் கண்விழித்த உடன்; ஒருவன் தாயின் கால்களில் விழுந்து வணங்குவது இந்தியக் குடும்பங்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. தாய் என்பவளை அந்த ஸ்தானத்தில் வைத்திருந்தது நமது பாரம்பரியம்.
இன்றும் இந்துமதத்தில் மனைவியைத் தவிர எல்லாப் பெண்களையும் அம்மா அல்லது தாயே என அழைப்பது தான் பண்பாடு.
எல்லாப் பாசத்தையும் வெறுத்துத் துறவியான பட்டினத்தார் கூட; தாய்ப்பாசத்தில் உருகி அழியாப் பாடல்களை கொடுத்திருப்பதை கவனித்திருக்க முடியும்.
கிராமங்களில் வயது குறைந்த சிறுமிகளையும் “தாயீஇஇ” என அன்போடு அழைப்பதுதான் நமது தர்மத்தின் சிறப்பு.
இப்படியாக நம்மிடம் அன்னை பற்றி ஏதும் இல்லாதது போலவும்; ஐரோப்பியர் கொண்டாடச் சொன்ன பிறகு தான் நாம் மறக்காமல் அந்த நாளில் அன்னையை நினைவு கூர வேண்டும் என்பதும் நகைப்புக்குரியது.
இதற்கெல்லாம் பெரும் காரணம்; நமது பண்டைய நாகரீகங்களைத் தாங்கிய; பாரம்பரியங்களைத் தாங்கிய கல்வியைக் கற்பிக்காதது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஒரு இந்துக் குழந்தை படித்திருக்குமானால் இன்று அது 'மதர்ஸ் டே' என வியந்து நிற்காது. தமிழகம் இப்படிக் கொண்டாடாது.
ஒளவையையும் இதர தமிழ் இந்து ஞானிகளையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் கற்றிருக்குமானால் இந்நாளை ஏளனமாக அது கடந்து செல்லும்.
பண்டைய ஓலைச்சுவடிகள் மறைந்து நமக்கு அச்சிற்கு வந்தது மிகச் சொற்பமே. அவற்றையும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
அன்னையை வணங்கினால் எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்றும் பாருங்கள்; தமிழக அரசியல் மற்றும் சகல துறைகளில் உச்சம் பெற்றிருக்கும் பலரையும் பாருங்கள்; கடவுளை வணங்கி இருக்கமாட்டார்கள்; ஆனால் தாயை வணங்குபவர்களாக இருப்பார்கள்.
தாயை வணங்குபவனுக்கு எல்லாம் கைகூடும் என்பதற்கு வீரசிவாஜி பெரும் உதாரணம். இன்னும் பல உதாரணம் உண்டு.
இந்திய வரலாற்றில் தாய்நாட்டை நேசித்து நல்ல குழந்தைகளைத் தந்த தாய்களும்; நாட்டைத் தன் குழந்தை போல் காத்து நின்ற அன்னைகளும் வணங்கத் தக்கவர்கள்.
அவ்வரிசையில் பெரியநாயகி தேவி முதல் பலர் வருவார்கள். அப்பக்கா, சென்னம்மா, ராணி வேலுநாச்சியார், மொகலாயரை வீழ்த்தி அடித்த தாராபாய் எனப் பலர் வருவார்கள்
ஜீஜாபாய் அதில் தனித்து நிற்கின்றாள்.
நம் தலைமுறையில் தேசியக் கொடி அமைத்த காமா முதல் நேதாஜியோடு துப்பாக்கி தூக்கிய பெண்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள்.
சர்ச்சைகள் இருந்தாலும் நாட்டிற்காக பல சவால்களை எடுத்த இந்திராவும் நினைவு கூரத் தக்கவர்.
காமராஜரை நாட்டுக்குத் தந்த சிவகாமி அம்மையார்... வணங்கத் தக்கவர்.
... நாட்டுப் பற்றும் கலாச்சாரமும் இந்து அபிமானமும் கொண்ட ஜீஜாபாயின் சாயல் கொண்ட அன்னையர் அனைவரையும் வணங்கி வாழ்த்துகின்றோம்.
நாட்டிற்குத் தேவையான நல்ல குழந்தைகளை ஹிரா அம்மையார் போல அவர்கள் கொடுக்கட்டும். தேசம் நல்ல அன்னையர் பெற்ற பிள்ளைகளாலும் அவர்தம் ஆசீர்வாதத்தாலும் சிறக்கட்டும்.///
https://www.facebook.com/share/18YZbhj9VN/
தெரிவு: சக