6. ஆடி வந்துடுத்தா அதுக்குள்ள?
ஜூலை 15:
தினசரியைத் திறக்கிறேன் செய்திகள் படிக்க. எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அதில் ஒரு ஆடித் தள்ளுபடி விளம்பரம்.
“ஐயையோ அதுக்குள்ள பொறந்துடுத்தா ஆடி?”
“ஆடி பொறந்தா என்ன? அதுக்கு ஏன் இப்படி ஆடிப்போறேள்னு கேக்கறேளா?” காரணம் இருக்கே.
“என்ன காரணம் இருக்கு சொல்லுங்கோ கேக்கறோம், ஏதோ ஒண்ணு சுவாரஸ்யமா இருந்தா சரி.”
“ஆடி பொறக்கறதுன்னா எனக்கு எப்பொவும் ஒரு கிலி. ஏன்னா என்னிக்கும் பேருக்கேத்தாப்ளெ சாந்தமா இருக்கெற என் மனைவி ஆடி பொறந்தா சாமியாட ஆரம்பிச்சூடுவா.”
“என்ன பொடவையோ நகையோ புதுசா வேணும்னு கேக்க ஆரம்பிச்சுடுவாளோ?”
“ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லெ. அப்படி இருந்தா பேசாமெ ஒரு பொடவையோ நகையோ வாங்கிக் கொடுத்தா போருமே.”
“பின்னெ ஏன் நீங்க ஆடி பொறந்தா ஆடிப் போகணும்?”
“அது தெரிஞ்சுக்கணும்னா என் ஸ்னேகிதன் உமாபதி மாதிரி அசரீரியா வந்து என் வீட்டுலெ நடக்கறதெப் பாக்கணும் நீங்க.”
“அதுக்கென்ன. வந்து பாத்துட்டாப் போச்சு.”
“ஏன்னா பஞ்சாங்கத்தெப் பாத்து சொல்லுங்கோ ஆடி எப்பொ பொறக்கறதுன்னு.”
“ஏண்டி அதான் சமையல் உள்ள டெய்லி கேலண்டர் மாட்டி இருக்கேனே ஒனக்கு சௌகரியமா இருக்கும்னு. அதுலெ பாத்துக்கோயேன்.”
“அதுலெ பாக்கறது கஷ்டமா இருக்குன்னா. கட்டையாட்டம் இருக்கு அது. பக்கத்தெப் பொறட்டிப் பாக்கறதுக்குள்ள அதுலெ இருக்குற மூணு ஆணிலெ எதாவது ஒண்ணு கைலெ குத்திடறது. நீங்க பஞ்சாங்கத்தெப் பாத்து சொல்லுங்கோ.”
“சரி கொண்டா பஞ்சாங்கத்தெ. பாத்து சொல்றேன்.”
பஞ்சாங்கம் வருகிறது.
“ஜூலை பதினேழாம் தேதி ஆடி பொறக்கறது.”
“வரலக்ஷ்மி நோம்பு எப்பொ வறது?”
“ஜூலை முப்பத்தொண்ணு வரது.”
முடிஞ்சுது கதைன்னு நெனெச்சுக்காதீங்கோ.
ஜுலை 21:
“ஏன்னா இப்படி அறுபது நாழியும் கம்ப்யூடரெக் கட்டிண்டு ஒக்காந்திருந்தா எப்படி? நோம்பு வரது. பூஜெ உள்ளேந்து பூஜெ மண்டபத்தெ வெளிலெ எடுத்து அதுலெ இருக்கற சின்னச் சின்ன விக்ரகங்களெ எல்லாம் எடுத்து வெளிலெ வெச்சூட்டு மண்டபத்தெ நன்னா தொடச்சு வெச்சூடுங்கோ. இப்பொவே பண்ணலேன்னா அப்புறம் கடைசீ நிமிஷத்துலெ தூசி படிஞ்ச மண்டபத்தெ வெச்சுப் பூஜெ பண்ணும்படியா வந்தூடும்.”
“பண்றேன்.”
“எப்போ பண்றேள்? நாளைக்கா? இப்படித்தானே ஒண்ணொண்ணயும் தள்ளிப் போடுவேள் நீங்க. இப்பொ நீங்களா கம்ப்யூடரெ மூடிட்டு வரேளா இல்லே நான் அங்கெ வந்து ஸ்விச்செ ஆஃப் பண்ணட்டுமா?”
“தோ வந்தூட்டேண்டி. ஒரே நிமிஷம் இந்தெ மெயிலப் பாத்தூட்டு வந்துடறேன். ஒரு நல்ல ஜோக்கு அனுப்பிச்சிருக்கான் என் ஃப்ரெண்டு.”
“ஜோக்குமாச்சு. இன்னோணுமாச்சு. இப்பொ வரப் போரேளா இல்லையா?”
“வந்தூட்டேன். வந்தூட்டேன்.”
ஜூலை 25:
“ஏன்னா மண்டபம் பளிச்சுன்னே இல்லையே? மர சாமாங்களுக்குப் போடற பாலீஷ் இருக்கா ஒங்க குப்பெ கலக்ஷன்லெ?”
“இருக்காதுடீ. அப்படியே பாலீஷ் பாட்டில் ஒண்ணு இருந்தாக் கூட அது இத்தெனெ நாள்லெ காஞ்சு போயிருக்கும்.”
இந்த பாலீஷ் போடறது பெயின்ட் அடிக்கிறதுங்கறெ வேலெ எனக்குப் புடிக்காத ஒண்ணு. கைலெ, வேட்டி சட்டெ மேலெ எல்லாம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தினாப்ளெ ஆயிடும். அதுனாலதான் அதுக்கு மொதெல்லெயே முற்றுப் புள்ளி வெய்க்கணும்னு அப்படிச் சொன்னேன். விடுவாளா சகதர்மிணி. ஒவ்வொரு பாட்டில், டின்னாக் கொண்டு வந்து காட்டினா.
“இது பெயின்டுடி. அது வுட் ப்ரைமர். அது வால் பட்டி. ஐயையோ அது ஏசிட் டீ. கை பத்திரம். தெறக்காதெ அதெ.”
“ஏன்னா இது ஷாலிமார் வுட் பாலீஷ்னு போட்டுருக்கேன்னா? தெறந்து கொடுங்கோ இதெ.”
“அது தெறக்க வறாது. காஞ்சு போயிருக்கும்.”
“நானே தெறந்தூட்டேன். ஆனா கைலெ கோந்து மாதிரி என்னமோ ஒட்டிண்டுடுத்தே. இது எப்படிப் போகும்?”
“ஸ்பிரிட் போட்டா போகும். இல்லேன்னா நம்ம பொண்ணு நெயில் பாலீஷ் ரிமூவர்னு ஒண்ணு வெச்சிண்டு இருப்பாளே அது போட்டாப் போகும்.”
“அதுக்கு நான் எங்கெ போவேன்? என்னிக்கு வாங்கிக் கொடுத்திருக்கேள் எனக்கு நெயில் பாலிஷ்” பாலீஷ் வாங்கிக் கொடுத்திருந்தாத்தானே பாலீஷ் ரிமூவர் வாங்கிக் கொடுத்திருப்பேள்? சரி இதெக் கொஞ்சம் இந்த மண்டபத்துக்குப் பூசுங்கோ.”
“ஐயோ என் கையெல்லாம் இசுக்குப் பிசுக்குன்னு ஒட்டிக்குமேடீ.”
“சரி நானே பூசிக்கிறேன்.”
பூசி முடிக்கிறாள் பாலீஷை. மண்டபம் இப்போது பளபளக்கிறது.
ஜூலை 26:
“ஏன்னா கொஞ்சம் வெள்ளி சொம்பெ வெளிலெ எடுங்கோ. அதுக்கு சில்வோ பாலீஷ் போட்டு வெய்க்கலாம்.”
“எங்கெ வெச்சிருக்கே?”
“கப்போர்டுக்குள்ளெ லாக்கர்லெ இருக்கும் பாருங்கோ.”
“எந்தக் கப்போர்டுலெ? பக்கம் பக்கமா அஞ்சு கப்போர்டு இருக்கு இந்த வீட்டுலெ.”
“ஒண்ணொண்ணும் சொல்லணும் ஒங்களுக்கு. என்னோட காட்ரெஜ்லெ இருக்கும் பாருங்கோ. எடெத்தெ உட்டு ஏந்திருக்காமெ எதாவது எடக்கு மடக்கா கேட்டுண்டே இருங்கோ. அந்தப் பாழாப்போற கம்ப்யூடர்லெ என்னதான் இருக்கோ அப்படி.”
“லாக்கர்லெ சொம்பெக் காணுமேடீ.”
“போன வருஷம் பூஜெ பண்ணீட்டு அங்கெதானெ வெச்சேன்.”
“போன வருஷம் எங்கெடீ பூஜெ பண்ணெ? போன வருஷந்தான் நமக்குப் பூஜெயே இல்லியே”
“அதுக்கு முந்தின வருஷம் பண்ணேனே.”
“அதுக்கு முந்தின வருஷம் பண்ணே. ஆனா இங்கே இல்லெ. ஆஸ்திரேலியாவுலெ பண்ணெ.”
“அதுக்கும் முந்தின வருஷம்?”
“அதுக்கும் முந்தின வருஷம் அஷோக் நகர்லெ பண்ணெ.”
“அப்பொ எங்கெ போய்டும் அது?”
“அஷோக் நகர்லெ பேங்க் லாக்கர்லெ இருக்கும்.”
“போய் எடுத்துண்டு வந்தூடுங்களேன்னா.”
“சுண்டைக்க காப் பணம். சொமெ கூலி முக்காப் பணம்னானா. எனக்கிருக்கற ஸ்கின் அல்லெர்ஜீக்கு வெய்யல்லெ சாதாக் காருலெ போயிட்டு வந்தேன்னா அடுத்த பத்து நாளைக்கு எரிச்சல் தாங்காமெ அவஸ்தைப் படுவேன். ஏசி கார்லெ போய்ட்டு வரதுன்னா சொளையா ஆயிரம் ரூபா போய்டும். அதுக்கு ஒரு சொம்பே வாங்கீடலாமோ என்னவோ.”
“சொம்பா? வெள்ளி விக்கற வெலெலெ சொம்போடெ கழுத்துகூட வாங்க முடியாது.”
“அப்பொ பேசாமெ பித்தளெ சொம்புலெ வெச்சுடு.”
“பித்தளெ சொம்பு எங்கெ இருக்கு? அதெத்தான் நாலு வருஷத்துக்கு முன்னெ நீங்க அழகாக் குடி வெச்சிருந்தேளே ஒரு பிராமணனெ. அவன் எல்லாப் பித்தளெப் பாத்திரத்தோட சேத்து சொம்பயுந்தான் அள்ளிண்டு போயிட்டானே.”
சற்று நேரத்திற்குப் பின் கைக்குள் அடங்குமளவிற்கு ஒரு கங்கைச் சொம்பு வந்தது.
“இதுலெ தேங்காயையும் அம்மன் மொகத்தையும் வெய்க்க முடியுமான்னு பாருங்கோ.”
“குருவி தலெலெ பனங்கா வெச்சா மாதிரி இருக்கும். தலெ கனம் தாங்காமெ பாதிலெ சாஞ்சு உழுந்தூடும். அப்புறம் நீ ‘என்னான்னா இது அபசகுனமா அம்மன் மொகம் சாஞ்சுடுத்தே’ ம்பே.”
“அப்பொ என்னதான் பண்றது?”
“நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“சொல்லுங்கோ.”
“பேசாமெ அந்த ஸ்டெயின்லெஸ கூஜாலெ வெச்சுடலாம்.”
“வெள்ளி அல்லது செம்பு சொம்புலெ தானேன்னா வெக்கணும்னு சொல்லுவா.”
“அது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வரதுக்கு முன்னாடி சொன்னது. அதெயே புடிச்சிண்டு இருந்தா எப்படி? இந்தக் கூஜாவும் பாத்தா வெள்ளி மாதிரிதான் இருக்கு. அம்மனுக்குத் தெரியும் நாம வேணும்னு பண்ணலேன்னு.”
“சரி குடுங்கோ கூஜாவெ தேச்சு தந்துடறேன்.”
ஜூலை 29 :
“நா பீரோலேந்து அம்மன் மொகத்தெ எடுத்துக் குடுங்கோ. அதுக்கு சில்வோ பாலீஷ் போட்டுச வெக்கறேன்.”
“இந்தா அம்மன் மொகம்.”
“ஏன்னா அம்மன் மொகத்துலெ இருக்குற நகையெல்லாம் இப்படிக் கருத்துப் போயிருக்கே.”
“இமிடேஷன் நகெ கருக்காமெ எப்படி இருக்கும் பின்னெ?”
“செகப்புக் கல்லு வெச்செ நகெ பரவாயில்லெ. காதுலெ இருக்கற தோடும் மூக்குலெ இருக்கற மூக்குத்திகளுந்தான் வெள்ளெக் கல்லெல்லாம் கருத்துப் போய் அசிங்கமா இருக்குன்னா. ஒண்ணு பண்ணுங்கோ. உள்ளெ நான் கழட்டி வெச்சிருக்கற அமெரிக்கன் டயமெண்ட் தோடும் மூக்குத்திகளும் இருக்கும். அதெ எடுத்துப் போட்டூடுங்கோ.”
“சரி.”
தோடுகளும் மூக்குத்திகளும் வருகின்றன.
“ஏய். இங்கெ பாரு. இந்த் இமிடேஷன் நகெயெல்லாம் மெல்லிசு பித்தளெக் கம்பிலெ கோத்து மாட்டி இருக்கான். ஒன் தோடு மூக்குத்தியோட சொறெயெல்லாம் தடி தடியா இருக்கு. உள்ளெ போக மாட்டேங்கறதே.”
“இது என்னன்னா பெரிய கஷ்டம்? எப்பொப் பாரு இது முடியாது அது முடியாதுன்னு சாக்குப் போக்கு சொல்லிண்டு இருக்கேளே. ஒங்க எலெக்ட்ரிக் ட்ரில்லெ எடுத்துத் தொளெயெ பெரிசாக்குங்கோ. தோடெப் போடுங்கோ.”
எப்போதும் போல் சொன்னதைச் செய்கிறேன். பின்னதைப் பற்றிதான் பகவான் கிருஷ்ணர் கீதைலெ சொன்னாப்ளெ நான் கவலைப் படுவதில்லையே.
“ஏன்னா இந்த மூக்குத்தி ரெண்டும் ஏன் இப்படி முன்னும் பின்னுமா லொட லொடன்னு ஆடிண்டு இருக்கு?”
“ஏன்னா, அதோடெ சொறெ நீளமா இருக்கு. அதான் ‘உள்ளே வெளியே’ ஆட்டம் ஆடறது.”
“வெளெயாட்டாப் பேசறதெ உட்டூட்டு அதுக்கு என்ன பண்ணலாம்கறெதெ யோஜன பண்ணுங்கோ.”
“யோஜனெ எங்கேருந்து வரும்? என் யோஜனை எல்லாம் பாதீலெ உட்டூட்டு வந்திருக்கற நகை சுவை மடல்லென்னா இருக்கு.”
“ஒண்ணு பண்ணுங்கோ.”
“ஒண்ணென்ன ரெண்டே பண்றேன் சொல்லுங்கோ”
“அது என்னன்னா புதுசா சொல்லுங்கோன்னு?”
“சரி சரி. சொல்லு.”
“விரலாலெ மூக்குத்தியெ உள்ளெ அழுத்திப் புடிச்சிண்டு அந்தெப் பக்கத்துலெ இந்த மெழுகு வத்தியெ ஏத்திப் புடிச்சிண்டு வழியற மெழுகெ உள்ளெ விடுங்கோ.”
நால்ல யோஜனைதான். செய்து பார்க்கிறேன். வேலை செய்கிறது.
ஜூலை 30 :
“நா இப்பொ நான் சீரியஸ்ஸாவே சொல்றேன். இன்னும் ரெண்டு நாளெய்க்கு கம்ப்யுடரெத் தொடவே கூடாது. பூஜெ முடியட்டும். அப்பறம் நீங்க இருபத்தினாலு மணி நேரமும் வாணாலும் அது முன்னாடி ஒக்காருங்கோ. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.”
“சரி தொடலெ. இப்பொ என்ன பண்ணணும்கெறெ?”
“கூடத்துலெ சோபா செட்டெல்லாம் ஒரு பக்கமாத் தள்ளிப் போட்டூட்டு மண்டபத்தெ அந்தெ செவத்தோரமா வெச்சு சரவெளெக்கெக் கட்டுங்கோ.”
“சரி. அப்பறம்?”
“அந்த ரெண்டு வாழெக் கன்னையும் மண்டபத்துலெ முன்னாடி இருக்கற தூண்கள்ளெ கட்டுங்கோ.”
“செய்யறேன்.”
பீரோவில் இருந்து சரவிளக்குகளை எடுத்து டெஸ்ட் செய்தால் அது வேலை செய்ய வில்லை. தேடிப் பார்த்துக் கண்டு பிடிக்கிறேன் என்ன தவறு என்று. ஓரிடத்தில் இணைப்பு விட்டுப் போய் இருந்தது. அதை சரி செய்து கட்டுகிறேன்.
“கூஜாக்குள்ளெ இந்த அரிசியெக் கொட்டுங்கோ. அதுலெ இந்த வெள்ளிக் காசு, தங்கக் காசு. முத்து, பவழம், வெத்தெலெ, பாக்கு, எலுமிச்சம் பழம் எல்லத்தையும் போடுங்கோ.”
“அப்பறம்?”
“பூஜெ மந்திரம் கேஸெட் இருக்கா பாத்து எடுத்து வெச்சுக் கோங்கோ. இல்லேன்னா போன தடவெ மாதிரி கடெசீ நிமிஷத்துலெ கேஸட்டெக் காணூம்னு பூஜா விதானம் புஸ்தகத்தெத் தேடப் போறேள்.”
நேற்று வரை அம்மன் முகத்தோடு வைத்திருந்த கேஸட்டைக் காணோம்.
“நன்னா தேடிப் பாருங்கோ லாக்கர்லெ. உள்ளெ வெச்சது எங்கெ போய்டும் கால் மொளெச்சு?”
தேடிப் பார்க்கிறேன். கிடைக்க வில்ல.
“இதோ இங்கெயே டைனிங்க் டேபிள் மேலெ வெச்சிருக்கேளேன்னா.”
மாலை 5 மணி.
வாசலில் அழகாக பெரிய மாக் கோலம் போட்டு உள்ளே நுழைகிறாள் மனைவி.
அப்போது வந்த ஐந்து நிமிஷ மழை மாக் கோலத்தை பூர்த்தியாகக் கழுவிச் சென்றது. மனைவி முகம் சுருங்கியது.
“என்னன்னா இப்படி ஆயிடுத்தே?”
“கவலைப் படாதே. நாளைக்கு காலெம்பர வேறெ போட்டுக்கலாம்.”
“ஏன் இப்படி ஆச்சோ தெரியலையே?”
நான் வெய்யிலில் வெளியில் போக முடிவதில்லை என்பதால் பூ, பழங்கள், வெற்றிலை வாங்கி வரும் வேலை வேறொரு அன்பர் கைக்கு மாறி விட்டது இவ் வருஷம். பெரியதொரு நிம்மதி எனக்கு. காரணம் வாங்கி வரும் பழங்களில் இது அழுகல் அதில் சொத்தை இருக்கிறது என்று என்னைக் குற்றம் சொல்ல முடியாதே.
ஜுலை 31 : காலை 7-30 மணி
“சீக்கிறமா குளிச்சூட்டு ஒரு புது வேஷ்டியெ எடுத்துக் கட்டிண்டு வாங்கோ. என்னாலெ மடி வேஷ்டி தோச்சு வெக்கெ முடிலெ இந்த வருஷம். மண்டபத்துக்கு ரெண்டு பக்கமும் அந்த ரெண்டு குத்து வெளெக்கையும் எண்ணெ உட்டு ஏத்தி வையுங்கோ. வாசல்லெ க்ரில் கேட்டுலெ மாவெலெ சொருகினேளா?”
“செய்யறேன்.”
“ஃப்ரிட்ஜுலெ இருக்கற பூவைல்லாம் எடுத்து இந்த ரெண்டு தட்டுலெயும் வையுங்கோ.”
“ஆச்சு.”
“கல்பூர டப்பா, ஊதுவத்தி, சாம்பிராணி, நெருப்புப் பொட்டி, மணி எல்லாத்தையும் சாமி உள்ளேந்து இங்கெ கொண்டு வந்து வையுங்கோ.”
“வெச்சாச்சு.”
மணி 8-30
அம்மன் கலசம் வாசல் தாழ்வாரத்தை அடைகிறது. பின் கேஸ்ட் வாத்தியார் மந்திரங்கள் சொல்ல மனைவி அதைத் திருப்பிச் சொல்ல பூஜை ஆரம்பிக்கிறது. எம்.எஸ். அவர்கள் தன் தெய்வீகக் குரலில் ”லக்ஷ்மி பாரம்மா” என்று பாடி அழைக்க அம்மன் உள்ளே வருகிறாள், அதாவது நிதானமாகத் தூக்கிக் கொண்டு வரப்படுகிறாள். வீட்டிற்குள்ளே வந்த லக்ஷ்மி மண்டபத்துள் தன் பீடத்தில் அமர பிரதான பூஜை ஆரம்பிக்கிறது.
நான் அருகில் ஒரு சிறிய ஸ்டூல் மீதமர்ந்து அவ்வப்போது கேஸெட்டை நிறுத்தி மீண்டும் இயக்கி வாத்தியாரின் சிஷ்யனாக வேலை செய்கிறேன்.
“அதெக் கொஞ்சம் நிறுத்தீட்டு சமையல் உள்ளெ மேடெமேலெ பண்ணி வெச்சிருக்கிறதெ எல்லாம் எடுத்துண்டு வந்து இங்கெ வெய்யுங்கோ.”
“சரி.”
மணி 9-30
பூஜை முடிகிறது.
“இந்தெ சரடெக் கைலெ கட்டி உடுங்கோ.”
“கட்டி உடறேன்.”
“செத்தெ இந்தப் பக்கம் பாத்து நில்லுங்கோ. நமஸ்காரம் பண்றேன்.”
“இதெல்லாத்தையும் ஒண்ணொண்ணாக் கொண்டு போய் டைனிங்க் டேபிள்ளெ வையுங்கோ.”
மணி 10-00
மனைவி மனதிற்குள்ளேயே லலிதா நவரத்ன மாலை சொல்லி முடித்து உணவு பரிமாறுகிறாள்.
“கொழக்கட்டை ரொம்ப நன்னா இருக்குடீ.”
“கொழக்கட்டை மட்டுந்தானா?”
“இல்லெ நீ கூடத்தான் கொழு கொழுன்னு இந்த மடிசார் பொடவெலெ...”
“போரும். வயசுக்கேத்த விசாரம் வேண்டாம். யாராவது கேட்டா சிரிப்பா. நான் சமைலெப் பத்திக் கேக்கறேன்.”
“சிரிக்கணுண்டீ. சிரிக்கச் சிரிக்கதான் மனுசன் ஒடம்புலேந்து நோயெல்லாம் மறையும்.”
மாலை 4-00
“இதெப்பாருங்கோ மறுபடி அந்தக் கம்ப்யூடர் கிட்டெ போகாதீங்கோ. இப்பொ வெத்தெலெ பாக்கு வாங்கிக்க வருவா. சில பேர் தம்பதி சமேதரா வருவா. அவா கூட கொஞ்சம் பேசிண்டு இருங்கோ உம்முனு உங்கணாம் மூஞ்சி மாதிரி ஒக்காந்துருக்காமெ.”
“சரி பேசறேன்.”
இப்பொ நீங்களே சொல்லுங்கோ. ஆடி வந்தா எனக்கு ஒடம்பு ஆடிப் போகுமா போகாதான்னு.
நடராஜன் கல்பட்டு
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே