படர்கூர் அலரி
=====================================ருத்ரா
என்னை அவனே என படர்கூர் அலரி
யாங்கணும் தூவும் அறிகுவை தோழி.
இரும்பனைப் பைங்காய் குடைதரு சிறுதேர்
உருட்டும் சிறுவர் நீள் அகல் வீதி
மற்றும் ஊரின் நனந்தலை நண்ணி
கவின் நலம் கெடுக்கும் அறிவையோ தோழி.
ஆற்றுப்படுகையின் தளிர் மா நடுங்கும்
விரி பூ புன்னை நித்திலம் பாய்தர
வியப்ப வெரூஉம் அவிழ் நிழல் ஆங்கே
மருது முச்சியும் குருகு இறைய
பெண்டிர் குழாஅம் தெண்ணீர் முகந்துழி
பைதலம் படுக்கும் என் நெஞ்சம் துவலும்.
______________________________________________
தலைவி தலைவன்மீது கொண்ட காதல் செய்தி
பழிச்சொல்லாய் ஊரெல்லாம் பரவியதால்
தலைவியின் நெஞ்சம் துயர் உறுவதை
நான் சங்கநடைச்செய்யுளில் கவிதை ஆக்கி
இங்கு தந்துள்ளேன்
________________________________________ருத்ரா
பொழிப்புரை
_________________________________ருத்ரா
தலைவன் தானே வெளிவந்து அவள் காதல் பற்றி
ஊரெல்லாம் தெருவெல்லாம் அறிய என் அழகு நலம்
கெடச்செய்கின்றானே தோழி! நீ அறிவாயோ. இந்த
பழிச்சொற்கள் ஊரெல்லாம் பரவி படு துயரம் அடைகின்றேன்.
பனங்காய்களைக்குடைந்து வண்டி செய்து விளையாடும்
சிறுவர்கள் செல்லும் தெருக்களுக்கெல்லாம் செல்கிறான்.
இந்த பழிச்சொற்களின் கூர்மையினால் ஆறறங்கரையின்
மாந்தளிர்கள் கூட நடுங்கும்.விரிந்த புன்னைப்பூக்கள்
தரையில் வீழுந்து முத்துக்கள் பரப்பியதை போல்
விளங்கும்.அவை வியந்து விளிக்கும் அவற்றோடு மரங்களின்
நிழலும் கட்டவிழ்ந்து விழும்.மருத மரங்களின் உச்சியில்
உள்ள நாரைகள் கூட அந்த அலர் (பழி) பற்றி கூச்சல் இடும்.
தண்ணீர் முகரும் பெண்கள் கூட்டமும் இது
பற்றி பேசித்தீர்ப்பர்.அதனால் நான்
படும் துயரத்தில் என் நெஞ்சமும் நைந்து வாடும்.
________________________________________________ருத்ரா
அருஞ்சொற்பொருள்
______________________________
படர்கூர் அலரி..காதல் பற்றிய பழிச்சொல் காற்றில் அலரி எனும் சிறுபூக்கள் போன்று பரவுகிறது.
இதில் கூர் அசைச்சொல்.(உரிச்சொல்)
பைதலம் ..துயரம்
துவலும்..நைந்து அல்லல் உறும்
முச்சி ..கொண்டை போன்ற உச்சி
இறைய..நிலையாய் தங்க
முகந்துழி...அள்ளும்போது
என்+ஐ= என் தலைவன்
நனந்தலை ..அகன்ற இடங்கள்
நண்ணி..அடைந்து அல்லது நள் எனும் நடு மைய இடங்களில் பரவி
__________________________________________________________ருத்ரா
21-07-2021