தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை நகர் காவல் நிலைய சார்பு காவல் ஆய்வாளர்கள் அகிலன் மார்டின் மற்றும் அஸ்லாம் ஷேர்கான் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி ரித்திகா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் சார்பு ஆய்வாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய சார்பு காவல் ஆய்வாளர் அகிலன் மார்டின், போதைப் பொருட்கள் மனிதனின் உடல் மற்றும் மனநலத்தைப் பாதிப்பதுடன், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும். மாணவர்கள் போதைப் பொருட்களைத் தவிர்த்து, அவற்றின் தீமைகள் குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், போதைப் பொருட்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், காவல் சார்பு ஆய்வாளர்கள் அகிலன் மார்டின், அஸ்லாம் ஷேர்கான் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் உள்ளார். போதை பொருள் விழிப்புணர்வு குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=ZTf9d8b29-E