இறைவன் இருக்கின்றானா? அவன் படைத்தானா?
இறைவன் குணம் இல்லாதவன் என்பதால் முழுமையானவன் (perfect) எனப்படுகின்றன. அது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல அலியும் அல்ல. சத்துவ, ரஜ, தமோ ஆகிய மூன்று குணங்களுக்கும் ஒரு பொதுப் பெயர் தான் பிரகிருதி என்பது. இது மாறுபாடு உள்ளதால், ஏற்படுத்துவதால் முழுமை இல்லாதது (imperfect) எனப்படுகின்றது. இந்த பிரகிருதி அந்த ஒற்றை இறைப் பொருளை பலவாக பிரிப்பதால் பகுதி > ப்ரகுதி > ப்ரக்ருதி என பெண் பால் ஆக்கப்பட்டது. இந்த பிரகிருதி தன் குணங்களை குணமற்ற இறைவன் மீது ஏற்றுவதால் அந்த இறை ஆற்றலின் சிறு பகுதி தன் ஒருமைத்
தன்மையில் இருந்து பகுபட்டு மாறுபாடுள்ள பலவாக ஆகின்றது. இங்கு தான் படைப்பு என்ற பிரிகை ஏற்படுகின்றது. எனவே மதம் சொல்வது போல படைப்பை இறைவன் மேற் கொள்வது இல்லை. இந்த மாறுபாடு எய்திய எந்த ஒரு பொருளிளும் இந்த முக்குணங்கள் சம அளவில் இல்லாமல் விகிதம் வேறுபடுகின்றது. இப்போது பக்குவ நிலைக்கு தகுந்தவாறு உயிர்களாகப் பகுபட்ட இறைவனுக்கு தான் மீண்டும் முழுமை (perfection) எய்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது. இதற்கு குணங்களின் விகிதத்தை சம அளவில் கொண்டு வர வேண்டும். அதை கொண்டு வரும் முயற்சி தான் உண்மையான ஆன்மீகம் ஆகும். இது தான் தந்திர யோகம் மேற்கொள்ளும் முயற்சி.
மதத்தை பின்பற்றினால் யாராலும் குணத்தில் இந்த சம அளவை எட்ட முடியாது. பிரகிருதி இந்த சம அளவை எய்துவதற்கு கொடுக்கும் வாய்ப்பு தான் மறுபிறவி என்பது. முயற்சி ஒரு தொடர் முயற்சி அதனால் பல பிறவிகள். உலகில் இந்த படைப்பை இறைவன் செய்தான் என்ற கருத்து தப்பாக பரப்பப்பட்டு விட்டதால் அதை ஒட்டியே கருத்தாடல்கள் நடக்கின்றன. இந்த உலகம் வேற்றுமையில் இயங்குகின்றது. வேற்றுமை இல்லாவிட்டால் இந்த அண்டப் புடவி (universe) நிலைக்காது. வேற்றுமை என்பது களங்கம் இந்த களங்கத்தை (imperfection) ஒழித்து செழுமை (perfection) எய்துவதே மனிதப் பிறவியின் ஒரே நோக்கம் ஆகும். அதாவது வேற்றுமையை ஏற்படுத்தும் பிரகிருதியின் பிடியில் இருந்து நழுவி வேற்றுமையற்ற ஒருமைத் தன்மை கொண்ட இறையில் கலப்பதுவே ஜீவாத்மா பரமாத்மாவில் கலப்பது என்பது. எனவே மெய்யியலாளர் (philosopher) சொல்வதை ஏற்க வேண்டாம்.