முதுமையில் இன்பம்
-----------------------------------
தில்லைவேந்தன் அழகான கவிதை தந்துள்ளார். மனித வாழ்க்கையில் முதுமைப்
பருவம் பற்றிய இக் கவிதை பரிசு பெற்றுள்ளது. படித்ததும், 2000 ஆண்டு
முன்பும், 1000 ஆண்டு முன்பும் ஏற்பட்ட முதுமை பற்றிய புகழ்பெற்ற
கவிதைகள் நினைவுக்கு வருகின்றன.
(1) 1000 ஆண்டு முன், பட்டினத்தார் பாடிய உடற்கூற்று வண்ணம் - with good graphics.
https://youtu.be/QZxQZ2k0Fio
சுகி சிவம், 8 பாகங்களாக விரிவுரை உள்ளது:
https://youtu.be/vPCqEUT37T0 முதுமை நடத்தும் பாடம்.
(2) 2000 ஆண்டு முன்னே!
தொடித்தலை விழுத்தண்டினார்: புறம் 243.
மிக அரிய சங்கப் பாடல். முதுமை, வாழ்வு நிலையாமை பற்றி.
ஆற்றங்கரையின் மருதமரம் - மருதத் திணையின் குறியீடு.
இம் மருதமரம், ஆற்றுப் பூவரசு என்கிறோம்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மருது போல, கால வெள்ளத்தில் வாழ்வும் கரையும்.
புறம் 243
இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ 5
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை 10
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே.
https://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d0114450.htm
இளமை நினைவுகள் (243ஆம் பாட்டு)
"இப்பொழுது நினைத்தால் வருத்தமாக உள்ளது. மணல் செறிந்த கரையில்
செய்யப்பட்ட பொம்மைக்குப் (வண்டற்பாவை) பூவைப் பறித்துச் சூட்டி மகளிர்
விளையாடுவர். அவரோடு கைகோத்துக் கொண்டு, தழுவிய போது தழுவியும், அசையும்
போது அசைந்தும் மனத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனையின்றிச் சிறுவர்
விளையாடுவர். அச்சிறுவர்களில் ஒருவனாக உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத
மரத்தின் நீரில் வந்து படியும் கிளையிலே ஏறுவேன்; கரையிலே நிற்பவர்
வியக்குமாறு, அலையெழுந்து நீர்த்துளிகள் தெறிக்க ஆழமிகுந்த மடுவில்
(நீர்நிலையில்) துடுமென்று குதிப்பேன். மூச்சடக்கி ஆழத்தில் சென்று
மணலைக் கையிலே அள்ளி வந்து காட்டுவேன். எதனையும் ஆழ்ந்து எண்ணிப் பாராத
அந்த இளமை இப்போது இல்லையே என்பது இரங்கத்தக்கது. இப்போது பூண் மாட்டிய
தலையைக் கொண்ட பெரிய கோலை ஊன்றிக்கொண்டு தளர்ந்து போய் இருமலுக்கிடையில்
சில சொற்களைப் பேசும் பெரிய முதுமை கொண்ட எனக்கு அந்த இளமை எங்கே
போயிற்றோ என நினைக்க வருத்தமாக உள்ளது.”
https://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=243 உவேசா பதிப்பு
https://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=95 ஔவை பதிப்பு
விளக்கம்: தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர், இளிவர லென்னும்
மெய்ப்பாட்டுக்கு இதனை யெடுத்துக்காட்டி, “தன்கண் தோன்றிய மூப்புப்
பொருளாக இளிவரல் பிறந்தது; என்னை, இளமைக் காலத்துச் செய்தன செய்யமாட்டாது
இளிவந்தனம் இக் காலத்து என்றமையின்” (தொல். மெய். 9) என்பர்.
நச்சினார்க்கினியார், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை” (தொல்.
புறத். 24) யென்பர். பாவை, வண்டற் பாவை. “சிறுவீ ஞாழல் தோன்றோய்
ஒள்ளிணர், நேரிழை மகளிர் வார்மண லிழைத்த, வண்டற் பாவை வனமுலை முற்றத்,
தொண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்” (நற். 191) எனப் பிறரும்
கூறுதலாலறிக. மறைப்பறியாதவழி மாயமும் இல்லையாதலால், “மறையெனலறியா மாயமில்
ஆயம்” என்றார். ஆயம், ஈண்டு இளைய மைந்தர் மேற்று. இரும், இருமல். (ஔவை
சு. து.)
தில்லைவேந்தனார் கவிகாண்போம்:
கவிதை உறவு - மூத்த குடிமக்கள் மன்றம் கவிதைப் போட்டி (பரிசு பெற்ற கவிதை)
இன்பம்-- " நீ இருக்கின்றாய் என்பதொன்றே"
-----------------------------------------------------------------------
பாயிருக்கும், மெத்தையென்ற பஞ்ச ணையின்
பகட்டிருக்கும், தூக்கம்தான் வரும றுக்கும்.
காயிருக்கும், கனியிருக்கும், விருந்தி ருக்கும்,
கடித்துண்ணப் பல்லில்லை இருவ ருக்கும்.
நோயிருக்கும், நூறுவகை வலியி ருக்கும்,
நொந்திருக்கும் உடல்வாழ்வை வெறுத்தி ருக்கும்.
நீயிருக்கும் நினைப்பொன்றே இனித்தி ருக்கும்,
நெடுங்காதல் நெஞ்சிலென்றும் நிலைத்தி ருக்கும்!
பொரிமாவை மெச்சுகின்ற பொக்கை வாயின்
புன்சிரிப்பும் பழங்கதைகள் அனைத்தும் சொல்லும்.
அரிமாவைப் போல்நானும் அருகில் நீயும்
அன்றிணைந்து சென்றதெல்லாம் நினைக்கும் உள்ளம்
திருமாது போல்திகழ்ந்த எழிலார் மேனி
தேய்ந்திளைத்துக் குச்சியென ஆன போதும்,
உருமாறித் தடுமாறிச் சோரும் போதும்,
உறுதுணையாய் நீயிருந்தால் இன்ப மாகும்!
உழைக்கின்ற காலத்தில் ஓய்வைப் பற்றி
ஒருபோதும் எண்ணாமல் கடமை செய்தோம்.
மழைக்குன்றம் போலிருந்த உடலும் வற்றி
மணல்மேடாய் வளம்குன்றி வாடி, வாழ்க்கை
இழைக்கின்ற முதுமையெனும் பாதை வந்தோம்.
இப்பயணம் எத்தனைநாள் அறிந்தோம் இல்லை.
அழைக்கின்ற வேளைவரை சேர்ந்தே செல்வோம்;
அருந்துணையாய் நீயிருந்தால் தொல்லை இல்லை!
ஆயகலை நுணுக்கங்கள் கற்க வில்லை,
ஆனாலும் இல்லறத்தின் இணக்கம் கற்றோம்.
தீயுறங்கும் பசியுருவில் வயிற்றுக் குள்ளே
சிறுகுவளை நீர்ருந்தி அணைக்கக் கற்றோம்.
சேயிருந்தார், சேர்ந்திருந்தார், வளர்ந்தார், இன்று,
சிறகடித்துச் சென்றுவிட்டார் திசைகள் தோறும்.
நீயெனக்கும் நானுனக்கும் என்றி ருக்கும்
நிலையிருந்தால் அமைதியுடன் இன்பம் சேரும்!
-- தில்லைவேந்தன்
தெரிவு: நா. கணேசன்