அபிராமி அந்தாதி தவிர, அபிராமி
பட்டர் பாடிய பிரபந்தங்கள்: (1) கள்ள விநாயகர் பதிகம் (2) அமுத கடேசர்
பதிகம் (3) கால சங்கார மூர்த்தி பதிகம் (4) கால சம்மாரப் பின்முடுகு வெண்பா
(முழுதும் கிடைக்கவில்லை) (5) அபிராமி அம்மை பதிகம் I (6) அபிராமி அம்மை
பதிகம் II (7) அபிராமவல்லி பதிகம்
இந்தப்
பதிகங்களில், “கடவூர் இறைவரை ஆளும் செல்வி! அபிராம வல்லியே!” என்னும்
பதிகம் தென்காசியை ஆண்ட மதுராபுரி அம்பிகை மாலையைப் பெரிதும் ஒத்துள்ளது:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0050.html
; மேலும், அபிராமி அந்தாதியிலும் மதுராபுரி மாலையின் தாக்கத்தைக் காணலாம்.
(மு. அருணாசலம், தென்காசிப் பாண்டியர், 1977: காந்தி வித்தியாலயம்)
பதினாறும்
பெற்றுப் பெருவாழ்வு வாழ்க எனப் பெரியோர் வாழ்த்துவர். அந்தப் 16 பேறுகளை
இன்னின்ன என வரிசைப்படுத்திப் பாடும் மூன்று பாடல்கள் தமிழிலே உள்ளன.
புகழ்மிக்க இரு பதிகங்களில், முதல் பதிகத்தில் முதல் பாட்டாகவும்
(அவதாரிகை), இரண்டாம் பதிகத்தில் இறுதிப் பாட்டாகவும் (மங்களம்) 16 பேறுகளை
அருளுவாய் என வேண்டுகிறார் அபிராமிபட்டர். காளமேகம் அதற்கு நாலு
நூற்றாண்டு முன்னர் மதுரைச் சொக்கனிடம் இப் பட்டியல் தந்துள்ளார்.
துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்
அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே - கவி காளமேகம்
பதினாறு பேறும் அருள்வாய்!
அபிராமி பதிகங்கள் (முதல் பாடல்)
---------------------------
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
மங்களம்
------------
சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச
தனயை! மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியமெய்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி, சுபநேமி, புகழ் நாமி, சிவசாமி மகிழ்
வாமி, அபிராமி உமையே!
- சுபம் -