மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய கல்வெட்டு
மேல் சாதிப் பெண் மீது கீழ்சாதி ஆடவன் (புலையன், வண்ணான்) இரவில் கல்லோ குச்சியோ எறிந்தால் அவளை சாதி விலக்கி அந்த ஆடவனுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும் ஒரு சமூக வழக்கும் தான் இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி என்ற வழக்கம். மண்ணாப்பேடி என்றால் வண்ணாரிடம் அச்சம், புலைப்பேடி என்றால் புலையரிடம் அச்சம். இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய 106 வரி கல்வெட்டு குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆணையை வேணாட்டு வேந்தர் வீரகேரளவர்மன் சிறைவாய் மூத்தவர் பிறப்பித்தார்.
கல்வெட்டுப் பாடம்:
கன்னி வியாழம் / நின்ற கொல்ல / ம் 800 70 1 (871) / தை மாதம் 20 7 (27) / சனியாட்செ / யும் சதயவும் / பூர்வ பக்கிஷத்து / பிறதி பதவும் சிங் / ஙங் கரணவும் பரி / கம நாமயோக / வும் இந்நாளா / ல் வீரகேரள வ / ற்ம சிறவாய் மூத்த / தம்பிரானார் கல்க் / குளத்து எழுந்த / ருளி இருந்தருளி / கல்ப்பித்த படி / க்கு ரண்டு வக / மகாசனவும் கூ / டி கல்ப்பித்த மொ / ளியாவது தோ / வாளைக்கு மேக் / கு கண்ணாற்று / க்கு கிழக்கு கட / லினும் மலைக்கு / ம் அகத்து அகப் / பட்ட நாட்டில் பில / பேடியும் மண்ணா / ப் பேடியும் இல்லா / எந்த நம் தம்புரா / ன் திருவுள்ளம் / பற்றிக் கல் / ப்பிச்ச ப / டிக்கு ரண் / டு வக மாச / னங் கூடி / கல்ப்பிச்சு / கல்லு வெ / ட்டி நாட்டி / ய கல்ப்பினை / மறுத்து பி / லப்ப பேடியு / மண்ணாப் / பேடியும் உ / ண்டாம் கா / லத்து / மண்ணாப் / பேடியும் வகி / ற்றுப் பிள்ள / ஆதியா தோ / ண்டி வெ / ட்டுமாறு / ம் இந்த க / ல்ப்பினை மறு / த்து பிலப் / பேடியும் ம / ண்ணாப் / பேடி எந் / த வகை பொண்ணு/ ம் பிள்ளை / க்கு உண்டா / யால் / ப் பெண்ணு / ம் பிள்ள / குளிச்சு / கர ஏறிக் / கொண் / டால் தோ / ழமல்ல / எந்நும் க / ல்ப்பிச்ச / து. இ வண் / ணம் புல் / லும் பூமி / யும் கல்லு / ம் காவே / ரியும் ஒள் / ள காலத் / து நடக்கு / மாறும் க / ல்ப்பிச் / சது. திருவயத்து ம / ற்ற கண்டு வ / த்திக் கரிக்கு / ம் திருவுள்ளம் ப / ற்றிக் கல்ப்பிச்சது./ திருவிதாங் / கோட்டு தெண்ட / ப்படை வீட்டில் / வடக்கு வாசலில் / கல்லு வெட்டி நாட் / டினது. இந்தக் / கல்லுக்கு யாதாமொ / ருத்தர் ஒரு கால / ம் யாதாம் ஒரு / வர் விக்கிநஞ் / செய்தார் அ / வர்கள் கெங்க / கரையில் காரா / ம் பசுவை கொ / ண்ட தோசத் / தில் போவா / ராகவும்.
சொற் பொருள்: கொல்லம் – கி.பி. 824-825 ல் தொடங்கிய ஒரு சேர ஆண்டுக் கணக்கு; வியாழம் - குருபார்வை ; சனியாழ்ச்சை – சனிக்கிழமை; பூர்வ பக்ஷம் - வளர்பிறை; எழுந்தருளி – வந்திருந்து; இருந்தருளி – தங்கியிருந்து; மகாசனம் – பொதுமக்கள்; கல்பித்த – வழிகாட்டிய, பிடிபாடு தந்த; மொழியாவது – உரையாவது, பேச்சு; கண்ணாறு – வாய்க்காலை ஒட்டி அமைந்த பாதை; எந்த – என்ற; தம்புரான் – வேந்தன், உயர்குடிமகன், noble man; கல்பினை – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; மறுத்து – மறுதலித்து, புறந்தள்ளி, reject; வகிற்று - வயிற்று; உண்டாம் – கருவுண்டாகும் சமயத்து; ஆதியா - ; எந்நும் - என்றும்; ஒள்ள - உள்ள; திருவயம் – வயம் என்றால் நீர், குதிரை என்ப்பொருள். திரு என்ற சிறப்படையை ஒட்டி திருக்குளம் என்ற கொள்ளலாம்.; வத்திக் கரி - ; தெண்டப்படை வீடு – படைக்கொட்டில்; யாதாம் ஒருவம் – எவரேணும் ஒருவர்; கொண்ட - கொன்ற;
விளக்கம்: கன்னி இராசியும் குருநோக்கும் நின்ற கொல்லம் ஆண்டு 871 (கி.பி.1695-1696) தை 27 ஆம் நாள் சனிக்கிழமை சதய நட்சித்திரம் கூடிய வளர்பிறையான இந்நாளில் வேணாட்டு வேந்தன் வீரகேரளன்வர்மன் சிறைவாய் மூத்தவர் கல்குளத்தில் வந்திருந்து தங்கியிருந்த காலப் பொழுதில் ஆணையிட்டபடி புலையர் வண்ணார் ஆகிய இரு சாதி பொதுமக்கள் கூடி இருக்க வழிகாட்டிநெறியால் சொன்னதாவது, தோவாளைக்கு மேற்கு வாய்க்காலுக்கு இப்பாலும் கிழக்கு கடலின் மலைக்கும் இடைப்பட்ட நாட்டில் புலைப்பேடி மண்ணாப்பேடி வழக்கம் இல்லாது ஒழிக என்று வேந்தன் முடிவு கொண்டு அதற்கு வழிகாட்டுநெறி வழங்கியபடி இரு வகை சாதிமாரும் கூடி பிடிபாட்டு வழிகாட்டுநெறியை ஏற்று அதைக் கல்லில் வெட்டி நாட்டிய உடன்பாடு. இந்த உடன்பாட்டு ஆணையைப் புறந்தள்ளிப் புலைப்பேடியும் மண்ணாப்பேடியும் ஏற்படும் காலத்தே மண்ணாப்பேடி வயிற்றுப் பிள்ளையை குழிதோண்டி வெட்டிக் கொல்ல வேண்டும். இந்த பிடிபாட்டை வழிகாட்டுநெறியைப் புறந்தள்ளிப் புலைப்பேடி, மண்ணாப்பேடி ஆகிய எந்த வகையால் பெண் கருவுற்றாலும் பெண்ணும் பிள்ளையும் தீட்டுகழியக் குளித்து கரை ஏறினால் எந்த தோஷமும் இல்லை குற்றமும் இல்லை என்றும் வழிகாட்டுநெறி தரப்படுகின்றது. இவ்வண்ணம் புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் நிலைக்கும் காலம் வரை இந்த பிடிபாடு செல்வதாகச் சொல்லப்பட்டது. இது திருவிதாங்கோட்டில் உள்ள படைக் கொட்டிலின் (armoury) வடக்கு வாசலில் கல்வெட்டி நாட்டப்பட்டது. இந்தக் கல்லுக்கு எவரேனும் ஒருவர் கேடு செய்தால் அவர் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற குற்றத்தை பாவத்தை அடைவராக என்று முடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஏதேனும் பேச்சில் ஈடுபடும் போது அதன் போர்க் கப்பல் அச்சுறுத்துவதற்காகவே அந்நாட்டை அண்மித்து நிறுத்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவது போல வேணாட்டு வேந்தர் பொதுவான இடத்தில் அழைத்து புலையர், வண்ணாரிடம் இந்த தடைஆணை பற்றி அறிவிக்காமல் படைக் கொத்தளத்திற்கு அழைத்து அவர்களை அச்சித்தின் பிடியில் வைத்து அறிவுறுத்துவது நோக்கத்தக்கது.
மேல் சாதி கீழ் சாதி கலப்பை சமூகத்தில் அறவே ஒழிக்கும் முயற்சி இது என்பது புலனாகின்றது. இது சரியான நடவடிக்கை என்றால் இதை ஏன் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தடைசெய்ய வேண்டும்? ஏன் முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தடை செய்யவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. அப்படியானால் புலையர், வண்ணார் போன்ற சாதிகள் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளிற் போல் இழிவாக, தாழ்வாக அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் எண்ணப் படவில்லை, நடத்தப்படவில்லை என்பதே காரணமாகலாம். காலத்தைச் சுற்றி வளைத்து சுருக்கியதில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டில் உருவாகி 17 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றது என்ற கருத்து தான் மேலெழுகின்றது. ஆனால் வெள்ளையர்கள் ஏதோ ஒரு மூலையில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மனுதர்மத்தை அச்சில் எடுத்துப்போட்டு அது தான் இழிவுபடுத்தியது, தாழ்வுபடுத்தியது, ஒடுக்கியது என்று சொல்வதைக் கல்வெட்டுச் சான்றுகள் பொய்ப்பிக்கின்றன. ஒரு இடத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமையை எல்லா இடங்களிலும் நிகழ்ந்ததாகக் காட்டுவது எத்தகு குற்றமோ அத்தகு குற்றம்தானே பிற்பட்ட நூற்றாண்டு சமூகக் கொடுமையை இன்னும் முற்றபட்ட நூற்றாண்டில் நடந்தேறியதாகக் காட்டித் திணிப்பதுவும், இதாவது 400 ஆண்டு கால நிகழ்ச்சியை 2,000 ஆண்டுகளாக இழித்து தாழ்த்தி ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதும்.
கல்வெட்டில் சேரநாட்டு பேச்சு வழக்குத் தமிழ் ஆங்காங்கே தலைப்படுகின்றது.
புலைப்பேடி மண்ணாப்பேடி பற்றி அறிய https://www.jeyamohan.in/20559#.XHtDP8Azbcc
10 ஆம் நூற்றாண்டில் புலையர் ஒருவர் ஆட்சியாளராக இருந்துள்ளார். ஆனால் அதே சமூகம் அடுத்த 600 ஆண்டுகளில் இழி நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது வேணாட்டு வேந்தர் வெட்டி நிறுத்திய கல்வெட்டு மூலம் தெரிகின்றது.
தென்னிந்திய வீரக் கற்கள் எனும் நூலுள், 2008, வெ. கேசவராஜ் மேற்கோல் காட்டி உள்ளது, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் குரும்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் கல்வெட்டு. ( தரு. கல்.1974 / 66)
ஸ்ரீ மாவலி வாண கொட்டி வேங்கை மீடிந்த / ஞான்று புலய மன்னர் புறமலை நாடாள / அவர் அடியான் இநொட்டைப் பெருவணயன் மகன் மகன் பட்டான் தாழன் அவர்க்கு / நெற்றமை பட்டி தீர ஏரிக் கீழ் அறு செறுவு / பேர் ஏரிக் கீழ் கருமீன் விற்று மணட்டி / இது அரமழித்தான் பாதகன்
கொட்டி - அடித்து; வேங்கை - வங்கத்து பெரும் புலி வகை; மடிந்த - செத்த; அடியான் - சேவகன், படைஆள்; மகன் - படைஆள்; கீழ் - கிழக்கே; செறுவு - வயல், அரசன் வழங்கும் நிலக் கொடை; மணட்டி(மணை + அட்டி) - தாழ்வான மண் தடுப்பு மேடை, மண் தடுப்பு; பாதகன் - துரோகி.
மாவலிவாண ராயனுக்குக் கீழ்ப்படிந்து புறமலை நாட்டை புலைய மன்னன் ஒருவன் ஆண்டு வரும் போது அவனுக்கு படைத் தலைவனாக விளங்கும் இநொட்டைப் பெருவணயன் என்பவனுடைய படைஆள் ஒருவனது மகன் தாழன் என்பவன். மாவலி வாணராயன் வேட்டையில் இருக்கும் போது தாழனை ஒரு வேங்கைப் புலி தாக்கிவிட அவன் வீர சாவு எய்துகிறான். அதே வேளையில் மாவலி வாண ராயன் அந்த வேங்கை மீது அம்படிக்க அது செத்துப் போகின்றது. மாவலிவாண அரையன் கண்முன்னே தாழன் இறந்ததால் அவனுக்கு நெய்த்தோர் பட்டி நிலமாக தீர ஏரிக்குக் கிழக்கே ஆறு அளவை வயலும், பேர் ஏரிக்குக் கிழக்கே கருமீன் விற்பதற்கு மண்தடுப்பு மேடையும் தானமாக வழங்கப்பட்டது. இந்த அறம் அழித்தவன் ஒரு பாதகன் என சுட்டப்பட்டு உள்ளது. அல்லது மிடிந்த (மிடுக்கு) என்பது விரைந்த என்று பொருள்படுமானால். மாவலி அடித்த அம்பிற்கு மிரண்டு விரைந்து ஓடிய வேங்கை எதிரே மறித்த தாழனைக் கொன்றது அதனால் அவனுக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது எனக் கொள்ளலாம்.
இக்கல்வெட்டின் வாயிலாக 10 ஆம் நூற்றாண்டில் புலையரும் நாடாண்டு உள்ளனர் எனத் தெரிகின்றது. மதம் நன்கு வேரூன்றியதற்கு அடையாளமாக பாதகன் என்ற சமற்கிருத சொல் ஆளப்பட்டு உள்ளது.
விந்தையாக புலையர் ஒருவர் ஆட்சியாளராக 10 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளார் என்பதை ஒரு நடுகல் காட்டுகிறது . ஆனால் அதே சமூகம் அடுத்த 600 ஆண்டுகளில் இழி நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது வேணாட்டு வேந்தர் வெட்டி நிறுத்திய கல்வெட்டு மூலம் தெரிகின்றது.