இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது” (நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்.

196 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Mar 28, 2021, 11:03:13 PM3/28/21
to வல்லமை
image.png

image.png

image.png

image.png

image.png

image.png
இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது” (நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்.
யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History, University of London) இவர், இலங்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். வரலாறு, சமயம் தொடர்பிலான பல நூல்களை எழுதியவர். இவற்றில் ‘இலங்கை தமிழ் சாசனங்கள்’, ‘இலங்கைத் தமிழர் வரலாறு’, ‘கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்’ (கி.மு 250- கி.பி 300), ‘The Kingdom of Jaffna’, ‘வன்னியர் யாழ்ப்பாணம்’ போன்ற வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
அண்மைக் காலமாக இலங்கையில் தமிழர்களின் தொன்மையான இருப்பை, மேம்பட்ட வாழ்வியலை தொல்லியல் சான்றுகளின் ஊடாக வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில் அரும் பணியாற்றி வரும் பேராசிரியர் அவர்களை ”இலக்கு” நேர்காண்கின்றது .
கேள்வி–புறச்சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர்களின் இருப்பு எவ்வளவு காலத்திற்கு முற்பட்டது என உறுதியாக நிறுவ முடியும்? அவ்வாறு கருதக்கூடிய முக்கிய சான்றுகளாக நீங்கள் எவற்றை எடுத்தாள்கின்றீர்கள்?
தமிழர்களின் இருப்பு என்று சொல்வதிலும் பார்க்க தமிழ் மொழி பேசுவோரின் இருப்பு என்று சொல்வது பொருத்தமானது. ஏனென்றால், தமிழ் மொழி பேசுவோரிடையே புராதன காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இயக்கருக்கும், நாகருக்கும் இடையில் அமைந்த கலப்பினைப் பற்றிப் பேசுகின்றது. “இயக்கரோடு கூடி வலியராகி நாகர் நகரெல்லாம் ஆட்சி செய்தனர்” என்று அந்நூல் குறிப்பிடுகின்றது. காலவரையறை பற்றி பேசுமிடத்து தமிழ் மொழியானது இலங்கையைப் பொறுத்தவரையில் பெருங்கற்கால பண்பாட்டோடு தொடர்புடையது.
அந்தப் பண்பாடு கி.மு 8ஆம் நூற்றாண்டிலே இங்கு பரவத் தொடங்கி விட்டது. அண்மைக் காலத்தில் எமக்குக் கிடைத்த ஆதார பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் நாகர்களே பெருங்கற்கால பண்பாட்டை இலங்கையிலே பரப்பினார்கள். நாகர் மூலமாகவே தமிழ் மொழி பரவியது என்றும் கூறலாம்.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட அரும்பொருட்கள், பண்பாட்டுச் சின்னங்கள் பலவகைப்பட்டவை. அவை அன்றாட வாழ்வில் பயன்படுத்திய அம்மி, குளவி, உரல், ஆட்டுக் கல், எண்ணெய் வடிக்கும் செக்கு முதலானவற்றிலும், வழிபாட்டு சின்னங்களாகிய நாக வடிவங்கள், நாக சிற்பங்கள், சிவலிங்க வடிவம், சைவ சின்னங்களான நந்தி, வாகனங்களான எலி, நாய் ஆகியவற்றிலும் சில விநாயகர், வைரவர், அம்மன் போன்ற சைவ சமய வடிவங்களிலும் காணப்படுகின்றது. இது மட்டுமன்றி வழிபாட்டுத் தலங்களில் அடிமட்ட அத்திவாரங்களிலும்கூட தமிழ் மொழியில் எழுத்துப் பொறித்த நாகரைக் குறிப்பிடும் வசனங்கள் காணப்படுகின்றன.
அதேபோல பௌத்த சமய வழிபாட்டு சின்னங்களாகிய புத்தர் பெருமானுடைய சிற்பங்கள், போதிசத்துவர் வடிவங்கள், புத்தர் பாதம் முதலானவற்றிலும் தமிழ் மொழியில் நாகரைக் குறிப்பிடும் வசனங்கள் காணப்படுகின்றன.
கேள்வி – இலங்கையில் தமிழரின் தொன்மையான இருப்பை எடுத்துக் காட்டும் முக்கிய தொல்லியல் சான்றுகளாக நீங்கள் எவற்றைப் பார்க்கின்றீர்கள்?
தொல்லியல் அடிப்படையிலே தமிழர் பண்பாடு தொடர்பான மிக காலத்தால் முற்பட்ட தொல்பொருள் சின்னங்கள் பெருங்கற்கால பண்பாட்டை சேர்ந்தவை. அண்மைக் காலத்தில் பெருந்தொகையான இடங்களில் நாட்டின் பலபாகங்களிலும் இந்தச் சின்னங்கள் அகழ்வாய்வுகளின் மூலமாக அறியப்பட்டுள்ளன. இவற்றின் ஆய்வுகளைப் பற்றிய விபரங்கள் தொடர்பாக மிக அரிதாகவே அறிக்கைகள் வெளிவந்தன.
பொன்பரிப்பு, மாந்தை, திஸ்ஸமகாரகம, அநுராதபுரம் ஆகிய இடங்களிலேயே தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் அகழ்வாய்வுகளை கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பெருந்தொகையான பெருங்கற்கால பண்பாட்டு சின்னங்கள் இலங்கைத் தமிழர்கள் வாழும் பகுதியில் கிடைக்கின்ற போதிலும். அவை கந்தரோடையைத் தவிர ஏனைய இடங்களில் அகழ்வாய்வு செய்யப்படவில்லை.
கந்தரோடையிலும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு Poul E Peirs நடத்திய மேலோட்டமான ஆய்வுகளைப் பற்றி அவர் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1966இல் தொல்பொருள் திணைக்கள அதிபராக இருந்த கொடக்கும்புர தலைமையில் கந்தரோடையில் மீண்டும் ஒரு அகழாய்வு தொட்டம் தொட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரும் தனது அறிவுக்கு எட்டியவாறு அங்கு கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றைப் பற்றி ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அங்கு அந்நாட்களில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் யாழ்ப்பாணத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் பலவகையான பொருட்கள் உள்ளன.
எழுத்துப் பொறித்த கலவோடுகள், மட்பாண்ட துண்டங்கள், வழிபாட்டுச் சின்னங்களாக பயன்படுத்திய சதுர வடிவ கற்கள் ஒன்று அல்லது இரண்டு பயன்பாட்டிலிருந்த கல்லில் குடையப்பட்ட நீர்த்தொட்டி ஒன்று, குளக்கட்டில் பாவனையில் இருந்த கல்லில் குடையப்பட்ட சிறிய கலன்கள் – அவை மருந்துகள் செய்ய பயன்பட்டிருக்கலாம். இவற்றோடு மிகப் பெருமளவிலான மணிகள் பலவகைப்பட்டவை, அறுத்த சங்குகளின் துண்டங்கள் கண்டறியப்பட்டன. சங்குகள் காணப்படவில்லை. மணிகள் பெருமளவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி பாவனைப் பொருட்களான களி மண்ணில் செய்யப்பட்ட 4 அலகுகளைக் கொண்ட ஒரு அழகான விளக்கு, சில படிமங்களும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் இவை நெடுங்காலமாக ஒழுங்குபடுத்தப்பட்டு விபரக் குறிப்புக்களோடு வைக்கப்பட்டிருக்கவில்லை.
இப்பொழுது தான் இவற்றை மரப்பெட்டிகளிலோ, அலுமாரிகளிலோ வைத்துப் பேணுகிறார்கள். ஆனால் அவற்றைப் பற்றிய விபரக் குறிப்பு ஏடுகள் எதுவும் அங்கில்லை. அங்கு இருக்கின்றவர்களுக்கும் அவற்றிலே இருக்கின்ற எழுத்துக்களை தெரிந்து கொள்கின்ற தகமை காணப்படவில்லை.
இவற்றை எல்லாம் எம்மால் பார்க்க முடிந்தது. தொல்பொருள் திணைக்கள அனுமதி பெற்றே அந்நாட்களில் இவற்றை எம்மால் பார்க்க முடிந்தது. பார்த்து படமெடுப்பதற்கு அந்நிறுவனத்தில் உள்ளவர்கள் தமக்கு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என்றே சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்தக் கட்டுப்பாட்டுகளின் காரணமாகவும், அக்கறையின்மையாலும் புலமையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்ற தொல் பொருட்களை ஆராய முற்படவில்லை.
இதற்கிடையில 2011ஆம் ஆண்டு முதலாக யாழ். பல்கலைக்கழகமும், அவர்களுடன் தொல்பொருள் திணைக்களத்தினரும் சில அகழ்வுகளை நடத்தியிருக்கின்றார்கள். இது தொடர்பான எழுத்து வடிவமான அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. சில பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிகளில் இங்கு காணப்படும் பொருட்கள் பற்றி மிகச் சுருக்கமான விளக்கத்தை திரான் தெரணியகல வழங்கியுள்ளார்.
மாந்தையைப் பொறுத்தவரையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் எல்லாம் அநுராதபுரத்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்ப்பது மிகவும் சிரமமானது.
நாங்கள் பேசுகின்ற நாகர் பற்றிய தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பண்பாட்டுச் சின்னங்கள் பெரும்பாலும் அகழ்வாய்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்படாதவை. மேலாய்வின் மூலமாக அறியப்படுபவை.
இவற்றிலே தமிழ் பிராமி வடிவங்களில் எழுத்துக்கள் இருப்பதால், அவற்றின் கால எல்லையை கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவையாக வரையறை செய்து கொள்ள முடிகின்றது. சில எழுத்துக்களைப் பொறுத்தவரையில் வரிவடிவ வளர்ச்சியை எம்மால் வரையறை செய்ய முடிகின்றது.
மட்டக்களப்பிலுள்ள நாவற்குடா, நெடியமடு, பாலாமடு, திருகோணமலையிலுள்ள செம்பி மலை, வவுனியாவிலுள்ள நெடுங்கேணி ஆகியவற்றிலே காலத்தால் மிகவும் பிற்பட்ட ஓரளவு உருமாறிய தமிழ்ப் பிராமி வடிவங்கள் காணப்படுகின்றன. அவை நான்காம், ஐந்தாம் நூற்றாண்டிற்குரியவை.
ஏனையவை அவற்றிற்கு முற்பட்ட காலத்திற்குரியவை. மட்டக்களப்பு வெல்லாவெளி, வந்தாறுமூலை, இலாவாணை, வேரம், வாகரை ஆகிய பகுதிகளிலும் திருகோண மலையில் அகஸ்தியர் ஸ்தாபனம், கோணேசர் கோவில் பகுதியில் காணப்படும் சின்னங்கள் கி.மு. 2ஆம், 3ஆம் நூற்றாண்டிற்கு உரியவை என்பதை எழுத்துகளின் உருவ அடிப்படையில் உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
கேள்வி -அகழாய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும்கூட இலங்கையில் வேறு எந்தப் பகுதியையும்விட கிழக்கில் அதிக பிராமி வடிவங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. அதற்கான காரணங்கள் என்ன?
இதுவரை காலமும் தமிழ்ப் பிராமி வடிவங்களை அங்குள்ள எவரும் அறிந்திருக்கவில்லை. தாம் வாழும் சுற்றாடலிலும், காட்டுப் பகுதிகளிலும், வயல் நிலங்களிலும் இருக்கக்கூடிய பண்பாட்டுச் சின்னங்களை அவர்கள் அவதானித்திருந்தும் அவற்றினுடைய பெறுமதியை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏறக்குறைய 10 – 12 ஆண்டுகளுக்கு இடையில் தான் இதுபற்றிய உணர்வு ஏற்படலாயிற்று.
அங்கு தொழில் புரிகின்ற சில கலாசார உத்தியோகத்தர்களும், சில நவீன மருத்துவம் கற்ற வைத்தியர்களும், கல்லூரி ஆசிரியர் சிலரும் விநோதமான பொருட்களைக் கண்டு படங்களை எடுத்து அவற்றிலே ஏதோ அதிசயமான விபரங்கள் இருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் எழுத்துக்களை அவர்களால் புரிய முடியவில்லை.
நாவற்குடாவில் கலாசார உத்தியோத்தகராக இருக்கின்ற எழில்வாணி பத்மகுமார் தான் முதன் முதலாக எம்மைத் தொடர்பு கொண்டு இவற்றைப் பற்றி எமக்கு அறிமுகம் செய்தார். அதன் விளைவாகவே இவற்றின் புகைப்படங்களை பெற்று ஆராய்ந்ததோடு அவை காணப்படும் இடங்களுக்கும் நாங்கள் பிரயாணம் செய்து நேரிலே அவதானித்து அந்தச் சமயங்களில் படங்களை எடுத்தோம்.
அதிக உயர்வான மலைகளிலும், காட்டுப் பகுதிகளிலும் உள்ளவற்றை என்னால் பார்க்க முடியவில்லை. மற்ற எல்லாவற்றையும் நேரிலே சென்று பார்க்க முடிந்தது. அம்பாறையிலுள்ள சங்கமன்கண்டி போய் அங்குள்ளவற்றை பார்க்க முடிந்தது. இது தற்செயலாகத் தான் கிடைத்தது.
நாங்கள் முதன் முதலாக வெல்லாவெளி, விவேகானந்தபுரம், படலைக்கல் என்னும் இடங்களுக்குச் சென்றோம். எம்முடன் இந்து கலாசார திணைக்களம் மட்டக்களப்பில் நடத்திய சாசனவியல் பயிலரங்கில் பங்கு கொள்வதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்த தமிழ்நாடு தொல்லியல் துறை திணைக்கள சிரேஸ்ட சாசனவியலாளர்களான ராஜகோபால், வேதாசலம், சாந்தலிங்கம் முதலானவர்களும் வந்திருந்தார்கள்.
இந்த இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களே முதலாவதாக எம்மால் கண்டறியப்பட்டது. பானை ஓடுகளிலும், காசுகளிலும் தமிழ் வாசகங்கள், தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டிருப்பதை முன்பு சிலர் கண்டு அவற்றைப் பற்றி கட்டுரைகளை எழுதியிருந்தார்கள். ஆனால் கல்லிலே வெட்டப்பட்ட தமிழ்ப் பிராமி வடிவங்களிலான ஒரு கல்வெட்டு என்ற வகையில் இதுதான் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதிலே இஸ்காவு காலத்து ஆந்திர நாட்டு எழுத்துக்களின் செல்வாக்கு இருப்பதனால், இந்தக் கல்வெட்டு 4ஆம், 5ஆம் நூற்றாண்டிற்கு உரியது என்று நாம் அதை அடையாளப்படுத்தினோம்.
இவை பற்றிய செய்திகள் ஊடகங்கள் வாயிலாக மாத்திரம் சர்வதேச மட்டத்திலும் மிக வேகமாகப் பரவியது. அதன் எதிரொலியாக கிழக்கிலங்கையிலே பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு தரப்பினரிடையேயும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. பல்கலைக்கழகம் தான் இதற்கு புறநடையாக இருந்தது.
அதற்கு வெளியில் இருந்தவர்கள் தான் அதிகமாக இவற்றிலே கவனம் கொண்டு தம்முடைய இருப்பிடங்களில், சென்று வழிபடுகின்ற ஆலயங்களில், வேறு இடங்களில் காணப்படுகின்ற எழுத்துப் பொறித்த கற்கள், வேறு பொருட்களை எல்லாம் படமெடுத்துக் காட்டத் தொடங்கினர். இதனால் தான் சடுதியாகவும், மிக வேகமாகவும் விரைவிலே தமிழ் பெயர்கள் பொறித்த மிகப் புராதனமான சின்னங்களை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், திருகோணமலையிலும் இனங்காண முடிந்தது.
இதிலே சிறப்பம்சம் என்னவென்றால், எழுத்துப் பொறித்த சில தொல்பொருள் சின்னங்கள், பெருங்கற்கால பண்பாட்டிற்குரியனவாகும். கதிரவெளியில் ஒரு கல்மேசை இருப்பதாக முன்பு கூறினார்கள். ஆனால் அதை இப்போது காணவில்லை. குருநாகல் மாவட்டத்தில் பதிய கம்பளை என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான அளவுடைய பெருங்கற்கால பண்பாட்டுக் காலத்திற்குரிய கல்லறை காணப்படுகின்றது.
நான்கு மாதங்களுக்கு முன்பு அதை நான் சென்று பார்த்த போது அதிலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்களும், ஐந்து தலை நாகம், நாக தந்த உருவங்கள், ஒருதலை நாக வடிவங்கள் எனப் பலவற்றை அவதானிக்க முடிந்தது.
அடுத்து வெல்லாவெளியிலும், வாகரையிலும் ஈமக் கல்லறைகளை சுற்றிய இடங்களில் அடுக்கி வைக்கப்பட்ட கற்களிலும் எழுத்துக்களை, வாசகங்களை கண்டோம். ஒரு இடத்திலே பாம்பு வடிவமும் பொறிக்கப்பட்டிருந்தது.
இவற்றிற்கு அப்பால் இபன்கட்டுவ என்னுமிடத்தில் பெருந்தொகையான கல்லறைகளை அகழ்வு செய்துள்ளார்கள். கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் அங்கு ஒரு விசாலமான பெருங்கற்கால பண்பாட்டு மக்களின் ஈமக்காடு அமைந்துள்ளது. அங்குள்ள கல்லறைகளின் சுவர்கள் அல்லது கற்பலைகளில் தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.
கேள்வி-தமிழ் மொழியின் தொன்மை தொடர்பான தமிழ் நாட்டின் தொல்லியல் சான்றுகளுக்கும் இலங்கையில் காணப்படும் தொல்லியல் சான்றுகளுக் குமிடையேயான பொதுமைத் தன்மைகள்,வேறுபாடுகள் பற்றிக் கூறமுடியுமா?
தமிழர் தொடர்பான பெருங்கற்கால பண்பாடு தமிழகத்திலிருந்து தான் இலங்கையில் பரவியது. மொழி, உற்பத்திமுறை, பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றில் வேறுபாடு இல்லை. எழுத்து முறை தமிழ்நாட்டைப் போல இங்கும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கலவோடுகள் பெருங்கற்கால பண்பாட்டு சின்னங்களோடு தான் காணப்படுகின்றன.
பிரதானமான வேறுபாடு வழிபாட்டுச் சின்னங்கள், கட்டுமானங்கள் என்பனவற்றைப் பற்றியதாகும். கீழடியில் அகழாய்வு செய்தவர்கள் அங்கு வழிபாட்டுச் சின்னங்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இலங்கையில், கிழக்கிலங்கையிலும் ஏனைய இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பெரும்பாலும் வழிபாடுகளோடு தொடர்புடையவை. நாக சிற்பங்கள் நாகருடைய வழிபாட்டுடன் தொடர்புடையவை. அதுபோல பெருங்கற்காலத்து கல்லறைகளில் நாகத் தலைகள், திரிசூலம் என்பனவும் இடையிடையே காணப்படுகின்றன.
பௌத்த பள்ளிகளிலும்கூட நாக வடிவங்கள் காணப்படுகின்றன. ஐந்து தலை நாகம் காணப்படுகின்றது. அதேவேளை தூண் நிரைகள் சிலவற்றிலும் சிறிய அளவிலான நாக வடிவங்கள் காணப்படுகின்றன. இங்கு நான்கு வழிபாட்டு முறைகள் பற்றிய தமிழ்ப் பிராமியில் பொறிக்கப்பட்ட பண்பாட்டுச் சின்னங்கள் உள்ளன. நாக வழிபாடு, சைவ சமய வழிபாடு சார்ந்த லிங்கம், நந்தி போன்ற உருவங்கள், பௌத்த சமய வழிபாடு தொடர்பான புத்தர் வடிவங்கள், திருப்பாத வடிவங்கள் போன்றவற்றிலும் அவை காணப்படுகின்றன. அதுபோல முன்பு கூறியது போல சமண சமயம் சம்பந்தமான ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது.
இரண்டாவது வேறுபாடு கட்டுமானங்களைப் பற்றியதாகும். இலங்கையில் நாகர்கள் தூண் தாங்கு கற்கள் என்று சொல்லக்கூடிய வடிவங்களை பரவலாக பயன்படுத்தியுள்ளார்கள். இவை கற்பிட்டி முதல் பருத்தித்துறை வரையிலும், கந்தரோடை முதல் சங்கமன்கண்டி வரையிலும் காணப்படுகின்றது ஒரு விசேட அம்சமாகும். தூண் தாங்கு கற்கள் தமிழகத்தில் இருந்தமைக்கான சான்றுகள் வெளிவரவில்லை.
அதுமட்டுமன்றி,பல்லவர்களுடைய கட்டுமானங்கள் கற்களில் உருவாவதற்கு முன்னரே இலங்கையில் நாகர்கள் சிற்பக் கலையிலும், கட்டிடக் கலையிலும் பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளார்கள். கற் தூண்கள் அமைந்த கட்டிடங்கள் பல இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் அமைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் மத்திய பகுதியில் அநுராதபுரம் போன்ற பகுதியில் காணப்படுகின்ற ஆதியான கட்டுமானங்கள் நாகருடைய கலைப்பாணியில் அமைந்தவை. அதேபோல பிற்காலத்திலே அலங்கார வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட சந்திர வட்டக் கற்கள் என்னும் அமைப்புக்கள் நாகர்கள் தங்கள் கட்டிடங்களிலே வாயிற் கதவுகளாக வைத்த அரை வட்டக் கற்களை மூலமாகக் கொண்டவை.
மேலும் யாழ்ப்பாணத்தில் நவாலி,மாவிட்டபுரம்,வல்வெட்டித்துறை போன்ற இடங்களிலும் கல்முனை சேனைக்குடியிருப்பு தாந்தாமலை ஆகிய இடங்களிலும் தூண்களோடு கல்லினால் அமைந்த கட்டிடங்களை அமைப்பதற்கும் அவர்கள் பழகியிருந்தார்கள் என்று கொள்ள முடியும். அதுபோல இலங்கையிலே அதி உன்னதமான பழைய சிற்பம் என்று கருதப்படும் இசுறுமுனியாவில் உள்ள குதிரைத் தலையுடன் கூடிய ஐயநார் வடிவமும். நடனமாதர் சிற்பங்களும்ää சேருவிலவில் காணப்படும் அதி உன்னதமான அளவிலே பெரிய புத்தர் பெருமானின் கற்சிற்பங்களும் நாகர்களுடைய வேலைப்பாடு என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது.
கேள்வி -யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாச்சார மற்றும் இயற்கை நினைவுச் சின்னங்கள் தொடர்பான வரையறைவுகள் எவை? இலங்கையில் அவ்வாறு ஏதாவது சின்னங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா? இலங்கையில் அவ்வாறான வரையறைக்குள் அடங்கக்கூடிய தமிழர் பாரம்பரிய, கலாச்சார மற்றும் இயற்கை நினைவுச் சின்னங்கள் எவையாக அமையலாம் என நீங்கள் கருதுகின்றீர்கள்? அவ்வாறான அங்கீகாரத்திற்காக ஏதாவது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளனவா?
யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டியதென தீர்மானிப்பதற்கான சில பரிமாணங்கள் உண்டு. அவை பொதுவானவை. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். யுனெஸ்கோ நிறுவனம் அரசாங்கங்களோடு தான் தொடர்பு கொள்வதுண்டு. தனியார் நிறுவனங்களோடோ, அல்லது நாட்டிலுள்ள பிராந்திய சபை, பிரதேச சபை ஆகியவற்றோடு தொடர்பு கொள்ளும் அதிகாரமும் வழக்கமும் இல்லை.
அரசாங்கத்தினாலே சிபார்சு செய்யப்படுகின்ற தலங்களைத் தான் அவர்கள் பரிசீலனை செய்வர். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அதனுடைய கலாசார திணைக்களமும், தொல்பொருள் திணைக்களமும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதலாக எத்தகைய அணுகுமுறையை கையாள்கின்றன, பின்பற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை.
ஆரம்பத்திலே அவர்கள் பழைய இராசதானிகளான அநுராதபுரம், பொலநறுவை, கண்டி, தம்புள்ள போன்றவற்றை தான் பெருமளவில் சிபார்சு செய்தார்கள். இவை அனைத்தும் பௌத்த சமயம் தொடர்பானவை. பொலநறுவையிலும், கண்டியிலும் இந்துக் கோயில்களும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பற்றி எவரும் பேசுவதில்லை.
பொலநறுவையில் உள்ளவை சிவாலயங்ககளின் அழிபாடுகள் பல இப்பொழுது காணப்படுவதில்லை. முதலாம் சிவாலயம்,இரண்டாம் சிவாலயம்,ஐந்தாம் சிவாலயம் என்பனவே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக கொள்ளப் படுகின்ற போதிலும் தேடுவாரற்ற நிலையிலே காணப்படுகின்றன. தமிழர்களின் அல்லது இந்துக்களுடைய நிறுவனங்கள் என கொள்ளுவோமாயின் கொள்ளுவோமாயின்,அநுராதபுரம்,பொலநறுவை போன்ற இடங்களைப் போல புராதன கட்டிடங்களின் அடிபாடுகள் குவிந்து காணப்படும் இடங்களில்லை.
அவை போர்த்துக்கேயரால் முற்றாக அழிக்கப்பட்டதனால், அவற்றின் அழிபாடுகளின் எச்சங்களும் காணப்படுவதில்லை. முன்னேஸ்வரம், திருகோணமலை அகஸ்தியர் ஸ்தாபனம் போன்ற இடங்களில் யுனெஸ்கோவின் ஆதரவில் பாதுகாப்பை தேடலாம். ஆனால் இவற்றை ஒருவரும் முன்வைக்கவில்லை.
முன்வைப்பதானால் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணை வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் கலாசார நிறுவனத்தின் அனுசரணை வேண்டும்.இவற்றை இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாது. ஒருமுறை திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்,மாவிட்டபுரம், திருக்கோணேஸ்வரம் முதலிய ஆலயங்களின் புராதன சின்னங்களை யுனெஸ்கோ பாதுகாப்பு சின்னங்களான பிரகடனப்படுத்த வேண்டுமென முன்னொரு காலத்திலே இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஒரு தமிழர் விரும்பினார்.
அதற்காக ஒரு கூட்டம் கைலாசபிள்ளையின் வீட்டிலே கூட்டப்பட்டது. தொடக்கத்தில் அவர்கள் என்னை அழைக்கவில்லை. தமிழர் தரப்பில் கூடியவர்கள் என்னை அழைக்கவில்லை. ஆனால் சிங்களவர் தரப்பிலுள்ளவர்கள்இ பழைய தொல்பொருள் திணைக்களத்தினரும்,வேறு சிலரும் வற்புறுத்தியதனால் தான் கூப்பிட்டார்கள். இது ஒரு முக்கியமான விடயம் அங்கு கூடிய தமிழர் எவருக்கும் தொல்லியல் வரலாறு பற்றி அறிவு இல்லை.
காலம் போக இந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்கள் தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், கலாசார அமைச்சைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய உள்நோக்கமும் வேறாக இருந்தது. அப்படி இவற்றை தொல்லியல் சின்னங்களாக்க வேண்டுமானால், இவற்றுடன் கோட்டைகள், துறைமுகங்கள் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டுமென்று மறைந்த தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளரான றோலன் டி சில்வா சொன்னார்.
இது ஒரு ஆபத்தான திட்டம். ஏனெனில், கோட்டைகள் என்று சொல்லும் போது இராணுவமயமாகும். இதுபோலவே துறைமுகங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். எங்கள் ஆலயங்களும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் போகும். யுனெஸ்கோ என்று சொன்னாலும் நிர்வாகம் செய்பவர்கள் இங்குள்ளவர்களே. அப்போது தான் எனக்கு புரிந்தது யுனெஸ்கோவின் ஆதரவை நாடுவது ஆபத்தானது.
கேள்வி -இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இருப்புத் தொடர்பில் அகழாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கிய இடங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கின்றீர்கள்? இந்த அகழ்வாய்வுகளை வட கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?
ஏற்கனவே மாந்தையிலும், கந்தரோடையிலும் அகழாய்வுகளை செய்துள்ளோம். மாந்தையிலே பல தடவைகளாக தொல்பொருளியல் திணைக்களத்தினுடைய அனுசரணையோடு,வெளிநாடுகளைச் சேர்ந்த புலமை மிக்க தொல்லியலாளர்கள் அகழ்வுகளை செய்துள்ளனர். புலமை மிக்கவர்கள் என்று சொல்லுகின்ற போது அவர்கள் பல நாடுகளிலும், பல தலங்களிலே அகழாய்வுகளை செய்திருக்கிறார்கள். ஒப்பியல் நோக்கில் சர்வதேச தொடர்புகள், அக்காலங்களில் நடைபெற்ற சர்வதேச வாணிபம், பொருட் பரிவர்த்தனை முதலியவற்றிலே தான் அவர்களுக்கு கூடுதலான அக்கறையும்,அனுபவமும் உண்டு.
அகழ்வு நடைபெறும் பிராந்தியத்தின் வரலாறு,பண்பாடு தொடர்பான ஆழமான புலமை அவர்களிடம் காணப்படவில்லை. அதுமட்டுமன்றி இவர்கள் யுனெஸ்கோ மூலமாக வருவதனாலும் இலங்கை அரசாங்கத்தின் நிறுவனமான தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையோடு அகழ்வுகளை செய்வதாலும், எந்தளவிற்கு வெளிப்படைத் தன்மையை இவற்றிலே காண முடியும் என்பது கேள்விக்குறியானது.
ஏனெனில், ஒரு துறை அரசியல்மயமாக்கப்பட்டிக்கின்ற போது, வெளிநாடுகளிலிருந்து பங்கு கொள்பவர்களும் ஏதோவொரு காரணமாக கட்டுப்பாடுகளுள் அடங்க வேண்டிய தேவைகள் இருக்கும் போது வெளிப்படையான கருத்துக்களை நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
உதாரணமாக அநுராதபுரத்திலும் திஸமகாராமவிலும் அகழாய்வுகளை நடத்திய வெளிநாட்டவர்கள் அங்கு பானையோடுகளில் உள்ள எழுத்துக்களை பற்றி அறிக்கை வெளியிட்டனர். ஆனால் மாந்தையில் அகழாய்வு நடத்தியவர்கள் அதை செய்யத் தவறி விட்டார்கள். அதுவும் சற்று பிந்திய காலத்தில் தான் அது துறைமுகம் சிறப்புப் பெற்றது என்ற காரணத்தினால் பானைகளில், மட்பாண்டங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் அறிக்கையில் அது பற்றி ஒரு கதையும் கதைக்கவில்லை.
இரண்டாவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களோடு திருக்கேதீஸ்வரம் சென்ற போது அகழாய்வு நடந்த ஒரு இடத்தை நாங்கள் பார்க்கப் போனோம். அங்கே சில மாணவர்கள் பொறுக்கியெடுத்த தரை மேல் காணப்பட்ட கலவோடுகள் சிலவற்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றை நாங்கள் ஒரு நூலிலும் வெளியிட்டுள்ளோம். அவற்றை வாசிக்கத் தெரிந்தவர்கள் அவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இதுபோல கந்தரோடையில் Poul E Peris அகழாய்வு செய்த போது அவரிடம் பிராமி எழுத்துக்களை வாசிக்கும் தன்மையை நாங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. பின்பு சென்ற நூற்றாண்டிலே 66ஆம் ஆண்டில் அகழாய்வுகளை நடத்திய போது அவர்கள் எழுத்துக் பொறித்த மட்பாண்டங்கள் குறித்த எதுவித கதையும் இல்லை. ஆனால் அவற்றில் கிடைத்த கலவோடுகள் யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. கலவோடுகளிலும்,சுடுமண் கட்டிகளிலும், களிமண் கட்டிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ்ப் பிராமியில் உள்ளன. இதை ஒப்புக் கொள்ளுவதற்கு அங்குள்ளவர்களே தயங்குகின்றனர். அப்பொழுது மற்ற இடங்களில் ஆய்வுகளை செய்தால் என்ன நடக்கும். இன்றைய நிலையில் ஆய்வுகளை செய்தால்,இப்படியான சில குறைகள்,தவறுகள்,மௌனங்கள் காணப்படும்.
மற்றது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையினர் கந்தரோடையிலும்,வன்னி மாவட்டங்களிலுள்ள நாகபடுவான், கட்டுக்கரைக் குளப்பகுதியிலும் அகழாய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னைய இரண்டிலும்காணப்பட்ட பொருட்கள் மிக முக்கியமானவை.
நான் முன்பு சொன்ன கருத்துக்களுக்கு அழுத்தம் அளிக்கின்ற வகையில் அவர்களுடைய கண்டுபிடிப்புக்கள் அமைந்தன. பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் அந்த அகழ்வுகளில் கிடைத்துள்ளன. கரும் செம் மட்பாண்டத் துண்டங்கள், சில வழிபாட்டு சின்னங்கள், கரும் செம் மட்பாண்டத் துண்டங்களோடு குளக்கட்டிலுள்ள சிவப்பு மட்பாண்டங்கள், றுலல் (rulel pottery) மட்பாண்டங்கள்,ரோமர் காலத்து நாணயங்கள், நாகர் வழங்கிய காசுகள் போன்றவை அங்கு கிடைத்துள்ளன. இவற்றை பற்றிய அறிக்கைகள் வெளிவரவில்லை. பத்திரிகைகளில் வெளியிட்ட சில கட்டுரைகளைக் கொண்டே இவற்றை நாம் அறிய முடிந்தது.
இருந்தும் வன்னியில் நடைபெற்ற அகழ்வுகளை இவர்களால் தொடர முடியவில்லை. மேலிடத்திலிருந்து அனுசரணை கிடைக்கவில்லை. இவற்றை பற்றிய அறிக்கைகளும் வெளிவரவில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அங்கு அகழாய்வுகளை மேற்கொள்ளக்கூடிய தகமையை எவரும் இன்னும் பெறவில்லை. தொல்பொருள் சின்னங்களை தேடுவதற்கு கூட அவர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. அந்த நிலையில் அந்த நிறுவனத்தைப் பற்றி பேசுவது இப்பொழுது பொருத்தமாகாது.
முறையான அகழ்வுகளை செய்து வெளிப்படையாக விபரங்களை பெற வேண்டுமானால்,இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதிகமான அதிகாரப் பரவல் இந்திய மாநிலங்களுக்குரிய வகையில் ஏற்பட்டால் தான் இவற்றை உரிய முறையில் கொண்டு செல்ல முடியும். இப்பொழுது மாகாண சபையின் அதிகாரங்களில் பொதுப் பட்டியலில் தொல்லியலும் அருங்காட்சியகங்களும் இடம்பெறகின்ற பொழுதிலும் மாகாண சபைகளினாலே இவை தொடர்பாக எதையும் மேற்கொள்ளவில்லை. நிறைவேற்று அதிகாரம் ஆளுநரின் வசம் இருப்பதே இதற்கான காரணம்.
தமிழ்நாட்டில் கீழடி பற்றிய அகழாய்வுகள் சர்வதேச பரிணாமத்தைப் பெற்றுள்ளன. அங்கு மத்திய அரசின் தொல்லியல் திணைக்களம் நாட்டின் பல பாகங்களில் அகழ்வுகளை வெளிப்படைத் தன்மைகளோடு செய்கின்றது. அதுமட்டுமன்றி தமிழ்நாட்டு தொல்லியல் துறை தான் கீழடியில் பெரும்பாலான அகழ்வுகளை செய்கிறார்கள். அப்படியான ஒரு நிலை இந்த நாட்டில் இல்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எங்கே அகழ்வு செய்வது அதனால் என்ன பலன் என்று சிந்திப்பதில் எந்த ஒரு பலனும் இருக்காது.
கேள்வி -உரிய விழிப்புணர்வு இன்மை,சுயநலம் போன்றவற்றாலும் எமது வரலாற்று முதுசங்கள் அழிந்து போகின்றன என கவலைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு இடங்களிலும்,நேரடிக் கள ஆய்வில் ஈடுபட்ட ஒரு தொல்லியலாளர் என்ற வகையில் இதற்கான எடுத்துக் காட்டுக்கள் சிலவற்றை கூறமுடியுமா?
நான் ஒரு பயிற்சி பெற்ற தொல்லியலாளர் அல்ல. வரலாற்றாசிரியர் என்ற முறையில் தொல்லியலில் ஈடுபாடு உண்டு. அத்தோடு தமிழ்ப் பிராமி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருப்பதனாலும் இவற்றைப் பற்றி பேச முடியும்.
விழிப்புணர்வு என்பது தமிழ் பேசும் மக்களிடையே அடிமட்டத்தில் தான் இருந்து வருகின்றது. எங்களின் ஆலயங்களில் அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அட்சகர்களாக கடமை செய்து முடிந்ததும் போய் விடுவார்கள். ஆனால் ஒரு சிலரைத் தவிர மாவிட்டபுரம்,கீரிமலை, அகஸ்தியர் ஸ்தாபனம் ஆகியவற்றில் உள்ளவர்களைத் தவிர மற்றைய ஆலயங்களுக்கு பொறுப்பானவர்களும் அங்கே வழிபாடு நிகழ்த்தும் பூசகர்களும் எதுவிதமான அக்கறையும் கொள்வதில்லை.
கீரிமலை
தொல்பொருள் சின்னங்களை பார்க்கப் போனால் அதைக் காட்டுவதற்கு தயக்கம் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். கிழக்கிலங்கையில் இவ்வாறானவர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். உதாரணமாக பிரபலமான ஆலயமான தான்தோன்றீஸ்வரத்தைக் கூறலாம்.
ஒப்பீட்டளவில் பௌத்த சமயம் தொடர்பான சின்னங்களை பொறுத்தவரையில் பௌத்த சங்கத்தார் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாய் இருக்கிறார்கள்.மலை நாட்டுப் பகுதிகளுக்குப் போனால் அங்கு அவர்கள் விகாரையிலே பல ஏடுகளை, பட்டயங்களை தொல்பொருள் சின்னங்களை வைத்திருப்பதைக் காணலாம். அது மட்டுமன்றி தென்னிலங்கையிலே அங்குள்ள ஊடகங்கள் சிலவற்றிலும் காலாகாலமாக தொல்பொருள் சின்னங்கள்,பண்பாட்டுச் சின்னங்கள் பற்றி விபரமாக எழுதுகிறார்கள். அந்த முறை தமிழ் ஊடகங்களில் காணப்படவில்லை.
அவற்றிலே ஆசிரியர்களாக கடமை புரிபவர்களும்,அதிகமாக எங்கள் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்றவர்கள் தான். அவர்களின் கவனம் வேறு விடயங்களில் தான் செல்கிறது. அன்றாட அரசியலுக்கு முக்கியம் அளிக்கப்படுகின்றது.
தலைநகரில் உள்ள விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஆனால் அந்த செய்தித் தாள்களை படிக்கின்றவர்கள் எங்கு வாழ்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகள் என்ன என்று அக்கறை செலுத்துவதில்லை. பிராந்தியப் பத்திரிகைகளின் விரித்தாந்தங்கள் மிக மோசமானது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் பத்திரிகைகள் எதுவும் அண்மையில் தொல்பொருள் சின்னங்களைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. விழிப்புணர்வு என்பது ஒரு ஒப்பீட்டளவிலான விடயம். இப்பொழுது பெருமளவிலான விழிப்புணர்வு 2 மாகாணங்களில் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் எங்களின் நூலைப் பற்றி அறிந்தவர்களிடையே இவ்வளவு பொருடகள் இங்கு இருக்கின்றனவா? இவ்வளவு பெரிய நாகரீகம் எங்களுக்கு மூலமானதா என்ற சிந்தனை வெளிநாடுகளில் வாழுகின்ற படித்தவர்கள் மத்தியில் தோன்றி விட்டது.
அதேபோல் வடமாகாணத்தில் 4 மாதங்களுக்கு முன்பு ஆறு திருமுருகன் ஒரு பாரிய கட்டடத்தை நாவற்குழியில் ஒரு அருங்காட்சியகத்திற்கான நிலையமாக அமைத்துள்ளார். அதற்கு இங்குள்ள செல்வந்தர்களும்,வெளி நாட்டிலுள்ளவர்களும் பெருந்தொகையான பணம் கொடுத்து அதை அமைப்பதற்கான செலவுகளைக் கொடுத்துள்ளார்கள். கட்டிடம் மிகவும் பிரமாண்டமானது. பரந்தளவில் அந்தப் பொருட்களை வைக்க முடியும். எந்தளவிற்கு தேடியிருக்கிறார்கள் என்பதை நான் இப்பொழுது சொல்ல முடியாது.
முக்கிய விடயம் என்னவென்றால்,முதல்நாள் திறப்புவிழா தொடர்பான கூட்டத்திலே 5000இற்கும் குறைவில்லாத மக்கள் கலந்து கொண்டனர். அதிகமாக குடா நாட்டிலும், தீவகத்திலும் வழிபாடு நடத்துகின்ற அந்தணர்கள், கல்லூரி,கச்சேரி,கல்வித் திணைக்களத்தில் உயர் பதவிகளைப் பெற்றிருக்கிற அதிகாரிகள், முதலான எல்லோரும் ஆண்களும் பெண்களுமாக வந்து கூடியிருந்தார்கள். தமிழாராய்ச்சி மாநாடு 1974இல்நடைபெற்ற போது தான் மிகக் கூடிய சனம் கலந்து கொண்டது.
சிவபூமி அருங்காட்சியகம்
அதற்குப் பிறகு இந்த திறப்பு விழாவிலே தான் காணமுடிந்தது ஏனென்றால்,அங்கு அதிகார வர்க்கத்தினுடைய கட்டுமானங்கள், அதிகாரங்கள்,செல்வாக்குகள் இல்லை. சமுதாயத்தினுடைய அபிமானத்தையும்,பெருமதிப்பையும் பெற்ற ஒருவர் அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் தொடக்கியிருக்கின்றார்.அதனாலே அவருக்கு ஆதரவு உண்டு. அதன் மூலமாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையின் ஏனைய பாகங்களில், வட கிழக்கு மாகாணங்களில் ஏனைய பாகங்களைப் பொறுத்தவரையில் இந்தவிதமான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றால் அங்கு பெருந்தொகையான தொல்பொருள் சின்னங்கள் இருக்கின்ற பொழுதிலும் முன்வருவார் எவரும் இல்லை.
அங்கும் செல்வந்தர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டால்ää பிராந்திய வேறுபாடு இன்றி உதவி செய்யக்கூடியவர்களும் இருக்கின்றாரக்ள். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலை இருக்கின்றது. ஒரு தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகத்தை அமைப்பதே வலு சிரமமாக இருக்கின்றது. ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் ஒரு இஸ்லாமிய அருங்காட்சியகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்கள் ஏன் இதை செய்ய முடியாது?
கேள்வி-தமிழினத்தின் தொன்மைச் சான்றுகளை அழிவிலிருந்து காப்பாற்ற தற்போதைய சூழலில் நாம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள்?
பலவிதமான வழிகளில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று குறிப்பாக தொல்லியல்துறை திணைக்களமே இதற்கு பொறுப்பாக இருப்பதால், அவர்களை இந்தச் சின்னங்களை உரிய முறைப்படி பேணிக் கொள்வதற்கும், ஈடுபாடு உள்ளவர்கள் பார்த்து ஆராய்வு செய்வதற்கு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அத்தோடு தொல்பொருள் சின்னங்கள் இருக்கும் இடங்களில் வேறு நாடுகளைப் போல உரிய கட்டிடங்களை அமைப்பதற்கோ அவற்றை அடிப்படையாகக் கொண்டு குடிகளை நிறுவுவதையோ தவிர்க்க வேண்டும். வழிபாட்டு சின்னங்கள் அவை எந்தச் சமயத்தைச் சேர்ந்தாலும் ஒரு பொதுவான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். மற்றது பொது மக்கள் தம்மால் இயன்ற வரை இவற்றை அடையாளப்படுத்தி பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும்.
இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேச சபை மட்டத்திலும், மாகாண சபை மட்டத்திலும், பாராளுமன்றத்திலும் அங்கத்தவர்களாக இருக்கிறவர்களுக்கு அதிகபட்ச வலியுறுத்தல்களை வழங்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு இயலுமான வகையில் இவை தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அதிகாரம் இல்லை என்பது வேறு விடயம்.
ஆனால் இவற்றைப் பற்றி பேசக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அதேபோல பிரதேச சபைஇ மாகாண சபைகள் ஊடாக இப்பொழுது அடையாளம் காணப்பட்ட சின்னங்களை எல்லாம் எடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு வழிவகை தேட வேண்டும். ஆலயங்கள் குறிப்பாக முன்னேஸ்வரம்,மாவிட்டபுரம், வன்னியிலுள்ள கோயில்கள் அகஸ்தியர் ஸ்தாபனம், போன்றவை கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரம் போன்றவை தங்களின் வசமுள்ள எஞ்சியுள்ள பொருட்களையாவது பாதுகாப்பதற்கு கோவில்களில் அருங்காட்சியகங்களை உருவாக்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
வெல்லாவெளி
கொக்கட்டிச்சோலையிலுள்ள தேர்களே அருங்காட்சியகத்திற்குரியதாகி விட்டன. இவற்றை அழிவிலிருந்து பாதுக்க வேண்டுமானால், அவற்றிற்கு நிரந்தரமாக ஒரு கொட்டகைகளை அமைத்து ஒரு ஆலய அருங்காட்சியகத்துடன் இணைத்து வைத்திருப்பது தான் ஒரேயொரு வழி. அல்லாவிட்டால் அதிலிருக்கும் சிற்பங்கள் அழிந்து சிதைந்து பலரும் எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்துவர். இதேபோல் செங்கட்டிகள், கருங்கல், உலோகப் பொருட்கள் என பல உண்டு. இவற்றை பாதுகாக்க வேண்டும். இவற்றை விற்கக் கூடாது.
இதுவரை காலமும் தொல்பொருள் சின்னங்களை அதாவது உலோகப் பொருட்களை வெறும் தகட்டின் பெறுமானங்ளுக்கு வியாபாரிகளுக்கு விற்பதுண்டு. ஆலய நிர்வாகத்தினரும் இந்த குற்றகாரியத்தை செய்துள்ளனர். இனியாவது இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றது மலைகள், மலைப்பாறைகளிலுள்ள தொல்பொருள் சின்னங்கள் மிக வேகமாக தகர்க்கப்படுகின்றன.
இதை தடை செய்வதற்கான வழிவகைகளை பல மட்டங்களிலும் தேடிக்கொள்ள வேண்டும். இங்கே வாகரை, கதிரவெளியில் சில மலைகளிலே வாசகங்கள் எழுதப்பட்ட கற்பாறைகள் உண்டு. இருந்தும் அவை முற்காலத்தில் நாகர்களுடைய வாழ்விடங்களாக,கோட்டைகளாக இருந்துள்ளன.
இவற்றைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. தொல்லியல் திணைக்களமும் அக்கறை கொள்வதாக இல்லை. அவர்களுக்கு இங்கு கல்வெட்டு இருப்பது தெரியாது. இவர்களெல்லாம் மாற்றான் பால் மனப்பான்மையோடு இருப்பதால், இலங்கையில் அரச திணைக்களங்களுக்கும்,தனியார் நிறுவனங்களுக்கும் கற்களை வழங்குபவர்கள் பெரிய இயந்திரக் கருவிகளைக் கொண்டு கணப்பொழுதில் உடைத்து விடக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அவர்களுக்கு பொருள் தான் தேவை. தொல்பொருள் சின்னங்கள், வரலாறுகள் பற்றி எந்ததேவையும் இல்லை. அக்கறையும் இல்லை. குரங்கு கொடி போட்ட மலை என்று வாகரைப் பிரதேச எல்லையில் காணப்பட்டது. அதிலே எழுத்துப் பொறித்த பல கற்கள் இருந்தன. மேலே இருந்த பௌத்த பள்ளி இடிபாடுகளாகி விட்டது. ஆனால் அதில் ஒரு பாகத்திலிருந்த நாகக் கல் அளவிலே பெரியது. பிரமாண்டமானது. தூரத்திலிருந்து காணக்கூடியதாக இருந்தது. 2 வருடங்களின் பின் போனால் மலையும் இல்லை. மலை அடிவாரமும் இல்லை.
கீழே நீர் தேங்கி நிற்கும் ஒரு பள்ளம் தான் தெரிகின்றது. மற்ற மலைப்பாறைகளை மிக விரைவிலே அழித்து விடுவார்கள்.
வெல்லாவெளி வெள்ளி மலையிலே நாகர்கள் அமைத்த நீர்த் தடாகம் ஒன்று இருந்தது.அதிலே வருடத்தின் எல்லா மாதங்களிலும் நீர் தேங்கி நிற்கும். விளிம்புகளில் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. என்ன விபரீதம் என்றால் இந்து சமய கலாசார திணைக்களத்திடம் கோவில் கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபாவை பெற்ற அங்கிருந்த கோயில் நிர்வாகிகள் தேர் ஓடும் வீதியை அமைப்பதற்கு இந்தச் சின்னங்கள் தடையாய் இருப்பதாகக் கூறி இந்த சின்னங்களை அழித்து விட்டார்கள். இது ஒரு அலட்சியப் போக்கு.
அறிவின்மை எங்கள் சமூகத்தினுடைய அடிப்படையான சின்னங்களையே தொலைத்து விடுகின்றமை பெருமளவில் தண்டனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. அவற்றிற்கு வழிவகைகள் இல்லாததாலேயே இவர்கள் இவற்றை செய்வதற்கு துணிகின்றார்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages