சிலப்பதிகாரம் காட்டும் மதுரை
(மதுரை அகில இந்திய வானொலியில் 2.5.1996 அன்று காலை 8.30 மணிக்கு ஒலிபரப்பான என் உரை)
2000 ஆண்டுக் காலமாகத் தலைநகர் என்ற தகுதியிலிருந்து மாறாமல் இன்றுவரை சிறந்து விளங்கும் பெருமைக்குரியது மதுரை மாநகரம்.
இளங்கோவடிகள் தான் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் இந்நகரின் பெயரால் மதுரைக் காண்டம் என்று ஒரு காண்டத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.
'பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்' என்று இளங்கோவடிகள் குறிப்பிடும் மதுரை பாண்டியனின் தலைநகரம் ஆகும். இந்நகரம் வையையாற்றின் தென்கரையில் இருந்தது. கண்ணகியும் கோவலனும் கவுந்தியுடன் சேர்ந்து மரப்புணை மூலம் வையையைக் கடந்து 'வானவர் உறையும் மதுரை' வந்து சேர்ந்ததாகவே இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
ஆற்றின் கரையில் இருந்தமையால் மதுரை நகரம் வளம் மிகுந்ததாகத் திகழ்ந்தது. பலவகை மரங்கள் செழித்து ஓங்கி இருந்தன. பூக்களும் மிகுதியாக இருந்தன. மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் வயல்களும், சோலைகளும், ஓடைகளும், ஏரிகளும், தென்னந் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும், கமுக மரங்களும் நிறைந்திருந்தன. வையையின் கரையெங்கும் குரா, மகிழம், கோங்கம், வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், உச்சிச் செலுந்தி, செருந்தி, சண்பகம், பாதிரி முதலிய மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன. மதுரையிலிருந்து வந்த தென்றல் கழுநீர், செண்பகம், மாதவி, மல்லிகை, முல்லை, முதலிய பூக்களின் மணத்தோடு வந்ததாகப் பாணர் குழு கோவலனிடம் கூறுகிறது. வையைக் கரையின் அகப்பகுதியில் எங்கும் குருக்கத்தியும், செம்முல்லையும், முசுட்டையும், மல்லிகையும், வெள்ளை நறுந்தாழியும், வெட்பாலையும், பெருங்கையாலும், குட்டிப் பிடவமும், இருவாட்சியும் மலர்ந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. மதுரைக் கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியில் குவளையும், ஆம்பலும், கமலமும் மலர்ந்திருந்தன. முருக்க மலரிதழ்கள் வையைக் கரையில் உதிர்ந்து கிடந்தன. வையை ஆற்றுநீரோடு இடையறாது முல்லையரும்புகள் வந்தன.
மதுரை நகர அங்காடியில் பல்வேறு பொருட்களின் வாணிபம் நிகழ்ந்தது. வையம், சக்கரங்களுடைய வண்டி, தேர்மொட்டு, கவசம், அங்குசம், தோற்கைத்தளம், அரைப்பட்டிகை, வளைதடி, சாமரை, மூன்று வகைக் கேடயங்கள், குத்துக்கோல்கள், செப்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், கயிற்றால் முடிந்து செய்யப்பட்ட பொருட்கள், கிடையால் புனையப்பட்ட மாலை, ஈர்வாள், தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்டவை, வாசனைப் புகைக்குரியவை, மயிர்ச்சாந்து செய்தற்குரிய பொருட்கள், பூமாலைகள் முதலியவை அங்காடி வீதியில் விற்கப்பட்டமையைக் கோவலன் கண்டு வந்தான். அங்காடியில் அப்பவணிகர் அப்பம் சுடுவதால் எழுந்த புகையின் மணத்தோடு தென்றல் கலந்து வீசியதென்று மதுரைத் தென்றலின் மணம் பற்றிப் பாணர் கோவலனிடம் பேசுகின்றனர்.
ஒன்பது வகை மணிகளும், நான்கு வகைப் பொன்னும், பல்வேறு ஆடைவகைகளும், பல்வகைக் கூலங்களும், மிளகும் மதுரையில் விற்கப்பட்டன. கோவலன் இரத்தினக் கடைத்தெருவையும், பொற்கடைத் தெருவையும், அறுவைக் கடைவீதியையும், கூலவீதியையும் சுற்றிக் கண்டுவந்தான்.
சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய தெய்வங்களை வழிபடும் இடங்கள் மதுரையில் இருந்தன. காலைமுரசம் சிவனுக்குரிய கோயிலிலும், முருகன் கோட்டத்திலும், பலதேவன் நகரத்திலும், திருமால் நியமத்திலும் ஒலித்தன. கண்ணகி மதுரையை விட்டு வெளியேறும் போது கொற்றவை கோயில் வாசலில் பொற்றொடியைத் தகர்க்கிறாள். மதுரையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் இயக்கி என்னும் பெண்தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது. மாதிரி இத்தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து மீண்டு வரும் பொழுது கவுந்தியைப் புறஞ்சிறை மூதூரில் கண்டு அடிபணிகிறாள். மதுரையின் அகநகர்ப் பகுதியில் பிற சிறுதெய்வங்கட்கும் வழிபாடுகள் இருந்தன. கோவலன் பொற்கொல்லனிடம் சிலம்பைக் கொடுத்தனுப்பிய பின்னர் ஒரு தேவகோட்டச் சிறையகம் புகுந்து இருந்தான். மதுராபதி என்னும் காவல் தெய்வம் ஒன்று மதுரையில் இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுவதால் அத்தெய்வத்திற்குரிய வழிபாட்டிடம் ஒன்று மதுரையில் இருந்திருக்க வேண்டும். ஆதிபூதம், அரசபூதம், வணிக பூதம், வேளாள பூதம் என்ற நான்கு பூதங்கட்கும் மதுரையில் வழிபாடு நடந்தது. நகரில் எரி மண்டியவுடன் இப்பூதங்கள் தம் இருப்பிடத்தை விட்டு நீங்கின. சமண பௌத்தப் பள்ளிகளும் மதுரையில் இருந்தன. காலைமுரசம் அங்கும் சங்கோடு முழங்கியது. அந்தணர் பள்ளியும் மதுரையில் இருந்தது. கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிய போது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர்.
கோவலன் மதுரையை விசும்பில் ஏற்றிய கொடிகளின் நிழலிலேயே சுற்றிக் கண்டு வந்தான். மதுரைக் கோட்டையிலும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. பொற்கடை வீதியில் நான்கு வகைப் பொன்னை இனம் பிரித்துக் காட்டும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.
நகரைச் சுற்றிக் கோட்டையும், அதைச் சூழ்ந்து அகழியும், அதையடுத்துக் காவற்காடும், அதையடுத்துக் கிழக்கில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. கோவலன் நகருக்குள் சென்ற போது காவற்காட்டால் சூழப்பட்ட அகழியைச் சுருங்கை வீதி வழியாகக் கடந்து யவனர் காவல் நின்ற கோட்டைவாசலை அடைந்தான். மாதரி கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு நகருள் சென்ற போதும் காவற்காட்டையும் அகழியையும் கோட்டையையும் கடந்து சென்றாள். கோட்டையில் பல பொறிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அவையாவன:
விற்பொறி, கருவிரல் ஊகம், கல்லுமிழ் கவண், பரிவுறு வெந்நெய், பாகடு குழிசி, காய்பொன் உலை, கல்லிடு கூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலை அடுப்பு, கவை, கழு, புதை, புழை, ஐயவித்துலாம், கைபெயர் ஊசி, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, முழுவிரற் கணையம், கோல், குந்தம், வேல் முதலியனவாம்.
நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரை நகருக்கு உரியதாய்ச் சிலப்பதிகாரத்தில் பயின்று வருவதால் நான்கு புறமும் கோபுரங்களுடன் கூடிய வாயிலைப் பெற்றது மதுரை நகரம் என்ற செய்தியைக் குறிப்பாக அறிகிறோம். கண்ணகி கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தாள்; மேற்றிசை வாயில் தனியளாய்ப் பெயர்ந்தாள்.
கோட்டைக்கு வெளியே இருந்த புறஞ்சிறை மூதூரில் சமயப் பெரியோர் தங்கி இருந்தனர். கவுந்தியடிகள் கோவலனிடம் இல்வாழ்வில் ஈடுபட்டோர்க்குப் புறஞ்சிறை மூதூர் தங்குதற்கேற்ற இடமன்று; என்று கூறி அவனை அகநகருக்குள் சென்று தங்குமாறு அறிவுறுத்துகிறாள்.
காவற்கணிகையர் வீதி ஒன்றும், ஆடற்கூத்தியராகிய பதியிலார்க்கு இருபெரு வீதிகளும், அங்காடி வீதியும், இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதியும், அறுவைக்கடை வீதியும், கூலக்கடை வீதியும், நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களும் அகநகரில் இருந்தன. நகரில் புகையழல் மண்டிய போது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணத்தார்க்குரிய தெருக்களிலும் இருந்த மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆய்ச்சியர் குடியிருப்பு ஒன்றும் அகநகரில் இருந்தது. மாதரி தம் இனத்தவரின் குடியிருப்புப பகுதியில் பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர் காவற்சிற்றிலில் கண்ணகியையும், கோவலனையும் குடியேற்றினாள். இடையர்களின் இருக்கை கட்டுவேலி சூழ்ந்ததாகவும், தாதெரு மன்றத்தை உடையதாகவும் இருந்தது.
குறுந்தெருக்களும், பெருந்தெருக்களும் அமைந்திருந்த பாங்கில் இடையில் முச்சந்திகளும், நாற்சந்திகளும், முடுக்குகளும் இருந்தன. இவ்வாறு பதியெழுவறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
(இனி மதுரை பற்றிய ஆய்வேட்டு அத்தியாயம் தொடரும்)
சக
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmani...@gmail.com)ஐயா,face book ல்பண்டைய மதுரை -மதுரைக்காஞ்சி காட்டும் இரண்டு நியமங்கள் இன்றைய மதுரையே -முனைவர் ச.கண்மணி கணேசன்படிக்க நேர்ந்தது, மிகவும் மகிழ்ச்சிகூடுதல் விவரம் அல்லது புத்தகம் pdf இருந்தால் தரவும்நன்றி வணக்கம் வந்தே மாதரம்இப்படிக்குதினகரன் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், ஆலயம் காப்போம் மதுரை மாவட்டம், மதுரைவிலாசம்: - 149, பிரதான வீதி, நடராஜ் நகர், கோச்சடை, மதுரை - 625 016கைபேசி - 9344118502
மதுரை
0.0. முன்னுரை
0.1. சிலப்பதிகாரப் பதிகம் மதுரை நகரினை ஐந்து முறை சுட்டுகிறது.1 புகார்க் காண்டத்தில் மதுரை நகரம் ஐந்து முறை குறிக்கப்படுகிறது.2 சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டம் மதுரைக்காண்டம் என்று பெயர் பெறுகிறது.
“நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக்காண்டம் முற்றிற்று”3
என முடிகிறது. மதுரைக் காண்டத்தில் இந்நகரம் பற்றிய குறிப்பு இருபத்து மூன்று அடிகளில் காணப்படுகிறது.4 இவை தவிர மதுரைக் காண்டத்தில் ஆங்காங்கு மதுரை பற்றிய விரிவான வருணனைகள் இடம் பெற்றுள்ளன. வஞ்சிக் காண்டத்தில் மதுரை பற்றிய குறிப்பு பதின்மூன்று அடிகளில் உள்ளது. 5
____________________________________________________________________________1. சிலப்.- பதி.- அடி.- 20, 35, 39, 43, 88
2. சிலப்.- வேனிற்.- அடி.- 3; கனாத்.- அடி.- 76; நாடுகாண்.- அடி.- 41, 51, 58
3. சிலப்.- மதுரைக்காண்டம்- இறுதிக்கட்டுரை- அடி.- 18- 20
4. சிலப்.- காடுகாண்.- அடி.- 58, 139, 147, 188, புறஞ்.- அடி.- 25, 114, 132, 181; அடைக். - அடி.- 6, 112; கொலைக்.- அடி.- 9,131; ஊர்சூழ்.- அடி.- 6, 28, 58; வழக்.- வெண்பா- 2; வஞ்சின.- அடி 37, 39 , 57, வெண்பா; அழற்.- அடி.- 101; கட்டுரை.- அடி.- 123, 136
5. சிலப்.- குன்றக்.- அடி.- 5, பாட்டுமடை- 21, 22; காட்சிக்.- அடி. -77; நீர்ப்.- அடி.- 61,84, 131; நடுகற்.- அடி.- 97, 218; வாழ்த்.- உரைப்.- பா- 11, 13, வள்ளைப்பாட்டு- 27.
(தொடரும்)1.0. மதுரை என்ற பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு உரியதாக வழங்கி வந்துள்ளது.
1.1.0. வையை ஆற்றின் தென்கரையில் ஒரு மதுரை உள்ளது.1 அங்கிருந்து பதினைந்து கி.மீ. தூரத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுமதுரை என்ற சிற்றூர் உள்ளது.
திண்டுக்கல் அருகே வடமதுரை உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாமதுரை உள்ளது. தென்னாற்காடு மாவட்டத்தில் சிறுமதுரை உள்ளது. ஆழிமதுரை என்ற பெயரில் ஒரு ஊர் இருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.2
வடஇந்தியாவில் யமுனை நதிக்கரையில் ‘மத்ரா’ என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது.
இலங்கையின் தென்கோடியிலும், பர்மாவிலும், மலேயாவிலும்; இதே பெயரில் ஊர்கள் உள்ளன என்கின்றனர்.3 இந்தோனேஷியாவில் மதுரை என்ற பெயரில் ஜாவா அருகே ஒரு தீவு உள்ளதென்பர்.4
கடல் கொண்ட லெமூரியாவில் முதல் தமிழ்ச் சங்கம் இருந்த மதுரை பற்றி இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.5
2.0. பெயர் வழக்குகள்
2.1.0. சிலப்பதிகார மதுரைக்கு கூடல், ஆலவாய், ஜீவன்முத்திபுரம், கன்னிபுரம், சமட்டி விச்சாபுரம், பூலோக சிவலோகம், சிவநகரம், கடம்பவனஷேத்திரம், துவாத சாந்தஸ்தலம், முடித்தலை கொண்ட சோழபுரம் முதலிய மாற்றுப் பெயர்கள் காலந்தோறும் வழங்கி வந்துள்ளன.
2.1.1.0. மதுரை என்ற பெயர் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தில் இருந்து இன்று வரை இவ்வூருக்கு உரியதாக இலக்கியத்திலும், பேச்சிலும் வழங்கி வந்துள்ளது.
____________________________________________________________________________
பார்க்க- வரைபடம்- 3
அ.சம்பந்த மூர்த்தி- வைகைக் கரையிலே- ப.- 136
D.தேவகுஞ்சரி- Madurai Through The Ages- ப.- 26
மேற்.& சோமலெ- மதுரை மாவட்டம்- ப.- 224
களவியல் என்ற.- நக்கீரனார்(உ. ஆ.)- ப.-ll- 5
2.1.1.1.சங்க இலக்கியங்களிலும்1, சங்க காலப் புலவர் பெயர்களிலும்2, மதுரை என்ற வழக்கினைக் காண இயல்கிறது. முத்தொள்ளாயிரம்3, மணிமேகலை4, தேவாரம்5, திருவாசகம்6, திருவிளையாடற் புராணம்7, பெரிய புராணம்8, கல்லாடம்9 முதலிய நூல்களிலும், தனிப்பாடல்களிலும்10; மதுரை என்ற பெயர் பயின்று வருகிறது.
2.1.1.2.பிறநாட்டார் குறிப்புகளிலும் மதுரை இடம் பெற்றுள்ளது. டாலமியும், பிளினியும் ‘மொதுரா’ என்று குறிப்பிட்டுள்ளதை ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர்.11 மெகஸ்தனீஸ் தன் பயண விவரங்களில் மதுரையை அப்பெயராலேயே அழைக்கிறார்.12 இபன் பதூதாவின் குறிப்புகளில் மதுரை கோட்டையுடன் கூடிய நகரம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.13 இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும்
____________________________________________________________________________
புறம்.- 32; மதுரைக்.- அடி.- 699; சிறுபாண்.- அடி.- 67; பரி.- 12- அடி.- 9- 10
மதுரைப் பேராலவாயார்- அகம்.- 296; மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்- அகம்.- 93; மதுரைத் தத்தங்கண்ணனார்- அகம்.- 335
முத்தொள்ளாயிரம்- பா.- 26
மணி.- ஆபுத்திரன்.- அடி- 105
தேவா.- 3ம் திரு.- பதி.- 310- பா.- 4
திருவா.- போற்றித் திருவகவல்- அடி- 90
திருவிளை.- கூடற்காண்டம்- நான்மாடக்கூடலான படலம்- பா- 3
பெரிய.- திருஞானசம்பந்த நாயனார் புராணம்- பா - 871
கல்.- பா.- 31- அடி- 11
தனிப்பாடல் திரட்டு- முதல் பகுதி- அ.அ.இராமசாமிப்புலவர்(தொ. ஆ.)- ப.- 200-பா.-565
V.கனகசபை- மு. நூ.- ப.- 46; D.தேவகுஞ்சரி-மு.நூ.- ப.- 24
D. தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 24
The Rehla Of Ibn Battuta- மாஹ்தி உசேன்(மொ.பெ. ஆ.)- ப.- 229; Foreign Notices Of South India- From Megasthenes To Ma-Huan- K.A.நீலகண்ட சாஸ்திரி (ப.ஆ.)- ப.- 281
மதுரை என்றே இந்நகரைச் சுட்டுவதாகக் கூறுகின்றனர்.1
2.1.1.3.கி.மு.இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் இந்நகரை ‘மத்திரை’ என்று அழைப்பதாக ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ளனர்.2 இடைக்காலக் கல்வெட்டுக்கள் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்று அழைக்கின்றன.3 முதலாம் சோழ பராந்தகன் தன்னை மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்றே சொல்லிக் கொள்கிறான் என்றும் எடுத்துக் காட்டியுள்ளனர்.4
2.1.2.0.மதுரைக்கு கூடல் என்ற மாற்றுப்பெயர் சங்ககாலத்தில் இருந்து இன்று வரை வழக்கில் உள்ளது.
2.1.2.1.சங்க இலக்கியங்களிலும்,5 சிலப்பதிகாரத்திலும்,6 முத்தொள்ளாயிரம்,7 தேவாரம்,8 திருவாசகம்,9 நாலாயிர திவ்யபிரபந்தம்,10 கல்லாடம்,11 திருவிளையாடற்புராணம்12 முதலிய நூல்களிலும் கூடல் என்ற பெயர் வழக்கைக் காண இயல்கிறது.
____________________________________________________________________________1. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 23
2. மேற்.- ப.- 17- 19
3. M.E.R.14 of 1894; 540, 550 of 1916; 543 of 1922; 23 of 1941; S.I.I.- Vol.5- எண்- 448- ப.- 170
4. D.தேவகுஞ்சரி- மு. நூ.- ப.- 20
5. அகம்.- 93; புறம்.- 58; பாலைக்கலி- 35; பரி.- 20- அடி- 106; நற்.- 298, திருமுருகு. - அடி.- 71; பரி.திரட்டு- அடி- 3
6. சிலப்.- வஞ்சின.- அடி.- 39; பதி.- அடி.- 35
7. முத்தொள்ளாயிரம்- 9
8. தேவா.- 1ம் திரு.- பதி.- 7- பா.- 2; 6ம் திரு.- பதி.- 233- பா.- 1
9. திருவா.- போற்றித்திருவகவல்- அடி- 91
10. குலசேகர ஆழ்வார்- பெருமாள் திருமொழி- 3- பா- 10- அடி -3
11. கல்.- 80- அடி.- 19
12.திருவிளை.- நான்மாடக்கூடல் ஆன படலம்- பா.- 3
(தொடரும்
சக )
2.1.2.2. கூடலழகர் கோயில் என்ற பெயரில் இன்றும் அப்பெயர் வழங்கி வரக் காண்கிறோம்.1
2.1.3.0. இடைக்காலத்தில் ஆலவாய் என்ற பெயர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குரியதாக வழங்கிப் பின்னர் ஊர்க்கும் உரியதாகியது.
2.1.3.1. “தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே
சிந்திக்கப் பெற்றேன் நானே”2
என்று அப்பர் பாடுங்கால் நகரைக் கூடல் என்று அழைத்துவிட்டுப்; பின்னர் கோயிலையே ஆலவாய் என்கிறார்.
“...கூடல்
ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த
பவளச் சடையோன்”3
என்ற கல்லாட அடிகளிலும் ஆலவாய் கோயிலுக்குரிய பெயராக வழங்குதல் கண்கூடு. திருவிளையாடற் புராணத்தில் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் வழக்கு ஏற்பட்டமை தெரிய வருகிறது.4
2.1.3.2. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஆலவாய் அழகன்’ என்ற நாவலின் பெயரில் ஆலவாய் ஊருக்குரிய பெயராகப் பயின்று வருகிறது.5
2.1.4. சோழர் ஆட்சிக்கு உட்பட்ட போது மதுரை நகரம் ‘முடித்தலை கொண்ட சோழபுரம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது என ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர்.6
____________________________________________________________________________
அழகர் மலையிலுள்ள பெருமாள் கோவிலினின்று வேறுபடுத்திக் காட்டவே; கூடலழகர் கோயில் அவ்வாறு இன்றும் அழைக்கப்படுகிறது.
தேவா.- 6ம் திரு.- பதி. - 378- பா. 1
கல்.- 80- அடி.- 19- 21
திருவிளை.- திருவாலவாய்க் காண்டம்- திருவாலவாயான படலம்
மணிவண்ணன் என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது
ஞா.தேவநேயன்- மு.நூ.- ப.- 107
2.1.5. இடைக்காலத்தில் மதுரைக்கு கன்னிபுரம், கடம்பவனஷேத்திரம், சமட்டி விச்சாபுரம், சிவநகரம், பூலோக சிவலோகம், சீவன்முத்திபுரம், துவாத சாந்தஸ்தலம் எனப் பல பெயர்கள் வழங்கின.
“அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவனம் அமர்ந்தசீவன்
முத்திபுரம் கன்னிபுரம் திருவால வாய்மதுரை முடியா ஞானம்
புத்திதரும் பூவுலகிற் சிவலோகம் சமட்டிவிச்சாபுரம் தென்கூடல்
பத்திதரு துவாதசாந்தத் தலமென்று ஏதுவினாற் பகர்வர் நல்லோர்”1
என்ற திருவிளையாடற் புராணப் பாடல் மூலம் மேற்கூறிய பெயர் வழக்குகளை அறிய முடிகிறது. இப்பெயர் வழக்குகளில் சில பிற பாடல்களிலும் காணப்படுகின்றன.2 ஜீவன் முத்திபுரம் என்ற பெயரை தமிழ்விடு தூது ஆசிரியரும் எடுத்தாண்டுள்ளார்.3
2.2.0. கடல்கோளுக்குப் பின்னர் புலவர்கள் கூடிய இடமாதலால் கூடல் என்ற பெயர் வழக்கு ஏற்பட்டது.
2.2.1. “தமிழ் கெழு கூடல்”4 என்று புறநானூறு விதந்து சொல்வதால் மேற்கூறிய கருத்து வலுவடைகிறது. ஆய்வாளரும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.5
2.2.2. கூடல் என்ற சொல்லுக்கு நதிகளின் சங்கமம் என்று பொருள் உள்ளமையை எடுத்துக் காட்டி; மதுரையும் வையையாறு வேறொரு கிளைநதியுடன் சங்கமமான இவ்விடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும்; காலப்போக்கில் அக்கிளைநதியின் போக்கு மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுவோர் உளர்.6
____________________________________________________________________________
திருவிளை.- மதுரைக்காண்டம்- தலவிசேடப் படலம்- பா.- 21
திருவிளை.- மதுரைக்காண்டம்- தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்- பா. 67
தமிழ்விடு.- கண்ணி- 136
புறம்.- பா- 58- அடி.- 13
ச.சாம்பசிவன்- மாநகர் மதுரை- ப.- 17
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 27
மதுரை அருகே வையையாற்றில் இருந்து கிருதமால் என்று ஒரு நதி பிரிந்து செல்கிறதே அன்றி வேறெந்தக் கிளைநதியும் வந்து கூடியமைக்கு ஆதாரம் இல்லையாதலால் அவர் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
2.3.0. கோட்டையிலிருந்த நான்கு வாயில்களிலும் கோபுரங்கள் இருந்தமையால் ‘மாடக்கூடல்’1 என்றும், ‘நான்மாடக்கூடல்’2 என்றும், ‘மாடமதுரை’3 என்றும் அழைக்கப்பட்டது.
2.3.1. மயமதம் கோட்டையின் வாயிலில் கோபுரம் இருப்பது சிறப்பு என்று பேசுகிறது.4 பண்டைத் தமிழகத்தில் மயமதமே பெரிதும் போற்றப்பட்டதென்பது இலக்கியங்கள் மூலம் புலனாகிறது. சாத்தனாரும்,
“மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டமீங் கிதுகாண்”5
என்று மயனின் மரபு போற்றப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார். திருத்தக்க தேவரும்,
“மயனிழைத்த அம்பாவையின் வைகினாள்”6
என்று மயனின் பெருமையை உவமையில் எடுத்தாள்கிறார். வில்லிபுத்தூராரும்,
“சிற்ப வல்லபத்தின் மயன் முதலுள்ள தெய்வவான் தபதியர்”7
என்று மயனை முதன்மைப்படுத்துகிறார். கம்பரும் இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த மண்டபம் மயனால் நிருமிக்கப்பட்டது என்கிறார்.8 தெய்வத் தச்சர்களில் மயனே தமிழகத்தோரால் பெருமைப்படுத்தப்படுவதாலும்; மயமதம் கோட்டை வாயிலில் கோபுரம் இருப்பது சிறப்பு என்று பேசுவதாலும்; ‘மாடக்கூடல்’, ‘நான்மாடக்கூடல்’, ‘மாடமதுரை’ என்ற பெயர்கள் கோட்டை
____________________________________________________________________________
பாலைக்கலி- பா- 35; முத்தொள்ளாயிரம்- பா- 9
பரிபா.திரட்டு- 2; சிலப்.- வஞ்சின.- அடி.- 39
புறம்.- 32
மய.- மயமுனிவர்- ப.- 140
மணி.- சக்கரவாளக்.- அடி.- 201- 202
சீவகசிந்தாமணி- பதுமையார இலம்பகம்- பா.- 145
வில்லிபுத்.- ஆதிபருவம்- இந்திரப் பிரத்தச் சருக்கம்- பா.- 18
கம்பரா.- பாலகாண்டம்- கடிமணப் படலம்- பா.45
வாயில்களில் இருந்த கோபுரங்களால் ஏற்பட்ட பெயர்கள் என்பது தெளிவாகிறது. மாங்குடி மருதனாரும் மதுரையின் கோட்டை வாயிலில் கோபுரம் இருந்தது என்கிறார்.1 ஆய்வாளரும் மதுரை நகரம் இங்ஙனம் கோட்டை வாயில் கோபுரங்களாலேயே, ‘மாட’ என்னும் அடைமொழி பெற்றதெனச் சொல்லிச் செல்கின்றனர்.2
2.3.2 இந்திரன் மிகுதியான மழையைப் பெய்வித்து நகரை அழிக்க நினைத்த போது சிவபெருமான் அனுப்பிய நான்கு மேகங்கள் நான்கு மாடங்களாகி இந்திரனின் மேகங்களைத் தடுத்து நகரைக் காத்தமையால் ‘நான்மாடக்கூடல்’ என்று அழைக்கப்பட்டதெனத் திருவிளையாடற் புராணம் கூறும் கதை3 அப்பெயரின் அடிப்படையில் இடைக்காலத்தில் தோன்றியதாகும். ஏனெனில் பண்டை இலக்கியங்களில் இக்கதைக்கு ஆதாரம் இல்லை.
2.3.3. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு கோயில்களாலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் ஏற்பட்டதென்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.4
மேற்கூறிய நான்கு கோயில்களில் ஒன்றான திருநடுவூர் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.5 அக்காலத்தில் இந்நான்கு கோயில்கள் மட்டுமின்றி வடதிருவாலவாய், தென்திருவாலவாய், வெள்ளியம்பலம், கரியோன் திருவுறை, கன்னி செங்கோட்டம், உயர்மகன் பள்ளி, காளிகோயில், இந்திரை, சேரன்திருத்தளி என்று பல கோயில்கள் இருந்ததாக கல்லாடம் அடுக்குகிறது.6 இத்தனை கோயில்கள் இருக்க திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு கோயில்களின் அடிப்படையிலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் உருவானது என்பதற்கு ஏற்ற காரணம் காட்டப்படவில்லை.
மேற்கூறிய நான்கு கோயில்களின் வரிசையினின்றும் மாறுபட்டு
____________________________________________________________________________
மதுரைக்.- அடி.- 355- 356
V.கனகசபை- மு.நூ.- ப.- 26; S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.-139
திருவிளை.- கூடற்காண்டம்- நான்மாடக்கூடலான படலம்
கலித்.- நச்சினார்க்கினியர்(உ.ஆ.)- இளவழகனார்(வி.உ.ஆ.)- ப.- 273- பா.- 92- அடி- 65
பார்க்க- கரு.எண்- 5.3.5.
கல்.- பா.- 41, 59, 80
கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்ற நான்கு கோயில்களின் அடிப்படையிலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் உருவானது என்று முரண்பாடான கருத்தும் நிலவுவதால்1 கோயில்களின் அடிப்படையில் இப்பெயர் உருவாகியிருக்க இயலாதெனத் தெளிவாகிறது.
2.4.0. நீர்நிலைக்கு நடுவில் இருந்தமையால் ஆலவாய் என்ற பெயரும் வழங்கியது.
2.4.1. வையையிலிருந்து கிருதமாலை பிரிகின்ற இடத்தின் அருகில் மதுரை நகரம் இருப்பதாலும்2 ‘ஆலம்’ என்ற சொல் நீர்நிலை என்ற பொருளில் பல திராவிட மொழிகளிலும் வழங்குவதாலும்3 மேற்கூறிய கருத்து வலுப்படுகிறது. ஆய்வாளர் சிலரும் இக்கொள்கையே கொண்டுள்ளனர்.4
2.4.2. நகரழிவு ஏற்பட பாம்பு எல்லை வகுத்துக் காட்டிய பின் புதிதாக நகர் நிர்மாணிக்கப்பட்டதால் ஆலவாய் என்று பெயர் வழங்கியது என்று திருவிளையாடற் புராணம் கூறும் கதை5 இடைக்காலத்தில் தோன்றியதாகும். பண்டை இலக்கியங்களில் இக்கதைக்கு ஆதாரம் இல்லை.
2.4.3. ஆலவாய் என்ற சொல் வடமொழியில் ‘ஆலாஸ்ய’என்று வழங்குவதாலும், ‘ஆல் + ஆஸ்ய’ என்பது அகன்ற வாயில் என்று அங்கு பொருள்படுவதாலும், மதுரை அகன்ற வாயிலைக் கொண்டிருந்ததால் ‘ஆலவாய்’ என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்று கூறுவோர் உளர்.6 ‘ஆல்’ என்னும்
___________________________________________________________________________
கலித்.- நச்சினார்க்கினியர்(உ.ஆ.)- ப.- 273- பா.- 92- அடி.- 65
பார்க்க- வரைபடம்- 3
மயிலை சீனி.வேங்கடசாமி- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்- ப.-155
மேற்.
திருவிளை.- திருவாலவாய்க் காண்டம்- திருவாலவாயான படலம்
A.V.ஜெயச்சந்திரன்- The Madurai Temple Complex- ப.- 86
அடிச்சொல் திராவிட மொழிகளிலேயே காணப்படும் போது அச்சொல்லின் வடமொழி வடிவத்திற்குரிய பொருளைக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் நீர்நிலைக்கு நடுவில் இருந்தமையாலேயே மதுரை ‘ஆலவாய்’ என்னும் பெயரைப் பெற்றது என்பது பெறப்படுகிறது.
2.5.0. தடாதகைப் பிராட்டியால் ஆளப்பட்ட மதுரை என்றும், கடம்பவனக்காடு அழிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்றும் உள்ள திருவிளையாடற் புராணக் கதைகளே1 கன்னிபுரம், கடம்பவனஷேத்திரம் என்ற பெயர்களுக்குக் காரணங்களாம்.
3.0. மதுரை நகரம் பாண்டியரின் தலைநகரம் ஆகும்.
3.1.0. “பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்”2 என்றும்,
“.....................................கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட”3
என்றும் இளங்கோவடிகள் இந்நகரைப் பாண்டியர்க்குரியதாகப் பாடியுள்ளார்.
3.1.1. “பொற்றேர்ச் செழியன் கூடலாங்கண்”4 என்றும்,
“வாடா வேம்பின் வழுதி கூடல்”5 என்றும்,
“பெரும்பெயர் வழுதி கூடல்”6 என்றும்,
“..............................................தென்னன்
நெடுமாடக் கூடல்”7
என்றும் பிற இலக்கியங்களும் மதுரை நகரைப் பாண்டியர்க்குரியதாகவே பாடுகின்றன.
____________________________________________________________________________
திருவிளை.- மதுரைக்காண்டம்- திருநகரங் கண்ட படலம்& தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்
சிலப்.- நீர்ப்.- அடி- 84
சிலப்.- அடைக்.- அடி.- 2- 6
நற்.- பா- 298- அடி- 9
அகம்.- பா- 93- அடி- 9
மேற்.- பா.- 315- அடி- 7
முத்தொள்ளாயிரம்- பா- 9
4.0. மதுரை நகரின் புவியியல்
4.1.0. நிலநெடுங்கோட்டில் 9°55’ வடக்கு பாகையிலும் ,நிலக் குறுங்கோட்டில் 78° 07’கிழக்கு பாகையிலும் மதுரை நகரம் உள்ளது.1 வையையாறு நகரின் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கிப் பாய்கிறது.2
4.1.1. கண்ணகி முதலியோர் மதுரை வந்து சேரும் போது,
“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”3 என்று இளங்கோவடிகள்
வையையைப் போற்றுகிறார். பின்னர்,
“மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழிற் தென்கரை எய்தி
வானவர் உறையும் மதுரை வலங்கொள”4
என்று அவர்கள் வையையாற்றை மரப்புணை மூலமாகக் கடந்து நகரை வலங்கொண்டசெய்தியைத் தருகிறார்.
“வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர் தாஅய்
அந்தண் புனல்வையை“5
என்று நல்வழுதியாரும் மதுரை நகரம் வையைக்கரையில் இருந்ததென்றும்; ஆற்றின் அலைகள் கோட்டைச் சுவரை மோதிச் சென்றன என்றும் பாடியுள்ளார்.
4.1.3 இடைக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களும் வையை மதுரைக்கு அகழி போல் ஒரு புறத்தில் இருந்ததென்று கூறியுள்ளன.6
____________________________________________________________________________
1. பார்க்க- வரைபடம்- 5
2. பார்க்க- வரைபடம்- 3
3. சிலப்.- புறஞ்.- அடி.- 169-170
4. மேற்.- அடி.- 179- 181
5.பரிபா.- 12- அடி.- 9- 10
6. திருவிளை.- மதுரைக்காண்டம்- திருநகரச் சிறப்பு- பா- 17
5.0. காலந்தோறும் நகரளவு
சிலப்பதிகாரம் காட்டும் மதுரை இன்றைய மதுரையின் மையப்பகுதியில்1 ஒரு கூறினை மட்டும் உள்ளடக்கியதாகும். சங்க காலம் தொட்டு இன்றுவரை மதுரை தன் அளவில் விரிந்துள்ளதே அன்றி அதன் மையப்பகுதியின் இருப்பிடத்தில் மாற்றம் நிகழவில்லை.
5.1.0. இன்றைய மதுரையின் மையப்பகுதியில் மாசிவீதியைச் சுற்றி உள்ள குடியிருப்புகளை அடுத்து நாலாபுறமும் உள்ள மூன்று வீதிகளும் கி.பி.1837ம் ஆண்டு ஆளுநர் ப்ளாக்பர்ன் உருவாக்கியவை. அதற்கு முன் மாசிவீதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை அடுத்து உட்கோட்டைச் சுவர் இருந்தது. அதை அடுத்து புறக்கோட்டைச் சுவரும்; அதைச் சூழ்ந்த அகழியும் இருந்தன. இன்றைய வெளிவீதிகளே அகழிகளாக இருந்தன. பெருமாள் மேஸ்திரி வீதிகளும், மாரட் வீதிகளும் அவற்றைச் சூழ்ந்த குடியிருப்புகளும் இருகோட்டைச் சுவர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகளாகும்.
5.1.1 ஆளுநர் ப்ளாக்பர்னின் முயற்சியால் நகரம் விஸ்தரிக்கப்பட்ட வரலாற்றை விரிவாகக் கூறும் மாவட்ட கெசட் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டு வெளியே இருந்த அகழி தூர்க்கப்பட்டது என்கிறது. அவ்வாறு தூர்க்கப்பட்ட அகழியின் மேல் உருவான வீதிகளே வெளி வீதிகள் எனப் பெயர் பெற்றன என்றும்; உட்கோட்டைச் சுவருக்கும், புறக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நாற்புறமும் இருபெரு வீதிகள் அமைந்தன என்றும்; அவை நகராக்கப் பணியை மேற்பார்த்த வருவாய்த் துறை அளவையாளர் பெயராலும், தலைமைப் பொறுப்பேற்றிருந்த மேஸ்திரி பெயராலும், முறையே மாரட் வீதிகள் என்றும், பெருமாள் மேஸ்திரி வீதிகள் என்றும் அழைக்கப்பட்டன என்றும் கூறுகிறது.2
____________________________________________________________________________
1. நகர் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும், அதைச் சுற்றி நாலாபுறமும் உள்ள ஆடி, சித்திரை, ஆவணிமூல, மாசி, வெளிவீதிகளும் மட்டுமே மையப் பகுதியாகக் கருதப்படுகின்றன.
2. B.S.Baliga- Gazetteers Of India- Madras- Madurai- ப.- 395- 396
**********************************************************************************************************************************************************************************************************8
5.1.2. வருவாய்த்துறைக்கு ஆளுநர் ப்ளாக்பர்ன் அனுப்பிய கடிதங்களின் பகுதிகளும் மேற்கூறிய கருத்துக்களை ஆதரிக்கின்றன. ஆய்வாளர் இக்கடிதங்களின் பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.1
5.1.3. கோட்டைச் சுவர்கள் இடிக்கப்படுவதன் முன்னர் அவற்றின் கிழக்குப்பகுதி ஒன்று ஓவியமாக வரையப்பட்டு லண்டனில் படப்பிரதி ஆக்கப்பட்டுத் தற்போது தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.2 இப்படப்பிரதி காட்டும் கோட்டைப்பகுதி இன்றைய மதுரை மையப் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள எஞ்சிய கோட்டைப் பகுதியின் தோற்றத்தைப் பெரிதும் ஒத்துள்ளது.
5.1.4. பழைய மதுரை கெசட்டில் இடம் பெற்றுள்ள மதுரையின் வரைபடத்தில் மதுரைக் கோட்டை காட்டப்பட்டுள்ளது.3 இப்படத்தில் கோட்டைக்குள் நடுவில் கோயிலும், சுற்றிலும் சித்திரை, ஆவணிமூல, மாசி வீதிகளும் மட்டுமே அமைந்திருக்கக் காண்கிறோம்.4
அக்கோட்டையின் வடக்குப் புறத்தில் இடையில் ஒரு திருப்பம் விரிகோணத்தில் உள்ளது. இன்று கோட்டை இல்லையெனினும் சற்றி எடுக்கப்பட்ட வடக்குவெளி வீதியின் இடையில் அவ்வளைவான அமைப்பை இனம் காண இயல்கிறது.5 மாடர்ன் லாட்ஜ் எனப்படும் நகர்ப் பேருந்து நிற்குமிடத்தை அடுத்து வடக்குவெளிவீதி வடக்கு முகமாகத் திரும்பி சில கெஜதூரம் சென்றபின் கிழக்கு முகமாகத் திரும்புகிறது. மதுரை மாவட்ட மைய நூலகம் இத்திருப்பத்தின் முடிவிலேயே இருந்து இயங்குகிறது.
அது மட்டுமின்றி வரைபடத்தில் இருகோட்டைச் சுவர்களும் தெற்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து வடக்கிலும், வடக்கிலிருந்து கிழக்கிலும் 90° நேர்கோணத்தில் திரும்புகின்றன.
____________________________________________________________________________
J.பாத்திமா- மதுரை நகரத் தெருப்பெயர்கள்- ப.- 184- பின்னிணைப்பு
பார்க்க- வரைபடம்- 2
W.Francis- Madras District Gazeteers- Madurai என்ற நூலில் இடம்பெற்றுள்ள கோட்டையின் மறுபதிப்பை வரைபடம்- 3ல் காண்க.
பார்க்க- வரைபடம்- 3
வளைவிற்கான காரணம்- பார்க்க- கரு.எண்- 5.3.7.1
5.1.5. கீழவாசல், தெற்குவாசல் என மதுரை நகரின் வெளிவீதிகளில் சில நகர்ப்பேருந்து நிற்குமிடங்கள் பெயர் பெறுகின்றன. இப்பெயர்கள் கோட்டை வாசல்கள் இருந்த இடங்களை நினைவுபடுத்துகின்றன. இதனால் வெளிவீதிகள் கோட்டைக்குவெளியே அமைந்த வீதிகள் என்ற கருத்து மீண்டும் வலுப்படுகிறது.
5.2.0. கி. பி. 1837ம் ஆண்டு தகர்க்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆளுநர் ப்ளாக்பர்ன் காலம் வரை இக்கோட்டை அமைப்பில் மாற்றம் பெறவில்லை.
5.2.1. பதினாறாம் நூற்றாண்டில் அரியநாத முதலியின் துணையோடு விஸ்வநாத நாயக்கர் பாண்டியர்களின் கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்து விட்டுப் புதிதாக எழுபத்திரண்டு கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டைச் சுவரையும், புறக் கோட்டைச் சுவரையும் எழுப்பித் திசைமாணியின் நான்கு மூலைகளிலும் நான்கு வாயில்களை நிறுவினார். ஆற்றின் போக்கை அடுத்த குறுங்கோணத்தில் இவ்வமைப்பு இருந்தது. சுற்றிலும் நான்கு திசைகளிலும் அகழி இருந்தது என்று மதுரை மாவட்ட கெசட் கூறுகிறது.1 ஆய்வாளரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.2
____________________________________________________________________________
W.Francis- மு.நூ.- ப.- 266; B.S.Baliga- மு.நூ.- ப.- 48, 63
J.P.L.Shenoy- Madurai The Temple City- ப.- 10
நாயக்கர் காலக் கோட்டை ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை வலிமையுடன் நின்று நகருக்குச் சிறந்த பாதுகாப்பைத் தந்தது. அவ்வப்போது செப்பனிடப்பட்டதே அன்றி அது மாற்றப் படவில்லை என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன. நாயக்கர் ஆட்சியை அடுத்து வந்த நெவாயத்துக்கள் பல பாளையக்காரர்களைக் கைப்பற்றி மதுரைக் கோட்டைக்குள் சிறை வைத்தனர்.1
கி. பி. 1751ம் ஆண்டு மாயனாவின் மைத்துனனான ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான்.2
முகமது அலி மதுரைக்கோட்டை சிதைந்த நிலையில் இருந்ததால் எளிதில் கைப்பற்றி விடலாம் என எண்ணினான். ஆனால் கோட்டை மிக வலிமையுடன் இருந்ததால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை.3
ஆங்கிலேயர் தளபதி கோப் தலைமையில்; கோட்டையின் வலிமையை அறியாது; மூன்று மாதகாலம் முற்றுகையிட்டுப் பல முயற்சிகள் செய்தும்; கோட்டையில் ஏறவோ; அதைத் தகர்க்கவோ இயலாமல் பின்வாங்கினர்.4
கி.பி.1752ல் ஆலம்கான் மாயனாவிடம் மதுரைக் கோட்டையை ஒப்படைத்துச் சென்றான். மாயனா மைசூரிலிருந்த கூகூசாகிபிடம் கோட்டையை விற்றுவிட்டு திருமோகூர் சென்று விட்டான். கூகூசாகிப் மதுரைக் கோட்டைக்குள் நுழைந்து விட்டது கேட்டு சேதுபதியின் ஆட்களும், சிவகங்கைச் சமீன்தாரும் பெரும்படையுடன் மதுரையை முற்றுகை இட்டனர். சில மாதங்கள் கழித்து கூகூசாகிப் கோட்டைக்கு உள்ளே இருக்க இயலாது; சேதுபதியிடம் அதை ஒப்படைத்து விட்டு திண்டுக்கல் சென்று விட்டான். ஒன்றரை ஆண்டுகள் கழித்து மாயனா; மகாதிமியா, நபிகான் முதலியோருடன் சேர்ந்து மீண்டும் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான். கூகூசாகிபும், சேதுபதியைச் சேர்ந்த வெள்ளையன் சேர்வைக்காரரும் ஆறுமாத காலம் அனுப்பானடியில் பாடியமைத்துத் தங்கி முற்றுகையிட்டும் கோட்டையைக் கைப்பற்ற இயலாமல் மாண்டனர்.5
கி.பி.1755ன் தொடக்கத்தில் முகமதுஅலி மதுரையில் அமைதி
____________________________________________________________________________
K.Rajayyan- History Of Madurai-1736-1801- ப.- 72
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 207
K.Rajayyan- மு.நூ.- ப.- 108
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 207- 208
மேற்.
**************************************************************************************************************************************************************************************************************************
நிலவ தளபதி ஹெரானின் தலைமையில்; பெரும்படையை அனுப்ப1 கோட்டையின் பாதுகாப்பு தளவாடங்களில் கவனமில்லாது இருந்த மாயனா கோயில்குடி சென்று தஞ்சமடைந்து விட்டான்.
முகமது யூசுப்கான் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டைக்குள் நுழைந்தான்.2 கி.பி.1766 யூசுப்கான் மதுரைக்கோட்டையைச் செப்பனிட்டு பலப்படுத்தினான்.3
யூசுப்கான் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பிவிடவே கி.பி.1757 கெய்லார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் மதுரைக் கோட்டையை இருமுறை முற்றுகையிட்டும் பலன் கிட்டவில்லை.4
கான்சாகிப் மீண்டும் மதுரைக் கோட்டையைச் செப்பனிட்டான்.5
கி.பி.1757ன் இறுதியில் ஹைதர்அலி பல நாட்கள் கோட்டையை முற்றுகையிட்டும் அதன் பலத்தைப் பார்த்துத் தாக்க முற்படாமல் பின்வாங்கினான்.6
கி.பி.1763ல் தளபதி பிரஸ்டனின் தலைமையில் பெரும்படை ஒன்று மதுரையைத் தாக்கியது.7 தோல்வியைச் சந்தித்தது .
கி.பி.1763ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி தளபதி மான்சன் தலைமையில் நடந்த முதல் தாக்குதல் நினைத்ததை சாதிக்க இயலாது பின்வாங்கியது.8 கோட்டையைச் சுற்றிலும் இரண்டரை மைல் தூரம் எங்கும் பாடியமைக்க இயலவில்லை. சுற்றிலும் 1500கெஜதூரம் வரை கூடாரம் அமைக்கவும் முடியவில்லை. அதற்கப்பால் தங்கி; பின்னர் அகழியைக் கடக்க இயலாது தவித்தனர்.9
கி.பி.1763ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்துநான்காம் நாள் ஆங்கிலப்படையும், வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக் கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை.10
____________________________________________________________________________
மேற்.- ப.- 209
மேற்.
மேற்.& K.இராஜய்யன்- மு.நூ.- ப.- 170
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 210& K.Rajayyan- மு.நூ.- ப.- 180- 183
K.Rajayyan- மு.நூ.- ப.- 189
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 210- 211
மேற்.
மேற். & K.Rajayyan- மு.நூ.- ப.- 225
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 212
K.Rajayyan- மு.நூ.- ப.- 225- 226
கி.பி.1764 ஜூன் மாதம் மேஜர் டொனால்ட் காம்பெல் தன் படையுடன் பெருமுயற்சி செய்தும் தோற்றுப் பின்வாங்கினார்1 கான்சாகிபை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சுத்தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது.2
கி. பி. 1800-1801ல் நடந்த தென்னிந்தியக் கலகத்தின் போது ஊமைத்துரை தலைமையிலான புரட்சிப்படை மதுரையை முற்றுகையிட்டுப் பின்வாங்கியது.3
இதனால் நாயக்கர் காலக் கோட்டை ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை மாற்றத்திற்கு உள்ளாகாமல் வலிமையுடன் இருந்தது என்பதை ஆய்வாளரும் கூறியுள்ளனர்.4
5.2.3. மேற்கண்ட முடிவினால் மங்கம்மா சத்திரம் என்ற பெயரில் மேற்கு வெளிவீயில் இருந்து இயங்கும் சத்திரம் ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட து என்ற பொதுமக்களின் நம்பிக்கை தவறானது என்பது புலனாகிறது.
இச்சத்திரத்தின் இருப்பிடம் புறக்கோட்டைச் சுவரை ஒட்டிய பகுதியாகிறது. நாயக்கர் காலக் கோட்டையில் உட்கோட்டைச் சுவருக்கும் புறக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்த முள்மரக்காடும், புதரும் மண்டியிருந்தமையால் பகைவர்கள் புறக்கோட்டைச் சுவரில் ஏறினாலும் உட்கோட்டைச் சுவரை எட்டுவது இயலாததாக இருந்தது என்பது வரலாற்று ஆய்வாளர் புலப்படுத்தும் செய்தியாகும்.6 இன்றைய மாரட் வீதிகளும், பெருமாள் மேஸ்திரி வீதிகளும் கி.பி. 1837ம் ஆண்டு வரை அடர்ந்த முள்மரக்காடாதலால் மங்கம்மாள் சத்திரம் கோட்டை இடிக்கப்பட்ட பின் எழுந்த அமைப்பு ஆகும். எழுபத்திரண்டு கொத்தளங்களுள் ஒன்றே சத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது அதன் உட்கட்டமைப்பைப் பார்க்கும் போது புலனாகிறது.
____________________________________________________________________________
1. K.Rajayyan- மு.நூ.- ப.- 227
2. D. தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 212
3. V.கந்தசாமி- மதுரை வரலாறும் பண்பாடும்- ப.- 209; K.Rajayyan- மு.நூ.- ப.- 209
4. V.கந்தசாமி- மு.நூ.- ப.- 91
5. J.P.L.Shenoy- மு.நூ.- ப.- 15-16
6. K.Rajayyan- மு.நூ.- ப.- 180
**********************************************************************************************************************************************************************************************************************5.3.0. கி.பி.1559ம் ஆண்டிற்கு முன்பு வரை இடைக்கால இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக்கோட்டை இன்றைய ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தது. கோட்டைச் சுவரை அடுத்து வெளியே அகழியும், அதற்கப்பால் புற நகர்ப்பகுதிகளும் இருந்தன.விஸ்வநாத நாயக்கர் மாசி வீதிகளை உருவாக்கும்போது இருந்தையூர், நடுவூர், கரியோன் திருவுறை, காளி கோயில், ஹரிஹரபுத்திரர் கோயில், தென்திருவாலவாய், சப்த கன்னியர் கோயில் முதலிய புறநகர்ப் பகுதிகளை இணைத்தார். வடதிருவாலவாய் மாசிவீதிக்குள் அடங்காததால் அது வடக்குப் புறக்கோட்டைச் சுவரின் உட்புறத்தை ஒட்டி அமைந்தது.
5.3.1. இன்றைய மதுரையின் அம்மன் சன்னிதிக்கு எதிரே கீழ ஆவணிமூல வீதிக்கும், கீழமாசிவீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கல்லாலான உயர்ந்த வாயில் போன்ற அமைப்பு விட்டவாசல் என்று பெயர் பெறுகிறது. இதில் காணப்படும் பதிப்புக் கல்வெட்டு இது பாண்டியர் காலக்கோட்டையின் எஞ்சிய பகுதி என்று சொல்வதாக ஆய்வாளர் கூறியுள்ளனர்.1 அழிக்கப்பட்ட பாண்டியர் கோட்டையில் விடுபட்ட வாசல்; ஆதலால் விட்டவாசல் என்று பெயர் பெற்றதெனக் காரணமும் கூறுகின்றனர்.2
5.3.2 மாசி வீதிகளுக்கும் ஆவணிமூல வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பாண்டியர்களின் அகழி இருந்து தூர்க்கப்பட்டமை தெருப் பெயர்களின் மூலம் தெளிவாகிறது. மேலமாசி வீதிக்கும்; மேல ஆவணிமூல வீதிக்கும் இடையில் பாண்டியன் அகிழ் சந்து என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது. அகழி என்ற சொல்லே அகிழ் என மாற்றம் பெற்றுள்ளது3 என ஆய்வாளர் கருதுகின்றனர்4. நிரப்பப்பட்ட அகழிப் பகுதி அதன் இரு புறங்களிலும் நிலப்பகுதியை விட பள்ளமாக இருப்பது இயல்பு. தெற்குப் பாண்டியன் அகிழ் தெருவிலிருந்து
____________________________________________________________________________
V.கந்தசாமி- மு.நூ.- ப.- 90
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 101& A.V.ஜெயச்சந்திரன்-மு.நூ.- ப.- 172
இது உயிர் இடம் பெயரல் என்னும் உருபொலியன் விதியில் அடங்கும்; ஆதலால் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.
A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 172- அ.கு.
பிரியும் கம்மாளத்தெரு பள்ளமான அகிழ் தெருவை நோக்க மேடாக இருந்ததால் மேட்டுக் கம்மாளத்தெரு என்று வழங்குகிறது.
மாநகராட்சித் தெருப் பெயர்ப் பட்டியலில் உள்ள சங்கீத விநாயகர் கோயில் தெரு, சங்கீதவித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளை சந்து1 முதலியவை முறையே பள்ளத்தெரு என்றும், பூக்காரப் பள்ளத்தெரு என்றும் வழங்கின என்றும்; அதற்கு முன்னர் அவை வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு என்ற ஒரே பெயரைப் பெற்றிருந்தன என்றும் கருத்து நிலவுவதை எடுத்துக் காட்டுகின்றனர்.2
பிற ஆய்வாளரும் அகிழ் தெரு என்பது பாண்டியர் கோட்டையை அடுத்த அகழி இருந்த இடம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.3 இதனால் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக்கோட்டையும் அகழியும்; மாசிவீதிக்கும் ஆவணிமூல வீதிக்கும் இடையில் இருந்ததெனப் புலப்படுகிறது.
5.3.3.0. குலசேகர பாண்டியன் மணவூரில் இருந்து ஆண்டு கொண்டு மதுரையில் கோட்டையும், சூழ அகழியும் ஏற்படுத்திப் பின்னர் ஹரிஹரபுத்திரர் கோயில், சப்தமாதர் கோயில், திருமால் கோயில், காளிகோயில் முதலியவற்றை முறையே; கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் கட்டினான் என திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை பாடுவதை முன்னையோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.4 இக்கோயில்கள் நான்கையும் இன்றைய மாசி வீதிகளில் இனம் காண இயல்கிறது.
5.3.3.1. கீழமாசி வீதியில் இன்று ஐயனார் கோயில் என்ற பெயரில் உள்ள சிறிய அமைப்பு இடைக்காலப் பாண்டியர் கட்டிட அமைப்பைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது என்றும்; இது பாண்டியர் கட்டிய
____________________________________________________________________________
பார்க்க- வரைபடம்- 4
J.பாத்திமா- மு.நூ.- ப.- 59, 79, 83, 109, 111, 123, 147.
G.சங்கரராஜுலு- “A Note On The Location Of The Ancient City Of Madurai”- Historia- Vol.- ll - ப.-185
J.M.சோமசுந்தரம்- பாண்டியர் பெருமாட்சி- ப.- 46
குலசேகர பாண்டியன் அமைத்த திருமால் கோயில் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் என்று வழங்கி வந்தது. இன்று புனித ரோசரி தேவாலயமாக மாற்றப்பட்டு விட்டது என்பர்.3 சில ஆண்டுகட்கு முன்பு வரை அங்கிருந்து புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் தூண்கள் சில ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன என்றும்;4 மாலிக்காபூர் படையெடுப்பால் சிதைந்த இக்கோயிலிலிருந்து சிலதூண்களைத் திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் சந்நிதியிலுள்ள கிளி மண்டபத்தில் நிறுத்தினார் என்றும் கூறுவர்.5
கரியமாணிக்கப் பெருமாள் கோயில் சிதைந்து விட்டாலும் அதன் எதிரில் இருந்த தெப்பக்குளம் இன்றும் பெருமாள் தெப்பக்குளம் என்ற பெயரில் பாழும் குளமாக புனித ரோசரி தேவாலயத்தின் முன் கடைகளுக்குப் பின் மறைந்து கோபுரத்துடன் கூடிய மைய மண்டபத்துடன் காட்சியளிக்கிறது (1980ஐ ஒட்டிச் செய்த கள ஆய்வு).
பாண்டியன் அமைத்த காளிகோயில் இன்று வடக்குமாசி வீதியில் செல்லத்தம்மன் கோயில் என்ற பெயருடன் உள்ளது.6 இங்கு கருவறையில் கண்ணகி சிலை கையில் ஒற்றைச் சிலம்புடன் உள்ளதெனினும் சன்னிதானத்தின் முன் உள்ள அம்மனுக்கு வழிபாடு நடக்கக் காண்கிறோம். இக்கோயிலின் கட்டிட அமைப்பு இடைக்காலத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.7
இதனால் இந்நான்கு கோயில்களும் பாண்டியர் காலத்தில் புற நகர்ப் பகுதிகளாக இருந்தன என்பதும் நாயக்கராட்சிக்காலத்தி ல்மாசி வீதியின் மூலம் கோட்டைக்குள் இணைக்கப்பட்டன என்பதும் தெளிவு.
____________________________________________________________________________
மேற்.- ப.- 48; A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 144
J.M.சோமசுந்தரம்- மு.நூ.- ப.- 48; A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- 144
J.M.சோமசுந்தரம்- மு.நூ.- ப.- 48
A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 144- 172
அ. கி. பரந்தாமனார்- மதுரை நாயக்கர் வரலாறு- ப.- 199- 200
J.M.சோமசுந்தரம்- மு.நூ.- ப.- 48
A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 144
5.3.5.2.சிம்மக்கல் பகுதியில் கண்ணகி சிலையுடன் செல்லத்தம்மன் கோயில் இருப்பதாலும்; அதைச் சுற்றிலும். கோனார்களின் குடியிருப்பு மிகுதியாக இருப்பதாலும்; சிலப்பதிகார கதாபாத்திரமான மாதரி இப்பகுதியில் தான் குடியிருந்திருக்க வேண்டும் என்று கூறுவோர் உளர்.1 இக்கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் கி.பி.1558ம் ஆண்டு வரை அது பாண்டியர் கால மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்து; பின்னர் விஸ்வநாத நாயக்கர் கோட்டை கட்டிய பொழுது தான் கோட்டைக்கு உட்பட்டதாகியது.
சிம்மக்கல் பகுதியில் கோனார்களின் குடியிருப்பு மிகுதியாக உள்ளமைக்கு மதுரை மாவட்ட கெசட்டில் விளக்கம் கிடைக்கிறது.2 ஆளுநர் ப்ளாக்பர்ன் நாயக்கர் கட்டிய கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்து நகரை விரிவாக்க நினைத்த பொழுது கைதிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை. ஏனெனில் அப்பொழுது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நிகழ்ந்து கொண்டு இருந்தது. அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்திற்கு என ஒதுக்கி விலைபேசிக்; குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களே அதை இடித்துக் கட்டிடங்களை எழுப்பிக் கொள்ள ஏற்பாடு செய்து இருந்தார். இதன்படி பார்த்தால் நாயக்கர் கோட்டையின் வடமேற்குப் பகுதி கோனார்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதி என்று எண்ண இடம் உள்ளது.
தெற்குமாசி வீதியிலிருந்து தெற்குவெளிவீதி வரை சௌராஷ்டிரர்களின் குடியிருப்பு மிகுதியாக இருப்பதற்கும்; மேற்கு மாசி வீதியிலிருந்து மேற்கு வெளிவீதி வரை வேளாளர் குடியிருப்பு மிகுதியாக இருப்பதற்கும்; கிழக்கு மாசி வீதியிலிருந்து கிழக்கு வெளி வீதி வரை நாயக்கர், நாயுடு முதலியோரின் குடியிருப்பு மிகுதியாக இருப்பதற்கும் மேற்சுட்டிய ஏற்பாடே காரணம் எனல் பொருந்தும்.
5.3.4.0. பாண்டியராட்சிக் காலத்தில் மதுரைக்கோட்டையின் புறத்தே இருந்த இருந்தையூர் நாயக்கராட்சிக் காலத்தில் கோட்டையுள் இணைக்கப்பட்டது.
5.3.4.1. மதுரையின் அருகில் இருந்தையூர் என்ற குடியிருப்புப்பகுதி இருந்தமை பரிபாடல் திரட்டு மூலம் தெரிகிறது.
___________________________________________________________________________
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 97
B.S.பாலிகா- மு.நூ.- 395
****************************************************************************************************************************************************************************************************************
“நான்மாடக் கூடல் எதிர்கொள்ள ஆனாது
மருந்தாகும் தீநீர் மலிதுறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ”1
என்று வரும் அடிகள் வையையாற்றின் போக்கில் மதுரைக்கு முன்னர் இருந்தையூர் என்னும் பகுதி இருந்ததெனத் தெளிவாக்குகிறது. இதன் சுற்றுப்புறமும், சூழலும் குறித்து இப்பாடல் மேலும்,
“ஒருசார், அணிமலர் வேங்கை மராஅ மகிழும்
… மணிநிறம் கொண்ட மலை
ஒருசார்,தண்ணறுந் தாமரைப் பூவின் இடையிடை
… கண்வீற்றிருக்கும் கயம்
ஒருசார், சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று
… திருநயத்தக்க வயல்
ஒருசார், அறத்தொடு வேதம்
… அறத்தில் திரியாப் பதி
…………………………....தொல்சீர்
வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக்
குளவாய் அமர்ந்தான் நகர்”2
என்று பாடியுள்ளது. இவ்வாறு ஒருபுறம் மலையும், ஒருபுறம் குளமும், ஒருபுறம் வயலும், ஒருபுறம் ஊரும் கொண்டிருந்த திருமால் கோயில் இன்றைய கூடலழகர் கோயிலின் இருப்பிடத்தோடு பொருந்தி வருகிறது. ஒருபுறம் பசுமலையும்,3 ஒருபுறம் ‘ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையுடன்
____________________________________________________________________________
பரிபா. திரட்டு- பா-1- அடி.- 3-5
மேற்.- பா.- 1
பசுமலை தன் பசுமையின் காரணமாகவே அப்பெயர் பெற்றிருக்க வேண்டும். ‘மணிநிறம் கொண்ட மலை’ என்ற தொடரும் பசுமை காரணமாக ஏற்பட்ட பெயரென்பதற்குச் சான்றாகிறது. பிற்காலத்தில் நாகமலை பாம்பு போல் இருப்பதாலும், ஆனை மலை யானையின் தோற்றம் கொண்டு இருப்பதாலும் பசுமலை பசுவின் தோற்றம் கொண்டதென்ற தவறான கருத்து உருவானது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் திருவிளையாடற்புராணத்தில் கதையும் கூறப்பட்டது. தவறான கருத்து மேலும் வலுப்பட்டது.
இருந்தவளமுடையார் கோயில் கொண்டிருக்கும் பதி இருந்தையூர் ஆகும். இன்றைய கூடலழகர் கோயில் மேலமாசி வீதியும் தெற்கு மாசிவீதியும் சந்திக்கும் இடத்தின் அருகில் உள்ளது. இப்பகுதி மதுரை மையப்பகுதியின் தென்மேற்குப் பகுதியாதலால் வையை இப்பகுதியைக் கடந்த பின்னரே மதுரை நகரை அடைய முடியும். மேற்கூறிய பாடல் கருத்துக்கள் முற்றிலும் இக்கோயிலுடன் பொருந்தி வருகின்றன. இதனால் பாண்டியர் காலத்தில் மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்து நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசிவீதியின் மூலம் கோட்டைக்குள் இணைக்கப்பட்டது தெளிவாகிறது.
5.3.4.2. மதுரையில் திருநடுவூர் என்ற கோயிலை சுந்தரபாண்டியன் கட்டினான் என்று திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை பாடுவதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளனர்.1 இன்றைய இம்மையே நன்மைதருவார் கோயிலில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் நடுவூர் நாயகி ஆகும். இக்கோயில் மேலமாசி வீதியில் உள்ளது. எனவே பாண்டியப் பேரரசுக் காலத்தில் ‘ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய மதுரை’யின் புறநகர்ப் பகுதியாக இருந்து அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் கட்டிய கோட்டைக்குள் இணைக்கப்பட்டது எனத் தெரிகிறது.
5.3.6. சம்பந்தர் பாடும் தென்திருவாயிலை2 இன்று தெற்குமாசி வீதியில் காண இயல்வதால் இக்கோயிலும் பாண்டியர் காலத்தில் ‘ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய மதுரை‘யின் புறநகர்ப் பகுதியாக இருந்து அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் கோட்டை கட்டிய பொழுது அதனுள் இணைக்கப்பட்டமை தெரிகிறது.
____________________________________________________________________________
J.M.சோமசுந்தரம்- மு.நூ.- ப.- 51
தேவா.- 3ம் திரு.- பதி.- 366
5.3.7.0.கல்லாடம் வடதிருவாலவாயிலைக் குறிப்பிடுகிறது.1 இக்கோயில் இன்று வடக்கு வெளிவீதியில் உள்ளது.
5.3.7.1.மக்கள் வழக்கில் இக்கோயில் பழைய சொக்கநாதர் கோயில் என்று பெயர் பெற்றுள்ளது. இக்கோயிலின் கட்டிட அமைப்பு இதனை இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியைச் சேர்ந்ததென்று காட்டுவதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.2 வடதிருவாலவாய் என்ற பெயருக்கேற்ப ஆலவாய்க்கும் தென்திருவாலவாய்க்கும் வடக்கில்; மதுரை மையப்பகுதியின் வடக்கில் உள்ளது. இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் இக்கோயில் மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்து; விஸ்வநாத நாயக்கர் நாயக்கர் கோட்டை கட்டிய பொழுது மாசிவீதிக்குள் அடங்காததால் அதை உள்ளடக்குவதற்காகவே வடக்குக் கோட்டைச் சுவரின் இடையில் முற்சுட்டியவாறு ஒரு வளைவினை ஏற்படுத்திப் பின்னர் புறக்கோட்டைச் சுவரை ஒட்டி வடக்கு வாயிலுள் அமையுமாறு நிறுவினார் என்று எண்ண இடமுளது.3
ப்ளாக்பர்ன் காலத்தில் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டு மாசிவீதி முதல் வெளிவீதி வரை புதுக்குடியிருப்புகள் தோன்ற இக்கோயில் மட்டும் அப்பகுதியில் ஏற்கெனவே இருந்தமையாலேயே மக்கள் ‘பழைய’ என்னும் அடைமொழியைக் கொடுத்தனர் எனலாம். எனினும் கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதால் கட்டிட அமைப்பு பிற்காலத்தைச் சேர்ந்ததாயிற்று எனல் தகும். கோயிலின் பழமை அடிப்படையிலேயே மீனாட்சியம்மை தடாதகையாக இருந்து ஆண்ட போது இங்கு வந்து சிவபூசை செய்ததாக மக்களிடம் கதை தோன்றி வழங்குகிறது.
மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இசுலாமியப் படையெடுப்பால் சந்நிதி நீங்கலான பகுதிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நாயக்கர் காலத்தில் மீண்டும் எழுப்பப்பட்டது. ஆயின் படையெடுப்பால் சிதையாத இக்கோயில் தன்
____________________________________________________________________________
கல்.- பா.- 50
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 361
பார்க்க- கரு.எண்- 5.1.4
பழமையைக் காட்டும் வண்ணம் ‘பழைய’ என்னும் அடைமொழியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிற ஆய்வாளரும் கூறியுள்ளனர்.1
5.3.7.2. தென்திருவாலவாய்க்கு வடக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இருப்பதால் அதுவே வடதிருவாலவாய் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.2 மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் ஆலவாய் என்றே எல்லா இலக்கியங்களிலும் குறிக்கப்படுகிறதன்றி அதற்கு வடதிருவாலவாய் என்று பெயர் இருந்தமைக்கு ஆதாரம் இல்லை. அத்துடன் கல்லாடம்,
“வடதிருவாலவாய் திருநடுவூர்
…………………………………….
சூழ்கொள விருந்த கூடலெம் பெருமான்”3
என்று முதலடியில் வடதிருவாலவாயையும் இறுதியடியில் ஆலவாய் அப்பனைக் கூடலெம்பெருமான் என்றும் குறிப்பிடுவதால் வட திருவாலவாய் என்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் என்ற ஆலவாய் அல்ல என்றும்; அவையிரண்டும் இருவேறு கோயில்கள் என்றும் புலனாகிறது. ஆய்வாளரும் வடதிருவாலவாய், ஆலவாய், தென்திருவாலவாய் என்று மூவேறு கோயில்களாகக் கொள்வதே பொருத்தம் என்று கூறியுள்ளனர்.4
இதனால் ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய பாண்டியர் கால மதுரையின் புறநகர்ப் பகுதிகளாக இருந்த எட்டுக் கோயில்களில் வடதிருவாலவாய் தவிர பிற ஏழும் மாசிவீதிகளின் மூலமாக விஸ்வநாத நாயக்கரால் கோட்டைக்குள் இணைக்கப்பட்டன என்றும்; வடதிருவாலவாய் வடக்கிலிருந்த புறக்கோட்டைச் சுவரின் வாயிலில் நுழைவிட உட்புறத்தில் அமைந்தது என்றும் தெளிவாகிறது.
5.4.0. முதலாம் பாண்டியப் பேரரசுக் காலத்திலும் மதுரை நகரம்
_____________________________________________________________________
J.பாத்திமா- மு.நூ.- ப.- 17
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 134- 135
கல்.- பா.- 59
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 133- 135
இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை உள்ளடக்கிய பகுதியாகவே இருந்தது.
5.4.1. அப்பர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை ஆலவாய் என்று குறிப்பிட்டு அது மதுரையில் இருந்ததாகப் பாடுகிறார்.
“தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே
சிந்திக்கப் பெற்றேன் நானே”1
என்ற மேற்கோள் பகுதி காணற்குரியது. சம்பந்தரும் அங்ஙனமே பாடியுள்ளார்.
“...கபாலிநீள் கடிம்மதில்
கூடல் ஆலவாயிலாய்”2
என்ற பகுதியில் இடம்பெறும் ‘கபாலிமதில்’ என்பது இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சுவாமிசந்நிதி முதல் திருச்சுற்றினைச் சூழ்ந்திருக்கும் மதில்சுவர் ஆகும்.
மதுரை ஸ்தானிகர் வரலாறு மாலிக்காபூரின் படையெடுப்பின் போது இக்கபாலி மதில் வரை மட்டுமே முஸ்லீம்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்தது என்று கூறுவதை ஆய்வாளர் எடுத்துக் காட்டி ஆதரிக்கின்றனர்.3
5.4.2. இடைக்காலக் கல்வெட்டுக்கள் திருஞானசம்பந்தர் மடம் ஒன்று மதுரையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.4 இது கி.பி.ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கிய காலத்திலிருந்த சிறு பகுதி மீது கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.☆ இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கடுங்கோன் வழிவந்த பாண்டியர் கால மதுரை இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை உள்ளடக்கி அதையடுத்தே அமைந்திருந்தது என்று ஆய்வாளரும் கூறியுள்ளனர்.5
____________________________________________________________________________
தேவா.- 6ம் திரு.- பதி. -233- பா - 1
தேவா.- 3ம் திரு.- பதி.- 310- பா- 1
A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 89& G.சங்கரராஜுலு- மு.நூ.- ப.- 186
M.E.R.- 13 of 1894; 62 of 1905; 285 of 1916
V.கந்தசாமி- மு.நூ.- ப.- 90
☆ பின்னிணைப்பு
திருஞானசம்பந்தர் மடம்☆
இன்றைய மதுரையின் தெற்காவணி மூலவீதியில் இருக்கும் திருஞான சம்பந்தர் மடம் ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் தங்கிய இடம் என்ற கருத்தின் வன்மை மென்மைகளை அங்கு சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா என்றும் என்னைத் துரத்தும். கி.பி. 2004ம் ஆண்டு அது கைகூடியது. நான் பணியாற்றிய கல்லூரி மாணவிகளை அழைத்துக்கொண்டு மதுரைக்குக் கல்விச்சுற்றுலா சென்றபோது; அந்த மடத்திற்குள் சென்றது மட்டுமல்லாமல்; அங்கிருந்த நூற்றுக்கணக்கான மடாதிபதிகளின் படங்களையும் பார்க்க முடிந்தது. மிகப்பழங்காலத்து மடாதிபதிகளின் உருவங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்ற போது மடத்தின் விசாலமும், விஸ்தீரணமும் புலப்பட்டன. என் ஆய்வுமுடிபின்படி அது பாண்டியர் காலத்துக் கோட்டைச் சுவரினை ஒட்டிய பகுதி ஆகும். எங்களை விருந்தினராக வரவேற்ற மதுரை ஆதீனம் அது திருஞானசம்பந்தர் தங்கிய இடம் என்பதை ஆமோதித்ததோடு அல்லாமல்; மதுரை வரலாற்றோடு இந்த ஆதீனத்தின் வரலாறு எப்படிப் பின்னிப் பிணைந்தது என்றும் கூறினார். ‘இசுலாமியர் காலத்தில் திப்புசுல்தான் கூட இம்மடத்திற்கு வருகை தந்துள்ளார். மடத்து ஆவணங்கள் அப்படித்தான் கூறுகின்றன’ என்றார். எல்லோருக்கும் வியப்பைத் தந்த அவரது அரைமணி நேர உரை மடத்தின் ஆவணங்கள் குறிப்பிடத்தக்க வரலாற்று உண்மைகளை உள்ளடக்கி உள்ளன என்பதைப் புலப்படுத்தியது.
*****************************************************************************************************************************************************************************************************************
5.5.0. சங்ககால மதுரை நகரம் இடைக்கால இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்து மதுரையின் தென்கூறை மட்டும் உள்ளடக்கியது ஆகும். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை வடகிழக்கு மூலையிலும், கூடலழகர் கோயிலை மேற்கெல்லையிலும் கொண்டு திகழ்ந்தது.
5.5.1. பண்டைத் தமிழகத்தில் ஊர்கள் கீழ், மேல் என்று இருகூறு பட்டிருந்தன.1 கீழ்ப்பகுதியிலேயே பெரும்பாலும் இறந்தோரைப் புதைக்கும் இடங்கள் முதலியன இருந்தன என்பது அகழ்வாய்வு மூலம் புலப்படுவதை ஆய்வாளர் எடுத்துக் கூறுகின்றனர்.2
இன்றைய மதுரை மையப் பகுதியை ஒட்டித் தென்கிழக்கில் கீழ்மதுரை உள்ளது. இக்கீழ்மதுரைக்கும் இன்றையமதுரை தெற்கு வெளிவீதியின் கிழக்கு மூலைக்கும் இடையில் உள்ள தூரம் ஏறத்தாழ இரண்டு கி. மீ. தூரமாகும். கீழ்மதுரையை அடுத்து சில பர்லாங் தூரத்தில் உள்ள அனுப்பானடியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தாழிகளும் பிற எச்சங்களும் கிடைத்துள்ளன.3 இதனால் கீழ்மதுரைக்கு நேர்மேற்கிலேயே பண்டைய மதுரை இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுளது. அவ்வாறு கொண்டால் ஆலவாய் நகரின் வடகிழக்குத் திசையில் அமைகிறது.
இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம் சுயம்புலிங்கம் எனவும்; அது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு கடம்ப மரத்தின் படிமம் என்றும்4 கூறுகின்றனர்.5 மரங்கள் இவ்வாறு காலப்போக்கில் கார்பன் அல்லது சிலிகான் சேர்க்கையால் கல்மரங்களாவது உண்டு என அறிவியல் நிபுணர்களும் கூறியுள்ளனர்.6 எனவே சங்ககாலம் தொட்டு இக்கோயிலின் கருவறையிலுள்ள லிங்கம்
___________________________________________________________________________
கீழக் கோயில்குடி, மேலக்குயில்குடி; கீழ்மாத்தூர், மேல்மாத்தூர்; கீழப்பனங்குடி, மேலப்பனங்குடி; கீழையூர், மேலையூர்; கீழப்பெரும் பள்ளம், மேலப் பெரும்பள்ளம்; முதலிய ஊர்களின் பெயர்கள் காணற்குரியன.
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 16
B.S.Baliga- மு.நூ.- ப.- 393; D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 14
fossil
A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 255, 261
திரு.சு.கி.செயகரன்- “பாசில்கள்- பூமகளின் காலச்சுவடுகள்”- கலைக்கதிர்- செப்டம்பர்- 1977- ப.- 63
வழிபடு பொருளாக இருக்கக்கூடியது சாத்தியமே.1 திருவிளையாடற் புராணக் கதையும் தேவர்களெல்லாம் வழிபாடு செய்து கொண்டிருந்த லிங்கம் கடம்பவனக் காட்டில் இருந்ததாகவே கூறுகிறது.2 ஏற்கெனவே வழிபாடு நிகழ்ந்த இடத்தில் குலசேகர பாண்டியன் கற்கோயில் எடுத்து விரித்துள்ளான்.
5.5.2.0. மயமதம் கூறும் நகரமைப்பு விதிகள் சங்ககால மதுரை இடைக்கால மதுரையின் தென்கூறை மட்டும் உள்ளடக்கியது என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளன.
5.5.2.1. மயமதம் சிவன் கோயில் நகரின் ஈசான்ய திசையில் அமையவேண்டும் என்று கூறுகிறது.3 பண்டு தமிழகத்தில் மயமதமே பெரிதும் போற்றப்பட்டது என்பது முன்னர்த் தெளிவாக்கப்பட்டது.4 இதனால் சங்ககால மதுரையில் சிவன்கோயில் மயன் விதித்தபடி வடகிழக்குத் திசையில் அமைந்திருந்தது என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகிறது.
திருமால் கோயில் ஊரை நோக்கி இருப்பது சுபபலனை அளிக்கும் என்றும் மயமதம் கூறுகிறது.5 இன்றைய கூடலழகர் கோயிலே மதுரையின் மிகப் பழமையான வைணவ ஆலயம் என்பது பரிபாடல் திரட்டு மூலம் தெளிவாகிறது.6 இக்கோயில் தெற்கு மாசிவீதியும் மேல மாசிவீதியும் சந்திக்கும் மூலையில் கிழக்குமுகமாக இருப்பதால் பண்டை மதுரை இக்கோயிலின் நேர்கிழக்கில் இருந்திருக்க வேண்டும் எனப் புலனாகிறது.
மயமதம்கோட்டை வாயிலில் கோபுரம் இருப்பது சிறப்பு என்று பேசுவது பற்றியும்; மதுரைநகரக் கோட்டை மேலிருந்த கோபுரங்களால்
____________________________________________________________________________
தென்திருவாலவாயிலிலும், வடதிருவாலவாயிலிலும் உள்ள லிங்கங்கள் சுயம்புலிங்கங்கள் அல்ல; ஆதலால் அவை சங்க கால மதுரையின் சிவன் கோயில்கள் என்று எண்ண இடமில்லை. அக்கோயில்களும், லிங்கங்களும் இடைக்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
திருவிளை.- மதுரைக் காண்டம்- திருநகரங் கண்ட படலம்- பா.- 3- 12
மய.- பாகம்-1- ப. 76
பார்க்க- கரு.எண்- 2.3.1
மய.- பாகம்-1- ப.- 82
பரிபா.- திரட்டு- 1-& பார்க்க கரு.எண்- 5.3.4.1
நகரம் பெற்ற சிறப்புப் பெயர்கள் பற்றியும் முன்னர்க் கண்டோம்.1 சங்க இலக்கியத்திலும் மதுரை கோபுரத்துடன் கூடிய கோட்டை வாயிலுடன் இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.2
5.5.2.2. “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீறூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”3
என்ற பரிபாடல் திரட்டு காலத்தால் பிற்பட்டது என்ற கருத்தும் இதனால் தெளிவுபடுகிறது. இப்பாடல் நகரின் நடுவில் ‘அண்ணல் கோயில்’ இருந்ததாகப் பாடுகிறது. சங்க காலத்தில் நகரின் நடுவில் ‘அண்ணல் கோயில்’ இல்லை என்பது மேற்கண்ட ஆய்வில் புலனானது.
இப்பாடல் கூறும் ‘அண்ணல் கோயில், திருமால் கோயில் என்று கூறுவோரும் உளர்.4 இவ்வாறு கொள்ளக் காரணமாக அமைவது இப்பாடலின் முதலடியில் இடம்பெறும் ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை’ என்னும் உவமை ஆகும். அவ்வுவமை நகரின் அமைப்பினை விளக்க எடுத்தாளப்பட்டு உள்ளதே அன்றி அதன் காரணமாக நடுவில் இருந்த ‘அண்ணல் கோயில்’ திருமால் கோயிலே என்று கொள்வது பொருத்தமற்ற கருத்தாகும்.
‘அண்ணல் கோயில்’ என்பது மன்னனின் அரண்மனையைக் குறிக்கும் என்று கூறுவோரும் உளர்5. இவ்வாறு கொள்வதற்குக் காரணம் எதுவும் காட்டப்படவில்லை. ஆயின் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் இருந்து மதுரை நகரின் சிவன் கோயில் நகரின் நடுவில் இருந்தமை இதுவரை கண்ட ஆய்வின் மூலம் புலப்பட்டுள்ளது.
___________________________________________________________________________
பார்க்க- கரு.எண்- 2.3.1
மதுரைக்.- அடி.- 355- 356
பரிபா. திரட்டு- பா- 7- அடி.- 1- 4
தி. முருகரத்தினம்- “மதுரை மூதூர் மாநகர்“- மதுரைத் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர்- ப.- 262- 263
ச.சாம்பசிவன்-”பரிபாடலில் மதுரை”- மதுரைத் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர்- ப.- 50& S.V.நடராசன்- மு.நூ.- ப.- 47
ஆதலால் பரிபாடல் திரட்டு கூறும் அண்ணல் கோயில் சிவன்கோவிலே ஆகும்.
நாயக்கர் காலத்தில் தான் கோயிலை மையமாக வைத்து சுற்றியுள்ள நாற்புறமும் வீதிகள் இணையாகச் செல்லும் அமைப்பு முழுவதுமாக உருப்பெற்றது என்ற ஆய்வாளர் கருத்தும்1 ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. ஏனெனில் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்திலேயே கோயிலை மையமாக வைத்து நாற்புறமும் வீதிகள் அமைந்திருந்த பாங்கினை முன்னர் கண்டோம்.2 பரிபாடல் திரட்டு காலத்திலேயே இவ்வமைப்பு உருவாகியிருக்க வேண்டும் என்பதும் மேற்சுட்டிய பாடலடிகள் மூலமாகவே தெளிவாகிறது. ஆய்வாளர் சிலரும் பரிபாடல் திரட்டு காலத்திலேயே மதுரைக்குச் சதுர அமைப்பு உருவானது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.3
5.5.3. மேற்கண்டவாறு சங்க கால மதுரை இடைக்கால மதுரையின் தென்கூறை மட்டும் உள்ளடக்கியதெனின் வையையாறு மதுரைக் கோட்டையை மோதிச்சென்றது என்ற இலக்கியச் செய்தி4 பொருந்துவது எங்ஙனம் என்ற வினா எழுகிறது. வையையில் நிகழ்ந்த வெள்ளங்களின் பட்டியல் இங்கு நோக்கத்தக்கது.5
கி. பி. 1677ல் வையையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையை உடைத்தது. கி.பி.1709ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் வழியில் இருந்த எல்லாக் குளங்களும் உடைந்தன.
கி.பி.1814ல் நிகழ்ந்த வெள்ளத்தில் 3000 கால்நடைகள் அழிந்தன. கி.பி.1843லும் வையை வெள்ளம் பல குளங்களை உடைத்தது.
கி.பி.1877ல் ஓடிவந்த பெருவெள்ளம் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது. கி.பி.1884ல் பெருவெள்ளம் ஓடி அனுப்பானடி கால்வாயையும் சேதப்படுத்தியது.
கி.பி.1922ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியும், டிசம்பர் 1ம் தேதியும்
தொடர்ந்து ஓடிய வெள்ளப்பெருக்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்
____________________________________________________________________________
J.P.L.Shenoy- மு.நூ.- ப.- 7
பார்க்க- கரு.எண்- 5.3.0; 5.3.1; 5.3.2
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 77, 78; G.சங்கரராஜூலு- மு.நூ.- ப.- 186
பரிபா.- 12- அடி.- 9- 10
B.S.பாலிகா- மு.நூ.- ப.- 19- 29
கோயில் வரை தாக்கி மிகுந்த சேதத்தை விளைவித்தது. ஊருக்குள் 633வீடுகள் அழிந்தன. வைகை வரும் வழியில் உள்ள எல்லா ஊர்களிலும் அழிவு மிகுந்திருந்தது.
கி.பி.1923ம் ஆண்டு 16ம் நாள் வைகையில் ஓடிய வெள்ளம் சாலை மட்டத்தை எட்டியது.
கி.பி.1931ம் ஆண்டிலும், டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தியது.
கி.பி.1935ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள், கி.பி.1940ஆண்டு டிசம்பர் 2ம் நாள், கி.பி.1943ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள், கி.பி.1944ம் ஆண்டு அக்டோபர் 29ம் நாள், கி.பி.1946ம் ஆண்டு நவம்பர் 10முதல் 13வரையிலும்; டிசம்பர் 8ம் நாளும் வைகையில் வெள்ளம் ஓடியமை பற்றி மதுரை மாவட்ட கெசட் விரித்துச் சொல்கிறது.
கி.பி.1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெருகிய வெள்ளத்தில் 336வீடுகள் அழிந்தன. இப்படி என்றோ ஒருநாள் வரும் வையை வெள்ளமே கோட்டையில் மோதிச் சென்றிருக்க வேண்டும்.
கி.பி.1922ம் ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரை வெள்ளம் பெருகியது எனக் காண்பதால்; பண்டைய மதுரை இன்றைய மதுரையின் தென்கூறை மட்டும் உள்ளடக்கி ஈசான்ய மூலையில்; அதாவது வடகிழக்கு மூலையில் சிவன் கோயிலைக் கொண்டு திகழ்ந்தது என்பதும்; வையை வெள்ளம் கோட்டைச் சுவரை மோதிச் சென்றது என்பதும் பொருத்தமான கருத்தே என்பது புலனாகிறது.
இன்றைய மதுரையின் அமைப்பில் தொடங்கி சங்க கால மதுரையின் அமைப்பு வரை பின்னோக்கிக் கண்ட வரலாறு; நகரம் இடம் மாறவில்லை என்பதைப் புலப்படுத்துவதால் சிலப்பதிகார மதுரை இன்றைய மதுரை மையப் பகுதியின் ஒரு கூறு என்பது ஒருதலை.
5.6.0. பண்டைய மதுரை இன்றைய மதுரையினின்றும் இடத்தால் வேறுபட்டது என்று கூறுவோரும் உளர். தற்கால மதுரை நகரத்திற்குத் தென்கிழக்கே ஆறுகல் தொலைவில் உள்ள பழமதுரையே பண்டைய மதுரை என்று ஒரு கருத்து நிலவுகிறது.1 பண்டு இப்பகுதி ஆற்றின்
____________________________________________________________________________
V.கனகசபை- மு.நூ.- ப.- 23, 27, 46; புலவர் குழந்தை- கொங்கு நாடு- ப.- 12; இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை- பண்டைய கேரளம்- ப.- 14& Studies In Kerala History- ப.- 12
தென்கரை ஆகும் என்றும்; தற்போது ஆறு போக்கு மாறியுள்ளதால் இப்பகுதி வடகரையில் உள்ளதென்றும் விளக்கம் தருகின்றனர்.
5.6.1. ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் பாடிய திருஆப்பனூர் இன்றும் வையையின் வடகரையில் செல்லூரில் உள்ளது.
“அந்தண் புனல்வையை அணி ஆப்பனூர் மேய”1
என்ற தேவாரத் தொடரின் மூலம் அது வையைக் கரையில் இருந்தமை புலப்படுகிறது. அன்றியும் வடகரையா; தென்கரையா? என்ற விளக்கத்திற்கு அங்கு இடமில்லை. ஆய்வாளர் தாம் காட்டியுள்ள மதுரை வரைபடத்தில் திருஆப்பனூரை வையையின் தென்கரையில் உள்ளதாகக் குறித்து உள்ளனர்.2 இவ்வாறு குறிப்பதற்குக் காரணம் ஏதும் சொல்லப்பெறவில்லை.
திருப்பூவனத்தைப் பாடும் தேவாரமும் அவ்வூர் வையைக் கரையில் இருந்ததென்றே பாடுகிறது.3 இன்றும் திருப்பூவனம் வையையின் தென்கரையில் உள்ளது. சம்பந்தர் திருவேடகம் வையையின் வடகரையில் இருந்ததாகப் பாடியுள்ளார்.
“வையையின் வடகரை மருவிய ஏடகத்தையனை”4
என்ற அடி நோக்கற்குரியது. இன்றும் திருவேடகம் வையையின் வடகரையிலேயே உள்ளது.
தேவாரக் குறிப்புகளின் படி திருவேடகம் வடகரையிலும்; திருப்பூவனமும், திருஆப்பனூரும் வையைக்கரையிலும் இருப்பதால் கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் இன்று வரை வையையின் போக்கில் மாற்றம் இல்லை என்பது உறுதியாகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரும் ஆற்றின் போக்கில் மாற்றம் நிகழ்ந்தமைக்குச் சான்று இல்லை. இக்கருத்தைப் பிற ஆய்வாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.5
5.6.2. ஆய்வாளர் கூறும் பழமதுரைப் பகுதியில் நகர் இருந்து அழிந்த அறிகுறி எதுவும் காண இயலவில்லை. இன்று அங்கு பெரிய குளம் ஒன்று உள்ளது. பொதுமக்கள் மேலமடைக் கண்மாய் என அழைப்பர்.
___________________________________________________________________________
தேவா.- 1ம் திரு.- பதி.- 88- பா.- 11
மா.இராசமாணிக்கம்- “Koodal Of The Sangam Age”- Annals Of Oriental Research- Vol.18- Part- ll- ப.- 2
தேவா.- 1ம் திரு.- பதி.- 64- பா- 4
தேவா.- 3ம் திரு.- பதி.- 290- பா.- 6
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 143,144
பெயருக்கேற்ப குளத்தின் தென்மேற்கில் ஒரு மடையும் உள்ளது. குளத்தின் மேற்குக் கரையில் கே.கே.நகர் உள்ளது. தெற்கில் பசுமையான வய்வெளிகளும், கிழக்கில் முள்மரக்காடும் உள்ளன. பாண்டிமுனி கோயில் என்று நாட்டார் போற்றும் கோயில் முட்காட்டின் இடையில் உள்ளது. இக்கோயிலின் கருவறை உயர்ந்த மேடையில் உள்ளது. வெள்ளிக்காப்பிட்ட கண்கள், மீசை, தாடியுடன் பாண்டிமுனி சப்பணமிட்டு நிமிர்ந்து அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
குளக்கரைகளில் எங்கும் காவல் தெய்வங்களை நிறுவி வழிபடும் வழக்கத்தைக் காண இயல்கிறது. மாடக்குளத்தின் கரையில் இன்றும் கரைகாக்கும் ஐயனார் என்று ஒரு ஐயனார் கோயில் உள்ளது. தல்லாகுளத்தின் பெரும் பகுதி இன்று கட்டிடங்களால் நிறைந்து விட்டாலும்; இன்றும் மதுரை மாநகராட்சிக் கட்டிடத்தின் எதிரில்; நீதிமன்றம் செல்லும் பேருந்துப் பாதையின் வடபால் ஒரு பழைய ஐயனார் கோயில் உள்ளது. அதுபோல் பாண்டிமுனி கோயிலும் குளத்தின் கரையில் நிறுவப்பட்ட ஒரு ஐயனார் கோயில் என்று எண்ண இடம் உள்ளது. இக்கோயில் பற்றி ஆய்வு செய்தோரும் மேற்கூறிய கருத்துக்கு இடமிருப்பதைச் சுட்டிச் செல்கின்றனர்.1
இவ்விடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வும் இங்கு பண்டைக்கால எச்சங்கள் ஏதுமில்லை என்றே முடிவு கூறுவதை ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர்.2 பிறரும் இக்கோயில் மதுரையின் எல்லைக் காவல் தெய்வம் ஆகலாம் என்று கூறிப் பழமதுரை பண்டை மதுரை என்ற கருத்தை நிராகரிக்கின்றனர்.3
5.7.0. மதுரைக்கு மேற்கே முருகத்தலமான பரங்குன்றம் இருப்பதாக நக்கீரர் பாடியுள்ளதால்4 மதுரை திருப்பரங்குன்றின் நேர்கிழக்கில் இருந்ததென்று முடிவு கூறியுள்ளனர்.5
____________________________________________________________________________
மு.தமிழரசி- அருள்மிகு பாண்டிமுனீஸ்வரர் கோயில்- ஓர் ஆய்வு- ப.- 35
G.சங்கரராஜுலு- மு.நூ.- ப.- 183
ஆய்வாளர் சி.கோவிந்தராசனை மதுரைப் பல்கலைக் கழகப் பழைய கட்டிடத்தில் 1982அக்டோபர் மாதம் நேரில் சந்தித்து உரையாடிப் பெற்ற கருத்து.
திருமுருகு.- அடி.- 71- 77
மயிலை சீனி. வேங்கடசாமி- ”சங்க காலத்து மதுரை”- செந்தமிழ்ச் செல்வி- சிலம்பு- 25- ப.- 133
இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டு பண்டை மதுரை பழமதுரையே என்றும் கூறுகின்றனர்.1
5.7.1. இன்று பழமதுரைப் பகுதியிலிருந்து திருப்பரங்குன்றை நோக்க இயலாதபடி நகர்ப்புறத்தில் மிகுதியான கட்டிடங்கள் வளர்ச்சி பெற்று விட்டன. அதனால் கட்டிடங்களின் மேலிருந்து பார்க்க வேண்டியுள்ளது. எந்த மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் தென்மேற்கிலேயே உள்ளது. மதுரையிலிருந்து நோக்கும் கோணத்தைக் காட்டிலும் பழமதுரையிலிருந்து நோக்கும் கோணம் குறுங்கோணமாகிறது; அவ்வளவே. திருப்பரங்குன்றம் பழமதுரைக்கு நேர்மேற்கில் இல்லை.
5.7.2. கோணத் திசைகளைக் கூறும்போது தலைமைத் திசைகளை மட்டும் கூறும் மரபைப் பண்டை இலக்கியங்களில் காணமுடிகிறது.
“குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்” என்ற அடிக்கு
உரைகூறும் நச்சினார்க்கினியர்; ‘புகார்க்குத் தென்மேற்காதலின் குடமலை என்றார் பொதியின் மலையை’ என்று பொருள் கூறி இருப்பதை ஆய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர்.2 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் “வடவயின் வேங்கடம்”3 என்ற தொடரில் உள்ள ‘வயின்’
என்ற பின்னொட்டுக்கு விளக்கம் கூறுவோர் ‘வடக்கே ஒரு புறத்தில் உள்ள வேங்கடம்’ என்று உரைக்கின்றனர்.4
நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலும் ‘வயின்’ என்னும் பின்னொட்டு பயின்று வந்துள்ளது. “கூடற்குடவயின்” என்ற தொடருக்கும்; தலைமைத் திசையாகிய மேற்குத் திசையின் ஒரு பக்கக் கோணத்தில் உள்ள பரங்குன்றம் என்று பொருள் கொள்ள வழி உள்ளது. இதனால் “கூடற்குடவயின்…குன்று” என்ற அடியை ஆதாரமாகக் கொண்டு மதுரை திருப்பரங்குன்றின் நேர்கிழக்கில் இருந்தது என முடிவு செய்ய இயலாது.
____________________________________________________________________________
V.கனகசபை- மு.நூ.- ப.- 27- அ.கு.
S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.- 113- 114
அகம்-பா.- 27
M.A.துரை அரங்கசாமி- ”வடவேங்கடம்”- Annals Of Oriental Research- Vol.18- Part- ll- ப.- 7- 8
(தொடரும்) சக
5.8.0. சங்க கால மதுரை இன்றைய அவனியாபுரம் என்று சிலர் கூறுகின்றனர்1. நக்கீரர், ‘கூடற்குடவயின்... குன்று’ இருந்தது என்று பாடியிருப்பதாலும்; அவனியாபுரம் திருப்பரங்குன்றத்திற்கு இரண்டு மைல் கிழக்கில் சிவன் கோயிலோடு இருப்பதாலும்; அக்கோயிலில் உள்ள கடவுளர் கல்யாணசுந்தரர் மீனாட்சியம்மை என்று பெயர் பெறுவதாலும்; கோயிலின் பின்னால் கோட்டைவாசல் என்று ஒரு பகுதிக்குப் பெயர் வழங்குவதாலும்; கோயிலைச் சுற்றிச் சுவர் இருந்த அறிகுறியும், அந்தணர் குடியிருப்புகளும், கோயில் அருகே குளம் இருந்த அறிகுறியுடன்; நிலத்தைத் தோண்டிய பொழுது படிக்கட்டுகள் தென்படுவதாலும்; சப்தகன்னியர்க்கும் ஒரு கோயில் இருப்பதாலும்; திருஞான சம்பந்தரைக் குறிக்கும் ‘பிள்ளையார்’ என்ற பெயரை அடியொட்டிப் பிள்ளையார் பாளையம் என்ற பெயரால் அப்பகுதி அழைக்கப் படுவதாலும்; அவனியாபுரத்தைச் சங்ககால மதுரை என்றும்; பண்டு வைகை அவனியாபுரத்தைத் தொட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.2
5.8.1. “கூடற்குடவயின்” என்ற அடையாளம் இன்றைய மதுரைக்குப் பொருந்தி வரும் பாங்கினை முன்னர்க் கண்டோம்.3 வையையின் போக்கு கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதையும்; அதற்கு முன்னர் மாறியமைக்கு ஆதாரம் இல்லை என்பதையும் முன்னர்க் கண்டோம்.4
5.8.2. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைப் பின்பற்றிப் பிற பல இடங்களிலும் கோயில்கள் கட்டப்பட்டன; ஊர்ப்பெயர்களும் மதுரையைப் பின்பற்றி இடப்பட்டன.
பரமக்குடியில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் ஒன்று உள்ளது. மதுரையிலிருந்து பிடிமண் எடுத்துவந்து அமைத்ததாகவும் ஒரு வழக்கு
உள்ளது. அதனருகில் வண்டியூர் என்ற பகுதியும் உள்ளது. திருப்பரங்
______________________________________________________________________
மா.இராசமாணிக்கனார்- “Koodal Of The Sangam Age”- Annals Of Oriental Research- Vol.- 18- Part- ll- ப.- 1- 6& அ.கி.பரந்தாமனார்- வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்- ப.- 27
மா.இராசமாணிக்கனார்- மேலது
பார்க்க- கரு. எண்-5.7.2
பார்க்க- கரு. எண்-5.6.1
குன்றத்திலுள்ள சுவாமிசந்நிதி தெருவிலும் பழைய சொக்கநாதர் கோயில் என்று ஒன்று உண்டு. நெடுமதுரை அருகே கூடக்கோயில், பெரியகூடக்கோயில் என்ற இருப்பிடங்கள் உள்ளன. இதனால் இங்கும் மதுரைக் கோயிலைப் பின்பற்றிக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. கம்போடியாவில் அங்கோர்வாட் கோயிலின் அமைப்பு முழுவதும் மதுரைக் கோயிலைப் பின்பற்றியது என்பர்.1 வைகை அணையை ஒட்டி உள்ள குள்ளபுரம் என்ற ஊர் திருமருத முன்றுறை என்று பண்டு அழைக்கப்பட்டுள்ளது.2 திருமருத முன்றுறை மதுரையைப் பொருந்தியிருந்த வையைத்துறை என்பது பரிபாடல்கள் மூலம் தெரிய வருகிறது.3 இதனால் மதுரையில் இருந்த வையைத்து துறையைப் பின்பற்றி குள்ளபுரத்து வையைத்துறையும் அழைக்கப் பட்டது எனத் தெரிகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் என்று ஒரு ஊர் உள்ளது. இதனால் மதுரைக் கோயிலைப் பின்பற்றியே அவனியாபுரத்திலும் கோயிலும், அதன் சுற்றுச்சுவரும், முன்னால் குளமும், குடியிருப்புகளும் அமைந்தன. கோயிலின் பின்னால் கோட்டை வாசல் என்று ஒரு பகுதி பெயர் பெற்று இருப்பதன் காரணம் கோயிலின் கோட்டை வாசல்களில் ஒன்று நெடுங்காலம் அவ்விடத்தில் நின்றிருந்தமை ஆகலாம். சைவபக்தர்கள் திருஞானசம்பந்தர் நினைவாக அவ்வூர்க்குப் பிள்ளையார் பாளையம் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். தமிழகத்தில் திருஞானசம்பந்தரைக் குறிக்கும் பிள்ளையார் என்ற பெயரில் இன்னும் சில இடங்கள் வழங்குகின்றன. நத்தம் ஊராட்சி ஒன்றியத்திலும் ‘பிள்ளையார்பட்டி’ என்ற பெயரில் ஒரு சிற்றூர் உள்ளது. இது பாடல் பெற்ற தலம் அல்ல; எனினும் இப் பெயரை ஏற்றிருப்பதன் காரணம் திருஞானசம்பந்தர் நினைவாக இடப்பட்டமை எனலாம்.
5.8.3. ஆய்வாளரும் அவனியாபுரத்தில் உள்ள கோயில் புராதனக் கோயில் அன்று எனக் கூறியுள்ளனர்.4 அவனியாபுரத்தில் நிகழ்ந்த தொல்பொருள் ஆய்வுகளும் பண்டைக்கால எச்சங்கள் எதையும் காட்டவில்லை என்று கூறுகின்றன.5
____________________________________________________________________________
சோமலெ- மு.நூ.- ப.- 224
அ.சம்பந்த மூர்த்தி- மு.நூ.- ப.34& R.சாரங்கபாணி- பரிபாடல் திறன்- ப. 208
பரிபா. - பா.- 11- அடி.- 30; பா.- 7- அடி.- 83
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 115
G.சங்கரராஜுலு- மு.நூ.- ப.- 183-184
5.8.4. சங்க காலத்தில் வையை இருந்தையூரையும் கூடலையும் தொட்டுச் சென்றது என்று பரிபாடல் திரட்டு பாடியிருப்பதாலும்; இன்று வையை இருந்தையூரிலிருந்து ஒரு மைல் அளவு தள்ளிப் பாய்வதாலும்; வையை போக்கு மாறியுள்ளது என்கின்றனர்.1 அத்துடன் இருந்தையூர் பண்டு கூடலின் ஒரு பகுதி அன்று என்றும்; அதனால் தான் ‘இருந்தையூர்’2 என்ற முன்னொட்டுடன் புலவர் பெயர்கள் சுட்டப்படுகின்றன என்றும்; இருந்தையூர் கூடலின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் ‘கூடல் இருந்தையூர்’ என்ற முன்னொட்டுடன் பெயர்கள் சுட்டப்பட்டிருக்கும் என்றும் வாதிடுகின்றனர். ‘உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்’3 என்ற பெயரை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். உறையூரின் ஒரு பகுதியான ஏணிச்சேரியைச் சேர்ந்த முடமோசியார் என்பது போல கூடலின் ஒரு பகுதியாகிய இருந்தையூரைச் சேர்ந்த புலவர் என்று பயின்று வராமையால் பண்டைய இருந்தையூர் இன்றிருப்பது போல் கூடலின் பகுதி அன்று என விளக்கிச் செல்கின்றனர்.
இருந்தையூர் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் மதுரையின் புறநகர்ப் பகுதியாக இருந்து விஸ்வநாத நாயக்கர் கோட்டை கட்டிய பொழுது தான் மாசிவீதியின் மூலம் கோட்டைக்குள் இணைக்கப்பட்டது என்று முன்னர்க் கண்டோம்.4 அத்துடன் சங்க கால மதுரை இடைக்கால மதுரையின் தென்கூறை மட்டும் உள்ளடக்கி இருந்தது என்றும்; இருந்தையூர் என்று பெயர் பெற்ற இருந்த வளமுடையார் கோயில் கொண்டிருக்கும் கூடலழகர் கோயில் பகுதி ஊரின் வெளியே மேற்குப் புறத்தில் இருந்ததென்றும் முன்னர்க் கண்டோம்.5 இதனால் கூடலும் மதுரையும் அடுத்தடுத்த குடியிருப்புப் பகுதிகளாக இருந்து பின்னர் இணைந்தவையே. அதற்காக கூடலின்
____________________________________________________________________________
மா.இராசமாணிக்கனார்- “Koodal Of The Sangam Age”- Annals Of Oriental Research- Vol.- 18- part ll- ப.- 1- 6
குறுந்.- 335- இருந்தையூர்க் கொற்றன் புலவனார்; சிலப்.- உ.வே.சாமி நாதையர்(ப.ஆ.)- ப.- 7- இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்
புறம்.- 241, 374, 375
பார்க்க- கரு.எண்- 5.3.4.1
பார்க்க- கரு.எண்- 5.5.2.1
இருப்பிடமே வேறு என்று கொள்ள வேண்டிய தேவை இங்கு ஏற்படவில்லை. எனினும் வையை இன்று இருந்தையூரிலிருந்து ஒரு மைல் அளவு தள்ளிப் பாய்வதற்கான விளக்கத்தைத் தருவது இன்றியமையாதது ஆகிறது.
சங்க காலத்தில் ஆலவாய்க் கோயிலை வடகிழக்கு மூலையில் கொண்டிருந்த மதுரை இடைக்காலத்தில் ஆலவாயினை ஊரின் நடுவிடமாகக் கொண்டு ஆற்றை நோக்கி வடக்கில் விரிந்துள்ளது.
இடைக்காலத்தில் ‘ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையுடன் கூடிய மதுரை’ நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நாலாபுறமும் விரிந்த பொழுது ஆற்றை நோக்கியும் விரிந்துள்ளது.
நாயக்கர் ஆட்சியைத் தொடர்ந்த குழப்பநிலையை அடுத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாலாபுறமும் விரிந்த பொழுது ஆற்றை நோக்கியும் விரிந்துள்ளது.
கி.பி.முதலிரு நூற்றாண்டுகளிலிருந்து இன்று வரை நகரம் வடக்கு நோக்கி விரிந்தமையால் ஆற்றின் அகலம் சுருங்கியுள்ளது என்பது புலனாகிறது.
இன்றைய மதுரையின் புறநகர்ப் பகுதியிலுள்ள தெருமட்டமும் இக்கருத்தை ஆதரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இன்று குருவிக்காரன் பாலத்திலிருந்து வையையைக் கடந்து; மதுரை கீழமாசி வீதியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பெரும்பாதையை அடையும் பொழுது (வண்டியூர் தெப்பக்குளம் போகும் தடம்4 பேருந்துப் பாதை); தெருவின் நிலமட்டம் அப்பெரும்பாதை வரை படிப்படியாக உயர்ந்து செல்வதை அறிய முடிகிறது. தொடர்ந்து செல்லும் இப்பாதையும் வையையின் தென்கரையிலேயே செல்வதால் பண்டு வையையின் தென்கரை அப்பாதை வரை இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
இன்றைய மதுரையில் பாத்திமா கல்லூரிக்கு எதிரில் உள்ள அண்ணாநகருக்குள் நுழைய வேண்டுமெனின் பேருந்துப் பாதையிலிருந்து தெற்கு நோக்கிப் படிப்படியாக ஆறடிக்கு மேல் தாழ்ந்து செல்லும் நிலப்பகுதிக்குள் நுழைய வேண்டியுள்ளது. ஆற்றுக்குள்ளேயே நகர் விரிந்துள்ளது எனல் தகும்.
மதுரை தியாகராசர் கல்லூரிக்கு நேர்வடக்கில் ஆற்றின் வடகரையில் உள்ள சதாசிவ நகரில் எங்கு தோண்டினாலும் ஆற்றுமண்ணே வருகிறது என வீட்டு மனைகளைப் பிரித்துக் கொடுக்கும் நில அளவையாளர் கூறுகின்றனர்.1
மதுரையில் தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலராக இருந்த மா.சந்திரமூர்த்தி வையையின் வடகரையில் உள்ள பகுதிகளில் தோண்டிய பொழுது ஆற்றுப் படுகைக் கற்கள் கிடைத்தன என்றும்; அதனால் ஆற்றின் அகலம் காலப்போக்கில் சுருங்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.2
வையையாற்றின் தென்கரையிலும் மக்கட்பெருக்கத்தின் காரணமாக நிகழ்ந்த நகர விரிவாக்கத்தின் மூலம் பல சேரிகள் எழுந்துள்ளன.3 இத்தகு சேரிகளும் ஆற்றின் அகலம் குறையக் காரணம் ஆகும்.
வையை ஒரு ஜீவநதி அன்று; காட்டாறு ஆகும். மழைக்காலத்தில் மட்டுமே நீர் மிகுதியாக ஓடும். பிற காலங்களில் நீர் சுருங்கும் என்று புலவோர் பாடியுள்ளனர்.
“....................................அம்பியில் தாழ்ப்பிக்கும்
குருகு இரைதேரக் கிடக்கும் பொழிகாரில்
இன்னிளவேனில் இதுவன்றோ வையை”4 என்றும்;
“ஆநாள் நிறைமதி அவர்தரு பக்கம் போல்
நாளின் நாளின் நளிவரைச் சிலம்பு தொட்டு
நிலவுட் பரந்தாங்கு நீர்நிலம் பரப்பி
உலகுபயம் பகர ஓம்புபெரும் பக்கம்
வழியது பக்கத் தமரர் உண்டி
மதிநிறை வழிவதின் வரவுசுருங்க
எண்மதி நிறைநிலா இருண்மதி போல
நாள்குறை படுதல் காண்குநர் யாரே”5 என்று வரும் பகுதிகள்
____________________________________________________________________________
கி.பி.1982ல் களஆய்வில் திரட்டிய செய்தி
கி.பி.1982ல் அக்டோபர் மாதம் மதுரை தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகத்தில் நேரில் சந்தித்து உரையாடிப் பெற்ற கருத்து.
Madurai Metropolitan Area Development Low Income Shelter Programmes- Directorate Of Town And Country Planning Tamilnadu- Madurai Local Planning Authority- Madurai Municipal Corporation- ப.- 31
பரிபா.- பா.- 6- அடி.- 75- 77
பரிபா.- பா.- 11- அடி- 31- 38
வையையில் நீர் காரில் பெருகியும்; இளவேனிலில் சுருங்கியும்; நிலவு வளர்ந்து தேய்வது மீண்டும் மீண்டும் நிகழ்வது போல் காணப்படும் என உணர் த்துகின்றன. ஆகவே வெள்ளநேரத்தில் மட்டும் கரையை உடைத்து; கோட்டையில் மோதி; ஊருக்குள் நுழைந்து; சேதப்படுத்திய வையை; பிற காலங்களில் நீர் வற்றியதால் ஆற்றங்கரைப் பகுதிகளில் குடியிருப்புக்கள் மிகுதியாயின. ஆறு அகலம் குறைந்தது.
இராமநாதபுரத்தில் பனைக்குளம், அழகன் குளம் ஊர்களுக்கு இடையே உள்ள வையையின் அகலம் மதுரையில் உள்ள ஆற்றின் அகலத்தை விட மூன்று மடங்கு உள்ளதென்பர்.1 பரமக்குடியில் உள்ள எமனேசுவரத்தில் காணப்படும் வையையின் அகலம் 2080அடி என்பர்.2
இதுகாறும் கண்டவற்றால் பண்டு மிக அகலமாக ஓடிய வையையாறு காலந்தோறும் படிப்படியாக நகரம் வடக்கு நோக்கி விரிந்தமையால் அகலம் சுருங்கியது என்றும் அதன் காரணமாகவே இருந்தயூரினின்று இன்று மிகவும் தள்ளி ஓடுகிறது என்றும் புலப்படுகிறது.
5.9.0. மாடக்குளத்தின் அருகில் பண்டை மதுரை இருந்திருக்க வேண்டும் என்போரும் உள்ளனர்.3 இடைக்காலத் தடை இடைக்காலக் கல்வெட்டுக்கள் அனைத்தும் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்று அழைப்பதாலும், இன்றைய மாடக்குளத்தைச் சுற்றிலும் தாமரைப் பள்ளம், மானம்முட்டி, வீரமுடையான் கண்மாய், அட்டகம், அழகபத்து, மறபபத்து, பச்சநாச்சி, கோவலன் பொட்டல், பழங்காநத்தம் என்ற பெயர்களில் இடங்கள் இருப்பதாலும்; பண்டு மதுரையின் ஒரு பகுதியேனும் இக்குளத்தின் அருகில் இருந்திருக்கலாம் என்கின்றனர்.
5.9.1. ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்பதற்கு மாடக்குளத்தின் மூலமாகப் பாசன வசதி பெறுகின்ற மதுரை என்று பொருள் கூறுகின்றனர்.4 மாடக்குளத்திற்குக் கிழக்கில் மட்டுமின்றிப் பிற திசைகளில் உள்ள
____________________________________________________________________________
அ.சம்பந்த மூர்த்தி- மு.நூ.- ப.- 172
மேற்.- ப.- 144
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 144- 145
மதுரைத் தொல்பொருள் ஆய்வு அலுவலகத்தில் ஆய்வாளர் திரு. வேதாசலம் அவர்களை 1983ல் சந்தித்து உரையாடிப் பெற்ற கருத்து.
ஊர்களுடனும் ‘மாடக்குளக்கீழ்’ என்ற முன்னொட்டுத் தொடர் பயின்று வருவதால்1 அது நிர்வாகத்திற்காகப் பிரிக்கப்பட்ட ஒரு கூறு என்றும் கூறியுள்ளனர்.2
5.9.2. எந்த ஒரு ஊரிலும் தாமரைக்குளமும், வானளாவிய குடியிருப்புகளும், வீரர்களின் நினைவாக வெட்டப்பட்ட குளமும், அந்தணர்களுக்கு விடப்பட்ட குடியிருப்பு நிலமும், வெற்றி குறித்து மறவர்களுக்கு விட்ட நிலமும் இருக்கலாம். தாமரைப்பள்ளமும், மானமுட்டியும், வீரமுடையான் கண்மாயும், அட்டகமும், அழகபத்தும், மறபபத்தும் மதுரையில் தான் இருந்திருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.
கோவலன் பொட்டல் என்ற பகுதி சிலப்பதிகாரக் கதாபாத்திரத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட இடமாகக் காணப்படுகிறது. அவ்விடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வில் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மனித வாழ்வின் எச்சங்களும், தாழிகளும் கிடைத்துள்ளன. ஆனால் இவ்விடம் தான் பண்டை மதுரை என்று சொல்லக்கூடிய சான்றாதாரம் எதுவும் கிட்டவில்லை. சிலப்பதிகாரக் கதாபாத்திரத்தோடு தொடர்புபடுத்தப்படும் இடப்பெயர்கள் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ளன.3 சிலப்பதிகாரக கதை மக்களிடம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் மதுரையின் புறநகர்ப் பகுதி ஒன்று அக்கதாபாத்திரத்தின் பெயரைப் பெற்றது எனலாம்.
5.9.3. மாடக்குளக்கீழ் மதுரையில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் கூறும் திருஞானசம்பந்தர் மடம்4 இன்றைய மதுரையின் தெற்காவணிமூல வீதியில் உள்ளது. இதனால் பண்டை மதுரை இன்றைய மதுரையின் மையப்பகுதியில் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறலாம்.
____________________________________________________________________________
மாடக்குளக்கீழ் திருப்பரங்குன்றம் & மாடக்குளக்கீழ் கொடிமங்கலம்
D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 143
புகாருக்கு அருகில் மாதவி மனை உள்ளது. கடமலைக் குண்டு என்று அழைக்கப்படும் வருஷநாட்டுப் பள்ளத்தாக்கின் வடக்குக் கடைசி ஊரில் கண்ணகி சுனை உள்ளது.
M.E.R.13 of 1894; 62 of 1905; 285 of 1916
6.0 நகரின் வளம்
6.1.0 நிலவளமும் நீர்வளமும்
6.1.1.0. ஆற்றின் கரையில் இருந்தமையால் மதுரை நகரம் வளம் மிகுந்ததாகத் திகழ்ந்தது. பலவகை மரங்கள் செழித்து ஓங்கியிருந்தன. பூக்களும் மிகுதி.
6.1.1.1. மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் வயல்களும், சோலைகளும், ஓடைகளும், ஏரிகளும், தென்னந்தோப்புகளும், வாழைத் தோட்டங்களும், கமுக மரங்களும் நிறைந்திருந்தன என்கிறார் இளங்கோவடிகள்.1
வையையின் கரையெங்கும் குரா, மகிழம், கோங்கம், வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், உச்சிச் செலுந்தி, செருந்தி, செண்பகம்,பாதிரி முதலிய மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன என்று வர்ணித்துள்ளார்.2 மதுரையிலிருந்து வந்த தென்றல் கழுநீர், சண்பகம், மாதவி, மல்லிகை, முல்லை முதலிய பூக்களின் மணத்தோடு வந்ததாகப் பாணர்குழு கோவலனிடம் கூறுகிறது.3 வையைக் கரையின் அகப்பகுதியில் எங்கும் குருக்கத்தியும், செம்முல்லையும், முசுட்டையும், மல்லிகையும், வெள்ளைநறுந்தாளியும், வெட்பாலையும், பெருங்கையாலும், குட்டிப் பிடவமும், இருவாட்சியும் மலர்ந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.4 மதுரைக் கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியில் குவளையும், ஆம்பலும், கமலமும் மலர்ந்திருந்தன.5 முருக்க மலரிதழழ்கள் வையைக் கரையில் உதிர்ந்து கிடந்தன.6 வையையாற்று நீரோடு இடையறாது முல்லையரும்புகள் வந்தன.7
6.1.1.2.சங்க இலக்கியமும் வையைக் கரையில் பல பூஞ்சோலைகள்
____________________________________________________________________________
சிலப்.- புறஞ்.- அடி.- 191- 196; ஊர்.- அடி.- 1- 2
சிலப்.- புறஞ்.- அடி.- 151- 154
மேற்.- அடி.- 120- 132
மேற்.- அடி.- 155- 159
மேற்.- அடி.- 183- 188
மேற்.- அடி.- 164
மேற்.- அடி.- 165
இருந்தன என்பதை,
“அவிரறல் வையைத் துறைதுறை தோறும்
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி”1 என்றும்;
“இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணல்
கான்பொழில் தழீஇய அடைகரை”2 என்றும் பாடுகிறது.
வையை நீரோடு கோங்க மலர்கள் மாலை போன்ற தோற்றத்தோடு மிதந்து வந்த காட்சியை,
“தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்”3 என்று மாங்குடி
மருதனார் பாடுகிறார்.
6.1.1.3. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வையைக்கரை வளங்கள் அழிக்கப்பட்டன என்றும், இன்றைய தமிழ்ச்சங்கப்பகுதியில் பல உயர்ந்த பெரிய மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன என்றும் இன்று முதியோர் கூறுகின்றனர்.4 மதுரைக்குக் கிழக்கிலும், மேற்கிலும் வையைக்கரை இன்றும் மிகுதியான வளத்துடனேயே உள்ளது. தனி பூச்சந்தையுடன் விமானம் மூலம் பூக்களை ஏற்றுமதி செய்யும் சிறந்த பூவாணிபத் தலமாக மதுரை இன்றும் விளங்குகிறது.
6.2.0. வாணிபவளம்
6.2.1.0 மதுரை நகர அங்காடியில் பல பொருட்களின் வாணிபம் நிகழ்ந்தது.
6.2.1.0 வையம், சக்கரங்களுடைய வண்டி, தேர்மொட்டு, கவசம், அங்குசம், தோற்கைத்தளம், அரைப்பட்டிகை, வளைதடி, சாமரை, மூன்றுவகைக் கேடயங்கள், குத்துக்கோல்கள், செப்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், கயிற்றால் முடிந்து செய்யப்பட்ட பொருட்கள், கிடையால் புனையப்பட்ட மாலை, ஈர்வாள், தந்தத்தைக் கடைந்து செய்த பொருட்கள், வாசனைப் புகைக்குரியவை, மயிற்சாந்து செய்தற்குரிய பொருட்கள், பூமாலைகள் முதலியவை
___________________________________________________________________________
மதுரைக்.- அடி.- 340- 341
மேற்.- அடி.- 336- 337
மேற்.- அடி.- 338- 339
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 151
அங்காடி வீதியில் விற்கப்பட்டமையைக் கோவலன் கண்டு வந்தான்.1 அங்காடியில் அப்பவாணிகர் அப்பம் சுடுவதால் எழுந்த புகையின் மணத்தோடு தென்றல் கலந்து வீசியதென்று மதுரைத் தென்றலின் மணம் பற்றிப் பாணர் கோவலனிடம் பேசுகின்றனர். 2
6.2.1.2 நாளங்காடி, அல்லங்காடி என்று இருவேறு கடைத் தெருக்கள் மதுரையில் இருந்தன என்றும்; அங்கு பூக்கள், பூமாலைகள், சுண்ணம், வாசனைப் புகைக்குரிய பொருட்கள், செப்புப் பொருட்கள், பல்வகைத் தின்பண்டங்கள், பாக்கு வெற்றிலை, சங்கு சுட்ட சுண்ணாம்பு, சங்கு வளை முதலியவை விற்கப்பட்டன என்றும் சங்க இலக்கியம் விரிக்கிறது.3 நக்கீரர் மதுரை நாளங்காடியை உவமையாக எடுத்தாண்டுள்ளார்.4 அதை ஆவணம் என்றும் சுட்டிச் செல்கிறார்.5 சம்பந்தரும் மதுரையின் ஆவணவீதியைச் சுட்டுகிறார்.6 கோவலன் பகற்பொழுதில் நகரைச் சுற்றிப் பார்த்ததாகப் பாடுவதால் இளங்கோவடிகள் அல்லங்காடி பற்றிக் குறிப்பிட வழி யில்லை.
6.2.2.0 ஒன்பது வகை மணிகளும் மதுரையில் கிடைத்தன.
6.2.2.1 ஒன்பது வகை மணிகளும் விற்கப்பட்ட இரத்தினக்கடைத் தெருவைக் கோவலன் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தான்.7
6.2.2.2. சங்கஇலக்கியம் மணிகளைத் துளையிடுவோர் மதுரையில் இருந்தனர் என்று பொதுவாகக் குறிப்பிடுவதுடன்8 அயல் நாட்டுப் பொருட்களுக்குப் பல்வேறு மணிகளும் பொன்னும், முத்தும் பண்ட மாற்றாகக் கொடுக்கப்பட்ட செய்தியையும் பேசுகிறது.
____________________________________________________________________________
சிலப்.- ஊர்.- அடி.- 168- 179
சிலப்.- புறஞ்.- அடி.- 122- 132
மதுரைக்.- அடி.- 397- 405, 513- 521
அகம்.- பா.- 93
நெடுநல்.- அடி.- 44
தேவா.- 1ம் திரு.- பதி.- 7- பா- 7
சிலப்.- ஊர்.- அடி.- 180- 200
மதுரைக்.- அடி.- 511
“மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்”1 என்ற பாடலடிகள்
மேற்கூறிய கருத்தைச் சொல்கின்றன.
6.2.3.0. நான்கு வகைப் பொன்னும் மதுரையில் கிடைத்தன.
6.2.3.1. நான்கு வகைப் பொன்னும் கிடைக்கும் பொற்கடைத் தெருவைக் கோவலன் கண்டு வந்தான்.2
6.2.3.2. சங்க இலக்கியம் பொன் அணிகலன் செய்வோரும் பொன்னின் தரம் பார்ப்போரும் மதுரையில் இருந்தனர் என்பதை,
“சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மரும்”3 என்று பாடுகிறது.
6.2.4.0. பல்வேறு ஆடை வகைகளின் விற்பனை மதுரையில் நிகழ்ந்தது.
6.2.4.1. பல்வேறு ஆடை வகைகள் விற்கப்பட்ட அறுவைக்கடை வீதியைக் கோவலன் கண்டான்.4
6.2.4.2. சங்க இலக்கியம் மதுரையில் கச்சு முடிவோரும், புடைவை விற்போரும், நெசவுத் தொழில் செய்வோரும் இருந்த செய்தியைத் தருகிறது.5
6.2.5. பல்வகைக் கூலங்களும், மிளகும் மதுரையில் விற்கப்பட்டன. கோவலன் கூலவீதியில் இவற்றைக் கண்டான்.6
____________________________________________________________________________
மேற்.- அடி.- 504- 506
சிலப்.- ஊர்.- அடி.- 201- 204
மதுரைக்.- அடி.- 512- 513
சிலப்.- ஊர்.- அடி.- 205 -207
மதுரைக்.- அடி.- 513- 521
சிலப்.- ஊர்.- அடி.- 208- 211
7.0. மதுரை நகர வழிபாட்டிடங்கள்
7.1.0. மதுரையில் சிவன், திருமால், கொற்றவை, முருகன் முதலிய தெய்வங்கட்குரிய வழிபாட்டிடங்கள் இருந்தன.
7.1.1. காலை முரசம் எவ்வெவ்விடங்களில் ஒலித்தன என்னும் வரிசையில் சிவன், திருமால், முருகன் முதலியோர்க்குரிய வழிபாட்டு இடங்கள் இடம் பெறுகின்றன.1 கண்ணகி மதுரையை விட்டு வெளியேறும் பொழுது கொற்றவைக்குரிய வாசலில் தன் தொடியைத் தகர்க்கிறாள்.2
7.1.2. சங்க இலக்கியம்,
“மழுவாள் நெடியோன் தலைவனாக”3 மாலையில் மதுரை
நகரில்விழா எடுக்கப் பட்டதென்று விவரிக்கிறது. பிற கடவுளரின் பெயர்கள் சுட்டப்படவில்லை எனினும்,
“மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார்
அந்தி விழவின் தூரியம் கறங்க”4
என்று ஒளி பொருந்தியவராய்; வாடாத மாலையையும், இமையாத விழிகளையும் கொண்டு; மக்கள் கொடுக்கும் பலியினை ஏற்றுக் கொள்ளும் பிற தேவர்களுக்கு மாலையில் விழா எடுக்கப்பட்ட செய்தியை விளக்குகிறது.
7.1.3. பரிபாடல் திரட்டு மதுரையில் திருமாலுக்கு வழிபாட்டிடம் இருந்தது என்றும்; அங்கு திருமால் அமர்ந்த நிலையில் எழுந்தருளி யிருந்தார் என்றும்; அப்பகுதியே இருந்தையூர் என்றும் செய்திகளைத் தருகிறது.5 இவ்வூர்ப் பகுதியும் இருந்தவளமுடையார் பற்றியும் முன்னர்க் கண்டோம்.6
____________________________________________________________________________
மேற்.- அடி.- 7- 14
சிலப்.- கட்டுரை.- அடி.- 181
மதுரைக்.- அடி.- 455
மேற்.- அடி.- 456- 460
பரிபா.- திரட்டு- பா.- 1
பார்க்க- கரு.எண்- 5.3.4.1
7.1.4. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் ஆலவாய், தென்திருவாலவாய், நள்ளாறு என்று சிவனுக்குரிய மூன்று வழிபாட்டிடங்கள் மதுரையில் இருந்தன.
“மதுரை ஆலவாயிலாய்”1
என்று மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும்,
“தென்ஆலவாயில் உறையும் எம்மாதியே”2
என்று தென்திருவாலவாயும்,
“நாடகமாடு நள்ளாறுடைய நம்பெருமான் இதுவென்கொல்”3
என்று நள்ளாறும் பாடப்பட்டுள்ளன.
7.1.5. இடைக்கால இலக்கியமாகிய கல்லாடம் மதுரையில் இருந்த பல வழிபாட்டிடங்களின் பெயர்களை அடுக்கிச் செல்கிறது. ஆலவாய், வடதிருவாலவாய், திருநடுவூர், வெள்ளியம்பலம், நள்ளாறு. தென் திருவாலவாய் என்று சிவனுக்குரிய வழிபாட்டிடங்கள் ஆறு இருந்தன. கன்னி செங்கோட்டம், கரியோன் திருவுறை முதலியவற்றுடன் இன்று இடங்காட்ட இயலாத பஞ்சவனீச்சரம், இந்திரை, சேரன் திருத்தளி முதலியவையும் சொல்லப்பட்டுள்ளன. முருகனுக்குரிய திருப்பரங் குன்றம் ஆலவாயப்பனைச் சூழ்ந்திருந்த வழிபாட்டிடங்களில் ஒன்றெனக் கொள்ளப்பட்டுள்ளது.
“வடதிருவாலவாய் திருநடுவூர்
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத் தமைந்த
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுறை...
…ஒரு பரங்குன்றம்
சூழ்கொள விருந்த கூடலெம்பெருமான்”4
என்ற பாடலில் உள்ள வடதிருவாலவாய், திருநடுவூர் முதலிய வழிபாட்டிடங்கள் பற்றி முன்னர்க் கண்டோம். நள்ளாறு கி.பி.ஏழாம்
____________________________________________________________________________
தேவா.- 3ம் திரு.- பதி.- 310- பா.- 4
தேவா.- 3ம் திரு.- பதி.- 366- பா.- 1
தேவா.- 1ம் திரு. -பதி. -7-பா. -1
கல்.- 59- அடி.- 22- 33
பார்க்க- கரு.எண்- 5.3.5& 5.3.7.1
நூற்றாண்டிலேயே சிவபெருமானுக்கென இருந்த வழிபாட்டிடம் எனக் கண்டோம்.1
கன்னி செங்கோட்டம் என்பது சப்தகன்னியர்க்குரிய வழிபாட்டிடம் ஆகும். கன்னிசெங்கோட்டம் கொற்றவைக்குரியதெனக் கூறுவோரும் உளர்2. ஆயின் பெயரடிப்படையில் பார்க்கும் போது சப்த கன்னியர் என்பதே கன்னி செங்கோட்டத்துடன் மிகுந்த ஒப்புமை உடையதாகிறது.
கரியோன் திருவுறை என்பது புனித ரோசரி தேவாலயமாக மாற்றம் பெற்றுள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலைக் குறிக்கும். கூடலழகர் கோயிலே கரியோன் திருவுறை என்று கூறுவோர் உளர்.3 ஆயின் கரியோன் திருவுறை என்ற பெயரிலும், கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயரிலும் ‘கரிய’ என்ற முன்னொட்டு ஒன்று போலப் பயின்று வருவதால்; கரியோன் திருவுறை என்பது கரியமாணிக்கப் பெருமாள் கோயில் என்று உறுதிப்படுகிறது.
கல்லாடம் கூறும் வெள்ளியம்பலம் இன்று தெற்குச் சித்திரை வீதியில் உள்ளது. சிலப்பதிகாரப் பதிகம் மதுரை எரியுண்ட நாளில் சாத்தனார் வெள்ளியம்பலத்துள் இருந்ததாகக் கூறுகிறது.4
அஞ்செழுத் தமைந்த சென்னிமாபுரம் என்பது தென்திருவாலவாய் ஆகும். ஏனெனில் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரம் சிவபெருமானுக்குரியது. நள்ளாறு, வடதிருவாலவாய், நடுவூர், ஆலவாய், வெள்ளியம்பலம் என்ற ஐந்து சிவன் கோயில்களும் இதே பாடலில் சுட்டப்பட்டுவிட்டன. எனவே விடுபட்ட தென்திருவாலவாயே அஞ்செழுத் தமைந்த சென்னிமாபுரம் என்று முடிபு செய்ய இயல்கிறது.
இவை தவிர உயர்மகன் பள்ளியும், காளி கோயிலும் மதுரையில் இருந்ததாகக் கல்லாடம் கூறியுள்ளது.5 இவை முறையே இன்று ஐயனார் என்று வழிபடப்படும் ஹரிஹர புத்திரரையும், செல்லத்தம்மனையும் குறிக்கின்றன. இக்கோயில்கள் பற்றி முன்னர்க் கண்டோம். 6
_______________________________________________________________________
பார்க்க- கரு.எண்- 7.1.4
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 131
மா.இராசமாணிக்கம்- “Koodal Of The Sangam Age“- Annals Of Oriental Research-Vol.18- Part-ll- ப. 5
சிலப். -பதி. -அடி. -40-41
கல். -பா. -41-அடி. -19-20& 24
பார்க்க- கரு. எண்-5.3.3.1
7.1.6. சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கொற்றவைக்குரிய வழிபாட்டிடம் நகரின் மேற்குப் பகுதியில் இருந்தது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.1 இவ்வாறு முடிவு செய்யக் காரணமாய் அமைவது; கண்ணகி கொற்றவை வாயிலில் தன் தொடியைத் தகர்த்து விட்டு மேற்கு வாயில் வழியாக வெளியேறினாள் என்ற செய்தியே ஆகும்.2 இங்கு கண்ணகி வெளியேறிய வாயிலின் திசை பற்றிய செய்தி மட்டுமே உள்ளது. கொற்றவை கோயிலுக்கு அதே திசையை உரிதாக்குவது வலிந்து சொல்லும் கருத்தாகும்.
7.2. சிலப்பதிகார மதுரையில் பலதேவனுக்கு நகர் என்னும் வகையில் அமைந்த ஒரு வழிபாட்டிடம் இருந்தது. காலைமுரசம் பலதேவன் நகரிலும் ஒலித்தது.3 இடைக்காலத்தில் மதுரையில் பலதேவனுக்கு வழிபாடு நிகழ்ந்தமைக்கு ஆதாரம் இல்லை.
7.3. சிலப்பதிகார மதுரையின் கிழக்குப் புறநகர்ப்பகுதியில் இயக்கி என்னும் பெண்தெய்வத்திற்குரிய வழிபாட்டிடம் இருந்தது. மாதரி இத் தெய்வத்திற்குப் பால்சோறு படைத்து மீளுங்கால் கவுந்தியைப் புறஞ்சிறை மூதூரில் கண்டு அடிபணிகிறாள்.4
7.4. சிலப்பதிகார மதுரையில் அகநகர்ப் பகுதியில் பிற தெய்வங்கட்கும் வழிபாட்டிடங்கள் இருந்தன. கோவலன் பொற் கொல்லனிடம் சிலம்பைக் கொடுத்து அனுப்பிய பின் ஒரு தேவகோட்டச் சிறையகம் புகுந்து இருந்தான்.5
7.5. மதுராபதி என்னும் காவல் தெய்வம் ஒன்று மதுரையில் இருந்தது. என்று சிலப்பதிகாரம் கூறுவதால்6 அத்தெய்வத்திற்குரிய வழிபடும்
____________________________________________________________________________
மயிலை சீனி. வேங்கடசாமி- ”சங்க காலத்து மதுரை”- செந்தமிழ்ச் செல்வி- ப.- 135
சிலப்- கட்டுரை.- அடி.- 181- 183
சிலப்.- ஊர்.- அடி.- 9- 14
சிலப்.- அடைக்.- அடி.- 115- 118
சிலப்.- கொலைக்.- அடி.- 105- 120
சிலப்.- கட்டுரை.- அடி.- 22
இடம் ஒன்று இருந்திருக்க வேண்டும். மணிமேகலையும் மதுரையில் இத்தெய்வம் இருந்தமை பற்றிக் கூறுகிறது.1
7.6. ஆதிபூதம், அரசபூதம் வணிகபூதம், வேளாள பூதம் என்ற நான்கு பூதங்கட்கும் மதுரையில் தனித்தனி வழிபாட்டிடம் இருந்தது. நகரில் எரி மண்டியவுடன் இப்பூதங்கள் தம் இருப்பிடத்தை விட்டு நீங்கின.2
7.7.0. சமணபௌத்தப் பள்ளிகள் மதுரையில் இருந்தன.
7.7.1. காலை முரசம் சங்கொடு முழங்கிய இடங்களில்
“அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்” உண்டு3.
7.7.2. சங்க இலக்கியம் மதுரையில் பௌத்தப் பள்ளியும், சமணர் பள்ளியும் இருந்தமையையும்; மக்கள் அங்கு வழிபடச் சென்ற பாங்கையும் மிக விரிவாகப் பேசுகிறது. பெண்கள் தம் மக்களோடு பூவும், புகையும் ஏந்திக் கொண்டு பௌத்தப் பள்ளிக்குச் சென்றனர்.4
சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தி நிற்க; முக்காலத்தையும் உணர்ந்து; அறிவு முதிர்ந்து; விரதங்களை மேற் கொண்டு; இளைக்காத மேனியை உடையவராய்க்; கல்வியிற் சிறந்த சான்றோர்கள் மிக்கு; குளிர்ச்சி பொருந்திய அருகக் கடவுளின் திருக் கோயிலில்; செம்பாற் செய்தாலொத்த சுவர்களில் ஓவியம் தீட்டப் பெற்று, மேனிலம் உயர்ந்து, மணமிக்க பூஞ்சோலைகளை உடைய அமண்பள்ளி இருந்தது.5
7.8.0. அந்தணர் பள்ளியும் மதுரையில் இருந்தது.
7.8.1. கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கியபோது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர்.6
7.8.2. சங்க இலக்கியத்திலும் வேதங்களைப் பொருள் புரிந்து ஓதி, அவை கூறும் ஒழுக்கங்கள் வேறாகாதபடி; ஒப்பற்ற வாழ்க்கை நெறி
____________________________________________________________________________
மணி.- வஞ்சிமா.- அடி.- 12- 13
சிலப்.- அழற்.- அடி.- 16- 102
சிலப்.- ஊர்.- அடி.-11- 14
மதுரைக்.- அடி.- 461- 467
மேற்.- அடி.- 475- 487
சிலப்.- புறஞ்.- அடி.- 141- 150
உடையவராய்; எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகும் பெரியோர் இனிது உறையும் குன்றைக் குடைந்தாலொத்த அந்தணர் பள்ளி மதுரையில் இருந்தது என்று மாங்குடி மருதனார் பாடுகிறார்.1
8.0. மதுரை நகரில் கொடிகள்
8.1. கோவலன் மதுரையை விசும்பில் ஏற்றிய கொடிகளின் நிழலிலேயே சுற்றிக் கண்டு வந்தான்.2 மதுரைக் கோட்டையிலும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.3 பொற்கடை வீதியில் நான்குவகைப் பொன்னை இனம் பிரித்துக் காட்டும் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.4
8.2. மாங்குடி மருதனார் மதுரையில் விழாக் கொடிகளும், வெற்றிக்
கொடிகளும், கள் விற்பனையைக் குறித்துக் காட்டும் கொடிகளும், மீனக் கொடியும் இருந்தன என்கிறார்.5
9.0. மதுரை நகர அமைப்பு
9.1.0. மதுரை நகரைச் சுற்றிக் கோட்டையும், அதைச் சூழ்ந்து அகழியும், அதையடுத்துக் காவற்காடும், அதன் கிழக்கில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. கோட்டையின் நான்கு புறங்களிலும் வாயில்கள் இருந்தன.
9.1.1. கோவலனும் கண்ணகியும் கவுந்தியுடன் வையையாற்றைக் கடந்து மதுரை நகரை வந்தடைந்த போது நகரை வலங்கொண்டு கோட்டைக்கு வெளியே புறஞ்சிறை மூதூரில் தங்கினர்.6 இதனால் புறஞ்சிறை மூதூர் நகரின் வடபுறத்தில் இல்லை என்பது தெரிகிறது. மதுரையை விட்டு நீங்குமுன் கண்ணகி,
“கீழ்த்திசை வாயில் கணவனோடு புகுந்தேன்”7
____________________________________________________________________________
மதுரைக்.- அடி.- 468- 474
சிலப்.- ஊர்.- அடி.- 215- 217
சிலப்.- புறஞ்.- அடி.- 189- 190; ஊர்.- அடி.- 218; அடைக்.- அடி.- 217- 218
சிலப்.- ஊர்.- அடி.- 201- 204
மதுரைக்.- அடி.- 366- 374
சிலப்.- புறஞ்.- 181- 196
சிலப்.- கட்டுரை.- அடி- 182
என்று கூறுகிறாள். இதனால் புறஞ்சிறை மூதூர் கிழக்கில் இருந்தமை புலனாகிறது.
கோவலன் நகருக்குள் சென்ற போது காவற்காட்டால் சூழப்பட்ட அகழியை சுருங்கை வீதி வழியாகக் கடந்து; யவனர் காவல் நின்ற கோட்டை வாசலை அடைந்தான்.1 மாதரி கண்ணகி கோவலனை அடைக்கலமாய்ப் பெற்றுக் கொண்டு நகருள் சென்ற போதும்; காவற்காட்டையும், அகழியையும்; கோட்டையையும் கடந்து சென்றான்.2 கோட்டையில் விற்பொறியும், கருவிரல் ஊகமும், கல்லுமிழ் கவணும், பரிவுறு வெந்நெயும், பாகடு குழிசியும், காய்பொன் உலையும், கல்லிடு கூடையும், தூண்டிலும் தொடக்கும், ஆண்டலை அடுப்பும், கவையும், கழுவும், புதையும், புழையும், ஐயவித்துலாமும், கைபெயர் ஊசியும், சென்றெறி சிரலும், பன்றியும், பணையும், எழுவும், சீப்பும், முழுவிரற் கணையமும், கோலும், குந்தமும், வேலும் முதலிய பொறிகள் பொருந்தி இருந்தன.
‘நான்மாடக்கூடல்’ என்ற பெயர் மதுரை நகருக்கு உரியதாய் சிலப்பதிகாரத்தில் பயின்று வருவதால்3 நான்கு புறமும் கோபுரங்கள் கூடிய வாயிலைப் பெற்றது மதுரை நகரம் என்ற செய்தி குறிப்பாகப் பெறப்படுகிறது. கண்ணகி மதுரையை விட்டு நீங்கும் போது,
“கீழ்த்திசை வாயில் கணவனோடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென”4
என்று சொல்லிச் செல்வதால் கிழக்கு வாசலும், மேற்கு வாசலும் மட்டும் வெளிப்படையாகச் சுட்டப்படுகின்றன.
9.1.2. சங்க இலக்கியம் மதுரைக் கோட்டையை,
“விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசை”5
என்று புகழ்கிறது. பல படைகளை உடைய மதில் என்பதால் பல பொறிகளும் கோட்டையில் இருந்தன எனத் தெரிகிறது. தொடர்ந்து; மிக்க வலிமை பொருந்திய தொன்மையான உயர்ந்த நிலையும், நெய் பூசப்பட்டுக் கரிந்த திரட்சி பொருந்திய கதவும், மேகம் தழுவும் மலை
____________________________________________________________________________
சிலப்.- ஊர்.- அடி. -62- 67
சிலப்.- அடைக்.- அடி. -206- 219
சிலப்.- வஞ்சின.- அடி- 39
சிலப்.- கட்டுரை.- அடி. -182-183
மதுரைக்.- அடி- 352
போல் உயர்ந்த மாடமும் கொண்ட வையையாறு போன்ற இடையறாத போக்கு வரவினை உடைய வாயிலை உடையது மதுரை என்னும் பொருள்பட,
“தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையையன்ன வழக்குடை வாயில்”1 என்று பாடியுள்ளார்
மாங்குடி மருதனார். அக்கோட்டையைச் சூழ்ந்த அகழியை,
“மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு”2 என்கிறார்.
9.1.3. மதுரையின் கோட்டை, அகழி, காவற்காடு பற்றி இடைக்கால இலக்கியங்களும் பேசுகின்றன. சேக்கிழார்,
“நெடுங்குன்ற மதின் மதுரைத் தொன்னகர்”3
என்று மதுரை நகரம் குன்றினை ஒத்த மதிலுடன் இருந்தது என்கிறார்.
தமிழ்விடு தூது ஆசிரியர் வேதத்தைப் போல் உயர்ந்து விளங்கும் மதிலும், அதைச் சூழ்ந்து அகழியும் மதுரையில் இருந்தது என்கிறார்.4
கடலே வந்து சூழ்ந்து இருந்ததைப் போல மதுரைக் கோட்டையை அகழி சூழ்ந்திருந்தது என்று பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார்.5 உயர்ந்து இருந்த மதுரைக் கோட்டையில் பல்வேறு பொறிகள் இருந்தமையைத் தொடர்ந்து விளக்கமாக விவரிக்கிறார்.6 கோட்டையின் வடக்கிலிருந்த வாயில் பற்றிய குறிப்பும் உள்ளது.7
9.1.4. மதுரைக் கோட்டையின் தெற்கு வாயில் பெரியதாகவும், கிழக்கு
____________________________________________________________________________
மேற்.- அடி.- 353- 356
மேற்.- அடி- 351
பெரிய.- திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்- பா- 630
தமிழ்விடு.- கண்ணி- 199- 201
திருவிளை.- மதுரைக்காண்டம்- திருநகரச் சிறப்பு- பா.- 14,15
மேற்.- பா.- 24- 28
திருவிளை.- கூடற்காண்டம்- விடை இலச்சினையிட்ட படலம்- பா-13
வாயில் மிகச் சிறியதாகவும் இருந்ததென ஆய்வாளர் கூறியுள்ளார்.1 இக்கருத்திற்கு ஆதாரம் ஏதும் காட்டப்படவில்லை.
9.2. கோட்டைக்கு வெளியே இருந்த புறஞ்சிறை மூதூரில் சமயப் பெரியோர் தங்கி இருந்தனர். கவுந்தியடிகள் கோவலனிடம் ‘இல் வாழ்வில் ஈடுபட்டோர்க்குப் புறஞ்சிறை மூதூர் தங்குதற்கேற்ற இடம் அன்று’ என்று கூறி அவனை அகநகர்க்குள் சென்று தங்குமாறு அறிவுறுத்துகிறாள்.2 இளங்கோவடிகளின் கவிக்கூற்றிலும் புறஞ்சிறை மூதூர் அறவோர்க்குரியது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.3
9.3. இன்றைய கீழ்மதுரையும் அதனை ஒட்டிய பகுதியுமே பண்டை மதுரையின் புறஞ்சிறை மூதூர்ப் பகுதி ஆகும். பண்டை மதுரை இன்றைய மதுரை மையப்பகுதியின் தென்கூறை உள்ளடக்கியது என்று தெளிவானதாலும்4; அப்பகுதிக்கு நேர்கிழக்கில் இன்று கீழ்- மதுரை இருப்பதாலும்; பண்டைய மதுரையின் கிழக்கிலேயே புறஞ் சிறை மூதூர் இருந்ததென்று புலனாவதாலும்;5 கீழ்மதுரையும் அதை ஒட்டிய பகுதிகளுமே பண்டை மதுரையின் புறஞ்சிறை மூதூர் ஆகும்.
9.4.0. காவற்கணிகையர் வீதி ஒன்றும், ஆடற்கூத்தியராகிய பதியிலார்க்கு இருபெரு வீதிகளும், அஙகாடி வீதியும், இரத்தினக் கடை வீதியும், பொற்கடை வீதியும், அறுவைக் கடைவீதியும், கூலக்கடை வீதியும், நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களும் அகநகரில் இருந்தன.
9.4.1. மேற்சுட்டிய வீதிகளை எல்லாம் கோவலன் கண்டு வந்தான்.6 நகரில் புகையழல் மண்டிய போது; அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வருணத்தார்க்குரிய தெருக்களிலும் இருந்த மக்கள் கலக்கம் அடைந்தனர்.7
____________________________________________________________________________
A.கேசவன்- ”The Town Planning Of Madurai- A Reconstruction- The Madurai Temple Complex- Kumbabisheka Souvenir”- ப.- 222
சிலப்.- அடைக்.- அடி.- 107- 112
சிலப்.- புறஞ்.- அடி.- 195- 196
பார்க்க- கரு.எண்- 5.5.1
பார்க்க- கரு.எண்- 9.1.1
சிலப்.- ஊர்.- அடி.- 68- 218
சிலப்.- அழற்.- அடி.- 110- 112
*********************************************************************************************************************************************************************************************************************
9.4.2. மதுரைக் காஞ்சியில் வரைவின் மகளிர் பற்றிய குறிப்பும்1; நாளங்காடி, அல்லங்காடி, பல்வேறு பண்டங்களின் விற்பனை பற்றிய செய்திகள்;2 பொன், மணி, அறுவை ஆகியவற்றின் வாணிபம் பற்றிய செய்தி3 முதலியவை இடம் பெற்றிருப்பதால் கணிகையர் வீதியும், அங்காடி வீதியும், இரத்தினக் கடை வீதியும், பொற்கடை வீதியும், அறுவைக் கடை வீதியும் குறிப்பாகப் பெறப்பட்டன. பல்வேறு தொழில் செய்வோரும், வாணிகரும்;
“நால்வேறு தெருவினும் காலுற நிற்றர”4
இருந்ததாகப் பாடுவதால் அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் முதலியோர்க்குரிய தெருக்கள் இருந்தமையும் பெறுகிறோம்.5
மதுரை பற்றிப் பாடும் இடைக்கால இலக்கியங்களும் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வருணத்தார்க்குரிய தெருக்கள் பற்றிப் பேசுகின்றன. பரஞ்சோதி முனிவர்,
“இழுக்கறு மேழிச் செல்வர் வளமறுகு”6 என்று வேளாளர்
தெருவையும்,
“சொல்லினும் இலாபம் கொள்வார் தொன்மரபு இருக்கை”7
என்று வணிகர் தெருவையும்,
“கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோமறுகு”8
என்று அரசர் தெருவையும்,
“தீர்த்தராய் முத்தீ வேட்கும் செல்வர் தம் இருக்கை”9
____________________________________________________________________________
மதுரைக்.- அடி.- 562- 589
மேற்.- அடி.- 395- 406; 424- 430; 527- 544
மேற்.- அடி.- 511- 522
மேற்.- அடி- 522
பொ.வே.சோமசுந்தரனார் புரோகிதர், ஒற்றர், சேனாபதியர், தூதர் முதலியோர்க்குரிய தெருக்கள் என்று விரித்துரைக்கிறார். (பத்துப் பாட்டு- மூலமும் உரையும்- பாகம்- ll- மதுரைக். -ப. -ll-132) அவரே சிலப்பதிகாரம் கூறும் ‘நால்வேறு தெரு’ நான்கு வருணத்தார்க்குரிய தெருக்கள் என்று கூறியிருப்பதால் (சிலப்.- பொ.வே.சோமசுந்தரனார்-உ.ஆ.- ப.- ll-297); முதல் கருத்தை விட்டுவிட்டு இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொள்வது நலம்.
திருவிளை.- மதுரைக்காண்டம்- திருநகரச் சிறப்பு- பா- 54
மேற்.- பா - 58
மேற்.- பா - 70
மேற்.- பா- 82
என்று அந்தணர் தெருவையும் பற்றிப் பேசுகிறார். அத்துடன் கணிகையர் வீதி, ஆபரணக்கடை வீதி, அறுவைக் கடை வீதி முதலியவற்றையும் முறையே,
“பழிபடு போகம் விற்பார் ஆவணம்”1 என்றும்;
“ஆள்கலம் பகர்பீடிகை”2 என்றும்;
“பன்னிறத்த பெருவிலைப் பட்டெலா மவண
அன்னபட்டின் மேம்படுவிலைப் பருத்தியு மவண”3
என்றும் குறிப்பிடுகிறார்.
9.5.0. ஆய்ச்சியர் குடியிருப்பு ஒன்றும் அகநகரில் இருந்தது.
9.5.1. மாதரி தன் இனத்தாரின் குடியிருப்புப் பகுதியில் பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர் காவற் சிற்றிலில் கண்ணகியையும் கோவலனையும் குடியேற்றியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்.4 இடையர்களின் இருக்கை கட்டுவேலி சூழ்ந்ததாகவும் தாதெரு மன்றத்தை உடையதாகவும் இருந்தது.
9.5.2. ஆய்வாளர் இன்றைய மதுரையே பண்டைய மதுரை என்று நிறுவ இன்றைய மதுரையின் தெருக்களை சிலப்பதிகாரம் கூறும் வருணனையுடன் ஒப்பிட்டு வடக்குச் சித்திரை வீதியும், வடக்கு ஆவணிமூல வீதிச் சந்துகளும், மொட்டைக் கோபுர வாசல் தெருவும் இந்நூற்றாண்டின் முதல் பகுதி வரை கணிகையர் தெருக்களாகவே திகழ்ந்தன என்பதால்; இவையே சிலப்பதிகாரம் கூறும் மாதர்வீதி என்கின்றனர்.5 வடக்கு மாசி வீதியும், வடக்கு வெளிவீதியும் ஆயர் தெரு என்கின்றனர்.6 கோவலன் சிம்மக்கல் பகுதியிலிருந்து புறப்பட்டு
____________________________________________________________________________
மேற்.- பா- 46
மேற்.- பா- 62
மேற்.- பா- 63
சிலப்.- கொலைக்.- அடி.- 4- 6
S.V.நடராசன்- மு.நூ.- ப.- 148
மேற்.- ப.- 97
வடக்குமாசி வீதியினைக் கழிந்து பரத்தையர் வீதியாகிய வடக்கு ஆவணிமூல வீதியைக் கடந்து வடக்குச் சித்திரை வீதியில் பொற் கொல்லனைக் கண்டிருக்க வேண்டும் என்கின்றனர். வடக்குச் சித்திரை வீதியே சிலப்பதிகாரம் கூறும் அங்காடிவீதி என்பர். வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசிவீதி போன்ற பகுதிகளில் எருமைக் கூட்டங்களை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வதும், பிற்பகலில் அவற்றை மீண்டும் கொண்டு வருவதும் இன்றும் காண இயல்வதால் கொலைக் களக் காதை நிகழ்ச்சிகள் இங்கு தான் நடைபெற்றிருக்கவேண்டும் என்பர்.1 கிழக்குச் சித்திரை வீதியும், தெற்குச் சித்திரை வீதியும் சிறந்த அறுவைக் கடைவீதிகளாக இன்றும் விளங்குவதையும், தெற்கு ஆவணிமூல வீதி சிறந்த ஆபரணக்கடை வீதியாக விளங்குவதையும் எடுத்துக் கூறி சிலப்பதிகாரம்காட்டும் மதுரை இன்றைய மதுரையின் மையப்பகுதியே என்பர்.2
மேற்கூறிய வீதிகளுள் வடக்குமாசிவீதி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும்;3 வடக்கு வெளிவீதி கி.பி.1837ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றும் முன்னர்க் கண்டோம்.4 இதனால் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் மதுரை வருணனையை இன்றைய மதுரை மையப்பகுதியுடன் முற்றிலும் பொருத்திக்காண்பது தவறு.
9.6.0. குறுந்தெருக்களும், பெருந்தெருக்களும் அமைந்திருந்த பாங்கில் இடையில் முச்சந்திகளும், நாற்சந்திகளும், முடுக்குகளும் இருந்தன.
9.6.1. கோவலன் மதுரை நகரைச் சுற்றி வருங்கால் முச்சந்திகளையும், நாற்சந்திகளையும், முடுக்குகளையும், குறுந்தெருக்களையும் பார்க்கிறான்5. நகரில் எரி மண்டிய பொழுது தேரூரத்தக்க பெருந்தெருக்களும் கலங்கின.6
____________________________________________________________________________
மேற்.- ப.- 149
மேற்.- ப.- 151
பார்க்க- கரு.எண்- 5.3
பார்க்க- கரு.எண்- 5.1
சிலப்.- ஊர்.- அடி.- 213- 214
சிலப்.- அழற்.- அடி.- 109- 112
9.8.2. சங்க இலக்கியம் மதுரை நகரில் ஆறு போன்ற அகன்ற தெருக்களும், விழாக்கள் மலிந்த பெருந்தெருக்களும் இருந்தன என்கிறது.
“யாறு கிடந்தன்ன அகனெடுந் தெரு”1 என்றும்,
“விழவு நின்ற வியன்மறுகில்”2
என்றும் வரும் அடிகள் நோக்கற்குரியன.
9.6.3. இடைக்கால இலக்கியம் மதுரையில் இருந்த முடுக்குகளையும், குறுந்தெருக்களையும் பற்றி,
“வீதியும் கவலையும் முடுக்கரும் மிடைந்து”3
என்று பாடியுள்ளது.
முடிபுகள்
மதுரை என்ற பெயர் பல ஊர்களுக்கு உரியதாக வழங்குகிறது.
கூடல், ஆலவாய், ஜீவன் முத்திபுரம், கன்னிபுரம், சமட்டி விச்சாபுரம், பூலோக சிவலோகம், சிவநகரம், கடம்பவனஷேத்திரம், துவாத சாந்தஸ்தலம் முடித்தலை கொண்ட சோழபுரம் என்று பலமாற்றுப் பெயர்களைக் கொண்ட சிலப்பதிகார மதுரை வையைக் கரையில் உள்ளது.
கிறிஸ்துவுக்கு முந்திய காலத்திலிருந்து ‘மதுரை’ என்னும் பெயரைக் கொண்ட இந்நகரம் புலவோர் கூடிய இடமாதலால் ‘கூடல்’ என்னும் பெயரை சங்க காலம் தொட்டுப் பெற்றது. கோட்டை வாயில்களின் மேல் இருந்த கோபுரங்கள் காரணமாக ‘ மாடக்கூடல்’ என்றும் அழைக்கப்பட்டது.
நீர்நிலைகள் நடுவில் இருந்தமையே ஆலவாய் என்னும் பெயர்க்குரிய காரணம் ஆகும். இடைக்காலத்தில் கோயிலுக்கு வழங்கிய ஆலவாய் என்னும் பெயர் நகருக்கும் உரியதாக ஆயிற்று.
சோழர் ஆட்சிக்கு உட்பட்ட போது முடித்தலை கொண்ட சோழபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
இடைக்காலப் புராணங்களே கன்னிபுரம், கடம்பவனஷேத்திரம் என்ற பெயர்களுக்கு வழி வகுத்தன.
____________________________________________________________________________
மதுரைக்.- அடி.- 359; நெடுநல்.- அடி.- 30
மதுரைக்.-அடி.- 328
திருவிளை.- கூடற்காண்டம்- விறகு விற்ற படலம்- பா - 17
பாண்டியர்களின் தலைநகரமாகிய மதுரை சங்க காலம் தொட்டு இன்றுவரை தன் எல்லையளவில் விரிந்துள்ளதே அன்றி அதன் மையப்பகுதியின் இருப்பிடத்தில் மாற்றம் நிகழவில்லை.
பெருமாள் மேஸ்திரி வீதிகளும், மாரட் வீதிகளும், வெளிவீதிகளும் கி.பி. 1837ம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. மங்கம்மாள் சத்திரம் அதற்குப் பின்னர் உருவானது.
மாசிவீதிகள் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உருவாயின. மாசி வீதிகளை அடுத்து உட்கோட்டைச் சுவரும், பின்னர் புறக்கோட்டைச் சுவரும், அதையடுத்து அகழிகளும் இருந்தன. இன்றைய வெளிவீதிகளே நாயக்கர் ஆட்சிக்கால அகழிகள் ஆகும்.
ஆவணிமூல வீதியை அடுத்துக் கோட்டையும், அகழியும், புறநகர்ப் பகுதியில் எட்டு வழிபாட்டிடங்களும் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் இருந்தன. நகரின் நடுவில் கோயிலும், சுற்றிலும் நான்கு திசைகளில் தெருக்களும் அமைந்த போக்கு பாண்டியர் காலத்திலேயே உருவாகி விட்டது.
கி.பி.ஏழாம் நூற்றாண்டிலும் மதுரை நகரம் இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை உள்ளடக்கியதாகவே இருந்தது. பழைய சொக்கநாதர் கோயிலே வடதிருவாலவாய் ஆகும்.
பரிபாடல் போற்றும் இருந்தையூர் தெற்கு மாசிவீதியும், மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கூடலழகர் கோயில் ஆகும். பாண்டியன் ஆட்சிக்
காலத்தில் புறநகர்ப் பகுதியாக இருந்த இக்கோயில்; விஸ்வநாத நாயக்கர் மாசிவீதிகளை உருவாக்கிய போது கோட்டைக்கு உட்பட்ட பகுதி ஆனது.
சுந்தர பாண்டியன் கட்டிய திருநடுவூர் இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயில் ஆகும். பாண்டியப் பேரரசுக் காலத்தில் புறநகர்ப் பகுதியாக இருந்து அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் கோட்டை கட்டிய பொழுது தான் மாசிவீதி மூலம் கோட்டைக்கு உட்பட்டதாகியது.
நக்கீரர் மதுரைக்கு மேற்கே ஒரு கோணத்தில் பரங்குன்றம் இருந்ததாகவே பாடியுள்ளார். அவர் பாடிய பொருளில் இன்றும் மாறுபாடு இல்லை.
சங்க காலத்தில் மதுரை நகரம் இன்றைய மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை ஈசான்ய மூலையிலும், கூடலழகர் கோயிலை மேற்கு எல்லையிலும் கொண்டு இன்றைய கீழ்மதுரைக்கு மேற்கில் இருந்தது. மயமதம் கூறும் விதிகளுக்கு ஏற்ப அமைந்த நகரின் கோட்டை வாயில்களில்; அவ்விதிகளுக்கு ஏற்பவே கோபுரங்கள் இருந்தன.
வையையாற்றில் வெள்ளம் வரும்போது மட்டும் அது கோட்டை வாயிலை மோதியது. சங்க காலம் தொட்டு இன்றுவரை ஆறு தன் போக்கை மதுரைப்பகுதியில் மாற்றிக் கொள்ளவில்லை. ஆயின் காலந்தோறும் அதன் அகலம் சுருங்கியுள்ளது. சிலப்பதிகாரம் காட்டும் மதுரை இன்றைய மதுரை மையப் பகுதியின் ஒரு கூறு ஆகும்.
இடைக்காலக் கல்வெட்டுகள் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்ற காரணம் அது மாடக்குளத்தின் மூலம் பாசனவசதி பெற்றமை ஆகும்.
நிலவளமும், நீர்வளமும், பூவளமும் மிகுந்த மதுரை வாணிபத்திலும் சிறப்புப்பெற்றது. அகநகரில் சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன், முருகன் முதலிய தெய்வங்கட்கும், மதுராபதி என்னும் காவல் தெய்வத்திற்கும், அரச, அந்தண, வணிக, வேளாள பூதங்கட்கும் வழிபாட்டிடங்கள் இருந்தன. புறநகரில் இயக்கி என்னும் பெண்தெய்வத்திற்குரிய வழிபாட்டிடம் இருந்தது. சமண, பௌத்த, அந்தணர் பள்ளிகளும் மதுரைக்குள் இருந்தன.
பல்வேறு கொடிகள் ஏற்றப்பட்டிருந்த மதுரையைச் சுற்றிலும் கோபுரம் கொண்ட நான்கு வாயில்களுடன்; பல பொறிகளை உடைய கோட்டையும், அகழியும், காவற்காடும், கிழக்கில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. இன்றைய கீழ்மதுரையே பண்டைப் புறஞ்சிறை மூதூர் ஆகும்.
நகருக்குள் காவற் கணிகையர் வீதி ஒன்றும், ஆடற்கூத்தியர்க்கு இருபெரு வீதிகளும், அங்காடி வீதியும், பொற்கடை வீதியும், இரத்தினக் கடை வீதியும், அறுவைக் கடைவீதியும், கூலக்கடை வீதியும், நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களும், ஆய்ச்சியர் குடியிருப்பும், ஆறு போன்ற அகன்ற தெருக்களும் குறுந்தெருக்களும், தேரோடும் வீதிகளும், சந்திகளும், முடுக்குகளும் இருந்தன.
****************************************************************************************************************************************************************************************************
மதுரை- பெயர்க் காரணம்
யமுனை நதிக்கரை மதுரையைப் பின்பற்றி வையைக்கரை மதுரை பெயர் பெற்றது என்று கூறுவர். (V.கனகசபை- ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்- ப.- 23; அ.கி.பரந்தாமன்- வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்- ப.- 26; சோமலெ- மதுரை மாவட்டம- ப.- 45) இக்கருத்திற்கு ஆதாரங்கள் எடுத்துக் காட்டப் படவில்லை.
வையைக்கரை மதுரை வடமதுரை என அழைக்கப்பட்டமையை இலக்கியங்களில் காண்கிறோம். (தமிழ்விடு தூது- கண்ணி-119) கடல் கொண்ட மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே இங்ஙனம் அழைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை ஆய்வாளரும் கூறியுள்ளனர். (சாம்பசிவன்- மாநகர் மதுரை-ப. -17; D.தேவகுஞ்சரி- Madurai Through the Ages-ப. 26)
இலங்கையிலும், கீழை நாடுகளிலும் சில ஊர்கள் இப்பெயரைக் கொண்டுள்ளதால்; மதுரை என்ற பெயர் எந்த ஊருக்கு முதலில் வழங்கியது என்ற கருத்து தெளிவான பின்னரே ‘மதுரை’ என்ற பெயர்க் காரணத்தை அறிய இயலும்.
தேன் எனப் பொருள்படும் ‘மதுரம்’ என்ற சொல்லில் இருந்து மதுரை என்ற பெயர் உருவானது என்றும் (D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 26); மருதமரங்களின் மிகுதி காரணமாக மருதை என்று வழங்கிப் பின்னர் மதுரை ஆனது என்றும் (அ.கி.பரந்தாமன்- மு.நூ.- ப.- 17) மருதமுன்றுறை என்ற வையைத்துறையைப் பின்பற்றி மருதை என்று ஊரின் பெயர் வழங்கிப் பின்னர் ‘மதுரை’ ஆனது என்றும் (Dr. சாரங்கபாணி- பரிபாடல் திறன்- ப.- 208); உள்ள ஆய்வாளர் கருத்துக்களின் வன்மை மென்மைகளைப் பின்னரே அறிய இயலும்.
நகரை நிர்மாணித்த பின் சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து தேனை நகர் மீது தெளித்ததால் மதுரை என்று பெயர் வந்தது என்னும் கதை பிற்காலத்தில் எழுந்ததாகும்.
கல்வெட்டுகளில் 'மதிரை' என்ற பேச்சு வழக்கைக் காண இயல்வதால்; மதில் சூழ்ந்து இருந்தமை காரணமாக 'மதிரை' என வழங்கிப் பின்னர் நாகரிக வழக்காக மதுரை எனத் திரிந்ததாகவும் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மதில் > மதிர் > மதிரை > மதுரை
(தொடரும்) சக
(தொடரும்) சக
மதுரையில் இடப்பெயர்கள்
மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் வடபழஞ்சி, தென்பழஞ்சி என்ற பெயர்களுடைய இருப்பிடங்கள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன. பழஞ்சி என்ற சொல் பழைய+இஞ்சி என்று பிரிந்து பழைய எயில் என்று பொருள்படும். இவ்விரு இடங்களும் மதுரையினின்றும் மேற்கில் நாகமலையின் தென்புறத்தில் உள்ளன ஆதலால்; அவற்றுக்கும் மதுரைக்கோட்டைக்கும் தொடர்பில்லை எனலாம்.
கீழக்கோட்டை, மேலக்கோட்டை ஆகிய இரு ஊர்களும் நாயக்கர் காலத்தில் இருந்த பாளையக்காரர்களின் கோட்டை என்று B.S.பாலிகா கூறியுள்ளார். (Gazetteers Of India- Madras- Madurai- ப.-429)
திருவிளையாடற் புராணக் கதைகளை அடியொட்டிப் பல பகுதிகள் மதுரையில் பெயர் பெற்றுள்ளன. இப்பகுதிகளை சோமலெ தொகுத்துக் கூறி விளக்கம் தருகிறார்.
சொக்கநாதர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி என்றும்; குதிரைகள் நரிகளாகிச் சென்ற ஊர் செல்லூர் என்றும்;
அவை கத்திச் சென்ற இடம் கத்துநரி > தத்தனேரி ஆயிற்று எனவும்; அவை ஒன்றையொன்று தொடர்ந்து சென்ற இடம் தோடனேரி என்றும்;
குதிரைகள் வந்தபொழுது புழுதி மண்டிய இடம் ‘மண்டியூர் > வண்டியூர்’ என்றும்; பாண்டியன் குதிரைகளை விலை மதித்த இடம் மதிச்சியம் என்றும்; சிவன் கால்மாறி ஆடிய இடம் வெள்ளியம்பலத் தெரு என்றும்; மீன் பிடித்த திருவிளையாடல் நிகழ்ந்தது வலைவீச்சுத் தெப்பக்குளம் என்றும்; வளையல் விற்ற திருவிளையாடல் தொடர்பு உடையது வளையல்காரத் தெரு என்றும்; பிட்டு வாங்கி மண் சுமந்த இடம் பிட்டுத்தோப்பு என்றும்; அனல்வாதம் நடந்த இடம் 'சாம்பல் நத்தம் > சாம்பநத்தம் > சாமநத்தம்' என்றும் கூறியுள்ளார். (மதுரை மாவட்டம்- ப.-227, 274) இப்பெயர்களனைத்தும் திருவிளையாடல் கதைகள் மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கினைக் காட்டுகின்றன.
வரலாற்று நிகழ்ச்சிகளை அடியொட்டிப் பெயர் பெற்ற இடங்களும் உள்ளன. கோச்சடையன் ரணதீரனை நினைவூட்டுவது கோச்சடை என்னும் நகர்ப்புறப்பகுதி.(அ.சம்பந்த மூர்த்தி- வைகைக் கரையிலே- ப.-109) அச்சம்பத்து என்பது அச்சுதன் பெயரால் அந்தணர்க்குக் கொடுத்த கிராமம். விராட்டிபத்து என்பது பிராட்டியாகிய உமாதேவியின் பெயரால் அந்தணர்க்குக் கொடுத்த கிராமம் ஆகும். சிலைமானை அடுத்த மதுரை மாவட்ட எல்லையில் இருப்பது கழுவேறுகடை. மதுரைக்கு மேற்கிலிருப்பது மேலக்கால். மேலக்காலில் இருந்து கழுவேறுகடை வரை கழுமரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன என்கிறார் அ.சம்பந்த மூர்த்தி (வைகைக்கரையிலே- ப.- 132- இக்கருத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் மதுரைக்கு மேற்கே வையை ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அக்கால்வாய் பிரியும் இடமே மேலக்கால் என்று பெயர் பெறுகிறது. இது களஆய்வில் நேரில் கண்டது.) அக்கழுமரங்களில் ஒன்று கோச்சடை அருகே உள்ள கொற்றவன் கழுமேட்டில் நின்றது என்று சோமலெ கூறுகிறார் (மதுரை மாவட்டம்- ப.- 53) இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது.
முகம்மது கோரியின் படைகள் தங்கியிருந்த இடம் கோரிப்பாளையமாம். ஆர்க்காட்டு நவாபுவின் படைகள் தங்கியிருந்த இடம் ஆரப்பாளையம் ஆகும். (S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.- 107) இக்கருத்தினின்று மாறுபட்டு பு. இராசதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட காவல் நிலையங்களே கோரிப்பாளையம், ஆரப்பாளையம் முதலிய இடங்கள் என்றும்; இவை மறவர் பொறுப்பிலும், முகமதியர் பொறுப்பிலும் விடப்பட்டன என்றும் கூறியுள்ளார். (உறவின்முறை- ப.-63) இக்கருத்தை ஏற்றுக்கொண்டால் இப்பாளையங்களின் பெயர்களில் முன்னொட்டாக உள்ள கோரி-, ஆர- முதலிய பதங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. ஆயின் S.V.நடராசன் கருத்துப்படி கோரிப்பாளையம் முகம்மது கோரியின் படைகள் தங்கியிருந்த இடம் என்றும்; ஆரப்பாளையம் ஆர்க்காட்டு நவாபுவின் படைகள் தங்கியிருந்த இடம் என்றும் பொருள் கொண்டால் முழுப்பெயருக்கும் விளக்கம் தெளிவாகக் கிடைப்பதால் S.V.நடராசனின் கருத்தே ஏற்றுக் கொள்ளத் தக்கதாகிறது. இதுபோல் கான்பாளையம் ஆலம்கானின் படைகள் தங்கியிருந்த இடம் என்று விளக்கம் கூறவும் இயல்கிறது. மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம் முதலிய இடங்களும் இதுபோல் ஏதேனும் ஒரு நவாபின் படை தங்கியிருந்த இடமோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் நாயக்கர் ஆட்சியை அடுத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை மதுரைக் கோட்டை பலமுறை தாக்குதலுக்கு உட்பட்டது என்பதை இந்நூலில் முன்னர்க் கண்டோம். படை மறவர் குடியிருக்க அமைக்கப்பட்ட ஊர் பாளையம் எனப் பெயர்படும் என்பதை ஆய்வாளரும் கூறியுள்ளனர். (S.கணபதிராமன்- பொருநை நாடு- ப.-69)
மேற்கூறிய இடங்கள் தவிர குயவர் பாளையம், ருக்மணி பாளையம், கிருஷ்ணா பாளையம், முன்சீப் பாளையம், மஹ்பூப் பாளையம், கட்றா பாளையம், பிள்ளையார் பாளையம், மாப்பாளையம் முதலிய இடங்களை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைந்த காவல் நிலையங்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். (பு.இராசதுரை- உறவின்முறை- ப.-63) கி.பி.600-625 வரை ஆண்ட மாறவர்மன் அவனிசூளாமணியின் பெயரால் உருவானது அவனியாபுரம் ஆகும். (S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.-115) ஆயின் மதுரை தொல்பொருள் ஆய்வு அலுவலர் மா. சந்திரமூர்த்தி ‘அவனியாள்’ என்ற பெயரில் கல்வெட்டுக்களில் ஒரு அரசி சுட்டப்படுவதாகவும் அவள் பெயரால் உருவான குடியிருப்புப் பகுதியே, 'அவனியாள்புரம் > அவனியாபுரம்' என்றாகி உள்ளதென்கிறார் (1983ல் மதுரைத் தொல்பொருள் ஆய்வு அலுவலகத்தில் நேரில் சந்தித்து உரையாடிப் பெற்ற கருத்து).
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரைக்கும் திருப்பரங்குன்றிற்கும் இடையில் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவித்த குடியிருப்புப் பகுதியே கிருஷ்ணாபுரம் ஆகும். (B.S.பாலிகா- District Gazetteers of Madras- Madurai- ப.- 52)
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயருடைய நன்கொடையால் சாளுவநரச நாயக்க நாராயணன் என்பவரால் வெட்டப்பட்டதே எழுகடல் என்று அழைக்கப்படும் சப்தசாகர தீர்த்தம் ஆகும்.
திருமலை நாயக்கர் மகாலை அடியொட்டிச் சில இடப்பெயர்கள் மதுரையில் காணப்படுகின்றன. மகாலுக்குத் தென்மேற்கே இன்று உள்ள சிங்காரத்தோப்பு நாயக்கர் அரண்மனையுடன் சேர்ந்திருந்த உல்லாச வனம் என்றொரு கருத்து உள்ளது.
மைனா தெப்பக்குளம் என்று வழங்கும் நைனா தெப்பக்குளமும் மகாலோடு தொடர்புபட்டதென்பர்.
கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்; அத்திருவிழா நிகழ்ச்சிகளை அடியொட்டியே பெயர் பெற்றன. மேங்காட்டுப் பொட்டல் அல்லது Main Guard Square என்று அழைக்கப்படும் ‘மெய் காட்டும் பொட்டல்’ பெரியாழ்வாருக்கு மகாவிஷ்ணு காட்சி கொடுத்த இடம் என்று மக்கள் கருதுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை கூடலழகர் இங்கே எழுந்தருளுகிறார். (சோமலெ- மதுரை மாவட்டம்- ப.-44)
திருவிளையாடல் புராணம் கூறும் நான்கு மேகங்கள் நான்கு மாடங்களாகி மதுரையைக் காத்த கதையை அடியொட்டி; அவ்வாறு காத்த இடம் மாடக்குளம் என்றும்; அதனாலேயே அக்குளத்திற்கு ‘ மாடக்குளம்’ என்று பெயர் வந்தது என்றும் கருதுகின்றனர். (S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.- 21)
தல்லாகுளம், சொக்கிகுளம், கருப்பாயூரணி, பீபிகுளம் என நீர்நிலைகளால் பெயர் பெற்ற இடங்கள் பல உள.
*************************************************************************************************************
(தொடரும்)
சக