Re: பண்டைய மதுரை -மதுரைக்காஞ்சி - முனைவர் ச.கண்மணி கணேசன்

18 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jan 23, 2026, 10:29:33 PM (9 days ago) Jan 23
to Dhinakaran S, vallamai
மதுரை பற்றி என்னிடம் இருக்கும் மூன்று தரவுகள்...

1. சிலப்பதிகாரம் காட்டும் மதுரை- இது மதுரை வானொலி நிலைய இயக்குநர் கேட்டுக் கொண்ட படி ஆற்றிய வானொலி உரை. இதில் சிலப்பதிகாரச் செய்திகள் தவிர வேறு எந்தக் கருத்தும் இல்லை. 

2. சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் என்ற எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில் இடம் பெறும் 'மதுரை' என்ற அத்தியாயம்... இந்த ஆய்வேட்டை 1990களை ஒட்டி நூலாக வெளியிட்டுள்ளேன். அரசு பொது நூலகங்களில் கிடைக்கும். சென்னை கன்னிமாராவில் ஒரு பிரதி உள்ளது. (அங்கே அதை வாசித்து விட்டு ஒருவர் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்.) உங்களுக்கு அனுப்ப என்னிடம் இப்போது ஒரு பிரதியும் இல்லை. ஏனென்றால் அந் நூற் பிரதிகளை மாணவர் நலன் கருதிக் கருத்தரங்குகளில் அன்பளிப்பாகவும் பரிசுகளாகவும் எல்லோருக்கும் கொடுத்து விட்டேன். ஆனால் அந்நூலைக் கணிப்படுத்தி உள்ளதால்; அந்த அத்தியாயத்தை மட்டும் இந்த இழையில் மறுபதிவு செய்வது எனக்கு இயலும். 

3.மதுரையின் இரண்டு நியமங்கள் பற்றி நீங்கள் வாசித்து அறிந்ததாகக் கூறி உள்ளீர்கள். மகிழ்ச்சி. அது குறித்த ஓரிரு புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள இயலும்.

சிலப்பதிகாரம்  காட்டும் மதுரை


(மதுரை அகில இந்திய வானொலியில் 2.5.1996 அன்று காலை 8.30 மணிக்கு ஒலிபரப்பான என் உரை) 


2000 ஆண்டுக் காலமாகத் தலைநகர் என்ற தகுதியிலிருந்து மாறாமல் இன்றுவரை சிறந்து விளங்கும் பெருமைக்குரியது மதுரை மாநகரம்.

இளங்கோவடிகள் தான் எழுதிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் இந்நகரின் பெயரால் மதுரைக் காண்டம் என்று ஒரு காண்டத்திற்குப் பெயர் சூட்டியுள்ளார்.  

'பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்' என்று இளங்கோவடிகள் குறிப்பிடும் மதுரை பாண்டியனின் தலைநகரம் ஆகும். இந்நகரம் வையையாற்றின் தென்கரையில் இருந்தது. கண்ணகியும் கோவலனும் கவுந்தியுடன் சேர்ந்து மரப்புணை மூலம் வையையைக் கடந்து 'வானவர் உறையும் மதுரை' வந்து சேர்ந்ததாகவே இளங்கோவடிகள் பாடியுள்ளார். 

ஆற்றின் கரையில் இருந்தமையால் மதுரை நகரம் வளம் மிகுந்ததாகத் திகழ்ந்தது. பலவகை மரங்கள் செழித்து ஓங்கி இருந்தன. பூக்களும் மிகுதியாக இருந்தன. மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் வயல்களும், சோலைகளும், ஓடைகளும், ஏரிகளும், தென்னந் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும், கமுக மரங்களும் நிறைந்திருந்தன. வையையின் கரையெங்கும் குரா, மகிழம், கோங்கம், வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், உச்சிச் செலுந்தி, செருந்தி, சண்பகம், பாதிரி முதலிய மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன. மதுரையிலிருந்து வந்த தென்றல் கழுநீர், செண்பகம், மாதவி, மல்லிகை, முல்லை, முதலிய பூக்களின் மணத்தோடு வந்ததாகப் பாணர் குழு கோவலனிடம் கூறுகிறது. வையைக் கரையின் அகப்பகுதியில் எங்கும் குருக்கத்தியும், செம்முல்லையும், முசுட்டையும், மல்லிகையும், வெள்ளை நறுந்தாழியும், வெட்பாலையும், பெருங்கையாலும், குட்டிப் பிடவமும், இருவாட்சியும் மலர்ந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தன. மதுரைக் கோட்டையைச் சூழ்ந்திருந்த அகழியில் குவளையும், ஆம்பலும், கமலமும் மலர்ந்திருந்தன. முருக்க மலரிதழ்கள் வையைக் கரையில் உதிர்ந்து கிடந்தன. வையை ஆற்றுநீரோடு இடையறாது முல்லையரும்புகள் வந்தன. 

மதுரை நகர அங்காடியில் பல்வேறு பொருட்களின் வாணிபம் நிகழ்ந்தது. வையம், சக்கரங்களுடைய வண்டி, தேர்மொட்டு, கவசம், அங்குசம், தோற்கைத்தளம், அரைப்பட்டிகை, வளைதடி, சாமரை, மூன்று வகைக் கேடயங்கள், குத்துக்கோல்கள், செப்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், கயிற்றால் முடிந்து செய்யப்பட்ட பொருட்கள், கிடையால் புனையப்பட்ட மாலை, ஈர்வாள், தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்டவை, வாசனைப்  புகைக்குரியவை, மயிர்ச்சாந்து செய்தற்குரிய பொருட்கள், பூமாலைகள் முதலியவை அங்காடி வீதியில் விற்கப்பட்டமையைக் கோவலன் கண்டு வந்தான். அங்காடியில் அப்பவணிகர் அப்பம் சுடுவதால் எழுந்த புகையின் மணத்தோடு தென்றல் கலந்து வீசியதென்று மதுரைத் தென்றலின் மணம் பற்றிப் பாணர் கோவலனிடம் பேசுகின்றனர். 

ஒன்பது வகை மணிகளும், நான்கு வகைப் பொன்னும், பல்வேறு ஆடைவகைகளும், பல்வகைக் கூலங்களும், மிளகும் மதுரையில் விற்கப்பட்டன. கோவலன் இரத்தினக் கடைத்தெருவையும், பொற்கடைத் தெருவையும், அறுவைக் கடைவீதியையும், கூலவீதியையும் சுற்றிக் கண்டுவந்தான். 

சிவன், திருமால், முருகன், கொற்றவை, பலதேவன் முதலிய தெய்வங்களை வழிபடும் இடங்கள் மதுரையில் இருந்தன. காலைமுரசம் சிவனுக்குரிய கோயிலிலும், முருகன் கோட்டத்திலும், பலதேவன் நகரத்திலும், திருமால் நியமத்திலும் ஒலித்தன. கண்ணகி மதுரையை விட்டு வெளியேறும் போது கொற்றவை கோயில் வாசலில் பொற்றொடியைத் தகர்க்கிறாள். மதுரையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் இயக்கி என்னும் பெண்தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது. மாதிரி இத்தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து மீண்டு வரும் பொழுது கவுந்தியைப் புறஞ்சிறை மூதூரில் கண்டு அடிபணிகிறாள். மதுரையின் அகநகர்ப் பகுதியில் பிற சிறுதெய்வங்கட்கும் வழிபாடுகள் இருந்தன. கோவலன் பொற்கொல்லனிடம் சிலம்பைக் கொடுத்தனுப்பிய பின்னர் ஒரு தேவகோட்டச் சிறையகம் புகுந்து இருந்தான். மதுராபதி என்னும் காவல் தெய்வம் ஒன்று மதுரையில் இருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுவதால் அத்தெய்வத்திற்குரிய வழிபாட்டிடம் ஒன்று மதுரையில் இருந்திருக்க வேண்டும். ஆதிபூதம், அரசபூதம், வணிக பூதம், வேளாள பூதம் என்ற நான்கு பூதங்கட்கும் மதுரையில் வழிபாடு நடந்தது. நகரில் எரி மண்டியவுடன் இப்பூதங்கள் தம் இருப்பிடத்தை விட்டு நீங்கின. சமண பௌத்தப் பள்ளிகளும் மதுரையில் இருந்தன. காலைமுரசம் அங்கும் சங்கோடு முழங்கியது. அந்தணர் பள்ளியும் மதுரையில் இருந்தது. கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிய போது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர். 

கோவலன் மதுரையை விசும்பில் ஏற்றிய கொடிகளின் நிழலிலேயே சுற்றிக் கண்டு வந்தான். மதுரைக் கோட்டையிலும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. பொற்கடை வீதியில் நான்கு வகைப் பொன்னை இனம் பிரித்துக் காட்டும் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன. 

நகரைச் சுற்றிக் கோட்டையும், அதைச் சூழ்ந்து அகழியும், அதையடுத்துக் காவற்காடும், அதையடுத்துக் கிழக்கில் புறஞ்சிறை மூதூரும் இருந்தன. கோவலன் நகருக்குள் சென்ற போது காவற்காட்டால் சூழப்பட்ட அகழியைச் சுருங்கை வீதி வழியாகக் கடந்து யவனர் காவல் நின்ற கோட்டைவாசலை அடைந்தான். மாதரி கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு நகருள் சென்ற போதும் காவற்காட்டையும் அகழியையும் கோட்டையையும் கடந்து சென்றாள். கோட்டையில் பல பொறிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அவையாவன:  

விற்பொறி, கருவிரல் ஊகம், கல்லுமிழ் கவண், பரிவுறு வெந்நெய், பாகடு குழிசி, காய்பொன் உலை, கல்லிடு கூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலை அடுப்பு, கவை, கழு, புதை, புழை, ஐயவித்துலாம், கைபெயர் ஊசி, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, முழுவிரற் கணையம், கோல், குந்தம், வேல் முதலியனவாம். 

நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரை நகருக்கு உரியதாய்ச் சிலப்பதிகாரத்தில் பயின்று வருவதால் நான்கு புறமும் கோபுரங்களுடன் கூடிய வாயிலைப் பெற்றது மதுரை நகரம் என்ற செய்தியைக் குறிப்பாக அறிகிறோம். கண்ணகி கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தாள்; மேற்றிசை வாயில் தனியளாய்ப் பெயர்ந்தாள். 

கோட்டைக்கு வெளியே இருந்த புறஞ்சிறை மூதூரில் சமயப் பெரியோர் தங்கி இருந்தனர். கவுந்தியடிகள் கோவலனிடம் இல்வாழ்வில் ஈடுபட்டோர்க்குப் புறஞ்சிறை மூதூர் தங்குதற்கேற்ற இடமன்று; என்று கூறி அவனை அகநகருக்குள் சென்று தங்குமாறு அறிவுறுத்துகிறாள். 

காவற்கணிகையர் வீதி ஒன்றும், ஆடற்கூத்தியராகிய பதியிலார்க்கு இருபெரு வீதிகளும், அங்காடி வீதியும், இரத்தினக்கடை வீதியும், பொற்கடை வீதியும், அறுவைக்கடை வீதியும், கூலக்கடை வீதியும், நால்வேறு வருணத்தார்க்குரிய தனித்தனித் தெருக்களும் அகநகரில் இருந்தன. நகரில் புகையழல் மண்டிய போது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணத்தார்க்குரிய தெருக்களிலும் இருந்த மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆய்ச்சியர் குடியிருப்பு ஒன்றும் அகநகரில் இருந்தது. மாதரி தம் இனத்தவரின் குடியிருப்புப பகுதியில் பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர் காவற்சிற்றிலில் கண்ணகியையும், கோவலனையும் குடியேற்றினாள். இடையர்களின் இருக்கை கட்டுவேலி சூழ்ந்ததாகவும், தாதெரு மன்றத்தை உடையதாகவும் இருந்தது. 

குறுந்தெருக்களும், பெருந்தெருக்களும் அமைந்திருந்த பாங்கில் இடையில் முச்சந்திகளும், நாற்சந்திகளும், முடுக்குகளும் இருந்தன. இவ்வாறு பதியெழுவறியாப் பண்புமேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது.


(இனி மதுரை பற்றிய ஆய்வேட்டு அத்தியாயம் தொடரும்)

சக



On Thu, 22 Jan 2026, 3:35 pm Dhinakaran S, <dhin...@gmail.com> wrote:
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmani...@gmail.com)

ஐயா,

face book  ல்  

பண்டைய மதுரை -மதுரைக்காஞ்சி காட்டும் இரண்டு நியமங்கள் இன்றைய மதுரையே -முனைவர் ச.கண்மணி கணேசன்

படிக்க நேர்ந்தது, மிகவும் மகிழ்ச்சி

கூடுதல் விவரம் அல்லது புத்தகம் pdf இருந்தால் தரவும்

நன்றி வணக்கம் வந்தே மாதரம்

இப்படிக்கு

தினகரன் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர், ஆலயம் காப்போம் மதுரை மாவட்டம், மதுரை

விலாசம்: - 149, பிரதான வீதி, நடராஜ் நகர், கோச்சடை, மதுரை - 625 016

கைபேசி - 9344118502  

kanmani tamil

unread,
Jan 23, 2026, 10:36:07 PM (9 days ago) Jan 23
to Dhinakaran S, vallamai

மதுரை 



0.0. முன்னுரை

0.1. சிலப்பதிகாரப் பதிகம் மதுரை நகரினை ஐந்து முறை சுட்டுகிறது.1 புகார்க் காண்டத்தில் மதுரை நகரம் ஐந்து முறை குறிக்கப்படுகிறது.2 சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டம் மதுரைக்காண்டம் என்று பெயர் பெறுகிறது. 

“நெடுஞ்செழியனோ டொருபரிசா 

நோக்கிக் கிடந்த 

மதுரைக்காண்டம் முற்றிற்று”3

என முடிகிறது. மதுரைக் காண்டத்தில் இந்நகரம் பற்றிய குறிப்பு இருபத்து மூன்று அடிகளில் காணப்படுகிறது.4 இவை தவிர மதுரைக் காண்டத்தில் ஆங்காங்கு மதுரை பற்றிய விரிவான வருணனைகள் இடம் பெற்றுள்ளன. வஞ்சிக் காண்டத்தில் மதுரை பற்றிய குறிப்பு பதின்மூன்று அடிகளில் உள்ளது. 5

____________________________________________________________________________1. சிலப்.- பதி.- அடி.- 20, 35, 39, 43, 88

2. சிலப்.- வேனிற்.- அடி.- 3; கனாத்.- அடி.- 76; நாடுகாண்.- அடி.-  41, 51, 58

3. சிலப்.- மதுரைக்காண்டம்- இறுதிக்கட்டுரை- அடி.- 18- 20

4. சிலப்.- காடுகாண்.- அடி.- 58, 139, 147, 188, புறஞ்.- அடி.- 25, 114, 132, 181; அடைக். - அடி.- 6, 112; கொலைக்.- அடி.- 9,131; ஊர்சூழ்.-  அடி.- 6, 28, 58; வழக்.- வெண்பா- 2; வஞ்சின.- அடி 37, 39 , 57, வெண்பா; அழற்.- அடி.- 101; கட்டுரை.- அடி.- 123, 136

5. சிலப்.- குன்றக்.- அடி.- 5, பாட்டுமடை- 21, 22; காட்சிக்.- அடி. -77; நீர்ப்.- அடி.- 61,84, 131; நடுகற்.- அடி.-  97, 218; வாழ்த்.-  உரைப்.- பா- 11, 13, வள்ளைப்பாட்டு- 27.

(தொடரும்)
சக 

kanmani tamil

unread,
Jan 24, 2026, 10:06:57 PM (8 days ago) Jan 24
to Dhinakaran S, vallamai

1.0. மதுரை என்ற பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு உரியதாக வழங்கி வந்துள்ளது.

 

1.1.0. வையை ஆற்றின் தென்கரையில் ஒரு மதுரை உள்ளது.1 அங்கிருந்து பதினைந்து கி.மீ. தூரத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுமதுரை என்ற சிற்றூர் உள்ளது. 

திண்டுக்கல் அருகே வடமதுரை உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாமதுரை உள்ளது. தென்னாற்காடு மாவட்டத்தில் சிறுமதுரை உள்ளது. ஆழிமதுரை என்ற பெயரில் ஒரு ஊர் இருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.2 

வடஇந்தியாவில் யமுனை நதிக்கரையில் ‘மத்ரா’ என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது. 

இலங்கையின் தென்கோடியிலும், பர்மாவிலும், மலேயாவிலும்; இதே பெயரில் ஊர்கள் உள்ளன என்கின்றனர்.3 இந்தோனேஷியாவில் மதுரை என்ற பெயரில் ஜாவா அருகே ஒரு தீவு உள்ளதென்பர்.4 

கடல் கொண்ட லெமூரியாவில் முதல் தமிழ்ச் சங்கம் இருந்த மதுரை பற்றி இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.5


2.0. பெயர் வழக்குகள் 

 

2.1.0. சிலப்பதிகார மதுரைக்கு கூடல், ஆலவாய், ஜீவன்முத்திபுரம், கன்னிபுரம், சமட்டி விச்சாபுரம், பூலோக சிவலோகம், சிவநகரம், கடம்பவனஷேத்திரம், துவாத சாந்தஸ்தலம், முடித்தலை கொண்ட சோழபுரம் முதலிய மாற்றுப் பெயர்கள் காலந்தோறும் வழங்கி வந்துள்ளன.


2.1.1.0. மதுரை என்ற பெயர் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தில்  இருந்து இன்று வரை இவ்வூருக்கு உரியதாக இலக்கியத்திலும், பேச்சிலும் வழங்கி வந்துள்ளது. 

____________________________________________________________________________

  1. பார்க்க- வரைபடம்- 3

  2. அ.சம்பந்த மூர்த்தி- வைகைக் கரையிலே- ப.- 136

  3. D.தேவகுஞ்சரி- Madurai Through The Ages- ப.- 26

  4. மேற்.& சோமலெ- மதுரை மாவட்டம்- ப.-  224

  5. களவியல் என்ற.-  நக்கீரனார்(உ. ஆ.)- ப.-ll- 5


*****************************************************************************************************************************************************************************************************************

2.1.1.1.சங்க இலக்கியங்களிலும்1, சங்க காலப் புலவர் பெயர்களிலும்2, மதுரை என்ற வழக்கினைக் காண இயல்கிறது. முத்தொள்ளாயிரம்3, மணிமேகலை4, தேவாரம்5, திருவாசகம்6, திருவிளையாடற் புராணம்7, பெரிய புராணம்8, கல்லாடம்9 முதலிய நூல்களிலும், தனிப்பாடல்களிலும்10; மதுரை என்ற பெயர் பயின்று வருகிறது.

 

2.1.1.2.பிறநாட்டார் குறிப்புகளிலும் மதுரை இடம் பெற்றுள்ளது. டாலமியும், பிளினியும் ‘மொதுரா’ என்று குறிப்பிட்டுள்ளதை ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர்.11 மெகஸ்தனீஸ் தன் பயண விவரங்களில் மதுரையை அப்பெயராலேயே அழைக்கிறார்.12 இபன் பதூதாவின் குறிப்புகளில் மதுரை கோட்டையுடன் கூடிய நகரம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.13 இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும்   

____________________________________________________________________________


  1. புறம்.- 32; மதுரைக்.- அடி.- 699; சிறுபாண்.- அடி.- 67; பரி.-  12- அடி.- 9- 10

  2. மதுரைப் பேராலவாயார்- அகம்.- 296; மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்- அகம்.- 93; மதுரைத் தத்தங்கண்ணனார்- அகம்.- 335

  3. முத்தொள்ளாயிரம்- பா.- 26

  4. மணி.- ஆபுத்திரன்.- அடி- 105

  5. தேவா.- 3ம் திரு.- பதி.- 310- பா.- 4

  6. திருவா.- போற்றித் திருவகவல்- அடி- 90

  7. திருவிளை.- கூடற்காண்டம்- நான்மாடக்கூடலான படலம்- பா- 3

  8. பெரிய.- திருஞானசம்பந்த நாயனார் புராணம்- பா - 871

  9. கல்.- பா.- 31- அடி- 11

  10. தனிப்பாடல் திரட்டு- முதல் பகுதி- அ.அ.இராமசாமிப்புலவர்(தொ. ஆ.)- ப.- 200-பா.-565

  11. V.கனகசபை- மு. நூ.- ப.- 46; D.தேவகுஞ்சரி-மு.நூ.- ப.- 24

  12. D. தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 24

  13. The Rehla Of Ibn Battuta- மாஹ்தி உசேன்(மொ.பெ. ஆ.)- ப.- 229; Foreign  Notices  Of  South India- From Megasthenes To Ma-Huan- K.A.நீலகண்ட சாஸ்திரி (ப.ஆ.)- ப.- 281


*********************************************************************************************************************************************************************************************************************

மதுரை என்றே இந்நகரைச் சுட்டுவதாகக் கூறுகின்றனர்.1


 2.1.1.3.கி.மு.இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் இந்நகரை ‘மத்திரை’ என்று அழைப்பதாக ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ளனர்.2 இடைக்காலக் கல்வெட்டுக்கள் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்று அழைக்கின்றன.3 முதலாம் சோழ பராந்தகன் தன்னை மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்றே சொல்லிக் கொள்கிறான் என்றும் எடுத்துக் காட்டியுள்ளனர்.4 


2.1.2.0.மதுரைக்கு கூடல் என்ற மாற்றுப்பெயர் சங்ககாலத்தில் இருந்து இன்று வரை வழக்கில் உள்ளது. 


2.1.2.1.சங்க இலக்கியங்களிலும்,5 சிலப்பதிகாரத்திலும்,6 முத்தொள்ளாயிரம்,7 தேவாரம்,8 திருவாசகம்,9 நாலாயிர திவ்யபிரபந்தம்,10 கல்லாடம்,11 திருவிளையாடற்புராணம்12 முதலிய நூல்களிலும் கூடல் என்ற பெயர் வழக்கைக் காண இயல்கிறது. 

____________________________________________________________________________1. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.-  23

2. மேற்.- ப.- 17- 19

3. M.E.R.14 of 1894; 540, 550 of 1916; 543 of 1922; 23 of 1941; S.I.I.- Vol.5- எண்- 448- ப.- 170

4. D.தேவகுஞ்சரி- மு. நூ.- ப.-  20

5. அகம்.- 93; புறம்.- 58; பாலைக்கலி- 35; பரி.- 20- அடி- 106; நற்.- 298, திருமுருகு. - அடி.- 71; பரி.திரட்டு- அடி- 3

6. சிலப்.- வஞ்சின.- அடி.- 39; பதி.- அடி.- 35

7. முத்தொள்ளாயிரம்- 9

8. தேவா.- 1ம் திரு.- பதி.- 7- பா.- 2; 6ம் திரு.- பதி.- 233- பா.- 1

9. திருவா.- போற்றித்திருவகவல்- அடி- 91

10. குலசேகர ஆழ்வார்- பெருமாள் திருமொழி- 3- பா- 10- அடி -3

11. கல்.- 80- அடி.- 19

12.திருவிளை.- நான்மாடக்கூடல் ஆன படலம்- பா.- 3


(தொடரும்


சக )

kanmani tamil

unread,
Jan 25, 2026, 8:11:49 PM (7 days ago) Jan 25
to Dhinakaran S, vallamai

2.1.2.2. கூடலழகர் கோயில் என்ற பெயரில் இன்றும் அப்பெயர் வழங்கி வரக் காண்கிறோம்.1


2.1.3.0. இடைக்காலத்தில் ஆலவாய் என்ற பெயர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குரியதாக வழங்கிப் பின்னர் ஊர்க்கும் உரியதாகியது.

 

2.1.3.1. “தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே 

சிந்திக்கப் பெற்றேன் நானே”2

என்று அப்பர் பாடுங்கால் நகரைக் கூடல் என்று அழைத்துவிட்டுப்; பின்னர் கோயிலையே ஆலவாய் என்கிறார். 

“...கூடல்

ஆலவாயினுள் அருளுடன் நிறைந்த 

பவளச் சடையோன்”3  

என்ற கல்லாட அடிகளிலும் ஆலவாய் கோயிலுக்குரிய பெயராக வழங்குதல் கண்கூடு. திருவிளையாடற் புராணத்தில் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் வழக்கு ஏற்பட்டமை தெரிய வருகிறது.4


2.1.3.2. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஆலவாய் அழகன்’ என்ற நாவலின் பெயரில் ஆலவாய் ஊருக்குரிய பெயராகப் பயின்று வருகிறது.5


2.1.4. சோழர் ஆட்சிக்கு உட்பட்ட போது மதுரை நகரம் ‘முடித்தலை கொண்ட சோழபுரம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது என ஆய்வாளர் எடுத்துக் காட்டுகின்றனர்.6

____________________________________________________________________________

  1. அழகர் மலையிலுள்ள பெருமாள் கோவிலினின்று வேறுபடுத்திக் காட்டவே;  கூடலழகர் கோயில் அவ்வாறு இன்றும் அழைக்கப்படுகிறது. 

  2. தேவா.- 6ம் திரு.- பதி. - 378- பா. 1

  3. கல்.- 80- அடி.- 19- 21

  4. திருவிளை.- திருவாலவாய்க் காண்டம்- திருவாலவாயான படலம்

  5. மணிவண்ணன் என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது 

  6. ஞா.தேவநேயன்- மு.நூ.- ப.- 107


*************************************************************************************************************************************************************************************************************




2.1.5. இடைக்காலத்தில் மதுரைக்கு கன்னிபுரம், கடம்பவனஷேத்திரம், சமட்டி விச்சாபுரம், சிவநகரம், பூலோக சிவலோகம், சீவன்முத்திபுரம், துவாத சாந்தஸ்தலம் எனப் பல பெயர்கள் வழங்கின.

  “அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவனம் அமர்ந்தசீவன் 

முத்திபுரம் கன்னிபுரம் திருவால வாய்மதுரை முடியா ஞானம் 

புத்திதரும் பூவுலகிற் சிவலோகம் சமட்டிவிச்சாபுரம் தென்கூடல் 

பத்திதரு துவாதசாந்தத் தலமென்று ஏதுவினாற் பகர்வர் நல்லோர்”1

என்ற திருவிளையாடற் புராணப் பாடல் மூலம் மேற்கூறிய பெயர் வழக்குகளை அறிய முடிகிறது. இப்பெயர் வழக்குகளில் சில பிற பாடல்களிலும் காணப்படுகின்றன.2 ஜீவன் முத்திபுரம் என்ற பெயரை தமிழ்விடு தூது ஆசிரியரும் எடுத்தாண்டுள்ளார்.3


2.2.0. கடல்கோளுக்குப் பின்னர் புலவர்கள் கூடிய இடமாதலால் கூடல் என்ற பெயர் வழக்கு ஏற்பட்டது. 


2.2.1. “தமிழ் கெழு கூடல்”4 என்று புறநானூறு விதந்து சொல்வதால் மேற்கூறிய கருத்து வலுவடைகிறது. ஆய்வாளரும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.5


2.2.2. கூடல் என்ற சொல்லுக்கு நதிகளின் சங்கமம் என்று பொருள் உள்ளமையை எடுத்துக் காட்டி; மதுரையும் வையையாறு வேறொரு கிளைநதியுடன் சங்கமமான இவ்விடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும்; காலப்போக்கில் அக்கிளைநதியின் போக்கு மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுவோர் உளர்.6  

____________________________________________________________________________

  1. திருவிளை.-  மதுரைக்காண்டம்- தலவிசேடப் படலம்- பா.- 21

  2. திருவிளை.-  மதுரைக்காண்டம்- தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்- பா. 67

  3. தமிழ்விடு.- கண்ணி- 136

  4. புறம்.- பா- 58- அடி.- 13

  5. ச.சாம்பசிவன்- மாநகர் மதுரை- ப.- 17

  6. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 27


******************************************************************************************************************************************************************************************************



மதுரை அருகே வையையாற்றில் இருந்து கிருதமால் என்று ஒரு நதி பிரிந்து செல்கிறதே அன்றி வேறெந்தக் கிளைநதியும் வந்து கூடியமைக்கு ஆதாரம் இல்லையாதலால் அவர் கருத்து ஏற்றுக்  கொள்ளத் தக்கதல்ல. 


2.3.0. கோட்டையிலிருந்த நான்கு வாயில்களிலும் கோபுரங்கள் இருந்தமையால் ‘மாடக்கூடல்’1 என்றும், ‘நான்மாடக்கூடல்’2 என்றும், ‘மாடமதுரை’3 என்றும் அழைக்கப்பட்டது.

 

2.3.1. மயமதம் கோட்டையின் வாயிலில் கோபுரம் இருப்பது சிறப்பு என்று பேசுகிறது.4 பண்டைத் தமிழகத்தில் மயமதமே பெரிதும் போற்றப்பட்டதென்பது இலக்கியங்கள் மூலம் புலனாகிறது. சாத்தனாரும், 

“மிக்க மயனால் இழைக்கப்பட்ட

 சக்கரவாளக் கோட்டமீங் கிதுகாண்”5

என்று மயனின் மரபு போற்றப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார். திருத்தக்க தேவரும், 

“மயனிழைத்த அம்பாவையின் வைகினாள்”6 

என்று மயனின் பெருமையை உவமையில் எடுத்தாள்கிறார். வில்லிபுத்தூராரும்,

 “சிற்ப வல்லபத்தின் மயன் முதலுள்ள தெய்வவான் தபதியர்”7 

என்று மயனை முதன்மைப்படுத்துகிறார். கம்பரும் இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த மண்டபம் மயனால் நிருமிக்கப்பட்டது என்கிறார்.8 தெய்வத் தச்சர்களில் மயனே தமிழகத்தோரால் பெருமைப்படுத்தப்படுவதாலும்; மயமதம் கோட்டை வாயிலில் கோபுரம் இருப்பது சிறப்பு என்று பேசுவதாலும்; ‘மாடக்கூடல்’, ‘நான்மாடக்கூடல்’, ‘மாடமதுரை’ என்ற பெயர்கள் கோட்டை  

____________________________________________________________________________

  1. பாலைக்கலி- பா- 35; முத்தொள்ளாயிரம்- பா- 9

  2. பரிபா.திரட்டு- 2; சிலப்.- வஞ்சின.- அடி.- 39

  3. புறம்.- 32

  4. மய.-  மயமுனிவர்- ப.- 140

  5. மணி.- சக்கரவாளக்.- அடி.- 201- 202

  6. சீவகசிந்தாமணி- பதுமையார இலம்பகம்- பா.- 145

  7. வில்லிபுத்.-  ஆதிபருவம்- இந்திரப் பிரத்தச் சருக்கம்- பா.- 18

  8. கம்பரா.- பாலகாண்டம்- கடிமணப் படலம்- பா.45

(தொடரும்)
சக 

seshadri sridharan

unread,
Jan 26, 2026, 9:21:44 AM (7 days ago) Jan 26
to vall...@googlegroups.com
நன்று 

kanmani tamil

unread,
Jan 26, 2026, 7:51:58 PM (6 days ago) Jan 26
to Dhinakaran S, vallamai

வாயில்களில் இருந்த கோபுரங்களால் ஏற்பட்ட பெயர்கள் என்பது தெளிவாகிறது. மாங்குடி மருதனாரும் மதுரையின் கோட்டை வாயிலில் கோபுரம் இருந்தது என்கிறார்.1 ஆய்வாளரும் மதுரை நகரம் இங்ஙனம் கோட்டை வாயில் கோபுரங்களாலேயே, ‘மாட’ என்னும் அடைமொழி பெற்றதெனச் சொல்லிச் செல்கின்றனர்.2


2.3.2 இந்திரன் மிகுதியான மழையைப் பெய்வித்து நகரை அழிக்க நினைத்த போது சிவபெருமான் அனுப்பிய நான்கு மேகங்கள் நான்கு மாடங்களாகி இந்திரனின் மேகங்களைத் தடுத்து நகரைக் காத்தமையால் ‘நான்மாடக்கூடல்’ என்று அழைக்கப்பட்டதெனத் திருவிளையாடற் புராணம் கூறும் கதை3 அப்பெயரின் அடிப்படையில் இடைக்காலத்தில் தோன்றியதாகும். ஏனெனில் பண்டை இலக்கியங்களில் இக்கதைக்கு ஆதாரம் இல்லை.

 

2.3.3. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு கோயில்களாலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் ஏற்பட்டதென்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.4 

மேற்கூறிய நான்கு கோயில்களில் ஒன்றான திருநடுவூர் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.5 அக்காலத்தில் இந்நான்கு கோயில்கள் மட்டுமின்றி வடதிருவாலவாய், தென்திருவாலவாய், வெள்ளியம்பலம், கரியோன் திருவுறை, கன்னி செங்கோட்டம், உயர்மகன் பள்ளி, காளிகோயில், இந்திரை, சேரன்திருத்தளி என்று பல கோயில்கள் இருந்ததாக கல்லாடம் அடுக்குகிறது.6 இத்தனை கோயில்கள் இருக்க திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்ற நான்கு கோயில்களின் அடிப்படையிலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் உருவானது என்பதற்கு ஏற்ற காரணம் காட்டப்படவில்லை.

மேற்கூறிய நான்கு கோயில்களின் வரிசையினின்றும் மாறுபட்டு 

____________________________________________________________________________

  1. மதுரைக்.-  அடி.- 355- 356

  2. V.கனகசபை- மு.நூ.-  ப.- 26; S.V.நடராசன்- தென்னவன் மதுரை- ப.-139

  1. திருவிளை.- கூடற்காண்டம்- நான்மாடக்கூடலான படலம்

  1. கலித்.- நச்சினார்க்கினியர்(உ.ஆ.)- இளவழகனார்(வி.உ.ஆ.)- ப.- 273- பா.- 92- அடி- 65

  2. பார்க்க- கரு.எண்- 5.3.5.

  3.  கல்.- பா.- 41, 59, 80


******************************************************************************************************************************************************************************************************************




கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்ற நான்கு கோயில்களின் அடிப்படையிலேயே ‘நான்மாடக்கூடல்’ என்னும் பெயர் உருவானது என்று முரண்பாடான கருத்தும் நிலவுவதால்1 கோயில்களின் அடிப்படையில் இப்பெயர் உருவாகியிருக்க இயலாதெனத் தெளிவாகிறது.

 

2.4.0. நீர்நிலைக்கு நடுவில் இருந்தமையால் ஆலவாய் என்ற பெயரும் வழங்கியது.

 

2.4.1. வையையிலிருந்து கிருதமாலை பிரிகின்ற இடத்தின் அருகில் மதுரை நகரம் இருப்பதாலும்2 ‘ஆலம்’ என்ற சொல் நீர்நிலை என்ற பொருளில் பல திராவிட மொழிகளிலும் வழங்குவதாலும்3 மேற்கூறிய கருத்து வலுப்படுகிறது. ஆய்வாளர் சிலரும் இக்கொள்கையே கொண்டுள்ளனர்.4


2.4.2. நகரழிவு ஏற்பட பாம்பு எல்லை வகுத்துக் காட்டிய பின் புதிதாக நகர் நிர்மாணிக்கப்பட்டதால் ஆலவாய் என்று பெயர் வழங்கியது என்று திருவிளையாடற் புராணம் கூறும் கதை5 இடைக்காலத்தில் தோன்றியதாகும். பண்டை இலக்கியங்களில் இக்கதைக்கு  ஆதாரம் இல்லை. 


2.4.3. ஆலவாய் என்ற சொல் வடமொழியில் ‘ஆலாஸ்ய’என்று வழங்குவதாலும், ‘ஆல் + ஆஸ்ய’ என்பது அகன்ற வாயில் என்று அங்கு பொருள்படுவதாலும், மதுரை அகன்ற வாயிலைக் கொண்டிருந்ததால் ‘ஆலவாய்’ என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்று கூறுவோர் உளர்.6 ‘ஆல்’ என்னும்  

___________________________________________________________________________

  1. கலித்.- நச்சினார்க்கினியர்(உ.ஆ.)- ப.- 273- பா.- 92- அடி.- 65

  1. பார்க்க- வரைபடம்- 3

  1. மயிலை சீனி.வேங்கடசாமி- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்- ப.-155

  2. மேற். 

  1. திருவிளை.- திருவாலவாய்க் காண்டம்- திருவாலவாயான படலம்

  1. A.V.ஜெயச்சந்திரன்- The Madurai Temple Complex- ப.- 86


****************************************************************************************************************************************************************************************************************************



அடிச்சொல் திராவிட மொழிகளிலேயே காணப்படும் போது அச்சொல்லின் வடமொழி வடிவத்திற்குரிய பொருளைக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் நீர்நிலைக்கு நடுவில் இருந்தமையாலேயே மதுரை ‘ஆலவாய்’ என்னும் பெயரைப் பெற்றது என்பது பெறப்படுகிறது.


2.5.0. தடாதகைப் பிராட்டியால் ஆளப்பட்ட மதுரை என்றும், கடம்பவனக்காடு அழிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்றும் உள்ள திருவிளையாடற் புராணக் கதைகளே1 கன்னிபுரம், கடம்பவனஷேத்திரம் என்ற பெயர்களுக்குக் காரணங்களாம்.

 

3.0. மதுரை நகரம் பாண்டியரின் தலைநகரம் ஆகும்.

 

3.1.0. “பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்”2 என்றும், 

“.....................................கௌரியர் பெருஞ்சீர்க்

கோலின் செம்மையும் குடையின் தண்மையும் 

வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் 

பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட”3

என்றும் இளங்கோவடிகள் இந்நகரைப் பாண்டியர்க்குரியதாகப் பாடியுள்ளார். 

3.1.1. “பொற்றேர்ச் செழியன் கூடலாங்கண்”4 என்றும், 

“வாடா வேம்பின் வழுதி கூடல்”5 என்றும், 

“பெரும்பெயர் வழுதி கூடல்”6 என்றும், 

“..............................................தென்னன்

 நெடுமாடக் கூடல்”7 

என்றும் பிற இலக்கியங்களும் மதுரை நகரைப் பாண்டியர்க்குரியதாகவே பாடுகின்றன. 

____________________________________________________________________________

  1. திருவிளை.-  மதுரைக்காண்டம்- திருநகரங் கண்ட படலம்& தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் 

  2. சிலப்.-  நீர்ப்.- அடி- 84

  3. சிலப்.- அடைக்.- அடி.- 2- 6

  4. நற்.- பா- 298- அடி- 9

  5. அகம்.- பா- 93- அடி- 9

  6. மேற்.- பா.- 315- அடி- 7

  1. முத்தொள்ளாயிரம்- பா- 9

(தொடரும்)

சக

kanmani tamil

unread,
Jan 27, 2026, 8:10:07 PM (5 days ago) Jan 27
to Dhinakaran S, vallamai

4.0. மதுரை நகரின் புவியியல்

 

4.1.0. நிலநெடுங்கோட்டில் 9°55’ வடக்கு பாகையிலும் ,நிலக் குறுங்கோட்டில் 78° 07’கிழக்கு பாகையிலும் மதுரை நகரம் உள்ளது.1 வையையாறு நகரின் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கிப் பாய்கிறது.2


4.1.1. கண்ணகி முதலியோர் மதுரை வந்து சேரும் போது, 

“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி 

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”3 என்று இளங்கோவடிகள் 

வையையைப் போற்றுகிறார். பின்னர், 

“மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் 

தேமலர் நறும்பொழிற் தென்கரை எய்தி 

வானவர் உறையும் மதுரை வலங்கொள”4

என்று அவர்கள் வையையாற்றை மரப்புணை மூலமாகக் கடந்து நகரை வலங்கொண்டசெய்தியைத் தருகிறார்.

“வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர் தாஅய் 

அந்தண் புனல்வையை“5

என்று நல்வழுதியாரும் மதுரை நகரம் வையைக்கரையில் இருந்ததென்றும்; ஆற்றின் அலைகள் கோட்டைச் சுவரை மோதிச் சென்றன என்றும் பாடியுள்ளார். 


4.1.3 இடைக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களும் வையை மதுரைக்கு அகழி போல் ஒரு புறத்தில் இருந்ததென்று கூறியுள்ளன.6

____________________________________________________________________________


1. பார்க்க- வரைபடம்- 5

2. பார்க்க- வரைபடம்- 3

3. சிலப்.- புறஞ்.- அடி.- 169-170

4. மேற்.- அடி.- 179- 181

5.பரிபா.- 12- அடி.- 9- 10 

6. திருவிளை.- மதுரைக்காண்டம்- திருநகரச் சிறப்பு- பா- 17


***************************************************************************************************************************************************************************************************************************





5.0. காலந்தோறும் நகரளவு 


சிலப்பதிகாரம் காட்டும் மதுரை இன்றைய மதுரையின் மையப்பகுதியில்1 ஒரு கூறினை மட்டும் உள்ளடக்கியதாகும். சங்க காலம் தொட்டு இன்றுவரை மதுரை தன் அளவில் விரிந்துள்ளதே அன்றி அதன் மையப்பகுதியின் இருப்பிடத்தில் மாற்றம் நிகழவில்லை.

 

5.1.0. இன்றைய மதுரையின் மையப்பகுதியில் மாசிவீதியைச் சுற்றி உள்ள குடியிருப்புகளை அடுத்து நாலாபுறமும் உள்ள மூன்று வீதிகளும் கி.பி.1837ம் ஆண்டு ஆளுநர் ப்ளாக்பர்ன் உருவாக்கியவை. அதற்கு முன் மாசிவீதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை அடுத்து உட்கோட்டைச் சுவர் இருந்தது. அதை அடுத்து புறக்கோட்டைச் சுவரும்; அதைச் சூழ்ந்த அகழியும் இருந்தன. இன்றைய வெளிவீதிகளே அகழிகளாக இருந்தன. பெருமாள் மேஸ்திரி வீதிகளும், மாரட் வீதிகளும் அவற்றைச் சூழ்ந்த குடியிருப்புகளும் இருகோட்டைச் சுவர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகளாகும். 


5.1.1 ஆளுநர் ப்ளாக்பர்னின் முயற்சியால் நகரம் விஸ்தரிக்கப்பட்ட வரலாற்றை விரிவாகக் கூறும் மாவட்ட கெசட்  கோட்டைச் சுவர்கள் இடிக்கப்பட்டு வெளியே இருந்த அகழி தூர்க்கப்பட்டது என்கிறது. அவ்வாறு தூர்க்கப்பட்ட அகழியின் மேல் உருவான வீதிகளே வெளி வீதிகள் எனப் பெயர் பெற்றன என்றும்; உட்கோட்டைச் சுவருக்கும், புறக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நாற்புறமும் இருபெரு வீதிகள் அமைந்தன என்றும்; அவை நகராக்கப் பணியை மேற்பார்த்த வருவாய்த் துறை அளவையாளர் பெயராலும், தலைமைப் பொறுப்பேற்றிருந்த மேஸ்திரி பெயராலும், முறையே மாரட் வீதிகள் என்றும், பெருமாள் மேஸ்திரி வீதிகள் என்றும் அழைக்கப்பட்டன என்றும் கூறுகிறது.2

____________________________________________________________________________

1. நகர் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும், அதைச் சுற்றி நாலாபுறமும்   உள்ள ஆடி, சித்திரை, ஆவணிமூல, மாசி, வெளிவீதிகளும் மட்டுமே மையப் பகுதியாகக் கருதப்படுகின்றன. 

2. B.S.Baliga- Gazetteers Of India- Madras- Madurai- ப.- 395- 396



**********************************************************************************************************************************************************************************************************8





5.1.2. வருவாய்த்துறைக்கு ஆளுநர் ப்ளாக்பர்ன் அனுப்பிய கடிதங்களின் பகுதிகளும் மேற்கூறிய கருத்துக்களை ஆதரிக்கின்றன. ஆய்வாளர் இக்கடிதங்களின் பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.1


5.1.3. கோட்டைச் சுவர்கள் இடிக்கப்படுவதன் முன்னர் அவற்றின் கிழக்குப்பகுதி ஒன்று ஓவியமாக வரையப்பட்டு லண்டனில் படப்பிரதி ஆக்கப்பட்டுத் தற்போது தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.2 இப்படப்பிரதி காட்டும் கோட்டைப்பகுதி இன்றைய மதுரை மையப் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள எஞ்சிய கோட்டைப் பகுதியின் தோற்றத்தைப் பெரிதும் ஒத்துள்ளது. 


5.1.4. பழைய மதுரை கெசட்டில் இடம் பெற்றுள்ள மதுரையின் வரைபடத்தில் மதுரைக் கோட்டை காட்டப்பட்டுள்ளது.3 இப்படத்தில் கோட்டைக்குள் நடுவில் கோயிலும், சுற்றிலும் சித்திரை, ஆவணிமூல, மாசி வீதிகளும் மட்டுமே அமைந்திருக்கக் காண்கிறோம்.4 

அக்கோட்டையின் வடக்குப் புறத்தில் இடையில் ஒரு திருப்பம் விரிகோணத்தில் உள்ளது. இன்று கோட்டை இல்லையெனினும் சற்றி எடுக்கப்பட்ட வடக்குவெளி வீதியின் இடையில் அவ்வளைவான அமைப்பை இனம் காண இயல்கிறது.5 மாடர்ன் லாட்ஜ் எனப்படும் நகர்ப் பேருந்து நிற்குமிடத்தை அடுத்து வடக்குவெளிவீதி வடக்கு முகமாகத் திரும்பி சில கெஜதூரம் சென்றபின் கிழக்கு முகமாகத் திரும்புகிறது. மதுரை மாவட்ட மைய நூலகம் இத்திருப்பத்தின் முடிவிலேயே இருந்து இயங்குகிறது. 

அது மட்டுமின்றி வரைபடத்தில் இருகோட்டைச் சுவர்களும்  தெற்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து வடக்கிலும், வடக்கிலிருந்து கிழக்கிலும் 90° நேர்கோணத்தில் திரும்புகின்றன. 

____________________________________________________________________________


  1. J.பாத்திமா- மதுரை நகரத் தெருப்பெயர்கள்- ப.- 184- பின்னிணைப்பு 

  2. பார்க்க- வரைபடம்- 2

  3. W.Francis- Madras District Gazeteers- Madurai என்ற நூலில் இடம்பெற்றுள்ள கோட்டையின் மறுபதிப்பை வரைபடம்- 3ல் காண்க. 

  1. பார்க்க- வரைபடம்- 3

  1. வளைவிற்கான காரணம்- பார்க்க- கரு.எண்- 5.3.7.1


(தொடரும்)

சக

kanmani tamil

unread,
Jan 28, 2026, 7:21:27 PM (4 days ago) Jan 28
to Dhinakaran S, vallamai
                                                              வரைபடம்-2 

image.jpeg

kanmani tamil

unread,
Jan 30, 2026, 8:45:08 PM (2 days ago) Jan 30
to Dhinakaran S, vallamai
                                    வரைபடம்-3 

image.jpeg
(தொடரும்) சக

kanmani tamil

unread,
Jan 31, 2026, 8:34:33 PM (yesterday) Jan 31
to Dhinakaran S, vallamai
ஆனால் கிழக்கிலிருந்து தெற்கில் திரும்பும் பொழுது மட்டும் நேர்கோண வளைவைக் காண இயலவில்லை. இன்றும் மதுரை நகரின் வெளிவீதிகளைச் சுற்றி வரும்பொழுது கிழக்கிலிருந்து தெற்குவெளி வீதி வரும் பாதை மட்டும் நேர்கோணத்தில் திரும்பாமல் சரிவாக வளையும் மூலையமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் கோட்டை இடிக்கப்பட்டுத் தூர்த்த அகழிகளே வெளிவீதிகள் ஆயின என்ற கருத்து உறுதிப்படுகிறது.

 

5.1.5. கீழவாசல், தெற்குவாசல் என மதுரை நகரின் வெளிவீதிகளில் சில நகர்ப்பேருந்து நிற்குமிடங்கள் பெயர் பெறுகின்றன. இப்பெயர்கள் கோட்டை வாசல்கள் இருந்த இடங்களை நினைவுபடுத்துகின்றன. இதனால் வெளிவீதிகள் கோட்டைக்குவெளியே அமைந்த வீதிகள் என்ற கருத்து மீண்டும் வலுப்படுகிறது. 


5.2.0. கி. பி. 1837ம் ஆண்டு தகர்க்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். ஆளுநர் ப்ளாக்பர்ன் காலம் வரை இக்கோட்டை அமைப்பில் மாற்றம் பெறவில்லை.

 

5.2.1. பதினாறாம் நூற்றாண்டில் அரியநாத முதலியின் துணையோடு விஸ்வநாத நாயக்கர் பாண்டியர்களின் கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்து விட்டுப் புதிதாக எழுபத்திரண்டு கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டைச் சுவரையும், புறக் கோட்டைச் சுவரையும் எழுப்பித் திசைமாணியின் நான்கு மூலைகளிலும் நான்கு வாயில்களை நிறுவினார். ஆற்றின் போக்கை  அடுத்த குறுங்கோணத்தில் இவ்வமைப்பு இருந்தது. சுற்றிலும் நான்கு திசைகளிலும் அகழி இருந்தது என்று மதுரை மாவட்ட கெசட் கூறுகிறது.1 ஆய்வாளரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.2

____________________________________________________________________________


  1. W.Francis- மு.நூ.- ப.- 266; B.S.Baliga- மு.நூ.- ப.- 48, 63

  2. J.P.L.Shenoy- Madurai The Temple City- ப.- 10




***********************************************************************************************************************************************************************************************************************




நாயக்கர் காலக் கோட்டை ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை வலிமையுடன் நின்று நகருக்குச் சிறந்த பாதுகாப்பைத் தந்தது. அவ்வப்போது செப்பனிடப்பட்டதே அன்றி அது மாற்றப் படவில்லை என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன. நாயக்கர் ஆட்சியை அடுத்து வந்த நெவாயத்துக்கள் பல பாளையக்காரர்களைக் கைப்பற்றி மதுரைக் கோட்டைக்குள் சிறை வைத்தனர்.1 

கி. பி. 1751ம் ஆண்டு மாயனாவின் மைத்துனனான ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான்.2 

முகமது அலி மதுரைக்கோட்டை சிதைந்த நிலையில் இருந்ததால் எளிதில் கைப்பற்றி விடலாம் என எண்ணினான். ஆனால் கோட்டை மிக வலிமையுடன் இருந்ததால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை.3

 ஆங்கிலேயர் தளபதி கோப் தலைமையில்; கோட்டையின் வலிமையை அறியாது; மூன்று மாதகாலம் முற்றுகையிட்டுப் பல  முயற்சிகள் செய்தும்; கோட்டையில் ஏறவோ; அதைத் தகர்க்கவோ இயலாமல் பின்வாங்கினர்.4 

கி.பி.1752ல் ஆலம்கான் மாயனாவிடம் மதுரைக் கோட்டையை ஒப்படைத்துச் சென்றான். மாயனா மைசூரிலிருந்த கூகூசாகிபிடம் கோட்டையை விற்றுவிட்டு திருமோகூர் சென்று விட்டான். கூகூசாகிப் மதுரைக் கோட்டைக்குள் நுழைந்து விட்டது கேட்டு சேதுபதியின் ஆட்களும், சிவகங்கைச் சமீன்தாரும் பெரும்படையுடன் மதுரையை முற்றுகை இட்டனர். சில மாதங்கள் கழித்து கூகூசாகிப் கோட்டைக்கு உள்ளே இருக்க இயலாது; சேதுபதியிடம் அதை ஒப்படைத்து விட்டு திண்டுக்கல் சென்று விட்டான். ஒன்றரை ஆண்டுகள் கழித்து மாயனா; மகாதிமியா, நபிகான் முதலியோருடன் சேர்ந்து மீண்டும் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான். கூகூசாகிபும், சேதுபதியைச் சேர்ந்த வெள்ளையன் சேர்வைக்காரரும் ஆறுமாத காலம் அனுப்பானடியில் பாடியமைத்துத் தங்கி முற்றுகையிட்டும் கோட்டையைக் கைப்பற்ற இயலாமல் மாண்டனர்.5 

கி.பி.1755ன் தொடக்கத்தில் முகமதுஅலி மதுரையில் அமைதி  

____________________________________________________________________________

  1. K.Rajayyan- History  Of Madurai-1736-1801- ப.- 72

  2. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 207

  3. K.Rajayyan- மு.நூ.- ப.- 108

  4. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 207- 208

  5. மேற். 



**************************************************************************************************************************************************************************************************************************




நிலவ தளபதி ஹெரானின் தலைமையில்; பெரும்படையை அனுப்ப1 கோட்டையின் பாதுகாப்பு தளவாடங்களில் கவனமில்லாது இருந்த மாயனா கோயில்குடி சென்று தஞ்சமடைந்து விட்டான். 

முகமது யூசுப்கான் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டைக்குள் நுழைந்தான்.2 கி.பி.1766 யூசுப்கான் மதுரைக்கோட்டையைச் செப்பனிட்டு பலப்படுத்தினான்.3 

யூசுப்கான் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பிவிடவே கி.பி.1757 கெய்லார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் மதுரைக் கோட்டையை இருமுறை முற்றுகையிட்டும் பலன் கிட்டவில்லை.4 

கான்சாகிப் மீண்டும் மதுரைக் கோட்டையைச் செப்பனிட்டான்.5  

கி.பி.1757ன் இறுதியில் ஹைதர்அலி பல நாட்கள் கோட்டையை முற்றுகையிட்டும் அதன் பலத்தைப் பார்த்துத் தாக்க முற்படாமல் பின்வாங்கினான்.6 

கி.பி.1763ல் தளபதி பிரஸ்டனின் தலைமையில் பெரும்படை ஒன்று மதுரையைத் தாக்கியது.7 தோல்வியைச் சந்தித்தது .

கி.பி.1763ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி தளபதி மான்சன் தலைமையில் நடந்த முதல் தாக்குதல் நினைத்ததை சாதிக்க இயலாது  பின்வாங்கியது.8 கோட்டையைச் சுற்றிலும் இரண்டரை மைல் தூரம்  எங்கும் பாடியமைக்க இயலவில்லை. சுற்றிலும் 1500கெஜதூரம் வரை கூடாரம் அமைக்கவும் முடியவில்லை. அதற்கப்பால் தங்கி; பின்னர் அகழியைக் கடக்க இயலாது தவித்தனர்.9 

கி.பி.1763ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்துநான்காம் நாள் ஆங்கிலப்படையும், வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக் கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை.10 

____________________________________________________________________________

  1. மேற்.- ப.- 209

  2. மேற். 

  3. மேற்.& K.இராஜய்யன்- மு.நூ.- ப.- 170

  4. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 210& K.Rajayyan- மு.நூ.- ப.- 180- 183

  5. K.Rajayyan- மு.நூ.- ப.- 189

  6. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 210- 211

  7. மேற்.

  8. மேற். & K.Rajayyan- மு.நூ.- ப.- 225

  9. D.தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 212

  10. K.Rajayyan- மு.நூ.- ப.- 225- 226 


(தொடரும்) சக 

kanmani tamil

unread,
8:25 PM (2 hours ago) 8:25 PM
to Dhinakaran S, vallamai

கி.பி.1764  ஜூன் மாதம் மேஜர் டொனால்ட் காம்பெல் தன் படையுடன் பெருமுயற்சி செய்தும் தோற்றுப் பின்வாங்கினார்1 கான்சாகிபை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சுத்தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது.2

கி. பி. 1800-1801ல் நடந்த தென்னிந்தியக் கலகத்தின் போது ஊமைத்துரை தலைமையிலான புரட்சிப்படை மதுரையை முற்றுகையிட்டுப் பின்வாங்கியது.3 

இதனால் நாயக்கர் காலக் கோட்டை ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை மாற்றத்திற்கு உள்ளாகாமல்  வலிமையுடன் இருந்தது என்பதை ஆய்வாளரும் கூறியுள்ளனர்.4


5.2.3. மேற்கண்ட முடிவினால் மங்கம்மா சத்திரம் என்ற பெயரில் மேற்கு வெளிவீயில் இருந்து இயங்கும் சத்திரம் ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட து என்ற பொதுமக்களின் நம்பிக்கை தவறானது என்பது புலனாகிறது. 

இச்சத்திரத்தின் இருப்பிடம் புறக்கோட்டைச் சுவரை ஒட்டிய பகுதியாகிறது. நாயக்கர் காலக் கோட்டையில் உட்கோட்டைச் சுவருக்கும் புறக்கோட்டைச் சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்த முள்மரக்காடும், புதரும் மண்டியிருந்தமையால் பகைவர்கள் புறக்கோட்டைச் சுவரில் ஏறினாலும் உட்கோட்டைச் சுவரை எட்டுவது இயலாததாக இருந்தது என்பது வரலாற்று  ஆய்வாளர் புலப்படுத்தும் செய்தியாகும்.6 இன்றைய மாரட் வீதிகளும், பெருமாள் மேஸ்திரி வீதிகளும் கி.பி. 1837ம் ஆண்டு வரை அடர்ந்த முள்மரக்காடாதலால் மங்கம்மாள் சத்திரம் கோட்டை இடிக்கப்பட்ட பின் எழுந்த அமைப்பு  ஆகும். எழுபத்திரண்டு கொத்தளங்களுள் ஒன்றே சத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது அதன் உட்கட்டமைப்பைப் பார்க்கும் போது புலனாகிறது. 

____________________________________________________________________________

1. K.Rajayyan- மு.நூ.- ப.- 227

2. D. தேவகுஞ்சரி- மு.நூ.- ப.- 212

3. V.கந்தசாமி- மதுரை வரலாறும் பண்பாடும்- ப.- 209; K.Rajayyan- மு.நூ.- ப.- 209

4. V.கந்தசாமி- மு.நூ.- ப.- 91

5. J.P.L.Shenoy- மு.நூ.- ப.- 15-16

6. K.Rajayyan- மு.நூ.- ப.- 180

**********************************************************************************************************************************************************************************************************************




5.3.0. கி.பி.1559ம் ஆண்டிற்கு முன்பு வரை இடைக்கால இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக்கோட்டை இன்றைய ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தது. கோட்டைச் சுவரை அடுத்து வெளியே அகழியும், அதற்கப்பால் புற நகர்ப்பகுதிகளும் இருந்தன.விஸ்வநாத நாயக்கர் மாசி வீதிகளை உருவாக்கும்போது இருந்தையூர், நடுவூர், கரியோன் திருவுறை, காளி கோயில், ஹரிஹரபுத்திரர் கோயில், தென்திருவாலவாய், சப்த கன்னியர் கோயில் முதலிய புறநகர்ப் பகுதிகளை இணைத்தார். வடதிருவாலவாய் மாசிவீதிக்குள் அடங்காததால் அது வடக்குப்  புறக்கோட்டைச் சுவரின் உட்புறத்தை ஒட்டி அமைந்தது.

 

5.3.1. இன்றைய மதுரையின் அம்மன் சன்னிதிக்கு எதிரே கீழ ஆவணிமூல வீதிக்கும், கீழமாசிவீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கல்லாலான உயர்ந்த வாயில் போன்ற அமைப்பு விட்டவாசல் என்று பெயர் பெறுகிறது. இதில் காணப்படும் பதிப்புக் கல்வெட்டு இது பாண்டியர் காலக்கோட்டையின் எஞ்சிய பகுதி என்று சொல்வதாக ஆய்வாளர் கூறியுள்ளனர்.1 அழிக்கப்பட்ட பாண்டியர் கோட்டையில் விடுபட்ட வாசல்; ஆதலால் விட்டவாசல் என்று பெயர் பெற்றதெனக் காரணமும் கூறுகின்றனர்.2


5.3.2 மாசி வீதிகளுக்கும் ஆவணிமூல வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பாண்டியர்களின் அகழி இருந்து தூர்க்கப்பட்டமை தெருப் பெயர்களின் மூலம் தெளிவாகிறது. மேலமாசி வீதிக்கும்; மேல ஆவணிமூல வீதிக்கும் இடையில் பாண்டியன் அகிழ் சந்து என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது. அகழி என்ற சொல்லே அகிழ் என மாற்றம் பெற்றுள்ளது3 என ஆய்வாளர் கருதுகின்றனர்4. நிரப்பப்பட்ட அகழிப்  பகுதி அதன் இரு புறங்களிலும் நிலப்பகுதியை விட பள்ளமாக இருப்பது இயல்பு. தெற்குப்  பாண்டியன் அகிழ் தெருவிலிருந்து 

____________________________________________________________________________

  1. V.கந்தசாமி- மு.நூ.-  ப.- 90

  2. S.V.நடராசன்- மு.நூ.- ப.- 101& A.V.ஜெயச்சந்திரன்-மு.நூ.- ப.- 172 

  3. இது உயிர் இடம் பெயரல் என்னும் உருபொலியன் விதியில் அடங்கும்; ஆதலால் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.

  4. A.V.ஜெயச்சந்திரன்- மு.நூ.- ப.- 172- அ.கு. 


*******************************************************************************************************************************************************************************************************************************



பிரியும் கம்மாளத்தெரு பள்ளமான அகிழ் தெருவை நோக்க மேடாக இருந்ததால் மேட்டுக் கம்மாளத்தெரு என்று வழங்குகிறது. 

மாநகராட்சித் தெருப் பெயர்ப் பட்டியலில் உள்ள சங்கீத விநாயகர் கோயில் தெரு, சங்கீதவித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளை சந்து1 முதலியவை முறையே பள்ளத்தெரு என்றும், பூக்காரப் பள்ளத்தெரு என்றும் வழங்கின என்றும்; அதற்கு முன்னர் அவை வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு என்ற ஒரே பெயரைப் பெற்றிருந்தன என்றும் கருத்து நிலவுவதை எடுத்துக் காட்டுகின்றனர்.2 

பிற ஆய்வாளரும் அகிழ் தெரு என்பது பாண்டியர் கோட்டையை அடுத்த அகழி இருந்த இடம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.3 இதனால் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலக்கோட்டையும் அகழியும்; மாசிவீதிக்கும் ஆவணிமூல வீதிக்கும் இடையில் இருந்ததெனப் புலப்படுகிறது. 


5.3.3.0. குலசேகர பாண்டியன் மணவூரில் இருந்து ஆண்டு கொண்டு மதுரையில் கோட்டையும், சூழ அகழியும் ஏற்படுத்திப் பின்னர் ஹரிஹரபுத்திரர் கோயில், சப்தமாதர் கோயில், திருமால் கோயில், காளிகோயில் முதலியவற்றை முறையே; கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் கட்டினான் என திருவாலவாயுடையார் கோயில் திருப்பணி மாலை பாடுவதை முன்னையோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.4 இக்கோயில்கள் நான்கையும் இன்றைய மாசி வீதிகளில் இனம் காண இயல்கிறது. 


5.3.3.1. கீழமாசி வீதியில் இன்று ஐயனார் கோயில் என்ற பெயரில் உள்ள சிறிய அமைப்பு இடைக்காலப் பாண்டியர் கட்டிட அமைப்பைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது என்றும்; இது பாண்டியர் கட்டிய

____________________________________________________________________________


  1. பார்க்க- வரைபடம்- 4

  2. J.பாத்திமா- மு.நூ.- ப.- 59, 79, 83, 109, 111, 123, 147.

  3. G.சங்கரராஜுலு- “A Note On The Location Of The Ancient City Of Madurai”- Historia- Vol.- ll - ப.-185

  4. J.M.சோமசுந்தரம்- பாண்டியர் பெருமாட்சி- ப.- 46


(தொடரும்) சக 
Reply all
Reply to author
Forward
0 new messages