நற்றிணை- 355
தோழி தலைவனிடம் கூறுகிறாள்...
"புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவாய் உறுக்கும்
கைபோல் காந்தட்
குலைவாய் தோயும்
கொழுமடல் வாழை
அம்மடல் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம்சில் ஓதிஎன் தோழி
தோட்துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும் அது நீ
என்கண் ஓடி அளிமதி
நின்கண் அல்லது
பிறிதுயாதும் இலளே"
- ஆசிரியர் அறியப்படவில்லை.
பொருள்:
மகனைப் பெற்றெடுத்த
பூப்போன்ற கண்ணை உடைய தாய் தன் கையால் தன் முலையைப் பற்றி
மகனுக்குப் பாலூட்டுவது போலக்; காந்தளின்
கைவிரல் போன்ற பூவானது
வாழைப் பூவைப் பற்றும்.
கொட்டும் அருவியில் இருந்து தெறிக்கும் நீர் வாழைப்பூவின் மடலில் இருந்து இறங்க; அதைச் செம்முக மந்தி பருகும்; வளமிகுந்த நாட்டின் தலைவனே! நீண்ட காலம் நண்பராயினோர் கொடுத்தால்; கொடுப்பது நஞ்சு எனத் தெரிந்தாலும் சிறந்த நாகரிகர் அதனை உண்பர். இது உலகியல்பு. நீ வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உன் மனைவியின் தோளில் துயிலாவிட்டாலும்; அவள் மீது இரக்கம் காட்டி அவளைத் தழுவிக் கொள். நீண்ட காலம் பழகிய என் சொற்கள் உனக்கு நஞ்சு போலத் தோன்றினாலும்; நாகரிகமாக அதை ஏற்றுக் கொள்வாயாக.
உள்ளுறை விளக்கம்:
செம்முக மந்தி = செம்மையான; பண்பிற் சிறந்த தலைவி
அருவித் தீநீர் = தலைவனின் இளமை நலம் (ஆண்மைச் சிறப்பு)
உனது நாட்டில் நீர்வளம் மிகுந்து இனிமை பொருந்திய அருவி கொட்ட; அந்நீர் வாழைப் பூவின் மடலில் பட்டுத் தெறிக்கச்; செம்முக மந்தி அங்ஙனம் சொட்டும் நீரைப் பருகித் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.
(மகப் பெற்ற தலைவியோடு நீ பாயலில் பொருந்தித் துயில இயலாதாயினும்;) உன் மனைவியை அன்போடு தழுவிக் கொண்டாலே அவள் ஆவல் தீர்ந்து இன்புறுவாள்.
வாழை குலைதள்ள; அக்குலையின் கொழுமடல் பூவைக் காந்தள் பொருந்திய காட்சி ஈன்றவள் தன் கைகளால் மகவுக்கு முலைவாயுறுப்பது போலத் தோன்றும்.
சிறப்பான செய்திகள்:
முதன்முதலாகத் தாயிடம் பாலருந்த முற்படும் குழந்தைக்குத் தாய் துணை செய்வதையே இவ்வுவமை காட்சிப் படுத்துகிறது.
பிறந்த குழந்தையின் வயிற்றுள் இருக்கும் காட்டுப்பீ 'பசேர்' என வெளியேறி; முடிந்த பின்னர்... பிறந்து சில மணி நேரம் கழித்தே மகவுக்குத் தாய்ப்பால் ஊட்ட முற்படுவது சென்ற நூற்றாண்டு வரை வழக்கில் இருந்த பாரம்பரிய நடைமுறை ஆகும். அதற்கு முன்னர் சேனை என்று பெயர் பெறும்; துளியளவுப் பூண்டு ஊறிய சர்க்கரை நீரே கொடுப்பர். தற்போது இந் நடைமுறை மாறிப் பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்ட மருத்துவர் வற்புறுத்துகின்றனர்.
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
என்ற குறள் கருத்து சில சொல் மாறுபாடுகளோடு பாடலில் இடம் பெற்று இருப்பதால்; 'நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாக ரிகர்' என்ற தொடர் ஒரு சொலவடையாகப் பண்டைத் தமிழகத்தில் வழங்கிய உண்மை புலப்படுகிறது.
சக