ஆய்த எழுத்து - ஃ

75 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Jul 26, 2015, 6:46:53 AM7/26/15
to வல்லமை

நெருங்கணக்கில் உயிரெழுத்துக்களின் இறுதியில்  இடம்
பெறுவது ’ஃ’ ,இது ஆய்த எழுத்தாகும்.

இந்த ஆய்த எழுத்துக்கான பிற பெயர்கள் :
1)தனிநிலை
2)முப்புள்ளி
3)முப்பாற்புள்ளி
4) அஃகேனம்

இது உயிரெழுத்தா ? மெய்யெழுத்தா ?
மாத்திரை யாது ? பலர் பேசியுள்ளனர். ஒரு தொகுப்பாகப் பார்க்கலாம்.

ஆய்தம் தொடர்பான கருத்துகளின் தொகுப்பு  -

* ஆய்தம் இயல்பாக அரை மாத்திரை அளவுகொண்டது;
  ஒலிப்பில் கால் மாத்திரையாகக் குறுகும். ‘ஆய்தக் குறுக்கம்’
  எனவும் பெயர் பெறும். பத்து வகைச் சார்பெழுத்துக்களில் ஒன்று.

*ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.

*எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய் போலக்
  கொள்ளப்படும்.

*ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.

*குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும்.
  இதுவே ஆய்தத்துக்கு இடம்.

*ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.

*மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக்
 கொள்கின்றனர்.

*ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப்
பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது.

முப்பாற் புள்ளியைக் காரண இடுகுறிப் பெயராகக் கருதலாம் -
"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)

’ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்பார்
இளம்பூரணர்.

அஃகேனம் சார்பெழுத்தாவதால் ஆச்ரிதம் [சார்பு] எனும் வடசொல் ஆய்தம் என
மாறியிருக்கலாம் என்பார் மு. இராகவ ஐயங்கார் அவர்கள். இதற்கு மாற்றுக் கருத்தை
முன்வைப்பவர் செந்தமிழ்ப் பத்திராதிபர் திரு நாராயண ஐயங்கார் அவர்கள் -
'அ' அகரம் எனப்பட்டது போல் 'ஃ' அஃதம் எனப்பட்டது. 
ஃ க்கு யகர மெய்யொலி உண்டு.
'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'

எனும் குறளில்  எஃகதனில் என்பது, செய்க என்ற சொல்லின் எதுகையாக வந்திருப்பது காண்க.' ஃ' க்கு யகர மெய்யொலி இயல்பானதே. 
அந்த வழியில் அஃதம் அய்தம் ஆகிப், பின் நீண்ட கால வழக்கில் ஒடுஉருபு, ஓடுருபாகவும், அதுவுருபு, ஆதுருபாகவும் நீண்டிருப்பது போல, 
முதநிலை நீண்டு, ’ஆய்தம்’  என்றாகியிருக்க வேண்டும்

ஆய்தத்தின் ஆதிக்கம் -

அஃதை ( சோழ இளவரசி ஒருத்தி), அஃகம் ( grain),  அஃகரம் (வெள்ளெருக்கு),
அஃகல் ( சுருங்குதல்),  அஃகு (ஊறுநீர்),    அஃகுள் (அக்குள்),  அஃது (அது), 
இஃகுதல் (இழுத்தல்),  இஃது (இது),  உஃது (உது), எஃகம் (கூர்மை),
எஃகு (உருக்கு), எஃகுதல் (நெகிழ்தல்), ஒஃகல் (ஒதுங்குதல்), கஃசு (காற் பலம் எடை), 
கஃறு (கறுத்தது), சஃகுல்லி (சிற்றுண்டி வகை), சுஃறு (ஓலை எரியும் போது உண்டாகும் ஓசை),  
பஃது (பத்து), பஃதி (பகுதி),  பஃறி (படகு- பட்டினப்பாலை), வெஃகல் (விரும்புதல்)

[நன்றி : இணையம்]


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages