“இழுமென இழிதரும் அருவி / வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே” (மேற்.)
என்கிறார் புலவர். அருவி வழிந்தோடும் வானளவு உயர்ந்த மலையின் சாரலில் இருந்த தோன்றிக் காட்டின் தலைவன் என்று பொருள் கிடைக்கிறது.
கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப் புவியியலுக்குப் பொருந்தும். அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம்.
தாம் கண்ட ஏடுகளில் ஐயூர் என்பது; திருச்சிக்குக் கிழக்கே உள்ள சிற்றையூர் என்றும், உறையூர் என்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உவே.சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார் (புறநானூறு- உ.வே.சாமிநாதையர்- ப.ஆ.- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது- பாடினோர் வரலாறு- ப.23). ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் உறையூர் எனில் அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியனைத் தேடி வந்தமைக்குத் தகுந்த காரணமில்லை. அது மட்டுமின்றி; அவரது வல்லாண் முல்லைத் துறையில் அமைந்த பாடலில் தன் சொந்த வாழ்விடத்து நிகழ்ச்சியைப் பாடுவது போலவே பாடியுள்ளார் (புறம்.314). முல்லைத்திணை சார்ந்த; அதாவது காடு சார்ந்த ஊரில் நிகழ்ந்த போரையே விவரிக்கிறார். அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற வீரன் பற்றிப் பாடும் போது;
“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.)
என்பதால் அவர் புன்செய்க் காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றது.
ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற். ப.468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. அகண்ட காவிரிக்கு அருகில் இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.
தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற். பாடப்பட்டோர் வரலாறு- ப.71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;
“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா.399)
மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர் நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.
ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில் ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.
கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.);
தமிழ் விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப்பாலையும் (அடி.63-66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா.5-9; கடலாடு காதை- அடி.142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.
தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர் தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த தாழ்வரையிலும் இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார்.
இனி சமூகச் செய்திக்கு வருவோம்:
தாமான் தோன்றிக்கோனைப் புகழும் போது அவனை 'அறவர் அறவ; மள்ளர் மள்ள; மறவர் மறவ; தொல்லோர் மருக' எனக் கூறக் காரணம்... அன்றே தமிழ்ச் சமூகம் ஒரு பன்மைச் சமூகமாக இருந்தமையே. மண்ணின் மைந்தர் ஆகிய திணைமாந்தரோடு...
வந்தேறிய அறவர் ஆகிய சமணர் ஜைனத்தையும் பௌத்தத்தையும் பின்பற்றுவோராய்; மூன்றாம் வருணத்தார் ஆகிய வணிகராகவும் நெல் வேளாண்மையில் ஈடுபட்ட நான்காம் வருணத்தைச் சேர்ந்த வேளாளராகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் நிலவுடைமையாளர்கள் குறுநில மன்னராய் ஆண்டனர். பல குழுக்களாக வாழ்ந்த மறவர் வயிற்றுத் தீத் தணிய வழிப்பறியிலும் ஆநிரை கவர்வதிலும் ஈடுபட்டு இருந்தாலும்; ஆநிரை மீட்டுத் தரும் பெருமைக்கு உரிய வீரராய் வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் பணி ஆற்றிய வீரர் ஆவர் (அவர்கள் திணைமாந்தர் ஆகிய மழவரினின்றும் வேறுபட்டவர் என இதே இழையில் முன்னர் கண்டோம்.). மள்ளர் நன்செயில் வேளாண்மைக்குத் துணை நின்று; தமக்கெனத் தனி நாட்டார் வழக்காறுகளோடு வாழ்ந்தனர். இத்தகு பல்வேறு சமூகத்தவர்க்கும் தாமான் தோன்றிக்கோன் தலைவன் ஆகும் தகுதி பெற்றவன் என்று போற்றுகிறார். அந்த அளவிற்கு அவன் எல்லாப் பெருமையும் உடையவன் என்பது கருத்து.
(முற்றும்) சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvkKEpgRNbv1S3TEjfC_-Cqn%2BbJbm8fEXNQfW%3D7WYOpig%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6j7Y7Q7-P0ghgvQj%2Bdt_vUYLSUNCj5soXd9nK5ChPqzXg%40mail.gmail.com.