பாடல் சொல்லும் செய்தி

203 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 22, 2025, 8:37:35 PM12/22/25
to vallamai
தொகை இலக்கியப் பாடல்களில் சமூக வரலாற்றுச் செய்திகள் பல நாம் உய்த்து உணரும் வகையில் பொருந்தி இருக்கும். 

பாடலின் கவித்துவமும் கட்டமைப்பும் அழகியல் சார்ந்த கூறுகளாய் நம் மனதைக் கவர்ந்து இழுக்க; அதில் பொதிந்து இருக்கும் சமூகச் செய்தி ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் முயற்சியாக இது அமைகிறது. 

அகநானூறு: 340
நித்திலக் கோவை
நெய்தல் - தோழி கூற்று 
பகற்குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.

"பல்நாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள்
நல்எழில் இளநலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின்திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் திண்திமில்
எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்புஉடன்
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத்தூங்கும்
தெண்கடற் பரப்பின்எம் உறைவுஇன் ஊர்க்கே" -நக்கீரர்.

இது பாடல் - இதன் பொருளாவது...

பல நாள் பகலில் வந்து; புன்னை மரப் பொதும்பின் நிழலில் இருந்து; உன் துன்பத்தைப் போக்கிக் கொண்டு; மாலை வந்ததும் தலைவியைப் பிரிய மனமின்றி மையலோடு நோக்கி; வலவன் திறம்பட ஓட்டும் தேரில் ஏறிச்செல்லும் விருப்பத்தை விட்டுவிடு. 

சொல்லித் தீராத புகழையும் பொன் அணிகளையும் உடைய திரையன் ஆளும் பூக்கள் நிறைந்த கானல் சார்ந்த பவத்திரி எனும் ஊர் போன்று அழகும் இளமையும் பொருந்திய இவள் உன் நலனை எண்ணி வாடுகிறாள். 

ஏனெனில் நீ செல்லும் வழியில் உள்ள கழியில் அலை மிகுதியாக உள்ளது; உயிரைக் கொல்லும் பாம்புகளும் பெரிய மீன்களும் உள்ளன. ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய 
பொழுதும் இருட்டுகிறது.
உன் துன்பம் தீர இன்று இங்கு எம் ஊரிலேயே தங்கிச் சென்றால் என்ன?! (உன்னைத் தடுப்பார் யாரும் இல்லை; எல்லோரும் மீன் பிடிக்கச் சென்று விட்டனர்.)

மீன் விற்று வாங்கி வந்த நெல்லரிசி உணவில் 
தயிர் கலந்து உன் குதிரைக்கும் உண்ணத் தருவோம்.

வடவர் தந்த சந்தனக் கல்லில்
குடவர் தந்த சந்தனத்தை அரைத்து உனக்குப் பூசி விடுவோம்.

பாடலில் இடப்பின்புலமாகக் கடற்கரைப் பரதவர் சேரி அமைகிறது. காலப் பின்புலமாக மாலைப் பொழுதும் இனி இருட்டி விடும் என்ற செய்தி அமைகிறது. இரண்டு பின்புலங்களும் முதல் பொருள் ஆகின்றன. 

திண்திமில், தாழைமரம், புன்னை மரத்து நிழல், கிழிந்த பயனற்ற வலை, சுறா வேட்டை ஆடும் பரதவர், அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தும் கூர்உளி, கழியின் ஓதம், பச்சை மீனுக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெறுதல் அனைத்தும் கருப்பொருட்கள் ஆகிப் பின்புலங்களை விளக்குகின்றன.

'வாழ்வதற்கு இனிமையான எங்கள் ஊரில்... திண்மையான திமிலில் ஏறி மாலையில் தொழிலுக்குக் கடல்மேற் செல்லும் பரதவர் தம் வலையில் மாட்டிய கோட்டுச் சுறாவை வேட்டையாடக்; கயிற்றில் கட்டிய கூர்உளியை வீசித் தாக்க; உயிருக்குப் போராடிய சுறாவின் வேகத்தில் வலை கிழிந்து விட; அக்கிழிந்த வலை இனி பரதவர்க்குப் பயன்படாத நிலையில்; முற்றத்துத் தாழை மரத்தில் தொங்கிக் கொண்டு; கடல்காற்றில் ஆடுகிறது.'

காற்றில் ஆடும் கிழிந்த வலை இறைச்சிப் பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. கிழிந்த வலை பரதவர் மீன்பிடிக்கப் பயன்படாது. 
பூக்கேழ் புலம்பன்... (புலத்தை உடையவன் புலம்பன்) 
நிலவுடைமையாளனாய்... (மென்புலம் எனப்படும் நன்செயை உடையவன் ஆதலால் 'பூக்கேழ்' எனும் அடைமொழி) வேளாண்மை செய்யும் தலைவனுக்கும் பரதவர் குலத்தைச் சேர்ந்த தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டமையைக் கிழிந்த வலை என்ற தொடரின் உள்ளுறை உணர்த்துகிறது. 

'நீ கிளம்பிச் சென்று விட்டால் தலைவி உனக்கு வழியில் காத்திருக்கும் ஆபத்துகளை எண்ணித் தாங்க மாட்டாமல் அழுவாள். ஆபத்து பாம்பாகவும் வரலாம்; உயிரை வாங்கும் மீனாகவும் வரலாம். அதனால் இன்று இரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக' என்ற அவளது பேச்சு உரிப்பொருளைத் தெளிவுறுத்துகிறது. 

'எங்கள் ஊரில் தங்கினால் உன் குதிரைக்குக் கூட நாங்கள் நெல்லரிசி மாவுடன் தயிர் கலந்து உண்ணக் கொடுப்போம்' எனும் போது; குறிப்பாகப் பெறும் கருத்தாவது- உன்னை உபசரிப்பதில் எந்த மரியாதைக் குறைவும் நேராது என்பதாக அமைந்து உள்ளது. உயர்ந்த உணவாகக் கருதப்படும் நெல்லரிசி உணவை... நீ வேளாண்மை செய்யும் நெல்லை நாங்கள் பண்டமாற்றாகப் பெறுவதன் மூலம் உன் குதிரைக்கும் கொடுப்போம். 

கிழிந்த வலை பரதவர் தொழிலுக்குப் பயன்படாதது போல்; பூக்கேழ் புலம்பனோடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டதால் இனி எந்தப் பரதவனின் வாழ்க்கைக்கும் அவள் பயன்பட மாட்டாள். 

தலைவியை மணந்து கொள் என்று தோழி கேட்கவில்லை. மாறாகப் பணிவிடை செய்கிறோம் என்கிறாள். உன் மார்பில் சந்தனம் பூசுவோம்' என்ற தோழியின் கூற்று முத்தாய்ப்பாக அமைந்து சமூகச் நிலையைக் கோடிட்டுக் காட்டுகிறது.

வேளாளன் பரதவப் பெண்ணை மணந்து கொள்வதில் என்ன சிக்கல்?!
இங்கே தான் சமூகப் பிரிவினை அன்றே காலூன்றி விட்டது என்று தெளிவாகிறது. 

ஒரு காதல் பரத்தை எப்படி உருவாகிறாள் எனப் பாடல் காட்டுகிறது. 

சக 


 




kanmani tamil

unread,
Dec 24, 2025, 7:23:07 AM12/24/25
to vallamai
அகநானூறு- 35
பாடியவர் – அம்மூவனார்
பாலைத் திணை; துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.

"ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள்
வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நல னளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே."

தன் மகளைப் பிரிந்த தாயின் புலம்பல்... காதலனுடன் சென்றவளைத் தாய் வாழ்த்துகிறாள். 

'பெற்றெடுத்துப் பேணி வளர்த்த என்னையும் நினைக்கவில்லை. 
வானளாவிய மதில்சுவர் கொண்ட எம் மாளிகையில் உள்ள (கூட்டுக் குடும்பத்துச்) சுற்றத்தார் எல்லாரும் புலம்புகின்றனர் (அவர்களையும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை.). 

ஒற்றை மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்புடன் கூடிய கூர்மையான நீண்ட வேலைக் கையில் வைத்துக் கொண்டு  வெட்சிப் போர் புரிந்து ஆனிரைகளைக் கவர்ந்து வரும் மழவரின் சிறு கூட்டம்... தரிசு நிலங்களில் வழிப் போக்கரை வில்லால் வீழ்த்து உண்ணும் வாழ்க்கை கொண்டவராகக்;  கரந்தைப் போர் புரிந்து அவ் ஆநிரைகளை மீட்டுச் செல்லும் மறவர் கூட்டத்தார்... 

வீரமரணம் அடைந்து தெய்வமானோர்க்கு ஈமக்கடன் நிகழ்த்திய இடத்து நடுகல்லுக்கு  மயிற்பீலியைச் சூட்டித் தோப்பிக் கள்ளைப் படைத்து; துடியை முழக்கிச்;  செம்மறிப் பலி கொடுத்து; வழிபாடு நிகழ்த்துவர். 

இப்படிப்பட்ட அச்சுறுத்தும்  மயக்கம் தரும் பாதையும் புலால் நாற்றமும் கொண்டு வழிச் செல்வோர்க்குத் துன்பத்தைக் கொடுக்கும் காட்டு வழியில்... 
இடையூறுகளுக்கு இடையில் என் மகள்... 

அரண்மனையில் முரசு முழங்கும் கோவலூரின் 
மன்னன் காரி. பெரிய தேரை உடையவன். அக் கோவலூர்க்கு அருகில் ஓடுவது பெண்ணை ஆறு (தென்பெண்ணை). அங்குள்ள துறை ‘கொடுங்கால் முன்றுறை’. அந்தத் துறையிலிருக்கும் ஆற்றுமணல் படிவு போல் அழகிய அடர்ந்த கருங்கூந்தலை உடையவள்... தன்னைப் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவள் ஆக்கித்; தான் விரும்பிய அவன் துணையுடன் துணிந்து சென்று விட்டாள். 

அவன் அவளிடம் மிகுந்த அன்பு பாராட்டி; ஆர்வம் குன்றாமல் மீண்டும் மீண்டும் விருப்போடு அவளை அணைத்துத் துயலச் செய்ய வேண்டும். தன் பெண்மை நலமெலாம் தந்து அவள் உறங்குவாளாக.'  
‐-----------------------------------------------------
பெற்று வளர்த்த பாசம் அவள் மனநிறைவோடு வாழ வேண்டும் என ஆசைப்படுகிறது; வாழ்த்துகிறாள். 
தன் மகள் 'பிறளாயினாள்' என்ற தொடரே இங்கு சமூகச் செய்தியைத் தருகிறது. பிற சமூகத்தைச் சேர்ந்த ஆடவனைத் தன் வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்டாள். பண்டைத் தமிழகத்திலும் சமூகப் பிரிவினை திருமண உறவில் இடம் பெற்றமைக்கு உரிய சான்று இது. 

மழவர்/ மறவர் இருவரும் வேறு வேறு சமூகப் பிரிவினர். 
இருவரும் வழிப்பறி செய்தனர். இருவரும் ஆநிரை கவர்ந்தனர்.
இருவரும் அரசரிடம் போர் வீரராய்ப் பணி செய்தனர். 
ஆனால் ஆநிரை மீட்கும் பெருமைக்கு உரியவராக மறவர் மட்டுமே பெருமை பெறுகின்றனர்; பேசப் படுகின்றனர். 

உடற்கூறு அடிப்படையிலும் இருவரும் மாறுபட்டவர் எனத் தொகைப்பாடல்கள் காட்டுகின்றன. 

சக 

kanmani tamil

unread,
Dec 25, 2025, 5:13:01 AM12/25/25
to vallamai
புறநானூறு- 192
திணை: பொதுவியல் 
துறை -பொருண்மொழிக் காஞ்சி
இயற்றியவர்: கணியன் பூங்குன்றனார் 

"யாதும் ஊரே; யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
சாதலும் புதுவது அன்றே  வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

'எந்த ஊராயினும் அது அயலூரன்று; நமது ஊரே ! 
மக்கள் அனைவரும் நமது உறவினர்களே; வேண்டாதவர் அல்லர்.
நம் வாழ்வில் எதிர்கொள்ளும் 
தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   
துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்தலும் அதே மாதிரி தான்.  
மனிதன் மடிந்து போவது 
என்றும் நிகழ்வது தான்; அதில் 
புதுமை ஏதும் இல்லை! 
யாம் பூவுலகில் வாழ்தல் இனிமையானது என மகிழ்வதும் இல்லை;   
வெறுப்பால் வாழ்க்கை இனியதன்று எனக் குறை கூறுவதும் இல்லை.  
மின்னலுடன் வானில் இருந்து குளிர்ந்த மழை பெய்து, அந்த நீர் பெருக்கெடுத்து ஓடிக்  
கல்லுடன் மோதி ஒலியெழுப்பி அத்துடன் நில்லாது; செழிப்பையும் வளத்தையும் கொடுத்து வலிமை மிக்க பெரிய ஆறாக ஓகிறது! 
அந்த நீர் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லும் தெப்பத்தைப் போன்று; நம் வாழ்க்கையும் ஊழ் முறைப்படி அமையும் என்பதை முன்னாள் திறம்பட வாழ்ந்தோரைச் சான்றாகக் காட்டித் தெளிவாக அறிகிறோம். 
ஆதலால் மாட்சிமைப்பட்ட பெரியோர் என்று யாரையும் நாம்  வியப்பதும் இல்லை; சிறியோர் என்று யாரையும் 
இகழ்வதும் இல்லை!' 

---‐------------------------------------------------------
மனிதநேயம், உலகளாவிய பொது நோக்கு, இன்பத்தையும் துன்பத்தையும் இயல்பாக ஏற்றல், விதியின் வலிமை, சாவும் வாழ்வும் இயற்கை என்ற சமநிலை, உலகாயத நிகழ்வுகளில் விருப்பு வெறுப்பின்மை என விழுமியங்களின் தொகுப்பாகக் காணப்படும் இப் பாடலில் முத்தாய்ப்பாக அமைவது;
"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்ற கருத்து தான். 

என்ன சொல்ல வருகிறார் பூங்குன்றனார்?!

'பெரியோர் என யாரையும் வியந்து பார்ப்பதும் இல்லை; அதைக் காட்டிலும் சிறியோர் என யாரையும் இழிவாகப் பார்ப்பதும் இல்லை' என்ற அறிவிப்பில் பொதிந்து இருக்கும் மதிப்பீடு என்ன? எதற்காக இந்த வாக்குமூலம்?
யாருக்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறார்?

அவர் வாழ்ந்த காலச் சூழலைக் கருத்தில் கொண்டு நம் கேள்விக்கு விடை தேட முயலலாம்.

ஜைன பௌத்தம் ஆகிய சமணம், வைதீகமாகிய சைவ வைணவம் என நான்கு சமயங்களும் மக்களிடையே பரவி இருந்த காலகட்டம். 
நால்வருணம் தமிழகத்திற்குள் நுழைந்து காலை ஊன்றப் போராடிய காலகட்டம் 
இன்றைய போக்குவரத்து வசதிகளும் தங்குமிட வசதிகளும் இல்லாத காலகட்டம். 
போவோர் வருவோர் அனைவர்க்கும் வயிற்றுப் பசி தீர்ப்பதே இல்லறத்தின் பயன் எனும் கொள்கை நிலவிய சமூகம். 
விருந்து வரா நாளே வீணாள் என நினைக்கும் சமுதாய வாழ்க்கை. 
வேளாண்மைச் சமுதாயத்தின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில்... 

அவரது வீட்டிலும் வழிப்போக்கரை விருந்தாக ஏற்று உண்ண வைத்திருப்பார். உண்டவர் அவர் வீட்டுத் திண்ணையில் ஆயாசம் தீர அமர்ந்திருப்பர். உள்ளே சிலர் உண்டு கொண்டு இருக்கத் திண்ணையில் அடுத்த பந்திக்குச் சிலர் காத்திருப்பர். வீட்டுப் பெரிய மனிதர் பூங்குன்றனார் அவர்களோடு அளவளாவிக் கொண்டு இருந்திருப்பார். 
முன்பின் அறிமுகம் இல்லா அக்கூட்டத்தில் வழிச் செல்லும் திணைமாந்தர் ஒருபுறம்...
மூன்றாம் வருணத்தவராகி  உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்ட வணிகர் கூட்டம் ஒருபுறம்...
நான்காம் வருணத்தவராகி வேளாண்மையில் ஈடுபட்டு இருப்பினும்; குடும்பத் தேவைக்காக உறவினர் இல்லம் நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர் ஒருபுறம்...
(வருணத்தாருள் பார்ப்பாரும் அறிவரும் இன்னொரு பார்ப்பார் வீட்டில் மட்டும் தான் உணவு உண்பர் என்பதற்கு இலக்கியச் சான்று உண்டு. பூங்குன்றனார் வீட்டு முற்றத்தில் அவர்கள் உண்ணக் காத்திருக்க மாட்டார். வேந்தன் தனது சேனை சுற்றத்துடன் வந்து போவானே அன்றித் தனியாக உண்ண வர மாட்டான்.).
இப்படிப் பலதரப்பட்ட மக்கள் குழுமி இருந்த திண்ணையில் திணைமாந்தருள் ஒருவராகிய அவர் 'மனிதருக்குள் உயர்வு தாழ்வு காணும் கொள்கை தன்னிடம் இல்லை' என்பதை அறிவுறுத்தி இருப்பார் எனல் தகும் அல்லவா?!

சோதிடம் அவர் பார்த்த தொழில் என்பது அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் கணியன் என்ற முன்னொட்டு உணர்த்தும் செய்தி.
எனவே தான் இன்பம் / துன்பம்; மகிழ்ச்சி / துக்கம்; நன்மை / தீமை எதற்கும் பிறரைக் காரணம் ஆக்க இயலாது. அது அது விதிப்படி தான் நடக்கிறது... நடக்கும் என்கிறார். 

தன் வீட்டு விருந்தில் உயர்வு தாழ்வு இல்லை எனத் திணைமாந்தர், வணிகர், வேளாளர் அனைவரிடமும் கொள்கை விளக்கம் அளிக்கிறார் பூங்குன்றனார். 

சக 

kanmani tamil

unread,
Dec 26, 2025, 8:05:50 PM12/26/25
to vallamai
புறநானூறு - 335
திணை: வாகை; 
துறை: மூதில் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

"அடல்அருந் துப்பின்...
...குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் 
இல்லை
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு 
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன்என்று
இந்நான்கு அல்லது குடியும் 
இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு 
எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."

'குரவு???, தளவு???, குருந்து (புன எலுமிச்சை), முல்லை  என்னும் நான்கு பூக்களைத் தவிர;  வாழ்வியலில் குறியீடாகும்  பூக்கள் வேறு இல்லை.

கருந்தாள் வரகு, இருங்கதிர்த் தினை,  சிறுகதிர்க் கொள், பொறிகிளர் அவரை என்னும் நான்கு அல்லாது அன்றாடம்  உணவாகும் வேறு பொருள் இல்லை.

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு இனக் குடிகள் அல்லாது வேறு குடிகள் இல்லை.

போர்க்களம் சென்று பகைவரோடு நேருக்கு நேர் நின்று மோதித் தந்தங்களை உடைய களிற்றை வீழ்த்தி; வீரமரணம் அடைந்தவனுக்கு நடப்பட்ட கல்லை மட்டுமே வழிபட்டோம். அந் நடுகல் வழிபாடு தவிர நெல்லைத் தூவி வழிபடும் பிற வழிபாடு ஏதும் எம்மிடையே இல்லை.' 

----------------------------------------------------------

மூதில் முல்லை என்னும் துறைப் பெயரில் உள்ள 'மூதில்' மூத்த குடிகளைப் பற்றிய பாடல் என்ற செய்தியைத் தாங்கி உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்துச் சூழல் எப்படியெல்லாம் மாறியது என்று தொகுக்கிறார் மாங்குடிகிழார். அதனால் தான் நான்கு பூக்கள், நான்கு பயிர்கள், நான்கு குடியினர், நான்கு உணவுகள் எனத் தொகுத்து உரைக்கிறார் புலவர்  எனத் தோன்றுகிறது. 

வரகு, தினை, கொள், அவரை என்ற நான்குவகைப் பயிர் செழித்த திணைமாந்தரின் புன்செய் வேளாண்மையோடு; நெல்லைப் பயிர்செய்யும் நடைமுறை வருணத்தார் வரவிற்குப் பின்னர் தோன்றியது என்கிறார். நெல்லைப் பயிர் செய்து உண்ணத் தலைப்பட்டதால் தான் வருணத்தார் வருகைக்கு முன்; 
'கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரை' என்ற நான்கு அல்லது வேறு உணவு இல்லை என்கிறார்.

வீரமரணம் அடைந்தோரின் நடுகல்லை வழிபட்ட மூத்த குடியினரின் பண்பாட்டுடன் நெல்லைத் தூவிக் கடவுளை வழிபடும் முறையும் இணைந்தது என்கிறார். 

ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 'முல்லை நிலத்துச் சிற்றூரில் வாழும் மக்களது வாழ்க்கைக் கூறுகள்' பற்றிய பாடல் எனக் கூறுவதில் பொருள் தெளிவும் பொருத்தமும் இல்லை. ஏனெனில்;
'துடியன் பாணன்பொருநன் கடம்பன் என்று 
இந்நான்கு அல்லது குடியும் இல்லை'
என்ற புலவரின் பட்டியலில் உள்ள துடியரும் பாணரும் பொருநரும் கடம்பரும் முல்லை நிலத்தில் மட்டுமே வாழ்ந்தவர் இல்லை.
அவ்வளவு ஏன்?!
வாகைத்திணையின் பிற துறைகளுள் இடம்பெறும் அரசமுல்லை முல்லை நிலம் தொடர்பானது அன்று. அரசன் முல்லை நிலத்தில் மட்டும் இருப்பவன் இல்லை. 
அதுபோல் தான் பார்ப்பன முல்லைக்கும் முல்லை நிலத்துக்கும் தொடர்பு கிடையாது. வாகைத் திணையுள் அரசமுல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை முதலிய துறைகள் முறையே அரசனின் இயல்பையும்; பார்ப்பானின் இயல்பையும்; கணியனின் இயல்பையும் பாடுவது போல்; மூதில்முல்லை மூத்த குடிகளாகிய தமிழ்மண்ணின் பூர்வ குடிகளின் இயல்பைப் பாடுவதாக அமைந்து உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்து மக்களிடையே நிகழ்ந்த வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகளில் வெட்சி முதல் வாகை ஈறாகப் பல அடையாளப் பூக்களின் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. அதனால் தான்;
'அடலருந் துப்பின்……. 
குரவே தளவே குருந்தே முல்லை என்று 
இந்நான்கு அல்லது பூவும் இல்லை' என்கிறார். 

சக 

kanmani tamil

unread,
Dec 29, 2025, 12:27:56 AM12/29/25
to vallamai
புறநானூறு:399
திணை: பாடாண் 
துறை: பரிசில் விடை
பாடியவர்: ஐயூர் முடவனார் 

"அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற்று அரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை                                 
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத் தன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
அழிகளிற் படுநர் களியட வைகின்                                    
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்                     
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்                                        
இசையிற் கொண்டான் நசையமுது உண்கென
மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்துக்                                           
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்                                        
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென இழிதரும் அருவி
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே"

'முழங்கும் நீரையும் தோட்டங்களையும் உடைய காவிரி பாயும் நாட்டுக்கு உரியவனாகிய, அழியாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றேன். அவனது நாட்டில் சமைப்பவள் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுத்த அரிசியைப் புளித்த நீரான் கொதிக்கும் வெண்மையான உலையில் பெய்து ஆக்கிய சோற்றுக்கு; நிழல் செய்யும் உயர்ந்த கிளையில் முற்றிய மாங்கனிகளைப் பிசைந்து அம் மணத்துடன் கூடிய இனிய புளிச்சுவை கூட்டிச் செய்த பெரிய கரிய வரால் மீனின் குழம்போடு;  கொம்புகளையுடைய சுறாமீன் துண்டுகளின் இறைச்சியும் வயலில் விளைந்த வள்ளைக் கீரையும் சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும் பார்ப்பதற்கு ஊழ்த்து அவிழ்ந்த பாதிரி மொட்டுகளை உதிர்த்தாற் போன்ற வடிவம் கொண்ட ???உடன் கூட்ட வேண்டியவற்றைக் கூட்டி... (பாடல் சிதைந்து உள்ளது)

விடியலில் வைக்கோலைப் போராகக் குவிக்கும் உழவர் தாம் உண்ட கள்ளின் களிப்பு நீங்காத நிலையில்; முரிபடாத அரிசிச் சோறு முழுகும் படி நீர் ஊற்றிய மென்மையான பழஞ்சோற்றை உண்பர். 

என் கிணைமகள் நெடிய மூங்கிற் கழித் தூண்டிலால் பிடித்த மீனைப் பண்டமாற்றிக் கிடைத்த பொருளால் சமைத்த  உணவுடன் பாகல் புளிங்கூழைக் கூட்டிக் காலம் தவறி உண்டு மனம் சோர்ந்து ஒருபுறம் இருந்தேன். 

நீ அறவோர்களின் தலைவனாகிய அறவோன் போன்றும்; மறவர்களின் தலைவன் ஆகிய மறவன் போன்றும்; மள்ளர்களின் தலைவன் ஆகிய மள்ளன் போன்றும் கருதத் தக்க தொல்குடியினரின் தலைவன் ஆவாய்.

உதவி வேண்டிப் பிறரிடம் செல்லவும் மாட்டேன்; அவரது முகத்தைக் கூட நோக்கவும் மாட்டேன். 

மிக்க புகழை உடைய சோழன் அளிக்கும் விருந்தை உண்ண விரும்பிச்; செலவைத் தொடங்கி; வலிய கோலை ஊன்றுகோலாக்கிக்; கட்டுக்  குலைந்த கிணையை இறுகக்கட்டி, அதற்குப் பொருத்தமான புதிய போர்வையைப் போர்த்தி; அளவிலா மாலை போன்ற நீண்ட வார்களை ஒலித்து இயக்கிக், கடவுளை வழிபட வேண்டிய நேரத்தில் காலம் கருதி உண்ணாமலே கிளம்பி வந்துள்ளேன். கனத்த தேர் போன்ற வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால்; தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய காளை ஒன்று தான் நான் விரும்பி வந்தது எனக் கூறுவதற்கு முன்பே வானில் பூத்த விண்மீன்கள் போல் அழகிய நிறமுள்ள பல ஆனிரைகளை ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற காளைகளுடன்  ஓசையோடு ஒழுகும் அருவிகளையும் வானளாவ உயர்ந்த உச்சியையும் உடைய தோன்றிமலைக்குத் தலைவனாகிய தாமன் எனும் கோன் அளித்தான்.'
----------------------------------------------------------
அவன் இடையர் தலைவனாக... முல்லை நிலத்துத் தலைமை சான்ற மாந்தனாக இருந்ததால் தான் அவ்வாறு கொடுக்க முடிந்தது.

புறப்பாட்டின் இறுதி அடி அவனைத் ‘தோன்றிக்கோ’ என அழைக்கிறது. புநானூற்றைத் தொகுத்தோர் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்று இயற்பெயரோடு விரித்துச் சுட்டுகின்றனர். ‘கோன்’ என்னும் பின்னொட்டு ‘-ஆர்’ விகுதி சேர்ந்து ‘கோனார்’ ஆகி இன்றும் இடையர் குலத்தவரைக் குறிப்பதுண்டு. 

உ.வே.சாமிநாதையரின் 1923ம் ஆண்டு பதிப்பில் இடம்பெறும் குறிப்பு உழுவித்த வேளாளர் என்னும் வேளிர் பட்டியலைத் தருகிறது. அப்பட்டியலில் தாமானுக்கு அவர் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேந்தனும் வேளிரும் அல்லாத தாமான் முல்லைத்திணை மாந்தர் தலைவன் ஆகிறான். 

தமிழகத்து இடப்பெயர்கள் ஆங்காங்கு பெரிதும் காணப்படும் தாவரங்களை அடியொட்டி அமைவதுண்டு. சான்றாக:
புளியங்குடி - புளியமரங்கள் நிறைந்த பகுதி (தென்காசி மாவட்டம்)
வெற்றிலையூரணி - வெற்றிலைக்கொடி மிகுந்த ஊருணி (விருதுநகர் மாவட்டம்)
ஆலங்குடி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (தஞ்சாவூர் மாவட்டம் )
ஆலமரத்துப்பட்டி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (விருதுநகர் மாவட்டம்)
இருக்கங்குடி- எருக்கம் புதர்கள் மிகுந்த ஊர்  (விருதுநகர் மாவட்டம்)
கவிரமலை- முள்முருங்கை மரம் நிறைந்த மலை (பொதிகையில்)
பனை விளை- பனைமரங்கள் நிறைந்த ஊர் (நாகர் கோயில் வட்டம்)
வாகைக்குளம்- வாகை மரங்களால் பெற்ற பெயர் (தூத்துக்குடி மாவட்டம்) 
இவை போன்று தோன்றிமரங்கள் மிகுந்த காட்டுப் பகுதியின் தலைவன் தோன்றிக்கோன் ஆனான். 

தாமான் தோன்றிக் கோன் கோடைமலைத் தொடரில் அமைந்து உள்ள  பேரேரியை  (இன்றைய பேரிஜாம் லேக்) ஒட்டிய தோன்றிக் காட்டைச் சேர்ந்தவன். 
தாமான் பேரேரி < பேரிஜாம் லேக்
‘பேரிஜாம்’ என்ற பெயர் ‘தாமான் பேரேரி’ என்பதன் திரிபு ஆகும். ‘பேரேரி > பேரி’ என்னும் மாற்றத்திற்குரிய சான்றாதாரங்கள் மிகுதியாக உள. ‘பேரி’ என்னும் பின்னொட்டைக் கொண்ட  இடப்பெயர்கள் பல.

திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியும், ராஜசிங்கப்பேரியும். 
தென்காசி பாவூர்ச்சத்திரம் அருகில் குறும்பலாப்பேரி 
ஈஞ்சார், அழகாபுரிக்கு அருகில்  கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் அணைக்குத் தெற்கே நச்சடைப்பேரி 

என அனைத்து இடப்பெயர்களையும் ஏரிகளோடு தொடர்புடையனவாகவே கூகுள் வரைபடம் காட்டுகிறது. ‘பேரேரி’ என்னும் சொற்றொடர் பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச்சுருக்கம் காரணமாக 'பெரிய + ஏரி = பேரேரி > பேரி'  என மருவுதல் இயற்கை. தமிழகத்துப் பேரேரிகளின் பெயர்களில் எல்லாம் ‘பேரி’  பின்னொட்டாக  அமைய; ‘பேரிஜாம் லேக்’ என்ற தொடரில் ‘பேரி’ முன்னொட்டாக அமைந்த காரணம் அந்நியராகிய ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட மொழியியல் மாற்றமாகும். ஆங்கிலேயர் கோடை காலத்தில் விரும்பி உறைந்த இடத்தில் ஆங்கில வழக்கு மிகுவது இயற்கையே. வெரே லெவிங் என்ற மதுரை மாவட்ட ஆட்சியாளரின் விருப்பத்திற்குரிய மலைவாசஸ்தலம் ஆகையால் அவர் வாழ்ந்து; பல நற்பணிகளைச் செய்து; மக்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று இருந்ததைக் கொடைக்கானல் வரலாறு கூறுகிறது The Hindu-Madras Miscellany History and Culture- 07.Oct.201- “Levinge Still Remembered” Levinge still remembered - The Hindu). ஆட்சியாளர் போக்கில் மக்களும் ‘லேக்’ என்று அழைக்க; ‘பேரி’ பொருளற்ற முன்னொட்டாக இடம் மாறியுள்ளது.

‘பேரிஜாம்’ என்ற பெயரில் ‘தாமான்’ என்ற பெயரை அடையாளம் காணத் துணை செய்வது; தென்கன்னட மாவட்டத்தில் பண்டு வானவாறு என்ற பெயரில் கடலோடு கலந்து தற்போது ஹோனவார் என மருவி வழங்கும் (சேரவாற்றின் திரிந்த வடிவமாகிய) ஷீராவதியின் போக்கில் வந்து வீழும் ஜோக் அருவி (Jog falls). துளு நாட்டில் அமைந்துள்ள இவ்வருவிப்பகுதி சங்க இலக்கியத்தில்;

'தோகைக்காவின் துளுநாடன்ன' (அகம்.15) 

என்று குறிக்கப்படுகிறது. 'தோகைக்கா > தோக்கா >ஜோக்' என்ற மாற்றம்; ஆங்கிலேய ஆட்சியரின் உச்சரிப்பு இயலாமையால் நிகழ்ந்துள்ளதெனத் தெரிகிறது. இதற்கு ஆங்கிலேயரது மொழிவழக்கின் தன்மையே காரணம் ஆகும். ஆகார ஈறு கெட்டு மொழி முதல் ‘த்>>>ஜ்’ ஆகியுள்ளது. மேற்சுட்டிய மாற்றத்தோடு ஒத்த தன்மை உடையதாக; தாமான் >>> ஜாம் எனும் மாற்றமும் அமைகிறது. ‘ஆன்’ ஈறு கெட்டு மொழிமுதல் ‘த்>>> ஜ்’ ஆகியுள்ளது. இவ்வாறு  ‘பேரிஜாம் ஏரி’ என்ற பெயரில் நாம் தாமான் பேரேரியை மீட்டுருவாக்கம் செய்ய இயல்கிறது. தாமானின் காட்டிற்கு நீராதாரமாக அமைந்த ஏரியாகையால் தாமானின் பெயரால் வழங்கியுள்ளது. தாமானின் தோன்றிக்காடு அருவி வழிந்தோடும் மலை சார்ந்து இருந்தது. அது தோன்றி மரங்கள் நிறைந்தது.

“இழுமென இழிதரும் அருவி / வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே” (மேற்.)

என்கிறார் புலவர். அருவி வழிந்தோடும் வானளவு உயர்ந்த மலையின் சாரலில் இருந்த தோன்றிக்  காட்டின் தலைவன் என்று பொருள் கிடைக்கிறது.

இவ் ஏரி நீரே பண்டு மலையினின்று கிழக்கில் வழிந்தோடி இருக்க வேண்டும். கொடைக்கானல் காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே இவ் ஏரிப்பகுதிக்குச் செல்ல இயலும்.  

தாமனின் தோன்றிக்காட்டை இவ்ஏரியின் சுற்று வட்டாரத்தில் காணமுடிகிறது. கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றுச் செய்த கள ஆய்வும், கிடைக்கும் நிழற்படங்களும் பேரிஜாம் ஏரிப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. தோன்றி மரம் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் பருவத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். பூக்கள் உதிர்ந்த பின்னர் மீண்டும் பசுமையான இலைகள் துளிர்க்கும். இதன் தாவரவியல் பெயர் Scarlet sterculia என்பதாகும். பேரிஜாம் ஏரியைச் சுற்றி இருக்கும் உந்துத்தடத்தில் காணக்கிடக்கும் உதிர்ந்த சிவந்த தோன்றிப் பூக்களைக் காட்டுகிறது. https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i74146865-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html

(IJTLLS- தாமான் தோன்றிக்கோன் - முல்லைத்திணை மாந்தர் தலைவன்- 15.7.2020-  International Journal of Tamil Language and Literary Studies – DOAJ- https://doaj.org/article/5f15 2aebc27c4c1da8626b5f9d238adc).

ஐயூர் முடவனார் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் ஆகும். இவ்வூருக்குச் செவ்விலக்கியக் காலத்துத் தொன்மையான ஊர்களான தங்கால் (இன்றைய திருத்தங்கல்), மல்லிபுத்தூர் (மல்லி கிழான் காரியாதியின் ஊர்) ஆகிய இரு  ஊர்களிலிருந்தும் சென்று சேரக்கூடிய பாதைகள் உள்ளன. பேரையூரிலிருந்து செல்லும் தடங்களில் ஒன்று பாண்டியனின் மதுரைக்கு இட்டுச் செல்கிறது; மற்றொன்று பெரியகுளம் என்னும் ஊருக்கு வந்து சேர்கிறது. பெரியகுளம் பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கிலுள்ள தாழ்வரையை அடுத்து உள்ளது (பார்க்க- வரைபடம்- 2).  URL Link. பெரியகுளத்திலிருந்து உறையூர் செல்லவும் பண்டு தொட்டு வழங்கிய தடமும் உள்ளது.
ஐயூர் முடவனார் பேரையூரைச் சேர்ந்த பொருநர். கிணைப்பறை கொட்டுபவர்; கால் ஊனமுற்றவர். 'வன்கோல் மண்ணி'; அதாவது வலிமையான ஊன்றுகோலின் துணையுடன் அவர் தாமனைப் பார்க்கச் செல்கிறார்.  மாட்டு வண்டியில் ஏறிக் கிள்ளி வளவனை நாடிச் சென்ற போது; அவ் வண்டி ஒரு பள்ளத்தில் பதிந்து பகடு வலியிழந்து விட; இவரது போக்கு தடைப்பட்டது.
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 29, 2025, 8:55:35 PM12/29/25
to vallamai

கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப் புவியியலுக்குப் பொருந்தும். அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம்.


தாம் கண்ட ஏடுகளில் ஐயூர் என்பது; திருச்சிக்குக் கிழக்கே உள்ள சிற்றையூர் என்றும், உறையூர் என்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உவே.சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார் (புறநானூறு- உ.வே.சாமிநாதையர்- ப.ஆ.- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது- பாடினோர் வரலாறு- ப.23). ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் உறையூர் எனில் அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியனைத் தேடி வந்தமைக்குத் தகுந்த காரணமில்லை. அது மட்டுமின்றி; அவரது வல்லாண் முல்லைத் துறையில்  அமைந்த பாடலில் தன் சொந்த வாழ்விடத்து நிகழ்ச்சியைப் பாடுவது போலவே பாடியுள்ளார் (புறம்.314). முல்லைத்திணை சார்ந்த; அதாவது காடு சார்ந்த ஊரில் நிகழ்ந்த போரையே விவரிக்கிறார். அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற  வீரன் பற்றிப் பாடும் போது;

“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.) 

என்பதால் அவர் புன்செய்க் காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றது.


ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற். ப.468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. அகண்ட காவிரிக்கு அருகில்  இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.


தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற். பாடப்பட்டோர் வரலாறு- ப.71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை  என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;

“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா.399) 

மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர்  நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.


ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த  அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில்  ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.

 

கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.); 

தமிழ் விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது  தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப்பாலையும் (அடி.63-66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா.5-9; கடலாடு காதை- அடி.142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே  அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.

தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர்  தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த  தாழ்வரையிலும்  இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார்.


இனி சமூகச் செய்திக்கு வருவோம்:

தாமான் தோன்றிக்கோனைப் புகழும் போது அவனை 'அறவர் அறவ; மள்ளர் மள்ள; மறவர் மறவ; தொல்லோர் மருக' எனக் கூறக் காரணம்... அன்றே தமிழ்ச் சமூகம் ஒரு பன்மைச் சமூகமாக இருந்தமையே. மண்ணின் மைந்தர் ஆகிய திணைமாந்தரோடு...

வந்தேறிய அறவர் ஆகிய சமணர் ஜைனத்தையும் பௌத்தத்தையும் பின்பற்றுவோராய்; மூன்றாம் வருணத்தார் ஆகிய வணிகராகவும் நெல் வேளாண்மையில் ஈடுபட்ட நான்காம் வருணத்தைச் சேர்ந்த வேளாளராகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் நிலவுடைமையாளர்கள் குறுநில மன்னராய் ஆண்டனர். பல குழுக்களாக வாழ்ந்த மறவர் வயிற்றுத் தீத் தணிய வழிப்பறியிலும் ஆநிரை கவர்வதிலும் ஈடுபட்டு இருந்தாலும்; ஆநிரை மீட்டுத் தரும் பெருமைக்கு உரிய வீரராய் வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் பணி ஆற்றிய வீரர் ஆவர் (அவர்கள் திணைமாந்தர் ஆகிய மழவரினின்றும் வேறுபட்டவர் என இதே இழையில் முன்னர் கண்டோம்.). மள்ளர் நன்செயில் வேளாண்மைக்குத் துணை நின்று; தமக்கெனத் தனி நாட்டார் வழக்காறுகளோடு வாழ்ந்தனர். இத்தகு பல்வேறு சமூகத்தவர்க்கும் தாமான் தோன்றிக்கோன் தலைவன் ஆகும் தகுதி பெற்றவன் என்று போற்றுகிறார். அந்த அளவிற்கு அவன் எல்லாப் பெருமையும் உடையவன் என்பது கருத்து.

(முற்றும்) சக

Raju Rajendran

unread,
Dec 29, 2025, 11:39:20 PM12/29/25
to vall...@googlegroups.com
<கழியே ஓதம் மல்கின்று>
ஓதம்= Tide

செவ்., 23 டிச., 2025, 7:07 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvkKEpgRNbv1S3TEjfC_-Cqn%2BbJbm8fEXNQfW%3D7WYOpig%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jan 8, 2026, 6:21:11 PMJan 8
to vallamai
புறநானூறு - 391
திணை: பாடாண் திணை
துறை: கடைநிலை
தலைவன்: பொறையாற்றுக்  கிழான் 
பாடியவர்: கல்லாடனார் 

"தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி                         
அரியல் ஆர்கையர் உண்டுஇனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்………             
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்               
துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு
இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைகநின் வயலே"
  
'வேங்கட மலையெல்லை ஆகிய வடபகுதியில் குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும்.    எருதுகளின் பயன்பாட்டால் நெல்லானது திருமாலை ஒத்த குன்றின் உச்சியைத் தொடும் அளவு உயர்ந்து விளைந்து குவிந்திருக்கும். 
அப் பெருவளத்தை வாழ்த்தித்; திரண்ட ஊன்தடியைத் துண்டுகளாக்கிக் கள்ளோடு உண்டு என்னுடைய பெரிய சுற்றம் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தது.  
ஆனால் அவ் வேங்கட நாடு வறுமையுற; என் சுற்றத்தார்  பழங்குடிகள் அழுந்து பட்டிருந்த (விட்டு நீங்காமல் வாழ்ந்த) இவ் அகன்ற பழமை வாய்ந்த ஊரில் வந்து தங்கினர். 
ஊராரோடு அளவளாவ... (பாடல் சிதைந்து உள்ளது) 

என்னைப் பற்றி அறிந்து கொண்ட ஊர்மக்கள்;
'இவன் முன்பும் பொருள் நாடி இங்கு வந்துள்ளான்; பொருள் இல்லாதவன்; பொருநன்; ஆதலால் இரங்கத் தக்கவன்.’  என உன்னை நன்கு அறிந்த ஊரார் என்னைப் புரிந்து கொண்டு உரைக்க; நான் உன்னைக் காண வந்தேன் பெரும! 
கரிய நீர் மிகுந்த பெரிய கழியில் மீன்களைக் குடைந்து தேடி உண்ணும், செறிந்த சிறகுகளையுடைய புதா (ஒரு வகை நாரை) எனும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னை மரங்களும்  செல்வச் செழிப்பும் உடைய இல்லத்தில்; உன்மீது காதல் கொண்டு உன்னால் விரும்பப்பட்ட உன் மனைவியுடன் நீ இனிதாக உறங்குக. 
வளம் பெருகுவதற்கு ஏற்பத் தகுந்த காலத்தில் தக்க அளவில் மழை பொழிந்து உன் நாட்டில் ஒர் வேலி அளவு நிலத்தில் நாற்பத்தெட்டாயிரம் படி நெல் விளைவதாக.' 

----------------------------------------------------------
1 வேலி = 6.74 ஏக்கர்
1 கலம் = 12 மரக்கால் 
1 மரக்கால் =  4 படி).

குறிப்பிடத் தக்க இரண்டு சமூக வரலாற்றுச் செய்திகள் இப் பாடலில் உள்ளன. 

1. கல்லாடனார் பொறையாற்றுக் கிழானைப் பார்க்கச் சென்ற பொறையாற்றுக் கரையில் இருந்த ஊர் தமிழகத்துப் பூர்வ குடிகள் வாழ்ந்த ஊர்; அதாவது காலம் காலமாக வேறெங்கும் குடி பெயராமல் அதே ஊரில் வாழ்பவர். 'தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர்' என்ற தொடர் தாங்கி நிற்கும் பொருள் இதுவாகும். இந்த வாழ்விடம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வேறு இடம் தேடிச் செல்லும் பண்பு இல்லாத முதுகுடியினர் ஆகிய தொல்குடியினர் வாழும் அகலிடம் உடைய ஊர். 
தமிழகத்துப் பூர்வகுடிகள் யார் என்பதை இதே இழையில் முன்னர்க் கண்டோம் (புறம்.335). பாணர், துடியர், பறையர், கடம்பர் என மாங்குடிகிழார் வகைப்படுத்திப் பேசினார். அவ்வாறு விதந்து பேசக் காரணம்... அன்றைய தமிழகத்தில் வந்தேறிகளாகப் பலர் வாழ்ந்தனர் (நான்கு வருணத்தாருள் அடங்குவோர் ஆகிய வேளாளர் என்ற வேளிர், வணிகர் என்ற வைசியர், வைதீகர் என்ற பார்ப்பனர்& வேந்தர்) என்பது சொல்லாமல் விளங்கும் குறிப்புப் பொருள் ஆகும். 

2. கல்லாடனார் பற்றி அறிந்த ஊர்மக்கள்; அவர் ஏற்கெனவே முன்னரும் பொறையாற்றுக் கிழானை நாடி வந்திருப்பினும்; வறுமையில் வாடும் இரங்கத் தக்க பொருநன் என அவரைக் குறித்துப் பேசி; மீண்டும் பரிசில் பெறத் தகுதி வாய்ந்தவன் என்பதற்கு; அவன் சார்ந்த சமூகத்தை வெளிப்படையாகக் கூறித் தம் தலைவனிடம் செல்ல விடுத்தமை... பண்டைத் தமிழகத்தில் சமூகப் பிரிவினை இருந்ததைக் காட்டுகிறது. பொருநர் என்போர் கிணைப்பறை கொட்டுவோர். திணைமாந்தர் இடையே சாதிப் பாகுபாடு அழுத்தமாக நிலவியமைக்கு இப்பாடல் சான்றாகிறது. 

சக 



kanmani tamil

unread,
Jan 9, 2026, 11:36:46 PMJan 9
to vallamai
புறநானூறு- 32

திணை: பாடாண்
துறை: இயன்மொழி
சோழன் நலங்கிள்ளியைக் 
கோவூர் கிழார் பாடியது.

"கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே"

நாம் தொன்று தொட்டு இம் மண்ணில் வாழ்பவர் ஆதலால்; அந்த உரிமையை எண்ணிப் பார்த்து;... 
நம் சுற்றத்தினர் சமைக்கும் கலங்கள் நிறைந்து வழியும்படி; நெடிய கொடியில் பூக்காத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரைத் தரும் திறன் உடையவன் சோழன் நலங்கிள்ளி ஆவான். 
அது மட்டும் அன்று. 
வண்ணக் கலவை பூசி வணங்கும் முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியும் உடைய விறலியர்க்குப் பூவிலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தரக் கூடிய தகுதி உடையவன் ஆவான். 
இரந்து பெறும் பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். 
தொழில் நுட்ப அறிவுடன் செயல் திறன் மிக்க குயவர் குலச் சிறுவர் மட்பாண்டம் செய்யும் சக்கரத்தில் வைத்த பெரிய பச்சைமண் உருண்டை அவரது கருத்துக்கு ஏற்ப வடிவம் பெறுவது போல்; சோழன் நலங்கிள்ளியின் ஆணைக்கு ஏற்ப இந் நீர்வளம் மிகு‌ந்த நாட்டின் உடைமை அமைந்து விளங்கும்.
--------------------‐-------------------------------------
சேரன் தலைநகர் வஞ்சியையும் பாண்டியன் தலைநகர் மதுரையையும் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறுவதால்; இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் அவ் இரு தலைநகர்களின் வேந்தர்களும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் அடங்கியவர் என அறிகிறோம்.

சமூகச் செய்திகள்:

'தொன்னிலக் கிழமை சுட்டின்' என்ற தொடர் ஆழமான பொருள் உடையதாகத் தோன்றுகிறது. மாங்குடி கிழாரின் புறம்.335ம் பாடல் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
கிழமை = உரிமை / உடைமை 
'தொன்'மை எனும் அடைமொழி 'நிலக்கிழமை' எனும் சொற்றொடர்க்கு உரியது. நிலவுடைமையாளர் எனும் தகுதி தமிழகத்துப் பூர்வ குடியினர்க்கு இருந்து; பின்னர் மாறிய வரலாறே இங்கு வெளிப்படையாகப் பேசப்பட்டு உள்ளது. அதாவது பாணர், பொருநர், துடியர்,  கடம்பர் ஆகியோரது உரிமையாக இம் மண் இருந்தமையை நினைத்துப் பார்த்தால்; சேரன் தலைநகரையும் பாண்டியன் தலைநகரையும் சோழன் நமக்குப் பரிசிலாகத் தருவான் (நாமும் மண்ணில் வேளாண்மை செய்யலாம்.  நமது உணவுப் பாத்திரங்கள் நிரம்பி வழியும். நாம் பசியாறி வளமாக வாழலாம் என்பது கருத்து.).

சக 

kanmani tamil

unread,
Jan 11, 2026, 8:12:40 PMJan 11
to vallamai
புறநானூறு- 154
கொண்கானக் கிழானை மோசிகீரனார் பாடியது
திணை: பாடாண் 
துறை: பரிசில் துறை.

"திரைபொரு முந்நீர்க் 
கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை  நீக்கும்
சில்நீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழையராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்                 
யானும் பெற்றது ஊதியம் பேறுயாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி 
வந்தனனே
ஈஎன இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்  
தூவிரி கடுப்பத் துவன்றி 
மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்  எனக்கு எளிதே"

'சிறந்த போராளியாகப் பெரும் படைகளை எதிர்த்து நின்று பகைவரின் தாக்குதலுக்குப் புறமுதுகு காட்டாத ஆண்மைச் சிறப்பு உடைய கொண்கானக் கிழானே! அலை வீசுகின்ற கடலின் கரை அருகே இருக்கும் போதும்; தாகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க; அருகில் தாமறிந்த பிறரது துணையை நாடிச் சிறிதளவு குடிநீரை மக்கள் வேண்டுவர். 
அதுபோல அரசர் அருகில் இருந்தாலும் புலவோர் வள்ளன்மை உடையோரையே நாடுவர். நானும் அப்படித்தான் உன்னை வேண்டி நிற்கிறேன்.
'ஈ' என்று இருந்து நிற்பது மிகவும் அரிதான செயல் ஆகும். நீ எனக்குக் 
கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்; அப் பொருளின் அளவும் பெறுமதியும் பற்றி நான் ஏதும் கருத்து உரைப்பவன் அல்லன். 
மிக உயர்ந்த மலையில் இருந்து பலவிடங்களில் வெள்ளைத் துணி போல் தோன்றும் அருவி வழிந்து ஒழுகும் உன் கொண்கானத்தைப் புகழ்ந்து பாடுவது எனக்கு எளிதான செயல் ஆகும்.'

----------------------------------------------------------

சமூகச் செய்திகள்:
கொண்கானக் கிழான் திணைமாந்தருள் உழவர் தலைவன்- தமிழ் மண்ணின் பூர்வ குடியினன் ஆவான். புன்செய் வேளாண்மை அவனது பாரம்பரியம் ஆகும். அவன் வாழ்ந்த பகுதி கொள் விளையும் கானம் ஆகையால் கொண்கானம் என அழைக்கப்பட்டது. மிகுதியாகக் கொள் விளைவதால் பெயர் பெற்ற காட்டுப் பகுதி. கொள் ஒரு புன்செய்ப் பயிர். அது விளைய மிகுந்த நீர் தேவை இல்லை. பேரருவி ஏதும் இன்றிக் கொண்கானத்து மலையில் இருந்து வழியும் நீரே அவ் வேளாண்மைக்குப் போதுமானது. 

குறுநில மன்னரோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்க புகழ் பெற்ற திணை மாந்தருள் கொண்கானக் கிழானும் ஒருவன் ஆகிறான். தன் அரசனுக்காகப் பல போர்களில் பங்கேற்று வெற்றி தேடித் தந்தவன். அவன் வாழ்ந்த கொண்கானத்தை ஒட்டி இருப்பது நவிரமலை. அம் மலையின் அரசர் நன்னன் மரபினர். நன்னன் தனது தோட்டத்து மாமரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த மாங்காயைத் தின்ற கோசர் குலப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துப் 'பெண்கொலை புரிந்தவன்' எனத் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவன்.  எப்படிக் கடலுக்குள் அளப்பரிய செல்வம் பொதிந்து உள்ளதோ அது போல் நன்னனின் செல்வம் அளப்பரிது. ஆனாலும் அவனிடத்துச் செல்லவோ; இரந்து நிற்கவோ விரும்பாத மோசி கீரனார் கொண்கானக் கிழானிடம் 'நீ எதைக் கொடுத்தாலும்; எவ்வளவு கொடுத்தாலும்; கொடுக்காமலே விட்டாலும்; உன் கொண்கானத்தை நான் பாடுவேன்; அது எனக்கு எளிது' என்கிறார். 
"நின் கொண்பெருங் கானம்" என்ற  தொடரில் உள்ள 'நின்' அழுத்தமாக இங்கு சமூக வரலாற்றைத் தெள்ளென விளக்கி நிற்கிறது. உழவர் தலைவன் ஆகிய கிழானின் மண்ணுரிமையை உரக்கச் சொல்லும் சொல் 'நின்' ஆகும். உனது காட்டை ஒட்டிய மலையின் அரசன் உன்னைப் போல் மண்ணின் மைந்தன் அல்லன் என்று கோடி காட்டிப் பாடுகிறார் மோசிகீரனார். 

புறப்பாடலிலும் படிமம் அமையப் பாடிய 'சொல் வல்லர்' மோசி கீரனார். இப்பாடலில் கடலும் அதன் செல்வமும்;  நன்னன், அவனது செல்வம் என நம் மனதில் பதிகிறது. 

சக 
 

kanmani tamil

unread,
Jan 16, 2026, 7:58:07 PMJan 16
to vallamai
நற்றிணை-60

"மலை கண்டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண்புலர்விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் 
பெருஞ்சோறு  
கவர்படு கையை கழும மாந்தி
நீர்உறு செறுவின் நாறுமுடி 
அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளை கூட்டும் அணியுமார்அவையே"

பாடியவர் : தூங்கலோரியார் (தொங்கும் பரட்டை முடியைக் கொண்டவர் என்பது பொருள்)

து.வி.: தலைவன் சிறைப்புறமாக நிற்பதறிந்த தோழி, அவனுக்குத் தலைவியின் இற்செறிப்பை உணர்த்தக் கருதி உழவர்க்கு அறிவுறுத்துவது போல் குறிப்பாகச் சொல்கிறாள்.

'எருமைச் செல்வம் உடைய உழவனே! இரவு முழுவதும் நாற்று நடும் முனைப்போடு சரியான தூக்கம் இல்லாமல்; விடியுமுன்னர்...
கை விரல்களைக்  கவர்த்த நிலையில் விரித்துத் தீட்டாத நெல்லரிசிச் சோற்றை நீராகாரம் வழியும்படியாக அரித்து அள்ளிக்; கருங்கண்கள் உடைய பருத்த வரால் மீன் துண்டுகள் போட்ட மீனாணத்தை மிளிர்வையாக ஊற்றி வயிறார உண்ட பின்னர்... 
மனைவியரோடு கிளம்பி; நெல் சேமிப்புக் கூடுகள் பல மலை முகடுகள் போல் காட்சி அளிக்கும் பணியிடம் சேர்ந்து; நீர் நிறைந்த நாற்றங்காலில் நாற்றுமுடியினை அழுந்த ஊன்றும் நடவு வேலையைத் தொடங்கி விட்டாய். வரப்பில் பூத்துக்கிடக்கும் மணம் பொருந்திய கோரை ஆகிய சாய், நெய்தல் முதலியவற்றை அழித்து விடாதே; அவை எம் இல்லத்தில் இருக்கும் தலைவிக்குக் கைவளையாகவும்; கருத்த நீண்ட கூந்தலில் சூடவும்; தழையாடை புனைந்து அணிந்து கொள்ளவும் உதவும்.'

உழவன் வாழ்க்கையை நன்கு துய்க்கிறான். தனது பெண்டிர் சமைத்த புகர்வை அரிசிப் பொம்மலும் வரால் மீன் மிளிர்வையும் அவனது வயிற்றுப் பசியை ஆற்றுவதும்; அவன் நாற்று முடியை அழுந்த நடவு செய்கிறான் எனும் செயலின் புனைவும் (இறைச்சி)  அவனது இல்லறச் சிறப்பைக் காட்டும் நிகழ்வுகள் ஆகின்றன.

உழவனைத் தான் 'எருமை உழவ' என்று அழைக்கிறாள் எனினும்; அது தலைவனை  'இன்னும் இப்படித் தலைவியை மணந்து கொள்ளாமல் மந்தமாக இருக்கிறாயே?! மந்தமான எருமையைச் செல்வமாக உடைய உழவனைப் பார்; அவன் உலகாயத இன்பத்தை எப்படித் துய்க்கிறான்' என அங்கதக்  குறிப்பு தோன்றும் பொருளோடு சொல்வதாக அமைகிறது. எனவே 'விரைவில் மணந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடு; இற்செறிக்கப்பட்ட அவளால் உன்னை வந்து சந்திக்க இயலாது' என்பதைப் புரிய வைக்கிறாள். 
---------------------‐------------------------------------
சமூகச் செய்திகள்:
1) முந்தைய நாள் பொங்கி வடித்துப் பின் நீரில் ஊறிப் பொருமிப் பெருத்த சோறே பொம்மல் ஆகும். வரால் மீன் குழம்பைச் சொட்டாணமாக்கிக் கொண்டு உண்ணும் முறை ஈராயிரம் ஆண்டுக் காலப் பாரம்பரியம் மிக்கது என்பது இப்பாடலில் இடம் பெறும் சமூகச் செய்தி. 


பொம்மலும் மிளிர்வையும் (சொட்டாணம்)

2) உழவனைத் தூங்கலோரியார் 'எருமை உழவ' என விதந்து அழைக்கும் முறை தமிழகத்துப் பன்மைச் சமுதாயத்தின் வேறுபட்ட பிரிவினைகளைக் காட்டுவதாக அமைந்து உள்ளது. அரசாட்சி செய்த வேந்தரும் குறுநில மன்னரும் (வேளாளர்) ஆநிரையைச் செல்வமாகக் கொண்டவராகவே பாடல் பெற்றுள்ளனர். வேதியராகிய பார்ப்பாரும் பசுவைச் செல்வமாகப் பெற்று வளர்ப்பவராகத் தான் சித்தரிக்கப் பெற்றுள்ளனர். திணைமாந்தராகிய ஆயருள் 'நல்லினத்து ஆயர்' எனும் பசு மேய்ப்போர் உயர்ந்தவராகவும் 'புல்லினத்து ஆயர்' எனும் ஆடுகளை மேய்ப்போர் அவரைக் காட்டிலும் தாழ்ந்தவராகவும் பேசப் பெற்றுள்ளனர் (முல்லைக்கலி). இவர்கட்கு இடையே 'கோட்டினத்து ஆயர்' எனும் எருமை மேய்ப்போரும் ஒரு தனிப் பிரிவினர் ஆகக் காட்டப்படுகின்றனர். இப்பிரிவினை பொருளாதாரம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது எனினும்; உழவன் எருமைச் செல்வம் காரணமாக; வேந்தர் முதல் வேளாளர் வரையிலான நால்வருணத்தாரிடம் இருந்து மாறுபட்டுத் திணைமாந்தருள் அடங்கியவன் எனத் தெரிகிறது.

சக 

kanmani tamil

unread,
Feb 28, 2026, 10:08:25 PMFeb 28
to vallamai
"இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரில் செம்மலும் உடைத்தே" (நற்றிணை-45)

பொருள்:
தலைவனே! நீ விரும்பும் இவள் கானற்சோலையிடத்துப் பொருந்திய அழகிய சிறு குடியைச் சேர்ந்தவள். நீலநிறப் பெருங்கடல் கலங்குமாறு; அதன் உட்புகுந்து சென்று மீன்களைப் பிடித்துவரும் பரதவர் மகள் ஆவாள். நீயோ நெடிய கொடி அசைந்தாடும் நியம மூதூரில் வேகம் மிகுந்த செலவினைக் கொண்ட தேரை உடைய செல்வந்தனது அன்பிற்குரிய மகன் ஆவாய். யாம் நிணம் மிகுந்த சுறாமீனை அறுத்துப் பெற்ற தசைகளைப் பதப்படுத்திக்; காய வைக்குங்கால் அவற்றைக் கவர வரும் புள்ளினங்களை ஓட்டுபவராக உள்ளேம். இது எமக்கு நலம் பயக்கக் கூடிய உறவு ஆகுமா? யாம் புலவு நாற்றத்தை உடையேம்; அதனால் சற்றுத் தள்ளி நின்றே பேசுக. பெருநீரான கடல் விளை பொருட்களை ஆதாரமாகக் கொண்டு வாழும் எமது எளிய வாழ்க்கை முறை நும்மோடு பொருந்தக் கூடியது அன்று. மேலும் எங்கள் பரதவர் குலத்துள் யாம் மணக்கத் தகுந்த தலைமைத் தன்மை உடையோரும் உளர்.

குறிப்பாக உணர்த்துவன:
கடல் கலங்க உள்புக்கு மீன் வேட்டை ஆடும் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர் யாம் ஆதலின்; அவரது கண்ணில் பட்டால் உனக்குப் பெரிதும் ஏதம் ஆகும். உன்னைச் சும்மா விட மாட்டார்கள்; உண்டு / இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆதலின் 'அகன்று போய் விடு' என்கிறாள்.

மீன்களைக் கருவாடாக்க அவற்றைக் காய வைக்கிறோம்; கொத்த வரும் பறவைகளை விரட்டுகிறோம்.  எம்மை நெருங்கின் உன்னையும் அப்படியே விரட்டுவோம் என்பது சொல்லாமல் சொல்லும் கடிந்துரை ஆகும்.

'புலவு நாறுதும்' என்றது; மீன் நாற்றம் வீசும் தம் நிலையோடு 
அவனுடைய செல்வச் செழிப்பு மிகுந்த நறுஞ்சாந்து அணிந்த மார்பை ஒப்பிடுவது என உய்த்து உணர முடிகிறது. 

இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி, 'தான் இவ் வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமை கூறி அவன் குறிப்பினை மாற்றுதல்' எனக் கூறி இச் செய்யுளைக் காட்டித், 'தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி, அன்பின்மை ஒருதலையாக உடையவள் அல்லள்' எனவும் நச்சினார்கினியர் கூறுவர்  (தொல். பொருள். 144. உரை). தலைவியின் காதல் மனமும் தலைவன் இரந்து நிற்கும் ஆழமான ஆவலும் 
தோழிக்கும் தெரிகிறது; புரிகிறது. தலைவன் மேல் வெறுப்பு இன்றியும்; தெரியாதவள் போலவும்; புரியாதவள் போலவும்; 
அவர் இருவர்க்கும் பொருந்தாமை கூறுகிறாள். 

கருத்து வேறுபாடுகள்:
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை எழுதிப் பதிப்பித்த தொகுப்பின் கொளு இப் பாடலைத் தோழி கூற்று என்கிறது. ஆனால் தலைவி கூற்று என்று கொள்வதற்குத் தகுதி வாய்ந்த பாடலாக உள்ளது. 

'அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள்' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ.22 உரை). அதாவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை... ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படையாகக் கூறி; அவற்றை மீறிய அன்பின் ஆதாரத்தில் அவரது மனம் கட்டுண்டு இருப்பதை முற்றப் புரிந்து கொண்டதால் அவனை இகழ்வது போல் விரட்டினாலும் அச் சொற்களின் அடிநாதமான பொருள் மாறுபட்டது ஆகும். 

தலைவனது பெருமை காரணமாக, அவன் தனக்குப் பொருந்திய தலைவனாக மாட்டான் எனத் தலைவி அவனது விருப்பத்தை மறுத்து, அவனைப் போக்குதற்கண் கூறுவதாக இச்செய்யுளை இளம்பூரணர் காட்டுவர் (தொல். பொருள். சூ.109 உரை), அவ்விடத்து, இது தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டது.

கருவாட்டைக் காய வைக்கும் உச்சிப் பொழுதில்; கடல் சார்ந்த மொட்டை வெயிலின் தாங்கவொண்ணா வேனல் இடும்பையில்; தன்னைக் காலம் தாழ்த்திக் காண வந்த செல்வந்தனான வணிகன் மகனைத் 'தள்ளிப் போடா; பக்கத்தில் வராதே; கவிச்சி நாறும்; எனக்கு என் பரதவர் சமூகத்திலேயே நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்' என்று சினங்கொண்டு கூவும் காதலியின் கூற்று என்பதே எனக்கு உடன்பாடான கருத்து ஆகும். நடைமுறையில் இது போன்ற சூழல்களைத் திரையிசையிலும் கேட்க இயல்கிறது. https://share.google/Ou4T9ItbIDri3KzJS

சமூகச் செய்திகள்:
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் என்பது வணிகர்க்கு உரிய ஊர். இந்நாளில் 'நெகமம்' என்று வழங்குவது என்று சிலர் கருதுவர்... 
இதே தொடர் நற்றிணையில் மட்டும் இன்றி அகம்.83இலும் இடம் பெறுகிறது. அங்கு அது வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளிய திருப்பதிக்கு உரியது ஆகிறது. கடற்கரை அருகே இருந்த ஊரில் வழிபாட்டிற்கு உரிய நியமம் இருந்ததால்; பெருமை கருதி நியம மூதூர் எனப் பெயர் பெற்றதை அறிகிறோம். ‘கோயில் மாநகர்’ என இன்று வழங்கும் நகர்களுக்கு முன்னோடியாக 'நியம மூதூர்' என்ற சொற்றொடர் அன்று அமைந்தது.

'எம்மனோரின் செம்மலும் உடைத்தே' என்றது;
 எம்மனோர் = எம் சமூகத்தவர் = பரதவர்; 
எப்போது ஒரு காதல் பந்தத்தில் / திருமண பந்தப் பேச்சில் இருவேறு சமூகம் சார்ந்த செய்தி இடம் பெற்று மறுக்கப் படுகிறதோ; அது காதலர்க்கு இடையே ஆன பொய்க் கோபம் எனினும்; அப்போது அங்கே ஜாதிப் பிரிவினை இருந்தமை உறுதி ஆகிறது. 

சக 
 

kanmani tamil

unread,
Mar 2, 2026, 8:35:02 AMMar 2
to vallamai
பதிற்றுப்பத்து13- பூத்தநெய்தல் 

    தொறுத்தவய லாரல்பிறழ்நவும்
    ஏறுபொருதசெறு வுழாது வித்துநவும்
    கரும்பின்பாத்திப் பூத்தநெய்தல்
    இருங்க ணெருமையி னிரைதடுக்குநவும்
    கலிகெழுதுணங்கை யாடியமருங்கின் 
    வளைதலைமூதா வாம்பலார்நவும்
    ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
    புனல்வாயிற் பூம்பொய்கைப்
    பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
    நாடுகவினழிய நாமந்தோற்றிக் 
    கூற்றடூஉநின்ற யாக்கைபோல
    நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
    விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
    திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
    கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க 
    வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
    தாதெருமறுத்த கலியழிமன்றத்து
    உள்ளமழிய வூக்குநர் மிடறபுத்(து)
    உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே
    காடே கடவுண் மேன புறவே 
    ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
    ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
    கூலம்பகர்நர் குடிபுறந் தராஅக்
    குடிபுறந் தருநர் பார மோம்பி
    அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
    மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
    நோயொடு பசியிகந் தொரீஇப்
    பூத்தன்றுபெரும நீகாத்தநாடே.

பொருள்:
முந்தைய வளமிகுந்த நிலை: 
நானில வளமும் பொருந்திய மேற்கரை நாட்டில் காடழிந்து நாடாகிய முறைகள்:
மகளிர் துணங்கையாடுவதற்கு ஏற்ற அகன்ற வெளி இருந்தது. அவர்கள் ஆடும் போது கீழே விழுந்த ஆம்பல் மலர்களைப் பசுக்கள் மேய்ந்தன. புல்லும் தழையும் நிறைந்து ஆனிரைகட்கு மேய்கொல்லையாக இருந்தவை நெல் விளையும் நன்செய்களாயின. வரப்புகளில் மிகுதியாக நெய்தல் பூக்கள் வளர்ந்திருந்தன. அவை கரும்பு
விளையும் நன்செய் ஆகும்படி எருமைகள் மேய்ந்தன. ஏறுகள் தம்முள் போரிட்டதால் நிலம் பதப்பட்டு உழவேண்டிய தேவை இன்றியே உழவர் விதைக்கும் வயல் ஆனது. இத்தகு வளமிகுந்த நாடு புள்ளினம் கூடி ஒலிக்கும் மருதமரங்களும் கால்வாய்களை உடைய பூம்பொய்கைகளும் உடைமையால்  புகழ்பெற்றுப் புலவரால் பாடப் பெற்றன.  

பிந்தைய அழிவுநிலை:
அவ் வயல்வெளிகளையும் வேளாண்மைக்காக உழைத்தோரின் ஊர்களையும்  சேர வேந்தன் இமயவரம்பன் அழித்தான். நாடுகள் தம் அழகு கெடுமாறு; அங்கு வாழ்ந்த உயிர்கட்கு அச்சத்தைத் தோற்றுவித்து; வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகை இட்டான். கூற்றுவனால் அடப்படும் யாக்கை புல்லெனத் தோன்றிப் பொலிவழிவது போலப் பேரூர்கள் தம் நீர்மை அழிந்தன.  விரிந்த பூவை உடைய கரும்பு விளையும் கழனிகள் புல்லென்று தோன்ற; முறுக்கியது போலும் காயை உடைய விடத்தேரை மரங்களுடன்; கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து ஓங்கிய. கவைத்த தலைமயிரினை உடைய பேய்மகள் கழுதினை ஊர்ந்து திரிய; பரந்த நெருஞ்சிமுள் மிகுந்தது. நீறுபட்ட போர்க் களத்தின் புழுதிபடிந்தது; பொலிவு இழந்தது. மக்களும் மாவும் செய்யும் ஆரவாரம் இல்லை. ஊர் மன்றத்தின்கண்;
செல்லக் கருதுவோர் மனவெழுச்சி அச்சத்தால் அழிந்தது. மீறிச் செல்வோரின் உடல் நடுங்கும் அளவு அவை பாழிடங்கள் ஆயின.

இமயவரம்பன் ஆட்சி நிலை:
பெருமானே; இப்போது காடுகள் முனிவர் விரும்பி வாழும் இடமாயின. முல்லைக் கொல்லைகள் ஒள்ளிய இழையணிந்த மகளிரொடு மள்ளர்கள் உறைவிடம் ஆயின. காடும் புறவும் அல்லாத பெருவழியானது அவற்றைப் போலச் செல்வோர் இனிது செல்லும் இயல்பிற்றானது. இவை மட்டும் இன்றி நிலத்தே விளையும் எண்வகைக் கூலங்களையும் விற்போரைப் பேணிக் காக்கிறாய். குடி மக்களைப் பாதுகாக்ககும் காணியாளர் சுற்றத்தைச் சிறப்புற ஓம்பிக் காக்கிறாய். செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால்; வேண்டும் புலங்களில் வேண்டுங்காலத்து மழை பொழிகிறது. நீ ஓம்பும் நாடு நோயும் பசியும் நீங்கிப் பல்வளமும் நிரம்பி உள்ளது. 

சமூகச் செய்திகள்:
இமயவரம்பனின் மேற்கரை நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் வளங்கள் ஒருங்கு பொருந்திய பெருமை இங்கு பேசப்படுகிறது. நெல் வேளாண்மை செய்தோர்க்கு ஆனிரைகள் புல் மேயும் கொல்லைகள் கூட ஆரல்மீன் பிறழ்ந்து உலாவும் நீர் நிரம்பிய வயல்களாயின. பன்றிகள் தம்முடைய மருப்புகளாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம் கூட ஏரான் உழுதலை வேண்டாது காலாற் குழப்பி விதை விதைக்கும் வயல்களாயின. கரும்பு நிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தல் பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டத்திற்குத் தீவனம் ஆனதுடன் மேய்ச்சல் வேண்டிப் பிறவிடம் செல்லாவாறு தடுத்ததால் வயல்களாயின. ஆற்றின் சங்கமத் துறை அருகில் தென்னந்தோப்பு செழித்து இருந்தது. 

சேரனுக்குப் பணியாத வேளாளர் அவனது பகைவர் ஆயினமையால் அவரும் அவரது நாடும் ஊரும் அழிவு எய்தின. செல்வம் பொருந்திய ஊர்கள் தீக்கிரை ஆக்கப்பட்டன. நெருஞ்சி முட்கள் மிகுந்து; கரிய உடைமரமும், முறுக்கிய தோற்றத்துடன் நச்சுத்தன்மை பொருந்திய நெற்றுக்களுடைய மரங்களும் உடையதாய்க்; கண்டோர் அஞ்சும்படி; வாழ்வதற்கு அரிய நிலையை அடைந்தன. சேரவேந்தன் தன் ஆணைச்சக்கரம் செலுத்திய தேயத்தை எவ்வாறு விரிவுபடுத்தினான் என இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது. 

பாடல் சுட்டும் 'கூலம்பகர்நர்' பாரம்பரியமாகப் புன்செய் வேளாண்மை செய்த திணைமாந்தர் ஆவர். தம் விளைபொருட்களை அவர் தாமே சந்தைப் படுத்திய நிலையைத் தொகைப் பாடல்கள் பல காட்டுகின்றன. 

 'குடிபுறந் தருநர்' குறுநில மன்னராய் நெல் வேளாண்மை மூலம் உழுவித்த வேளாளர் ஆவர். தமக்காக உழுத திணைமாந்தராகிய உழவரையும் களப் பணியாளர் ஆகிய களமரையும் (வேளாளர்கள் பணியாளர்) குடிமக்களாகக் கொண்டு ஆண்டு வந்தவர். 

பாடலில் இடம் பெறும் துணங்கை ஆடும் மகளிர் 
திணைமாந்தர் ஆவர். இளைய மகளிர் இடையில் ஆம்பல் தழை உடுத்து, கண்ணியும் மாலையுமாக அவ்வாம்பலே தொடுத்து அணிந்து விளையாட்டு அயர்வர். அவர் துணங்கையாடி விளையாடும் இடம் ஆம்பல் மிடைந்து கிடந்தது. அவ்விடத்து வளைந்த தலையையுடைய முதிய ஆக்கள் உதிர்ந்த ஆம்பலை மேய்ந்தன. அவர் திணைமாந்தர் என்பதற்கு உரிய அடையாளமாக ஆம்பலால் தைத்த உடையும், ஆம்பல் கண்ணியும் ஆம்பல் மாலையும் அமைகின்றன. இயற்கைப் பொருட்களே திணைமாந்தரின் ஆடையும் அணிகலன்களும் ஆயின.

மொத்தத்தில் வேந்தர் தொடக்க காலத்தில் ஆட்சியைப் பிடித்து விரிவாக்கிய போது; 'தடி எடுத்த தண்டல்கார'ராகவே செயல் பட்டமை அறிகிறோம். தம் அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு பெருவழிகளை உருவாக்கி நற்பெயர் பெற்றமை தெரிகிறது. 

சக 

 

kanmani tamil

unread,
Mar 3, 2026, 11:05:20 AMMar 3
to vallamai
சோழன் கரிகாலன் எவ்வாறு தன் நாட்டை விரிவாக்கினான் எனப் பட்டினப்பாலை பேசுகிறது (அடி.240- 270).

"வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி
மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி   
கராஅம் கலித்த கண்அகன் பொய்கை
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீரற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்;     
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி  
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் 
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ   
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டி
பெருநல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய் தெருவில்    
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த  
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்   
அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் 
கணம்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ 
பிணம்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்
கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி   
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்
ஒண்சுவர் நல்இல் உயர்திணை இருந்து  
பைங்கிளி மிழற்றும் பால்ஆர் செழுநகர் 
தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇ
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட 
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து    
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்   
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய    
பெரும் பாழ் செய்தும் அமையான்"

பொருள்:
முன்னதாக வெள்ளை மலர்களை உடைய கரும்புடன் சிவப்பு நெல் வளர்ந்து இருந்த வேளாண்மை நிலைகுலைந்தது. பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து; முதலைகள்  இருந்த பெரிய பொய்கைகளில் இப்போது பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன் கோரைப்புல்லும் அடர்ந்தது. வயலும் குளமும் கலங்கி நீர் வறண்டது.  அங்கு வரியுடைய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்களுடன் பெண் மான்கள் துள்ளி விளையாடின.

மன்னர் பகைவரை வென்று பிடித்து வந்த பெண்கள் நீர் உண்ணும் துறையில் மூழ்கி எழுந்து; தம் அன்றாடக் கடமைகளைச் செய்த நிலையும் மாற்றம் பெற்றது. பலரும் சென்று தொழும்படி அவர்கள் முந்தைய நாள் அந்தியில் கொளுத்திய அணையாத விளக்கு ஒளி வீச; மலர்களால் அலங்கரித்து மெழுகிப்;  புதியோரையும் ஈர்க்கும் வழிபடுகடவுள் தன்மை  பொருந்திய கம்பம் ( / லிங்கம்) நின்ற மன்றங்களில் பருத்த நிலையை உடைய உயரமான தூண்கள் இருக்க; அவை சாயும்படி உரசிப் பெரிய களிற்று யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கின. 

தெருக்களில் திறமிகு கூத்தரின் முழவொலியோடு  முறுக்கிய நரம்பைக் கட்டிய  யாழின் இனிய இசையும் கூடி ஒலிக்க;  அரிய விலை உடைய நறுமண மலர்களைத் தூவி வழிபடும் பெருவிழாக்கள் இல்லாது போயின.
அச்சம் நிறைந்த  மன்றத்தில், சிறிய மலர்களை உடைய நெருஞ்சிச் செடிகளுடன் அறுகம்புல் பரவி வளர்ந்தது.  கொடிய வாயை உடைய நரிகள் நடுங்கும்படி ஊளையிட்டன. அழுகுரலை உடைய கூகையுடன் சேர்ந்து கோட்டானும் கூப்பிட்டது. கூட்டமாக இருந்த கூளிகளுடன் கூந்தலைத் தொங்கவிட்டு ஆடிப் பிணந்தின்னும் வாழ்க்கைநிலை உடைய பெண்(பேய்)களும் ஒருங்கு சேர்ந்து இருந்தனர். 

உருண்ட தூண்களையுடைய மாடங்கள் அமைந்த நெடிய வாசல் வழியாக நுழைந்து விருந்தினர்  நெருங்கி அமர்ந்து உண்டு; இடையறவு இன்றி மிகுந்த சோற்றைச் சமைக்கும் அடுக்களையும் ஒள்ளிய சுவரும் உடைய வளமான இல்லங்களின் உயர்ந்த திண்ணையில் பச்சைக் கிளிகள் பேசிக் கொண்டு இருந்த நிலை முற்றிலும் மாறியது. ஆநிரை மிகுதியால் பால்வளம் நிறைந்த ஊர்கள் தம் இயல்பான தன்மையில் இருந்து பிறழ்ந்தன. தோல் செருப்பைக் காலில் அணிந்து; துடி முழங்கத் திரண்டு வந்த வளைந்த வில்லையுடைய எயினர் கொள்ளை இட்டு உண்டதால்; உணவு இல்லாத நெற்கூடுகளின் உள்ளே வளைந்த வாயை உடைய கூகைகள் குடியேறின. அவை நண்பகலிலும் குழறின. அரிய காவலை உடைய ஊர்களின் அழகு அழிந்தது. 

இத்தகைய அழிவுகளைச் செய்த பின்னும் சோழனின் அதிகார வெறி அடங்கவில்லை.

 சமூகச் செய்திகள்:

தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்தில் அதிகாரத்தை நிலைநாட்டும் போக்கு வேந்தரிடம் மேலோங்கி இருந்தது. சோழன் தன்னிடம் அடிபணிய வைக்க நினைத்த குறுநில மன்னரின் வயல்களையும், கரும்புத் தோட்டத்தையும் அழித்தான்.  அவன் வெற்றி பெற்ற பின் முதலைகள் இருந்த ஆழமான நீர்நிலைகளில் குவளையும் நெய்தலும் மிகுதியாகப் பூத்துக் குலுங்கிய நிலை மாறி; வயலும் நீர்நிலையும் வேறுபாடு கூற இயலாதபடி; அறுகும் கோரையும் அடர்ந்து வளர; அங்கு மான் கூட்டம் துள்ளி விளையாடியது.
 
அதாவது நாடெல்லாம் காடானது. 

தன்னைப் பணிய வேண்டும் என்பதற்காகக் குறுநில மன்னரது உழைப்பின் பயனைப் பாழ் படுத்தினான். நேற்றைய பதிவில் சேரன் செய்ததாகக் கண்ட அதே செயலைச் சோழனும் செய்தான். வேந்தரது யானைப்படை அவர் விரும்பிய வெற்றியைப் பெற உதவியது. பயந்த குறுநில மன்னர் பணிந்தனர் / வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் துன்புற்ற விபரங்கள் பட்டினப் பாலையிலும்  விரிவாக உள்ளன. பீதியால் ஊர்மன்றத்தில் நுழையும் துணிவு பொதுமக்கட்கு இல்லை. வழிபாட்டிற்குக் கூட அவர்கள் நெஞ்சில் திடம் இல்லை. அச்சமும் அமைதியும் மட்டுமே ஊர் முழுவதையும் ஆட்கொண்டது. 

பிணம் தின்னும் பாசுபத சமயத்தார் மட்டுமே அப் போர்க்களத்துச் சூழலில் உணவைத் தேடித் திரிந்தனர். 

'பேய்மகள்'
தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்துத் தமிழகத்தில் காலத்தால் முற்பட்ட சைவசமயத்தின் ஒரு வகையான பாசுபதம் மக்களில் ஒரு சாராரிடம் செல்வாக்குப் பெற்று இருந்தது. பாசுபத சைவத்தில் கைம்பெண் ஆனவள் தெய்வத் தன்மை பொருந்தியவள் என்ற பொருளில் பேய்மகள் எனப்பட்டாள். அப்பெண் மகப்பேறு இல்லாதவளாக இருப்பின் சமூகத்தில் மதிப்பின்றிப் புறக்கணிக்கப் பட்டுப் பிணம் தின்னும் நிலைக்குத் தள்ளப் பட்டாள். பேய்மகளோடு இணைத்தே பேசப்படும் கூளிக்கூட்டம் பாசுபதம் சார்ந்த ஆண்வர்க்கத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் உள்ளது. 

'பேய்மகள்' என்ற சொற்றொடரின் பொருள் அறியப் பின்வரும் ஆய்வுக் கட்டுரையைக் காண்க: 


அத்துடன் மகப்பேறு பெற்ற முதுபெண்டிர்க்கும் பேய்ப் பெண்டிர்க்கும் இடையில் நிலவிய வேற்றுமையைப் பின்வரும் ஆய்வுக் கட்டுரையில் காணலாம். 


'கொண்டி மகளிர்'
பகைவரை வென்ற பின்னர் குறுநில மன்னர் அங்கிருந்து தம் நாட்டிற்குக் கொண்டு வந்த மேல்வருணத்தைச் சேர்ந்த பெண்கள் தம் உயர்நிலையில் இருந்து சற்றும் கீழே இறங்காமல்; குடிநீர் நிலைகளில் விடியுமுன்னர் நீராடினர். தம்மைக் கொண்டு வந்த மன்னரின் நாட்டு மக்களது வழிபாட்டிற்காகத் தரையை மெழுகி; விளக்கேற்றி; மலர்தூவிப் பணி செய்தனர். வேந்தர் வென்ற பின்னர் இவர்களது நிலையும் தேய்ந்தது. 

எயினர் செயல்: 
'எரிகிற வீட்டில் எடுத்த மட்டும் லாபம்' என்ற சொலவடை ஈராயிரம் ஆண்டுக் கால நடைமுறையை ஒட்டியே தோன்றி உள்ளது. வேந்தர் எரி ஊட்டிய ஊர்களைத் திணைமாந்தராகிய எயினர் கொள்ளை அடித்தனர். தொடர்ந்து நரிகளும் கோட்டான்களும் காட்டு யானைகளும் மான்களும் பாழூர்களை ஆக்கிரமித்தன. 

குறுநில மன்னர் மாளிகை - போருக்கு முன்னும் பின்னும் முரண்பட்ட நிலை அடைந்தது. இடையறாது விருந்து சமைத்த  அட்டிற்சாலைகளும் உண்டு ஓய்வெடுத்த திண்ணைகளும் வெறிச்சோடின. குதிர்களில் கூகை குடியேறியது. செல்லக் கிளிகளைக் காணவில்லை. பால்வளம் பறி போனது. 

சக 

1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 4, 2026, 11:04:31 AMMar 4
to vallamai
பாண்டியன் நெடுஞ்செழியன் வேளாளரின் வயலை அழித்துத் தன் அதிகாரத்தை நிறுவியமையை மதுரைக்காஞ்சியும் பெருமையாகப் பேசுகிறது. 

"உறுசெறுநர் புலம்புக்கு அவர்
கடிகாவின் நிலைதொலைச்சி
இழிபுஅறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய எரிமேய   
நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப   
அவை இருந்த பெரும் பொதியில்
கவைஅடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்புஆட
அணங்கு வழங்கும் அகல்ஆங்கண்
நிலத்துஆற்றும் குழூஉப்புதவின்   
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும்பதிய குடிதேம்பிச்
செழுங்கேளிர் நிழல்சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக்கூகை குராலொடு முரல  
கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கை
களிறுமாய் செருந்தியொடு கண்புஅமன்று ஊர்தர
நல்ஏர் நடந்த நசைசால் விளைவயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழிதவக் கெட்டு   
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்" (அ.152–176)

பொருள்
பாண்டியன் நீண்ட காலமாகத் தன் தலைமையை ஏற்க முரண்பட்டவர்களின் நிலங்களில் புகுந்து போர் செய்தான். அவரது காவல் பொருந்திய சோலைகளை அழித்தான். நிலைத்த நீர் வளம் மிகுந்த மருதநிலப் பரப்பு முழுவதையும் சிவந்த நெருப்புக்கு இரையாக்கினான். நாடு தன் நிலை அழிந்து காடு ஆனது.  ஆவினம் தங்கிய இடங்களில் காட்டு விலங்குகள் தங்கின. ஊர்கள் பாழ்நிலங்கள் ஆயின. ஒளி வீசும் வளையல்கள் அணிந்த மடப்பம் பொருந்திய பெண்கள் துணங்கைக் கூத்தையும் அழகிய தாளத்தோடு கூடிய குரவைக் கூத்தையும் மறந்தனர். சபை கூடிய அம்பலத்தில் பிளவுபட்ட  காலடிகளுடன் கடுநோக்கு உடைய பேய்மகளிர் உலவி ஆடினர். கடவுள் தன்மை பொருந்தியதாகத் தாம் வாழ்ந்த அகன்ற மாளிகையின்  நிலைகதவிற்குப் பின் நின்று தம் கணவனையும் சுற்றமான ஆண்களையும் இழந்த துன்பம் மிகுந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மிகுந்த வருத்தத்துடன் நிலைகுலைந்த அவ் ஊர்களை விட்டுத் தம் சுற்றத்தோடும் குடிகளோடும் வெளியேறி; வேறு இடங்களில் வாழ்ந்த தம்  உறவினரிடம் சென்று சேர்ந்தனர். பெருமாளிகைகளின் குதிர்கள் தீயில் கருகி விடக் குடுமி உடைய கூகைச் சேவல் பெடையுடன் குடி புகுந்து ஒலி எழுப்பியது. செங்கழுநீர் மலர்ந்து இருந்த அகன்ற பொய்கைகளில் யானைகள் மறையும்படி வாட்கோரையும் சம்பங்கோரையும் நெருங்கி வளர்ந்தன. மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தரக் கூடிய விளைச்சல் தரும் வயல்களில் நன்கு ஏரோட்டி உழுத நிலை மாறி; மயிர்க்கட்டுடைய பெண் பன்றியுடன் ஆண் பன்றிகள் ஓடித் திரிந்தன. உன்னிடம் அடங்கி வாழாததால் பகைவர்களின் நாடுகள் மிகவே கெட்டன.  

சமுகச் செய்திகள் 
சேரனும் சோழனும் நாடு பிடிக்கச் செய்த அதே செயல்களைத் தான் பாண்டியனும் செய்தான். மூவேந்தரும் அவரவர் ஆட்சிப் பரப்பை விரிக்கச் செய்த போர்கள் அரசியல் நிகழ்வுகளே. அந்த அரசியலால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களே இங்கு பேசுபொருள் ஆகக் கூடியன. 

வேளிர் என்று தொகைப் பாடல்கள் சுட்டும் குறுநில மன்னர் ஆகிய வேளாளரின் நாடுகள் காடாயின. குன்றாத நீர்வளம் குலைந்தது. உழுவித்தோர் ஆகிய அவரைச் சார்ந்து உழுதோர் ஆகிய உழவரின் (திணைமாந்தர்) வாழ்வும் பாதிக்கப்பட்டது. வளத்தை அழிப்பது பணியச் செய்யும் உத்தியாகப் பயன்படுவதை இன்றும் காண்கிறோம். மூவேந்தரும் அவ்வுத்தியைப் பயன்படுத்தியே குறுநில மன்னரைப் பணிய வைத்தனர். 

'அரந்தைப் பெண்டிர்'
தம் குடும்பத்து ஆண்களை இழந்த பெண்கள் வீட்டிற்கு வெளியே தலைநீட்டவும் தயங்கினர். பாதுகாப்பை இழந்த நிலையில் அங்கிருந்து அகன்று சுற்றத்தோடும் உற்றாரோடும் தம் உறவினரின் வாழ்விடத்தைச் சென்று சேர்ந்தனர். 
சக 

1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 5, 2026, 11:45:03 AMMar 5
to vallamai
புறநானூறு-337 
"ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
கவிகை மண்ஆள் செல்வர் ஆயினும்
வாள்வலத்து ஒழியப் பாடிச் 
சென்றாஅர்
வரல்தோறு அகம் மலர
ஈதல்ஆனா இலங்குதொடித் 
தடக்கைப்  
பாரி பறம்பின் பனிச் சுனை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில்ஆர் நறும்புகை ஐதுசென் றடங்கிய   
கபில நெடுநகர்க் கமழும் 
நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
அற்றன்று ஆகலின் தெற்றெனப் போற்றி
காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் 
அன்றி
வருதல் ஆனார் வேந்தர் தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு 
தலையர்
மற்று இவர் மறனும் இற்றால்தெற்றென
யார் ஆகுவர்கொல் தாமே 
நேரிழை
உருத்தபல சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை 
ஞெமுக்குவோரே" கபிலர் 

பொருள்:
வாளைக் கையில் ஏந்தாமல் பாரியிடம் பாடிக் கொண்டு சென்றால்; செல்லும் போதெல்லாம் மனம் குளிர்ந்து தொடி அணிந்த தன் கையால் வாரி வாரி வழங்குவான். அவனது பறம்பு மலையில் பனிநீர்ச் சுனை உண்டு. அதை யாரும் எளிதில் பார்க்க இயலாது. அதுபோலப் பாடலின் தலைவியும் பார்ப்பதற்கு அரியவள்.
மனைக்குள் அவள் பெண்மை நிறைந்த (பூப்பு எய்திய) பொலிவோடு திகழ்ந்தாள். இடையில் கட்டிய ஆடை ஆடுவது போலக் கூந்தல் அசைய அவள் நடந்தாள். அந்தக் கூந்தலில் அவள் ஊட்டிய அகில் புகை அடங்கி; அட்டிற் புகையால் கறுத்துத் தோன்றும் பெரிய மாளிகை முழுவதும் மெலிதாக மணக்கும். ஒளிரும் முகம் கொண்ட அவள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தாள். இனி அப்படி இருக்க முடியாது. 

சோழநாட்டு வேந்தன் ஆரவாரம் மிக்கவன். கவிந்த கையால் சைகை காட்டி மண்ணை ஆளும் செல்வம் மிக்கவன். வாளால் வெற்றிகள் பல கண்டவன். அவன் போருக்கு எழுதலை இனித் தவிர்க்க முடியாது. 
அவனது யானைகள் காடெல்லாம் நிற்கின்றன. அவற்றிற்கு நெல்லஞ் சோற்றுக் கவளம் ஊட்டப்படுகிறது. 

அவளது தந்தையும் சகோதரரும் அச்சம் தரும் முகத் தோற்றத்தோடு போரில் ஈடுபட்ட தம் வேலை இன்னும் குருதிக் கறையோடு  வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது மறப் பண்பு இப்படி இருக்க; அவளோ அணிகலன் பூண்டு; சுணங்கின் வண்ணங்களோடு காளையின் இரண்டு கொம்புகள் போல இள வனப்புடன் திகழும் முலையினள். அவற்றை உரிமை கொண்டாடி அணைக்கப் போகிறவர் யாரோ? தெரியவில்லையே!

சமூகச் செய்திகள் 
சோழவேந்தன் குறுநில மன்னனின் பெண்ணைத் தனக்கு உரியவளாக்க மகட்கொடை நேர்கிறான். அதாவது பெண் கேட்கிறான். பெண்ணின் தந்தையும் சுற்றமும் சினத்தோடு தம் பெண்ணைத் தர மறுத்தாலும்; வேந்தன் தன் விருப்பத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை ஆதலால்; இரு தரப்பினரும் போர் செய்ய முனைகின்றனர். 

வேந்தர்  தம் அதிகாரத்தை நிலைநாட்டக் கையாண்ட உத்திகளுள் ஒன்று குறுநில மன்னன் பெண்ணைத் தர விரும்பாவிடினும் அடாவடியாக வற்புறுத்துவது. அதைத் தொடர்ந்து போர் செய்வது 'மகட்பாற்காஞ்சி' எனப்படும். போரினால் மன்னனின் நாடு அழிந்து தீக்கிரை ஆகும் போது அது சமூகத்தை பாதித்தது.

எந்த ஒரு மகட்பாற் காஞ்சிப் பாடலும் பெண்ணின் அடையாளத்தை; இன்னாரது மகள் என்று வெளிப்படையாகச் சொல்வது இல்லை. ஆனால் அந்த உண்மை குறிப்பாக உய்த்து உணர இயல்வதாக இருக்கும். ஆனாலும் திட்டவட்டமாகச் சொல்ல வழி இருக்காது. இது பண்டைத் தமிழகத்து விழுமியம் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. 

இந்தப் பாடல் பாரியின் பறம்பில் இருக்கும் சுனை காண்பதற்கு அரிதானது போல் குறிப்பிட்ட பெண்ணும் காண்பதற்கு அரிதானவள் என்கிறது. இதைப் பாரியின் நண்பர் கபிலர் பாடி இருப்பதால் பாடலின் தலைவி பாரியின் மகளோ எனும் ஐயம் எழுகிறது. முடிபாகச் சொல்ல வழி இல்லை. 

அன்றைய தமிழ்ச் சமூகத்தின் 
கொள்கை 'திருமணம் செய்து கொடுக்க மறுக்கப்படும் ஒரு பெண்ணை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதைத் தவிர்த்தமை' என்பதை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் மூலம் அறிகிறோம். பெண் கேட்டவரை எந்த மகட்பாற் காஞ்சிப் பாடலும் மறைக்கவில்லை.

குறுநில மன்னனிடம் தான் பெண் கேட்டான் என்பது 'கபில நெடுநகர்' என்ற தொடராலும் பாரி தொடர்பான உவமையாலும் தெரிகிறது. நெடுநகர் = பெரிய மாளிகை. 
கபில நிறம் ஆகிய கறுமை நெல் வேளாண்மை செய்த குறுநில மன்னர் அன்றாடம் விருந்து சமைக்கும் அட்டிற்சாலையை அடையாளம் காட்டுகிறது. புகை மிகுதியாக மண்டிக் கறுத்த பெரிய மாளிகை. 

தொடர்ந்து வேந்தனின் யானைப்படைக்கு நெல்லுச் சோற்று உருண்டைகள் உணவாயின என்பதும் முற்றுகை தொடரும் மன்னன் நாட்டில் நெல் வேளாண்மை நிகழ்ந்ததை அறியச் செய்கிறது. 

சக




1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 6, 2026, 11:38:16 AMMar 6
to vallamai
 புறநானூறு-355

"மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே; மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி..." (ஆசிரியர் பெயர் இல்லை.)   

பொருள்: 
'மதிலில் ஞாயில்கள் (கொத்தளங்கள்) இல்லை. கிடங்கில் நீர் இல்லை ஆதலால் கன்றுகள் மேய்கின்றன. ஊரின் நிலை இதுதான். இவள் தந்தையும் பெண்ணின் மேல் கொண்ட பாச மிகுதியால் வேந்தனுக்கு மணம் செய்து கொடுக்கத் மனமின்றித் தவிக்கிறான். குடும்பத்தில் இருந்த இவளது தமையன்மாரும் பிற பங்காளிகளும் அவ்வண்ணமே தயங்குகின்றனர். கண்ணுக்கினிய ஆத்திமாலையையும் விரைந்து ஓடும் குதிரைகளையும்டைய கிள்ளி …'

சமூகச் செய்திகள்:
மதிலில் ஞாயில்கள் எனும் கொத்தளங்கள் இல்லை என்ற குறிப்பு அது குறுநில மன்னரின் மாளிகை எனத் தெளிவுறுத்துகிறது. வேளிர் 'ஓரெயில்' என்று அழைக்கப்பட்ட மதில் சுவர் மட்டுமே சூழ்ந்த மாளிகையில் தான் வாழ்ந்து கொண்டு ஆண்டனர். அது 'ஓரரண்' என்றும் பெயர் பெற்றது. 

நீர் மேலாண்மையில் சிறந்தவராகக் கருதப்படும் வேளாளருள் ஒருவன் ஆன அவனது கிடங்கில் நீர் இல்லை என்ற உண்மை மழை பொய்த்து விளைச்சல் இல்லாத துன்பநிலையைக் காட்டுகிறது. ஆனாலும் வேந்தனிடம் பெற்ற மகளை மணம் செய்து கொடுக்கச் சம்மதப்படாத மனதுடன் அக் கூட்டுக் குடும்பத்துப் பங்காளிகளும் தந்தையும் ஒருங்கு பாசத்தால் மயங்குகின்றனர். 

கடுமான் கிள்ளி எனச் சோழனின் பெயரை வெளிப்படையாகப் பேசும்
இப் பாடல் ஒரு சிதைந்த பாடலாக உள்ளது.

பெண்ணைத் தன் உரிமை ஆக்கினால் குறுநில மன்னர் தனக்கு அடங்கி விடுவர் என்ற எதிர்பார்ப்பே வேந்தரின் இத்தகைய போக்கின் காரணமாக அமைந்தது.

விளைவு: போரும் ஊரை எரித்தலும் ஆகும்

சக

kanmani tamil

unread,
Mar 7, 2026, 4:02:49 AMMar 7
to vallamai
புறநானூறு-338
"ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறுவின் 
நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின்
படுவண்டு ஆர்க்கும் பல்மலர்க்காவின்
நெடுவேள் ஆதன் போந்தை 
அன்ன
பெருஞ்சீர் அருங் கொண்டியளே கருஞ்சினை   
வேம்பும் ஆரும் போந்தையும் 
மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் 
அல்லன் வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி 
நாப்பண் ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் 
தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே"

பொருள்:
நெடுவேள் ஆதன் எனும் அரசனின் போந்தை என்னும் ஊர் ஏர் பூட்டி உழும் வயல், நீர் பாய்ந்து செழிக்கும் சேற்று நிலம், நெல் கொட்டிக் கிடக்கும் வீடுகள், வாங்குவோர் தந்த பொன் மலிந்த தெருக்கள், வண்டுகள் மொய்க்கும் பல வகைப் பூக்கள் மண்டிய காடுகள் ஆகியவற்றைக் கொண்டது. 
அவ்வூர் போன்ற அழகும் இளமை வளமும் பொருந்திய இவள் ஓரெயிலோடு  வளமிகுந்த தோட்டங்களும், வயல்களும் சூழ்ந்திருக்கும் நிலப்பகுதியின் நடுவில் கடலில் மிதக்கும் கப்பல் போன்று தோற்றம் அளிக்கும் மாளிகையை உடைய குறுநில மன்னனின் ஒப்பற்ற மகள் ஆவாள்.
அவளைக் கொண்டியாகப் பிடித்துக்கொண்டு செல்வது அவ்வளவு எளிதன்று. 
வேம்பு மாலை அணிந்த பாண்டியன், ஆத்தி மாலை ஆணிந்த சோழன், பனம்பூ மாலை அணிந்த சேரன் ஆகிய கொற்ற வேந்தர் மூவரும் இவளைப் பெண் கேட்டு; வெற்றிக்கு உரிய வில்லேந்திப் போரிட வந்தாலும்; தன் தகுதியை ஏற்க மறுப்போர்க்கு இவளது தந்தை மணம் செய்து கொடுக்க மாட்டான்.

சமூகச் செய்திகள்:

'கொண்டியள்'
போரிட்டு வென்றவன் தோற்றவனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்டிரைப் பிடித்துக் கொண்டு செல்வது அரசவழக்கம். அவர்கள் கொண்டி மகளிர் எனப்படுவர். இப் பெண்டிர் அவ் அரசரது மனைவியராகவும் இருக்கலாம் / மகள்களாகவும் இருக்கலாம் /  உறவுப் பெண்களாகவும் இருக்கலாம் / பிற உரிமை மகளிராகவும் இருக்கலாம். அதனால் இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்பு இருந்தது. கொண்டி மகளிர் பற்றி இதே இழையில் மார்ச் 3ம் தேதி இட்ட பதிவில் பார்த்தோம். 

'உணங்கு கலன் ஆழியின் 
தோன்றும்' மன்னனின் மாளிகை என்ற உவமை குறுநில மன்னனின் மாளிகை எப்படி இருக்கும் என்ற காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது. அதாவது உயர்ந்த மதில் / ஓரெயில் / ஓரரண் என அழைக்கத் தகுந்த சுற்றுச் சுவருடன் (compound wall) கூடிய மாளிகை . குறுநில மன்னர் கோட்டை கட்டி ஆளவில்லை. கோட்டை வேந்தருக்கு உரிய அடையாளம் ஆகும். அதனால் கொத்தளம் / காவற்காடு மன்னரிடம் கிடையாது. வீரராகப் பணி ஆற்றும் மன்னரின் சேவகர் தெருக்களில் தான் பகைவரை எதிர்கொண்டனர். எனவே தான் 'முரவுவாய்...ஓரெயில்' எனப் பாடப்பட்டது. 

தமிழகத்து விழுமியம்:
நெடுவேள் ஆதனின் போந்தை போன்ற இளமை நலம் சான்ற தலைவி என்பதால் அவள் அம் மன்னன் மகளோ என்ற ஐயம் தோன்றினாலும் பாடலின் இறுதி அடிகள் அக் கருத்தை உறுதியாகச் சொல்ல இடம் கொடுக்கவில்லை.

பெண் கேட்பவர் வருணாசிரமத்தில் மேல்நிலையில் இருக்கும் வேந்தர். பெண் கொடுக்க மறுப்பவர் வருணாசிரமத்தில் கீழ்நிலையில் இருந்த வேளாளர் ஆகிய குறுநில மன்னர். அதனால் தான் வேந்தருக்கு 'நான் கேட்டு நீ பெண் கொடுக்க மாட்டாயா?' என்ற சினம் மூண்டது; மன்னன் 'தன் தகவு அணங்கார்க்குப் பெண் தர மறுத்ததால் போர் மூண்டது; விளைவு- விளைச்சலும் வளமும் தீக்கிரை ஆயின.
"மாணா மாட்சிய மாண்டன பலவே" பதிற்றுப்பத்து-19
என இமயவரம்பனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது போல... மாண்டன = அழிந்தன. 

சக 

Raju Rajendran

unread,
Mar 7, 2026, 10:24:44 PMMar 7
to vall...@googlegroups.com
nanRu

சனி, 7 மார்., 2026, 2:32 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Mar 8, 2026, 11:36:23 AMMar 8
to vallamai
புறநானூறு-339

"வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;           
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தற் பூக்குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவில் ததைந்த .. .. .. .. .. . . .. கலத்தின்                                            
வளர  வேண்டும் அவளே; என்றும்
ஆரமர் உழப்பதும் அமரியள் ஆகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே" (பாடிய புலவர் பெயர் இல்லை)

பொருள்:
பரந்த நிலப்பரப்பில் சென்ற மேய்ந்த பல ஆனிரைகளும் பெரிய காளையும் தம் வயிற்றை நிரப்பிக் கொண்டு மடலுடன் ஓங்கிய பனைமரத்தின் நிழலில் வசதியாகப் படுத்துக்கொண்டு அசை போடும் போது; மேய்க்கும் கோவலர் முல்லைப் பூக்களைப் பறிப்பர்.
பூப் பறிக்கும்போது அங்கு எதிர்ப்படும் முயலைத் தம் குறுங்கோலால் விரட்டுவர். அந்த முயல் தாவிச் சென்று அருகில் இருக்கும் நீர்நிலையில் வாளை மீனோடு சேர்ந்து புரண்டு துள்ளும்.
கடலில் விளையாடிய மகளிர் அடுத்துக் குளத்து நீரில் பாய்ந்து பிசுபிசுப்பைப் போக்கிக் கொண்டு; கழிகளில் உள்ள நெய்தல் பூக்களைக் கிள்ளி எடுக்க; இப்படி அங்கும் இங்கும் ஓடி ஆடும் போது அவர்கள் அணிந்த பசுந்தழை ஆடையும் ஆட............. 
அணிகலனாகப் பூண்டு  அவள் வளர வேண்டும்.
போரை விளைவித்து வருத்துபவள் ஆகி விடக் கூடாது.  முறம் போன்ற காதை உடைய யானையைக் கொண்டு போருக்கு அழைக்கும் வேந்தர் நெஞ்சில் ஒளிந்து கொண்டு இருக்கிறாளே!

சமூகச் செய்திகள்:
அக்காலத்தில் ஒரு மகள் சிறுமியாகத் துறுதுறுவெனக் கடலிலும் குளத்திலும் ஓடி ஆடி விளையாடும் பருவத்திலேயே அவளது சுற்றத்தார் மனதில் பதட்டம் தோன்றி இருக்கிறது. ஏனென்றால் வளர வளர இவளது ஆட்டமும் ஓட்டமும் காணும் வேந்தர் மனதில் ஆசையும் சேர்ந்து வளரும். வேந்தன் பெண் கேட்கத் தயங்க மாட்டான். அவனுடைய உயர்வு மனப்பான்மை (superiority complex) வற்புறுத்திப் பெண்ணை வலிந்து கொள்ளத் துடிக்கும். பெற்றோரும் சுற்றத்தாரும் மறுத்தால் உடன் தன் யானைப் படையைக் கொண்டு வந்து அழிப்பான் என்ற எதிர்பார்ப்பும் புரிதலும் அச்சத்தைக் கொடுத்தது. 

இப்பாடலில் இடம் பெறும் மகள் அவளது தழை ஆடை அணியும் முறையால் திணைமாந்தரின் மகள் எனத் துணியலாம். 
கடற்கரை சார்ந்த வாழ்க்கைச் சித்தரிப்பு அவளைப் பரதவர் குலப் பெண்ணாகக் காட்டுகிறது. 

வேந்தர் குறுநில மன்னரிடம் மட்டுமல்ல; பரதவர் தலைவனிடமும் பெண் கேட்டுத் தொந்தரவு செய்தமையை இப்பாடல் தெரிவிக்கிறது.

சக 

kanmani tamil

unread,
Mar 17, 2026, 11:17:15 PMMar 17
to vallamai
புறநானூறு-340

"அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
யார்மகள் கொல்லென வினவுதி கேள்நீ
எடுப்ப எடா அ.. .. .. .. .. .. .. 
.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவில் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே" - அள்ளூர் நன்முல்லையார் பாடியது. 

பொருள்:
'இளமையும் அழகும்  பொருந்தி அணிந்த தழை உடை அசையுமாறு ஓடிச் சென்று, அழகிய புள்ளிகளையுடைய குன்றிமணிக் கொத்துக்களைச் சேகரிக்கும் இவள்............ (பாடல் சிதைந்து உள்ளது.) யாருடைய மகள்?’ என்று கேட்கிறாய்? சொல்கிறேன்; கேள். உன் எண்ண ஓட்டத்தை மேலும் வளர்த்து விடாதே..........(பாடல் சிதைந்து உள்ளது.)
இவளுக்கும் இவளுடன் பிறந்த சகோதரர்க்கும் தந்தையானவன் கரிய பனைபோன்ற பெரிய துதிக்கைகளையுடைய யானை கரந்தைக் கொடி நிரம்பிய தன் வயலுள் புகுந்தால்; அதைத் தாக்கிக் கொல்லத் துணையாக வரும் வலிமை மிக்க மன்னர்க்கு மட்டுமே இவளைத் திருமணம் செய்து கொடுப்பது என்று கருதி இருக்கிறான்.

சமூகச் செய்திகள்:

நெல் வேளாண்மை செய்யும் வேளாளன் மகள் ஆகிய பாடலின் தலைவி இன்னும் பூப்பு எய்தாத பதின்பருவத்தினள் ஆவாள். அந்தக் குழந்தைத் தனத்தின் பயனாகத் தான் நச்சுத் தன்மை மிகுந்த குன்றிமணிகளின் அழகால் ஈர்க்கப்பட்டு அவற்றை ஓடி ஓடிச் சேகரிக்கிறாள்.  அவளது துறுதுறுப்பில் மயங்கியே பாடல் தலைவன் 'இவள் யாருடைய மகள்?' என ஆவல் மீதூரக் கேட்கிறான்.

கேட்பவன் அரசாள்பவன் இல்லை. அதாவது வேந்தனோ  வேளாளனோ இல்லை. அவன் திணைமாந்தன். வேந்தனாக இருந்தால் யானையோடு வந்து தன் அதிகாரத்தைக் காட்டிப் பெண் கேட்பான். அவன் வேளாளன் அல்லன் என்பதால் தான் பாடலாசிரியர் 'அப் பெண்ணின் தந்தை வேந்தனின் அதிகாரத்தை எதிர்க்கத் துணையாக நிற்கும் தகுதி உடைய குறுநில மன்னர்க்கே பெண் கொடுப்பான்' எனப் பதில் உரைக்கிறார். 

அள்ளூர் நன்முல்லையார் எனும் பெண்பாற் புலவரின் இப் பாடல் அன்றைய சமூக நிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது. அரசாளும் தகுதி பெற்ற வேந்தரும் வேளாளரும் திருமண உறவில் கொண்ட நடைமுறைக் கொள்கை சமூகம் சார்ந்தது என்கிறது. நெல் வேளாண்மையில் காவல்பணி வேந்தரால் சிக்கலை எதிர்கொண்ட நிலை திருமண பந்தத்தைச் சமூகம் சார்ந்தது ஆக்கியது. அதாவது வேளாளன் வேளாளனோடு தான் மணவுறவு கொள்ள விரும்புவான் எனத் தெளிவாக உரைக்கிறார். 

வயலில் நிற்கும் யானை வேந்தனின் அதிகாரக் குறியீடு ஆகும். அதை விரட்ட வேளாளர் ஒன்றுபட வேண்டிய தேவை இருந்தது. அந்தத் தேவையைத் தம் சமூகத்திற்கு உள்ளேயே பெண் கொடுத்து எடுத்து வலுவூட்டிக் கொண்டனர் எனலாம். 

சக 

kanmani tamil

unread,
Mar 18, 2026, 9:28:05 PMMar 18
to vallamai
புறநானூறு-341

"வேந்து குறையுறவும் கொடான் ஏந்து கோட்டு
அம்பூந் தொடலை அணித்தழைஅல்குல்
செம்பொறிச் சிலம்பின் 
இளையோள் தந்தை
எழுவிட்டு அமைத்த 
திண்நிலைக் கதவின்
அரைமண் இஞ்சி நாட்கொடி 
நுடங்கும்
..........................................................................................................
புலிக்கணத்து அன்ன 
கடுங்கண் சுற்றமொடு
மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
பூக்கோள் எனஏஎய் கயம் 
புக்கனனே
விளங்குஇழைப் பொலிந்த 
வேளா மெல்இயல்
சுணங்குஅணி வனமுலை அவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் 
ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறம்கிளர் 
முன்பின்
நீள்இலை எஃகமறுத்த 
உடம்பொடு
வாராஉலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட்டனனே குருசில் 
ஆயிடைக்
களிறுபொரக் கலங்கிய 
தண்கயம் போல
பெருங்கவின் இழப்பது 
கொல்லோ
மென்புனல் வைப்பின் இத்தண்பணைஊரே"

பொருள்:
அழகிய பூவோடு தழையும் சேர்த்துக் கட்டி உடுத்த எடுப்பான பரப்பின் பின்னழகும் சிறந்த வேலைப்பாடு அமைந்த சிலம்பும் அணிந்த இளையவளின் தந்தை; வேந்தன் வந்து பணிவோடு ‘பெண் தருக’ என்று கேட்ட பின்னும் தன் பெண்ணை மணம் செய்து கொடுக்க மறுத்து விட்டான். அவன் கணைய மரத்தைக் குறுக்கே கொண்ட திண்மையான நிலை கதவையும் அரைத்த மண்ணால் அமைந்த மதிலையும் சிறப்பான நாளின் குறியீடாக ஏற்றிய கொடியையும் புலிக்கூட்டத்தை ஒத்த வலிய வீரர்களையும் உடையவன்.  தான் கூறிய வஞ்சினத்தைத் தவறாமல் செய்து முடிப்பவன்; வேந்தனோடு முரண்பட்ட சினத்தை உடையவன். வீரர்கள் அனைவரும் போருக்குரிய அடையாளப் பூக்களைக் கொள்க என ஏவிப் பின் குளநீராடினான்; போருக்குத் தயார் ஆனான். பெண் கேட்ட வேந்தனோ 'அழகுக்கு அழகூட்டும் அணிகலன்களைப் பூண்டு; கன்னிமை ஒளிரச்  சுணங்கு அணிந்து வனப்பு மிகுந்த முலையினை உடைய மெல்லியலை நான் நாளை மணம் புரிவேன்; அல்லது ஆற்றலோடு கடும்போர் செய்து நீண்ட இலைவடிவ வேலால் புண்பட்ட உடலோடு மேலுலகம் புகுவேன். இவ் இரண்டில் ஒன்று  நடைபெறுவது உறுதி’ என்று வஞ்சினம் கூறித் தன் படைக் கருவிகளைக் கையில் எடுத்தான்.  இரண்டு ஆண் யானைகள் போரிடுவதால் கலங்கிச் சேறாகும் குளம்போல் இவ்விருவரும் செய்யும் போரால் நீர்வளமும் பசுமையும் நிறைந்த ஆற்றங்கரையின் வயல்வளம் பொருந்திய  ஊர் தன் அழகை இழக்கப் போகிறதே?!

சமூகச் செய்திகள்:

வேந்தன் பணிந்து பெண் கேட்டாலும் மறுக்கும் அளவு வர்க்கப் போராட்டம் தமிழகத்து வேந்தர்க்கும் வேளாளர்க்கும் இடையில் நிலவிய சமூகப் பின்னணியில் தான் தொகைப் பாடல்கள் தோன்றின எனத் தெரிகிறது. வருணப் பாகுபாடு அந்த அளவிற்குத் தமிழகத்து மண்ணில் அழுத்தமாகக் காலூன்றி இருந்தது. 

குறுநில மன்னனின் மாளிகை வருணனை இப்பாடலில் குறிப்பிடத் தக்க அளவு தெளிவாக உள்ளது. திண்மையான நிலைகதவும் அரைத்த மண்ணால் ஆன மதில் சுவரும் (சுற்றுச்சுவர்- compound wall) மட்டுமே மன்னனது மாளிகையின் சிறப்பம்சம் எனப் புலனாகிறது. 
வேந்தனின் கோட்டை போன்று காவல்காடோ கொத்தளமோ கிடையாது. 

மன்னனது மாளிகையில் நாட்கொடி மட்டுமே ஏற்றப்படும்; அதாவது குறிப்பிடத் தக்க சிறப்புப் பொருந்திய நாட்களில் மட்டுமே அடையாளக் கொடி ஏறும். போர் குறித்தோ வெற்றி குறித்தோ அல்லது இன்னும் வேறேதும் இது போன்ற காரணம் குறித்தோ கொடி ஏற்றுவது மன்னர் வழக்கம். ஆனால் வேந்தனது கோட்டையில் என்றும் எப்போதும் கொடி பறந்து கொண்டு இருக்கும். 

அடையாளப் 'பூக்கோள்' போருக்கு முன்னதாக நிகழும்  நடவடிக்கைகளுள் ஒன்று ஆகும். வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி, வஞ்சி, காஞ்சி... முதலிய போர் அடையாளப் பூக்களைச் சேகரித்துப் பயன் கொள்வது வருணத்தார் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றம் ஆகும். இதே இழையில் 27.12.2025 தேதியிட்ட பதிவு இக்கருத்தை வலுப்படுத்துகிறது. 

சக


kanmani tamil

unread,
Mar 21, 2026, 11:03:19 PMMar 21
to vallamai
புறநானூறு- 342

"கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே;                          
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்            
தண்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சியவர் இவள் தன்னை மாரே"  அரிசில் கிழார் பாடியது.                  
பொருள்:
'காட்டுக் காக்கையின் தழைத்த சிறகைப் போன்ற இருவாட்சிப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையையும் பெரிய தோளையும் உடைய இந்த இளம்பெண்; யாருடைய மகளோ எனக் கருதி அவளை மணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு என்னைக் கேட்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய பெருவீரனே! இவள் திருமகளும் விரும்பத்தக்க பண்பும் அழகும் உடையவள்; வீரர்க்கு மட்டுமே அன்றிப் பிறர்க்கு அடைய முடியாதவள். பச்சைக் கால்களை உடைய கொக்கின் அகன்ற வாயை உடைய குஞ்சு மெத்தென்ற சேற்றின் கரை ஓரத்தில் மீன்களை மேய்ந்து உண்ட பின்; ஆரல்மீன்கள் இட்ட வெண்கடுகு போன்ற சிறிய முட்டைகளையும் நுண்ணிய இறாலின் குஞ்சுகளையும் தாய்க் கொக்கு தர உண்ணும்; மருதவளம் பொருந்திய  ஊரின் தலைவன் இவளது தந்தை ஆவான். இவளை மணக்க விரும்பி வந்த வேந்தர்களுடன் இவள் தந்தையும் தமையன்களும்  செய்த பெரும் போரில்  பலர் இறந்து பட்டனர்.  அவர்களின் பிணங்கள் வைக்கோற் போர் போல் குவிந்து கிடக்கின்றன. நெற்கதிர்களையும் வைக்கோலையும் பிரித்து ஒதுக்க உழவர் எருதுகளைப் பயன்படுத்துவது போல்; இவளது தமையன்மார்  இறந்தவரின் பிணங்களை ஒதுக்க யானைகளைப் பயன்படுத்துகிறார்கள்; தமது வாளாற்றலால் அன்றாடம் போர் செய்யும் பெருமை உடையவர்கள்.'

சமூகச் செய்தி:
நெல் வேளாண்மை செய்த வேளாளர் தாம் பெற்ற பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதில்; அவர்களது சமூகச் சிந்தனை பேரிடம் வகித்தது. ஆடம்பர வாழ்க்கை உடைய வேந்தரைக் காட்டிலும் தம் சமூகத்தினரோடு மட்டுமே மணவுறவு கொண்டு உறவினரைப் பெருக்கித் தம் உழைப்பிற்கும் தொழிலுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.

செல்வ வளம் மிகுந்த வேளாளர் வசம் தம் தொழிலுக்கு இடையூறு இல்லா அளவில் யானைப் பயன்பாடும் இருந்தது. 

சக 

kanmani tamil

unread,
Mar 22, 2026, 10:35:01 PMMar 22
to vallamai
புறநானூறு-343

"மீன்நொடுத்து நெல்குவைஇ
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் கலிச்சும்மைய 
கரைகலக்குறுந்து
கலம்தந்த பொற்பரிசம் 
கழித்தோணியான் கரைசேர்க்குந்து
மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப்பெய்து வருநர்க்குஈயும்
புனல்அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் 
பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள்இவள்எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணிஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து
இடைமதில் சேக்கும் புரிசை
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே" பரணர் பாடியது 

பொருள் 
'மலைச் செல்வத்தையும் கடல்செல்வத்தையும் ஒருங்கு பெற்று; வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்குபவன் குட்டுவன். அவன் ஆற்றுநீரை அள்ளித் தருவது போலக் கள்ளை இரவலர்க்குத் தருபவன். பொன்மாலை அணிந்தவன். அவனது ஊர் முழவு போல் முழங்கும் கடலின் கரையில் உள்ள முசிறி ஆகும். அவ்வூரில் ஆற்றுமீனை நிரப்பிக் கொண்டு செல்லும் அம்பி பண்டமாற்றாக நெல்லை நிரப்பிக் கொண்டு வீடு திரும்பும். வீட்டில் இருந்து மிளகுப் பொதிகளைத் தோணியில் ஏற்றி ஆரவாரம் மிகுந்த கடற்கரைக்குக் கொண்டு செல்வர். அதற்கு விலையாகக் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட பொன் கழியின் வழியாகக் கரைக்கு வந்து சேரும்.

இத்தகைய முசிறிக்கு ஒப்பான பெருஞ்செல்வத்தை  அவளுக்குப் பணிவுடன் பரிசமாகப்  தந்தாலும் என் மகளுக்கு ஏற்றோர் அல்லர் எனத் தந்தை அவளை மணம் செய்து கொடுக்க மறுக்கிறான். 

இப்படி இருந்தால் பெண் கேட்டு வந்தோர் வாளாவிருப்பார்களா (சும்மா விடுவார்களா?) அவளது தந்தையின் மாளிகை மதிலின் மீது ஏணியைச் சார்த்திப் போருக்குத் தயாராகி விட்டனர்.  மிகுந்த உயரத்தில் பறந்து உணவைக் குறிபார்த்துக் கவ்வும் பருந்து நடக்கக் கூடிய போரிலே வீழ்வோரின் உடலைக் கொத்தித் தின்ன மதிற்சுவரின் இடையிலே அமர்ந்து தனக்குக் கிடைக்கக் கூடிய விருந்தை நினைத்துக் காத்துக் கிடக்கிறது. அந்தப் பெரிய வளமிகுந்த ஊரை வளைத்துக் கொண்ட எதிரிப் படை மயக்கம் தரும் பாதைகளில் (தெருக்களில்) ஊரைச் சார்ந்த வீரரோடு மோதிக் கொள்வது மிகுந்த வருத்தத்திற்கு உரியது. ஊரின் நிலைமை இப்படியா மாற வேண்டும்!?

'படைமயங்கு ஆரிடை' என்ற பாடல் தொடரில் மயங்கு எனும் சொல் தாப்பிசைப் பொருள்கோள் முறையில் -  

(1)- படையோடு சேர்ந்து இருதரப்புப் படைவீரர்கள் போர் செய்தமையைக் காட்ட; 

(2)- ஆரோடு சேர்ந்து 'மயங்கு ஆர்' என மயக்கத்தைக் கொடுக்கக் கூடிய பாதைகளைச் சொல்கிறது.

சமூகச் செய்திகள்:

முசிறித் துறைமுகத்தில் அயல்நாட்டவர் மிளகிற்கு விலையாகத் தங்கக் கட்டிகள் கொடுத்து வாங்கினர். 

பெண்கேட்டவன் சேரனோ எனும் ஐயத்தைக் கிளப்பும் வகையில் மேற்கரை முசிறி; பெண்ணுக்குத் தரக் கூடிய பரிசப் பொருளுக்கு உவமை ஆகிறது. முசிறி அளவு பரிசம் தரக் கூடியவன் சேரனாகத் தான் இருக்க இயலும். பெண் கேட்கும் வேந்தன் அழகாக அடையாளம் காட்டப் படுகிறான். ஆனால் கேட்கப்படும் பெண் பற்றிய தகவல் வெளிவராது இருக்க வேண்டிய தமிழரது பண்பாட்டின் விழுமியமும் அழகாகவே கட்டிக் காக்கப் படுகிறது. 

'படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே' என்ற பாடல் தொடர் உழுவித்த வேளாளர்க்காகப் பணியாற்றிய உழவரும் களமரும் வாழ்ந்த ஊர் பற்றிய செய்திகளைத் தருகிறது. குறுநில மன்னர் கோட்டை கட்டி ஆளவில்லை என இதே இழையில் முன்னரும் கண்டோம் (6,7,19&21.03.26 தேதியிட்ட பதிவுகள்). போர் நடந்த இடம் ஊரின் தெருக்கள் என்று இருப்பதால் கொத்தளங்கள் இல்லாத மதில் சுவர் மட்டுமே மன்னரின் மாளிகையைச் சூழ்ந்து இருந்தமை மீண்டும் உறுதி ஆகிறது. 

ஊரில் இருந்த தெருக்கள் போர்க் காலத்தில் எதிரிகள் மயங்குதற்கு ஏற்ற வகையில் அமைந்து இருந்தன எனப் புலப்படுகிறது. 
இன்று ஜாதிச் சண்டைகளோடு தொடர்புறும் பழைய சிற்றூர்களில் இப்படி எதிரிகளை மயங்க வைக்கும் தெருக்களைக் காணலாம். எதிரி தன்னைத் துரத்தும்படி போக்குக் காட்டி ஓடி வளைந்து வளைந்து செல்லும் குறுகிய தெருக்களின் முனையில் / இறுதியில்; 'இனி எங்கும் செல்ல இயலாது; திரும்பியே தீர வேண்டும்' என்ற தருணத்தில் தம்மை ஒளித்துக் கொண்டோர் வெளிப்பட்டு வர; எல்லோரும் சேர்ந்து எதிரியைப் போட்டுத் தள்ளும் உத்தி...

சக 



kanmani tamil

unread,
Mar 23, 2026, 11:26:35 PMMar 23
to vallamai
புறநானூறு-344

"செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
செறிவளை மகளிர் ஓப்பலின் பறந்துஎழுந்து
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறைசால் விழுப்பொருள் 
தருதல் ஒன்றோ
புகைபடு கூர்எரி பரப்பிப் 
பகைசெய்து        
பண்புஇல் ஆண்மை தருதல் 
ஒன்றோ
இரண்டினுள் ஒன்று 
ஆகாமையோ அரிதே
காஞ்சிப் பனிமுறி 
ஆரங்கண்ணி ..................
கணிமேவந்தவள் அல்குல் அவ்வரியே" அடைநெடுங் கல்வியார் / அண்டர் நெடுங் கல்லினார் / அண்டர் நடுங்கல்லியார் எனப் பலபடச் சுட்டப்படும் புலவர் பாடியது. 

பொருள்:
'இவளது அல்குல் வரிகளைக் 
கணித்த கணிப்பெருமாட்டி;
இவளை அடைய விரும்புபவர் மிகுந்த பரிசப்பொருள்  தர வேண்டும். எந்த அளவுக்குத் தர வேண்டும் எனின்; பசுமையான தோகை உடைய மயில் செந்நெல் விளைந்த வயலில் நெல்லைத் தின்ன; வளையல்  அணிந்த மகளிர் அதை ஓட்ட; அது பறந்து நீர்த்துறையின் ஓரத்தில் உள்ள  மருதமரத்தில் ஏறிக்கொள்ளும் 
நீர்வளமும் நெல்வளமும் கொண்ட ஊரை; அவ்வூரில் உள்ள  விழுமிய பொருள்கள் 
அனைத்துடனும் சேர்த்துத் தர வேண்டும்.  
அல்லது  பகைமை  கொண்டு; ஊரை எரியூட்டும் பண்பற்ற ஆண்மையை மேற்கொள்ள 
வேண்டும் என்கிறாள். இரண்டில் ஒன்று செய்தால் மட்டுமே இவளை மணந்து கொள்ள இயலும்.
குளிர்ந்த காஞ்சித் துளிரோடு கண்ணியாகத் தொடுத்த ஆத்திப் பூ...... (பாடல் சிதைந்து உள்ளது.)

சமூகச் செய்திகள்:

பண்டைத் தமிழகத்தில் ரேகை பார்த்துப் பலன் சொல்லும் பெண்டிர் (கணி மேவந்தவள்- அகவன் மகள்) இருந்தனர். 

நெல் வேளாண்மை செய்த குறுநில மன்னராகிய வேளாளர் தம் பெண் மக்களை இன்னொரு வேளாளனுக்கே மணமுடித்தனர். பாடல் சொல்லும் பரிசப் பொருளாகிய வயல்வளத்தை உழுவித்த அவர்களாலேயே தர இயலும். 

இப்பாடல் சிதைந்து இருப்பினும் மகண்மறுத்த வேளாளனை எதிர்த்துக் காஞ்சித் தளிர் சூடிப் போர் செய்வது பற்றிய குறிப்போடு 
கண்ணியாகக் கட்டிய ஆத்திப்பூ சேர்ந்து இருப்பதால் பெண் கேட்டவன் சோழன் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

விருப்பம் இல்லாது மகட்கொடை மறுக்கும் பெற்றோரை எதிர்த்து; வலியப் போரிட்டு அவரது செல்வத்தை அழித்துப் பெண்ணை உடைமை ஆக்குதல்; பண்பற்ற ஆண்மையின் வெளிப்பாடு எனப் புலவர் சாடுகிறார். தமிழகத்துப் பொதுமக்கள் இடையே வேந்தரது மகட்பாற் காஞ்சிப் போர்கள் உயர்வான செயலாகக் கருதப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

தொகைப்பாடல்கள் தோன்றிய காலத்தில் தமிழ்ச் சமுதாயம் எதிர்கொண்ட தகாக போக்கே மகட்பாற்காஞ்சியாக உருப்பெற்றது என்பதில் மாற்றுக் கருத்து ஏற்பட வழி இல்லை. 

சக 

 

kanmani tamil

unread,
Mar 24, 2026, 10:36:43 PMMar 24
to vallamai
புறநானூறு- 345

"களிறுஅணைப்பக் கலங்கின காஅ
தேர்ஓடத் துகள்கெழுமின தெருவு
மாமறுகலின் மயக்குற்றன வழி
கலம்கழாஅலின் துறைகலக்குற்றன
தெறல்மறவர் இறைகூர்தலின்
பொறைமலிந்து நிலன்நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப்பு அன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணி
கருங்கண் கொண்ட நெருங்கல்வெம்முலை         
மையல் நோக்கின் தையலை 
நயந்தோர்
அளியர்தாமே இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்குத் தரலோ 
இல்என
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்      
குழாஅம் கொண்ட குருதிஅம் 
புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை  நெடுவேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ!
என்ஆவது கொல்தானே
பன்னல் வேலி இப்பணை 
நல்ஊரே" 

'பிடியானையின் பெருமூச்சுப் போல் காற்றை வெளியிடும் உலைத் துருத்தியின் வாயிரும்பு போன்ற இரட்டைக் கதவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் காவல் மிகுந்த மாளிகைக்குள் பெண் பாதுகாப்பாக இருக்கிறாள்.  

புதிது புதிதாகத் தமிழகம் வந்தேறிய வேந்தர் விரும்பும் அப் பெண்ணின் தந்தை அவர் தரும் செல்வத்தை விரும்பவில்லை. தனக்கு நிகரான சமூகநிலை உடையவனுக்கு மட்டுமே தன் மகளை மணம் முடித்துத் தர விரும்புகிறார்.

வேந்தரின் படையில் உள்ள 
போர்யானைகளைக் கட்டி வைத்ததால் ஊரைச் சுற்றியுள்ள சோலைகள் நிலை குலைந்தன. அவர்களது தேர்ப்படை ஓடுவதால் ஊரெங்கும் புழுதி மண்டியது.  குதிரைப் படை எங்கும் சுழன்று திரிவதால் எது வழி என்றே தெரியாத அளவிற்குத் தெருக்களின் தடம் அழிந்தன. மறவர் கூட்டம் ஒன்று திரண்டு வந்ததால் தாங்கும் நிலமே நெளிந்தது. வீரர்கள் கறை படிந்த படைக் கருவிகளைக் கழுவியதால்  நீர்த்துறை  கலங்கியது.  

யார்க்கும் விருப்பத்தைத் தூண்டும் கருமையான கண்களுடன்... முன்னழகைக்  கொண்டவளை விரும்பிய வேந்தர் இரக்கம் கொள்ளத் தக்கவர். ஏனெனில் அவளது தந்தையும் தமையரும் மகண்மறுத்துப் பலகை எனும் கவசத்தை  அவிழ்க்க ஏதுவாகக் கழிபிணி முடிச்சுப் போட்டுக் கட்டி; வெட்டி வீழ்த்தக் கூடிய  வாளைக் கையில் ஏந்திப் போரில் மோத 
விரும்புகின்றனர். 

குழுவினர் ஒன்றுகூடி முந்தைய போரில் குருதி படிந்த 
தலையைக் கூடக் கழுவாமல் 
அடுத்த போருக்குத் தயாராகக் 
காத்திருக்கும் மறவரின் கைகளில் நீண்ட கருநிற  வேல் இருக்கிறது. பருத்தி மரங்களை ஊரைச் சுற்றிலும் வேலியாகக் கொண்ட வயல்வளம் என்ன ஆகுமோ?

சமூகச் செய்திகள்:

இப் பாடல் தலைவியின் ஊரைச் சுற்றிப் பருத்தி மரங்கள் இருந்தன. (இன்றைய பருத்திச் செடி மிகப் பிற்காலத்தில் தமிழகம் வந்தேறியது.) இலங்கையின் புங்குடுதீவு பற்றிய பின்வரும் கட்டுரை 2000ஆண்டுகட்கு முன்னர் பண்டு தொட்டு நம் நாட்டுப் பகுதிகளில் பருத்தி மரமாக வளர்ந்து இருந்ததைச் சொல்கிறது. 


உழுவிக்கும் குறுநில மன்னர் ஆகிய வேளாளர் தம் சமூகத்தைச் சேர்ந்தோர்க்கே பெண் கொடுக்க விரும்பினர். 

வேந்தர் நாற்படை கொண்டு போருக்கு வர; வேளாளர்க்குக் கேடயம் கொண்ட வாள்வீரர் மட்டுமே  போர் செய்தனர். 

மறவர் மூவேந்தரிடமும் அதியனிடமும் போர்ப்பணி செய்தனர். 
எதிரிகளை நடுங்க வைக்கும் மறவர் சேரனின் படைவீரராய்ப் பணி ஆற்றினர் (நற்.18).  பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்காக பகைவர் படையை எதிர்த்து வென்ற மறவர் யானைக் கூட்டத்தைச் சிதற விட்டனர் (பதிற்.28). 
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் படையில் மறவர் திறம்படப் போர் செய்தனர் (பதிற்.49). ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் மறவர் போர் வல்லவர் ஆவர் (பதிற்.57, 60). இளஞ்சேரல்இரும்பொறையின் படையில் இருந்த மறவர் வெறித்தனமாகப் போர் செய்தனர்(பதிற்.82). களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் படையில் இருந்த மறவர் அவனுக்காகக் குறுநில மன்னரின் எயில்களை அழித்தனர் (பதிற்.37). 
வஞ்சி முற்றத்து மறவரை அழித்து வெற்றி கண்ட சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் ஆவான் (புறம்.373). சோழன் நலங்கிள்ளியின் படை வீரர் ஆன மறவர் சேய்மையில் இருந்த நாட்டிற்கும் தயங்காமல் சென்று போர் செய்தனர் (புறம்.31, 68).
‘மறவர் பெரும’ (புறம்.43) எனும் போற்றலுக்கு உரியவனாய்க் கிள்ளி வளவனின் தம்பி மாவளத்தான் அழைக்கப் படுகிறான். 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் மறவர்படை இருந்தது(புறம்.55). அதியமான் மகன் எழினியின் கட்டளைப்படி அவனது படை மறவர் (அகம்.105) ஆநிரை மீட்டனர். 

சக 


kanmani tamil

unread,
Mar 29, 2026, 1:10:14 AMMar 29
to vallamai
புறநானூறு - 346

"பிறங்கிலை இனியுள பால் என மடுத்தலின்
ஈன்றதாயோ வேண்டாள் 
அல்லள்
கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒல்வேன் அல்லன் அதுவாய் 
ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் 
ஒக்கல்    
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் 
செயும்இவள் நலனே" அண்டர் மகன் குறுவழுதி பாடியது.

நிகழ்வது எதையும் தடுக்க முடியாத இக்கட்டான சூழலில் புலம்புவதாகப் பாடல் அமைந்துள்ளது. 

பொருள்:
'இன்னும் பால் எஞ்சியுள்ளது; அதையும் குடித்து முடி; உனக்கு இன்னும் வயிறு நிறையவில்லை' என்று கூறும் தாய் தன் பெண்ணைக் கேட்டு வந்தவரிடம் அவளை விட்டுக் கொடுக்க மனம் ஒருப்படாத தன்மை உடையவளாக இருக்கிறாள். 
நான் கற்றவன் என்று கூறும் அவளது தமையனும் அவளை மகட்கொடை நேர்ந்தோர்க்குச் சம்மதிக்க விரும்பாதவனாக இருக்கிறான். 
போர்த்திறம் மிக்க அவன்; தன் தங்கையை மணக்க விரும்பி வந்தோருடன் ஏற்கெனவே நடந்த போரில் பலரும் இறந்து பட; உயிர் பிழைத்தோரின் சுற்றம் தம்மைப் பேணிப் பாதுகாத்தவர் இன்றித் தத்தளிக்கும் நிலையைச்  சுட்டி; 'இவளது தகுதிப்பாடும் பெறுமதியும்  (தாய்வழிப் பெற்ற பெருமையும் தந்தைவழிப் பெற்ற பெருமையும்) ஆகிய நலம் ஊர் பாழிடமாகக் காரணமாகிறதே' என்று மனம் வெதும்புகிறான். 

சமூகச் செய்திகள்:

பெண்ணைக் கேட்டவர் பற்றிய செய்தியும் பெண் சார்ந்த சமூகம் பற்றிய செய்தியும் இல்லை எனினும்; முன்னதாக நடந்த போரில் தன் தந்தையை இழந்த அவலத்தைக் குறிப்பாகச் சொல்கிறது பாடல். தந்தை இறந்து விட்டதால்; அடுத்து தமையன் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில் இருக்கிறான். 

தான் 'கற்றவன்' என்ற குறிப்பு வலிந்து பெண்ணைக் கேட்கும் எதிரியின் அநாகரிகத்தைச் சகிக்க இயலாத பண்பை நயமாகச் சொல்கிறது. மகட்பாற் காஞ்சிப் போருக்குரிய காரணத்தைப் பாடல் நியாயப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 24.3.26 தேதியிட்ட பதிவும் (புறம்.344) இத்தகு போரைப் பண்பற்ற செயலின் விளைவு எனச் சாடுவது இங்கே இணைத்துப் பார்க்க வேண்டியது ஆகிறது. 

தம் வயிறு நிறைந்தமையும் நிறையாமையும் குழந்தைகட்கு இயற்கையாக உணரக் கூடியவை ஆயினும்; தன் அன்புமனம் நிறையும் வரை ஊட்டும் நடைமுறை தாய்மையின் தவிப்பையும் மகவோடு கொள்ளும் பிணைப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமையும். பெண் குழந்தைகளையும் பேணிப் போற்றிப் பாதுகாத்த தமிழ்ச் சமூகத்தைத் தொகைப்பாடல் காட்டுகிறது. கணவனை இழந்த நிலையிலும் அத்தாய் மகளை எக்குறைவும் இன்றிப் பாதுகாக்க முனைகிறாள். 

பெற்றவள்  பாலைக் குடிக்க வற்புறுத்த வேண்டிய அளவு அவளது மகள் இளையவள் என்ற உண்மை இங்கு சுடுகிறது. பெண்ணின் வயதைப் பற்றிய சிந்தனை இன்றி அவளை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்த்த இழிநிலை பெண் கேட்டோரிடம் இருந்தமை தமிழ்ச் சமூகத்தின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 

சக 



kanmani tamil

unread,
Mar 31, 2026, 11:12:37 AMMar 31
to vallamai
புறநானூறு-347

"உண்போன் தான்நறுங் 
கள்ளின்  இடச்சில
நாஇடைப் பல்தேர்பு கோலச் 
சிவந்த
ஒளிறுஒள் வாள்அடக் குழைந்த 
பைந்தும்பை
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
மணம்நாறு மார்பின் மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின் கூடல் 
அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை  சேப்ப...
என்ஆவது கொல் தானே
விளங்குறு பராரைய ஆயினும் வேந்தர் 
வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங்கின நம்ஊருள் 
மரனே"

பொருள்:
'மணமுள்ள கள்ளை உண்ணும் போது அதற்குத் துணையாகத் தின்ற தொடுகறிகளின் துணுக்குகள் பல்லின் இடுக்குகளில் சிக்கிக் கொள்ள; அவற்றைக் குத்தி எடுத்ததால் சிவந்த நாவைப் போல்; பகைவரை வெட்டியதால் சிவந்த ஒளிபொருந்திய வாளால் செய்த வலிய போரின் காரணமாக வாடிய தும்பைப் பூமாலை அணிந்தவனாகக் காட்சி அளிக்கும் அகுதை; எதிரிகளைத் தாக்கியதால் இலை போன்ற தலை முரிந்து வடுவோடு தோன்றும் ஒடிந்த வேலையும் சந்தனம் கமழும் மார்பையும் உடையவன் ஆவான். அவனது கூடலின் ஆழமான  நீர்நிலைக் கரையை ஒத்து அடர்ந்த கரிய கூந்தலை உடைய இந்தப் பெண்ணோடு இன்பம் துய்க்க.... 

மணம் புரிந்து கொள்ள வந்த வேந்தன் போர்த்தொழில் வல்ல யானையை ஊரில் உள்ள பருத்த அடியை உடைய மரத்தில் கட்டினும்; அவ் யானை அம் மரத்தின் வேர் வெளித் தெரியும்படி அதை அசைத்து விட்டது.  அதனால் இவ்வூர் இனி என்ன ஆகுமோ?'

இவ்வூர் தமிழ் நாட்டிலுள்ள கடலூர் என்னும் ஊராக இருக்கலாம் என்பது ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து. அவ்வாறு சொல்லக் காரணமாக அமைவது கூடலுக்கு அடையாக அமையும் 'குண்டுநீர் வரைப்பு' எனும் தொடர் ஆகும். இத் தொடருக்குக் கடலின் கரை சார்ந்த ஊர் எனப் பொருள் கொள்வதால்; அது கடலூர் ஆகலாம் என்கிறார் உரையாசிரியர். ஆனால் பெண்ணின் கூந்தலுக்கு உவமையாகக் கடற்கரை மண் சொல்லப் படுவதில்லை; ஆற்றின் கரையில் உள்ள மண்ணே அடர்த்திக்கும் அழகிய தோற்றத்திற்கும் உவமையாகக் கூறப்படும். எனவே இப்பாடல் சொல்லும் கூடல் வையைக்கரை மதுரை எனக் கொள்வது தகும். பாடல் சுட்டும் கூடல் பாண்டியன் தலைநகர் ஆகிய மதுரை என்று புறநானூற்றுப் பழைய உரை குறிப்பிடுகிறது. 

சமூகச் செய்தி:
அகுதை திணைமாந்தருள் தலைமை சான்றவன் ஆவான். இக்கருத்தை வலுப்படுத்தத் துணைசெய்வது; கள் அருந்தும் விளக்க முறை பாடலில் இடம் பெறுவது ஆகும். 
பண்டைத் தமிழகத்தில் எல்லாச் சமூகத்தவரும் கள் அருந்திக் களித்தனர்; கள்ளை விருந்துணவோடு படைத்தனர். ஆயினும் கள்ளே மிகப் பெரும் செல்வம் என வாழ்ந்தவராகத் திணைமாந்தர் அடையாளம் காட்டப் படுகின்றனர். இப்பாடல் கட்குடிமுறையை விரித்துப் பேசுகிறதே அன்றி; குறுநில மன்னருக்கு உரிய நெல் வேளாண்மையோடு தொடர்புறுத்தும் செய்தி இல்லை ஆதலால்; அகுதை தலைமை சான்ற திணைமாந்தன் எனல் தகும். பார்க்க: Features Differentiating Venthar, Velir and Tinaimanthar.

அகுதை ஒரு வள்ளல்  என்று  புறநானூற்றுப் பழைய உரை 
குறிப்பிடுகிறது.

பெண்கேட்பவன் வேந்தன் என வெளிப்படையாகச் சுட்டுவது மட்டும் இன்றி; வேந்தனுக்குரிய அடையாளம் ஆகிய யானை இடம் பெறுவதும் குறிப்பிடத் தக்கது. 

அகுதையின் கூடல் ஆற்றங்கரை போன்ற கூந்தல் அழகு பொருந்திய பெண்மகள் என்பதால் கேட்கப்படும் பெண் அகுதையின் மகளோ என்ற ஐயம் எழுகிறது எனினும்; வெளிப்படையாகச் சொல்லப் படவில்லை (தமிழர் பண்பாட்டு விழுமியம்). 

கூடல் பாண்டியனின் தலைநகர் ஆகும் முன்னர் அகுதை அவ்வூரின் தலைவனாக இருந்தான். 
தித்தன் எனும் குறுநில மன்னனை வென்று சோழன் உறந்தையைத் தலைநகர் ஆக்கிக் கொண்டது போல; அகுதை எனும் திணைமாந்தனை வென்று பாண்டியன் கூடலைத் தன் தலைநகர் ஆக்கினான் என அறிகிறோம். 
குறுந்தொகை- 298 அகுதையின் தந்தை பற்றிப் பேசுகிறது. வேந்தர் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றும் முன்னர் குறுநில மன்னராகிய வேளாளரும் திணைமாந்தரும் தமிழகத்தில் மேலோங்கி இருந்தனர். 

சக 
  

kanmani tamil

unread,
Apr 1, 2026, 1:40:01 AMApr 1
to vallamai
புறநானூறு-348
"வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
கள்ளரிக்கும் குயம் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன                                
குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே" பரணர் பாடியது.                               
'வெண்ணெல்லை அறுப்பவர் இசைக்கும் முழவின் ஒலியைக் கேட்டு அஞ்சி; மரங்களின் கணுக்களில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் விலகத் தேனடையில் உள்ள தேனைக் குயவர் எடுப்பர். சில சிறுமீன்களைப் பிடித்துச் சீவிப்  பாணர் உண்பர். அவரது சேரிகள் உடைய ஊர் ஊணூர்.  அவ்வூரின் தலைவன் தழும்பன் சொன்ன சொல் தவறாதவன். இப்பெண் அவ்வழகிய ஊரைப் போன்றவள். இவளை மணம் செய்துகொள்ள விரும்பி வந்த வேந்தருடைய நெடிய தேர்கள் நிழல் தோறும் நிறுத்தப் பட்டுள்ளன. சிவந்த நெற்றியையுடைய யானைகள் மரங்கள் தோறும் கட்டப் பட்டுள்ளன. அதனால் பெரிய நீர்த் துறையில் உள்ள மரங்களின் வேர்கள் சிதைந்து வெளித் தெரிகின்றன. குவளை மலர் போன்ற மைதீட்டிய  கண்களையுடைய இம்மகளை இவளது தாய் பெறாமல் இருந்திருந்தால் இந்த நிலை நேர்ந்திருக்காது.'

சமூகச் செய்திகள்:
தழும்பன் ஊணூரின் தலைவன் எனச் சுட்டப்படுகிறான். ஊரின் தலைவர்களைத் தொகைப் பாடல்கள் 'ஊரன்' என்று குறிப்பிடுகின்றன. உழுவிக்கும் குறுநில மன்னனுக்காக நிலத்தில் இறங்கி உழும் உழவர் வாழும் இடமே ஊர் ஆனது. ஊரனும் உழவரும்  திணைமாந்தர் ஆவர். (பார்க்க: பண்டைத் தமிழகக் குடியிருப்புகள் உணர்த்தும் சமூகப் பிரிவுகள் -   
https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/article/view/46175/16049).  நாடனாகிய வேளாளனின் நெல் வேளாண்மைக்குப் பணியாளர் ஆனமையால் வயலைச் சார்ந்து ஊர்கள் அமைந்து இருந்தன. எனவே ஊர்களின் வருணனையில் வயலும் வயல் சார்ந்த செய்திகளும் உள்ளன. 
குயவர் சேரியும் பாணர் சேரியும் ஊணூரைச் சார்ந்து இருந்தன. 

பாடல் தலைவி ஊரனாகிய தழும்பனின் ஊணூர் போன்ற நலம் மிகுந்தவள் என்ற உவமை அவளைத் தழும்பனின் மகளோ என ஐயுற வைக்கிறது. ஆயினும் தமிழகப் பண்பாட்டு விழுமியத்தின் படி;  வெளிப்படையான ஆதாரம் இடம் பெறவில்லை. 

அறுவடைக்கு முன் வயலில் உள்ள பறவைகளை வெருட்டுவதற்காகத் தண்ணுமையை முழக்குவது வழக்கிலிருந்தது.

ஊரின் அபாயநிலைக்குப் பெண்ணே காரணம் என்ற மனப்பாங்கு இப் பாடலில் வெளிப்படுவது உழவரின் வாழ்வியலில் பெண்ணின் பெறுமதி பற்றிச் சற்றே சிந்திக்க வைக்கிறது. வேந்தன் காரணமானவனாகக் கருதப்படாதது குறிப்பிடத் தக்க செய்தி ஆகிறது. 

பி.கு. தழும்பனுக்குக் கூறும் சமூகச் செய்தி நேற்றைய - 31.03.2026 - பதிவில் இடம் பெற்ற அகுதைக்கும் பொருந்தும்.

சக 


kanmani tamil

unread,
Apr 2, 2026, 10:38:59 AMApr 2
to vallamai
புறநானூறு-349 

"நுதிவேல் கொண்டு 
நுதல்வியர் துடையா
கடியகூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து 
மொழியலனே
இஃதுஇவர் படிவம் ஆயின் வைஎயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை         
மரம்படு சிறுதீப் போல
அணங்கு ஆயினள்தான்  பிறந்த ஊர்க்கே." மதுரை மருதனிள நாகனார் பாடியது 

பொருள்:
'தன் வேலின் கூர்மையான இலைப்பகுதியால் தன் நெற்றியில் உள்ள வியர்வையைத் துடைத்து வேந்தன் கடுஞ்சொற்களைக் கூறுகிறான்.  இப்பெண்ணின் தந்தையும் மறுத்துப் பேசுகிறானே ஒழியப் பணிந்து பேசவில்லை. இவர்கள் இருவரின் மனத் திட்பமும் இங்ஙனம் இருப்பின்; போரும் அழிவும் நிகழ்வது உறுதி. காய்ந்த மரம் உரசிப் பற்றிய தீ மரத்தை மட்டுமின்றி அம்மரம் நிற்கும் காட்டையே அழிப்பது போல்; கூர்மையான பற்களையும் செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையுமுடைய கரிய நிறமுள்ள இந்த அழகிய இளம்பெண் தான் பிறந்த ஊருக்கே தீங்கு விளைவிப்பவள் ஆயினாள்.'

சமூகச் செய்தி:
பாடலில் பெண் கேட்பவன் வேந்தன் என்ற செய்தி மட்டுமே உள்ளது. பெண்ணின் தந்தை பெருஞ்சிக்கல் கிழான் என்று அடிக்குறிப்பு தான் கூறுகிறது. கிழான் என்பது ஊரனின் மாற்றுப் பெயர் ஆகும். 

வேந்தனால் ஊர் அழியும் என்பது தமிழ்ச் சமுதாயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட முடிபாக இருந்துள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Apr 4, 2026, 12:05:37 PMApr 4
to vallamai
புறநானூறு-350

"தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்
யாங்கு ஆவதுகொல் தானே தாங்காது
படுமழை உருமின் இரங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை 
வந்துஎம்   
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமைகுவர் அல்லர் போர்உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடிபிறழ் முன்கை இளையோள்
அணிநல் ஆகத்து அரும்பிய சுணங்கே" மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது. 

பொருள்:
'இப்பெண் மிகுந்த வலிமையுடைய தன் தமையன்மாருக்குப் போரில் வெற்றியைத் தரும் வேலைப் போன்ற சிவந்த மை தீட்டிய கண்களை உடையவள். வளையல்கள் தவழும் கைகளை உடையவள். தன்  மார்பகத்தில் சுணங்கின் அழகிய தோற்றம் கொண்டவள். 
ஒலிக்கும் மேகத்தினின்று தோன்றும் இடிபோல் முழங்கும் முரசையும் விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய வேந்தர் இவளை மணம் செய்து கொள்ள விரும்பி; காலை முதல் எங்கள் ஊரின் நெடிய வாயிலிடத்துச் சுற்றித் திரிகின்றனர். 
பெண் தர மறுத்தால் போர் செய்யாமல் விடமாட்டார்கள். 
தூர்ந்த கிடங்கும் சீர்கெட்ட 
ஞாயில்களும் (பகைவர்களை நோக்கி அம்பு எய்வதற்காக மதில் சுவற்றில் உள்ள துளைகள்) சிதைந்த மதிலும் உடைய இவ்வூர் ஏற்கெனவே போரால் தன் வலுவிழந்த தடயங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு போரைத் தாங்காதாகலின் என்ன ஆகுமோ?'

சமூகச் செய்திகள்:
பாடல் பேசும் பெண் ஒரு குறுநில மன்னனின் மகள் என்பதற்கு ஆதாரமாக அமைவது நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கிய வேளாளரது மாளிகையின் உயர்ந்த நிலைவாயிலும் அதைச் சுற்றி அமைத்துக் கொண்ட கிடங்கும் ஆகும். வேந்தரின் காவற்காடோ கொத்தளமோ இல்லை என்பது நோக்கத்தக்கது. 

சக 

seshadri sridharan

unread,
Apr 4, 2026, 11:29:23 PMApr 4
to vall...@googlegroups.com
சுணங்கு மலர் எப்படி இருக்கும் 

kanmani tamil

unread,
Apr 5, 2026, 11:23:45 AMApr 5
to vallamai
புறநானூறு-351

படுமணி மருங்கின பணைத் தாள் யானையும்
கொடிநுடங்கு மிசைய தேரும்மாவும்
படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லென
கடல்கண்டன்ன கண்அகன் 
தானை
வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
வண்கை எயினன் வாகை 
அன்ன
இவள்நலம் தாராது அமைகுவர்அல்லர்
என்ஆவது கொல் தானே 
தெண்நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி 
நாரை
தேங்கொள் மருதின் 
பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின் இப்பணை நல்ஊரே" மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது. 

பொருள்:
'பருத்த கால்களை உடைய யானைகளின் இருபுறமும்  மணிகள் ஒலிக்கக்; கொடி கட்டிப் பறக்கும் தேர்களோடு குதிரைகளும் நிறைய; படைவீரர்கள் ஒருங்கு குவிந்து  கடல் ஒலி போல் ஆரவாரிக்கின்றனர். இத்தகு பெரும்படை உடைய வெற்றி முரசு கொட்டும் வேந்தர் இவளைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்போடு வந்துள்ளனர். கொடையில் சிறந்த எயினன் என்பவனின் வாகை என்னும் ஊர் போன்ற நலமும் வளமும் மிகுந்தவள் இவள் ஆவாள். இவளைப் பெண்கேட்டு வந்தவர் இவளை அடையாது  திரும்ப மாட்டார். தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை உண்ட சிவந்த வரிகளுடைய நாரை இனிய மருதமரத்தின் பூக்கள் உள்ள கிளையில் தங்கிச் சலிப்படையும் போது; காஞ்சி மரத்தின் கிளையில் விரும்பி உறங்கும் பாதுகாவல் அமைந்த சிறப்பான இவ் வயல்வளம் மிகுந்த ஊர் இனி என்ன ஆகுமோ?'

சமூகச் செய்திகள்:
பாடல் பேசும் எயினன் தன் சமூகப் பெயராலேயே அழைக்கப் படுகிறான். வாகை அவனது ஊர் என்று குறிப்பிடப் படுவதால் அவன் அவ் ஊரின் தலைவனாகிய ஊரன் என்பது வெளிப்படை. தான் சார்ந்த நாடனுக்காக அவன் வேளாண்மை செய்ததால் அவனது ஊரில் வயல்வளம் இருந்தது என்பது 'பணைநல் ஊர்' எனும் தொடரால் தெரிகிறது. தெண்ணீர்ப் பொய்கையும் அங்கு மேயும் நாரைகளும் கரையில் நின்ற 
மருத மரமும் காஞ்சி மரமும் ஊரைச் சூழ்ந்த வயல்களும் நீர் வளத்திற்கும் நிலவளத்திற்கும் ஆதாரங்களாக அமைகின்றன. 

பாடல்தலைவிக்கு வாகை என்ற ஊர் உவமை ஆவதால் அவள் அவ்வூர்த் தலைவனின் மகளோ என்ற ஐயம் எழுகிறது ஆனாலும் முடிபாகச் சொல்ல ஆதாரம் இல்லை. 

வேந்தர் ஊரனாகிய கிழானின் மகளை வலிந்து  பெண் கேட்டமை (புறம்.347, 348, 349) கண்டோம். 
பரதவர் மகளை வலிந்து பெண் கேட்டு விடுவானோ என அஞ்சுவதைக் கண்டோம் (புறம்.339). 
வேளாளர் மகளை வலிந்து பெண் கேட்டமை கண்டோம் (புறம்.337, 338, 341, 342, 343, 344, 345, 350, 355). 
எயினர் குலப் பெண்ணையும் அவ்வண்ணமே வலிந்து பெண் கேட்டனர். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 6, 2026, 5:19:44 AMApr 6
to vallamai
புறநானூறு-352

"தேஎம்கொண்ட 
வெண் மண்டையான்
வீ....................................கறக்குந்து
அவல்வகுத்த பசுங்குடையான்
புதல்முல்லைப் பூப்பறிக்குந்து
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்   
குன்றுஏறிப் புனல்பாயின்
புறவாயால் புனல்வள
.............................நொடைநறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் 
நன்கலம்
கொடுப்பவும் கொளாஅனெ
........................ர் தந்த நாகுஇள வேங்கையின்
கதிர்த்து ஒளிதிகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவி ..................   
................................................யமரே"

பொருள்: 
பெருங்கொடையாளன் தித்தனின் உறந்தை எனும் ஊர் மக்கள் கள் குடிக்கும் வெண்மையான மண்டையில் மாட்டின் பருத்த முலைகளிலிருந்து பாலைக் கறப்பர். புதரில் பூத்த முல்லைப் பூக்களைக் குழிவுடன் கட்டிய பனைஓலைக் குடையில் பறிப்பர். ஆம்பல் வள்ளித் தண்டை வளையலாக அணிந்த பெண்கள் நீர்நிலையை அடுத்த மணற்குன்றுகளில் ஏறிப் பாயும் போது மதகுகள் வழியே நீர் வெளியேறும்... (பாடல் சிதைந்து உள்ளது.)  கள்ளுக்குப் பண்டமாற்றாக அமையும் வெண்ணெல் விளையும் வயல்களை வேலியாகக் கொண்ட அவ்வூருக்கு நிகரான அணிகலன்களைப் பரிசப் பொருளாகக் கொடுத்தாலும் இப்பெண்ணின் தந்தை ஏற்க மறுக்கிறான்.  இவள் இளம் வேங்கை மரத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்து ஒளியுடன் திகழும் பூக்களைப் போல் நுட்பமாக அணிசெய்யும் பலவாகிய சுணங்கினையும் முரசின் கரிய கண் போன்ற...முன்னழகையும் உடையவள்.  இவள் தந்தையும் சிறிய கோலால் வருத்திச் செலுத்தும் குதிரையை உடையவர்… (பாடல் சிதைந்து உள்ளது)
போர் நிகழ்வது உறுதி.'

சமூகச் செய்திகள்:
உறந்தைக்கு நிகரான பரிசப் பொருளைக் கொடுக்கத் தயாராக இருப்பவன் மகட்கொடை நேர்கிறான் என்பதாலும்; பாடலின் அடிக்குறிப்பு கிள்ளியின் பெயரைச் சுட்டுவதாலும்; பெண்ணைக் கேட்பவன் சோழன் எனத் தெரிகிறது. 

சோழர் தலைநகராகிய உறந்தை எனும் ஊரின் தலைவன் தித்தன் எனப் பாடல் சொல்வதால் சோழர் தித்தனிடம் இருந்து உறந்தையை வென்று பெற்றனர் என்பதை உய்த்து உணர முடிகிறது (அகுதையிடம் இருந்து பாண்டியன் கூடலை வென்று பெற்றது போல... பார்க்க: 31.3.'26 தேதியிட்ட பதிவு- புறம்.347). இதனால் தித்தனும் அகுதை போன்ற ஊரன்/ ஊர்த் தலைவன் என்பது வெளிப்படை. 

பெண்ணைப் பற்றிய அடையாளம் வழக்கம் போல் இல்லை. 

சக 



kanmani tamil

unread,
Apr 7, 2026, 5:34:01 AMApr 7
to vallamai
புறநானூறு-353

"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த                        
பொலம்செய் பல்காசு அணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
தருமணல் இயல்வோள் சாயல் நோக்கித்
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை                                
வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
யார்மகள் என்போய் கூறக் கேள்இனிக்
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்                   
தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
. . . . . . . . . . . . . .
செருவாய் உழக்கிக் குருதி ஓட்டிக்
கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு                           
பஞ்சியும் களையாப் புண்ணர்
அஞ்சுதகவு உடையர்இவள் தன்னை மாரே"

பொருள்:
'கம்மியன் திறம்படப் பொற்காசுகளைக் கோத்துச் செய்து தந்த குற்றமற்ற மேகலையைத் தன் சிறுத்த இடையில் அணிந்து; ஒளி வீசும் பொன்மாலையைத் தலையில் அணிந்து; ஒப்பனை செய்து கொண்டு முற்றத்தில் பரப்பிய மணலில் இயல்பாகச் செல்லும் இவளின் அழகைத் தவளை போன்று இமைக்காது விரித்த கண்ணால் வெறித்துப் பார்த்து 'யார் மகள்?' என வினவும் வெற்றித் திருமகன் ஆகிய தலைவனே! கூறுகிறேன் கேள்.
இவள் அகன்ற இடத்தில் பல குன்றுகள் போல் குவிந்த நெல்லந்தாளில் நாள்தோறும் கடாவிட்டு அடித்தெடுத்த நெல்லையெல்லாம் தனது வலிய வில்வீரர் ஆகிய பணியாட்கள் சேமித்து வைத்து உணவாகக் கொள்ளும்படி வளமாகத் தரும் தொல்குடி மன்னனின் மகள் ஆவாள்.

நேற்று இவளைப் பெண் கேட்டு வந்த மிகவும் முதியவரான வேந்தரை எதிர்த்துப் ..... (பாடல் சிதைந்து உள்ளது) போர் செய்து; குருதி பெருகி ஓட; இவளது அண்ணனும் தந்தையும் தம் புண்களில் கட்டிய பஞ்சைக் கூட நீக்காமல்; நுனி முரிந்த வேலைத் தீட்டிக்கொண்டு காண்போரை அச்சுறுத்தக் கூடியவர்கள் ஆதலால்; அவர்கட்கு அஞ்சித்தான் ஆகவேண்டும்.'

சமூகச் செய்திகள்:
வீட்டு முற்றத்தில் புழக்கத்திற்கு வசதியாக மணலை வரவழைத்துப் பரப்பினர். 

நெல்வேளாண்மை செய்தோர் தம் பணியாட்களையே தம் போர்வீரராகவும் வேலை வாங்கினர். 

வேளாளர் தாம் விளைவித்த நெல்லையே விற்றொழில் வல்ல பணியாளர்க்குக் கூலியாக அளித்தனர். அந் நெல்லரிசி அடுத்த அறுவடை வரை அவர்கட்கு உணவாகப் பயன் அளித்தது. 

பண்டைத் தமிழகத்துக் குறுநில மன்னரின் மகள்கள் பொன்மேகலையும் பொன்கண்ணியும் (தலை அலங்காரம்) அணிந்து தம்மை அழகுபடுத்திக் கொண்டனர்.

வேந்தர் வேளாளரிடம் பெண் கேட்ட போது வயதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கிழட்டு வேந்தர் கூட இளம் மங்கையை மணக்க விரும்பினர்.

பண்டைத் தமிழகத்தில் போர்ப் புண்களுக்குப் பஞ்சு வைத்துக் கட்டிச் சிகிச்சை அளித்தனர். 

சக 

  


kanmani tamil

unread,
Apr 8, 2026, 8:08:17 PMApr 8
to vallamai
புறநானூறு-354

"அரைசு தலைவரினும் 
அடங்கல் ஆனா
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயல்அமர் கழனி வாயில் பொய்கை
கயல்ஆர் நாரை உகைத்த 
வாளை        
புனலாடு மகளிர் வளமனை 
ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய 
அணந்து ஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கே" 

பொருள்:
'வயல்கள் சூழ்ந்த கழனிக்கு வாயிலாக அமைந்த பொய்கையில் கயல் மீனை உண்ணும் நாரை புறந்தள்ளிய வாளைமீன்கள் அங்கு விளையாடும் பெண்களால் அவர்தம் செல்வமிகு வீடுகளைச் சென்று சேரும் வளம் பொருந்தியது இவ்வூர் ஆகும். 
இப்பெண்ணின் சுணங்கு அணிசெய்யும் நிமிர்ந்துயர்ந்த  பருத்த மென்மையான மூங்கில் போன்ற தோள்களது எழிலார் முன்னழகும் மானைப் போல் மருண்ட மகிழ்ச்சி நிறைந்த பார்வையும் காரணமாக இவ்வூர் தன் அழகை இழக்கும் நிலை வருமோ?! 
அரசர் போரிட வரினும் அடங்கிப் போகத் தயாராக இல்லாதவன் இவளது தந்தை ஆவான். காம்புடன் சரிவரப் பொருத்தப்பட்ட வேலைப் போருக்கு முன்னர் நீராட்டும் சடங்கிற்குப் பெரியோருடன் கூடிச் சென்று விட்டான்.

சமூகச் செய்திகள்:
பெண்கேட்பவன் அரசாள்பவன் என்ற குறிப்பு தவிர வேறெந்தச் செய்தியும் இல்லை. கேட்கப்படும் பெண் நெல் வேளாண்மை செய்யும் வேளாளன் மகள் என்ற உண்மை ஊரின் வருணனையில் வெளிப்படுகிறது. 

பண்டைத் தமிழகத்தில் போருக்குப் புறப்படும் முன்னர் வேலை நீர்ப்படை செய்து வழிபடும் வழக்கம் இருந்தது. 

சக

kanmani tamil

unread,
Apr 9, 2026, 2:00:06 AMApr 9
to vallamai
புறநானூறு-336
"வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினனே
கடவன கழிப்புஇவள் 
தந்தையும் செய்யான்
ஒளிறுமுகத்து ஏந்திய 
வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய் 
மூழ்த்தனரே                                
இயவரும் அறியாப் பல்இயம் 
கறங்க
அன்னோ பெரும் பேதுற்றன்று இவ் அருங்கடி மூதூர்
அறன்இலள் மன்ற தானே 
விறல்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா 
இளமுலைத்          
தகைவளர்த்து எடுத்த 
நகையொடு
பகைவளர்த் திருந்தஇப் 
பண்புஇல் தாயே" பரணர் பாடியது

பொருள்:
'பெண்ணைக் கேட்ட வேந்தன் கடுஞ்சினத்துடன் இருக்கிறான். அவளது தந்தையும் மகளைப் பருவத்தில் மணம்செய்து கொடுக்கும் கடமையைச் செய்து முடிக்கும் எண்ணம் இன்றி மறுக்கிறான். ஒளிரும் முகத்தில் பருத்த பூண் அணிந்த தந்தங்கள் மிளிரத் தோன்றும் யானைகளோ தம்மைப் பிணித்த மரங்களோடு ஒரு நிலையில் இல்லை. ஒளி வீசும் வேலேந்திய வீரர்களும் தம் எண்ண ஓட்டத்தைத் தெரிவிக்க இயலாதவராய் வாய் மூடித் 
தவிக்கின்றனர். வாச்சியக்காரர்கள் வேறுவழி இன்றிப் போருக்குரிய பல இசைக் கருவிகளை முழக்குகின்றனர். மிகுந்த 
பாதுகாப்புடைய இந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கின்றது. இவள் தாய் அறவுணர்வு இல்லாதவள். விரிந்த வேங்கைப் பூக்கள் மிகுந்து ஓங்கிய மலையில் கோங்கின் மொட்டுகள் அரும்பி இருப்பது போல் எடுப்பாகத் தோன்றும் வனப்பு மிக்க முன்னழகுடன் திகழும் மகளைத் தக்க முறையில் வளர்த்த மன நிறைவோடு மகிழ்ந்த தாயானவள் பண்பே இல்லாமல் பகையை வளர்க்கிறாள்.'

சமூகச் செய்திகள்:
பெண் கேட்ட வேந்தனின் சினமும் மரத்தை நிலைபெயரச் செய்யும் அவனது யானைப் படையின் சினமும் நடக்கவிருக்கும் போரையும் ஊரின் அழிவையும் உறுதி செய்யும் வேளையில்; மக்களின் எண்ணமும் மறவரின் எண்ணமும் பரணரின் எண்ணமும் பெண்ணைப் பெற்றோரின் மனவுறுதியோடு முரண்படுவது இங்கே குறிப்பிடத் தக்க செய்தி ஆகிறது. 

சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகளை அடாவடித் தானமாகப் பெண் கேட்கும் வேந்தனுக்கு மணம் செய்து கொடுக்க மறுக்கும் பெற்றோரை மறுத்துப் பேசும் துணிவு இல்லாமல் மறவர் வாயடைத்து நின்றமைக்குத்; தவிர்க்க இயலாத ஊரின் அழிவும் உயிர்ச்சேதமும் மட்டும் காரணம் என்று சொல்ல இயலவில்லை. வேந்தனே வந்து பெண்கேட்கும் போது கொடுத்து விட்டால் பேரழிவைத் தவிர்க்கும் மாற்றுவழி இருக்கிறதே என்ற கொள்கை முரண்பாடே காரணமாகத் தோன்றுகிறது.

இயவர் பல்லியம் கறங்க இசைத்தமை அவர்கள் ஊதியம் பெறும் பணியாட்கள் என்ற உண்மை தானே தவிர; மறவர் எண்ணியதைப் போல மாற்றுவழியைப் பின்பற்றத் தான் அவர்களும் விழைந்தனர் என்ற உண்மை பாடலில் உறுதிபடத் தெரிகிறது. 

மேற்சுட்டிய கருத்துகளை வலுப்பெறச் செய்வது பார்ப்பனராக அறியப்படும் பரணரின் வெளிப்படையான சாடல்களே. ஒரு ஊரைக் காப்பாற்றுவதற்காகப்; பெற்ற மகளைக் கேட்கும் வேந்தனிடம் கொடுக்க மறுக்கும் தாயை அறவுணர்வே இல்லாதவள் என்கிறார். அது மட்டும் இல்லை; பண்பற்றவள் என்று வசை பாடுவது அவரது வெறுப்பைப் புலப்படுத்துகிறது.
தாய்மையின் மனத்திட்பத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பரணரிடம் துளியும் இல்லை. இங்கு பரணர் வெறும் அரசியல்வாதியாகத் தெரிகிறார். 

அவரது அரசியல் அறிவே பெண்ணைப் பெற்ற தந்தையையும் விமர்சிக்கிறது. கேட்டவனுக்குப் பெண்ணைக் கொடுத்துக் கடமையை முடிக்கும் முனைப்பு இல்லாத தந்தை என்ற எண்ணம் தான் பாடலின் முதல் இரு அடிகளில் புலனாகிறது. 

இதற்கு முந்தைய பதிவுகளில் ஊரின் அழிவிற்குப் பெண்ணைக் காரணம் காட்டிய மக்கள் பற்றிக் கண்டோம் (புறம்.348, 349- 1&2.4.26 தேதிகளில் இட்ட பதிவுகள்). 
புறம்.346- 29.03.'26 தேதி இட்ட பதிவில் தந்தையை இழந்த பெண்ணின் தமையன் அப்பெண்ணின் நலனே துன்பத்தின் காரணம் என்கிறான். இந்தப் பாடல் ஊருக்கு ஏற்பட்டிருக்கும் அஞ்சந்தகு நிலைக்குத் தாயைக் காரணம் காட்டுவது; அந்த அளவிற்கு ஆளுமை மிக்க தாயர் இருந்தமையைக் காட்டுகிறது. 

சக 


kanmani tamil

unread,
Apr 10, 2026, 9:11:39 AMApr 10
to vallamai
நற்றிணை-370

"வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் 
முதுபெண் டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாள் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே" உறையூர் கதுவாய்ச் சாத்தனார் பாடியது.

பொருள்:
'பாணனே! அருகே வருவாயாக! நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த என் மனைவி தலைச்சூலியாய்ச் சுற்றத்தார் சூழ நின்று ஓம்ப; எம் குடி தழைக்க மகவை ஈன்ற போது; ஒளிரும் சிறுவெண் கடுகின் சாந்தோடு விளக்கெண்ணெய் கலந்து; மாளிகையெங்கும் விளங்கும்படிப் பூசிப் பாதுகாக்கப்; பாயலில் படுத்திருந்தாள். அப்போது அவளை நெருங்கி மெலிதாக ஒலிக்கும் அன்னத்தின் சாயலை உடையாய்! புதல்வனை ஈன்றதால் இதுவரை பெற்ற பெயர் மாறி முதுபெண்டு எனும் சிறப்புப் பெயர் பெற்று அழகிய திதலை ஆகிய வரிகள் ஓடும் அல்குலை உடையை ஆகித் துயில்கின்றனையோ? எனக் கூறி; மிகுந்த மாட்சிமைப்பட்ட வயிற்றில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சிறிது நேரம் அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; அன்றலர்ந்த முல்லை போல் நகைத்து; அத்துடன் பொருந்தும் நீலமலர் போல் மையுண்ட கண்களைக் கையான் மூடிக் கொண்டதை எண்ணுந்தோறும் எனக்கு நகை தோன்றும். (அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்!)

சமூகச் செய்திகள்:
பண்டைத் தமிழகத்தில் கசகசா என இன்று அழைக்கப்படும் சிறுவெண்கடுகை அரைத்து; ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் நெய் ஆகிய விளக்கெண்ணெயுடன் சேர்த்துக் கிருமிநாசினியாகப் பயன்படுத்தினர். மகப்பெற்ற வீட்டில் பூஞ்சைத் தொற்று ஏற்படாது இருக்க இச்சாந்தை வீடெங்கும் பூசினர். 

பெண்ணின் தலைச்சூல் (முதல் சூல்) கடுஞ்சூல் எனப்பட்டது. முதல் மகப்பேறு (தலைப் பிரசவம்) ஒரு பெண்ணின் உயிருக்கு ஏற்படும் சோதனை என்ற கொள்கை இன்றும் நிலவுகிறது. 

மகப்பேறுக்குப் பின்னர் பெண்ணின் தொப்புளைச் சுற்றிலும் இருந்து அடிவயிறு எங்கும் காணப்படும் விரிகோடுகள் (stretch marks) திதலை எனப்பட்டன. 

மணவினை முடிந்த ஒரு பெண் மகப்பெற்ற பின்னர் 'முதுபெண்டு' எனப்பட்டாள். இச் சொற்றொடரில் உள்ள 'முது-' எனும் முன்னொட்டிற்கும் வயதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குழந்தையை ஈன்ற பெண்டிரே மங்கலப் பெண்டிராகக் கருதப் பட்டனர். மங்கல நிகழ்வுகளில் பங்கேற்கும் தகுதி பெற்றனர்;  அதாவது பெண்மைநலம் முழுமை அடைந்த பெண்டிர் எனும் பொருளில் 'முதுபெண்டு' வழங்கியது. 

புதல்வனைப் பெற்ற பெண்கள் விதந்து பாராட்டப் படுகின்றனர். ஏனெனில் ஆண் முதன்மைச் சமுதாயத்தில் சொத்துரிமை புதல்வர்க்கு மட்டுமே இருந்தது. இதனால் தான் குலம் தழைக்க மகவை ஈன்றவள் எனப் பாராட்டப்படுகிறாள். 

சக 

kanmani tamil

unread,
Apr 11, 2026, 1:51:01 AMApr 11
to vallamai
குறுந்தொகை-181 
"இதுமற்று எவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே" கிள்ளிமங்கலங்கிழார் பாடியது. 

பொருள்:
'தோழி! இரண்டு கொம்புகளை உடைய  எருமைக் காரான் ஒன்றை அது அண்மையில் ஈன்ற கன்றின் அருகேயே உழவன் கட்டிச் சென்று விட்டான். அப் பெண்ணெருமை தன் கன்றை விட்டு விலகிச் செல்லாமல்; அருகிலேயே உள்ள பசிய பயிர்களை மேய்கிறது.  அத்தகைய ஊரின் தலைவனது செல்வம் பொருந்திய இல்லத்தில் பல கடமைகளை மேற்கொண்ட பெருமுது பெண்டாகிய நாம் அவரோடு ஊடியிருக்கும் இந்த நேரத்தில் அவர் இத்தகையவர் என்று பழிச் சொற்களைப் பேசுவதால் என்ன பயன்?!' எனத் தலைவன் புறத்தொழுகத் தன்  கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பும் மகப்பேறுற்ற தலைவி தன்னை முதுபெண்டிருள்  ஒருத்தி எனக்  கூறுகிறாள்.
 
பாடலின் 3-5ம் அடியில் உள்ள 
வருணனை; அண்மையில் கன்றை ஈன்ற இரண்டு மருப்பு 
உடைய எருமைக்  காரானைக் காட்டுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்லாமல்  தான்  இருக்கும் இடத்திலுள்ள;  பால்பிடித்த கதிர்களை மேய்வது; பல நுட்பமான பொருட்களை உணர்த்தும் உள்ளுறை ஆகிறது. 

விளக்கம்:
இரண்டு மருப்புள்ள எருமை என விதந்து சொல்வது உட்பொருள் கருதியே ஆகும். திருமணத்தால் ஒரு பெண் பிறந்தவீட்டில் இருந்து தன் வீடாகிய புகுந்த வீட்டினுள் நுழைகிறாள். அவளது வாழ்க்கை இருபுறக் கடப்பாடு உடையதாக; இரண்டு குடும்பங்களின் பெருமையைப் பேசக் கூடியதாக அமைய வேண்டும் என்பதையே 'இருமருப்பு எருமை' என்ற தொடர் சுட்டுகிறது. இங்கு  அண்மையில் ஈன்ற எருமை பாடல் தலைவியைக் குறிப்பாகச் சுட்டும் உள்ளுறை ஆகிறது. 

அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக் காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள முடியும். அதனால் ஏற்படும்  இழப்பு கருதிக் கடிந்து எருமையை யாரும் விரட்டவில்லை. அந்த அளவு வளமான நன்செய் - இல்லறக் கடமைகளுக்குத் தகுந்த செல்வம் மிகுந்த வாழ்க்கையைக்  குறிக்கிறது. 

எருமைக்குத் தாய்மைப் பிணைப்பே முதன்மை ஆவது போலத்; தலைவிக்குப் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது. உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான் என்பது குடும்பக் கட்டமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது. 

தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தலைவி விரும்பவில்லை. துன்பத்தின்  இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது; மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்க வல்லது எனத் தன்னைத் தேற்ற முயலும்  தோழிக்குத் தடை போடுகிறாள்.

'திருமனைப் பல கடம் பூண்ட 
பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே' எனத் தன் தகுதியைத் தானே நிலைநாட்டுகிறாள். திருமணம் பந்தத்திற்கு உரிய கடமைகளுள்; குழந்தை வளர்ப்பை முதன்மைப் படுத்தும் அவளது பேச்சில் இருந்து; மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை மேலாண்மை, உற்ற உறவு தாங்கல், நட்பு ஓம்பல், சுற்றம் போற்றல் என மனையாட்டியின் பொறுப்புகள் பலப்பல என்பது குறிப்பாகப் பெறப்படுகிறது. அவற்றை ஆற்றவேண்டிய முதுபெண்டு ஆனமையைத் தன் வாய்மொழியாகவே கூறுகிறாள். 

சமூகச் செய்திகள்:
எவ்வாறு மணச்சடங்கு 'திரு' எனும் அடைமொழியைப் பெறுகிறதோ அது போல் இல்லறத்தில் ஈடுபடும் பெண் தன் மனைக்கும் 'திரு' எனும் அடைமொழியைக் கொடுக்கிறாள். திருமணத்தால் உருவாகும் இல்லறம்; இல்லறத்திற்கு உரிய மனை இரண்டும் தெய்வீகத்திற்கு உரிய தன்மை உடையன என்னும் கொள்கை பண்டைத் தமிழகத்து விழுமியமாக இருந்தது. இல்லறத்தோடு தொடர்புடைய கடமைகள் அனைத்தும் தொய்வின்றித் தொடர இவ்விழுமியம் போற்றப் பெற்றமை ஆதாரமாக அமைந்தது. 

 பாடல் தலைவி தன் கணவனை ஊரன் என்கிறாள். அதாவது அவன் உழவர் தலைவன் ஆகிய திணைமாந்தன். தன் பாரம்பரியமான புன்செய் வேளாண்மை செய்பவன் ஆதலால் பாடலில் பால்பிடித்த பயிரை எருமைக் கன்று மேய்வதாகப் பாடல் புனைந்து தலைவிக்கு உரிய உள்ளுறை உவமமாக எருமை அமைகிறது. 

சக 










kanmani tamil

unread,
Apr 14, 2026, 10:12:41 AMApr 14
to vallamai
அகநானூறு-86
நல்லாவூர் கிழார் பாடியது. 
திருமணச் சடங்காற்றும் தகுதி முதுபெண்டிர்க்கே இருந்தது 
தலைவன் தன் திருமணத்தன்று  முதுபெண்டிர் செய்தவற்றை  நினைவு கூர்கிறான். 

"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை 
பெருஞ்சோற்று அமலை நிற்ப
நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலைதொடரி
கனைஇருள் அகன்ற 
கவின்பெறு காலை
கோள்கால் நீங்கிய 
கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் 
நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் 
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் 
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் 
புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக் 
கற்பினின் வழாஅ நற்பல உதவிப் 
பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென நீரொடு சொரிந்த ஈர்இதழ் 
அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம்..."

பொருள்:
'விழுமிய புகழைக் கொண்ட தலைமையான நல்ல நாள் ஆகிய முழுநிலா நாளில்; பந்தற்கால் நட்டுப் போட்ட பந்தலில் புதுமணல் பரப்பி; மனையில் விளக்கு ஏற்றி; மாலைகளைத் தொங்கவிட்டு; இருள் நீங்கிய வைகறைப் பொழுதில்; உழுந்தங் களியாகிய இனிப்புப் பதார்த்தத்தை முதலில் பரிமாறிய பின் நெல்லஞ் சோற்று விருந்தைத் தொடர்ந்து முக்கியச் சடங்காகிய மங்கல நீராட்டு நடந்தது. தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராய்;  சுடுமண்ணாலான வட்டமான புதிய கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய மங்கலப்  பொருட்கள்  ஏந்தியவராக முதுபெண்டிர் நின்றனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை எனத் தம்முள் பேசியபடியே கொடுத்தனர். அவருள் புதல்வனைப் பெற்றுத்  திதலை பொருந்திய வயிற்றோடு  மங்கலஅணியுடன் நான்கு முதுபெண்டிர் 'கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும்படி; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்' என  வாழ்த்தித் தலைவியை நீராட்டினர்.  

சமூகச் செய்திகள்:
திருமணநிகழ்வுகளை வரிசைப்படுத்துங்கால்;  விருந்து முதலிடம் பெற்றது.  அந்த விருந்தில் இனிப்பே முதலில் பரிமாறப் பட்டது. கருப்பட்டிப் பாகுடன் கூடிய உழுந்தங்களியைத் தொடர்ந்து பெருஞ்சோற்று அமலை ஆகிய நெல்லஞ் சோறு விருந்திற்கு ஏற்ற உணவு ஆனது. உழுந்தங்களியையே புலவர் 'உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை' என்கிறார் (பண்டைத் தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு-

மங்கலஅணி ஆகிய தாலி அணிவிக்கப்பட்டமைக்கு 'வாலிழை மகளிர்' என்ற சொற்றொடர் ஆதாரம் ஆகிறது. தூய / மங்கலம் பொருந்திய என்ற பொருளில் 'வால்-' எனும் முன்னொட்டு இணைந்து உள்ளது. பிற தொகைப் பாடல்களிலும் 'ஈகை அரிய இழை' எனத் தாலி குறிப்பிடப் படுகிறது.

நல்ல நாள் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுக் காலப் பழமை வாய்ந்தது. கேடு விளைக்காத காலமறிந்து நிலவின் நிலையோடு பொருத்தியே அந்நாள் முடிவு செய்யப்பட்டது. 

திருமணத்திற்கு முன்பாகப் பந்தல்கால் நட்டுப்; பின்னர்  புதுமணல் பரப்பிக் குளிர்ச்சியான சூழலில் விளக்கேற்றி வைத்து; மாலைகளால் அலங்கரித்து;  மணச்சடங்குகளை நிகழ்த்தும் வழக்கம் இருந்தது. 

மகப்பெற்ற மங்கலப் பெண்டிராகிய முதுபெண்டிரே மணப்பெண்ணுக்கு மங்கல நீராட்டினர். 

'உச்சிக் குடத்தர்' என்ற சொற்றொடர் தலைமேல் தாங்கிய குடத்தோடு முதுபெண்டிரைக் காட்சிப்படுத்துகிறது. (ஓரிரு நூற்றாண்டுகட்கு முன்னர் தென்தமிழகத்தில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களில் தலையில் தான் குடத்தைச் சுமக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்ட இழுபறி நிலையை இத்தொடரோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. 

சீர்ப் பொருட்களை எடுத்து வரும் 'புத்தகல் மண்டையர்' என்ற சொற்றொடர் புதிய அகன்ற வாயுடைய மட்கலன்களைக் குறிப்பதாக அமைகிறது (இன்றைய தாம்பாளத்தோடு ஒப்பிடத் தோன்றுகிறது).  

சக 


kanmani tamil

unread,
Apr 15, 2026, 1:41:01 AMApr 15
to vallamai

நற்றிணை-288

"அருவிஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்
பீலிமஞ்ஞை பெடையோடு 
ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நல்நுதல் பரந்த பசலைகண்டு அன்னை  
செம்முது பெண்டிரொடு 
நெல்முன் நிறீஇ
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில்
ஏனற் செந்தினைப் பால்ஆர் கொழுங்குரற்
சிறுகிளி கடிகம் சென்றும்இந் நெடுவேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே"              

பொருள்:
அணங்கு உறையும் மலை முகட்டில் அருவி கொட்ட; உயர்ந்த மரக்கிளையில் இருந்து இளவெயிலைத் துய்க்கும் மயில் தோகையை விரித்துக்கொண்டு தன் பெண்மயிலோடு சேர்ந்து ஆடும். அக்குன்ற நாடன் பிரிந்திருக்கிறான் என்பதால் 
என் நெற்றி பசலை பாய்ந்துள்ளது. அதைக் கண்டு என் தாய் செம்முது பெண்களுடன் சேர்ந்து நெல்லைப் பரப்பிக் கட்டுவிச்சியிடம் காரணம் கேட்கிறாள். புனத்தில் பால் பிடிக்கும் தினைக்கதிர்களைக் காத்துக் கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த போது; முருகனைப் போன்ற ஒருவன் வந்து என்னை வருத்திய உண்மையை அந்தக் கட்டுப் பார்க்கும் சடங்கு என் தாய்க்கு உணர்த்துமா?!

விளக்கம்:
நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்து வழிபாடு நடத்திக் காரணம் கேட்கும் அன்னைக்கு; முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி முடிபு கூறியதால்;  அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற  எதிர்பார்ப்பினை வேலிக்கு அப்பால் நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.   

முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்று 'முதுசெம்பெண்டிர்' என அழைக்கப்படுவதை நேற்றைய பதிவில் கண்டோம் (பார்க்க: 14.04.'26 தேதியிட்ட  பதிவு- அகம்.86). அதுபோன்றே 'செம்முது பெண்டிர்' என்ற வழக்கும் அமைந்துள்ளது. கற்பின் அடையாளமாகிய அருந்ததியைச்  சுட்டும் விண்மீன் சிவந்தது ஆதலால்; செம்மீன் எனப் பெயர் பெறுவதை ஒட்டிக் (பதிற்.31); கற்பொழுக்கம் தொடர்பாகப் பெண்களுக்கும் 'செம்மை' எனும் பெயரடை பயின்று வருகிறது. செம்மை ஒழுக்கத்தின் அடையாளம் ஆகிக்; 'குறையற்ற' என்றும் பொருள்படும். எனவே 'செம்முது பெண்டிர்' கற்புநெறி வழுவாது; மகவைப் பெற்று; இல்லறம் நடத்துவோர் என உறுதிப்படுகிறது. ‘முது-’ என்னும் பெயரடைக்கும் வயதிற்கும் தொடர்பு  இல்லை.

சமூகச் செய்திகள்:
மங்கல நிகழ்வுகளில் முதுபெண்டிர்க்குச் சிறப்பிடம் அளித்தமை போல; வழிபாடு, நம்பிக்கை தொடர்பான நிகழ்வுகளிலும் முதுபெண்டிர்க்குச் சிறப்பிடம் இருந்தது. 

கட்டுவிச்சியை அழைத்து; தெய்வத்திற்குப் பல படையல்களை (பலிப்பொருள் எனப்படும் பிரப்பு) இட்டு வழிபட்டு; நோய்க் காரணத்தை அறிய முற்படும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. அக்கம்பக்கத்தில் இருந்த முதுபெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; ஒரு பிடி நெல்லைச் சுளகில் போட்டு; மகளை முன்னர் நிறுத்திக்; குறி கேட்பது போல் கேட்டனர். 

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 'கட்டிற் கேட்கும்' எனும் சொற்றொடர்க்கு உரை கூறும் போது; கட்டுப் பார்க்கும் முறை பற்றிக் கூறும் விளக்கம் சிறப்பாகப் புரிய வைக்கிறது. 
சுளகில் போட்ட நெல்லை நந்நான்காக எண்ணி எடுத்துக் கூறு கட்டிப் பின் இறுதியில் எஞ்சிய நெல்மணிகள் ஒன்றோ இரண்டோ மூன்றோ எனின் முருகு அணங்கிற்று எனவும்; அங்ஙனம் இன்றி இறுதியாகவும் நான்கு நெல்மணிகளே கூறாயின எனின் வேறு நோய் எனவும் கட்டுவிச்சி குறி கூறுவாள். 
முருகு அணங்கிற்று எனக் குறி கிடைத்தால் வேலனை அழைத்து ஆடு வெட்டிக் குருதிப் பலி கொடுத்து வெறியாட்டு நிகழ்த்தி வழிபடுவர். 

சக 






kanmani tamil

unread,
Apr 16, 2026, 3:39:36 AMApr 16
to vallamai
அகநானூறு-22
வளை நெகிழும் அளவு மகள் மெலிந்தவுடன் கட்டுவிச்சியிடம் கட்டுப் பார்த்தாள் தாய். இது முருகு அணங்கிய விளைவு என அவள் கூற; வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்தாள். வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில்; தலைவனைக் களவில்  கூடிமகிழ்ந்த  தலைவியின்  கூற்று இது. 

"கணம்கொள் அருவிக் 
கான்கெழு நாடன்
மணம்கமழ் வியல்மார்பு 
அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் 
பொழுதில்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் 
தடக்கை  
நெடுவேள் பேணத்  தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் 
அதுவாய் கூற
களம்நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை 
குருதியொடு தூஉய்        
முருகுஆற்றுப் படுத்த  உருகெழு நடுநாள்
ஆரம்நாற அருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் 
களிற்றுஇரை தெரீஇய பார்வல்ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் 
வயப்புலி போல             
நல்மனை நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப
இன்உயிர் குழைய 
முயங்குதொறு மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லெனோ 
யானே எய்த்த
நோய்தணி காதலர் வரஈண்டு 
ஏதில் வேலற்கு உலந்தமை 
கண்டே"

பொருள்:
அழகால் நெஞ்சை மயங்கச் செய்யும் மலை உச்சியிலிருந்து வழியும் அருவிகள் பல ஒன்று சேர்ந்து கொட்டும் பேரருவிகளைக் கொண்ட கானக நாடன் அவன். அவனது மணம் கமழும் மார்பைத் தழுவிய இன்ப நினைவு என்னை வருத்திக் கொண்டு இருக்க; அதை அறியாது திகைத்து; 'அசுரர் குலத்தை அழித்துத் தேவரைக் காத்த புகழ் மிகுந்த நெடுவேளைப் பேணி விழா எடுத்தால் இவளது நோய் தீரும்' என்று கருத; முதுவாய்ப் பெண்டும் அவ்வண்ணமே குறி கூற; உடன் வெறியாட்டிற்கு உரிய களத்தைத் தயார் செய்தனர்; தோரணமாகக் கண்ணிகளைத் தொங்க விட்டனர்; ஊருக்கே கேட்கும்படி இசைக் கருவிகளை ஒலித்துப் பாடினர்; ஆட்டைப் பலி கொடுத்தனர்; அதன் குருதி தோய்ந்த சிவப்புநிறத் தினை அரிசியைத் தூவினர்; என்னை முருகாற்றுப் படுத்தினர் (முருகனருள் ஏறி ஆட வைத்தனர்). அப்படி ஆற்றுப்படுத்திய அச்சம் தரும் நள்ளிரவில் என் நோயைத் தணிக்கும் காதலன் வந்தான்; இரைக்காக யானையைத் தாக்கப் பதுங்கியும் மறைந்தும் செல்லும் புலி போல அடி வைத்து நடந்து வந்தான்; வீட்டிலுள்ள காவலர்களுக்குத் தெரியாமல் வந்தான்; மார்பில் சந்தனம், தலையிலே மலைப் பிளவுச் சாரலில் பூத்த வண்டு மொய்க்கும் புதுப் பூவுடன் வந்தான்.  அவன் ஆசையும் என் விருப்பமும் நிறைவேறும்படி உயிர் குழையத் தழுவினான். என்னைத் துன்புறுத்திய நோயைத் தீர்க்கும் காதலன் வர; வேலன் ஏமாந்து போனதை எண்ணி எனக்கு ஒரே சிரிப்பு.

சமூகச் செய்திகள்:

பண்டைத் தமிழகத்தில் கட்டுவிச்சியிடம் கட்டுப் பார்த்தே நோயா அல்லது முருகனுக்கு(தெய்வ)க் குறையா எனப் பெண்டிர் முடிவு செய்தனர்.

முருகனுக்கு(தெய்வத்திற்கு)ச் சாந்தி செய்ய வெறியாட்டு நிகழ்த்தப்பட்டது. 

குடும்ப நிகழ்வாகிய வெறியாட்டு அவ்வூர் முழுமைக்கும் உரிய விழா எனும்படியாக ஆரவாரத்துடன் நிகழ்ந்தது. 

'வெறியயர் களன்' எனும் படி இடத்தைத் தயார் செய்வது முதல் நடவடிக்கையாக இருந்தது. தோரணத் தொங்கல் மலர் அலங்காரம், இசைக் கருவிகளின் முழக்கம், வாய்ப் பாட்டு முழக்கம், ஆட்டைப் பலி கொடுத்தல், குருதியோடு தினையை விரவிப் படையல் இடல் ஆகிய தொடர் நிகழ்வுகள் வெறியாட்டில் அடங்கின. 

வேலன் வெறி ஆடிய வேகத்தில் இசைக்கும் பாடலுக்கும் ஏற்ப; எந்தப் பெண்ணுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டதோ; அந்தப் பெண்ணும் அருள் ஏறி ஆடினாள். 

சக 

kanmani tamil

unread,
Apr 20, 2026, 6:13:52 AMApr 20
to vallamai
அகநானூறு-98

"பனிவரை நிவந்த பயம்கெழு 
கவாஅன்
துனிஇல் கொள்கையொடு 
அவர்நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல்  
அறிந்தனள் அல்லள் அன்னை வார்கோல்
செறிந்துஇலங்கு எல்வளை 
நெகிழ்ந்தமை நோக்கிக் 
கையறு நெஞ்சினள் 
வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்பு 
உளர்புஇரீஇ
முருகன் ஆர்அணங்கு என்றலின் அதுசெத்து   
ஓவத்துஅன்ன வினைபுனை 
நல்இல்
பாவைஅன்ன பலர்ஆய் 
மாண்கவின்
பண்டையின் சிறக்க என்மகட்கு எனப்பரைஇ 
கூடுகொள் இன்இயம் கறங்கக் களன்இழைத்து
ஆடுஅணி அயர்ந்த 
அகன்பெரும் பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐதுஅமை பாணிஇரீஇ கைபெயரா
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
வெறிஅயர் வியன்களம் 
பொற்ப வல்லோன்
பொறிஅமை பாவையின் 
தூங்கல் வேண்டின்
என்ஆம் கொல்லோ தோழி மயங்கிய
மையற் பெண்டிர்க்கு 
நொவ்வல்ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இம்மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று         
அறிவர் உறுவிய அல்லல் 
கண்டருளி
வெறிகமழ் நெடுவேள் நல்குவனெனினே
செறிதொடி உற்ற செல்லலும் பிறிதுஎனக்
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் 
அதனினும் அரிதே"        

பொருள்:
'பனி தவழும் உயர்ந்த மலைமுகடுகட்கு இடையில் இருக்கும் கவண் போன்ற  பிளவுப் பகுதியில் அவர்  மாற்று இல்லா ஒருமனதோடு எனக்கு மகிழ்ச்சியாக இனிய உறவைத் தந்தார். இப்போது அவர் நல்கிய உறவு  துன்பத்தைக் கொடுப்பதாகி; யாரும் ஏற்கத் தகாத நிலையை  அடைந்து விட்டது. இத் துன்பம் தெய்வம் உறையும் மலையின் தலைவனாகிய அவனது மார்பினைத் தழுவினால் அன்றித் தணியாது என்பது அன்னைக்குத் தெரியாது. 
வளைந்த சங்கினின்றும் அறுத்து எடுத்து என் தோளிலே செறிவாகக் கிடந்து ஒளிரும் வளை நெகிழ்ந்து நழுவுவதை அன்னை பார்த்து விட்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் கட்டுப் பார்க்கும் முதுவாய்ப் பெண்டிரை அணுகிக் கேட்க; பொய்வல்ல அவர்கள் தெய்வத்தைப் போற்றிப் பாடிப் படையல் இட்டு வணங்கி; முருகனுக்குக் குறை வைத்ததால் இந்நோய் தாக்கிற்று என்றனர். அதை  நம்பியவள்; வெறியாட்டு நடத்த முனைகிறாள்.
ஓவியம் போல் தோன்றும் வேலைப்பாடுகளால் புனைந்த செல்வமிகு இல்லத்தில் பிறந்து வளரும் இவளது அழகு செய்து வைத்த பதுமை போன்றது; பலரும் வியந்து போற்றும் சிறப்பு மிக்கது; அவ் அழகு முன்பு இருந்ததை விட மேலும் சிறந்து அமைக எனக் கூறிப்; பல இசைக் கருவிகளும் மேளதாளத்தோடு சேர்ந்து முழங்க வெறியாடும் களம் அமைத்தாள்; ஆடல் பாடலுடன் விழா நடத்த அகன்ற பெரிய பந்தல் போட்டாள். வெண்ணிறப் பனம்பூங் கொத்தின் குருத்தோடு சேர்த்துக் கடம்பின் பூக்களைச் சூடிக்கொண்டு வேலன் வருவான்; கையை ஆட்டிக் கொண்டே இனிய சீரான இசைப் பாட்டை இயைபுறப் பாடிக் கொண்டு வருவான்; முருகா எனும் பெரும்பெயரைச் சொல்லி வாழ்த்தி வெறியயர் களம் சிறக்க வருவான்; கைத் திறனாளனின் பொறி பொருத்திய பொம்மை போல நான் ஆடும்படி வருவான் தோழி!
இனி என்ன நடக்குமோ?!
ஆசையில் மயங்கி நொந்து போன பெண்மைக்கு மேலும் துன்பம் உண்டாகும்படி; வெறியாடிய பின்னும் என் மேனி முன்பு இருந்தது போலச் சிறப்படையாது என்பது தானே உண்மை? 
அது மட்டுமன்று; வெறியாடின் நெடுவேள் இவளுக்கு முன்பு இருந்த நிலையைத் தருவான் என்று கூறிய அறிவாளிகள்; முன்பு இருந்த நிலையை முருகன் நல்காமை கண்டு; செறிந்த தொடி அணிந்தவளாக இருந்த நான் உற்ற துன்பம் வேறு எனப் புரிந்து கொள்ள எனது களவு அலராக மாறுவது உறுதி. இதை எல்லாம் என் காதலன் கேட்பின் நான் உயிர் வாழ்தல் மிகவே அரிது அல்லவா?'

சமூகச் செய்திகள்:
பொறி அமையச் செய்த பொம்மை (கைகால் ஆட்டி நடமாடும் பொம்மை) ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது.

வேலன் கடம்ப மலரோடு பனம்பூவும் சூடினான்; பாடினான்; ஆடினான். 

முதுவாய்ப் பெண்டு ஆண்டாண்டு காலமாக (பாரம்பரியமாக) வாய்விட்டுப் பாடித் தெய்வத்தை வாழ்த்தியே கட்டுப் பார்த்தாள். அதனால் தான் அவளுக்கு 'முதுவாய்' எனும் அடைமொழி வழங்கியது. இவ் அடைமொழி தொகையிலக்கியத்தில் 'முதுவாய் வேல' (அகம்.195), 'முதுவாய்க் குயவ' (நற்.200), ‘முதுவாய்க் கோடியர்’ (குறு.78) ‘முதுவாய் இரவல’ (பதிற்.பா.66) எனப் பிற பெயர்களோடும் வழங்குகிறது. 

குயவன் வழிவழியாக வாய்விட்டு விழா அறிவிக்கும் உரிமை பெற்றதால் 'முதுவாய்க் குயவ'ன் ஆனான் (நற்.293).  

கோடியர் என்னும் கூத்தர் காலங் காலமாக வாய்ப்பாட்டு பாடிக்கொண்டே ஆடும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களை 'முதுவாய்க் கோடியர்' என்று அழைத்தனர். 

இரவலர் ஆகிய பாணரும் கூத்தரும் நெடுங் காலமாகப் பரிசில் வேண்டி ஆடிப் பாடி; 'முதுவாய்' எனும் அடைமொழிக்கு உரியவர் ஆயினர்.

சக 

kanmani tamil

unread,
Apr 21, 2026, 10:56:53 PMApr 21
to vallamai
அகநானூறு-63

"கேளாய் வாழியோ மகளை நின்தோழி
திருநகர் வரைப்பகம் புலம்ப 
அவனொடு
பெருமலை இறந்தது 
நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த 
பொலங்கெழு பூழி      
பெரும்புலர் விடியல் 
விரிந்துவெயில் எறிப்ப
கருந்தாள் மிடற்ற செம்பூழ்ச் 
சேவல்
சிறுபுன் பெடையொடு 
குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி
கன்றுகாணாது புன்கண்ண செவிசாய்த்து              
மன்றுநிறை பைதல்கூர பலஉடன்
கறவைதந்த கடுங்கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் 
அசைஇ
முதுவாய்ப் பெண்டின் 
செதுகாற் குரம்பை
மடமயில் அன்னஎன்
நடைமெலி பேதை       
தோள்துணை யாகத்  துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு 
கடுங்கண்
சேக்கோள் அறையும் 
தண்ணுமை
கேட்குநள் கொல்எனக்  கலுழும்என் நெஞ்சே" கருவூர்க் கண்ணம்புல்லனார் பாடியது. 

தலைமகள் உடன்போகிய பின்  
செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.

'மகளே கேள்; நான் வளர்த்த மகள் இந்த மாளிகையே புலம்பும்படி எம்மை விட்டு; மலையைத் தாண்டி; அவனுடன் சென்று விட்டமைக்காக நான் வருந்தவில்லை. 
மடப்பம் பொருந்திய மயில் போன்ற சாயலோடு நடக்கும் பேதைப் பெண்ணாகிய அவள் சினத்தால் சிவந்த கண்ணை உடைய யானை தன் காலை மடித்து உதைத்தும்; துதிக்கை கொண்டு வாரி இறைத்தும் கிளப்பிய செம்பின் நிறம் கொண்ட செம்மண் புழுதியில்; விடிந்த பின் சுட்டெரிக்கும் வெயிலில் கருமையான காலையும் கழுத்தையும் கொண்ட செம்பூழ்ச் சேவல் தன் சிறிய பெடையுடன் சேர்ந்து சீய்த்துக் கொண்டிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய காட்டு வழியைக் கடந்து சென்று இருக்கிறாள். 
என் தோளை அணைத்துக் கொண்டு கிடக்கும் போதும் தூங்காது இருப்பாளே; இப்போது கன்றுகள் தம் தாய்ப் பசுக்களைக் காணாமல் செவிகளைச் சாய்த்து வருந்தும் தொழுவத்தில்; 
ஆனிரைகளை மீட்டு வந்து சேர்க்கும் மறவர் வாழும் ஆரவாரம் மிகுந்த சிற்றூரில்;  பந்தல் கால் நட்டு உலர்ந்து உதிரும் முதுவாய்ப் பெண்டின் குடிசையில்; ஆநிரை கவரும் கள்வர் இழுத்துக் கட்டிக் கருங்கண் கொண்ட சேக்கோள் தண்ணுமையை ஒலிக்கக் கேட்டுக் கொண்டு உறங்குவாளா என நொந்து கொண்டிருக்கிறேன்.'

சமூகச் செய்திகள்:

வளர்ப்புத் தாயாகிய செவிலியின் மகள் தலைவிக்குத் தோழியாக அமைவது இப்பாட்டில் நேரடியாகப் பேசப்படுகிறது. 

முதுவாய்ப் பெண்டிர் மிக எளிமையாக வாழ்ந்த ஏழ்மையர் ஆவர். இது அவரது குடிசையின் கூரையது உலர்ந்துதிரும் தன்மையால் புலனாகிறது. சில சேரிகள் சேர்ந்து உருவாகியதே சீறூர் ஆதலால்; மறவர் சீறூரின் ஒரு சேரியில்  முதுவாய்ப் பெண்டும் வாழ்ந்தமை தெரிகிறது. 

தொகைப் பாடல்களில் ஆநிரை கவர்வோராக மழவர், எயினர், கள்வர், மறவர் என நான்கு பிரிவினர் சுட்டப்படுகின்றனர். அவர்களுள் கள்வர் என்பது ஆநிரை கவரும் பிற மூவருக்கும் உரிய பொதுப் பெயர் எனலாம். அவருள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டுத் தரும் பெருமைமிகு வீரராக மறவர் சமூகத்தினரே சொல்லப்படுகின்றனர். அவர் தமக்கே உரிய சீறூரின் சேரியில் வாழ்ந்தமை தெரிகிறது. தனிக் குடியிருப்புகள் தனித்தனிச் சமூகத்தை அடையாளம் காட்டுகின்றன. 

மறவர் ஆநிரை மீட்பதும்; மீண்டும் கள்வர் அவற்றைக் கவர வருவதும் ஒரு தொடராக நிகழ்ந்ததாக இப்பாடல் அமைந்து உள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆகோளுக்குக் கிளம்புமுன்னர் கள்வர் தண்ணுமை முழக்கித் தம் கூட்டாளிகளை ஒன்று சேர்த்தனர். 

சக 

kanmani tamil

unread,
Apr 23, 2026, 12:15:39 AMApr 23
to vallamai
குறுந்தொகை-298

"சேரிசேர மெல்லவந்துவந்து அரிதுவாய்விட் டினியகூறி
வைகல்தோறும் நிறம்பெயர்ந் துறையும் அவன் 
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்தது 
அவனெடும்புற நிலையே" பரணர் பாடியது. 

பொருள்:
தோழி! அவன் நம் சேரிக்கு அடிக்கடி வருகிறான்; வாயார நம் மனதிற்கு இனிய 
அருஞ் சொற்களைப் பேசுகிறான். தான் நினைத்த எதிர்வினை கைகூடாத ஏமாற்றம் நாள்தோறும் அவனது சோர்ந்த 
உடற்தோற்றத்தில் தெரிகிறது. அவனது பார்வை புலப்படுத்தும் மனத்துயரை எண்ணிப் பார். இனிய கடுப்பு மிகுந்த கள்ளை உடைய அகுதையைத் தொடர்ந்து நிற்கும்  வெண்ணிற முனை உடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறும் இளம் பெண்யானைப் பரிசிலைப் போல; அவன் நீண்ட காலமாக நம்மைக் கெஞ்சிக் கேட்டு நிற்பது வேறு ஏதோ ஒரு முடிவைக் கருதியது எனல் தகும்.

விளக்கம்:
தலைவன் மனதில் வேறு எதையோ நினைக்கிறான் என்றது 'அவன் மடலேறக் கூடும்' என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவது ஆகும். 
யானையைப் பரிசாகப் பெறுவதற்காக அகவன்மகள் அகுதையிடம் வந்து பாடிக் குறிசொல்வாள். ஆனால் தனக்கு யானையைப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்று வாய்விட்டுக் கேட்க மாட்டாள். 
தலைவனின் செயலும் அத்தகையதே என்று தோழி கூறுகிறாள்.

சமூகச் செய்திகள்:

'இன்கடுங் கள்ளின் அகுதை' என்ற பாடல் தொடர் கள்ளைச் செல்வமாகக் கருதிய திணைமாந்தனாகிய அகுதையை அடையாளம் காட்டுகிறது. தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்தில் எல்லோரும் பால், வயது வேறுபாடின்றிக் கள் அருந்திடினும்; அரசர்கள் எல்லோரும் கள்ளை விருந்தாகக் கொடுத்து உபசரித்தனர் எனினும்; கள்ளை மட்டுமே பெருமைக்கு உரிய செல்வமாகக் கருதியவர் திணைமாந்தர் ஆவர். அகுதை கூடல் எனும் ஊரின் தலைவன்; அதாவது ஊரன் எனப்படும் கிழான் என இதே இழையில் முன்னர்க் கண்டோம் (31.03.'26 தேதியிட்ட பதிவு)

கட்டுப் பார்த்துக் குறி சொல்லும் முதுவாய்ப் பெண்டினின்றும் வேறுபட்டவராக அகவன்மகளிர் இருந்தனர். முதுவாய்ப் பெண்டு திணைமாந்தருள் ஒருத்தியாகச் சேரியில்  வாழ்பவள் ஆவாள். ஆனால் அகவன்மகள் பரிசில் வேண்டித் தலைவரை நாடிச் சென்று பாடிக் குறி கூறுபவளாகக் காணப்படுகிறாள். 
அவளது தோற்றமே அவளைத் தனித்தன்மை உடைய வேறு இனத்தவளாகக் காட்டுகிறது. வெண்சிறுகடுகைக் (கசகசா) கோத்து வைத்தது போன்ற கூந்தலை உடையவள் என்கிறது குறுந்தொகை-23.

அத்துடன் அகவன்மகளின் கையில் பூண் இட்ட கோல் இருந்தது. ஆனால் முதுவாய்ப் பெண்டிரிடம் கோல் கிடையாது. 

இருவரும் வாய்விட்டுப் பாடினர் எனினும்; முதுவாய்ப் பெண்டு தெய்வத்தை வாழ்த்திப் பாடிக் கட்டுப் பார்த்துப் பொதுமக்களுக்கே குறி சொன்னாள். ஆனால் அகவன்மகளோ பொதுமக்களுக்கு மட்டும் இன்றித் தலைவரிடம் சென்று குறி கூறிப் பாடிப் பரிசிலும் பெற்றனர். 

முதுவாய்ப் பெண்டு தெய்வக் குற்றத்தை வலியுறுத்தி வேலன் வெறியாட்டிற்குக் காரணி ஆனாள். 
அகவன் மகளிரோ தமிழகத்துள் வந்தேறிக் காலூன்றிய நால்வருணத்தாருள் மூன்றாமவராக அறியப்படும் வைசியர் எனும் வணிகர் ஆகிய கோசருக்குத் துணை செய்து; இயல்பாக நடந்தது போல் வஞ்சகமாக நன்னனின் தோட்டத்து மாமரத்தை வீழ்த்தினர் (பார்க்க: தொல்தமிழகத்து அரசியலில் நன்னன்-https://ejournal.um.edu.
my/index.php/tamilperaivuarticle/view/27009).

சக 


kanmani tamil

unread,
Apr 24, 2026, 1:08:49 AMApr 24
to vallamai
புறநானூறு-388

"வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை
இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை                       
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன்...                        
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா
நாடொறும் பாடேன் ஆயின்
ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை வழுதி 
கண்மாறிலியர் என் பெருங்கிளைப் புறவே" (மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது)

'வெள்ளியாகிய கோள் தெற்கே தோன்ற; விளைவயல்களும் நீர்நிலைகளும் வறண்டு பயனற்ற நிலையில் இருக்க;  பெரிய பறையாகிய தடாரிப் பறையை இசைக்கும் பொருநன் ஒருவன் பெரும் புகழுடைய சிறுகுடிப் பண்ணனிடம் சென்று தன் வறுமையை அறிவித்தான். உடன் அப்பொருநனின் வறுமைத் துன்பம் நீங்குமாறு; தன்னிடம் இருந்த பொருளைப் பண்ணன் அவனுக்குக் கொடுத்தான். எங்கள் தந்தை போன்ற பண்ணன் கொடையால் மேம்பட்ட தலைவன் ஆவான். நுண்ணிய நூல்களைத் துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும் உடைய யானைகளாகிய வெல்லும் பாடல்களை (இயற்றும் புலவர்களுக்கு) புன்செய்ப் பயிர் விளையும் நிலங்களை அவன் பரிசாக அளிப்பதை நான் கூறக் கேட்பீராக…. (பாடல் சிதைந்து உள்ளது.) 
அவனுடைய உழவுத் தொழிலுக்குரிய எருதுகளின் புகழை இசைத்துக் கிணைப்பறையை அறைந்து நாள்தோறும் நான் பாடேனாயின்; ஒலிக்கும் மணிகட்டிய முற்றத்தையும், வாரால் கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய சிறந்த யானைப்படையையுமுடைய பாண்டியனின் வழித்தோன்றல் ஆன வழுதி என் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும் செயலைச் செய்யாது ஒழிவானாக'

சமூகச் செய்திகள்:

பண்ணன் சிறுகுடி கிழான் என்பது பாடலின் கொளு தரும் செய்தி ஆகும். அடிக்குறிப்பு பண்ணனைச் சிறுகுடி எனும் ஊரின் தலைவன் என்கிறது. 
மள்ளனாரின் பாடல் செய்தி பண்ணனை வேளாண்மை செய்பவன் என்கிறது. கிழார் உழவர் வாழும் ஊரின் தலைவர் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. 

பாடலைப் பாடியவர் ஒரு மள்ளர் என்பதால் வேளாண்மைக்கு அன்றைய அடிப்படைத் தேவை ஆகிய எருதுகள் முதற்புகழுக்கு உரியவை ஆகின்றன. இதுவும் 
பண்ணன் வேளாண்மை செய்தமைக்கு உரிய  ஆதாரம் ஆகிறது. 

சிறுகுடி காவிரிக்கு வடக்கே சோணாட்டில் இருந்ததென்ற பாடல் செய்தி (அகநானூறு- மணிமிடை பவளம், பா-177 -ப.134) இருப்பினும்; 'புல்லுடை விளைநில'த்தைக் கொடையாகப் புலவர்க்கு அளித்த செயல்; பண்ணன் புன்செய் வேளாண்மை செய்தான் என்பதையும்; கிழாரின் பாரம்பரியத் தொழில் புன்செய் வேளாண்மை என்பதையும் உறுதிபடக் கூற வழி வகுக்கிறது.

தான் பாடும் வள்ளல் காவிரிக் கரைக் கிழான் ஆகிய பண்ணன் எனினும் தனது சூளுரையால்; தான் வாழும் மண்ணை ஆளும் வேந்தன் வழுதியை முதன்மைப்படுத்தத் தயங்காமல்; 'பண்ணனின் உழவுத் தொழிலுக்குரிய எருதுகளின் புகழை இசைத்துப் பாடேனாயின்; வழுதி என் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும் செயலைச் செய்யாது ஒழிவானாக' எனப் பாடுவது புலவோரின் செம்மாந்த நிலையைக் காட்டுகிறது.

பாண்டியநாடு வற்கடம் பூண்டமை தொகைப் பாடல்கள் தோன்றிய காலம் தொட்டுத் தொடரும் (பஞ்சப்) பாரம்பரியமே!!!

வெள்ளிக்கோள் தெற்கே தோன்றும் போது மழை பொய்க்கும் என்ற நம்பிக்கை அன்றைய வேளாண் சமூகத்தில் நிலவிய கொள்கை ஆகும். 

சக     

kanmani tamil

unread,
Apr 24, 2026, 10:47:36 PMApr 24
to vallamai
அகநானூறு-177
"தொல்நலம் சிதையச் சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனிஎவன் செய்கெனப்
பெரும்புலம் புறுதல் ஓம்புமதி சிறுகண்
இரும்பிடித் தடக்கை மான நெய்அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறிகொள் ஐம்பால்
தேங்கமழ் வெறிமலர் பெய்ம்மார் காண்பின்
கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடை
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇ
கானமஞ்ஞைக் கமஞ்சூல் 
மாப்பெடை
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் 
வெண்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலைமருள் யானை மண்டமர் ஒழித்த
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம்தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே" செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் பாடியது

பொருள்:
'என் பழைய நலமெல்லாம் சிதைந்து உடம்பு இளைத்து விட்டது; அவர் இன்னும் வரவில்லை. என் செய்வேன்?' என்று அன்றாடம் சொல்லிப் பெரிதும் புலம்புகிறாய். புலம்புவதை விட்டுவிடு.
ஐம்பாலாக அலங்கரிக்கப்படும் தலைமுடியில் எண்ணெய் தடவி; சிறிய கண்களை உடைய பெண்யானையின் துதிக்கை போல் நீளமாக ஒருங்கு  பிணைத்துப் போட்டிருக்கிறாய். அதில் தேன்மணம் கமழும் மலரைச் சூட்டிக் காண்பதற்காக அவர் வந்துவிடுவார்.
மூங்கில் காட்டைக் கடந்து செல்லும் போது; பெரிய பாறைகட்கு இடையே சுரபுன்னை மரம் வாடும்படி சூரியனின் கதிர் தன் வெம்மையைப் பரப்பிக் கொண்டிருக்கும் வழியில்; பாகல் பழத்தைத் தின்ன விரும்பிக் காட்டு மயிற்பேடு ஊதுகொம்பின் இசை போல் குரல் எழுப்பும் அயிரியாற்றங்கரையைக் கடந்து அவர் சென்றிருப்பினும்; விரைவில் திரும்பிவிடுவார். 
வீரக்கழல் அணிந்த பண்ணனின் வெள்ளிய இலைநுனி போல் கூரிய வேலின் நிறம் குருதியால் சிவக்க யானைப்படையுடன் வந்த பகைவரை எதிர்த்துப் போரிட்டு வென்ற காவிரியின் வடகரை சார்ந்த அவனது ஊரின் குளக்கரையில்; ஓங்கி நிழல் பரப்பும் மாமரத்தின் தளிர் போன்ற உன் மேனியையும்; கடக்கவியலாத காமவருத்தம் தந்து வீழ்த்தும் உனது முன்னழகையும்; அதில் அவர் எழுதிய தொய்யிலையும் நினைத்துக் கொண்டு விரைவில் இவ்வூர் வந்து சேர்வார். வருந்த வேண்டாம்.'

சமூகச் செய்திகள்:

பண்டைத் தமிழகத்துப் பெண்கள் தம் அடர்ந்த தலைமுடிக்கு எண்ணெய் தடவிச் சடையாகப் பின்னி அழகுறுத்தினர். அது பிடியானையின் துதிக்கை போல நீண்டு இருந்தது. 

கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் பூச்சூடவில்லை. 

சிறுகுடி கிழான் பண்ணன் தான் சார்ந்த வேந்தனுக்காகப் பிற வேந்தரோடு நிகழ்த்திய போரில் வேல் சிவக்கப் போரிட்ட வீரன் ஆவான். கிழார்கள் தாம் சார்ந்த அரசருக்காகப் போர்மேற் சென்றனர் எனத் தெரிகிறது. 

அவனது சிறுகுடியின் குளிர்ந்த குளமும் கரையில் நின்ற மாமரமும் பெண்ணின் மேனிக்கு உவமையாகும் அளவு குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்தவை ஆயின.

பண்டைத் தமிழகத்துப் பெண்கள் மார்பகங்களைப் பல வண்ணச் சுணங்கு கொண்டு அணி செய்தனர். அச் சுணங்கிடை வரைந்த ஓவியம் தொய்யில் எனப்பட்டது. 

சக 

Raju Rajendran

unread,
Apr 25, 2026, 3:40:13 AMApr 25
to vall...@googlegroups.com
<இடுக்கண் இரியல் போக> இரியல் என்ற சொல்லின் பொருத்தமான  பொருள்  என்ன??

சனி, 25 ஏப்., 2026, 8:17 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 26, 2026, 12:57:44 PMApr 26
to vallamai
புறநானூறு-381

"ஊனும் ஊணும் முனையின் இனிதுஎன
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது 
பருகி
விருந்துறுத்து ஆற்றி  இருந்தனெமாக
சென்மோ பெருமஎம்  விழவுடை நாட்டுஎன       
யாம்தன் அறியுநமாக தான் பெரிது
அன்பு உடைமையின் எம்பிரிவு அஞ்சி
துணரியது கொளாஅ
வாகிப் பழம்ஊழ்த்து
பயம்பகர்வு அறியா 
மயங்குஅரில் முதுபாழ்
பெயல் பெய்தன்ன செல்வத்து ஆங்கண்
ஈயாமன்னர் புறங்கடைத் 
தோன்றி
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் 
தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் 
அரலைஇல் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது 
புலம்பொடு  
தெருமரல் உயக்கமும் 
தீர்க்குவெம் அதனால்
இருநிலம் கூலம்பாற கோடை
வருமழை முழக்கு இசைக்கு 
ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும்
இதற்கொண்டு அறிநை
வாழியோ கிணைவ          
சிறுநனி ஒருவழிப் படர்க  என்றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட 
நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறுஉய்க்கும்
அறத்துறை அம்பியின் மான 
மறப்புஇன்று
இருங்கோள் ஈராப் பூட்கை         
கரும்பனூரன் காதல் மகனே" புறத்திணை நன்னாகனார்  பாடியது.

பொருள்:
'கறிச்சோறு தின்று சலித்து விட்டால்; பால் பெய்த வரகுச் சோறும்; வெல்லப் பாகுடன் சேர்ந்த உளுந்தங்களியும் போன்றவற்றைத் தக்க அளவோடு கலந்து; வயிற்றுக்கு இதமாகப் பருகத் தந்து; எங்களைப் பேணி விருந்தயர்ந்தான் கரும்பனூர் கிழான். அங்ஙனம் பசிஆறிப் பல நாட்கள் கழிய; நாங்கள் 'பெரும! விழாக்கள் நடைபெறும் எம்முடைய நாட்டிற்குச் செல்ல விடை தருக!’ என்று அவனிடம் கேட்டோம்.  ஆனால், அவன் எங்கள் மீது பெரிதும் அன்புடையவனாதலால் எங்களைப் பிரிய அஞ்சினான்.
முட்கள் உள்ள கொடிகள் பின்னிக் கிடக்கும் புதரிடத்தே கொத்துக் கொத்தாகப் பூத்து;  பழுத்து; உதிர்ந்தாலும்; அங்கு  பெய்யும் மழையால் எவர்க்கும் பயன் கிட்டாது. செல்வமிருந்தும் இரவலர்க்கு ஈயாத மன்னர்களின் முற்றத்தில் இரந்து நிற்பதும்; அவ் வண்ணமே யார்க்கும் எப்பயனும் தராது. 
துண்டித்த வார்களால் கட்டித் தோல் கிழிசலைத் தைத்த சிதைந்த பக்கங்களையுடைய தடாரிப்பறையைக் காய்ந்த ஊன் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் கண்ணிடத்தே அறைந்து; முறையாக விரலால் குற்றமில்லாமல் தாளமிட்டுப் பாடும் பாட்டால் எப்படி வறுமையைப் போக்க முடியும்? 
அதனால் இப்பெரிய உலகம் தானியங்களின் விளைச்சல் இன்றி வறண்டு இருக்கும் கோடைக்குப் பின்னர்; பெரு முழக்கத்தோடு வரும் முதல் மழை பெய்தவுடன்; தொலைதூரத்தில் இருந்தாலும்; அருகிலேயே இருந்தாலும்; இங்கு வருக!   
கிணைவ! நீ வாழ்க! எங்கள் தந்தை போன்ற வேங்கட நாடன் முற்சொன்ன மன்னரைப் போன்றவன் இல்லை. ஒலிக்கும் வெண்ணிற அருவியை உடைய வேங்கடத்தின் தலைவன் என் அன்புக்குரிய மகன் போன்றவன் ஆவான். 
பெரியோர் ஆயினும் சிறியோர் ஆயினும் வருவோரை அறம் மாறாது இயங்கி; ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு முறைப்படி கொண்டு செல்லும் தெப்பம் போன்றவன்; மறவாத உயர்ந்த நோக்கும் எவராலும் மாற்றமுடியாத கொள்கையுமுடையவன்;  அவனைப் பற்றிச் சிறிது நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒழுகுவாயாக! ஆதரவின்றி வாடி வள்ளல்களைத் தேடித் திரிந்து வருந்தும் அவலத்தை அவனது ஆளுகையின் கீழ் யாம் போக்குவோம்’ எனக்  கூறினான்.' 

சமூகச் செய்திகள்:

உழவர் வாழும் ஊர்த் தலைவன் ஆகிய  கிழானையும்; அவன் சார்ந்து பணி செய்த கோன் ஆகிய நாடனையும் சேர்த்துப் பாடுவது இருவர்க்கும் இடையில் இருந்த நெருக்கத்தை உணர்த்துகிறது. கரும்பனூர் கிழானும் வேங்கட 
நாடனும் தந்தையும் மகனும் போலப் பாசப் பிணைப்பு கொண்டிருந்தனர்.   

வேங்கட நாடனாகிய குறுநில மன்னன் தொண்டைமான் திரையர் குடியைச் சேர்ந்தவன். தன் நெல் வேளாண்மைக்குக் கரும்பனூர் கிழானைத் துணைக் கொண்டு உழுவித்தான். அதனால் தான் கரும்பனூர் கிழான் இரவலர்க்குத் தெவிட்டும் அளவு கறியும் (நெல்லரிசிச்) சோறும் வழங்கினான். 

புன்செய்ப் பயிர் விளைய ஒரு மழையே போதுமானது எனும் 
பட்டறிவு மிகுந்த கரும்பனூரன்  வேங்கடப் பகுதியில் இருந்த தன் பெயருக்குரிய வளம் மிகுந்த ஊரின் தலைவன் ஆவான். தனது பாரம்பரியமாகிய புன்செய் வேளாண்மையையும் நாடனுக்காக நன்செய் வேளாண்மையையும் ஒருங்கு செய்தான். நெல்லரிசிச் சோறு மட்டுமின்றிப் புன்செய்ப் பயன்களாகிய வரகும் உளுந்தும் சேர்த்து அளித்து இரவலரின் பசி தீர்த்தான்.
(பார்க்க: வல்லமை- மார்ச் 2021-  கரும்பனூர் கிழான் அளித்த விருந்து).

சக 

seshadri sridharan

unread,
Apr 27, 2026, 12:10:49 AMApr 27
to vall...@googlegroups.com
On Sat, 25 Apr 2026 at 13:10, Raju Rajendran <raju.ra...@gmail.com> wrote:
<இடுக்கண் இரியல் போக> இரியல் என்ற சொல்லின் பொருத்தமான  பொருள்  என்ன??

இரியல் என்றால் பிளத்தல், சிதறுதல்.  இங்கு துன்பம் எல்லாம் சிதறி அழியட்டும் என்பதே பொருள்   


 

kanmani tamil

unread,
Apr 27, 2026, 12:15:36 AMApr 27
to vallamai

புறநானூறு-181

"மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே" சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது. 

பொருள்:
ஊர்ப்பொது மன்றத்தில் நின்ற விளாமரத்திலிருந்து விளாம்பழம் அருகில் இருந்த வீட்டின் முற்றத்தில் விழ; அதை எடுப்பதற்குக் கரிய கண்களை உடைய எயினர் குலப் பெண்ணின் அன்பிற்குரிய மகனும் காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் ஒருங்கு ஓடும் சூழல் உடைய வலார் என்னும் காட்டு வளம் மிகுந்த ஊர். புலால் நாற்றமுள்ள அம்புகளால் ஆன
அரணே பெரிய காவற்காடாக அமையும் போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான புன்புலம். அங்கே குறி தவறாது சிறப்பாக வாள் வீசும் பண்ணன் தலைவனாகத் திகழ்கிறான். பசியுடன் வாடும் உன் சுற்றம் பிழைக்க வேண்டுமாயின்; இப்பொழுதே சென்று; அவன் போருக்குக் கிளம்பும் முன்; உன் வறுமையைக் காட்டி; உங்கள் பசிக்குப் பகையாகிப் போக்கும் பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

சமூகச் செய்திகள்:

திணைமாந்தருள் தலைமை சான்ற வள்ளல்கள் இருந்தனர். அவர்கள் அரசர் ஒருவரைச் சார்ந்த வாழ்க்கை உடையோர் ஆவர். 

வலார் கிழான் பண்ணன் எயினர் வாழும் ஊரின் தலைவன் ஆகிறான். 

எயினரின் ஊர் அம்புகளாலான கட்டுவேலியைக் கொண்டிருந்தது. வலார் எயினரின் ஊராக அம்புவேலியைக் காவற்காடு போல் கொண்டு இலங்கியது.

கிழார் தாம் சார்ந்த அரசர்க்காகப் போர்மேற் சென்றமை வலார்கிழான் பற்றிய பாடலாலும் உறுதி ஆகிறது. அவனது வாள்வீச்சு பாடல் பெறுவது காண்க.

சக 

kanmani tamil

unread,
Apr 27, 2026, 10:59:23 PMApr 27
to vallamai
புறநானூறு-177

"ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பில் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல்இருந்து கொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே" ஆவூர் மூலங்கிழார் பாடியது. 

பொருள்:
'மிளிரும் வாளையுடைய மன்னர்களின் ஒளி பொருந்திய பெரிய மாளிகைகளுக்குச் சென்று; கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன் அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். 
மல்லி கிழான் காரியாதியின் வீட்டிற்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால் போர் எனில் அவனது வாழ்விடத்திற்குள் திங்களின் கதிர்கள் கூட நுழைய முடியாதவாறு தாழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. அக் கானகக் குறும்பில் கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுத்து வாங்கும் வகையில் நெருக்கமான பல சிறிய குடிசைகள் உள்ளன. அங்கு கள்ளை நிரம்ப உண்டு; பிறகு புளிச்சுவையை மேலும் விரும்பிய சிவந்த கண்களை உடைய ஆடவர் இன்புளிப்பு உடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால்; காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில், எயினர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசைத் துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் பெரும்புகழ் வாய்ந்த காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் மனையில் விடியல் பொழுது நன்கு புலர்ந்த நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.'

சமூகச் செய்திகள்:
குறுநில மன்னரைக் காட்டிலும் கொடையில் சிறந்த கிழார்கள் வாழ்ந்தனர். மன்னர்களிடம் பரிசு பெறும் முறையைக் காட்டிலும் திணைமாந்தருள் தலைவரானோர் இரவலரின் பசியை ஆற்றினர் என்பதை ஆவூர் மூலங்கிழாரின் பாட்டு காட்டுகிறது. இதே கருத்தைத் தான் 26.04.'26 தேதியிட்ட பதிவில் புறத்திணை நன்னாகனார் கரும்பனூர் கிழான் சொன்னதாகக் குறிப்பிடுகிறார். இக்கருத்தை 12.01.'26 தேதியிட்ட பதிவில் கொண்கானக் கிழான் பற்றிய பாடலிலும் காண்கிறோம். 

மல்லி கிழான் காரியாதி செல்வ வளத்தில் சுருங்கியவன்; முல்லைத் திணைமாந்தர் தலைவன். அவனது குறும்பில் பல குடிசைகள் நெருக்கமாக இருந்தன. அதனால் தான் அவனது வீட்டில் தாழ் பொருத்திய கதவு இருந்தமை இங்கு பாடுபொருள் ஆகி உள்ளது. 

ஐவகை நிலங்களிலும் கிழார் தலைமைத் தன்மையுடன் கொடையிற் சிறந்தும் விளங்கினர்.
1. குறிஞ்சி- கொண்கானக் கிழான்- 12.01.'26 தேதியிட்ட பதிவு& கரும்பனூர் கிழான்-26.04.'26 தேதியிட்ட பதிவு
2. முல்லை- மல்லிகிழான் காரியாதி - 28.04.'26 தேதியிட்ட பதிவு 
3. மருதம்- சிறுகுடி கிழான் பண்ணன் -24.04.'26 தேதியிட்ட பதிவு 
4. நெய்தல்- பொறையாற்றுக் கிழான்- 09.01.'26 தேதியிட்ட பதிவு 
5. பாலை- வலார்கிழான் பண்ணன்- 27.04.'26 தேதியிட்ட பதிவு 

கிழார்களுள் பொருநர், எயினர் எனப் பல சமூகப்பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர். பொறையாற்றுக் கிழான் ஒரு பொருநன். வலார்கிழான் பண்ணன் ஒரு எயினன். மல்லிகிழான் காரியாதி ஒரு குறும்பன். 

சக 
 

kanmani tamil

unread,
Apr 29, 2026, 6:12:21 AMApr 29
to vallamai

புறநானூறு-385
"வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றிற்று இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்அரை                   
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அரு வந்தை வாழியர் புல்லிய                          
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே" கல்லாடனார் பாடியது. 

பொருள்:
'வானில் வெள்ளி முளைத்தது; பறவைகள் ஒலித்தன; பொழுது புலர்ந்து வெளுத்தது. அந்நேரம் நான் அம்பர் கிழான் அருவந்தையின் எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி; அவனது மனைக்கு அருகில் உள்ள அயல்மனையின் முற்றத்தில் நின்று தடாரிப் பறையை அறைந்தேன்.  என் பறையின் ஒலியைக் கேட்ட அருவந்தை, என் வறுமையை நீக்க விரும்பி என் இடையில் இருந்த மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி வெண்ணிற ஆடையை உடுப்பித்து, எனக்கு உணவளித்து என் பசியைப் போக்கினான். காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் எனும் ஊர்க்கு உரியவனாகிய நல்ல அருவந்தை என்பவன் புல்லியின் வலிய உயர்ந்த வேங்கட மலையில்  வானிலிருந்து பெய்யும் மழைத்துளிகளை விடப் பல்லாண்டு வாழ்வானாக.'

சமூகச் செய்திகள்:

காவிரிக்கரையில் இருந்த அம்பர் என்னும் ஊரின் தலைவன் அருவந்தை ஆவான். 

பொருநர் ஊர்ஊராகச் சென்று பரிசில் வேண்டிப் பாடிய போது தடாரிப் பறையைப் பயன்படுத்தினர். அறுவடையின் போது கிணைப்பறையைப் பயன்படுத்தினர். 

கல்லாடனார் புல்லி எனும் குறுநில மன்னனோடு நெருங்கிய தொடர்பு உடையவர் ஆதலால்; அருவந்தையை வாழ்த்தும் போது; புல்லியின் வேங்கட மலையில் பொழியும் மழைத் துளிகளோடு ஒப்பிடுகிறார். 

சக 

kanmani tamil

unread,
Jun 1, 2026, 5:26:28 AM (2 days ago) Jun 1
to vallamai

"கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்

களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்" (பெரு.129-133)

இப் பாடற்பகுதி எயினர் குடியிருப்பிற்குச் சென்றால் பாணனுக்குக் கிடைக்கக் கூடிய உணவு பற்றிப் பேசும் பெரும்பாணாற்றுப்படைச் செய்தி. கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துகிறார்.  

பொருள்:: 
'மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லில் இருந்து ஆக்கிய சிவந்த சோறு உவர் நிலத்தில் வளர்ந்த ஈந்தினது முற்றிய விதை போலத் தோன்றும். நாய் கடித்து இழுத்துக் 
கொண்டுவந்த சங்கு போன்ற முட்டைகளை உடைய உடும்பின் கறியைப் பதப்படுத்தி உப்புக்கண்டமாக வைத்திருப்பர். அதனைத்  துணை உணவாக (side dish)... ஒவ்வொரு இல்லத்திலும் நீங்கள் பெறுவீர்கள்.'

விளக்கம்: 
‘வேட்டையில் கிடைத்த  மிகுந்த ஊனைப் பருந்துண்டுகளாக வெட்டி; கல் உப்பு, மஞ்சள் தூளில் புரட்டிக்; கோனூசியில் குத்திக் கயிற்றில் கோத்து; இரண்டு கம்புகளை ஊன்றி அவற்றில் அவ்வூன் கோத்த   கயிற்றைக் கட்டிக்; காய வைத்துச் செய்வது உப்புக்கண்டம். இன்றும் இவ்வாறு பதப்படுத்தும் முறை வழக்கில் உள்ளது’ பாடலில் 'கால் யாத்த' எனும் தொடர் இடம்பெறுவது உப்புக்கண்டத்தின் செய்முறைக்கு உரிய ஆதாரம் ஆகிறது.

சிவப்பரிசிச் சோற்றுக்கு உரிய இணையாக உடும்புக்கறி உப்புக்கண்டம் அமைந்து உள்ளமை; பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் உணவுமுறையைத் தெளிவுறுத்துகிறது.

சக .
Reply all
Reply to author
Forward
0 new messages