இந்துமதம் எங்கே போகிறது?
தமிழகத்தில் ஹிந்து மதத்தைத் தரக்குறைவாக விமர்சித்து நூல்கள் வருவது புதியதல்ல. அதுவும் அது “தமிழ்” அடையாளம் கொண்டு வருவது அவர்கள் பூணும் கவசம் அதாவது “தமிழ்” என்பது கவசமாகிவிட்டது. முகமூடியாகவும் உள்ளது.
ஹிந்துமதத்தை, ஹிந்துமதக் கடவுள்களைத் தரக்குறைவாக விமர்சித்து வந்த நூல் “இந்துமதம் எங்கே போகிறது?” என்னும் நூல். இந்த நூலை எழுதியவர் என்று சொல்லக்கூடாது ஏனென்றால் இதை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாதாசாரியார் என்னும் வயோதிகர் சொல்லச், சொல்ல, எழுதியது நக்கீரனில் பணியாற்றிய ஆ.ரா(கவேந்திரன்) அவர்கள்.
ராமானுஜ தாதாசாரியார் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பின் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் செட்டில் ஆகியவர். இவரது தொடர் நக்கீரனில் வெளியானபோது அதன் பக்கங்களைப் படித்துவிட்டு அதில் உள்ள அபத்தங்களை, பொய்களை நேரடியாக அவரை சந்தித்துக் கேட்க சென்றது “ஸ்ரீ வைஷ்ணவ கலாசாரப் பாதுகாப்பு இயக்கம்“ மூவரணி.
நக்கீரனில் இவரது “இந்துமதம் எங்கே போகிறது?” தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே அஹோவுடனான சந்திப்பு 2005 அக்டோபர் மாதம் நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு ஸ்ரீரங்கத்திலிருந்து வெளியாகும் பாஞ்சஜன்னியம் மாத இதழில் நவம்பர் 2005 இல் பக்கம் 12-15 பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நக்கீரனில் தான் எழுதவில்லை என்று மறுத்துப் பேசினார் அக்னிஹோத்ரி. அவரது கட்டிலின் கீழ் இருந்த நக்கீரன் இதழ்களை எடுத்து அவரிடம் காட்டினேன். நீங்கள் எழுதவில்லை என்றால் உங்களது அறையில் தொடர் வரும் இந்த இதழ்கள் எப்படி வந்தது? என்றேன், கோபத்துடன் அந்த இதழ்களைத் தூக்கியெறிந்தவர்,
நக்கீரனில் எனது பெயரைப் போடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகக் கூறினார். அப்போது அங்கு வந்த அவரது மகன் வழிப் பேரன் ஆஸ்திரேலியாவில் scientist ஆக இருப்பவர் அஹோவிடம் “நீ எழுதவில்லையென்றால் அப்புறம் இங்குவரும் நக்கீரன் உதவியாசிரியருக்கு ஏன் பேட்டி தருகிறாய் என்று கேட்டார்”. அதற்கும் அவருக்கு கோபம் வந்ததே தவிர பதிலில்லை.
சரி அப்படியானால் எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன, அதைத் தெளிவுபடுத்திக்கொள்ளச் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்குத் தாங்கள் பதில் அளிக்கவேண்டும் என்றேன்,
“திருப்பதியில் இருப்பது யார் பெருமாளா? முருகனா?” பதில் வேண்டும் என்றேன். திருப்பதி விஷ்ணு கோயில், ஆனால் பெருமாள் என்றால் நான்கு கைகள் இருக்கவேண்டும் என்று குழப்பமான பதிலை அளித்தார்.
அப்படியானால் சிலப்பதிகாரத்தில் காடுகாண்காதையில் திருப்பதியில் இருப்பது திருமால்தான் என்று சைவத்தையோ வைஷ்ணவத்தையோ சாராத இளங்கோவடிகள் எழுதியுள்ளாரே? என்றேன்.
“உனக்கு வயசு பத்தாது சும்மாயிரு” இதுதான் அவர் அளித்த பதில்.
“பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தார்களா?” என்றேன்.
“ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த பிராமணர்கள் மலையேற முடியாத பிராமணப் பெண்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்கள், இங்குவந்து தமிழ்ப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள்” என்றார்.
அப்போது அங்கு குறுக்கிட்ட அக்னிஹோத்ரியின் மகன் ( வங்கியிலிருந்து ஓய்வுபெற்றவர் “அப்படியானால் இவரது மனைவியும் அம்மாவும் பிராமணர்கள் இல்லையா? என்று கேளுங்கள் சார்” என்றார்.
அக்னிஹோத்ரியின் வயது மற்றும் அவரது ஆசாரிய பதவி இரண்டையும் எண்ணி அவரைக் கேட்கவிரும்பவில்லை ...
அதாவது அக்னி ஹோத்ரியின் வாக்குப்படி பிராமணர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நேராக தமிழகத்துக்குத் தான் வந்து விட்டார்கள் என்று கொள்ளவேண்டும். இதுதான் அவரது ஆராய்ச்சி.
நக்கீரனின் “இந்துமதம் எங்கே போகிறது?” நூலை அட்டைப்படத்தில் உள்ள அவரது வைதிகத் தோற்றத்தைக் கண்டு வாங்கிப் படித்த பின் ஏமாந்தவர்கள் பலர். ஸ்ரீ ராமக்ருஷ்ணா மடத்து துறவி ஒருவர் அப்படி அட்டைப் படத்தைக் கண்டு வாங்கி படித்து நெருப்பை கையில் எடுத்தது போன்று இருந்தது என்று சொன்னதை வரலாற்று ஆய்வாளர் திரு. பெ.சு.மணி அவர்கள் என்னிடம் கூறினார்.
இந்த நூலைத் திருவையாறு தியாகராஜ ஆராதனையின் போது நக்கீரன் அரங்கம் அமைத்து விற்பனை செய்தது. திராவிடக் கழக பிரச்சார ஊர்திகள் சுமந்து செல்கின்றன. இது ஒரு ஆன்மிக நூல் என்று எண்ணி வாங்கிப் படித்து, இதில் உள்ளவை உண்மையானவை என்று எண்ணி ஹிந்துமதத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணிப் பிரசாரம் செய்யப்படுகிறது .
ஆம்! நாஸ்திக நூலுக்கு ஆஸ்திக வேஷம் பூண்ட ஒருவரின் அட்டைப்படம். எப்படியிருக்கிறது வியாபாரதந்திரம்?.
நக்கீரன் இதை ஆன்மிக விஷயம் என்றால் ஏன் இவர்கள் அப்போது நடத்திய “ஒம்சரவணபவ” என்னும் ஆன்மிக இதழில் வெளியிடவில்லை என்பது நமது கேள்வி.
இதைப்போன்றே இன்னொரு நூலையும் வெளியிட்டார்கள் அது “இந்துமதம் எங்கே போகிறது?” - 2ம் பாகம் “சடங்குகளின் கதை” என்னும் நூல். அதில் வேத மந்திரங்களுக்கு தவறான அர்த்தங்களை எவ்வாறு சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லிவை(த்)தார்.
இப்படிப் பட்ட 'ஆன்மிக' நூலை / 'ஆராய்ச்சி' நூலைப் பாராட்டியவர்கள் யார்? யார்? என்பதையும் பதிப்புரையில் நக்கீரன் கோபால் கூறுகிறார்.
“பகுத்தறிவுப் பாசறையே பாராட்டுவிழா நடத்துகிற அளவிற்குக் குறிப்பாகச் சொல்வதானால் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியாரியத்தில் ஊறித் திளைக்கும் நமது அன்புக்குரிய ஐயா, சின்ன குத்தூசியார் போன்றவர்களே உளமாறப் பாராட்டுகிற அளவிற்கு ஆன்மிகத்தின் மத்தியில் இருந்தபடியே பெரியாரியக் குரலை எதிரொலித்தது விழிப்புணர்வைத் தந்தார் தாத்தாச்சாரியார், அவரிடம் கேட்க வேதஞானமும் வெளிச்ச சிந்தனைகளும் வெளிப்பட்டபடியே இருக்கிறது.
இரண்டு பாகங்களிலும் அரைகுறையாடைப் படங்கள் ... உணர்வைத் தூண்டும் வரிகள், ஆம்! நக்கீரன் ஆசிரியரே இரண்டாம் பகுதிக்கு எழுதியுள்ள பதிப்புரையில் 9ஆம் பக்கத்தில் “பாலியல் சார்ந்த விழிப்பையும் நக்கீரன் தந்து கொண்டிருப்பதால், ஆன்மீகம் சார்ந்த விழிப்புணர்வையும் ” அக்னிஹோத்ரம் மூலம்...
இதெல்லாம் யாருக்குத்தெரியுமா? உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு... வாழ்க தமிழ் அறிவுலகம்.
ரயில்வே time table, பஞ்சாங்கம் இரண்டினையும் அச்சில் பார்த்துப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ அச்சு வடிவில் வரும் நூல்களில் உள்ள எல்லாம் உண்மை என்று எண்ணும் மக்கள் உள்ளனர்.
அதுவும் பூணல் போட்டுக்கொண்டு திருமண் அல்லது வீபூதியுடன் காட்சி தருபவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்னும் மனோபாவம், மக்களின் அப்பாவித்தனம்.
கிறித்துவ மிஷினரிகள் கூட மதமாற்றத்தின் போது நாங்கள் பிராமணர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று கூறிக்கொண்டு சிலரைப் பேசவைக்கும்.
அதாவது, பிராமணர்களே மதம் மாறிவிட்டார்களே அப்படியென்றால் அது உண்மையாக இருக்கும் என்ற மயக்கத்தை உண்டு பண்ணும் புரட்டு. இதுதான் அக்னிஹோத்ரியின் அட்டைப்பட விளம்பரம்
ராமானுஜ தாத்தாசாரியாரை வேத பண்டிதர் என்று மட்டும் அறிந்தவர்கள் யாரும் நக்கீரன் பத்திரிக்கையையோ அது வெளியிட்டுள்ள நூல்களையோ படிக்கும் வாய்ப்பு இல்லை.
பொதுவாகப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லையே.
நக்கீரன் இதழைப் படிக்கும் ஒரு வாசகரோ நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ள நூலில் உள்ள இதெல்லாம் வேதத்தில் ஆகமத்தில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்வில் உள்ளதா? என்று தேடும் அளவு எண்ணம் கொண்டவராக இருக்கப்போவதில்லை..
சுருங்கச் சொன்னால் பொதுவாசகர் என்று இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இரண்டு நூலிலும் அக்னி ஹோத்ரி அவர்கள் சொல்லியுள்ள மேற்கோள்கள் எதற்கும் ஆதாரம் எந்த இடத்தில் உள்ளது என்று காட்டவேயில்லை.
மனுஸ்ம்ருதி, வேதம், ஆகமம் என்றெல்லாம் சொல்லுவாரே தவிர எந்த இடத்திலும் இந்த நூல், இந்த அத்தியாயம், இந்த பாகம், இந்த எண் கொண்ட ஸ்லோகம், என்று காட்டமாட்டார்.
மேலும் அவரது நூலிலேயே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட அதாவது தான் சொல்லியதைத் தானே மறுத்தும் சொல்லுவார் ஆழ்ந்து படிப்பவர்களுக்கே இது புரியும்.
மேலும், இவர் இரண்டு பாகங்களில் கூறியதில் பெரும்பாலும் முன்னர் இவரே தனது 66வது வயதில் 1973 இல் எழுதிக் கும்பகோணம் சாரங்கபாணி தேவஸ்தானம் வெளியிட்ட நூலான “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற நூலின் விரிவேயாகும்.
அந்த நூலைத்தான் ஆராய்ச்சி நூல் என்று இந்துமதம் எங்கே போகிறது? முதல் பாகத்தில் அறிமுகத்தில் மகாபெரியவரின் நண்பர் என்று குறிப்பிடுகிறது நக்கீரன்.