“பல்லி சொல்லும் பலன்“ என்பது “பாம்புப் பஞ்சாங்கத்தில்” உள்ளது, பல்லி தலையில் விழுந்தால் கலகம் (சண்டை) என்பது போன்று, உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்னென்ன பலன் என்று சொல்வதே, பல்லி சொல்லும் பலன். இதெல்லாம் பகுத்தறிவுக்குப் பொருந்தாது என்றும் இதெல்லாம் “பஞ்சாங்கம்” என்பதின் மூலம், பஞ்சாங்கத்தை கண்டுபிடித்த பார்ப்பனர்கள் தமிழனை ஏமாற்றச் செய்த சதி, ஏமாற்று வேலை என்பவர்கள் உண்டு. அப்படிச் சொல்வதை உண்மை என நம்புவோரும் உண்டு...
பல்லி சத்தமிடுவதை “கௌளி” என்பர். பல்லி “கௌளி” சொன்னால் தரையில் மூன்று முறை விரல்களால் தட்டுவது, இன்றும் பலரிடம் உள்ள பழக்கம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழர்கள் பல்லி சொல்லும் பலனை நம்பிவந்தனர்.
இதனை அகநானூற்று பாடல்கள் நிரூபிக்கிறது. “முதைச்சுவல் கலித்த.... பல்லிப் பாடுஒர்த்துக் குறுகும் புருவைப் பன்றி” ..... பல்லியின் சொல்லை அறிந்து, நல்ல நிமித்தம் என்று எண்ணி இளம் பன்றி வருகின்றது. (அகநானூறு 88)
“மையல் கொண்ட... பல்லிப் படுதொறும் பரவி நல்ல கூறு என நடுங்கி” .... பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும்போதெல்லாம் வணங்கினாள் நல்லது சொல் என்று நடுங்கி வேண்டினாள். (அகநானூறு)
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன... ஆடுமால் இடனே” (கலித்தொகை பாடல்10 - 21,22)
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே” என்பதனால் பெண்களுக்கு, இடது கண், இடது தோள் துடித்தாலும் ஆண்களுக்கு வலது தோள் வலது கண் துடித்தாலும் நன்மையும், வெற்றியும் உண்டு. பெண்களுக்கு வலது தோள், வலது கண் துடித்தாலும் ஆண்களுக்கு இடது தோள், இடது கண் துடித்தாலும் தீமை வரும் இத்தகைய நம்பிக்கை பழங்காலத்திலிருந்தே தமிழர்களிடம் இருந்ததை கலித்தொகை என்னும் தமிழ் இலக்கியம் காட்டுகிறது.
எரி நட்சத்திரம் விழுந்தால் நாட்டை ஆள்பவர்களுக்கு ஆபத்து என்னும் நம்பிக்கை பாரத தேசமெங்கும் உள்ளவர்களிடையே உள்ளது. தமிழர்களிடையேயும் இருந்துள்ளது. அது உண்மையாக நடந்ததையும் எரி நட்சத்திரம் விழுந்த ஏழாம் நாள் “கோச்சேரமான் யானைகட்சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை” என்னும் சேர மன்னன் இறந்ததையும் பதிவு செய்கிறார் “கூடலூர் கிழார்” என்னும் புலவர். “கனைஎரி பரப்பக் கால் எதிர்பு …. வந்தன்று இன்றே” (புறநானூறு 229)
மூட நம்பிக்கைகள் என்று இன்று பகுத்தறிவுப் பட்டாக்கத்திகள் சொல்வதும் அதற்கு பிராமணர்கள் தான் காரணம் என வசைபாடுவதும் தூங்குபவன் துடையில் கயிறு திரிக்கும் வேலை. பழைய தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ள தமிழர்களது நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்றும் இதற்கு பிராமணர்கள் மீது பழிபோடுவதும், ஆதாரமில்லாமல் ஆரியவாதம் பேசுவதும் பகுத்தறிவு அற்ற பொய்கள்,
தமிழ் இலக்கியத்தில் உள்ளது தான், பஞ்சாங்கத்தில் உள்ளது. எனவே அது மூட நம்பிக்கையாக இருக்க முடியாது. ஏனென்றால் தமிழ் இலக்கியத்தில் மூட நம்பிக்கைக்கு இடமில்லை, இதை பகுத்தறிவுக் குஞ்சுகள் உணர்ந்து கொண்டு தங்களை உண்மை தமிழர்களாக்கிக் கொள்ளவேண்டும்.