கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி
புதுவை அருகு திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்து கிடக்கும் கற்பலகையில் உள்ள 18 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட கல்வெட்டு.
1. விளம்பிஸ்ரீ_ _ _
2. மாதம் 10 தேதி நயினார்
3. வசவப்ப மழவராயர்
4. திருவய்யாறுடை
5. ய நயினார் கோயில்
6. வந்தேறு குடியளு
7. க்கு கட்டளை விட்டபடி
8. திருவாண்டார் கோயி
9. லில் குடியிலிபா
10. ழாக இருக்கவல்
11. அண்ணமாரை
12. யன் குடியேற்
13. றிக் கொள்ள சொல்
14. விருத்தகை இரு
15. க்கையில் தம் கு
16. டியளுக்கு கட்டளை
17. இட்டபடி கையிகோளர்
18. வியாபாரியள் உண்
19. டான பலபட்டடை
20. காசவற்கத்துக்கும்
21. குடியளுக்கும் இவரு
22. ஷம் ஒன்றுக்கு
23. மானியம். அதுக்கு
24. மேல் மாதம் ஒன்றுக்
25. கு அரைக் கட்டணமு
26. ம் ஆயத்துக்கு மா
27. தம் மூன்று காசு
விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.
விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ள சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.
இன்னாளைய நகர வரி போல் உள்ளது அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர், அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.
பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்
புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த 16 ஆம் நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு . இந்த கோட்டுச்சேரி காரைக்காலிலிருந்து பொறையார் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
8. றுவ மானியப் பட்டையம்
9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
11. பொன் அறுபது இந்தக் கட்டளை
12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
17. மீன் உள்பட பட்டணவரே அனு
18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
20. அழித்தவன்
பட்டணவர் – மீனவச்செட்டியார் அய்யன் கட்டளை – அய்யனுடைய நில எல்லை பரவை மீன் – கடல் மீன்
விளக்கம்: 18 ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டணவர் 12 ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.
பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர் S Kuppusamy & G Vijayavenugopal.
திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு
1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில் வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
7. யிலே பத்து மனையுங் கைக்கொண்டு வைகாசித் திருநாளைக்கு நாலு திருப்பரிச்சட்டமும் திருவுத்திரியம் இரண்டு திருமுடிச்சேலை இரண்டும் விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம் நாலும் து[வ]ஜ படமும் திருவாசலுக்கு திருநமநி
8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை பண்ணிக் குடத்தோம் இயோரிரான பட்டணவரோம். இப்படி செய்யாவிடில் இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
9. வர் தடுத்தும் வளைத்தும் தண்டியும் சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக ஸம்மதித்தோம் செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட சோழபட்
10. டணத்தோமும் வேளார் காணியான இராஜேந்திர சோழபுரத்தோமும் கருப்பூரான விக்கிரம சோழபுர்த்தோ[மு]ம். ஸ்ரீ வைஷ்ணவர் இரக்ஷை.
உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction; வதிக்கு - கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான -
விளக்கம்: விக்கிரம சோழனின் 9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது. பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்யபவராதலால் இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்கு சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித் திருநாளுக்கு நான்கு சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு திருமுடிச்சேலை, கொடிக்குத் துணி, திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளை செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மை தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக் கொண்டோம் செங்காட்டு புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம், வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்பு கல்வெட்டு ஆகும்.
எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாத்தோ அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனாற் தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர். மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம். இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையரைக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்கு தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாக பிதற்றுகின்றனர் சில தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள்.
மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12 ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18 ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர் கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு ஏற்படுத்தியதை இக் கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.
பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர் S Kuppusamy & G Vijayavenugopal, Institut Francais De Pondichéry : 2006
https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai