திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர்
ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும்
‘தமிழில் என்ன இருக்கிறது?’ – இந்த வினா தந்தை பெரியாரவர்களால் எழுப்பப்பட்டது. அது மட்டுமா? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதும் அவரது கூற்றாகும் “இவற்றைச் சொன்னதன் உட்பொருள் யாது?” என்பதே ஈண்டு ஆராயற்பாலது. பெரியாரவர்கள், தமிழின் மீதுள்ள வெறுப்பினால் இவ்வாறு கூறினார்களா? என்றால் இல்லை!
இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், போர் முறை – ஆட்சி முறைகளையும் பற்றியே கூறுவனவாக உள்ளன. அஃதாவது, அறம்-பொருள்-இன்பம்-வீடு என்ற நாற்பொருள் பற்றியே நவில்கின்றன. அவற்றை அடைவதற்குரிய வழிவகைகளையே வரையறுக்கின்றன.
வாழ்க்கையின் குறிக்கோளாகக் கூறப்படுவது – அன்றி, இறுதியில் அடைய வேண்டியதாகக் கூறப்படுவது – வீடு (மோட்சம்) அடைவதேயாம்.
எங்கோ ஓர் இன்பவுலகம் இருப்பதாகவும், இறந்தபின் அங்கு சென்று இன்பமடையலாம் என்றும், அதற்கு இவ்வுலகில் அறம் செய்ய வேண்டுமென்றும், ஏழைகட்கும் – இரப்பவர்க்கும் – பிறர்க்கும் உதவ வேண்டுமென்றும் உரைக்கின்றன. இங்கு நன்மை (புண்ணியம்) செய்பவர், அங்கு இன்ப வாழ்வெய்துவராம், இவண் தீமை (பாவம்) செய்பவர் அவ்வுலகில் துன்பம் நுகர்வராம், எனவே, ஈண்டு ஆ காத்து, அந்தணரோம்பி – தெய்வம் வழுத்தி – ஏலார்க்கு உதவி – பெண்டிர் பேணி – அரசுக்கு அடங்கி வாழ வேண்டுமென்று அறையும் நூல்களே அனைத்தும். இவை தெய்வப்பற்று உண்டாக்கும் நோக்குடையனவாகவே உள்ளன. இவற்றின் பயன், அறம் பொருள் இன்பம் வீடடைதலே.
மாந்தன் தோன்றிய காலத்தில் விலங்குகளைப் போன்று காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்தான். மரங்களிலும், மலைக்குகைகளிலும் வாழ்ந்தான். காய்–கனி–கிழங்கு–இலை முதலியவற்றையும், பறவை–விலங்குகளின் இறைச்சியையும் உண்டு வாழ்ந்தான். மலைகளில் மூங்கில் மரம் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றிக் காடு அழிவதையும், பாம்பு கடித்து மாந்தர் இறப்பதையும், காற்றடித்து மரங்கள் முறிவதையும், மின்னல்– இடி–மழை–சூரிய வெப்பம் ஆகியவற்றையும் பார்த்தபோது, அவற்றிற்குரிய அறிவியல் உண்மைகளை அறிய அவனால் இயலவில்லை. அதனால், ‘தெய்வத்தால்தான் இவையெல்லாம் நிகழ்கின்றன போலும்’ என்று எண்ணி அஞ்சினான். தெய்வப்பாடல்கள் அனைத்தும் காட்டுமிராண்டிக் கருத்துகளைக் கொண்டனவாகவே உள்ளன. சான்றாக ஒன்று கூறுவாம்.
“பொன்னார் மேனியனே …..இனி யாரை நினைக்கேனே!’
//எந்தத் தமிழனாவது இன்று நாம் பயன்படுத்தும் பல பொருள்களில் – மகிழுந்து, தொலைப்பேசி, தொடர்வண்டி, வானூர்தி, ஒலிபெருக்கி, வானொலிப்பெட்டி, நாழிகைவட்டில், அச்சுக்கருவி முதலியவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி எந்தப் பண்டைய நூலிலாவது எழுதியுள்ளானா? எந்த இந்தியனாவது கண்டுபிடித்துள்ளானா?
பெரியார் சொல்வது போல, ஒரு குண்டூசி செய்யும் முறையைக் கூட எழுதி வைக்கவில்லையே. “பத்துப்பாட்டு – எட்டுத்தொகை – பதினெண்கீழ்க்கணக்கு – மேற்கணக்கு – ஐம்பெருங்காப்பியம் – ஐஞ்சிறுகாப்பியம் – அகத்தியம் – தொல்காப்பியம் – என அடுக்கிக் கூறி மகிழ்கிறோமேயன்றி, இன்று நாம் பயன்படுத்தும் புதுவது புனைந்த கருவிகளுள் ஒன்று பற்றிக் கூட ஒரு நூலும் கூறவில்லையே” என்பதுதான் பெரியாரவர்களின் குற்றச்சாட்டு!//
இந்த அறிவியல் யாவும் அண்மைக்கால கண்டுபிடிப்புகள். இவற்றை 200 ஆண்டு முந்தைய வேறு எந்த மொழி நூல்களில் தேடினால் கூட கிடைக்கமாட்டா. பின் எப்படி பழந்தமிழ் நூலில் மட்டும் இருக்கும் என்ற அறிவு வேண்டாமா? இது இடம், காலம் தவறி தேடும் பிசகு. இதற்கு தமிழை பழிப்பானேன்? தமிழ் தானாக எதையும் பெற்றதில்லை. தமிழர் தாம் இதை தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்காக பழந்தமிழ் புலவர்களை தூற்றலாமா? இது கருத்து திணிப்பு தானே.
ஆரிய மொழியில் இருந்து பல நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதினர் தமிழ்ப்புலவர்கள். கம்பராமாயணம், கருடபுராணம் – கந்தபுராணம் முதலியன் அவற்றுட் சில. தேவாரம், திருவாசகம் முதலிய தெய்வப்பாடல்கள் – அப்பர், ஆரூரர், சம்பந்தர், வாதவூரர் எழுதினர்.
இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கின் யாவும் ‘தெய்வவழிபாடு செய்தால் – அறஞ் செழித்தால் – வீடுபேறு மோட்சம் அடையலாம். அங்கு இன்ப வாழ்வு எய்தலாம் என்று இயம்புகின்றனவேயன்றி, இம் மண்ணுலகில் இன்பமாக வாழ வழி சொல்லவில்லை’.
இங்குத் துன்புறுபரெல்லாம் முற்பிறப்பில் (பாவம்) தீமை செய்தனவராம். இப்பிறப்பில் பிறர்க்கு நன்மை செய்தால் மறுபிறப்பில் நலமாக வாழலாம் – ‘பிறவா யாக்கைப் பேரின்பமடையலாம்’ என்று சொல்கின்றன.
இவற்றையெல்லாம் பகுத்தறிவுக் கண்கொண்டு பார்த்த பெரியாரவர்கள், ‘தமிழில் என்ன இருக்கிறது?’ என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். இதில் தவறு என்ன?
“தமிழ் – காட்டுமிராண்டி மொழி” என்று ஏன் சொன்னார்கள் என்பது பற்றியும், சிறிது காண்போம். தமிழில் இன்றுள்ள நூல்கள் யாவும், கடவுட்பற்று பற்றியே பேசுகின்றன. இறந்த தலைவர்கட்கு நினைவுச் சின்னங்களும் – நினைவு மலர்களும் இன்று அமைப்பது போன்று அன்றும் செய்தனர். அவர்களைப் புகழ்ந்து கற்பனை நூல்கள் பலவும் யாத்தனர். அவைதாம் இன்றுள்ள பதினெண் புராணங்கள் – மறைகள் – இதிகாசங்கள் முதலியனவாக உருப்பெற்றன.
பிற்காலப் புலவர்கள், அப்புராணங்கள் முதலியவற்றைப் படித்துத் தங்கள் கற்பனைத் திறனைக் காட்ட வேண்டிப் பல கற்பனைக் கதைகளை எழுதி வெளியிட்டனர். செவிவழிச் செய்தியாகவும் பரப்பினர். பற்றுப் பாடல்கள் பல அவரடியார்களாகிய புலவர்கள் பாடினர். ஒவ்வொரு கடவுளைப் பற்றியும், தெய்வம் பற்றியும், புராண காலக் கருத்துகளைக் கொண்டே பல்லாயிரம் பாடல்கள் பாடிக் குவித்தனர். அவைதாம் இன்று ‘திருமுறைகள்’ என்று பாராட்டப்படுவன.
இன்றுள்ள புலவர்களும், இக்காலத்திற்கேற்ற அறிவியல் பாடல்கள் இயற்ற முன்வராது பழைய புராணப் பாடல்களையே படித்தும், விளக்கவுரை கூறியும், எழுதியும் பொழுது போக்குகின்றனர். பழமைக்குப் புதுமை மெருகு கொடுத்துப் புகழ்கின்றனர். மாடு, எருமைக்கடா, அன்னப்புள், எலி,காக்கை, கலுழன், நாய், புலி, மயில், கழுதை முதலியவற்றைப் புராணக் கடவுளர் ஊர்திகளாகப் பெற்றிருந்தனர் என்று புராணங்கள் புகல்கின்றன. இன்று மாந்தர் எவரும் அவற்றில் ஏறிச் செல்வதில்லை. எனவே, அது காட்டுமிராண்டிக் காலமே. அக்கடவுளர், காட்டுமிராண்டிக் காலத்தவரே.
அத்தகு கடவுள்களை வழிபடுகின்றவர்களைப் பெரியாரவர்கள் ‘காட்டுமிராண்டி’ என்பதில் பிழை ஏதுமில்லை. அப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் கடவுள்களைப் பற்றித் தமிழில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் எண்ணற்றவை. கடவுளைப்பற்றிக் கூறாத தமிழ் நூல்களோ, தெய்வம் பற்றிக் கூறாத தமிழ் இலக்கியங்களோ இல்லையென்றால் மிகையாகாது.
ஆதலின், காட்டுமிராண்டிகளைப் பற்றியே புகழ்ந்து புனையப்பட்ட நூல்களுள்ள ஒரு மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று இந்த அறிவியல் ஊழியில் பெரியார் ஈ.வெ.ரா. கூறியதில் என்ன தவறு இருக்கக்கூடும்? வாழ்க! வளர்க! பெரியார் கொள்கைகள்!
(கழகக்குரல், 3.10.76)