இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

இறுதிக் காலத்தில் உதவி செய்வதுதிருப்தி!பிரசவம் மற்றும் சடலங்களை ஏற்றிச் செல்ல என, இரண்டு கார்கள் மூலம், இலவச சேவை செய்து வரும், ஆலங்குடி கணேசன்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவன் நான். பழைய இரும்பு, பழைய பேப்பர் வியாபாரம் செய்து வந்தேன். மருத்துவமனையில் இறந்து போன ஒருவர் சடலத்தை, தள்ளுவண்டியில் வைத்து தள்ளி, வீட்டுக்கு கொண்டு வந்தனர். அதைப் பார்த்து என் மனம், பதைபதைத்துப் போனது.நம் ஊரில் இந்த நிலை, இனிமேல் யாருக்கும் வரக் கூடாது என, என் சேமிப்பில் இருந்த, 17 ஆயிரம் ரூபாயில், ஒரு பழைய அம்பாசிடர் கார் வாங்கினேன். 1968ல், என் முதல் சவாரியாக, ஆலங்குடி மருத்துவ மனையில் இருந்து, கீழாத்துார் கிராமத்துக்கு, ஒரு சடலத்தை எடுத்துச் சென்றேன்.சடலத்தின் உறவினர்களிடம், 'உடலை எடுத்து வந்ததற்காக, ஒரு காசுக் கூட கூலியாக வேணாம்'ன்னு சொன்னதும், அவர் கள் மனதில் அப்படியொரு திருப்தி. அந்த ஆத்மார்த்த திருப்தியை, என் மூச்சு இருக்கும் வரைக்கும் இழக்கக் கூடாது என, அப்போதே முடிவு செய்தேன்.இன்றைக்கும், பழைய பேப்பர் வியாபாரத்தில் வரும் லாபத்தின் ஒரு பகுதியை தான், பிரசவத்துக்கு இலவசமான கார் மற்றும் இறந்த உடல்களை எடுத்துச் செல்லும் கார் என, இரண்டுக்கும் டீசல் போட்டு, ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.பிரசவத்துக்கு இலவசமான காரில், இதுவரை, 2,000த்திற்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்று, மருத்துவனையில் சேர்த்துள்ளேன். உடல் நலம் குன்றியவர்கள், சாலை விபத்துகளில் சிக்கியவர்களை, மருத்துவனையில் சேர்த்ததில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர்.அதேபோல், இதுவரையிலுமாக, 5,156 சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளேன். அனாதைச் சடலங்களை, காவல் துறை உதவி மற்றும் ஒத்துழைப்புடன், அடக்கமும் செய்து வருகிறேன்.என்னுடைய ஐந்து மகள்களில், நான்கு பேருக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள், அண்ணா யுனிவர்சிட்டியில், பி.இ., - ஐ.டி., முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.ஏழை மக்களுக்கு இறுதி கட்டத்தில் உதவி செய்வது, என் மனதுக்கு திருப்தியாக உள்ளது; தொடர்ந்து செய்வேன்.
கணேசனின் மனைவி தெய்வானை: இத்தனை ஆண்டுகளாக சேவை செய்து, என் ஐந்து பெண்களில், நான்கு பேருக்கும் கல்யாணம் செய்து கொடுத்தோம். எங்களுக்கு சொந்தமாக வீடு இல்லையே என்ற கவலை இருந்தாலும், அவர் இப்படி சேவை செய்வது, பெருமையாக உள்ளது.
மனித வடிவில் தெய்வம்...வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
--
சென்ற மாதம் (நவம்பர்) “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழக்கப்பட்டோரில் நேப்பாளத்தைச் சேர்ந்தஅனுராதா கொய்ராலா(Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேப்பாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. இவரை இவ்வார வல்லமையாளராகத் அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியியல், இலக்கிய எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள்.
அறுபத்தைந்து அகவையை எட்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேப்பாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேப்பாளத்தின் காட்மண்ட நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal) என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேப்பாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றபெண்களுக்கு உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி.
அடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாகக் ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்துதும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேப்பாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழகப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காக கைத்தொழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது .
அனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலஉலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய யூனிஃபெம் விருது (German UNIFEM Prize 2007), அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் பீஸ் ஆபி வழங்கும் சமாதனப் பரிசும் (The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன.
சென்றமாதம் நல்லிணக்கம் சேவை மையம் (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டுசமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு.
விருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்ற மாதம் இந்தியா டுடே நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்து செயலப்டுத்தப்பட வேண்டியவை.
பெண்களுக்காகன சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமையின் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தகவல் தந்து உதவிய தளங்கள்:
Mother Teresa Award conferred on Koirala
Mother Teresa Memorial International Award for Social Justice held on Sunday
Mother Teresa global awards for Anuradha Koirala, Amte
http://www.firstpost.com/fwire/mother-teresa-global-awards-for-anuradha-koirala-amte-1795003.html
Nepal actor and Everest climber at India Today Global Roundtable: No gender bias in Mother Nature
Women should ask for 50 per cent reservation: Anuradha Koirala
http://indiatoday.intoday.in/story/india-today-global-roundtable–no-gender-bias-hina-rabbani-khar-anuradha-koirala-meenakshi-lekhi/1/403699.html
Anuradha Koirala
http://en.wikipedia.org/wiki/Anuradha_Koirala
Maiti Nepal
http://en.wikipedia.org/wiki/Maiti_Nepal
Picture:
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=52914
கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21-ஆவது பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. பாரதிவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடத்திவரும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி அவர்களை கவிஞர் ரவி என்றழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதை வல்லமை வாசகர்கள் அறிவார்கள். வல்லமையில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகளை ரவி எழுதியுள்ளார். அவற்றில் 50 பதிவுகளுக்கும் மேற்பட்ட “காற்று வாங்கப் போனேன்” என்ற தன்வரலாற்றுப் பகுதியும், சற்றொப்ப முப்பது கவிதைகளும் அடங்கும். ரவி அவரது சுயசரிதையை பொதுவான கோணத்தில் வழங்காமல் இந்தப் பிரபஞ்சத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாக அமைத்ததை, “சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது” என்று விளக்குகிறார். “கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!” என்றும், “என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை,” என்று தன்னைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கவிதைகள் மீதும், மகாகவி பாரதியிடம் இவர் கொண்ட ஈடுபாட்டை பாரதி பற்றி அவர் எழுதிய கவிதை மூலமாகவே அறியலாம்.
கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே
தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே
அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா
கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது
காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது
தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது
தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது
நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா
இந்த ஆண்டின் பாரதி திருவிழா ஜதிபல்லக்கு அழைப்பையும் ரவி கவிதையாக வடித்தே வல்லமை வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
— கே.ரவி
இவரது பேரார்வத்தின் காரணமாக வானவில் பண்பாட்டு மையம் 1994-ல் பிறந்து, ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடி வரப்படுகிறது. முதலாமாண்டு விழாவில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சிறப்புரையும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிக்கூறுகள். ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானியாக அனைவராலும் பாராட்டப்பட்ட காலத்திலேயே அவருக்கும் பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி அம்மையார் 2008 க்கான பாரதி விருதை வாலிபக் கவிஞர் மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கியதும் நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாகும். பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் பாரதி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வானவில் பண்பாட்டு மையம் 1994 தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் சிறப்புமிகு ஜதிபல்லக்கு நிகழ்ச்சி பற்றியும் ரவி கீழ்வருமாறு கூறுகிறார்:
முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது.
எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.
உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்து வந்திருக்கிறார். ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி இடம் பெறும். அதில் சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த ஆண்டு விழாவில் பாரதியாருக்கு சால்வை, பொற்பை ஆகியவற்றை சமர்ப்பித்து ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்க, திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் “வருவாய் கண்ணா’ ஓவியக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கி வைக்க, மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ’சேக்கிழார் அடிப்பொடி’ என்றழைக்கப்படும் தமிழறிஞர் முதுமுனைவர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். தொடர்ந்து வந்த மூன்று நாட்களிலும் கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாரதியாரைப் போற்றும் வகையில் அமைந்தன.

கவிதை இலக்கியத்திலும், சட்டத்திலும் சிறந்து விளங்கும் ரவி ஒரு பல்துறை வித்தகராகப் பன்முகம் கொண்டவர். இவரது கல்லூரி மாணவப் பருவத்தில் இதழியளாராகாவும் உருவெடுத்து, 1972-ஆம் ஆண்டு ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகையை நடத்திஇருக்கிறார்.
திரைத்துறையிலிம் நுழைந்து ‘ஸ்பரிசம்’ என்ற படம் தயாரித்துள்ளார். இசைமைப்பாளராகவும் உருமாறி திரைப்படங்களுக்கும், இசைப்பேழைகளுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது இனிய குரலில் பாடி ‘தெய்வ கானாம்ருதம்’ என்ற இசைப்பேழை 1994 இல் வெளியானது. ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையை 1980-களில் வெளியிட்டுள்ளார்.
“பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
“இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியில் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை தற்பொழுது “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற நூலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கவிஞராக தான்னை முன்னிறுத்திக்கொள்ள விழையும் ரவி, “நமக்குத் தொழில் கவிதை” “உன்னோடு நான்“ என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது ‘உன்னோடு நான்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற …
அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை
அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை
வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்
வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்
என்ற கவிதையை அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி இவரை வாழ்த்தியுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாணராமன் அவர்களின் மகன் என்பதும், தொலைகாட்சி புகழ் ஷோபனாரவியின் வாழ்க்கைத் துணைவர் என்பதும் இவரது மற்ற வியக்கவைக்கும் சிறப்புகள். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் பங்கினைப் பாராட்டி வல்லமையாளராக சிறப்பு செய்து வல்லமைக் குழுவினர் மகிழ்கின்றோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
வழக்கறிஞர் திரு. கே. ரவி பல தமிழ் / ஆங்கில இலக்கிய நூல்கள் எழுதியவர். குறிப்பாக அவர் எழுதிய பௌதிக விஞ்ஞான நூல் “இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலாகப் படைக்கப் பட்டுள்ளது என்பதையும் தேமொழி தேர்வுத் தொகுப்போடு சேர்க்க விழைகிறேன்.
திரு கே. ரவியை வல்லாளராகத் தேர்ந்தெடுத்துக் காட்டிய தேமொழிக்கு என் முதல் பாராட்டும், திரு கே. ரவிக்கு அடுத்த பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சி. ஜெயபாரதன்
--
“பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
“இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியில் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
நண்பர், கவிஞர், வழக்கறிஞர் ரவி அவர்கள், பன்முகத் திறனாளர்.
அவரது வானவியல் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி விழாக் கவியரங்கில் நானும் கலந்துகொண்டுள்ளேன். பின்னர் 2009 டிசம்பர் 11 அன்று நடைபெற்ற கவியரங்கிற்கு, பார்வையாளராகச் சென்றேன். ஆனால், கவியரங்க அமைப்பாளர்களும் நண்பர்களும் என்னைக் கண்டதும் நானும் கவிபாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். சரியென்று, அங்கேயே உட்கார்ந்து ஒரு கவிதையை எழுதி வாசித்தேன். அது இங்கே - http://annakannan-kavithaigal.blogspot.in/2009_12_01_archive.html
ரவி - ஷோபனா ரவி தம்பதியரின் மகளே நடனக் கலைஞரும் நடிகையுமான சொர்ணமால்யா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கலைக் குடும்பத்தின் பங்களிப்பு, இடையீடின்றித் தொடர்கின்றது.
இரண்டு காலகட்டப் புகழ்பெற்ற பெண்மணிகளின் பெருமையுடன் இணைந்தவர் என்பதை அறியத்தந்துள்ளீர்கள்.
வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் வல்லமையின் நலம்விரும்பிகளில் ஒருவரும், இந்த வாரம் தனது பவளவிழாவைக் கொண்டாடவிருக்கும் எழுத்தாளர் திரு.வையவன் அவர்கள். இவரை வல்லமை விருது தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் அறிவியல், இலக்கிய எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.
எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார்.
பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும், வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டதிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன.
தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதை தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாக படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும்.
பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கபூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.
சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
‘ஆனந்த பவன்'(1998) , ‘இடிபாடுகள்'(2001) என்ற நாடங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து:
‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’
அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youtful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
நமது வல்லமை மின்நிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.
பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார்.
இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டி, பவளவிழா கொண்டாடும் இவ்வார வல்லமையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறோம்.
வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள தகவல் …
திரு. வையவன்
தாரிணி பதிப்பகம்
பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்
32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை
அடையாறு, சென்னை – 600020
மின்னஞ்சல்: vaiyav...@gmail.com
தொலைபேசி: 9940120341
வலைப்பூ “இணையவெளி “: http://innaiyaveli.blogspot.com/
கூகுல் ப்ளஸ்: https://plus.google.com/102825432314914852934/about
தகவல்கள் வையவன் அவர்கள் பற்றிய சாகித்திய அகாடமி வெளியிட்ட ஆங்கிலக்குறிப்புகள் கொண்ட வலைப்பூவிலிருந்தும், வையவன் அவர்களின் வலைத்தளப் பதிவுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா திண்ணையில் [www.thinnai.com] அறிவிப்பு :
சி. ஜெயபாரதன்
பவள விழா நாயகர், வல்லமையாளர் வையவன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது புகழும் பணிகளும் மேன்மேலும் சிறக்கட்டும். வையவன், நீடூழி வாழ்க நிறைவுடன், நித்தியப் புன்னகை ஒளியுடன்.
அகவை அறுபதை அடையும் மனிதர்..
ஆற்றிய பணிகள் ஆயிரம்.. ஆயிரம்..
எதையும் எண்ணிச் செய்யும் இதயம்
ஏற்றம் பெறுவது உறுதியாகும் ..
மொழியில் கனிந்த ஆர்வம்..
படைப்புகளாக மாறும்…
தொடரும் சேவைகள் கண்டு..
வியத்தலே இங்கு உண்டு..
நாட்டுக்காக உழைக்கும்
நல்லோருக்காக குரல்கொடுத்து
நாளும் பொழுதும் இவரின்
பேனா புரண்டதைக் காணின்
வையவன் வாழ்க்கை முழுமை
வையகத்திலே அமைய..
பவள விழாவும் வருகிறது
பாராட்டுகள் பலவும் குவிகிறது
வல்லமையின் சார்பில் இன்று
வல்லமையாளர் விருதும்
வழங்கிச் சிறப்பித்தல்..
வாழ்க.. வளர்க.. வெல்க..
என்றே வாழ்த்திட வைக்கிறது.. பாரீர்…
அன்புடன்..
ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு “தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட் ட்ரீஸ்” (The Man Who Planted Trees) என்ற நூலை எழுதி வெளியிட்டார். எல்சார்ட் பூஃபியர் (Elzeard Bouffier) என்ற ஒருவர் மரங்கள் நடுவதில் ஆர்வம் மிக்கவராக அந்நூலில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் விவரித்த நிகழ்வுகள் மிகவும் உண்மைத் தன்மை நிரம்பியதாக இருந்ததால் அந்த மனிதரை அறியும் முயற்சிகள் அந்நூலின் வாசகர்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நூலின் ஆசிரியர் அக்குறிப்பிட்ட மனிதர் தனது கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகன் என்றும், மக்களுக்கு மரங்களின் மீது ஆர்வம் வர வேண்டியே அவர் தனது நூலில் நிகழ்வுகளைப் புனைந்ததாகவும் கூறினார். அவர் கற்பனையில் கண்ட மனிதர் நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயர் திரு.ஜாதவ் பயேங் (Jadav Payeng). பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் தனியொரு மனிதராக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த அதிசய மனிதர் ஜாதவ். இப்பொழுது அக்காட்டில் அழிவின் நிலையில் இருந்த பல்வேறு மிருங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறைந்தது ஐந்து புலிகளும் அடங்கும், அவற்றில் ஒன்று சமீபத்தில் இரு குட்டிகளையும் ஈன்றுள்ளது. இவரது சாதனைப் பற்றிக் கேள்விப்பட்ட வல்லமையின் எழுத்தாளரும், வாசகருமான திரு. ந. உ . துரை அவர்கள் வல்லமையாளர் விருதிற்கு ஜாதவ் பயேங்கை பரிந்துரைத்துள்ளார்.
ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் உள்ள இந்தக் காடு உள்ளூர் மக்களால் ஜாதவின் செல்லப்பெயர் “முலாய்” என்பதை ஒட்டி“முலாய்யின் காடு” (Molai Kathoni = Molai’s woods) என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்கத் துவங்கியபொழுது ஜாதவிற்கு வயது பதினாறு. தற்பொழுது ஜாதவிற்கு வயது ஐம்பது ஆகிறது, 35 ஆண்டிகளில் தனியொருவராக இந்தக் காட்டை உருவாக்கியுள்ளார் ஜாதவ். இவரது முயற்சியின் தொடக்கதிற்குக் காரணம் 1979 ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளம். அந்த வெள்ளத்தில் பல விலங்குகள் இறந்தன. வெள்ளம் வடிந்த பிறகு இப்பொழுது காடு இருக்கும் மணல்திட்டில் பல பாம்புகள் இறந்து கிடப்பதைப் பார்த்தார் ஜாதவ். வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு, மணல்திட்டில் ஒதுங்கிய பாம்புகள் மரநிழலின்றி வெய்யிலில் காய்ந்து இறந்திருந்தன. அவற்றைக் கண்டு கலங்கிய ஜாதவ், அந்த மணல்திட்டில் மரங்கள் நடுமாறு கோரிக்கை வைத்து காட்டிலாகா அதிகாரிகளை அணுகினார். அவர்களோ எந்த மரமும் வளரும் தன்மை அந்த மண்ணிற்கில்லை, வேண்டுமானால் மூங்கிலை வளர்ப்பதை முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கி தட்டிக் கழித்துவிட்டனர். ஜாதவிற்கு உதவி செய்வோர் யாருமில்லை, அந்த வேலையும் கடினமாக இருந்தது, ஆனாலும் ஜாதவ் தளரவில்லை.
தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தானே விரும்பி தனிமை வாழ்க்கையை ஏற்று அந்த மணற்திட்டிற்கே குடியேறினார் ஜாதவ். பல மூங்கில்களை நட்டு காலையும் மாலையும் நீரூற்றிப் பராமரித்தார். சில ஆண்டுகளில் மூங்கில்கள் வளர்ந்து சிறிய மூங்கில் காடு உருவாகியது. அதனையொட்டி பிறவகை மரங்களையும் சேகரித்து அங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினார். அவரது கிராமத்திற்குச் சென்று சிவப்பு கட்டெறும்புகளைச் சேகரித்து வந்து விலங்குகள் உயிர்வாழாத அந்த திட்டில் வளர்த்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மணல்திட்டின் மண்ணின் பண்பு அந்த எறும்புகளால் மாற்றப்பட்டது. அச்சமயம் “சமூகக் காடுகள் வளர்ப்பு” திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் சில தொழிலாளர்களும் இணைந்து 200 ஹெக்டேர் மணல் படுகையில் மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சென்ற பின்னர் அந்த மரங்களின் பராமரிப்பையும் ஜாதவ் மேற்கொண்டார். மரங்கள் வளர்ந்ததைத் தொடர்ந்து எந்த உயிருமே வாழத் தகுதியற்று இருந்த அந்த மணல்திட்டில் பல உயிரினங்களும் குடியேறத் துவங்கின.
அவ்வாறு குடியேறிய விலங்குகளில் இனஅழிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும், வங்காளப் புலியும் அடங்கும். பன்னிரு ஆண்டுகள் கழித்து வல்லூறு போன்ற பறவைகளும், வலசை போகும் பறவைகளும் பிற பறவையினங்களும், பல முயல்களும், நூற்றுகணக்கான மான்களும், மற்றும் பல சிறு விலங்குகளும் அக்காட்டை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. மான்கள், மாடுகள் போன்ற சிறு உயிரினங்களால் கவரப்பட்டு பெரிய விலங்குண்ணிகளும் அக்காட்டில் குடியேறத் துவங்கின. மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளரத் துவங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டின் ஆறு மாதங்கள் அக்காட்டில் வந்து தங்கி குட்டிகளையும் ஈனுகின்றன. மரங்களின் மீது கொண்ட அன்பால் ஜாதவ் தனது கிராமத்தைத் தவிர்த்துக் காட்டிலேயே சிறு குடில் போன்ற வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு தனது மனைவி, இருமகன்கள் மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்கு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுகிறார்.
அஸ்ஸாம் மாநில வனத்துறையினர், ஜாதவ் தனது முயற்சியைத் துவங்கி முப்பதாண்டுகள் கழித்தே அந்தக் காட்டைப் பற்றி அறிந்து கொண்டனர். அந்தக்காட்டின் அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளை உணவிற்காக நூற்றிற்கும் அதிகமான யானைகள் சேதம் செய்யத் துவங்கின. அவற்றை வனத்துறையினர் விரட்டிவர, அவை ஓடி வந்து முலாய்யின் காட்டில் அடைக்கலம் புகுந்தன. அரசின் பதிவேடுகளில் இடம் பெறாத ஒரு காட்டை அங்கு கண்ட வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். அன்றுதான் முலாய்யின் புதிய காடு அவர்களது கவனத்திற்கு வந்தது. யானைகளால் இழப்பு நேர்ந்தவர்கள் அந்தக் காட்டை அழிக்கக் கோரிக்கை வைத்தார்கள். ஜாதவ் அதற்குக் காட்டையும் விலங்குகளையும் அழிப்பதற்குப் பதில் என்னைக் கொன்றுவிடுங்கள் எனத் தீர்மானமாகச் சொல்லவும், வனத்துறையினர் ஜாதவிற்கு உதவ உறுதி பூண்டார்கள். மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது ஜாதவின் சாதனை, முலாய்யின் காட்டை இப்பொழுது வனவிலங்குகளில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றலாப் பயணிகளையும், திரைப்பட வெளிப்புறக் காட்சி படம் பிடிப்போரது கவனத்தையும் கவர்ந்துள்ளது முலாய்யின் காடு. தனியொரு மனிதராக இந்த சாதனையைச் செய்த ஜாதவ் பயேங், இதனை ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என்றும் அரசின் வனத்துறை காட்டின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் வேறு ஓரிடம் சென்று புதிய காடோன்றை உருவாக்கவும் தயார் என்று சொல்கிறார். சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பள்ளி நாட்களிலேயே தொடங்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் பள்ளி முடிக்கும் முணர் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இயற்கையில் இருக்கும் உணவுச் சங்கிலியைக் காப்பது நம் கடமை, நம் போன்ற மனிதர்களைவிட்டால் வேறு யாரால் உயிரினங்களைக் காக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜாதவ். அனைவரையும் சுற்றுச்சூழலின் மீது கவனம் கொள்ளவும், மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஜாதவ் பயேங் என்னும் காட்டுமனிதர் முலாய் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
தகவல்கள் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தளத்தின் பல செய்திகளின் தொகுப்பு
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
ஒரு பக்கம் விதிகளை மீறி.. மரம்வெட்டிகள் பிழைப்பு நடத்த.. இவரோ.. காடு உற்பத்திக்கு வழிவகுக்கிறார்! ஒரு தனிமனிதனால் இதெல்லாம் இயலுமா என்கிற கேள்விக்கு விடையிறுக்கிறார்! பிரமிப்பின் எல்லையைத் தொட வைக்கிற செயல்வீரரரைப் போற்றுவதும் பாராட்டுவதும் நம் கடமை! வல்லமையாளர் விருதளித்து மகிழ்வது நமக்கேப் பெருமை!!
அன்புடன்..
காவிரிமைந்தன்
வல்லமையாளர் ஜாதவ் பயேங் (Jadav Payeng) அவர்களுக்கு வாழ்த்துகள்.
நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்கு காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்நூல்களாக வெளியிட்டு வருகிறார். அறிவியல் செய்திபரப்பும் பங்களிப்பின் மூலம் இவர் மக்களுக்கு ஆற்றும் தொண்டினைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் இவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரினை பூர்வீகமாக் கொண்ட, 53 வயதை எட்டியுள்ள இளங்கோ அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். ‘துளிர்‘ என்ற மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏற்காடு இளங்கோ அவர்களின் அறிவியல் நூலாக்கப்பணிகளை பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளயின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் “அறிவியல் மாமணி” என்னும் விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார். தற்பொழுது சேலம் அறிவியல் இயக்கத்தின் (Tamil Nadu Science Forum – TNSF, Salem) மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று அந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் இளங்கோ.
இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் மக்களிடம் இல்லை என்று இளங்கோ கருதுகிறார். குறிப்பாக தொலைகாட்சியில் ஃபேர் அண்ட் லவ்லி, கோக்ககோலா போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து விட்டு அவற்றை பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தன்மைகளை பற்றியோ, அறிவியல் பின்னணியையோ யாரும் பார்ப்பதில்லை எனவும் இதுவே அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை அவர் எழுத துவங்கியதன் காரணம் எனவும் இளங்கோ குறிபிட்டுள்ளார்.
மேலும், இவர் “ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது. சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை,” என்று இன்றைய நிலையில் மக்கள் அறிவியலார்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இக்குறையை நீக்கும் பொருட்டு இவர் எழுதிய நூல்களில் பல அறிவியல் வளர்ச்சியில் அரும்பங்காற்றியவர்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டும் உள்ளன.
ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இளங்கோ அவரது இறப்பிற்குப் பிறகு அவரது உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று அவரது விருப்பத்தை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராகவும், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். அதன் காரணமாக தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் கொண்ட நூல்கள் பலவற்றிற்குத் தான் கொண்டுள்ள காப்புரிமைகளை நீக்கி இலவச மின்னூலாக அவை அனைவரையும் சென்றடையும் பொருட்டு ‘ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் ‘ துணையுடன் தனது நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்.
சென்னை வாழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. சீனிவாசன் அவர்களும் அவரது நண்பர்களான தொழில் நுட்பக் குழுவினரும் இலவச மின்னூல் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள். ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் (freetamilebooks.com) என்ற இணைய தளத்தின் வழி இதுவரை 70 எழுத்தாளர்கள் எழுதிய, 125 மின்னூல்களை இத்தன்னார்வக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள்மற்றும் வரலாறு என்று பலவகை நூல்களும் இவற்றில் அடங்கும். பரந்த மனமுள்ள எழுத்தாளர்கள் பலரும் தங்கள் நூல்களுக்கான காப்புரிமைகளை நீக்கி தங்கள் படைப்பை மின்னூலாக்க அனுமதியளித்து, ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் நிறுவனம் தமிழுக்கு செய்யும் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எழுத்தாளர்களில் தனி ஒருவராக மற்ற யாவரையும்விட அதிக எண்ணிக்கையில், 13 நூல்களுக்கு காப்புரிமைகளை நீக்கி ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் வழியே வெளியிட்டுள்ளார் ஏற்காடு இளங்கோ. கீழ்காணும் சுட்டிகள் வழி அவற்றைத் தரவிறக்கிப் பயனடையலாம்.
[1] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/
[2] இந்திய தேசியச் சின்னங்கள் – http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/
[3] இந்தியாவின் முக்கிய தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/
[4] உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் – http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/
[5] விண்வெளிப் பயணம் – http://freetamilebooks.com/ebooks/vinveli-payanam/
[6] விண்வெளியில் ஆய்வு நிலையம் – http://freetamilebooks.com/ebooks/space-research-center/
[7] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் – http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/
[8] உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் – http://freetamilebooks.com/ebooks/first-women-astranaut/
[9] முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா – http://freetamilebooks.com/ebooks/rakesh-sharma/
[10] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/
[11] விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண் – http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/
[12] தானியங்கள் – http://freetamilebooks.com/ebooks/thaniyangal/
[13] குடிசை – குறுநாவல் - http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/
ஏற்காடு இளங்கோ மேலும் தனது அறிவியல் செய்திபரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்றும், தமிழுலகம் பயன்பெறும் வகையில் இன்னமும் பல நூல்களை வழங்க வேண்டும் என்றும் வாழ்த்தி வல்லமைக் குழுவினர் இவ்வார வல்லமையாளரான இவரை பாராட்டி மகிழ்கிறோம்.
இவரைத் தொடர்பு கொள்ள:
ஏற்காடு இளங்கோ / Yercaud Elango
(yercau...@gmail.com)
Google Plus: https://plus.google.com/102807648316848870666/
ஏற்காடு இளங்கோ பற்றிய தகவல் உதவி:
http://ta.wikipedia.org/s/3pgz
http://tnsfsalem2009.blogspot.com/
http://yercaudelango.blogspot.com/
http://www.noolulagam.com/
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
ஓர் உன்னதத் தமிழ் விஞ்ஞான எழுத்தாளரை தமிழ் வழங்கும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்த தேமொழிக்கும், விஞ்ஞானி ஏர்காடு இளங்கோவுக்கும் எனதினிய பாராட்டுகள்.
கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமையையை வியந்து அவரை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
கல்லிடைக்குறிச்சியை தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 71 வது அகவையை எட்டியுள்ள ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதாரப் பாடத்தில் தரவரிசையில் முதல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்டம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களை கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார்.
கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது).
அறிவியல் தாக்கக் கவிதைகள்:
களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார்.
களிப்பருளும் “களிப்பே”!
=======================
[…]
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை “அபெய்ரான்” என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
[…]
ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தை கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார்.
சங்கநடைக் கவிதைகள்:
பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு…
பசலை பூத்தே…
=============
கதழ்பரி கலிமா அலரிதூஉய்
ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
இன்னிய பலவின் முள்பசுங்காய்
மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
ஓதையுண்பினும் ஓவா உறுபசி
உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.
நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய
நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!
============
பொழிப்புரை:-
============
குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.
“கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது.
குறும்பாக்கள்:
குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா….
குறும்பாக்களைப்பற்றி குறும்பா…
===============================
ஆயிரம் பக்க
எழுத்துக்களின்
”போன்சாய்” மரம்
கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது.
சுஜாதா
======
எழுத்துகளுக்கு எலக்ட்ரானிக்ஸை
ஊற்றியவர்….ஆயிரம்
“எந்திரன்”களின் அடிப்படை “சிப்”
கல்கி
=====
எத்தனை தலையணைகள்.
அத்தனையிலும்
சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.
ருத்ரா
======
ருத்ராவா? யார் அது?
பத்திரிகை ஆஃபீஸ்களின்
குப்பைத்தொட்டியில் தேடுங்கள்.
(மற்ற ருத்ராக்கள் மன்னிக்க)
*****
எழுதிச்செல்லும்
விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்.
எங்கே முடியும் விதி?
“பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை”
======
பேனாவுக்கு
மட்டுமே புரிந்தது.
காகிதம் மட்டுமே
ரசித்தது.
“கவிதை”
======
எழுதி முடிக்கவில்லை.
பேனாவில் எல்லாம்
எறும்புகள்.
“தமிழுக்கும் அமுதென்று பேர்”
======
இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். அவை கீழ்காணும் சுட்டிகளின் வழி படிக்கக் கிடைக்கும்.
எழுத்தாளர்களின் ஊர்வலம்- பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 .
விமர்சனக் கவிதைகள்:
அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே.
உலக கோப்பை கால்பந்து
நெதர்லாந்தும் மெக்ஸிகோவும்
=============================
நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது
பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ்
நரம்பு புடைக்கிறது.
டிவி திரை பூராவும்
உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின்
அடைசல்கள்.துள்ளு முள்ளுகள்.
கழுத்துப்பிடியாய்
கடையில் ஒரு அமுக்கு.
அப்புறம்
பெனால்டியில்
மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு
கடைசி ஆணி.
தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில்
“க்ளாஸ் ஜான் ஹண்டெலார்”
அடித்த கோல்..
வானத்தின்
உச்சிமண்டை பிளந்து கொண்டது.
அந்த உற்சாகக்குரல்
உலகத்தின்
செவிட்டுக்காதுகளின்
பாறாங்கல்லையெல்லாம்
கூட
உருட்டித்தள்ளியிருக்கும்.
நாக் அவுட் வந்த பிறகும்
இனியும்
ஒரு நாக்கை
தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா?
சிலிக்கு
இப்படித்தானே பிரேஸில்
ஒரு பச்சை மிளகாயை
கடிக்க கொடுத்தது.
அவர்களுக்கு
பச்சை மிளகாய் எல்லாம்
இனிப்புக்காய்கள் என்றாலும்
இந்த நாக் அவுட்டின்
அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ”
செம காரம் தான்.
மூக்கில் காதில் கண்ணில்
எல்லாம் காரம் தான்.
பிஃபாவின்
வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை
இந்த கால்பந்தில் பார்த்து
நரம்புக்குள்
நல்லபாம்புகளை கொத்தவிட்டு
நுரை தள்ளி
பார்த்து ரசிக்கும் விளையாட்டு
எந்த சொர்க்கத்திலும்
கிடைக்காது.
கிரிக்கெட் கூட
அகராதிப்படி
வெறும் பூச்சி விளையாட்டு தான்.
மாறுகோணச் சிந்தனையின் மறுஉருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ராவை இவ்வார வல்லமையாளராக தேர்வு செய்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். தொடர்ந்து கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்த அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
***
கவிஞர் ருத்ராவின் வலைப்பூக்கள்:
http://ruthraavinkavithaikal.blogspot.com/
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=53234
கவிஞர் ருத்ராவை நான் ஒரு தமிழ்க் கவிஞராய்ப் பார்க்காமல் ஓர் உன்னத விஞ்ஞான நூல் படைப்பாளராய்த்தான் பார்க்கிறேன். அவரது சிறந்த பௌதிக விஞ்ஞானக் கட்டுரைகள் நல்ல தமிழ் நடையில் கல்லூரித் தரப் பாட நூல் தகுதி பெறுபவை. அவர் தன் பொன்னான காலத்தை, தமிழில் குறைந்துள்ள விஞ்ஞான நூல்களைப் படைக்காமல், கவிதைகள் எழுதிக் கழித்து வருகிறாரே என்று நான் பெரிதும் வருந்துகிறேன்.
சி. ஜெயபாரதன்
வல்லமை ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி!
“இந்த வார வல்லமையாளர்” என்று
என்னை பாராட்டிய
வல்லமை ஆசிரியர்குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது விருது அல்ல.
எனக்கு ஒரு முகவரி.
டெலிவரி செய்யப்படாத கடிதப்பெட்டியின்
(டி.எல்.ஓ)
வாய்க்குள்ளும் கைவிட்டு
முக்குளி போட்டு
என்னை உயர்த்திக்காட்டிய
வல்லமை ஆசிரியர் குழுவின்
இலக்கியத் தேடல் எனும்
எழுத்து வேள்விக்கு
தலை தாழ்ந்த என் வணக்கங்கள்.
நன்றி! மீண்டும் நன்றி!
அன்புடன் ருத்ரா
ருத்ரா இ.பரமசிவன்
விஞ்ஞானத்தமிழ் வித்தகர் திரு.சி.ஜெயபாரதன் அவர்களே
உங்கள் வருத்தத்தில் தெரியும் அக்கறையில் அலையடிக்கும் தமிழ்க்கடலின் தாகம் என் நெஞ்சில் எப்போதுமே கரையுடைத்து தளும்புகிறது.உங்கள் ஊக்கம் தரும் பாராட்டு வரிகள் எப்போதுமே என்னை அந்த விஞ்ஞானத்தமிழை விட்டு அகலச்செய்ததில்லை. கவிதைகள் எழுதும்போது அருகில் அண்டை கொடுத்துக் கொண்டிருக்கும் நூல்கள் எல்லாம் குவாண்டம் , காஸ்மாலஜி மற்றும் கணித நூல்களே.நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி “அந்த டெலிவரி செய்யப்படாத தபால் பெட்டிக்குள்”குவிந்து கிடப்பவைகளில் விஞ்ஞானக்கட்டுரைகளே அதிகம்.நான் எதையும் நூல் வடிவம் ஆக்கியதில்லை.அதற்கு தனிப்பட்ட என் முயற்சியின்மையும் செயல்பாடற்ற தன்மையுமே காரணம்.உங்கள் சொற்கள் எனக்கு ஒரு புது வேகம் ஊட்டுகிறது.”விண்தமிழ்” இப்படி ஒரு அருமையான சங்கப்பலகையை ஊஞ்சல் கட்டி கண் முன்னே ஆட விட்டதில் நான் சங்கத்தமிழ் மீதும் கவிதைகள் மீதும் ஈர்ப்பு மிக கொண்டுவிட்டதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.வல்லமை மின் தமிழ் போன்ற இணையகுழுமங்களே தமிழ் எழுத்துக்களின்
உயிர்ப்பு மிகுந்த குடியிருப்புகள் ஆகி விட்டன.இணைய நண்பர்களின்
மடலாடல்களே இலக்கிய ஆற்றலின் ஒரு மின்காந்தப்புலத்தை
என்னுள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மீண்டும் என் நன்றி.
அன்புடன் ருத்ரா
எண்ணங்களின் வார்ப்பை
எழுதிவைக்கும் திறன்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!
நுண்ணிய அறிவுடன்
நுட்பங்கள் கலந்து உம்போல்
படைப்புகள் தருவதில்லை!
அறிவியல் ஆன்மிகம் இருபெரும்
துறைகளையும் தொடுகின்ற வல்லமை
சங்கத்தமிழ்நடை சதிராடும்
செந்தமிழ்.. வந்து விளையாடும் கவிதை
விமர்சனக் கவிதைகள் இன்னும் பலவகை..
குறும்பா என்னும் குட்டிக் கவிதைகளில்
நிரம்பிக் கிடக்கும் அரிய கருத்துகள்
எதை நான் உமது சிறப்பு என்பேன்?
உயர்நலம் காட்டும் உம்திறன் வாழ்க…
பெரும் பேர் புகழும் இனிதே சேர்க..
வல்லமையாளர் விருது பெறும்
கவிஞர் திரு ருத்ரா அவர்களுக்கு
எந்தன் இதய வாழ்த்துகள்!!
காவிரிமைந்தன்
வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள்.எனக்கு அதிகம் பிடித்தது ருத்ரா அவர்களின் குறும்பா.அத்தனையும் அருமை.
தேடி கண்டெடுத்து தரும் தேமொழிக்கு பாராட்டுக்கள்.
வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர், சென்ற செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 13, 2015) “தமிழ்நிதி விருது” பெற்ற கணினித்தமிழ் அறிஞர் இல. சுந்தரம் அவர்கள். முனைவர் இல. சுந்தரம் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் துணைப்பேராசிரியர். இவர் தமிழ், கணினி என இருதுறைகள் சார்ந்த கல்வியில் பட்டங்கள் பெற்றவர் (எம். ஏ., எம். ஃபில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. முதுகலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும்). இத்திறமையைச் செம்மையாகப் பயன்படுத்தி கணினித்தமிழ் வளர்ச்சியிலும், தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதும் இவரது தமிழிலக்கிய ஈடுபாட்டிற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது கணினித்தமிழ் ஆர்வமும். தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளராகவும், உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் / The International Forum for Information Technology in Tamil – INFITT) உறுப்பினராகவும் கணினித் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்கள் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார்.
கட்டற்ற கணிநுட்ப வளர்ச்சிக்கு உதவிவரும் ‘கணியம்’ இவர் உருவாக்கிய 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இந்த ஆண்டின் புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது (http://www.kaniyam.com/ila-sundaram-unicode-tamil-fonts/). இத்தளத்திற்குச் சென்று இந்த எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. எனவே இந்த பொதுப்பயன்பாட்டு விதியின்படி இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாகவும் வெளியிடலாம்.
இவர் உருவாக்கிய கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களின் மாதிரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
“கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளது. அதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளது. இத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும். மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம். இத்தகைய ஒழுங்குமுறை நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறது. மொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”
… என்று கணினித் தமிழ்வளர்சியின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் கணினி தமிழ் அறிஞரான இல. சுந்தரம், அத்துறையின் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக கணினி தமிழ் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தமிழ் மென்மம் வளர்ச்சியின் தேவைகள் ஆகியவற்றைக் குறித்து உலகத்தமிழ் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகள் வாசித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், ‘பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்’ என்ற ஆய்வறிக்கையை வாசித்துள்ளார். மேலும் இவரது, ‘கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்’ , ‘கணினிவழிச் சொல்லடைவு மென்மம் உருவாக்கமும் தமிழ்மொழியமைப்புச் சிக்கல்களும்’ போன்ற கணினித் தமிழ்க் கட்டுரைகளும் கணினித்தமிழ்த் துறைக்கு இவராற்றிய பங்களிப்புகளாகும்.
கணினித் தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்ந்து பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி, இதுவரை இவராற்றிய தமிழ்ப் பணியினைக் கருத்தில் கொண்டு, அவர் இத்துறையில் மேலும் பங்களிக்க உற்சாகமூட்டும் வகையில், திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், ‘தமிழ்நிதி ‘ விருது வழங்கப்பட்டு இல. சுந்தரம் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இளம் வயதில் இவர் செய்துள்ள இந்த சாதனையைப் பாராட்டி வல்லமை இதழ் குழுவினரும் இவரை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
இல. சுந்தரம் – http://ilasundaram.blogspot.com/
கணினித்தமிழ்ப் பயிற்சி – http://tamilcomputingcourse.blogspot.com/
மின்னஞ்சல் – ilasu...@gmail.com
படங்கள் உதவிக்கு நன்றி: மயிலை நூ த லோ சு, கணியம்
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=53879
முனைவர் இல. சுந்தரம் அவர்கள்
வல்லமையாளர், நண்பர், முனைவர் இல.சுந்தரம், எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் நடத்தும் அயலகத் தமிழாசிரியர் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து, உலகம் சுற்றும் வாலிபனாகவும் திகழ்கிறார். அவரது பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
--
டிசம்பர் 1, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
வல்லமை இதழின் வாசகர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த இலக்கிய விருந்தளிக்கும் முனைவர் மு.பழனியப்பன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். கடந்த திங்கட்கிழமையன்று வல்லமை இதழில் வெளிவந்த “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” என்ற கட்டுரைக்காக இவர் வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய முனைவர் மு.பழனியப்பன்அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையையிலும் பங்காற்றி வருகிறார்.
இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார்.
வல்லமையில் இம்முறை இவர் வழங்கிய நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் …. பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள்….சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தைக் தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார்.
நயமிக்க கட்டுரை ஒன்றை அளித்த மு.பழனியப்பன் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி அவரது தமிழ்ப்பணிகளும் இலகியப்பணிகளும் தொடர வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்பிற்கு:
முனைவர் மு.பழனியப்பன் (Dr. M.Palaniappan)
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
கைபேசி எண்: 9442913985
மின்னஞ்சல் முகவரி: muppal...@gmail.com
வலைப்பூ:
manidal.blogspot.com
http://kambanadippodi.blogspot.com/
http://puduvayalpalaniappan.blogspot.com/
ஃபேஸ்புக்: https://www.facebook.com/palaniappan.mutrhappan
கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/112411414788276451667
படங்கள் உதவி:
http://senthamilcollegemadurai.blogspot.com/2013/02/blog-post.html
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=53974
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/5qPSIg4su6E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
கவின்மிகு இலக்கியப் பணிகள்..
திறமிகு தமிழ்ப்பேராசிரியர் என பலவகை
பெருமைகள்சூழ.. தொய்விலா சேவைகள்குவிய..
தொடரும் மு.பழனியப்பன் அவர்களை
வல்லமையாளர் என்னும் விருதளித்து மகிழ்தல்
முற்றிலும் சரியான தேர்வாம்!
அன்னாரைப் பாராட்டி.. தங்கள் அரியபணி
தொடர்கவென்றும் வெற்றிகள் உம்பாதையில் நிறைகவென்றும் உளமாற வாழ்த்துகிறேன்!
காவிரிமைந்தன்
வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் சென்ற வாரம் “பாரிலே பிறப்பான்….!“, “யாஅல்லாஹ்!” என்ற இரு கவிதைகளை வல்லமையில் வெளியிட்டிருந்தார். கருத்தோட்டம், சொல்லோட்டம் இரண்டுமே அருமையாக அமைந்திருந்த கவிதை என்றப் பாராட்டினை “பாரிலே பிறப்பான்…” கவிதை பெற்றது. கவிஞரது அருமையான கவிதைக்காக இவ்வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் கலைமகள் ஹிதாயா அவர்களைப் பாராட்டுகிறோம்.
இலங்கை கல்முனையைச் சார்ந்த கவிஞர் கலைமகள் ஹிதாயா; கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்ற பெயர்களில் தனது இலக்கியப்படைப்புகளை அளித்து வருகிறார். இளமையிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட கலைமகள் ஹிதாயா அவரது பதினாறாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். முதல் முயற்சியிலேயே இவரது “மீண்டும்” என்ற புதுக்கவிதையும், “அன்னை” என்ற மரபுக் கவிதையும் வெவ்வேறு பத்திரிக்கையில் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றவர்
பதின்ம வயதில் தொடங்கி தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாக இவர் எழுத்தின் வீச்சு மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப்பாடல், விமர்சனம் என, பற்பல பரிமாணங்களில் மிளிர்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.
நாளையும் வரும், தேன் மலர்கள், இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். முப்பது சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பற்பல நூல் மதிப்புரைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் பல பத்திரிக்கைகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
இவரது இலக்கிய ஆர்வம் காரணமாக “தடாகம் கலை இலக்கிய வட்டம்” என்ற அமைப்பைத் துவக்கி, அதன் அமைப்பாளராகத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கௌரவித்துள்ளார், நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தடாகம் கலை இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினையும் வெளியிட்டு வருகிறார்.
கவிதை இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பல கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை மற்றும் மாவட்ட அளவில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது, ரத்ன தீப சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர், இளம் படைப்பாளிக்கான விருது, கலை அரசி விருது, கவித்தாரகை விருது, கலைமுத்து விருது, கவிதைச் சிற்பி விருது, சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாசூரி, சமூக ஜோதி, பாவரசு, காவியத் தங்கம், இலங்கையின் சிறந்த பெண் கவிஞர் பட்டங்களும் என இவரது பட்டங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் விரிகிறது.
இவரது கவிதைத்திறனை படித்து மகிழ கவிஞரின் இவ்வார வல்லமைக் கவிதையான “பாரிலே பிறப்பான்….!” கவிதையுடன் மேலும் இரு கவிதைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாரிலே பிறப்பான்….!
______________________________________________________
மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!
இருண்ட சூழலை மாற்றிய பின்னே
ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!
தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
பள்ளிப் பருவ வாசல் ஏறி
இளைஞனாகி என்றும் வனப்புடன்
உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!
குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய்
அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம்
ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!
முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
போகப் போக நடை தளர்ந்திடுவான்
பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!
***
கல்வி ஒழுக்கம்
______________________________________________________
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல் வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
(கல்வி ஒழுக்கம்)
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தொழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊடக மென்பது உலகாளும்
உன்னத மான செயலாகும்
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
(கல்வி ஒழுக்கம் )
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல் வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
***
கிள்ளி விளையாடாதீர்கள் ….!
______________________________________________________
வாழ்க்கையை குழி தோண்டி புதைத்துக்
கொண்டுதான் வாழுகின்றீர்கள்
மனித ஆத்மாவுக்கு
பகையை புகையாய் மாற்றுகின்றீர்கள்
நம்பிக்கையான உள்ளங்களை
துரோகிகளாக மாற்றுகின்றீர்கள்
நாய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட,
மனிதர்களுக்கு காட்டாமல் இருக்கின்றீர்கள்
உடமைகளைக் கூட
தீயிட்டு எரிக்கிண்றீர்கள்
மான மரியாதைகளை காற்றில் பறக்க விடுகின்றீர்கள்
உங்களை நினைத்து நீங்களே
தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள்
ஏழை எளியோரைக் கண்டால்
கண்டும் காணாமல் போகின்றீர்கள்
அடுத்தவனின் முன்னேற்றத்தை தடுத்து
தான் உயர நினைக்கின்றீர்கள்
துரோகத்தை அன்பாய் காட்டி
அடுத்தவன் சோற்றில்
ஏன்
சேற்றைப் பூசுகிண்றீர்கள் …?
கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தொடர்ந்து இலக்கியப்பணியாற்றி மேலும் பல புகழ் உச்சங்களை அடைய வல்லமைக் குழுவிரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் தொடர்பிற்கு:
மின்னஞ்சல்: s.k....@gmail.com
ஃபேஸ்புக்: https://www.facebook.com/hidaya.risvi
கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/104217741513778703421/
யூ டியூப்: https://www.youtube.com/user/kalaimahelhidaya123
வலைப்பூ: http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/
கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் பல்வேறு வலைப்பூக்கள்:
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி – http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கவிதைகள் – http://www.kalaimahelhidayapoem.blogspot.com/
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் சிறுகதைகள் – http://kalaimahelhidayarisvishortstories.blogspot.com/
கலைமகள் ஹிதாயாவின் பாடல்கள் – (http://kalaimahelhithayavinpaadalgal.blogspot.com/
கலைமகளின் தாய்வாக்கு – http://kalaimahelinthaaivaakku.blogspot.com/
வசந்தகாலம் – http://wwwvasanthakaalam.blogspot.com/
விரியும் பூக்கள் (நூலாய்வு) – http://www.kalaimahelhidayapublication.blogspot.com/
தடாகம் கலை இலக்கிய வட்டம் – http://www.thadagamkalaiilakkiyavattam.blogspot.com/
இஸ்லாமியப் பூங்கா – http://wwwislamiyapoonga.blogspot.com/
ஹிதயாவின் தரும் மருத்துவத் தகவல்கள் – http://hidayavummaruththuvamum.blogspot.com/
தகவல் தந்துதவிய விக்கிபீடியாவிற்கு (https://ta.wikipedia.org/s/19jr) நன்றி
படங்கள் உதவி: இணையதள வெளியீடுகள்
நன்றி வல்லமை : http://www.vallamai.com/?p=54118
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இதயம் கவர் ஹிதாயா வாழ்க, வல்லமையாளர் வளர்திறம் சுடர்க!
இதயம் கவர் ஹிதாயா வாழ்க, வல்லமையாளர் வளர்திறம் சுடர்க!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
டிசம்பர் 1, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக, வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டப்படுபவர் புதுக்கோட்டை -மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவரான முனைவர் சி.சேதுராமன் அவர்கள். சென்ற வெள்ளியன்று வல்லமை இதழில் இவர் வெளியிட்ட “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” என்ற ஒப்பாய்வுக் கட்டுரையின் சிறப்பு கண்டு இவரை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம்.
இணையத்தமிழ் இதழ்களின் வாசகர்களுக்கு முனைவர் சி.சேதுராமன் அவர்கள் நன்கு அறிமுகமானவர்.வல்லமை, திண்ணை, தமிழ்முரசு, முத்துக்கமலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பல கதை, கவிதை, நூல்மதிப்புரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியக் கட்டுரைகளை அதிகம் எழுதி வருபவர் முனைவர் சி.சேதுராமன் (இவரது பிற படைப்புகளின் பட்டியலை இத்தளத்தில்காணலாம்).
“கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” ஒப்பாய்வுக் கட்டுரையில், உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதும்… தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்டதும்… பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகள் பெருமளவில் இடம் பெற்றதால் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு கொண்ட சிலப்பதிகாரம், காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான இடத்தை வகிப்பதை கட்டுரை ஆசிரியர் பாராட்டிச் செல்கிறார். சிலம்பின் தாக்கத்தின் விளைவாக பிற்காலத்தில், சிலம்பை ஒட்டி தோன்றிய, புகழ்பெற்ற புலவர் புகழேந்தியாரின் ’பெயரில்’ “பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்” பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்துக் கோவலன் கதை” என்ற நாடக நூலை சிலம்புடன் ஒப்பிட்டு ஆராய்கிறார். ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரிய எழுத்துக் கோவலன் கதை நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அமைப்பில் இயற்றப்பட்ட நூலாகும்.
ஆய்வுக்கட்டுரையில் இவ்விரு நூலிலும் வேறுபட்டுள்ள கடவுளர்களின் துதி துவக்கம் பற்றி விளக்குகிறார். மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் கதையானது தொடங்குவதும், ஆனால் அது போலன்றி கோவலன் கதை நூலானது கண்ணகி, கோவலன், மாதவி, வசந்தமாலை உள்ளிட்டோரின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுவதிலிருந்து தொடங்கும் வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அத்துடன் இரு நூல்களிலும் கதை மாந்தர்க்களை அறிமுகப்படுத்தும் முறையையும் ஒப்பிடுகிறார்.
சிலம்பில் கண்ணகி தெய்வமான பின்பே கதை நிறைவுறும் முறையையும், ஆனால் கோவலன் கதையின் தொடக்கத்தில் இருந்தே கண்ணகி காளிதேவியாகவே காட்டப்படும் வேற்றுமையை சுட்டுகிறார். பரத்தையரை நாடினால் எவ்வாறெல்லாம் துன்புற நேரிடும் என்பதை மாதகி வசந்தமாலை ஆகியோரின் வழி வலியுறுத்துவது புகழேந்தியாரின் முக்கியமான நோக்கமாக அமைந்ததையும், சிலம்பில் இடம்பெறாது கோவலன் கதையில் மட்டுமே அமைந்துள்ள பல காட்சிகளையும் அறியத் தருகிறார்.
அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே கூற்றுவன், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார், ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும் என்ற மூன்று நீதிகளை வலியுறுத்த இயற்றப்பட்ட சிலம்பின் நீதிகளை கோவலன் கதை எவ்வாறு கையாள்கிறது என்று ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். சிலம்பின் நீதிகளுள் ஒன்றான “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்” என்பது அதன் பின்வந்த அனைத்து இலக்கியங்களிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெரிய எழுத்துக் கோவலன் கதை”யிலும் ஊழ்வினை கோட்பாடு முக்கியத்துவம் வகிப்பதைக் காட்டுகிறார். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறுதல், அரசியல் பிழைத்தவரை அறம் அழிக்கும் என்பது போன்ற நிகழ்வுகளை இரு நூல்களிலும் ஒப்பிட்டு விளக்குவது இலக்கியச் சுவை மிகுந்த வகையில் அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டும் பல கட்டுரைகளை வல்லமை வாசகர்களுக்கு மேலும் இவர் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், சிறந்த கட்டுரையைத் தந்தமைக்குப் பாராட்டி, வல்லமையாளர் முனைவர் சி.சேதுராமன் அவர்களை வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: malar...@gmail.com
முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
தரவுகள் தந்துதவிய தளங்கள்:
Dr. S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College, Pudukkottai –
http://www.hhrajahs.com/mech.html#11
http://www.muthukamalam.com/writer/sethuramandr.html
http://munaivaramani.blogspot.com/2014/03/300114.html
குறிப்பு:
பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்துக் கோவலன் கதை”என்ற நாடக நூலினைப் படிக்க விரும்புபவர், தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளலாம் – http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/index.html.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=54306
வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!” என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்” என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின் யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.
தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எண்ணமும், சிந்தனையும்!
______________________________________
எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!
மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!
சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!
நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
***
மனிதனே சற்றே நினைத்துப்பார்
______________________________________
எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !
பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !
மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !
பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !
மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!
கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!
எண்ணுபவர் – விழிப்பர்
விழிப்பவர் – உழைப்பர்
உழைப்பவர் – உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!
இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?
வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
எண்ணங்களால் உயர்ந்து நின்று
எழுத்துலகில் தடம் பதித்து
வண்ணமுற கவிதையாத்து
வழங்கி வரும் வல்லமையாளர்...
திண்ணமுற பதிவுகள்.. நீண்ட நெடுங்காலமாய்
நிறைந்துவழியும் இதயத்தால்
நேசத்தைப் பாசத்தை.. நெருக்கத்தை..
எத்தார்த்த வாழ்வின் கூறுகளை..
எழுத்தில் வடிக்கும் இனியவர்...
சென்னைக்கு சென்றபோது - இவர்தம்
இல்லத்திற்கும் சென்றுவந்த உறவோடு...
உள்ளத்தால் வாழ்த்துகிறேன்...
வல்லமையாளர் விருது பெறும்
இந்நாளில்.. திரு. ரா. பார்த்தசாரதி அவர்களை...
..அன்புடன்.
காவிரிமைந்தன்
![]()
This message is eligible for Automatic Cleanup! (megala.r...@gmail.com) Add cleanup rule | More info
மேகலாவல்லமையில் தொடர்ந்து எழுதிவரும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்தது சாலப் பொருத்தமே. பாராட்டுக்கள் பார்த்தசாரதி ஐயா. தேர்வுக்கு நன்றி தேமொழி.அன்புடன்,
2015-02-16 13:39 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
“மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை வாழ்ந்து காட்டும் வைதேகி அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராக வல்லமை இதழ் அறிவிக்கிறது. வைதேகி சென்ற ஞாயிறு அன்று தனது வலைப்பூவில் புற்றுநோயை எதிர்த்து தான் போராடியதை “My fight against the dreadful disease – CANCER” (http://vaidehivc.blogspot.com/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html) என்று எழுதியிருந்தார். கொடிய நோய் என்று மனம் தளர்ந்துவிடாமல்,போராடி வெற்றிபெற்றதுடன், நோயைப்பற்றியும், அவர் பெற்ற சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் பற்றிய அவரது அனுபவங்களை படங்களுடன் அவர் மிக விரிவாக பகிர்ந்து கொண்டது பாராட்டத் தக்க செயலாகும். அத்துடன் நில்லாமல் நோயைப் பற்றி மேலும் தகவல் பெற விரும்பினால், நம்பிக்கை, ஊக்கமூட்டும் வார்த்தைகளை கேட்க விரும்பினால் தான் உதவத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதன் மூலம் தனது வாழ்க்கை பிறருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் என்பதையும் உணர்த்துகிறார். வைதேகியை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம். அவரை பரிந்துரைத்த வல்லமை வாசகர், ஓவியர், கவிஞர் சு. ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. வைதேகியின் சோதனையான வாழ்க்கையையும், அதில் அவர் சாதனை நிகழ்த்தியதையும் வல்லமைக் குழுவினருடன் பகிர்ந்து கொண்ட வல்லமை எழுத்தாளர் திரு. பழமைபேசி அவர்களும் பாராட்டிற்குரியவர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெற்றவர் வைதேகி. அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மற்ற எல்லா சென்னை பெண்களைப் போலத்தான் நானும் பொறியியல் படித்தேன், கணினி மென்பொருள் துறையில் வேலைக்கும் சேர்ந்தேன், 23 வது வயதில் எனது அன்புக் கணவரை மணந்தேன், மறு ஆண்டு ஆசை மகள் பிறந்தாள் என்று குறிப்பிடுகிறார். தற்பொழுது ‘ஈ ஆர் பி ஆலோசகராக’ ‘சி டி எஸ் குளோபல்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் (Eenterprise Resource Planning, Consultant at Cognizant Technology Solutions).
அலுவலகத்தில் நண்பர்களுடன் அனுதினமும் வேலையில் கருத்தாலோசனை, தோழியருடன் ஹோலி கொண்டாட்டம், தானும் பாடுவதுடன் மகள் ‘எஸ் கே’ யின் மழலைக் குரல் பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவது, மகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்வது, சேமியா உப்புமா, வெஜிடபிள் பிரியாணி சமைத்து அவற்றைப் படங்கள் எடுத்து நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் பகிர்ந்து கொள்வது, சுற்றுலா சென்ற படங்களை பகிர்ந்து கொள்வது என சராசரிப் பெண்ணாக அவர் வாழ்க்கை ஓடியது.
நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும், எம் ஜி எம் ரிசார்ட் பிடிக்கும், கைவினைப் பொருட்கள் பிடிக்கும், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும் என்று சிறுமி போன்ற ஆர்வத்துடன் தன்னைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த மென்மையான் உள்ளம் கொண்ட, பார்ப்பதற்கு நமது அடுத்த வீட்டுப்பெண் போன்ற தோற்றம் கொண்டவரின் உள்ளம் இவ்வளவு உறுதியானதா என வியக்கவும் வைக்கிறார் நோயுடன் தான் நடத்திய போராட்டத்தை விவரிக்கும் பொழுது.
இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று வந்தவர் இவர். சென்ற ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் இவரது கழுத்தின் வலதுபுறம் சிறு கட்டி ஒன்று தோன்றவும், அதைத் தொடர்ந்து காய்ச்சல், தொண்டையில் வலி, உடல் அசதி என்று தோன்றியிருக்கிறது. பணி முடித்து வந்து வீட்டு வேலைகளை செய்ய இயலாமல் சோர்ந்திருக்கிறார். இந்நிலை தொடரவும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றதில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு நிணநீர் மண்டலப் புற்று நோய் இருப்பதும், அது இரண்டாம்நிலையை அடைந்துள்ள “ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா” என்ற வகையைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டது.
நோயின் தீவிரத்த்தின் அடிப்படையிலும், 28 வயதே ஆன இவரது இளவயதையும் கணக்கில் கொண்டு இரத்தக்குழாய்களின் வழியே மருந்து செலுத்தும் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சையின் பக்க விளைவுகளான வாய் மற்றும் வயிற்றில் புண், ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்வதால் அதிகம் பசித்தாலும் வாய்க்கு சுவையின்றி இருப்பதால் உணவை உண்ணமுடியாத நிலை, கழுத்திலும் மார்பிலும் கொழுப்பு படிமங்கள், நீர்கோர்த்து உடல் எடை அதிகரித்தல், முகம் ஊதிப் போதல், முடி கொட்டுதல், அடர்வு நிறைந்த மருந்துகளை செலுத்துவதால் ரத்த நாளங்களில் வலி என்று பல துன்பங்களை அடைந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வழியின்றி உடல்வலியும் அசதியும் இவரை ஆட்டிப்படைத்ததில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் விருப்பமின்றி மனம் சோர்ந்திருக்கிறார்.
இவர் தனது வாழ்வில் எதிர்கொண்டதை இவரது ஃபேஸ்புக் காலக்கோடு பதிவுகளும் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட்டில் நோய் தோன்றி அதைக் கண்டுபிடித்து அக்டோபரில் சிகிச்சை தொடங்கும் பொழுது, “சென்ற ஆண்டு இதே நேரம் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதைப் பற்றிய விளக்கம் இல்லை. “வாழவிருப்பமுள்ளவர்கள் போராடுவார்கள், நம்பிக்கையுடன் இருப்பார்கள், வெற்றி அடைவார்கள், புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று மற்றொரு பதிவு வருகிறது. “நான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், யாரேனும் என்னிடம் உன்னைப் பின்பற்றியதால் நான் போராட்டத்தைக் கைவிடவில்லை என்று சொல்வதை விரும்புகிறேன்” என்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல “லைக்” போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

மறுவாரம் வருத்தம் நிறைந்த முகம் கொண்ட தனது படத்தை பதிவிடுகிறார், ஏன் முகம் வாடியிருக்கிறது? என்ன ஆயிற்று? என்ற மறுமொழிகள் நண்பர்களிடம் இருந்து வருகிறது. அதற்கு மறுவாரம் “எனக்கு லிம்போமா புற்றுநோய், அதை ஒழித்துக் கட்டுவேன்” என்ற வாக்கியம் கொண்ட படம் போடுகிறார். நண்பர்கள் ஆறுதல் சொல்லி, நம்பிக்கையை கைவிடாதே என்று உற்சாக மூட்டுகிறார்கள். அடுத்தமாதம் நோயின் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்றும், அதற்கடுத்த மாதம் டிசம்பரில் சிகிச்சையின் பக்க விளைவால் தலை வழுக்கையானதை வேடிக்கையாக, அழகிய வழுக்கை விழுந்த பெண், புற்றுநோயை தாக்குகிறாள் என்றும் குறிப்பிடுகிறார்.
நகைச்சுவையை உணர்வைக் காட்ட நினைத்தாலும், சிறுவயதிலேயே நோயுடன் போராடும் நிலையும், எதிர்காலம் கேள்விக்குறியானதை எதிர்கொள்வதும் அவருக்கு சுலபமாக இருந்திருக்கவில்லை. அடுத்தவரை நம்பி தினசரி செயல்களை முடிப்பதும், சிகிச்சையினால் முடி கொட்டுவது என உருவத்தை மாற்றிய பக்க விளைவுகள் ஆகியவற்றால் மனம் மிகத் துவண்டு இருக்கிறார். தனது நம்பிக்கையை கைவிடாது இருக்கவும், தனது மனதை வேறுவழிகளில் செலுத்தி தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் காகித கைவினைபொருட்கள் செய்வது, கார் ஓட்டும் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவது, உடற்பயிற்சிகள் செய்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவற்றில் மனதைச் செலுத்தி நோயின் கொடுமையை மறக்க முயன்றிருக்கிறார். கணவரும், மகளும், குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும் அவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இத்துயர நாட்களில் உண்மையான அன்பு செலுத்துபவர்களையும் அவர் அடையாளாம் காண நேர்ந்திருக்கிறது.
டிசம்பர் முதல்வாரத்தில் 6 சுற்று கீமோதெரப்பி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல்கள் உடலில் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பின்னர், மேலும் இரண்டு சுற்று கீமோதெரப்பி சிகிச்சை அளித்து முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்கள். டிசம்பர் ஆறாம் தேதி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலும் நீங்கி கடந்த இரண்டரை மாதங்களாக உடல்நலம் தேறி வருகிறார்.
தங்களின் அன்புக்குரியவர்களை புற்றுநோய் பாதித்த அனுபவம் கொண்டவர்களை இவர் சந்தித்த பொழுது அவர்களது அனுபவங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார். யாருக்குமே வாழ்வு சுலபமானதல்ல, வாழ்வில் அனைவருமே துன்பத்தை சந்தித்தவர்கள்தான் என்பதை உணர்ந்தேன் என்கிறார். பெயர், புகழ், செல்வம் ஆகியவை முக்கியமல்ல. பிறரிடம் நாம் அன்பு செலுத்துவதும், அவர்கள் அன்பைப் பெறுவதும்தான் வாழ்வில் முக்கியமானது என்றும் கூறுகிறார்.
நோய் தொடங்கிய பொழுதே இதனை எதிர்த்து போராடி மற்றவருக்கு முன்மாதிரியாக தான் இருக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்ட வண்ணம் அதை நிறைவேற்றியும் உள்ள வைதேகியின் வல்லமை பாராட்டிற்குரியது. புற்றுநோயுடன் தளராது போராடி மீண்டு வந்த வைதேகியின் மன உறுதியையும், தனது போராட்டத்தை அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் அறிவித்து பிறருக்கும் ஊக்கம் தர முன்வந்த வைதேகியை உடல்நலத்துடன் நீடூழி வாழவும், மேலும் பல சாதனைகள் புரியவும் வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
தொடர்புக்காக:
மின்னஞ்சல்: vaide...@gmail.com
கூகுள் பிளஸ்: https://plus.google.com/111332645448742010863
வலைப்பூ: http://vaidehivc.blogspot.in/
பேஸ் புக்: https://www.facebook.com/vaidehi.vc
லிங்ட் இன்: https://in.linkedin.com/pub/vaidehi-vc/26/321/318
இசைக்கோர்வைகள்: https://soundcloud.com/vaidehi-vc/
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=54708
டிசம்பர் 1, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
வைதேகி.. என்ற பெயர் சீதையை நினைவூட்டும் நேற்று வரை..
நம்பிக்கை .. மன திடம் போன்ற வார்த்தைகளை நினைவூட்டும் இன்று முதல்...
படிக்கின்ற போதே புத்துணர்வு தருகின்றதம்மா உமது வைராக்கியம்...
ஒன்றுமில்லா பிரச்சனைகளே நம்மை மூழ்கவைக்கின்றன என்கிறோம்... இதோ
பிரச்சினையையே ஒன்றுமில்லாமல் ஆகிய உம்மை உளமாரப் பாராட்டுகிறோம்!
வல்லமையாளர் என்கிற வார்த்தை இன்றுமுதல் கெளரவம் பெறுகிறது!
உங்கள் பதிவு இனிவரும் தலைமுறைக்குப் பாடம்..
வாழ்த்துகள்.. பாராட்டுகள்... நலமுடன் நாளெலாம் வாழ்க!! வாழ்க!!
காவிரிமைந்தன்
அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை.
~ எனக்கு புரிந்ததே. வல்லமையாளர் வைதேகிக்கி என் பாராட்டுகள். அவற்றின்
முக்கியத்துவம் பவளாவுக்குத் தெரியும்
இ
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
2015-02-23 19:00 GMT+05:30 paramasivan esakki <ruthra...@gmail.com>:
> அன்புள்ள திருமிகு.வைதேகி அவர்களே
>
> நெஞ்சுரம் கொண்ட
> நீங்கள்
> இந்த உலகத்து
> நம்பிக்கையின் உருவகம்.
> அந்த நுண்ணுயிரியே
> உங்களிடம் பாடம் கேட்கும்
> பல்கலைக்கழகம் நீங்கள்.
> உங்கள் துணிவு மூலம்
> மானிட ஆற்றலை அதனுள் பாய்ச்சியதில்
> அதுவும் மானிடம் கசிய
> உங்களுக்கு
> பூச்செண்டு நீட்டி
> புறமுதுகு காட்டியது கண்டு
> எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சி.
> இனி இவ்வுலகமே உங்கள் கையில்!
>
> வாழ்த்துக்களுடன்
> ருத்ரா
>
>
>
> On Sunday, November 30, 2014 at 8:16:45 PM UTC-8, தேமொழி wrote:
>>
>> டிசம்பர் 1, 2014
>>
>> இவ்வார வல்லமையாளர்
>>
>> வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
>>
>> இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன்
>> அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப்
>> பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
>>
>> புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான
>> திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில்
>> வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும்
>> ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர்
>> களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து
>> மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
>>
>> நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை
>> மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப்
>> பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும்
>> வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும்
>> மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால்
>> உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு
>> இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில்
>> அடங்கும்.
>>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ள, ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் திரு. எல்மார் நிப்ரத் செய்துள்ள இப்பணியை வல்லமை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் மொழியியல் ஆய்வாளரான முனைவர் “ழான்” (Jean-Luc Chevillard of France, French National Centre for Scientific Research/CNRS – Paris) அவர்கள்.
தமிழ் வட்டெழுத்து பற்றியும் நிப்ரத் வடிமைத்த வட்டெழுத்து மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான, ஈழத்தின் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் வல்லமை இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடிவதை வியப்புடன் பாராட்டியதுடன், அந்த எழுத்துருக்களைக் கொண்டு எழுதியும் காண்பித்துள்ளார்.
அவர் வழங்கிய மிகச் சிறப்பான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தகவலறிய பார்க்க: பழன் தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில் – http://www.vallamai.com/?p=54582
திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இத்தளத்திற்கு செல்க:
http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html
திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார்.
இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha, e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/
திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.
திரு. நிப்ரத் தமிழர்களுக்கு அளித்த பரிசுக்காக அவரை வாழ்த்தி, வல்லமை குழுவினர் அவரை வல்லமையாளாராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
தொடர்புக்கு: “Elmar Kniprath” மின்னஞ்சல் முகவரி: knip...@online.de
படங்களும் தகவல்களும்:
முனைவர் “ழான்” அவர்களின் சமூக வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=54887
வட்டெழுத்து எழுத்துருவை வழங்கிய வல்லமையாளர் எல்மார் நிப்ரித் அவர்களுக்கு வாழ்த்துகள்
அன்பன்,
மீ.விசுவநாதன்
.gif?part=0.1&view=1)
வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் புகைப்படக் கலைஞரான திருமிகு அனிதா சத்யம் அவர்கள். உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் இவர் வெளியிட்ட, பெண்களை…குறிப்பாக வளரும் சிறுமியரை ஊக்கப்படுத்தும் கருத்துமிக்க அழகிய படமொன்றிற்காக இவ்வார வல்லமையாளராக அனிதா பாராட்டப்படுகிறார்.
பூனே, மகாராஷ்ட்ராவில் வசிக்கும் அனிதா சத்யம் வல்லமை மின்னிதழுக்கும், “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்திற்கும், வல்லமையின் ஃபேஸ்புக் குழுமத்திற்கும் புதியவரல்ல.
வல்லமை இதழ் படக்கவிதைப் போட்டியைத் துவக்கியபொழுது, முதல் படமாக “மங்கையர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்” கருத்தைக் கவரும்காட்சி கொண்ட இவரது படம்தான் “வல்லமை” மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வல்லமை ஆசிரியர் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்படம் தந்த தாக்கத்தில் 25 கவிதைகள் வல்லமை வாசகர்களால் போட்டிக்கு அனுப்பப்பட்டதில் புனிதா கணேசனின் கவிதை சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது.
அனிதா ஃபோட்டோகிராஃபி (Anita’s Photography) என்ற புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளரான, தொழில்முறை புகைப்படக் கலைஞரான அனிதா வழங்கிய உலக மகளிர் தின சிறப்புப் படத்தின் கருத்து நூல்களிலும் பத்திரிக்கைகளிலும் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வெளிவர வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் கொண்ட பெண்களின் கனவைச் சித்தரிக்கிறது. பள்ளிச் சிறுமி ஒருத்தி விண்வெளி வீராங்கனையான “சுனிதா வில்லியம்ஸ்” பற்றிய நூல் ஒன்றைப் பார்த்து கற்பனையில் திளைப்பதையும், முக மலர்ச்சியுடன் இருப்பதையும் காட்சிப்படுத்தியதுடன் அருமையான வாசகம் ஒன்றையும் படக்குறிப்பாக இணைத்துள்ளார்.
“அனைவரும் பாராட்டும் வண்ணம் புகழ் பெற்ற நிலையை அடைய வேண்டும் என்பதும், பத்திரிக்கைகளில் அட்டைப்படத்தில் தனது படமும் பெயரும் வரவேண்டும் என்பதும் பெண்கள் எல்லோரின் கனவாகும். ஆகவே, (பெண்ணே) முன்னேறுவதை நிறுத்திவிடாதே. தடைகளைக் களையும் போராட்டத்தைக் கைவிடாதே, வெற்றிக் கனவு காணுவதை நிறுத்திவிடாதே. ஒருநாள் உனது கனவு நினைவாகும் … உலக மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம் … “
என்ற உற்சாகமூட்டும் வாக்கியமும், ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை ஒரு படம் விளக்கிவிடும் என்ற சொல்வழக்கை நிரூபிக்கும் வண்ணம், புகைப்படத்தில் பெண்ணின் முகம் காட்டும் உணர்வை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார் அனிதா. “கனவு காணுங்கள்” என்று இளைய சமுதாயத்தை உற்சாகப்படுத்துவதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இதில் கைகோர்த்துள்ளார். அந்தப் பெண் கையில் வைத்திருக்கும் அறிவியல் சார்ந்த நூலை எழுதியவர், சமீபத்தில் வல்லமைக்குழுவினரால் வல்லமையாளராகப் பாராட்டப்பட்ட அறிவியல் எழுத்தாளர்“ஏற்காடு இளங்கோ” என்பது ஒரு மேலதிகத் தகவல்.
உற்சாகமூட்டும் மனப்பான்மை இவர் வாழ்விலேயே இவருக்கு எவ்வாறு உதவியது என்பதையும், தனது துயர நிலையில் தாம் ஆர்வம் காட்டிய புகைப்படக்கலையே எவ்வாறு தம்மை துயரத்தில் இருந்து மீட்டது என்பதையும் இவர் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வல்லமையின் மற்றொரு வல்லமையாளரான வைதேகி புற்று நோயுடன் போராடி மீண்டதைப் போலவே இவரும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நோயுடனும் உடல்நலக் குறைவுடனும் போராடி மீண்டதைக் குறிப்பிட்டிருந்தார். நோய்க்கான காரணமும் கண்டுபிடிக்க இயலாமல், மருத்துவமனையில் மாதக்கணக்காக இருந்த நாட்களில் மகனையும் மகளையும் பார்க்க இயலாது பிரிந்திருந்ததையும், உடலில் நிணநீர் மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறினால் காய்ச்சல், பிறகு சிக்கிசையின் பொழுது எலும்பு வலி, பார்வைக் குறைவு போன்று மருந்து தந்த பக்க விளைவுகள் பலவும் இவரைத் தொடர்ந்து வாட்டியிருக்கிறது. பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என சற்றொப்ப மூன்றாண்டுகள் பட்ட அல்லலின் போது, இவருக்கு ஆர்வமளித்த புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்கை தொடர்ந்து கைவிடாது செய்து தம் மனதை வேறுவழியில் திசை திருப்பி இருக்கிறார். உதவி இன்றி எழுந்து நடமாடவும் முடியாத உடல்நிலை இருந்த பொழுதுகூட, கையில் காமெரா இருந்துவிட்டால் படமெடுக்கும் ஆர்வத்தின் காரணமாக எழுந்து நடமாட முயன்றதைக் குறிப்பிட்டு, தமது ஆர்வமே தம் நோயைத் தாங்கி எதிர்க்கும் சக்தியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வலிமிகுந்த துன்பமான நேரங்களில் ஒருவர் தனக்கு ஆர்வமான பணிகளில் மனதை செலுத்துவது வலியை மறக்கச் செய்யும், வாழ்வதற்கு நம்பிக்கையை அளிக்கும் என்பது இவர் தனது அனுபவத்தின் மூலம் கண்ட பாடம். தனது வாழ்க்கைப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டாரோ அது போலவே; சோர்ந்துவிட வேண்டாம், போராடும் குணத்தையும், நம்பிக்கையையும் கைவிட வேண்டாம், வெற்றி நிச்சயம் என்ற அறிவுரை கூறி, உற்சாகமூட்டி நம்பிக்கைத்தரும் வாசகத்தையும் தனது படத்துடன் வழங்கியுள்ளார். ஒரு பெண் தனது குறிக்கோளை கல்வியின் மூலம் அடையும் வழியை சிறந்த படத்தின் வழி கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். வளரும் பெண்களுக்கு ஊக்கமூட்டும் தமது நோக்கத்தை தமது புகைப்படக்கருவியின் உதவியுடன் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
மனிதர்களின் உணர்வுகளை மிகவும் திறம்பட படமாக்குவது அனிதாவின் தனிச்சிறப்பு. இவரது தொடர்ந்த கலைப்பயணத்தில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் பலரையும் கவர்கிறது என்பதையும் அறிய முடிகிறது. ஃபேஸ்புக்கில் , ~ 20,000 புகைப்பட ஆர்வலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வரும் ‘புகைப்படப்பிரியன்’ குழுமம் தனது மூன்றாம் ஆண்டு கூட்டத்தை “எக்ஸ்போஷர் 15″ எனும் புகைப்படக் கண்காட்சியாக சென்ற சனி-ஞாயிறு (மார்ச் 7, 8ஆம் தேதிகளில்) நடத்தியது. நாகர்கோவிலில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உலகெங்கிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள், பற்பல பிரிவுகளில் தேர்வாகிக் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றோடு “ஃபோட்டோ ஆஃப் தி டே”எனக் கடந்த 45 நாட்களில் தினம் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்களும் தனியாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவில் அனிதாவின் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவரது படங்கள் பலவும் காட்சியிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.
கீழே அனிதாவின் புகைப்படங்கள் சில பார்வைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மறு உருவமான அனிதா புகைப்படக் கலையில் மேலும் பல சிகரங்களைத் தொடக்கூடிய திறமை கொண்டவர் என்பதை இவர் பெற்று வரும் பாராட்டுகள் காட்டுகின்றன. இவர் தனது வாழ்வில் மேலும் பல சாதனைகள் செய்ய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
படங்களும் செய்திகளும் பெறப்பட்ட தளங்கள்:
Celebrating Woman’s Day
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/11004632_797455013680132_2660827701843388004_o.jpg
Exposure 2015 – Photography Exhibition’s Photo of the Day
https://scontent.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/10530653_786743984712561_8778096198208339583_o.jpg
Padak Kavithai Potti
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t31.0-8/10830794_1024126740936314_3854470771912612369_o.jpg
Anita’s Photography (Anita’s Click)
https://www.facebook.com/pages/Anitas-Photography/744799132202411?pnref=lhc
Anita Sathiam
https://www.facebook.com/anitasathiam
நாகர்கோவிலில் 7,8 தேதிகளில் புகைப்படக் கண்காட்சி – தி இந்து – http://tamil.thehindu.com/tamilnadu/article6962689.ece
புகைப்படப்பிரியன் – https://www.facebook.com/profile.php?id=100008964732801
Nellai Weekend Clickers Nwc- https://www.facebook.com/profile.php?id=100008368991065&fref=photo
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55117
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Sent from Gmail Mobile
மேனாள் மாநிலக் கல்லூரி இந்திப் பேராசிரியர் முனைவர் ந. சுந்தரம் அவர்கள் தன் 80ஆவது வயதில் 1ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளதைப் பாராட்டி அவரது பணியைப் போற்ற விரும்பி, அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் மகிழ்கிறோம். அவரது தொடர் மொழிபெயர்ப்புப் பணியில் இப்புதிய சாதனையை குழுவினரின் பார்வைக்குக் கொண்டுவந்த வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ந. சுந்தரம் அவர்கள், பெரியகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவரின் மகனாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில், 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். நூற்பாலை ஒன்றில் பணிபுரிய இவரது தாய் கோவைக்குச் சென்றுவிட, பள்ளிப்படிப்பை முடிக்கும் பொருட்டு பெரியகுளத்திலேயே இவர் தங்க நேர்ந்தது. பெரியகுளத்தின் இந்திப் பிரச்சார சபாவில் தங்குவதற்கு இடமும், நூலகப் பணியும், அங்கே இந்தி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.
நடமாடும் நூலக ஊழியராக வாசகர்களின் வீடுகளுக்கு தமிழ் வார இதழ்களான கல்கி, ஆனந்த விகடன் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக மாதம் பத்து ரூபாய் ஊதியம் பெற்றார். அத்தொகை இவரது பள்ளிக் கட்டணத்திற்குப் பெரிதும் உதவியது. கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை பிற வாசகர்களுக்கும் முன்னரே தனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்சிகரமான அனுபவமாகக் கூறும் இவர் தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரத்தின் ரசிகர். இவரது பள்ளித் தோழர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன். அவருடன் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நூர்ஜகானாகவும், மேஜர் ஷாஜகானாகவும் ஒரு இந்தி நாடத்தில் நடித்துள்ளார்.
ந. சுந்தரம் அவர்கள் இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார். அங்கு இவர்தம் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் இவரை இந்தியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பணித்தார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழி இலக்கியங்களிலும் ஆண்டாள், மீரா ஆகியோரைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வு செய்ய வழிகாட்டியதுடன், திவ்யப்பிரபந்தத்தை படிக்கச் சொல்லி பக்தி இலக்கியத்தின் சுவையையும் அறிய வழிவகுத்தார்.
கோதை ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இந்தியில் மொழி பெயர்ப்பது ஒரு சவாலாக அமைந்தது இவருக்கு. தமிழ் சொல்லிற்கு ஈடான சமஸ்கிருத சொற்கள் எளிதில் கிடைப்பது போல இந்தியில் அமையாத பொழுது, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் இந்தி மொழிபெயர்ப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக ஆய்வை முடித்தார். ஃ போர்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த மொழியியல் கோடைப்பள்ளிகளில் பத்தாண்டுகள் மொழியியல் பயின்றார். அக்காலங்களில் திருக்குறளையும், பாரதியார் பாடலையும் இந்தியில் மொழி பெயர்த்தார்.
இவரது வழிகாட்டியான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்தை இந்தியில் மொழி பெயர்த்திருந்தாலும், தமிழ்ச் சைவஇலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. சாந்திநிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பிற்காக இவரை அணுகியபொழுது, மகிழ்ச்சியுடன் அவ்வாய்ப்பை ஏற்று திருவாசம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களை இந்தியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பை ஒரு தார்மீகக் கடமையாகச் செய்யும் இவர், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் “ஒரே ரத்தம்” நூலையும், அதிலுள்ள இந்திக்கு எதிரான கருத்துகளையும் சற்றும் பிசகாமல் அப்படியே இந்தியில் மொழிபெயர்த்த விதம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மொழிபெயர்ப்பின் நெறிகளை வெளிப்படுத்தி புகழ் சேர்க்கும் விதத்தில் அமைந்தது.
ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை, பாகவதத்தில் “அநாயா ராதிதோ”என்ற அன்பைக் குறிக்கும் குறிப்பு மட்டுமே உள்ளது, ராதா என்ற பெயர் காணப்படவில்லை என்று கூறும் ந. சுந்தரம் அவர்கள், ஆழ்வாரின் நப்பிண்ணையுடன், பிற்கால இந்தி இலக்கியங்களில் காணப்படும் ராதாவை ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வும் செய்துள்ளார்.
இவர் எழுதியுள்ள 40 நூல்களில் 25 நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் அழகு குறையாமல் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருப்பினும், அதை இவர் மிகவும் விரும்புகிறார்.
இதுவரை இவர் இந்திக்கு மொழி பெயர்த்துள்ள திருமுறைகள் விவரம்:
1 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளார்.
2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்ப்பது தொடர்கிறது.
4, 5, 6 திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளது
7 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அறநிலையம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது
8 ஆம் திருமுறை திருவாசகத்தை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, கொல்கத்தா சாந்திநிகேதன், விசுவ பாரதிப் பல்கலைக்கழகம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது
10ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, அதனை தில்லிப் பதிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
எண்பது வயதிலும் தளரா ஆர்வத்துடன் தமிழ் நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்து தமிழ்ப்பணியாற்றும் பேராசிரியர் சுந்தரம் அவர்களைப் போற்றுவதுடன், அவரது 2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இந்திக்கு மொழி பெயர்க்கும் முயற்சியை வல்லமைக் குழுவினர் பாராட்டி வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
தகவல்களும், படங்களும் தந்துதவிய இந்து நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கும் நன்றி.
The language bond, SUGANTHY KRISHNAMACHARI, November 4, 2010, The Hindu
http://www.thehindu.com/books/the-language-bond/article868614.ece
முனைவர் ந. சுந்தரம் (Dr. N. Sundaram)அவர்களை தொடர்பு கொள்ள:
தொலைபேசி: 0091 9444896916
மின்னஞ்சல்: drnsu...@gmail.com
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55444
“தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்”
என்ற செய்தி நாளிதழில் வெளியானால் திரைப்படம், அரசியல், வன்முறை போன்ற கருத்தைக் கவரும் அல்லது சர்ச்சைக்குரிய செய்தியாக இல்லாத காரணத்தால் படிப்போர் பலரது கவனத்தையே இச்செய்தி கவராது. சிலர் தலைப்பை மட்டும் படித்துவிட்டு மறு வினாடி மறந்துவிடுவார்கள், மேற்கொண்டு அவர்கள் நினைவில் அது தங்காது. மற்றும் சிலர் படிப்பார்கள் செய்திக்காக கொஞ்சம் அக்கறையுடன் கவலைப்படுவார்கள், பிறகு அதைப்பற்றி நினைப்பதில்லை. ஆனால் ஒருவருக்குக் கூட யார் இந்த சமூக ஆர்வலர்கள், இப்படி தனது நேரத்தையும் உழைப்பையும் அக்கறையுடன் பயன்படுத்தி சமூகத்தில் யாரும் அக்கறை கொள்ளவே விரும்பாத ஒரு சிலருக்காக இப்படிப் போராடுகிறார்களே என்று சிந்திக்காமல் போவதே இன்றைய நடைமுறை வாழ்க்கையின் நிலை. ஆங்கிலத்தில் “Unsung Hero” என்று நாம் குறிப்பிடும் அது போன்று “புகழப்படாத நாயகர்”தான் இந்தவாரத்தின் வல்லமையாளர் சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. “பாடம்” நாராயணன் அவர்கள், மனித நேயம் நிறைந்த உள்ளத்துடன் சமூக அவலங்களில் மாட்டித்தவிக்கும், தன்னைக் காத்துக் கொள்ள குரலெழுப்ப இயலாத உயிர்களுக்காக அக்கறையுடன் பொதுநல வழக்குகளாகத் தொடுத்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடிவருபவர். அவரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற வாரம் “சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன” என்று இவர் தொடுத்த பொதுநல வழக்கில் அக்குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி, மேலும் இவரது இரு குறிப்பிடத்தக்க பொதுநல வழக்குகளில், யாருமே ஆதரவு தராத நிலையில் சமுதாயத்தில் அல்லலுறும் மேலும் இரு குழுவினருக்கும் நியாயம் கிடைக்க இந்த மாதம் வழி பிறந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்குத் தடை கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கின் விளைவாக தமிழகத்தில் சென்ற வாரம், மார்ச் 15 முதல் இதற்கான தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பிற்காக காவல் நிலையங்களில் கண்காணிப்பு படக்கருவி பொருத்தக் கோரி இவர் தொடுத்த பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.
‘பாடம்’ நாராயணன் அவர்கள் ‘மாற்றம் இந்தியா’(Change India) என்ற அமைப்பின் இயக்குநரும், ஒரு கல்வியாளரும், முன்னர் வெளிவந்த பாடம் என்ற சமூக அக்கறை கொண்ட மாத இதழின் ஆசிரியரும் ஆவார். இவரது சமூகப்பணிகளை, பொதுநல வழக்குகள் பற்றிய நாளிதழ் செய்திகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், திருமிகு சுபாஷிணி ட்ரம்மல் மற்றும் திரு. ராம் காமேஸ்வரன் ஆகியோர்.
“பாடம்” நாராயணனின் முக்கியமான பொதுநல வழக்குகள் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு அவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
- சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் தற்கொலை அல்லது வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்பமான மனநிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன. குழந்தை இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வையாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர். இது போன்ற சிறார் சீர்திருத்த இல்லங்களின் நிலைமையினால் அங்கு வாழும் குழந்தைகளை சீரழிகின்றன என்பது சிறார் சீர்திருத்த குழந்தை இல்லங்களைப் பற்றி இவர் தொடுத்த பொதுநல வழக்கு.
- கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செய்யக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் “பாடம்” நாராயணன் ஒரு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” எனவும் எச்சரித்தது. பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த பொதுநல வழக்கின் காரணமாக, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை போடப்பட்டுள்ளது, இத்தடை தமிழகத்தில் மார்ச் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் சில வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கிவிட்டு சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
- பாடம் நாராயணன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (1,567 காவல் நிலையங்களிலும்), கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். விசாரணைக் கைதிகளை காவல்துறையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல வழக்கிற்கு பதில் அளிக்க தாமதமான காரணத்தால் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் அளித்தது. அத்துடன், பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுகொண்டு, விளக்கம் கூறி பதில் மனு தாக்கல் செய்யவும், அடுத்த மாதம் நீதிமன்றத்திற்கு வரும்படியும் காவல்துறை நிர்வாகத்திற்குக் கட்டளையிட்டுள்ளது.
- இவரது பொதுநல வழக்கின் காரணமாக, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் வாகன சோதனையில் ஈடுபதுவதற்குத் தடை கூறப்பட்ட பொழுது, வாகன சோதனை மேற்கொள்ள குறுக்கே நின்ற அத்தடையை அகற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை நீக்கக் கோரி பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்து தடை நீக்கத்தைக் கைவிடக் கேட்டுக் கொண்டனர்.
- தமிழக அரசு ஏற்படுத்திய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் கால தாமதம் ஏற்பட்டு இயங்காமல் இருந்தது. கமிஷன் முழு அளவில் இயங்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி “பாடம்’ நாராயணன் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
- அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன், வருடத்திற்கு 20 சதவீதம் மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வருகிறார்.
- கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் தவிர்த்த தனியார் அறக்கட்டளைப் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடுகோரி மனுதாக்கல் செய்தார்.
- இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் கருத்து சுதந்தரத்தை ஆதரித்தும், எழுத்தாளருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதத்திலும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்
- மாநகராட்சிப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து அரசின் முடிவுகளை கண்டிக்கும் விதமாக கல்வியாளர் என்ற முறையில் தனது எதிர்ப்பைத் தொலைக்காட்சி ஊடகம் வழியே வெளிப்படுத்தினார்.
கீழு ள்ள செய்திகள் நாளிதழ் தளங்களில் இருந்து திரட்டப்பட்டு, சமீபத்திய நிகழ்வுகளில் தொடங்கி ‘இன்று முதல் அன்று வரை’ என காலவரிசைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது:
குழந்தைகளை சீரழிக்கின்றனவா சிறார் சீர்திருத்த இல்லங்கள்?- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
March 20, 2015
தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/article7014450.ece
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்
March 12, 2015
தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/article6985539.ece
காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா: உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்
March 10, 2015
தினமணி
http://www.dinamani.com/latest_news/2015/03/10/காவல்-நிலையக்-கண்காணிப்பு-க/article2707005.ece
பெருமாள் முருகனை ஆதரிப்போம்
January 14, 2015
வலைப்பதிவு: Amudhan RP, vaediyappan
http://supportperumalmurugan.blogspot.com/2015/01/blog-post_84.html
கழிவறை இல்லாததால் பெண் வன்கொடுமை அதிகரிக்கிறதா?
June 7, 2014
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=993303
ஆறாக ஓடத் தயாராகிறது சரக்கு
April 28,2014
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=964118
மனித கழிவுகளை சுத்தம் செய்வதில் 30 பேர் பலி: தமிழகத்தில் நிரந்தர தீர்வு தேவை
September 23, 2013
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=810064
குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன்: முழு அளவில் செயல்படுவது எப்போது?
June 30, 2013
தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=746519
Plastic ban: constraints and challenges
April 30, 2013
The Hindu
http://www.thehindu.com/news/cities/chennai/plastic-ban-constraints-and-challenges/article1475244.ece
வாகன சோதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்குத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஏப்ரல் , 02 , 2011
மின் செய்தி மாலை
“பாடம்” நாராயணன் தனது சமூக அக்கறையை பொதுநல வழக்கு தொடர்வதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாளிதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார். அவரது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ள அக்கட்டுரைகள், கட்டுரைகளின் மையக் கருத்துகளுடன் இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சமூக ஆர்வலரான இவரது சமூக அக்கறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். நலிந்தோருக்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து பொதுநல வழக்குகள் தொடரும் “பாடம்” நாராயணனை வல்லமையாளராகப் பாராட்டி அவர் தம னது சமூக நலப் பணிகளில் தொடர்ந்து வெற்றியடைய வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
மேலும் தகவலுக்காக:
Blog:
http://paadam-pm.blogspot.com/
http://www.paadamnarayanan.blogspot.com/
Facebook: https://www.facebook.com/paadam.narayanan/
பாடம் (மாத இதழ்) ஆசிரியர் : அ.நாராயணன்
http://www.paadam.in/
காணொளி: Thanthi TV- https://youtu.be/HEGlajEViXg
செய்தித்தாள் கட்டுரைகள்:
Dinamani (25-05-2009): கட்டுரைகள் – அழுவதா? சிரிப்பதா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-25-05-2009.html
…கூவமும், தமிழகமெங்கும் இருக்கும் ஓடைகளும், நீர்நிலைகளும், ஆற்றுப்படுகைகளும் நிலத்தடி நீரும் இன்னும் பாழ்படாமல் தடுப்பதற்குத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும்.
Dinamani (23-03-2010): கட்டுரைகள் – குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-23-03-2010.html
…கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு, கழிப்பிடப்புரட்சி, இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
Dinamani (02-07-2010): கட்டுரைகள் – மீண்டும் லாட்டரி ஓநாய்களா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-02-07-2010.html
…தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பும், தமிழக அரசுக்கு ரூ. 500 கோடி வருமானமும் கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகள் கூறுகின்றனர். லாட்டரி முதலாளிகளின் இக்கூற்று, சிறுவர்களுக்காக நீதிக்கதைத் தொகுப்புகளில் தவறாமல் இடம்பெறும் கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதுதான் வெள்ளாடுகள் மழையில் நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதை.
Dinamani (21-5-2010): கட்டுரைகள் – நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-21-5-2010.html
…டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால், 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம், பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.””நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.”
Dinamani (29-04-2010): கட்டுரைகள் – அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-29-04-2010.html
…தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.
அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.
Dinamani (15-11-2010): கட்டுரைகள் – சாலைகள் நரபலி பீடங்களா? – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-15-11-2010.html
…குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர்.
Dinamani (10-08-2010): கட்டுரைகள் – முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-10-08-2010.html
… 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை.
கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன?
வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.
Dinamani (14-10-2010): கட்டுரைகள் – பிளாஸ்டிக் பயங்கரத்தை தடை செய்க! – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-14-10-2010.html
…சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.
Dinamani (20-9-2010): கட்டுரைகள் -தமிழக அரசின் “ஜிம் க்ரோ’ சட்டங்கள் – அ.நாராயணன்
http://paadamnarayanan.blogspot.com/2010/12/dinamani-20-9-2010.html
…அரசின் பெரும்பாக்கம் பிரம்மாண்ட மறு குடியமர்வுத் திட்டம் என்பது நியாயமற்றது – விழுமியமற்றது, குறிப்பாக யோசனையற்றது. நாளை பிறக்க இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இன்றைய அரசும், பெரிய நிறுவனங்களும் இணைந்து செய்யும் கூட்டுத் துரோகம்.
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55624
முனைவர் சுந்தரம், பாடம் நாராயணன் இருவருமே என் நண்பர்கள்.
முனைவர் சுந்தரம், எனது இரு கவிதைகளை 1998 காலகட்டத்தில் இந்திக்கு மொழி பெயர்த்தார். அத்துடன், வேறு பல மொழிகளுக்கும் உரியவர்களை அறிமுகப்படுத்தி உதவினார். அதன் தொடர்ச்சியாகவே 32 மொழிகள் வரை என் கவிதைகள் மொழிபெயர்ப்பு ஆகின.
பாடம் நாராயணன், பொதுநல அக்கறை மிகுந்த தொழிலதிபர். சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதில் நம்பிக்கையும் நேர் எண்ணங்களும் கொண்டவர். மது ஒழிப்பு முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவது வரை நீதிமன்ற வழக்குகள், ஊடகங்களில் கருத்துப் பரிமாற்றம், சமூகச் செயற்பாடுகள்... என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தனித்துவம் மிக்க மனிதநேயர்.
வல்லமையாளர் இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
வல்லமையாளர் முனைவர் சுந்தரம் ஐயாவை பாராட்டி வாழ்த்துகிறேன்.
வல்லமையாளர் பாடம் நாராயணன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.
தொல்காப்பியம் – நச்சினார்கினியர் உரையின், பொருளதிகாரம்: அகத்திணையியல் (பாகம் 1) யும்,பொருளதிகாரம்: புறத்திணையியல் (பாகம் 2) யும் மார்ச் 27, 2015 அன்று 500 வது தமிழிலக்கிய மின்னூலாக வெளியிட்டு மிகவும் பாராட்டத்தக்க எல்லையை எட்டியுள்ளது இணையத்தின்“மதுரைத்திட்டம்” (Project Madurai). இந்த மின்னாக்கப் பணியைத் துவக்கி, வழிநடத்தி, இந்த சாதனை எல்லையைத் தொட்டவர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள். அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக்குழுவினர் பெருமை அடைகிறோம்.
முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், “மதுரைத் திட்டம்” என்னும் பெயரில் இணையத்தில் தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்னிமப்படுத்தி , அவற்றை மின்நூல்களாக மாற்றி உலகத்தமிழினம் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் விலையின்றி வழங்கும் நோக்கில் மின்னாக்கப்பணியைத் துவக்கி, கடந்த 17 ஆண்டுகளாக தன்னையொத்த பலநூறு தமிழார்வலர்களையும் இப்பணியில் பங்கு பெறச் செய்து வழிநடத்தியும் வருகிறார். மதுரைத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998-ம் ஆண்டு பொங்கல் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் சற்றேறக்குறைய 400 தமிழார்வலர்கள் இந்நாட்களில் பங்கு பெறுகிறார்கள். காப்புரிமை சிக்கலில்லாத நூல்களை தட்டச்சுவது ஒரு சிலர், மெய்ப்புப் பார்ப்பவர் மற்றும் சிலர், இணையத்தில் மின்னூலாக வெளியிட உதவுபவர் வேறு சிலர் என பலர் வெவ்வேறு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, தங்கள் கணினி மூலம் இணையவழித் தொடர்பு கொண்டு, படநகல்களாக கிடைத்துள்ள தமிழிலக்கியங்களை தட்டச்சி உள்ளிட்டும், பிழைதிருத்தியும் கூட்டு முயற்சியில் 500 மின்னூல்கள் என்ற எல்லையைத் தொட்டது பாராட்டத் தக்க ஒரு பணியாகும். இத்தகையப் பணிக்காக தன்னார்வத் தொண்டு செய்த தமிழார்வலர்கள் அனைவருக்கும், திட்டத்தின் தலைவரான கல்யாணுக்கும் தமிழர்கள் யாவரும் கடமைப்பட்டுள்ளோம். வெள்ளுரை (eText) வகையில் அமைந்துள்ள நூல்களே இணையத் தேடல்களின் வழி கிடைப்பதற்கும், ஆய்விற்கும் உதவும் என்பதால் இப்பணியின் இன்றியமையாமையும் தெளிவாகும்.
சங்க கால நூல்கள், நீதிநெறி நூல்கள், இலக்கண நூல்கள், பக்தி நூல்கள் (சைவ, வைணவ, இஸ்லாமிய, கிருத்துவ சமய நூல்கள்) காப்பியங்கள், பிரபந்த வகை நூல்கள், 20-ம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு ஆசிரியர் நூல்கள், ஈழத் தமிழர், மலேசியத் தமிழர் நூல்கள், மற்ற பிற நூல்கள் என சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் மதுரைத்திட்டத்தின் வழி வெளியிடப்படுகிறது. படிமக்கோப்புகளாகவும் (PDF), ஒருங்குகுறி (Unicode)எழுத்துருக்கோப்புகளாகவும், இணையப்பக்கங்களாகவும் (web pages)தமிழிலக்கியங்கள் மதுரைத்திட்டத்தின் வழியாகக் கிடைக்கின்றன. தமிழக அரசின் பொதுவுடமையாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் ஜெயகாந்தன், கவிப்பேரரசு வரைமுத்து ஆகியோர் தாங்களே காப்புரிமை நீக்கி வழங்கிய நூல்கள் என பல தற்கால நூல்களும் மதுரைத் திட்டத்தின் சேகரிப்பில் இடம் பிடித்துள்ளன.
1990 களின் மத்தியில் தமிழ்க்கணினி வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட கல்யாண் முதல் முயற்சியாக திருக்குறளை தட்டச்சி இணையத்தில் ஏற்றி அனைவரும் பயன்படுத்தும் வழி இலவசமாக அளித்தார். இவரையொத்த ஆர்வம் கொண்டவர் பலரும் இணைந்ததில் உருவான மதுரைத் திட்டத்திற்காக இவரே தனது செலவில் பலநூல்களை தேடிப்பிடித்து வாங்கியும், நகலெடுத்தும் உள்ளார். தற்பொழுது ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ள, “சிவபுரம்” என்ற தலைப்பில் 1902 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நூல் ஜி. யு. போப் அவர்களால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டதை அறிந்து, அங்கு சென்று நூலை படநகல்களாக எடுத்து அவற்றை மின்னாக்கம் செய்துள்ளார்.
தன்னை தமிழறிஞர் என்றோ தமிழ்க்கல்விப் பணியைச் சார்ந்தவர் என்றோ இனம் காண முடியாது, தான் ஒரு தமிழ் ஆர்வலர் மட்டுமே என்று கூறும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் சுவிச்சர்லாந்தின் லாசன்னே நகரில் உள்ள “சுவிஸ் தேசிய தொழில்நுட்ப நிலையத்தில்” (Swiss Federal Institute of Technology, Lausanne, Switzerland) வேதியியல் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். சூரிய மின்கலங்களைப் பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் லயோலா கல்லூரி மாணவரான கல்யாண், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முனைவர் பட்டத்தையும், இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் வேதியலில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர்.
பல இயங்குதளங்களிலும் பயன்படுத்த உதவும் வகையில் “மயிலை” என்ற எழுத்துருவை 1980 களில் உருவாக்கி அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த உதவிய முன்னோடி எனவும், இணையத்தின் ஆரம்ப நாட்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “தமிழ் மின்நூலகத்தை” (Tamil Electronic Library) உருவாக்கியவர் எனவும், “உத்தமம்” என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (International Forum for Information Technology in Tamil – INFITT) தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவராகவும், ‘தமிழ் மரபு அறக்கட்டளை’(Tamil Heritage Foundation) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனவும் பல வகைகளில் தன்னை பல தமிழ்ப்பணிகளில் இணைத்துக் கொண்டவர் கல்யாண். இவரது பணிகளைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டு கனடா தமிழிலக்கிய கழகத்தின் மதிப்புமிக்க “சுரா” (Canadian Tamil’s initiative TAMIL LITERARY GARDEN’s Sundara Ramasamy Award for Tamil Information Technology – Sura) விருது வழங்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகமும் இவரது இணையத் தமிழ்ப்பணியை பாராட்டி விருது வழங்கியுள்ளது.
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெயரைச் சூட்டி, மதுரைத் திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி, தன்னார்வத் தொண்டர்களான சில நூறு தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி இந்தச் சாதனையைச் செய்துள்ள முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள், தனது பணியை மேலும் தொடர்ந்து நடத்தி தமிழ் நூல்கள் பலவற்றை இணையத் தேடலில் கிடைக்கும் வகையில் வெள்ளுரைகளாக மாற்றி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து, வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராக பாராட்டி மகிழ்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
மேலும் தகவலுக்காக:
Dr. K. Kalyanasundaram
kalya...@yahoo.com
www.projectmadurai.org
https://groups.yahoo.com/neo/groups/pmadurai/info
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=55881
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 
டிசம்பர் 1, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். வல்லமை வாசகர்கள் அவரை வல்லமை இதழின் எழுத்தாளராகவும் அறிவர். அவரது கதை, கவிதை, கட்டுரை, செய்தி, போன்ற பலவகை இலக்கியப் பதிவுகள் வல்லமையில் வெளிவந்துள்ளன. முதன்முதலில் எழுத்துலகில் நுழைந்த பொழுது ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வயது பதினைந்து. குழந்தை எழுத்தாளராக குழந்தைகளுக்கென இவர் எழுதத் துவங்கியது 1950 ஆம் ஆண்டில். அன்று துவங்கிய எழுத்து பணியை தனது எண்பதாவது வயதிலும் ஊக்கமுடன் தொடர்கிறார். சமூக எழுத்தாளரும், சீரிய சிந்தனையாளருமான ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் தொடர் எழுத்துலகப் பணியைப் பாராட்டும் நோக்குடன் அவரை வல்லமை இதழ் குழுவினர்களிடம் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும், கவிஞரும், வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் சமீபத்திய “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற வெளியீட்டைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
பள்ளி நாட்களில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா. ஆனந்தவிகடனில் 1968 இல் வெளியாகிய கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறும்புதினம் வாயிலாக குழந்தைகளுக்காக எழுதும் நிலையிலிருந்து பெரியோருக்கான எழுத்தாளராக இவர் தனது முப்பது வயதுகளில் உருமாற்றம் பெற்று எழுத்துலக வானில் பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார்.
பதின்ம வயதில் எழுதி இவர் பரிசு பெற்ற ‘நம் நாடு’ எனும் சிறுவர்புதினத்தைத்திற்குப் பிறகு தனது எழுத்துலகப் பயணத்தில் இவர் தொட்ட எல்லைகள் பலப்பல, பெற்ற விருதுகளின் எண்ணிக்கையோ மலைக்கவைக்கும் ஒரு நீளமான பட்டியல். தினமணி கதிர் நாவல் போட்டி, கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டி, லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு, அமுதசுரபி நாவல் போட்டி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு, தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு ஆகியன அவற்றில் சில. மன்னார்குடியின் செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி, 2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து கெளரவித்துப் பரிசளித்துப் பாராட்டியது. மறுஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மூத்தபெண் படைப்பாளர்களில் ஒருவர் எனவும் பாராட்டப் பட்டார்.
இவரது எழுத்தார்வம் நமக்கு வழங்கிய படைப்புகள் … சிறுகதைகள் 500, புதினங்கள் 25, குறும் புதினங்கள் 50, நெடும் நாடகங்கள் 3, 60 க்கும் மேற்பட்ட சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள், கிரண் பேடியின் “அஸ் ஐ சீ இட்” என்ற நூலின் சமீபத்திய மொழி பெயர்ப்பு உட்பட பல மொழிபெயர்ப்புகள் என தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்துள்ளார். இவரது படைப்பும் உக்ரைன் மொழியில் மொழி பெயர்ப்பு செயப்பட்டுள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்தியாவின் புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளான இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ஃபெமினா, ஈவ்ஸ் வீக்லி, யுவர் ஃபாமிலி, ஃபிக்க்ஷன் ரிவியூ, சண்டே எக்ஸ்பிரஸ், வுமன்ஸ் எரா, வீக் எண்ட் ஆகியவற்றில் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழின் ‘ஒப்பன் பேஜ்’ பகுதியில் சமுதாய அக்கறையுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளார். காந்தி எப்பிசொட்ஸ், பெர்ல்ஸ் ஆஃப் தி ப்ரோஃபெட் (நபிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு), தி லிவிங் காட் அட் புட்டபர்த்தி, தி ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் க்ரைஸ்ட், சாங் ஆஃப் தி சன் காட் (ஆதித்த ஹிருதயம்) ஆகியவற்றுடன் இந்தியக் கவிதைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
அந்த வரிசையில், ஈரடி கவிதைகளாக இவர் யாத்த வால்மீகி ராமாயணமும் அடங்கும். ராமாயணத்தை சிறுவர்களுக்காக 1970 களில் வெளியிட்டவர், சிறுவர்களுக்காக எழுதிய சற்றொப்ப ஆயிரம் பாடல்களைக் கொண்ட நூலை 1789 பாடல்களுடன் மேலும் விரிவாக்கினார். இந்த மொழிபெயர்ப்பு “ராமாயணா இன் ரைம்ஸ்” என்று சென்ற ஆண்டு வெளியிடப் பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலும் இவரது படைப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் பத்திரிக்கை ஒன்றில் இவர் தொடராக எழுதி வந்த “வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்” என்ற திருக்குறளின் ஆங்கில வடிவமும் இந்த மாதம் Cyberwit.net பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் இவரது …
1 படி தாண்டிய பத்தினிகள்
2 இதயம் பலவிதம்
3 வசந்தம் வருமா?
4 மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5 வாழத்தான் பிறந்தோம்
6 சாதி இரத்தத்தில் ஓடுகிறது
7 நாங்களும் வாழ்கிறோம்
8 குருக்ஷேத்திரக் குடும்பங்கள்
9 இல்லாதவர்கள்
10 அவசரக்கோலங்கள்
பத்து நூல்களை பூம்புகார் பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
எழுத்துப் பணியை தற்பொழுது இணைய உலகிலும் விரிவாக்கி அவரது வலைப்பதிவு, வல்லமை, திண்ணை போன்ற இணைய மின்னிதழ்களிலும் எழுதி வருகிறார். தொடர்ந்து 65 ஆண்டுகளாக எழுத்துலகில் பன்முகஎழுத்தாளராக வலம் வரும் ஜோதிர்லதா கிரிஜா அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமையடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
மேலதிகத் தகவல்கள்:
http://jyothirlathagirija.blogspot.com/
https://plus.google.com/112576644547569337452/posts
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=56094
--
“சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்!” என்று முழங்கும் கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தொகுத்த “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் வரியிது. “ஜி. ஆனி ஜோஸ்பின்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வைகைச்செல்வி வல்லமை இதழிலும் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றிய வைகைச்செல்வி ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் (M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றதுடன், மேலும் தனது தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) பலவற்றையும் படித்தவர். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்சமயம் கல்வியாளராக பொறியியல் கல்லுாரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
மதுரையை பூர்வீகமாகவும், சென்னையை வாழுமிடமாகவும் கொண்ட வைகைச்செல்வி 1980 முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல வழங்கி எழுத்துலகில் தடம் பதித்தவர். பெண்ணியம் மற்றும் பெண்மை போற்றுதலும்; அவர்தம் பணியின் பின்புலமான இயற்கை சுற்றச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்புத் துறையின் பணியின் கொள்கைகளுமே இவரது படைப்புகளின் களங்களாக விளங்கி வருகின்றன. கவிஞர் வைகைச்செல்வியின் “இன்னொரு உலகில்… இன்னொரு மாலையில்…”, “அம்மி”, “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” போன்ற கவிதைத் தொகுதிகள் அவர்தம் கவித் திறனையும், கருத்துச் செறிவினையும் பறை சாற்றுவன. கவிதைகள் தவிர்த்து “கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுப்பு, “பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு” போன்ற படைப்புகள் இவரது பெண்ணியம், சுற்றச்சூழல் பாதுகாப்பு கருத்துகளின் வெளிப்பாடுகள்.
“கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?” என்ற முத்துரை பதிக்கும் கவிதை வரி பெண்களுக்காகவும் இயற்கை பாதுகாப்பிற்கும் இவர் ஒருங்கே கொடுக்கும் குரல்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மி” பாராட்டுகள் பலவற்றை இவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களின் 70 கவிதைகளைத் தொகுத்து 2003 டிசம்பரில் இவர் வெளியிட்ட “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்னும் தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.
“கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்” என்ற இவரது கவிதை, தொழில்மயமான தற்கால உலகம் சுற்றுச்சூழலை சீர்குலைப்பதைச் சுட்டிக்காட்டி இந்நிலையை மாற்ற வலியுறுத்துகிறது.
நான்கு திசைகளிலும்
புகை போக்கிகள்!
நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
மனித நாற்றுகளை
மௌனமாய்த் தலைசாய்க்க
கத்தியின்றி…ரத்தமின்றி
யுத்த மொன்று ஆரம்பம்!
காடும் மலையும் இல்லை யென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!
பணியிடங்களில் பெண்களின் திறமைகள் மதிக்கப்படாது அவர்கள் உயர்பதவிகள் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்படும் “கண்ணாடிக் கூரை” (glass ceiling) சூழ்நிலை இவரது பெண்ணியக் குரல் வழியே கீழ்கண்டவாறு ஒலிக்கிறது.
ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
இறுதியில்
(பதவி உயர்வென்னும்)
அந்த ஏணியை அடைந்தேன்!
கூரிய கற்களும்… கொடிய முட்களும்
குத்திக் கிழித்தும்
(உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
ஓடிய கால்கள் …..!
ஏணியின் உயரம்
அயர்ச்சியை அளிக்க ….
புத்துயிர் பெற்றுக்
கண்களைத் திறந்தேன்!
காலை எடுத்து
முதற்படி வைப்பதற்குள் ….
என்னைத் தாண்டிச்
(சென்றன) சில காகங்கள் ….
கழுத்தில் சலங்கையுடன்,
காலில் எலியுடன்,
ஏணியைத் தள்ளி
(என்னையும் மிதித்துக் கொண்டு)
இடத்தை நிரப்பின!
இக்கவிதையினைப் படிக்கும்பொழுது “தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்” என மாலன் கூறியதை நாம் இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகவும் இருக்கும்.
“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வைகைச்செல்வியின் கட்டுரையும் பலவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்புகிறது.
“வானகமே, வையகமே”, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் “இது நம்ம பூமி” என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராக சிறப்பாகச் செயலாற்றி வரும் வைகைச்செல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை என இருதுறைகளிலும் மேலும் மற்றொரு எல்லைக்கோட்டை முனைவர் பட்டம் மூலம் சமீபத்தில் எட்டினார். இவரது தொடர் முயற்சியை பாராட்டும் நோக்கில் வல்லமைக் குழவினருக்கு வைகைச்செல்வியைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.
சுற்றச்சூழல் கவிஞர், பெண் சாதனையாளர் போன்ற பட்டங்களையும் பெற்றவர் வைகைச்செல்வி. இவரது படைப்புகளில் பல்கலைக்கழக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நிறுவன புத்தகக் கண்காட்சியின் 2002 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கம் வழங்கிய“சக்தி 2002″ பெண் எழுத்தாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் வைகைச்செல்வி, இப்பொழுது தான் பெற்ற வெற்றிகளின் வரிசையில் முனைவர் பட்டத்தையும் [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] பெற்றுள்ளார். “பணிபுரியும் பெண்களின் (ஜவுளியாலைகள் மற்றும் தீப்பெட்டித் தொழில்) பிரச்சனைகளும் அதற்கான ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் மேலாண்மையும்” (Thesis: Occupational Health Problems of Women employees in Textile and Match industries and Integrated Management of Environment) என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு பெற்ற முனைவர் பட்டம் இது. இவரது ஆராய்ச்சிக் கோணமும் பெண்களையும் இயற்கையையும் இணைத்த ஒரு கோணத்திலேயே அமைந்தது பாராட்டிற்குரியது.
பெண்கள் நலனும், சுற்றுச்சூழலின் நலனும் தொடர்ந்து உலகில் கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதை உணரும்பொழுது இவரது ஆய்வு இவரது கருத்துகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டி கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பேருவுவகை கொள்கிறோம். வைகைச்செல்வி தனது சமுதாய மற்றும் இலக்கியப்பணியில் வெற்றிகள் பலபெற வாழ்த்துகள்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
இலங்கையின் கல்குடா பகுதியில் பிறந்து வளர்ந்து, இன்று வளைகுடாப் பகுதியில், மத்தியக் கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவரும் “கவியருவி றியாஸ் முஹமட்” அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்ற திங்களன்று வல்லமை இதழில் “சீதனம்” என்ற தலைப்பில் சீதனம் தரமுடியாதக் கொடுமையால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகளின் வருந்தத் தக்க நிலையினை, இந்த நூற்றாண்டிலும் நிகழும் இந்த சமுதாய அவலத்தை விவரிக்கும் கவிதையை எழுதியதற்காக வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார் கவியருவி றியாஸ் முஹமட். அக்கவிதையின் சில வரிகள் கீழே…
கன்னிக்கு ஏன் வேதனை…?
கருமச் சீதனத்தின் சோதனை!
கன்னிக்கோ
கலியாணம்
கடந்த வயது…
கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி!
கல்யாணராமர்களோ
கன பேர்,
கருமச் சீதனக்
கனவுகளோடு…
கல்யாணராமனுக்குக்
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை!
கரும்பு தின்னக் கூலியோ… ?
கணவனாகக் காசோலையோ…?
[…]
பள்ளிநாட்களில் எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, “மாவடிச்சேனை முஸம்மில்” “றியாஸ் முஹமட்” என்ற பெயர்களுடன் தொடங்கியது கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப்பயணம். கதை, கட்டுரை, கவிதை என பல்துறைகளில் எழுதி வரும் றியாஸ் முஹமட்டின் படைப்புகள் இந்நாள் வரை மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. மண் வாசனையுடன் எழுதுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று கூறும் றியாஸ் முஹமட் தனது பிறந்தமண்ணை நினைவிற்குக் கொண்டு வரும் விதமாக சமீபத்தில் “கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் மத்திய கிழக்கின் “தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை தொடர்ந்து எழுதி வருவதுடன், முன்னணி சமூக வலைத்தளங்களிலும் எழுதி வருகிறார். இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு கவிதை நூல் வெளியிடவேண்டும் என்பது றியாஸ் முஹமட்டின் அடுத்த குறிக்கோள்.
இருமாதங்களுக்கு முன், சென்ற பிப்ரவரி 2015 இல், “தடாகம் கலை இலக்கிய வட்டம்” நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் றியாஸ் முஹமட் முதற்பரிசு பெற்றதுடன் “கவியருவி” சான்றிதழும் பெற்றார். வல்லமையிலும் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதிவரும் றியாஸ்முஹமட் “கலைமகள் அழைக்கிறாள்!” என்ற கவிதையில், “கலைமகள் கவி பாட என்னை அழைக்கின்றாள்! நசிங்கிப் போன என் சமூகத்தின் நாளைய விடியலுக்காக, எனது எழுது கோலில் தீ மூட்டித் தீக்குச்சியாய் எரியப் போகிறேன்…” என்று தனது எழுத்துப் பணியின் குறிக்கோளை தெளிவாக முழங்குகிறார்.
வல்லமை இதழில் வெளியான பாரதி கண்ட புதுமைப்பெண், பனமரக் காடு போன்ற இவரது கவிதைகள், சென்றவாரத்தின் “சீதனம்” கவிதையினை ஒட்டி பெண்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கவிதைகளாக இருப்பினும்,
இவரது பெரும்பாலான கவிதைகளின் தொகுப்பு தெளிவாக விளக்குவது …
செல்வம் திரட்டப் பணி நிமித்தமாக அயல்நாட்டிற்கு சென்ற இளைஞர்கள், குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பிரிந்து தனிமையில் வாடுவதையும்,
தாய்நாட்டை நினைத்து ஏங்கியவண்ணம், சில சமயம் குடும்பத்தாரின் மறைவிற்கும் செல்ல இயலாது அந்தத் துயரை தனிமையில் கழிப்பதையும்,
பணம் என்ற ஒரே காரணத்திற்காக உழைத்து உழைத்து பொருளீட்டும் காலத்தில், இளமைக்காலம் இவர்கள் கண்முன்னே வெறுமையாகக் கடந்து முதிர்ச்சி அடைவதையும்,
திருமணம் செய்து கொண்டாலோ தனது துணையுடன் வாழமுடியாது போகும் நிலையை, ஒரு இளைஞனின் மனக்குமுறல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கவியருவி றியாஸ் முஹமட் அவர்களின் கவிதைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன….
[குறிப்பு: கவிதைகளில் சில முழுமையாக வழங்கப் பெறாமல் கருத்தைக் கவர்ந்த, மனதைத் தொட்ட கவிதையின் பகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன, முழுக்க்கவிதைகளையும் படிக்க விரும்புவோர் சுட்டிகளைத் தொடர்ந்து சென்று படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்… ]
எங்க ஊரு! இந்த ஊரு!!
இலங்கையின் முத்துடா..!!
கிழக்கிலொரு சிப்பிடா..!!
செம்மண் புழுதிடா..!!
சங்ககால வாசமடா..!!
என் அன்னை மடியடா..!!
என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!
ஊர் மெச்சி பாடும்
இவன் கல்குடாவின்
எழுத்தடா..!!
***
ஓட்டமாவடி பாலம்
உன்னை
நினைக்கையில்
மண் வாசனை
வருகிறது,
தாய் வீடு
தெரிகிறது.
காலில் ரெக்கைகள்
முளைக்கிறது,
இதயச் சிறகுகள்
பறக்கிறது………..
***
அம்மா
தாயே,
உன் தோளுக்கு மேல்
நான் வளர்ந்தாலும்…
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்…
வீசுதம்மா
உன் சேலை
வாசம்…
ஏங்குதம்மா,
இந்தப் பிள்ளைப்
பாசம்…
இனி,
வேண்டாமம்மா
இந்த வெளிநாட்டு
நேசம்.
போதுமம்மா
இந்தப் போலி,
வேஷம்.
இனி,
உன் காலடியில்தான்
என் சொர்க்கம்.
உன்,
மடியில்தான்
என் மரணம்…
***
எழுத நினைக்கிறேன்
ஒரு கவிதை,
அடக்க முடியவில்லையே
என் அழுகை!
எழுது எழுது என்று
நினைக்கிறது மனது
அழுது அழுது
என் பேனாவும் பழுது!
என்ன வாப்பா அவசரம்?
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னைப் பத்திரம்!
பேனாவை எடுத்தால்
பேச்சு வரவில்லை வாப்பா
ஏட்டை விரித்தால்
எழுத்து வரவில்லை வாப்பா!
காகிதமும் என் கண்ணீரால்
கரைந்து போனதே வாப்பா
தளை தட்டுது வாப்பா
மூச்சு முட்டுது வாப்பா!
எதுகை மோனை கூட
அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
நான் எழுதிய கவிதைகளும்
கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!
கூடவே இருப்பீர்கள் என்றுதானே
கொடி போலப் படர்ந்தேன்
பாதியில விட்டுப் போகவா
பனமரம்போல வளர்ந்தேன்?
[…]
போங்கள் போங்கள்!
என் வாப்பா மண் மறைந்தார்
என்று சொல்பவர்கள்
என் கண் மறைந்து போங்கள்!
***
பணம்
போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாகப் பிறந்ததால்
நான்பட்ட அவமானம்…!
வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது
இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைபிணம்…!
***
படித்த படிப்பும்
வீணாகப் போச்சு
வேலைக்காக அரசியல்வாதி
கால் பிடித்து
மானம் போச்சு!
கையில காசி காணாது
மாமா மச்சினன் உறவுகள்
அறுந்து போச்சு
இதுதானடா உறவுகள்
என்று வெறுத்துப் போச்சு!
வாழ்ந்தும் வாழாமலும்
முடியும் நரைத்துப் போச்சு
காதல் என் காதல்
அது கண்ணீரில் கரைந்து போச்சு!
[…]
கல்குடா வாழ்க்கை
வளைகுடா வாழ்க்கையாக
மாறிப் போச்சு
தனியாகவே வாழ்ந்து
வெறுத்துப் போச்சு!
[…]
ஊர் நிலமைகளை நினைத்து
என் தூக்கமும் போச்சு
ஊர் படையெல்லாம்
பெரும் படையாகவும் ஆச்சு!
பணம் இருந்தால் மாத்திரமே
அரச உத்தியோகம் என்பது
சரியாகப் போச்சு
நாடு ரொம்ப கெட்டு போச்சு!
பட்டம் படித்தவன்
பாலைவனம் மேய்வது
பழகிப் போச்சு
சமூகமும் தம் நிலைமறந்து
போச்சு!
படித்தவர்களுக்கு
வேலை என்பது
குழந்தைப் பேச்சு
இதைக் கேட்டுக் கேட்டு
காதும் புளித்துப் போச்சு!
***
வயதுக்கு வந்து பல வருடமாச்சு
மீசையோடு வெள்ளை முடியும்
எட்டிப் பார்த்தாச்சு !
வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
தெரிந்து போச்சு நானும் ஒரு
முதுமைக் குமரன்
என்று…!
கூடப் படித்தவர்கள்
எல்லாம்
குடித்தனம் போயாச்சு!
குழந்தை, குட்டிகளோடு
கூடி வருகையில்,
மனசு துடிக்கிறது,
எரி மலையாக வெடிக்கிறது…!
என் பள்ளிப் பருவத்திலேயே
தாய்க்கு வந்தது வாதம்,
கை, கால்களை
முடக்கி வாழ்க்கையைச்
சிதைத்து விட்டது!
மூத்த தங்கை வயதுக்கு வந்து,
இருபது வருடங்களாச்சு !
கல்யாணச் சந்தையில்
காலூன்ற நிற்கும்,
இளைய தங்கை வேறு…!
தங்கைகளை நினைத்து,
உறங்கும் அம்மாவின்
அழுகையும் அதிகமாச்சு !
அவளின் மூச்சும்
வரவரக் குறைந்து போயாச்சு !
எங்கள் ஏழ்மை வாழ்வு
கண்டு குடும்பத்தாரும்,
அயலவரும்
எட்டிப் போயாச்சு !
எங்க வீட்டு எச்சி தின்னு
வளர்ந்த செல்லப்
பூனையும் வீட்டுச்சுவர்
ஏறிப் போயாச்சு !
குடும்பச் சுமையைக் குறைக்க
முதுகுச் சுமை ஏற்றியாச்சு !
வாழ்ந்தும் வாழாமலேயே,
உடம்பு தளர்ந்து,
இளமையும் போயாச்சு !
இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?
என் தங்கைகளைக்
கரை சேர்க்கும் வரை….
கனவுகளைக் கண்களில்
சுமந்து கொண்டு
வாழும்
நானும் ஒரு
முதிர் குமரன்தான்!
***
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்…!
கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாதே மச்சான்!
நடுச் சாமம் நாய்க் குரைக்க
நடு நெஞ்சில் நெருப்பு வைக்க
நீயில்லா வீடு பார்த்து,
தெரு நாய்களும் குரைக்குது மச்சான்
என்னைக் குறுகுறுவென பார்க்குது மச்சான்!
ஆராரோ ஆரிரரோ..,
பக்கத்து வீட்டுத் தாலாட்டு
காது கேட்டு, வாட்டுது மச்சான்
என்னை வாட்டுது மச்சான்!
எண்ணைக் கிணத்துல நீங்க
உங்க எண்ணத்தில நாங்க
ராப்பகலா தூங்காம நானிங்கு ஏங்க
என்னத்த வாழ்ந்தோம் மச்சான்
எண்ணங்களுடன்தானே வாழ்கிறோம் மச்சான்!
மாரியில குளிராகி
கோடையில வெயிலாகி
உருமாறித் தடுமாறி
பனியாகிக் காற்றாகி
சருகானேன் மச்சான்!
ஒரு நேந்துவிட்ட கோழிபோல
ஆனேனே மச்சான்….
கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்கு போகாத மச்சான்!
நீங்க கழற்றிப் போன சட்டை பார்த்து கண் கலங்குது மச்சான்
நீங்க வைச்ச மரமும் வளர்ந்து நிற்குது மச்சான்
நம்ம குழந்தையும் இப்ப எழுந்து நிற்குது மச்சான்
உங்களைக் கேட்டுத்தானே அடம்பிடித்து அழுகுது மச்சான்!
ஏழு கண்டம் உன்னைத் தாண்டவைத்தான்
ஏக்கத்தோடு என்னை வாழவைத்தான்
பால் நிலவு போல என்னைத் தேயவைத்தான்
பாலைவனப் புழுதியா உன்னைப் பறக்க வைத்தான்!
நம் காதலைச் சேர்த்து வைத்த அந்த இறைவன்
வாழ்தலை ஏன் பிரித்து வைச்சான்..?
இருந்தும் இல்லையென்பது துன்பம் மச்சான்
உன்னோடு வாழ்வதே இன்பம் மச்சான்
பித்துப் பித்து பிடிக்கிறதே மச்சான்
பிச்செறிந்து வாயேன் மச்சான்!
ஏரோப்பிளேன் வாழ்க்கை
வேணாம் மச்சான்
ஏறி வாங்க வாழ்வோம் மச்சான்!
கீரைக் கட்டு தின்றாலும்
சேர்ந்து தின்போம்
மத்தியக் கிழக்க விட்டு வாயேன் மச்சான்!
சிறந்த கவிதைகளைத் தொடர்ந்து வழங்கி வரும் கவிஞர் றியாஸ் முஹமட்டின் இலக்கியப் பணியைப் பாராட்டி, விருதுகள் பல பெற்று, அவர் தமது எதிர்காலக் கனவுகளை அடைவதிலும், குறிக்கோள்களை அடைவதில் வெற்றி பெற வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தகவல் பெற்ற தளம்: கல்குடா நேசன் (kalkudahnation.com): இளங்கவிஞர் அறிமுகம்-றியாஸ் முஹமட் , ‘தடாகம் கலை இலக்கிய வட்ட’ சர்வதேச கவிதைப் போட்டி
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=56547
கவிஞர் றியாஸ் முஹ
ம்மட் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
செம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்குத் “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில்தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் இருவர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரின் புதுமையான குறள் வெப்பவளிக்கூடு திட்டத்தையும், உலகசாதனை செய்வதற்காகத் திருக்குறளைத் தேர்ந்தேடுததற்காகவும் பாராட்டி இவர்களை இவ்வார வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
ஊடக பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ் ” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். இந்த ஆண்டு ஜனவரியிலும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்து செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூட்டில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா.
அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலாக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தோன்றிய இந்த எண்ணத்தை செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்தபின்னர் சென்ற ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது …
1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.
4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது கருத்து.
வரும் ஆண்டு 2016, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது ஒரு சிறப்பான திட்டம் என்பதில் ஐயமில்லை. பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும் இவர்களது நம்பிக்கை.
திருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியுள்ள இந்த முயற்சிக்குப் பிறர் ஆதரவையும் ஏற்க முன்வந்துள்ளனர் இத்திட்டக் குழுவினர். இந்த சாதனை முயற்சி செய்தியைப் பரப்புவதிலும், பொருளாதார ஆதரவு என்ற வகையில் பங்கேற்க விரும்புபவர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களது திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறலாம் என்ற தகவல் வல்லமை இதழின் மற்றொரு செய்தியில் பகிரப்பட்டுள்ளது.
உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் ‘குறள் வெப்பவளிக்கூடு’ பறக்கவிட்டு தமிழிலக்கிய இலக்கிய நூலொன்றை பெருமைப்படுத்தி, அதன் மூலம் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்த விரும்பும் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரை இவ்வார வல்லமையாளராகப் வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
“திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon)பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துக் காணொளி: https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be
பெனிடிக்ட் சேவியோ: https://www.facebook.com/reachbenny
செல்வா சரவணா: https://www.facebook.com/selva.saravanah
“திருக்குறள் வெப்பவளிக்கூடு” இணையப் பக்கங்கள்:
https://www.facebook.com/kuralballoon
https://www.kuralballoon.com
இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவின் இணையப்பக்கங்கள்:
https://www.facebook.com/tnballoonfestival
http://www.tnibf.com/
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
நன்றி வல்லமை : http://www.vallamai.com/?p=56822
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழகத்தின் இக்கால இளையதலைமுறை பல்கலைக்கழக பட்டம் பெற்றிருந்தாலும் சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதுவதையோ அல்லது சரளமான ஆங்கிலத்தில் தங்கள் கருத்துகளை உரையாடல்வழிப் பகிர்ந்துகொள்ள இயலாமைக்கோ காரணம் ஆங்கிலம் பயன்பாட்டு முறையில் கற்பிக்கப்படாததே என்பது மொழியியல்துறை வல்லுநர்கள் கருத்து. தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் ஆங்கிலம் அறியாததால் தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில் பெற்றோர்கள் அவர்களை ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளில் சேர்த்தாலும், அங்கு பயிலும் மாணவர்கள் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும், மனனம் செய்து கற்கும் கல்விமுறையில் அவர்கள் கற்பது பெற்றோர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. மொழியியல்துறை பயிற்சி இக்குறையை நீக்க இயலும். உலக நாடுகளில் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் பொழுது, இத்துறை தமிழக அரசின் மெத்தனத்தினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு மிகவிரைவாக இன்று அழிவுநிலையை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இதனைப் பற்றிய எச்சரிக்கையைவிடுத்து சென்ற சனிக்கிழமை வெளியான தினமணி நாளிதழின் “அழிவின் பிடியில் மொழியியல் துறை” கட்டுரைக்கு வழங்கிய தமது செவ்வி மூலம் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் மொழியியல் வல்லுநர் பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். மொழியியல் துறையின் முக்கியத்தை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரும், அதைப் புறக்கணிப்பதால் ஏற்படக்கூடிய இடையூறுகளை எடுத்துரைத்த பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் இளங்கலைப் பட்டமும், தமிழ், மொழியியல் புலங்களில் முதுகலைப் பட்டம் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் கணினிமொழியியல் (computational linguistic) வல்லுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவரால் வளர்த்தெடுக்கப்பட்ட மொழியியல் துறை, ஆராய்ச்சியாளர் பலரை அத்துறையில் உருவாக்கிய அத்துறை, அவரது பணி ஓய்விற்குப் பிறகு பல்கலைக் கழகத்தின் நிதிஒதுக்கீட்டினை இழந்து, பல்கலைக்கழகத்தின் அக்கறையின்மையால் நலிந்துவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கியாவர், தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்தவர் என்ற பல பெருமைகளை உடையவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்.
மொழியியல் பாடமென்பது எல்லா மொழிகளைப்பற்றியும் பொதுவாக அறிந்துகொள்ளும் துறை, ஆய்வு நோக்கம் அதன் அடிப்படை. எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிக்கும் திறமையை வளர்ப்பது மொழியியல் துறையின் பின்னணி. கல்லூரி மொழியிலக்கியப் பாடங்களில் 40 விழுக்காடு பாடத்திட்டம் மொழியியலை அடிப்படையாகக் கொண்டது. இப்பாடத்தைப்படிப்பது இலக்கிய வகுப்புகளில் படிப்பது அறிவியல் அடிப்படையில் மொழிகளை ஆராய்ந்து அணுகும் தன்மையை உருவாக்குகிறது. இதனால் ஆங்கில, தமிழ் மொழிப் பாடங்களை பயன்பாட்டுமுறையில் கற்பிக்கும் திறமையையும் ஆசிரியர்கள் பெறுவார்கள். இக்காரணத்தினால் கல்வி நிறுவனங்களில் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது இன்றியமையாததாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் பட்டம் பெற்றவர்களை பல்கலைக்கழகங்கள் பணிக்கமர்த்தின. ஆனால், மொழியியல் துறையில் பெறப்பட்ட முனைவர் பட்டம் இலக்கிய முனைவர் பட்டங்களுக்கு ஒப்பானதல்ல என்ற அரசாணையை இரு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மொழியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக அறிவித்து அவர்கள் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மொழியியல் பட்டதாரிகளை பணிக்கமர்த்துவதையும் கல்விநிறுவனங்கள் கைவிடத் தொடங்கின. இதன்விளைவாகப் பணிவாய்ப்புகள் குறைந்து இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் எண்ணிக்கையும் அருகிவிட்டது. இவ்வாறாக ஆசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், ஆங்கிலம் தமிழ் கற்பித்தலும் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பிறகு NDS Lingsoft Solutions Pvt Ltdமொழித்தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரும், இவருடன் இணைந்து பணியாற்றிய மொழியியலாளர்களும், கணினித்துறை மென்பொருள் பொறியாளர்களும் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த “மென்தமிழ்” – தமிழ்ச்சொல்லாளர் (a Tamil word processor) மென்பொருள் பணியை முன்னெடுத்து வருகிறார். இவரது “தமிழ்ச்சொல் 2000″ என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக ‘மென்தமிழ்’ மென்மம் விளங்குகின்றது. ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என 41 ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி, இணைச்சொல் / எதிர்ச்சொல் அகராதி, மயங்கொலிச் சொல் அகராதி, தமிழ்நாடு அரசு ஆட்சிச்சொல் அகராதி என இதில் ஆறு வகையான அகராதிகள் உண்டு. இம்மென்பொருள் இயல்மொழி ஆய்வு மற்றும் மொழிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவக்கப்பட்டது. ஒருங்குறி எழுத்துக்கள், குறியீடு மாற்றி, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, மொழிமாற்றி போன்ற பலவகையான வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும், அகரவரிசைப்படுத்துதல், சொல்லடைவு, எண் எழுத்து மாற்றி, கோப்பு மாற்றி, மற்றும் மைக்ரோசாஃப்ட் 2007 வோர்ட் ப்ரோசெசசெர் போன்ற வடிவமைப்பு போன்ற முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது இந்த மென்பொருள். மின்னஞ்சல் உட்பட்ட பதிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு சொற்செயலிதான் மென்தமிழ் மென்மம். இதற்கு முன்னதாக இத்தகையதொரு முழுமையான சொற்செயலி மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. அந்த வகையில் கணினித் தமிழ் தேடலில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில், 2013-ஆம் ஆண்டின் “முதல்வர் கணினித் தமிழ் விருது”க்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பபட்டு சென்ற மாதம் விருது வழங்கி பாராட்டப்பட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களின் தமிழ்மொழி வளர்ச்சிக்கானப் பணிகளைப் பாராட்டி வழங்கப்பவது இந்த விருது. தமிழையும் மொழியியலையும் தொழில்நுட்பத்துக்குத் தக்கவாறு தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து பணியாற்றிவரும் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டும் நோக்கில் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கணினிவழி தமிழ் மொழிபெயர்ப்பு, மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் தமிழை ஒலிவடிவாகக் கணினியே படிக்க வழி செய்வது போன்ற முயற்சிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இத்தகைய தமிழிலக்கியம், மொழியியல், கணினிமொழியியல் பின்புலம் கொண்டவர் கருத்தைப் புறந்தள்ளாது தமிழ அரசு என நம்புவோம். உலகில் எல்லாப் பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம் ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களது அறிவுரையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்போம். இத்தகைய தமிழ் சான்றோரைப் பாராட்டி வல்லமையாளர் வரிசையில் இணைத்துக் கொள்வதில் வல்லமை மின்னிதழ் பெருமை கொள்கிறது.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தகவல்களும் படங்களும் தந்துதவிய கீழ்காணும் தளங்களுக்கு நன்றி:
https://muelangovan.wordpress.com/
http://tamil.thehindu.com/tamilnadu/article6038477.ece
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=57103
அன்புடைய தேன்மொழி அவர்களுக்கு,எனக்குத் தாங்கள் அளித்துள்ள சிறப்புக்கு மிக்க நன்றி.வல்லமை குழுவினர் அனைவருக்கும் நன்றி.அன்புடன்ந. தெய்வ சுந்தரம்
Date: Sun, 3 May 2015 19:24:59 -0700
From: jsthe...@gmail.com
To: mint...@googlegroups.com
CC: vall...@googlegroups.com
Subject: [MinTamil] Re: இந்த வார வல்லமையாளர்!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சென்னை நகரின் ஆழ்வார்பேட்டையில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்து பரதநாட்டியம் குச்சுப்புடி நடனங்களை கண்ணாகக் கருதி பயிற்சி பெற்று வளர்ந்த தமிழ்ப் பெண்மணி ராஜ ராஜேஸ்வரி, தற்பொழுது அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று உள்ளார். சென்ற மாதம் நியூ யார்க் நகரின் நகராட்சித் தலைவர் ‘பில் டி பிளேசியோ’ (New York City – Mayor, Bill de Blasio) அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தபொழுது, நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் மக்கள் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர், தனது பன்மொழித் திறமையையும், கலாச்சாரப் பின்புலம் அளித்த அனுபவத்தையும் செவ்வனே பயன்படுத்தி நீதித்துறைக்கு பெருமை சேர்த்தவர் எனப் பாராட்டுரையும் வழங்கியுள்ளார். நியூ யார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தெற்காசிய பெண் நீதிபதி என்ற புகழை தமிழகத்திற்குத் தேடித்தந்த நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
நீதிபதி ராஜ ராஜேஸ்வரி முன்னர் ரிச்மாண்ட் கவுண்டி (மாவட்டம்) அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தவர். அப்பணியில் குற்றவியல், போதைப்பொருள் தடுப்பு, உச்சநீதிமன்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை வழக்குகள் என நீதித்துறையின் பல பிரிவுகளிலும் பணிபுரிந்தவர் என்ற சிறப்பினைக் கொண்டவர்.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாகப் பேசுகிற ஆற்றல் வாய்ந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அயல்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயரும் குடும்பங்களில், குறிப்பாக தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தோர் குடும்பங்களில் குடும்ப வன்முறைகளும், சிறுவர்கள் மேல் வன்முறையும் அதிகம் நிகழ்வதையும், அவை அக்குடும்பப் பெண்களால், குடும்பத்தின் நலன் என்ற நோக்கில் வெளிவராது மறைக்கப்படுவதையும் தனது பணிக்காலத்தில் கண்டுணர்ந்தவர்.
பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவது கண்டு மிகவும் வருந்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, குடிபெயர்ந்தோர் குடும்பங்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதிகிடைப்பதில் தன்னால் உதவமுடியும் என்று கருதுகிறார். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது முக்கியத்துவம் கொண்டது, அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.
அநீதியாக, செய்யாத குற்றத்திற்காக ஒருவர் தண்டனை பெற்று, பின்னர் உண்மை தெரிந்து அவர் விடுவிக்கப்படும் செய்திகள் தெரியும் பொழுதெல்லாம் அது குறித்து மிகுந்த வேதனை அடைவேன் என்று கூறும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி, அமெரிக்காவின் நீதித்துறை மிகச்சிறப்பானது என்று கூறவியலாது சிற்சில குற்றங்குறைகள் இருப்பினும், விரைவில் வழக்குகள் கையாளப்பட்டு நீதி வழங்கப்படுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்கிறார். ஒருவரது இனம், மதம், மொழி அடிப்படையில் யாரும் புறக்கணிக்கப்படாது நீதிபெறவேண்டும் என்று எடுக்கப்படும் முயற்சிகளால் உலகில் மிகச்சிறந்த நீதித்துறையைக் கொண்டது அமெரிக்கா என்பது இவர் கருத்து. குடிபுகும் அயல்நாட்டினருக்கு அமெரிக்கா ஒரு சிறந்தநாடு, முயன்று உழைத்து, தொடர்ந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இங்கு மறுக்கப்படுவதில்லை.
டெல்லியில் நடந்த வன்புணர்வு போன்ற நிகழ்வுகள் நமது இந்தியச் சமுதாயத்தில் ஊறிப்போய்விட்ட பெண்களுக்கு எதிரான அநீதிகள், இவற்றை நாம் தடுக்காவிட்டால் நமது திறமைகள் முழுவதும் இந்த அநீதியின் காரணமாக வெளிவராது போகும். இது போன்ற கொடூரமான உயிரிழப்பு என்று ஒன்று நடக்காதவரை பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதுமில்லை. பெண்களோ குழந்தைகளோ தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை அடுத்தவர் கவனத்திற்குக் கொண்டுவரவும் தயக்கம் காட்டுவார்கள், அவர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதுடன் சொன்னால் சமூகத்தில் இகழ்ச்சியுடன் தாம் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதுமே அவர்களது நிலை என்கிறார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது அன்னை தமக்கு நாட்டியத்தில் ஆர்வத்தை ஊட்டுவித்தது போலவே, ஒரே ஒருவராவது அக்கறையுடன் முயற்சி எடுத்தால் நாம் வாழும் உலகம் மேலும் சிறந்த இடமாக மாறும் என்ற நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்துள்ளார் என்கிறார் இவர்.
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த பத்மா, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அவரது இளமைப் பருவம் செல்வச் செழிப்புடன் இல்லாவிட்டாலும் இனிமையான அமைதி நிறைந்த கலைக்குடும்ப வாழ்க்கையாக அமைந்ததில் மனநிறைவு உள்ளவர். நாட்டிய ஆசிரியையான தனது தாயைப் போல நடனத்தில் சிறந்து விளங்கி, பத்து வயதிலேயே பிறருக்கும் கற்பிக்கும் திறனையும் கொண்டிருந்தார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. நிதி திரட்ட உதவியாகப் பல நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். கலாஷேத்திராவின் மாணவியான இவர் தனது தாயுடன் உலகின் பலநாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகளை செய்து வந்தவர்.
அமெரிக்காவில் நாட்டிய நிகழ்ச்சிக்காக 1988ம் ஆண்டு வந்தவரை அமெரிக்காவில், பெண்களை பேதமுடன் பார்க்கும் மனப்பான்மை குறைவாக இருக்கும் நாகரிகம் இவரை மிகவும் கவர்ந்தது. அறிவாற்றல் மிக்க தனது தோழியர் சிலர் இளவயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் திறமை புறக்கணிக்கப்பட்டதை எதிர்கொண்டவர் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தவர் சட்டம் பயின்று, அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணிபுரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்க் நகரின் குற்றவியல் நீதிபதி பொறுப்பேற்கும் வகையில் உயர்ந்துள்ளார்.
இன்றும், தனது 43 வயதிலும், இந்திய சமூக நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளிலும் தனது குழுவினருடன் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி தனது நடனக் குழுவிற்கு தமது 18 வயதில் விபத்து ஒன்றிற்குப் பறிகொடுத்த தனது அன்னையின் நினைவாக “பத்மாலயா நாட்டியப் பள்ளி” என்ற பெயர் சூட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்குப் பலியான தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி, தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது நீதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்புரையாக நகராட்சி தலைவரிடம் நன்றி நவின்ற பொழுது, இப்பதவி எனது அமெரிக்கக் கனவு நிறைவு பெற்றதை மட்டும் காட்டவில்லை, தொலைதூர நாடுகளில் வசிக்கும், வாழ்க்கையில் முன்னிலையை அடைய விரும்பும் இளம்பெண்களுக்கு, தானும் முயன்றால் தனது சமூகத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறலாம் என நம்பிக்கையளிக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்க வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் இருந்து வந்தவர் என்ற முறையில் இந்தப் பெருமை கிடைத்ததற்குத் தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், நீதிபதியாக நியமிக்கப்பட்டது அவருக்கு பெருமையும் பணிவையும் ஒருங்கே வழங்கியது என்றும், தான் கற்பனையும் செய்யத் துணியாத பெருமை தனக்குக் கிடைத்தது ஒரு கனவினைப் போன்றிருப்பதாகவும் கூறினார்.
தனது விடாமுயற்சியால் மிக உயர்ந்த பதவியைப்பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு தனது பணியின் மூலம் நீதிகிடைக்க வழி செய்வதிலும், அயல்நாட்டில் வாழும் மற்ற இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், பெண்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட விரும்பும் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி அவர்களை மேலும் வெற்றிகள் பல அடைய வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
குறிப்பு:
தகவல்களும் படங்களும் பல இணையதளங்கள் வழங்கிய பதிவுகளின் தொகுப்பு. தகவல்களும் படங்களும் தந்துதவிய தளங்களுக்கு நன்றி.
ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்த பதின்ம வயது தமிழ்ப்பெண்; அவரது நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் (Intelligence Quotient /IQ ) 225. உலக கருத்தரங்கங்களில் சிறப்புரையாற்ற தமது பத்து வயதிலேயே அழைக்கப்பட்டவர்; கூகுள், டெட் எக்ஸ் (TEDx) போன்ற உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் இளவயது சிறப்புரையாளர் இவர் என்று நீளும் சாதனைப் பட்டியலுக்கு உரியவரான பதினைந்து வயது செல்வி விசாலினியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம். விசாலினியை வல்லமைக் குழுவினருக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகரான திரு. தேவ்ராஜ் அவர்கள். அவருக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வார இறுதியில் (மே 23, 2015) தனது இனிய பதினாறு வயதில் அடியெடுத்து வைக்கும் செல்வி விசாலினிக்கு வல்லமைக் குழுவினர்களின்மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை “ஐ.ஐ.பி.இ. லக்ஷ்மி ராமன் மெட்ரிக்குலேஷன்” உயர்நிலைப்பள்ளி மாணவி விசாலினியின் பெற்றோர்கள் கல்யாண குமாரசாமி, சேது ராகமாலிகா. மின்னியலாளராகத் தொழில் புரியும் தந்தைக்கும், திருநெல்வேலியின், ‘ஆல் இந்தியா ரேடியோ’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றும் தாய்க்கும் பிறந்த ஒரேமகள். இவர் பிறந்த பொழுது பேச்சு வர தாமதமானபொழுது, வானொலியில் பேசும் தாய்க்கு பேச்சு வராத குழந்தையா என இவர் தாயிடமே வியந்து கேட்டவர்கள் உண்டு. மருத்துவர்கள் ஆலோசனையின்படி ராகமாலிகா இவருடன் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். தனது பதவி உயர்வுகளுக்கான தேர்வுகளுக்குப் படிக்கும் பொழுது, தனது மகளை தன்னுடன் இருக்கச் செய்து பாடங்களை உரக்கப் படிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். இடைவிடாத தாயின் முயற்சியினால் மகள் திடீரென ஒருநாள் பேசத் தொடங்கினார். அதுமட்டுமின்றி படிப்பில் மிகவும் சூட்டிகையாகவும் விளங்கி ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள் என இரட்டை தேர்ச்சிகள் பெற்று பிறரைவிட வேகமாக முன்னேறத் துவங்கினார்.
எட்டாம் வகுப்பு தேறிய இளவயது மாணவன் ஒருவன் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டான் என்ற செய்தியைப் படித்த பெற்றோர்கள் விசாலினியையும் அவ்வாறு சேர்க்க இயலுமா என்று தகவல் சேகரித்த பொழுது, சிஸ்கோ நிறுவனத்தின் “சி சி என் ஏ” (CCNA – Cisco Certified Network Associate)தொழில் நுட்பத் தேர்வு எழுதிய சான்றுகள் கொண்டு வருமாறு அறிவுரை கிடைத்தது. பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமான சிஸ்கோ கணினித் தேர்வினை தனது 10 வயதில் எழுதிய விசாலினி, 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இளம்வயதிலேயே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்ற உலக சாதனையைப் படைத்தார். இவருக்கும் முன்னர் பாகிஸ்தான் மாணவன் ஒருவர் தனது 12 வயதில் செய்த சாதனையை இவர் முறியடித்தார். இது போன்றே மைக்ரோசாஃப்ட்டின் “எம் சி பி” (Microsoft Certified Professional – MCP) தேர்விலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். இவரது சாதனை கின்னஸ்ஸின் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு, ‘சாதனையாளருக்குக் குறைந்தது வயது 14 இருக்க வேண்டும்’ என்ற விதிகளின் படி, விசாலினி தனது 14 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
விசாலினி சிஸ்கோ தேர்வு சாதனைக்குப் பிறகு தினமலர் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் காணொளியை இங்கு காணலாம் (Dinamalar Interview about cisco examination – https://www.youtube.com/watch?v=jtsAwzNHF5c). விசாலினிக்கு எதையும் புரிந்து கொள்ளும் அறிவுத்திறனும், கற்றதை மறக்காத நினைவுத் திறனும் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம் என இவரது தாய் கூறியுள்ளார். தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வையும் பதினொரு வயதில் தேர்ச்சி பெற்று அதிலும் உலக சாதனையைப் படைத்தார். இதிலும் மற்றொரு பாகிஸ்தான் மாணவியின் சாதனையை முறியடித்தார். மேலும் நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் – கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்விலும் 1,000 க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனைகளுக்குப் பிறகு இவருக்கு நுண்ணறிவுத் திறன் சோதனை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மதுரை மனோவியல் மருத்துவர் நம்மாழ்வார், “பென்னட் காமத்’ என்ற அறிவியல் முறையிலான சோதனையைச் செய்தார். அச்சோதனையில் விசாலினி 11 வயதிலேயே 225 புள்ளிகள் பெற்றார். புனேயில் உள்ள மற்றொரு நிறுவனம் செய்த சோதனையின் மூலமும் இவரது நுண்ணறிவுத்திறன் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலோரின் நுண்ணறிவுத் திறன் 90 முதல் 110 புள்ளிகளுக்குள் இருக்கும். இவரது நுண்ணறிவுத் திறனால், ‘உலகின் இளம் அறிவாளி’ என்ற சாதனையையும் செய்தார்.
இரட்டைத் தேர்ச்சிகள் பெற்றதால் தன்னைவிட மூத்த மாணவர்களுடன் விசாலினி படிக்க நேரிட்டது. பள்ளிகள் இவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கின, ஒரு கல்வியாண்டில் மூன்று பள்ளிகள் இவரைப் புறக்கணித்து பெற்றோர்கள் இவரை, தகுந்த பள்ளியில் சேர்க்க அலையவும் நேர்ந்தது. மங்களூரிலுள்ள என் ஐ டி யும், திருவில்லிப்புத்தூர் பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேருமாறு அழைத்திருந்தும் விசாலியின் பெற்றோர் தற்பொழுது இவரை கல்லூரிக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு கல்லூரி வயதை எட்டியவுடன் அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள்.
டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பெரியோர்களாலும் அறிஞர்களாலும் பாராட்டப் பட்டவர் விசாலினி. சில பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்தும் வாய்ப்பும், பல்கலைக் கழக கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராக உரையாற்றவும் இவர் தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார். இந்த மாதம் (மே 2015) டெல்லியில் கூகுள் நிறுவனம் நடத்திய இந்தியக் கல்வி பற்றியக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றவும், கர்நாடகா மாநிலத்தில் நடந்த கணினி தொலைத்தொடர்பு உலகக் கருத்தரங்கில் தலைமை விருந்தினராக தலைமையுரை ஆற்றவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததை, இவரே வடிவமைத்த இவரது இணையதளச் செய்தி (http://www.kvisalini.com/) அறிவிக்கிறது.
உலக சாதனைகள் …
1. The Highest IQ in the World: 225
2. The Youngest CCNA World Record Holder (Cisco Certified Network Associate): 90%
3. The Youngest IELTS World Record Holder (International English Language Testing System): Band 6
4. The Youngest Exin Cloud Computing World Record Holder: 100%
5. The Youngest CCSA World Record Holder (Checkpoint Certified Security Administrator): 71%
இந்த உலக சாதனைகள் வரிசையில் மேலும் பல சாதனைகளை இணைக்கவும், எதிர்காலத்தில் இவர் விரும்புவது போல கணினி நிறுவனம் ஒன்றைத் துவக்கவும், வாழ்க்கையில் மேலும் வெற்றிகள் பல பெறவும் வல்லமைக் குழுவினர் இவரை வாழ்த்தி விசாலினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
விசாலினி குறித்த தகவல்கள் பெற்ற தளங்கள்:
http://www.theweekendleader.com/Success/822/beyond-her-years.html
தொடர்பு கொள்ள:
விசாலினியின் மின்னஞ்சல் முகவரி: goldengir...@gmail.com
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=57615
டிசம்பர் 1, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்
இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.
புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்தித்தாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று துயர் களையும் நடவடிக்கையையும் எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் உதவிக்காகப் பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.
பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.
இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன். இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.
தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.
தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்
அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
வல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒரு வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர், விளையாட்டு வீரராகவோ, இலக்கியவாதியாகவோ, அரசியல்வாதியாகவோ, குடும்பத் தலைவியாகவோ, குழந்தையாகவோ கூட இருக்கலாம். உலகின் எந்தப் பகுதியை, எந்த மொழியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர், அந்த ஒரு வாரத்தில் உடல் அளவிலோ, மன அளவிலோ, தனியாகவோ, கூட்டாகவோ… ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைத் தலைசிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.
இதற்கான பரிந்துரைகளை வல்லமை அன்பர்களிடமிருந்து வரவேற்கின்றோம். வல்லமை குழுமத்திலோ (http://groups.google.com/group/vallamai), மின்னிதழிலோ (http://www.vallamai.com), மின்னஞ்சலிலோ (vallama...@gmail.com) இத்தகைய வல்லமையாளரைப் பரிந்துரைக்கலாம்.
வல்லமை ஆலோசகர்களுள் ஒருவரான விசாகப்பட்டினம் திவாகர் அவர்கள், வாரந்தோறும் இந்த வல்லமை விருதுக்கு உரியவரை அறிவிப்பார். அவர், திங்கள் முதல் ஞாயிறு வரை வரும் அனைத்துப் பரிந்துரைகளையும் பரிசீலிப்பார். தாமே சொந்தமாகவும் தேடி அலசுவார். தேவைப்பட்டால், வல்லமைக் குழுவினருடன் கலந்தாலோசிப்பார். இவற்றின் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, திங்களன்று அறிவிப்பார். அதற்கான காரணங்களையும் விளக்குவார். தவிர்க்க முடியாத பணிகள் இருப்பின், இந்தப் பணியை ஏதேனும் ஒரு வாரத்தில் யாரேனும் ஒருவரிடம் அவர் ஒப்படைக்கலாம்.
இந்த வல்லமை விருது, இணையத்தின் வழியே வழங்கப்படும் கௌரவ விருதாகும். இத்துடன் பரிசு எதுவும் இருக்காது. இத்தகைய வல்லமையாளர் ஒருவரைப் பாராட்டுவதன் மூலம், பலரின் ஆற்றலையும் வளர்ப்பதே நம் நோக்கம். ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்ற பாரதி, இந்த விருதாளர்களைக் கண்டு மனம் மகிழட்டும்.
இந்த வாரத்திலிருந்து இந்த விருதுகளை வழங்கலாம். ஏப்ரல் 23 முதல் 29 வரையான காலக்கட்டத்தில் தலைசிறந்த முறையில் வல்லமை காட்டியவர்கள் யார் யார்? உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம்.
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.
நல்லதொரு கோணம் வேந்தே...கீழுள்ளது வல்லமை வரையறுத்த கொள்கை
மக்களை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் மதுவை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து போராடிவருபவர் சமூகப் போராளி, மதுரை சட்டக் கல்லூரிமாணவி நந்தினி ஆனந்தன் அவர்கள். தனது தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக… தமிழக அரசு “டாஸ்மாக்” மதுக்கடைகள் வழியாக மதுவிற்பனையில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் நோக்கில் இவர் போராட்டங்கள் நடத்தி வருவது தமிழகம் அறிந்த நிகழ்வுகள். மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் பதவி ஏற்கும் நாளான சென்ற வாரம் மே 23 அன்று தனது போராட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகம் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட நந்தினி திட்டமிட்டிருந்தார். இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் இவரைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு நந்தினியையும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட இருந்த அவரது தந்தை ஆனந்தனையும் மதுரை மாநகரக் காவல் துறையினர் மே 22 ஆம் நாள் கைது செய்தார்கள். முதல்வரின் பதவியேற்பிற்குப் பிறகு காவல்துறையினர் இவர்களை விடுதலை செய்துள்ளனர். நாளிதழ்கள் அறிவித்த இச்செய்தியை நந்தினியும் தனது ஃபேஸ்புக் தளத்திலும் பதிவு செய்துள்ளார். சென்றவாரக் கைது உட்பட மது ஒழிப்பு போராட்டத்திற்காக இவர் இதுநாள் வரை 27 முறைகள் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகநலனில் அக்கறை கொண்டு தளராது தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருமிகு நந்தினி ஆனந்தன் அவர்களின் முயற்சியைப் பாராட்டும் வகையில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

நந்தினியின் போராட்டங்களுக்கு உந்துதலாகவும், அவருக்கு ஆதரவாகவும் இருப்பவர் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி, தற்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவரது தந்தை. மதுரை புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இவரது தந்தை திருவாளர் ஆனந்தன் அவர்கள் தனது மகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவியான நந்தினியுடனும், தந்தை ஆனந்தனுடனும், இவரது சகோதரி நிரஞ்சனாவும் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக; மதுரை சட்டக்கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர், சேலம், ஏற்காடு, பெருந்துறை உள்ளிட்ட பல இடங்களில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதற்காகவும் நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம் , முதல்வரின் கொடநாடு ஓய்வில்லம் எனப் பிற இடங்களில் உண்ணாவிரதப்போராட்டம் இருக்க முயன்ற பொழுது முன்னெச்சரிக்கையாகவும் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கண்முன்னர் அழியும் குடும்பங்களின் துயரைப் பொறுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நூறு குழந்தைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்க முயன்றதில் துவங்கியது நந்தினியின் போராட்டம். இந்திய குற்றவியல் சட்டம் 328 பிரிவின் கீழ் அரசே மதுவிற்பது சட்டவிரோதமான செயல் என்பது நந்தினி முன்வைக்கும் வாதம்.
Central Government Act – Section 328 in The Indian Penal Code: 328. Causing hurt by means of poison, etc., with intent to commit an offense.—Whoever administers to or causes to be taken by any person any poison or any stupefying, intoxicating or unwholesome drug, or other thing with intent to cause hurt to such person, or with intent to commit or to facilitate the commission of an offense or knowing it to be likely that he will thereby cause hurt, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. [Source: http://www.indianpenalcode.in/ipc-328/]
“போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா? கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா? அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47 இன் படி மதுவிலக்கை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்” என்பது நந்தினி அரசிற்கு வைத்த கோரிக்கை.
சட்டப்படி அரசின்மீது நடவடிக்கை எடுத்தால் நீதி கிடைக்க ஆண்டுகள் பல ஆகலாம் என்ற நாட்டின் நடைமுறை நிலமையாலும், பள்ளி மாணவர்களும் தற்காலத்தில் குடிக்கு அடிமையாவதும், குடிப்பழக்கம் உள்ள குடும்பங்களில் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையும் இவரை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றின் வழியாக நீதி கேட்கும் முறையைத் தேர்ந்தெடுக்கச் செய்துள்ளது. இவரது போராட்டங்களுக்கு இவரது கல்லூரி நண்பர்களும், மாணவர் சமுதாயமும், அரசியல்வாதிகள் சிலரும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
சென்ற வெள்ளியன்று நந்தினியின் கருப்புக்கொடி போராட்டத்தை முறியடிக்கும் விதமாகக் காவல்துறையினர் இவரைக் கைது செய்து, பின்னர் மறுநாள் விடுதலை செய்த பிறகு நந்தினி தனது ஃபேஸ்புக் சமூகவலைத்தளத்தின் மூலம் கீழ் காணும் செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.
“ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அவர்களே,
“ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்”- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும்தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது. மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது..அநீதிக்கு எதிரான போர்க்குரல் இம்மண்ணிலிருந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். யாராலும் இதனைத் தடுக்க முடியாது.ஆ.நந்தினி சட்டக்கல்லூரி மாணவி,மதுரை.”
சமூக நலன் கருதி அயராது போராடும் நந்தினியின் முயற்சியைப் பாராட்டி அவரது மதுஒழிப்புப் போராட்டத்தில் வெற்றிபெற வல்லமைக் குழுவினர்களின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
நன்றி: செய்திகள் படங்கள் இணையத்தளங்களின் உதவியால் கிடைத்தவை
நந்தினையத் தொடர்பு கொள்ள:
https://www.facebook.com/nandhini.anandhan.35?
தொலைபேசி தொடர்புக்கு: 97507 24220
நன்றி: வல்லமை - http://www.vallamai.com/?p=57891
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்
2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்
3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்
4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்
5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்
6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்
ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.
இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …
செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி
அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.
ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”
வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallama...@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் -http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
http://www.varalaaru.com
https://www.facebook.com/varalaarumagazine
varalaar...@gmail.com
நன்றி:
படங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
கல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்
நன்றி வல்லமை : http://www.vallamai.com/?p=58148
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ