காரைக்குடி - சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிகுட்பட்ட அண்ணாமலையார் நகர் மற்றும் பாரி நகரில் சில உரிமையாளர்கள் சாலையின் பொதுப் பயன்பாட்டு பாதையை அடைத்து கட்டுமானப் பொருட்களை குவிப்பது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிமெண்டு, மணல், கற்கள் போன்ற பொருட்கள் சாலையின் நடுப்பகுதியில் சேமிக்கப்படுவதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் (ஆம்புலன்ஸ், தீயணைப்பு) செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
சில இடங்களில் பாதசாரிகள் நடக்க கூட இடமின்றி சாலையோர பள்ளத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் அளித்தும் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சாலையை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் நேரத்தில் இதுபோன்று சாலையில் கட்டுமான பொருள்கள் போட்டு அடைக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார் .
இதுகுறித்து அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறும் கட்டிட உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் விடுவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.