மருத நிலத்தார் உணவு
சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின்,
சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல்
வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள்
கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும்
கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.
அடி:216-217.
ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும்
கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195). தொண்டை நாட்டு
மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்; அவலை
இடித்து உண்டனர். (பெ.ஆ.படை அடி:223-226). தொண்டை நாட்டு மருத நிலத்தார்
நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். (பெ.ஆ.படை அடி:254-56).
தொண்டைநாட்டுத் தோப்புக் குடில்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு,
வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர். (அடி:356-66).
முனைவர் மா.இராசமாணிக்கனார்
படம் நன்றி: த.இ.க.கழகம்