என் குழந்தை என்னைப்போல
அவளுக்கு வயதோ மூன்று தான் - ஆனால்
அவளுக்கு என் மாமியார் பரவாயில்லை!
அவள் சாப்பிடுவதற்காகவே
பூனைக்கும் காகத்திற்கும்
விருந்தே படைக்கிறேன் தினம் தினம்!
இந்தா அம்மா...
எனக்கு ஊட்டி விடுகிறாள் பிஞ்சு கையால்
நான் சாப்பிடுகிறானா இல்லை அவளா?
எனக்கே சந்தேகம்!
அம்மாக்கு போதும். பாப்பா சாப்பிடு... நான் சொல்ல
பாப்பா போதும்... ம்மா சாப்டு... அவள் சொல்வாள்!
அம்மா சாப்பிடுறேன் பாரு...
ஒரு உருண்டை வாயில் வைத்தேன்... ஆ.. ஆ. ஆங்...
அடுத்த உருண்டை அவள் கையால் வருகிறது
அம்மா ஆ காட்டு ஆ... ஆ...
அம்மா மட்டும் தான் சாப்பிடணும்...
கை விரல்களுக்கு மருதாணி வைத்தேன்
இரு கையை திருப்பி திருப்பி காட்டி கேட்கிறாள், எனக்கு?
இரு உள்ளங்கையிலும் வைத்து கொடுத்தேன்
இரவு முடிந்து காலை எங்கள்
இருவர் முகமும் சிவப்பு!
கால் நகத்திற்கு நகச்சாந்து வைத்தேன்
கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்
வேறு வேலை முடித்து வந்து பார்க்கிறேன்
அவளும் நகச்சாந்து வைத்திருக்கிறாள் - இல்லை
காலெல்லாம் சிவப்பாய் கோலம் போட்டிருக்கிறாள்!
அவளுக்கு இளம் சுடுநீரில் குளிக்க பிடிக்கும்
இங்கே.. இங்கே...
அவள் சொல்லுமிடமெல்லாம்
நான் தேய்த்து கொடுக்க வேண்டும்
அவளை தினமும் குளிப்பாட்ட வேண்டும் - இல்லை இல்லை
அவள் தான் என்னையும் குளிக்க வைத்து விடுவாள்!
வாவாவோ ஆராரோ கண்ணே உறங்கு உறங்கு
ஊஞ்சலில் கிடத்தி தாலாட்டு பாடினேன்
வாவோ ஆரோ உறங்கு.. ங்கு...
அவளும் மழலை குரலில் பாடுகிறாள்
எனக்கு தூக்கம் வந்துவிடும்!
வா என்னுடன் படுக்கலாம்.
எடுத்து வந்து கட்டிலில் நாங்கள் படுப்போம்
அவள் கதை சொல்வாள்.
நான் கண் விழித்து கேட்டாக வேண்டும்!
அம்மா.. எப்படிமா இருக்கே? என்
அம்மாவுடன் அலைபேசியில் நான் பேச...
அம்மா நல்லாக்கா... அப்பா நல்லாக்கா
பாப்பா நல்லாக்கா... பாப்பா சாப்டா...
அவள் தான் பதில் சொல்வாள்
கேள்வி கேட்கும் முன்னே....
என் அம்மாவிடம் இவளைப்பற்றி சொல்வேன்
"நீயும் சின்னதில இதே போல தான்"
ஒரே வரியில் பதில் சொல்வாள் என் அம்மா
என் குழந்தை என்னைப்போல!
(தாயும் குழந்தையுமாக ஒரு கற்பனை கவிதை)
வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/42042
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)