தமிழகத்தில் உள்ள சிறுசிறு குன்றுகளில் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. கற்படுக்கைகளில் உள்ள கல்வெட்டுகளில் “ஈந்தான் பள்ளி, கொடுப்பித்தான் பள்ளி” என்று யார் அந்தக் கற்படுக்கையைக் கொடுத்தார் என்ற வாசகங்களே இடம் பெற்றுள்ளன. கல்வெட்டுகள் எதிலும் சமணர்களுக்கு அந்தக் கற்படுக்கைகள் கொடுக்கப்பட்டதாகக் குறிப்புகள் ஏதும் உள்ளதாக அறியமுடியவில்லை. சமணர் யாரும் படுத்துக் கொண்டிருப்பது போல் சிற்பம் ஏதும் நான் பார்த்ததில்லை.
கற்படுக்கைகள் சமணர்களுடையது என்பதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? சமணத் துறவிகள் படுக்கைகளில் படுத்துத் தூங்குவர் என்பதற்காவது ஆதாரம் ஏதும் உள்ளதா? சமணத்துறவிகள் தலையணை வைத்துப் படுக்கைகளில் படுத்துத் தூங்குவர் என்பதற்காவது ஆதாங்கள் உள்ளனவா?
ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்தக் கற்படுக்கைகளைச் சமணர்படுக்கைகள் என்றே அறிஞர் பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
இது பற்றி என்னிடம் கேட்டால் ?
தமிழகத்திற்குச் சமணர்கள் வருவதற்கு முன்பே புத்தர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். புத்தரது சிலைகள் தமிழகத்தில் பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தர் படுத்திருப்பது போன்ற சிற்பங்களையும் இலங்கை மயன்மார் முதலான நாடுகளில் காணமுடிகிறது.
புத்தத் துறவிகளே படுக்கைகளில் படுக்கும் பழக்கம் உடையவர்கள், சமணத் துறவிகள் படுக்கையில் படுத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே தமிழகத்தில் உள்ள “கற்படுக்கைகள் எல்லாம் புத்த துறவிகளுடையன, சமணர்களுடையன அல்ல” என்றே நான் கருதுகிறேன்.
புத்த சமண நண்பர்களின், தொல்லியல்துறை நண்பர்களின் ஆதாரபூர்வமான கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்