உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்

4 views
Skip to first unread message

thiruvalluvan I

unread,
Jul 20, 2024, 5:41:01 PM (7 days ago) Jul 20
to thiru thoazhamai, ara...@aol.com, akaro...@gmail.com, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, casmirya...@gmail.com, ariv...@gmail.com, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, tnv...@yahoo.co.in, limra...@gmail.com, Sampath Singara, "Kumanan K.b. Kanji", madhiyazhagan subbarayan, "LION.R. MOURALY", Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, manimekal...@gmail.com, "pandian M.T", meen...@gmail.com, "Dr. Namadhu MGR", H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, ilakkiy...@gmail.com, jainol...@gmail.com, jeevak...@gmail.com, mega digital4, mohan raj, Swathi Swamy, senthilnar...@tcarts.in, chitr...@gmail.com, drseen...@gmail.com, rajan...@gmail.com

உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்

 


      ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      21 July 2024      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி)




என் சரித்திரம்

அத்தியாயம்-61

பிரசங்க சம்மானம்

காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன்.

பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா கவியினுடைய திருவாக்கால் பாடப் பெற்ற பாக்கியத்தை அடைந்தேன். நான் எங்கே! அவர்கள் எங்கே! முன்பு தெரியாதவர்களாக இருந்தும் என்னை ஒரு பொருளாக எண்ணி இதை எழுதியிருக்கிறார்களே! அம் மகானை நேரில் தரிசித்து மகிழ்வுறும் சமயமும் கிடைக்குமா?” என்று கூறிப் பாராட்டினார்.

கிருட்டிணசாமி ரெட்டியார் அன்பு

அதுதான் சமயமென்று எண்ணிய நான், “அவர்கள் என்னை விரைவில் வந்துவிடும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எழுதிய கடிதத்திலும் அதைத்தான் வற்புறுத்தியிருக்கிறார்கள்” என்றேன். பிள்ளையவர்கள் தம்மேல்ஒரு பாடல் எழுதியிருப்பதையும் தமக்குக் கடிதம் எழுதியிருப்பதையும் எண்ணி எண்ணி விம்மிதம் அடைவதிலேயே அவர் கவனம் சென்றது; அக்கடிதம் எதன் பொருட்டு எழுதப் பெற்றதென்பதை அவர் யோசிக்கவில்லை. நான் எடுத்துச் சொன்னபோது ரெட்டியார் தருமசங்கடத்தில் அகப்பட்டார்.

“நீங்கள் அவசியம் அங்கே போகவேண்டுமா? இங்கேயே இருந்து இராமாயணம், பாகவதம் முதலியவற்றையும் பிரசங்கம் செய்துவந்தால் எங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்வோமே. ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பிள்ளையவர்களிடம் அடிக்கடி போய்ச் சில நாட்கள் இருந்து வரலாம். நாங்களும் வந்து அவர்களைக் கண்டு கேட்டுக் கொள்கிறோம். அவர்களையே இங்கே அழைத்து வந்து சில காலம் இருக்கச் சொல்லி உபசாரங்கள் செய்து அனுப்ப எண்ணியிருக்கிறோம். நீங்களோ இனிமேற் கிரமமாக இல்லறத்தை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் எல்லாவிதமான சௌகரியங்களையும் அடையலாம். உங்கள் தகப்பனாருக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும். இது நான் மாத்திரம் சொல்லுவதன்று. பிரசங்கம் கேட்க வருபவர்கள் எல்லாருக்கும் உங்களை இங்கே இருக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்து இருக்கிறது. அடுத்தபடி என்ன படிக்கப் போகிறாரென்று எல்லாரும் என்னை ஆவலாகக் கேட்கிறார்கள்” என்று அவர் ஒரு சிறு பிரசங்கம் செய்தார்.

“நம்முடைய தந்தையார் எதை விரும்புகிறாரோ அதற்கு அனுகுணமாக அல்லவோ இருக்கிறது இந்தப் பேச்சு? இவர்களுடைய அன்பு நமக்கு ஒரு தடையாக நிற்கிறதே!” என்று எண்ணிச் சிறிது தடுமாறினேன். பிறகு, “உங்களுடைய அன்பை நான் மறக்க மாட்டேன். இன்னும் சில காலம் பிள்ளையவர்களிடம் போய் இருந்து பாடம் கேட்டுப் பின்பு இங்கேயே வந்துவிடுகிறேன். நான் இன்னும் பால்யன்தானே? நான் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை இப்போது கற்றுக்கொள்ளாவிட்டால் பிறகு வருந்தும்படி நேரும். பிள்ளையவர்களுடைய பெருமை உங்களுக்குத் தெரியாததன்று. அவர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்போது அதை இடையே நழுவவிடுவது தருமமா? என்னுடைய நன்மையை விரும்புபவர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். உங்களுடைய விருப்பத்தை நான் புறக்கணிப்பதாக எண்ணக் கூடாது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் எப்படியும் கிடைக்கும், ஆனால் என் விருப்பம் நிறைவேறுவதற்கு இதுதான் சமயம்” என்று அவரிடம் சொன்னேன்.

ரெட்டியாருக்கு விடை சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. “அப்பால் உங்கள் இஷ்டம். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டார்.

புராணப் பூர்த்தி

திருவிளையாடற் புராணம் பூர்த்திசெய்யும் பொருட்டு ஒரு நல்லநாள் குறிப்பிடப்பட்டது. அப்புராணத்தில் இறுதிப் படலமாகிய அருச்சனைப் படலத்தில் ஒரு பகுதி முன்பே நடைபெற்றது. பிற்பகுதியைச் சொல்லிப் பிரசங்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பிட்ட தினத்தில் ஊர் முழுவதும் பெருங்கூட்டமாக இருந்தது. பிரசங்கம் செய்து வந்த பிள்ளையார்கோவிலுக்கு முன் இருந்த பந்தலைப் பிரித்து ஒரு பெரிய பந்தல் போட்டார்கள். வாழை, கமுகு, கூந்தற் பனை, இளநீர்க்குலை, மாவிலைத் தோரணங்கள், தேர்ச் சீலைகள் முதலியவற்றைக் கட்டிப் பந்தலை அலங்கரித்தார்கள். ஒரு பெரிய திருவிழாநாளைப் போல எல்லாரும் உற்சாகத்தோடு இருந்தார்கள். மாலையில் முன்நேரத்திலே பிரசங்கம் தொடங்கப் பெற்றது. இப்புராணத்தைக் கேட்டுவந்த வசிட்டர் முதலிய இரிடிகள் பலர் பல சிவத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு மதுரையை அடைந்து சிரீ சோமசுந்தரக் கடவுளை வழிபட்டுப் பூசித்தனரென்ற செய்தி அருச்சனைப் படலத்தில் உள்ளது. அம்முனிவர்கள் பூசை செய்த பிறகு சொக்கநாதப் பெருமானைத் துதிப்பதாக அப்படலத்தின் இறுதியில் ஒருபகுதி இருக்கிறது. அப்பகுதியில் அக்கடவுளின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் முக்கியமானவை ஓசைச் சிறப்புடைய செய்யுட்களில் தொகுத்துச் சொல்லப் பெற்றிருக்கின்றன.

பழியொடு பாச மாறுகெட வாச வன்செய்பணி

     கொண்ட வண்டசரணம்

வழிபடு தொண்டர் கொண்டநிலை கண்டு வெள்ளிமணி

     மன்று ளாடிசரணம்

செழியன்பி ளிந்தி டாதபடி மாறி யாடல்தெளி

     வித்த சோதிசரணம்

எழுகடல் கூவி மாமியுடன் மாம னாடவிசை

     வித்ச வாதிசரணம்”

என்பது அப் பகுதியில் முதற் பாட்டு. இவ்வாறு ஆறுபாடல்கள் வருகின்றன. அச்செய்யுட்களை வெவ்வேறு இராகத்திற் பாடிப் பொருள் சொல்லும்போது முன்பு விரிவாகச் சொன்ன திருவிளையாடல்களின் ஞாபகத்தினாலும் பாடல்களின் இன்னோசையாலும் யாவரும் மனங்கசிந்து உருகினர்.

பிரத்தியட்ச அகத்தியர்

இவ்வாறு முனிவர் துதிசெய்யச் சோமசுந்தரக் கடவுள் பிரசன்னமாகி அவர்களை நோக்கி, “உங்களுடைய தோத்திரம் நமக்கு ஆனந்தத்தை அளித்தது” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த விஷயத்தைக் கூறும் பாடல் வருமாறு:

எனத்துதித்த வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை

     எறிதே னீப

வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய்

     வந்து நோக்கிச்

சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர் செய்த பூசைதுதி

     தெய்வத் தானம்

அனைத்தினுக்கு மனைத்துயர்க்கு நிறைந்துநமக் கானந்தம்

     ஆயிற் றன்றே.”

[குறுமுனி—அகத்திய முனிவர். நீபவனம்—கடம்ப வனம்; மதுரைக்கு ஒரு பெயர். மூர்த்தியாய்—திருவுருவமுடையவராகி. தெய்வத்தானம்—க்ஷேத்திரங்கள்.]

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா


Reply all
Reply to author
Forward
0 new messages