2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் சிறார் இலக்கியப் பரிசு(பால சாகித்திய புரசுகார்) விருது பெற குறும்பாக் கவிஞர் மு.முருகேசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேசு இப்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இவர் 10 புதுக்கவிதை, 9 குறும்பாக்(ஐக்கூ) கவிதை நூல், 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் முதலான 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 குறும்பா(ஐக்கூ)க் கவிதை நூல், 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேசு, தமிழில் குறும்பா/ஐக்கூ கவிதைகளை ஓர் இயக்கம் போல் பரவலாகக் கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
மு.முருகேசு எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான சிறார் இலக்கிய/பால சாகித்திய புரசுகார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.
இவ் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேசு கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் புதிய உத்துவேகத்தைத் தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிகளுக்கு அளிக்கிறேன்” என்றார்.
மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில் சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ) சட்ட விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றிக் கலந்து கொண்டு சிரீகிருட்டிணா அரங்கில் இருக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்
முப்பெரு விழா
திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துறையில் 16-12-2021 அன்று 'முப்பெரும் விழா' நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன் எழுதிய "இலைகளின் மௌனம் கவிதைகளாய். . . . . . ." நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, நுண்திறன் மேம்பாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு ஆகிய நிகழ்வுகள் இனிதே நடைபெற்றன.
கல்லூரியின் செயலர் - தாளாளர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன், முதல்வர் முனைவர். சை.இசுமாயில் முகைதீன், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர். ஐ.அரங்கநாதன், தமிழ்ச்சங்க அமைச்சர் திரு.பெ.உதயகுமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். கவிஞர் நி.அமிருதீன் எழுதிய 'இலைகளின் மௌனம் கவிதைகளாய்' கவிதை நூலை வெளியிட்டு, கல்லூரிச் செயலர் முனைவர் அ.கா.காசா நசீமுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் திரு. து.பிரபாகரன் அவர்கள் நூலை அறிமுகம் செய்தார். சமகாலப் பாதிப்புகளும் சமூக பிரக்ஞைகளும் தன்னைக் கவிதை எழுதத் தூண்டின என ஏற்புரையில் நூலாசிரியர் நி.அமிருதீன் குறிப்பிட்டார். தமிழ்த்திரைப்பட வசனங்கள் தொடர்பாடல் திறன்களை வளர்க்க எங்ஙனம் உதவுகின்றன என்பதை உரிய சான்றுகளுடன் நகைச்சுவை ததும்ப ஆளுமைப் பயிற்சியாளர் திரு வெ.தேவராசு சிறப்புரை யாற்றினார்.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் -மாணவர்களின் துறை சார்ந்த கல்வியியற் செயற்பாடுகளுக்குக் கல்லூரி நிருவாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என முதல்வர் முனைவர் சை. இசுமாயில் முகைதீன் தலைமையுரையில் குறிப்பிட்டார். கல்லூரி நிருவாகக் குழுப் பொருளாளர் ஆசி எம்.சே. சமால் முகமது. துணைச் செயலாளர் முனைவர் க. அபுதுல் சமது, மதிப்பில் இயக்குநர் - உறுப்பினர் முனைவர் கா.ந. அபுதுல் காதர் நிகால் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் அ. முகமது இபுராகீம், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம். முகமது சிகாபுதீன், விடுதி நிருவாக இயக்குநர்கள் முனைவர் கா.ந. முகமது பாசில், செல்வி ச. ஆசிரா பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் கலைப்புல முதன்மையர் முனைவர் அ சையத்து சாகீர் அசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் திரு.க. இமதாதுல்லா நன்றியுரை நவின்றார். நிகழ்ச்சியில் சங்கமம் ஆசிரியர் கருத்தரங்கம், மாணவர் படைப்பரங்கம் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்கள்,ஒருங்கிணைப்பாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பிறதுறைப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.