மயூரநாதனின் மிக அருமையான பகிர்வு.
---------- Forwarded message ----------
From:
Mayooranathan Ratnavelupillai <rmayoor...@gmail.com>
Date: 2009/10/24
Subject: [தமிழ் மன்றம்] Re: Fwd: தமிழர் பண்பாடு
To:
tamil...@googlegroups.com
பண்பாடு என்பது, ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைவாக அமைந்துள்ள அறிவுத்திரள், நம்பிக்கைகள் போன்றவற்றின் ஒரு தொகுப்பு என்றும், இதன் உள்ளடக்கம் தனி மனிதன் அல்லது ஒரு குழு உலகத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பதில் தங்கியுள்ளது என்றும், அது நோக்கம் விழுமியங்கள், செயற்பாடுகள், கலை வடிவங்கள், மொழி போன்றவற்றினூடாக வெளிப்படுகின்றன என்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மனிதர்கள் குழுவாக இயங்கும்போது அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒரே விதமான பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றனர். எனவே தமிழர் பண்பாடு என்று கூறும்போது அது தங்களுக்குள் பொதுவாக ஏற்றுக்கொள்ளுகின்ற பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படும் முன் சொன்ன பல்வேறு அம்சங்களையும் குறிக்கின்றது எனலாம்.
பண்பாடு மனிதர்களினால் கற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருப்பதனால் சூழ்நிலைகளைப் பொறுத்து இது மாற்றம் அடையக்கூடியது. இதனால் ஒரு குழுவினரின் பண்பாடு என்பது என்றைக்குமே மாற்றம் அடையாமல் இருப்பதில்லை. ஆனால் மாற்றங்கள் எந்த அளவுக்கு அக்குழுவினரின் முன்னைய பண்பாட்டுக் கூறுகளோடு இசைவாக அமைகின்றன என்பது தமது சொந்தப் பண்பாடு பற்றி அவர்கள் கொண்டுள்ள மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அமைகின்றன எனலாம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுவேறான மதிப்பீடுகள் இருப்பதன் காரணமாகப் பண்பாட்டு மாற்றம் தொடர்பில் ஒரு குழுவுக்குள் எப்போதுமே போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். இப்போராட்டங்களின் போக்கே மாற்றங்களின் திசையைத் தீர்மானிக்கின்றன. மாற்றங்களில் எது சரி, எது பிழை அல்லது எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அடிப்படைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குழுவினர் ஒரு குறித்த சூழலில், குறுகிய காலத்துக்கு சில அடிப்படைகளை வரையறுத்து வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லலாம். அவற்றையும் சிலர் ஆதரித்துக்கொண்டும், சிலர் எதிர்த்துக்கொண்டும் இருப்பார்கள் இந்தப் போராட்டமே மாற்றங்களுக்கான அடிப்படை.
ஆண்கள் குடுமி வைத்துக்கொள்வது உயர் தகுதிக்கான அடையாளம் என்ற கருத்து ஒருகாலத்தில் தமிழர்களிடையே நிலவியது. இலங்கையில், ஐரோப்பியர் ஆட்சிக்காலங்களில் வரி செலுத்திக் குடுமி வைத்துக்கொண்டார்கள். இன்று ஆண்கள் குடுமி வைத்துக்கொள்வது இகழ்ச்சிக்கு உரியதாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் குடுமியை வெட்டிவிடுவது சமூகக் குற்றம். இதுபோலவே வேட்டியும் படிப்படியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வேட்டியை விடுத்து காற்சட்டை போட்டுக்கொள்வதைப் பண்பாட்டுச் சீரழிவாக இன்று எவரும் பார்ப்பது கிடையாது. சேலை ஓரளவுக்குத் தனது மதிப்பை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றாலும், சுடிதார் முதலியனவும், மேல்நாட்டுப் பாணி உடைகளும் சேலையை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விலக்கி வருகின்றன.
இதுபோலவே இன்று தமிழ் சமூகத்தைப் பொதுவாக எடுத்துக்கொண்டால் அவர்களது இசை, நடனம், கட்டிடக்கலை பிற கலைகள் என்பவற்றில் நமது மரபுவழிக் கூறுகள் அன்றாடத் தேவைகளுக்கான அடிப்படைகளாக அமைவதில்லை. தொட்டுக்கொள்வதற்கான ஊறுகாய் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மொழியும் ஏறத்தாழ இதே திசையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. மின்னஞ்சல் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ப் பிள்ளைகள் பலர் தமது பெற்றோருக்குக்கூட ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களும் அதனை ஊக்குவித்ததுடன் அதை மதிப்புக்குரியதாகவும் கருதினர். மின்னஞ்சல் உலகில் கேட்கவே வேண்டியதில்லை. ஊடகங்களில், குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழ்ச் சேவைகளிலேயே 50% அளவுக்குத் தமிழைக் கேட்பது அல்லது காண்பதே அரிது. உப்பு, மிளகாய், அரிசி போன்ற அடிப்படைச் சொற்கள் கூட "சால்ட்", "சில்லி", "ரைஸ்" போன்றவற்றுக்கு இடம் கொடுத்து விலகிக் கொண்டிருக்கின்றன. இல்லாத சொற்களுக்குப் பிற மொழிகளிலிருந்து இறக்குமதி செய்த காலம் மாறி இருக்கும் சொற்களே நாகரிகத்துக்கு ஒவ்வாது எனக்கருதி வெளியேற்றும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
ஒரு காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பரம்பரை பரம்பரையாகப் பயிலப்ப்பட்டு வந்த மக்கள் கலை "கோலம்". இன்றும் ஓரளவுக்கு இதை நடைமுறையில் வைத்திருக்கும் முயற்சிகள் இருந்தாலும், இதற்குப் பழைய உயிர்ப்புத்தன்மை கிடையாது. விரைவில் மறைந்துவிடக்கூடிய பண்பாட்டு வெளிப்பாடுகளுள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
குடும்பத்தை சமுதாயத்தின் அடிப்படை அலகாகக் கொள்வது கீழைத்தேய மரபு. தமிழர்களும் இதனைத் தமக்கே உரிய முறையில் போற்றிக் காத்து வந்தனர். இன்று இதிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதனால், நாம் நிகழும் மாற்றங்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட வேண்டும் என்று நான் கூற வருவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. மாற்றங்களின் பொறிமுறைகளைப் புரிந்து கொண்டு சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்த வகையில் நிகழும் மாற்றங்கள் பற்றிய கருத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியதும், அதன் அடிப்படையில் நமக்குச் சரி எனப்பட்ட வழியில் மாற்றங்களைச் செலுத்த உழைக்க வேண்டியதும் ஒவ்வொருவரதும் கடமை ஆகும். மாற்றங்கள் ஒரு சமுதாயத்தை மேல்நிலைக்கு உயர்த்தவும், கீழ்நிலைக்குத் தள்ளிவிடவும் கூடியது என்பதைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை அவற்றின் போக்கில் விட்டுவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.