அறம்:அறவி & மறம்:மறவி
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் - குறள்
Long delay, Negligence, Laziness, Sleep
- these four are Pleasure Boats of Loss
"பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும்." - மணக்குடவர்.
“பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால்
கடைப்பிடியின்றி நெகிழ்ந்து விடுதல். இது நிறுத்த காமவாயிற்கு ஊறு
செய்வதாகலின் விலக்கப்பட்டது. பொச்சாப்பு எனினும் மறவி எனினும்
ஒக்கும்.” - ஆராய்ச்சிக் காண்டிகையுரை.
அச்ச முடையார்க் கரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
"அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே
நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு
நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம்
உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன்
இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண்
அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும்
என்பதாயிற்று.)"
- பரிமேலழகர்
நற்றிணை 70, வெள்ளி வீதியார்,
மருதம் திணை – தலைவி சொன்னது
"எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ"
அன்பினை - அன்பினை உடையாயோ! (with love for me)
மறவியை - மறவி உடையாயோ (neglecting my suffering).
பொச்சாப்பு, இகழ்ச்சி, சோர்வு, மறப்பு/மறதி - போன்றவற்றின் முதற்பொருள்கள்
வேறு. ஆனால், அவற்றுடன் disregard, neglect, slight, disdain
போன்ற இரண்டாம்நிலைப் பொருள்களும் வரும். அப் பொருள் ஏற்கும்போது
மறவி என்னும் தமிழ்ச் சொல்லின் அர்த்தம் ஏற்பன அவை. கலத்தல்/கலப்பு என்பதற்கும், கலவி என்பதற்கும் வேறுபாடு உண்டு. அதேபால், உழத்தல் வேறு; உழவு (< உழு-)வேறு அல்லவா? மறவி என்பதும், மறப்பு (மறதி) என்பதும்
வெவ்வேறான தாதுவேர்கள் கொண்டவை. எனவே, மறவி என்று தமிழ் இலக்கியத்தில் வரும் இடத்தில் எல்லாம் மறதி என்று போட்டால்,
தமிழ்ப் பாட்டின் சுவை அழியும்.
அறம் என்ற பெயர்ச்சொல் அறு- என்ற வினையில் பிறக்கும்.
அறத்திலிருந்து தோன்றுவது அறவி ‘dharmic' (அறஆழி - அருகனின் தர்மசக்கரம்)
அறவியங்கிழவோன் aṟavi-y-aṅ-kiḻa- vōṉ, n.
< அறவி +. Buddha, as wedded to virtue; புத்தன்
அறவிய மனத்தர் அன்றி (சூளா. தூது. 91).
அதேபோல், மறம் (< மறு-) என்ற சொல்லில் பிறப்பது மறவி (= disregard,
neglect, to show disdain, to be thoughtless, ...)
மறவிய மனிதன் = negligent person.
மறத்தல் (cf. மறை-) மறப்பு/மறதி என்றாகிறது.
மறவுதல் (cf. மறம் < மறு-) மறவி என்ற சொல்லைத் தருகிறது.
எனவே, மறவியும் (neglect, disregard. disdain, to be oblivous,
to be thoughtless), மறதியும் ஒன்றல்ல.
நா. கணேசன்