ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு

2,774 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 13, 2011, 6:41:49 AM6/13/11
to
 
பனை மரம் தமிழருக்கு கற்பக விருட்சம், தமிழ்நாட்டின் தேசிய
மரம். அதில் உள்ள பால் பாகுபாடு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய்த்
தமிழர் அறிந்த அறிவியற் சேதி. ஆண் பனை ஏற்றை எனவும்,
பெண்பனை பெண்ணை எனவும் காரணப்பெயர்களாய்த்
தமிழ் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது.
பெண்ணை மரங்களில் மட்டுமே குலை இருக்கும். ஏற்றை மரத்தை விடப்
பெண்ணையின் பயன் மிகுதி.
 
தாழ்/தாள்/தால்- என்பனவும் பனையின் பெயர்கள். அதிலிருந்து
toddy, தாடங்கம் (தோடு) என்ற சொற்கள் பிறக்கின்றன என்பதை விளக்க
முயன்றுள்ளேன். மாதொருபாகன் நடராஜரின் இடக்காதில்
பெண்களின் காதணி தோடு தொங்கும். அதனைச் சோழர் சிற்பங்கள்
கொண்டு பனம்பூவின் புறவிதழ் (calyx) வளையம் தான் தோடு என்பதும்
காட்டப்பட்டுள்ளது.
 
 
நா. கணேசன்

இரவா

unread,
Jun 13, 2011, 7:54:55 AM6/13/11
to thami...@googlegroups.com
பயனுள்ள பதிவு. தொடருங்கள், நா.க

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


13 ஜூன், 2011 4:11 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

Ganesan, N.

unread,
Jun 20, 2011, 6:59:50 AM6/20/11
to தமிழாயம், panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com

On Jun 13, 6:54 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> பயனுள்ள பதிவு. தொடருங்கள், நா.க
>

நிறையத் தமிழ் இலக்கியச் செய்திகள் கொடுத்து,
பண்டை இந்திய நாகரீகத்தின் சில கூறுகளுக்கு
அதனால் வரும் வெளிச்சம் பற்றிக் குறிப்பிடுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

அன்புடன்,
நா. கணேசன்

இரவா

unread,
Jun 20, 2011, 9:13:07 PM6/20/11
to thami...@googlegroups.com

ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு



விலங்குகள், பறவைகளில் ஆண், பெண் இனங்கள் இருப்பது போலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. பப்பாளி மரமும், பனை மரமும், தாழம் புதரும் இதற்கு நல்ல உதாரணங்கள். பப்பாளி தமிழ்நாட்டுக்கு அண்மைக் காலத்தில் வந்த பயிர், எனவே பழைய இலக்கியங்களில் அதுபற்றிக் குறிப்புகள் இல்லை. ஆனால், பனை தமிழர் வாழ்வொடும் பண்டுதொட்டே நெருங்கிய உறவுடைய மரம், தமிழ்நாட்டின் தேசிய மரம். பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்படுவதால், கற்பக விருட்சம் என்பது அதன் புகழ்ப் பெயர். சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளான பலராமன் பனைமரக் கொடி கொண்டவன், கண்ணனின் அண்ணன் பலதேவன் எப்பொழுதும் பனங்-கள் கிண்ணம் கையில் பிடித்திருப்பவன். பலதேவனும், சேரரும் பனந்தார் மாலை அணிவர்.

தாழையிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு: ஆண் தாழை காய்க்கும், பூக்காது; பெண் தாழை பூக்கும், காய்க்காது. தாழ்- என்னும் வினைச்சொல்லில் பிறந்த தமிழ்ப் பெயர்கள் பனை, தென்னை, கைதை - மூன்று புல்வகைகளுக்கும் உண்டு. தாழை = தென்னை என்பதற்கு உதாரணம்: குலையிறங்கிய கோள்தாழை (புறநா. 17). தாடி (< தாழ்-) = பனை. கைதை = ஈரமான சதுப்பு நிலம், எனவே கைதை/கைதல் தாழைக்கு ஒரு ஆகுபெயர். கைதை > வடமொழியில் கேதகீ என்றாகும். ஏற்றை என்று அஃறிணை ஆண்பாலுக்குப் பேர் என்கிறது தொல்காப்பியம் (மரபியல் சூத்திரம், 50 இளம்பூரணர் உரை: ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்). எனவே ஆண் தாழையை ஏற்றைத்தாழை என்றும், பெண் தாழையைப் பெண்ணைத்தாழை என்றும் அழைக்கத் தமிழ்மரபு வழிகாட்டுகிறது எனலாம். வீழ் இல் தாழை = தெங்கு, அதில் ஆண், பெண் தனியாய் இல்லை. ஆனால், விழுதுகள் உள்ள தாழையாம் வீழ்தாழையிலே தான் ஏற்றை, பெண்ணை பகுப்புகள் பனைபோல உள்ளன.

பனைகளில் ஆணும் பெண்ணும்:

பனையின் பால்வேறுபாட்டைத் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாக அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியம் தொட்டே சான்றுகளும் வாழ்வுமுறைகளும் உள்ளன. தாலவிலாசம் என்னும் பிரபந்தமே இருக்கிறது. பனையில் ஆண் மரங்கள் பூக்குமே ஒழியக் காய்க்கா, ஆனால் பெண் பனைகளுக்குச் சிறப்பான காரணப்பெயர் பெண்ணை என்பது. பெண்கள் குழந்தை பெறுவது போல, பெண்ணை (பெண் பனைகள்) குரும்பைகளை ஈனுகின்றன. தென்னை மரங்களில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் ஒரே மரத்தில் இருக்கின்றன, ஆனால் பனையில் பாற்பகுப்பு இருப்பதால் ஆண்பனை ஆண்பூவும், பெண்பனை பெண்பூவும் பூக்கும். Coconut palms are monoecious and Palmyrah palms are dioecious.

ஆண்பனைக்குப் பெயர்கள்: பூம்பனை, காயாப்பனை (தொல். பொ. 558, உரை.), அலகுப் பனை, கதிர்ப்பனை முதலியன. “ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை எனவரும்” (தொல். மரபியல் 51, இளம்பூரணம்). ஏற்றை ( < ஏறு) = ஆண் பனை (நாலடியார்):

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.


ஏற்றைக்கும் (ஆண் பனைக்கும்) பெண்ணைக்கும் (பெண்பனை) உள்ள வித்தியாசம் தெரிவிக்கும் நாலடி வெண்பா. படு = மரத்தின் குலை (பிங்கலந்தை). படு பனை = கோள் பெண்ணை, குலை ஈனும் பனை. நடு ஊரில் மேடையில் குலை ஈன்று ஏராளமான பழங்களுடன் விளங்கும் பெண்ணை (காய்ம்பனை) மரத்துக்கு எதிராக இடு காட்டுள் விளங்கும் ஏற்றை (காயாப் பனை) பேசப்படுகிறது. நாலடி ஆசிரியர், இளம்பூரணர் போன்ற சமணாசிரியர்கள் பனையின் ஆண், பெண் வேறுபாட்டை நன்கு குறிப்பதாலே சமண வழக்கமாகிய ”தாறிடு பெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்” (தேவாரம்) என்பது பெண்ணைத் துறந்த துறவடிகள் (Jain monks) பெண்ணை மரத் தடுக்கை இருக்கை ஆக்கினர் எனலாம். மடலூர்தலுக்கும் பெண்ணை பயனாதல் ஒப்பாகும். நடராஜர் அபஸ்மாரனைக் காலிலும், மகாயான போதிசத்துவர்கள் சிவன், கணபதி, விஷ்ணு எனக் கீழேபோட்டு மிதித்தலும் போன்ற செய்கையாம். சமணத் துறவியருக்கு உடையில்லை, பெண்ணைத் தடுக்கு தான். பௌத்த பிக்குகளுக்கு உள்ள சீவர ஆடை துவர் ஊட்டப்பெறுவது. இதற்கு மருத மரங்கள் தருவனவற்றைப் பாவித்தல் பண்டை வழக்கம். தேவார வரிகள் சில பார்ப்போம்: (அ) ”செருமரு தண் துவர்த் தேரர்” - நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த பௌத்தர்களும் (ஆ) ”மருதமர் வன்மலர் துவருடையவர்களும்” - மருதப் பூவைக் காய்ச்சி அட்டித்துத் துவர் ஊட்டிய ஆடை அணிந்த புத்த பிக்ஷுகளும் (இ) ”பட்டை நற்றுவர் ஆடையினாரொடும்” -நல்ல மருதந் துவர்ப் பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும் (ஈ) ”இலை மருதே அழகாக நாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத் தின்னும் நிலையமண் தேரரை நீங்கிநின்று” (உ) ”இலை மலிதர மிகு துவர்உடையவர்களும்” - மருத இலையை அட்டி, துவர் தோய்த்த ஆடை போர்த்த புத்தர்கள். பாணன், விறலியை வாயிலாக வைத்து பரத்தையர் பலரைத் துய்க்கும் மருத நிலத் தலவர்களால் தலைவி ஊடலும், ஊடல் நிமித்தமும் பாடுவது மருதத் திணை என்பது ஈண்டு நினையத் தக்கது. பெண்ணாசை வெறுத்த சமண, பௌத்த துறவியருக்கு பெண்ணைத் தடுக்கோ, மருத மரத்தை வேவித்த ஆடையோ துணையாக விளங்குவன. இத் துறவுச் சின்னங்கள் பாரத மரபில் மிகப்பழையன. ஹிந்துசமயத் துறவிகள் உபநிஷத காலத்தில் தங்கள் சின்னமாகக் கொண்டது காவிக்கல் தோய்த்த கல்லாடை. இது, மருதத் துவராடைக்கு மாற்றாய் தேர்ந்தெடுப்பது. சிவன் ”கோத்த கல்லாடையும்”, ”கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்” (தேவாரம்). ”கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப” (முல்லைப்பாட்டு). ஆக, கல்லாடை, (மருதின்) துவராடை இரண்டும் நீண்ட காலமாய் இருந்துள்ளன.

ஆண்பனையின் பூக்களால் செய்த மாலையைச் சேரர்கள் அணிந்தனர். சிறுவர்கள் ஐம்படைத் தாலி அணிதல் ஆண்பனை ஓலையாக இருக்கலாம். திருமணத்தின் போது பெண்கள் அணியும் தாலி கணவனின் சின்னமாக அவன் உயிரோடு இருக்கும்வரை போற்றப்படுதலால் ஆண்பனை ஓலையில் செய்வதாகும். இருக்கும் மரங்கள் எத்தனையோ இருக்க தால மரத்தின் ஓலையை ஏன் பெண்ணுக்குத் தாலியாய்க் கட்டவேண்டும்? விடை: ஆண், பெண் பால் வேறுபாடு தெளிவாக உள்ளது பனையிலே தான். எனவே, ஆண் பெண் வேறுபாடு காட்டி அணிகள் உருவாக்கல் பனை மரத்தால் தமிழருக்குச் சாத்தியமானது. பெண்ணொருத்தி திருமணம் செய்ய மறுத்தால் அல்லது காலம் தாழ்த்தினால் பெண்ணை (பெண் பனை) மடல் கருக்கில் குதிரை போல் செய்து தலைவன் ஊர்தல் மடலூர்தல் வழக்கம். ஊரார் எல்லோருக்கும் தெரியவர அலர் தூற்றலாலோ, அறிவுரையாலோ தலைவி மனம்மாறி மணம் நிகழும் என்பது நம்பிக்கை. தொல்காப்பியரும், வள்ளுவரும் பெண்கள் பெண்ணை மடலூர்தல் வழக்கம் இல்லை என்று வரையறுத்துள்ளனர். இதன் காரணம் தமிழர் போற்றும் கற்புக்கோட்பாடு. வையாபுரிப்பிள்ளை அதர்வவேதத்தில் பெண்கள் மடலூர்தல் செய்தியைக் காட்டியுள்ளார், வடக்கே இலக்கியங்களில் (காதா சப்தசதீ, மகாபாரத திரௌபதி) கற்பின் மேன்மை குறைவு, எனவே வடநாட்டு இலக்கியங்களிலே பெண்கள் மடலூரலாம் என்கிறார்கள் போலும்.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி - குறுந்தொகை 182
(விழுத்தலைப் பெண்ணை - சீரான பருவப் பெண்பனை).

அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து - கலித்தொகை

தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்
பேரா யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல் (சிறிய திருமடல்)

[...] மற்றுஇவைதான்
உன்னி உலவா உலகுஅறிய ஊர்வன்நான்
முன்னி முளைத்துஎழுந்து ஓங்கி ஒளிபரந்த
மன்னிய பூம்பெண்ணை மடல் (பெரிய திருமடல்)

மங்கை ஆழ்வார் திருமடல்களில் பூம்பெண்ணை என்பதென்னை? பூம்பெண்ணை கன்னிப்பெண்ணையாம். அதாவது பருவம் அடைந்துவிட்டதைக் காட்டாநின்று பூத்துக் குலுங்கும் அழகிய பருவப் பெண்பனை பூம்பெண்ணை. ஈனாக் கிடாரியில் இருந்து கோமயம் பெறுதல்போல், கன்னிப்பெண்ணை மடலைத் தலைவன் மடன்மா செய்யச் தெரிந்தெடுக்கிறான். ”வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்” (முத்தொள்ளாயிரம்). காராணை விழுப்பரையன் வளமடல் குரும்பை அரும்பிய காதலி பொருட்டாக பெண்ணை மடல் ஊர்கிறேன் என்பதாகக் குறிக்கிறது:

வார்தோறும் பொங்கு மணிக்குரும்பை வல்லிபொருட்டு
ஊர்தோறும் நாடோறும் ஊர்கின்றேன் - சீர்தோறும்
செய்கைசூழ் சீலத் தியாகதுங்க நன்னாட்டில்
வைகைசூழ் பெண்ணை மடல்.

பெண்கள் தோடு என்னும் வட்டமான அணியைப் பூணுவர். மாதொரு பாகனான சிவபிரானின் நடராஜ மூர்த்தங்களில் தோடுடைய இடதுசெவியைக் காணமுடியும். வெண்தோடு பனம்பூவின் புறவிதழ் (Calyx)என்ற பொருளை “பெருமடற் பெண்ணைப் பிணர்த்தோட்டுப் பைங்குரும்பை” (கலித்தொகை), ‘இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி’ (பெருங்கதை) காட்டுகிறது. ”இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” (புறம்). சோழர் காலப் பார்வதி சிலையில் தோடு வளையமாக இருத்தல் காண்க. (பட உதவி: ப்லாஸ்டிக்ஸ் சந்திரா, சென்னை). ஆண் பனம்பூக்கள் பெண்ணைப் பூக்களை விடச் சிறியன. குரும்பை ஈனும் பெண்ணையின் பூந்தோடு ஆண் பனைப் பூவைத் தாங்கும் தோட்டைவிடச் சற்றுப் பெரிய வளையமாக வளரும். ”வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக் கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு” தேவாரம். பனையின் வெவ்வேறு பாகங்கள்:
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்
புல்லோடு வரும் எனச் சொல்லினர் புலவர்
- தொல்காப்பியம் மரபியல் 88.

தோடும், ஓலையும் வெவ்வேறானவை எனது தெளிவு.

தாழ்/தாள்/தாலம் என்பன பனையின் பெயர்கள்:
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826
சோழர் சோட- என்று வடமொழியில் வருதற்போல், தாழ்/தாள் தாட- என்று வட மொழிகளில் ஆகின்றன. எனவே, பனையின் வெண்டோட்டு வளையம் தாடங்கம் என்ற பெயர் பெறுகிறது. ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் சிறப்பு (சௌந்தர்ய லஹரி, தாடங்க மஹிமை). திருக்கடவூர் அபிராமியும் தாடங்கம் கொண்டு அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினதாக ஐதிஹ்யம். தாடங்கம் = (பனையின்) தாட + அங்கம் (Cf. தாடி (toddy))



பெண்ணை (< பெண்-): ஆறுகளுக்கு ஒரு காரணப்பெயர்

பெண் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை வேர் பிள- என்னும் வினைச்சொல் ஆகும். பிணா (< பிள்- ) என்றும் பெண் அழைக்கப்படுகிறாள். ”பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய” - தொல். மரபியல் 62. மலையில் இருந்து மழைநீர் நிலத்தைப் பிளந்து பள்ளம், படுகைகளை உருவாக்கி ஓடும் ஆறுகளுக்குப் பெண்ணை என்ற பெயர் ஏற்படுதல் இயற்கையே. நிலத்தைப் பிளந்து ஓடும் நதிகள் சில பெண்ணை என்றே காரணப் பெயர் பெறுகின்றன:
கரும்பெண்ணை (கண்ஹபெண்ணா, ஆந்திராவின் க்ருஷ்ணா நதி), வடபெண்ணை, தென்பெண்ணை.

கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் படிப்போம்:

(1) செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர்

செய்ய பெண் - சிவந்த லக்ஷ்மி. கரிய பெண்ணை - ஆந்திராவின் கரும்பெண்ணை
நதி, நள்ள/நல்ல (=“கரு”) மலைத்தொடரில் தோன்றும் கரும்பெண்ணை > க்ருஷ்ணவேணி > கிருஷ்ணா நதி)

(2) புன் நை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்,
வண்ண வெண் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் - கம்பர்.

பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார். பெண்ணை : நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ) கொள்ளவேண்டும். பெண்ணை என்றால் பெண் பனைக்குக் காரணப்பெயரும் உண்டு. அடுத்ததாக அதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெண்ணை (< பெண்-): பெண்பனைக்கு ஒரு காரணப்பெயர்

ஆண்பனைக்குப் பல பெயர்கள் உள்ளதை ஆராய்ந்தோம். பெண் பனைக்குப் பெண்ணை என்ற காரணப்பெயரை ஆதிகாலங்களிலேயே தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர். "பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை” [பாவாணர், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், பக். 45].

பெண்ணை < பெண் (முதன்மைப் பொருள்).பெண்பனை என்று உறுதிபட நமக்குக் காட்டுவது அதன் குலைகள். அதனால், “கோள் பெண்ணை”, “இணர்ப் பெண்ணை”, ”குலைப் பெண்ணை”, “தாறிடு பெண்ணை” என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. கோள், இணர், படு, தாறு எல்லாமே குலைதான்:
(i) செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும் - புறநானூறு.
(ii) வண்கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் - சிறுபாணாற்றுப்படை.
(iii) பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது - மணிமேகலை.
கோள் = குலை. [1] கோள் தெங்கின் (பட்டினப்பாலை) [2] பல்கோட் பலவின் (கலித்தொகை) [3] கோள்மடல் கமுகின் [பெருங்கதை]
இணர் = Bunch of fruit; குலை. இணர்ப் பெண்ணை (பட்டினப்பாலை 18) [Madras Tamil Lexicon]

பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும் சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்), பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf. மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன் மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம் கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves) என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால் பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு. அதுபோலவே, பெண்பனைகளில் நுங்கு, பனாட்டு செய்யப் பனம்பழம், ஒடியல் செய்யக் கூம்பு என்ற பயன்கள் இருப்பதால் பெண்ணை என்றே பனையைக் குறிப்பதும் உண்டு. பெண்ணை ஆண்பனையை விட 50% கள் அதிகம் தருகிறது. புறக்காழ் பெண்ணையின் வலிமை அதிகம் - எனவே ஆணை விடப் பெண்ணை மரமே கட்டிடங்களுக்குப் பயன்படும்.

பட்டினப்பாலை கொத்தும் குலையுமாக உள்ள தாவரங்களைக் கோத்துப் பாடுகிறது: தென்னைக்குள் நடும் வாழையும், பாக்கு மர நிழலில் மஞ்சள் விளைவதும், சேம்பு வயலில் இடையே நடும் இஞ்சியும், மாந்தோப்பு வரப்புகளில் பெண்ணை (பெண்பனை) ஓங்குதலுமான வேளாண்மை ஊடுபயிர்களில் விளையும் கனிகள் பேசப்படுகின்றன.

"கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து" (பட்டினப்பாலை).

”இணர்ப் பெண்ணை = குலைகளையுடைய பனையினையும்” நச்சினார்க்கினியரின் பட்டினப்பாலை உரை. பக்கம் 394, உவேசா, பத்துப்பாட்டு, 1918.

ஆங்கில மொழிபெயர்ப்பில் 'இணர்ப் பெண்ணை' என்பதற்கு
"in2am mAvin2 iNarp peNNAi" (paTTin2appAlai: 18)
->"the mango trees growing in group and the palm trees with clusters of nuGku fruits." Note that there is NO use of panambuu for consumption, that's why "iNar" is not the flower-bunch here in PaTTinappAlai. This is clear when looking at the set of other fruit-bearing trees in the neighboring lines in PaTTinappAlai.

குலையில் பனங்காய்கள் கொத்தாய் நெருங்கி இணைந்திருப்பது “இணர்”. குலை என்பது குலம் என்பதோடு உறவுடைய சொல். குலம் இருக்கு வேதத்திலேயே உள்ள தமிழ்/த்ராவிட வார்த்தை. இணர் = குலை (பட்டினப்பாலை). குலமே வழிவழியாக சிறந்திருத்தலைப் பழமொழி நானூறு பாடுகிறது. இணரோங்கி வந்தாரை (பழ. 72) = பரம்பரையாக உயர்தல்.
புகரிணர்சூழ் வட்டத்தவை - பரிபாடல் 15.61. இங்கே, இணர் - ஒழுங்கு, Order; arrangement, as of troops
”கப்பு இணர் மரத்தில் காலும் பயினதாய்” -திருவிளையாடற் புராணம். கம்புகள் (கிளைகள்) நெருங்கின மரத்தில் இணைந்த கப்புகளினின்றும் ஒழுகும் பிசின்.
இணாட்டு - நெருங்கி இணைந்தவற்றிலிருந்து உருவாபவை: 1. மீன் செதிள். 2. ஓலைத் துண்டு.

”ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வௌ்நிணக்
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்”
(சைவத் திருமுறை, அதிராவடிகள் அருளிய மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை).
சிவன் சூலத்தில் நெருங்கி இணைந்துள்ள இணராகிய குடல்.

இணர் (Cf. இணக்கல், இணை-) நெருங்கி இணைந்தது. குலை, குலம், கொத்து போன்றன மிக அடிப்படையான பொருட்கள் கொண்ட சொல் “இணர்” ஆகும். இணர்ப் பெண்னை, கோட் பெண்ணை, குலைப்பெண்ணை பருவமடைந்து காய்க்கும் பெண்பனையாம். பெண் குழந்தை ஒன்றைப் பெற்றாள் என்பது போலப், பெண்ணை (மரம்) குலையை ஈன்றது என்கிறோம்.

பெண்ணை (பெண்பனை) மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டும்:

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை (நற்றிணை 303).
தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்தொகை 374).
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே (இறை. 9)

அன்றில் என்னும் க்ரௌஞ்சம் நெய்தல்நிலப் புள் (Plegadis falcinellus). அது பெடையொடு கூடுகட்டி வாழப் பெண்ணை (பெண்பனை) மரம் அதன் விருப்பத் தேர்வு. அன்றிலின் குரல் காதலரை நைவிக்கும். "விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை", "காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்",
“பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” ”பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார்” (ஆழ்வார்கள்).

"குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ!"
(வீடடின் முன்றிலில் வளர்த்துவது பெண்ணை என்னும் பெண்பனை. காயாப்பனையாகிய ஏற்றைப்பனையால் பலனில்லை என்பது நாலடியார் வெண்பா.)

”தமிழே! ஆண்பனையைப் பெண்ணை ஆக்கினாய். அந்தப் பெண்பனையில் வாழும் அன்றிலை வேறொரு பறவை ஆக்காயோ?” என்று விரகத்தில் தவிக்கும் தலைவி கேட்பதாய்த் தமிழ் விடுதூது பாடுகிறது. சம்பந்தர் ஆண்பனையைப் பெண்ணை ஆக்கிய செய்தியைச் சொல்லிய உடனே தமிழ்விடுதூது அன்றிற் பறவையைப் பாடுவதைக் கருத்தூன்றிக் கவனிக்கவும். அன்றிலின் விருப்பம் பெண்ணை, அதில் கூடுகட்டுதலைச் சுட்டியது. ஏற்றையைப் பெண்ணை ஆக்கினதுபோல், தலைவி அகத்து முன்றிலில் பெண்ணையில் கூடுகட்டும் அன்றில்களை இன்னொரு பறவை ஆக்கினால் அன்றில்குரல் இராதே என்பது குறிப்பு. சேக்கிழார் பெரிய புராணத்தில் சம்பந்தர் தேவாரப் பதிகம் பாடி ஆண்பனையைப் பெண்ணையாக மாற்றிய செய்தியைப் புகழ்கிறார்.

விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்பதனில் விமலரருளாலே
குரும்பை ஆண்பனைஈனும் என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை யாகிடக் கண்டோ ரெல்லாம் அதிசயித்தார்.

குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே. - சம்பந்தர்

சங்க இலக்கியம் தொடங்கிக் குலை ஈனும் பெண்ணை: இலக்கியச் சான்றுகள்

செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் (புறம்)

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் (பட்டினப்பாலை)

இனமாவின் இணர்ப்பெண்ணை (பட்டினப்பாலை)

வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின் (சிறுபாண்.)

திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் (பெரும்பாண்.)

ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் (குறுந்தொகை)

பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் (கலித்.)

பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது (மணிமேகலை)

பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில் (தேவாரம்)

தாறிடு பெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் (தேவாரம்)

தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பை (தேவாரம்)

பெருங்கதை:

46. உழைச்சன விலாவணை:
ஓங்குமடற் பெண்ணைத் தீங்குலைத் தொடுத்த
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்பத்
தளையவிழ் தாமமொடு தலைபல புரளவும்

2. கடிக்கம்பலை
தெங்கின் ஊறலும் தேம்பிழித் தேறலும்
தாங்கரும் பெண்ணைப் பூங்குலை அமுதமும்

சீவக சிந்தாமணி:
2053
மடல் அணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை மான
உடல் அணி ஆவி நைய உருத்து எழு முலையினாளும்

2227
பொரும் களத்து ஆடவர் பொலிவில் பைந்தலை
அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன
கரும் கனிப் பெண்ணை அம் கானல் கால் பொற
இரும் கனி சொரிவன போன்ற என்பவே

2526
கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
இழை முலைத் தடத்தினாள் தன் கணவனைக் காண ஏகிக்

2763
சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து

முத்தொள்ளாயிரம்:
வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் - கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந்து அணிஅகலக்
கோட்டுமன் கொள்ளா முலை

Summary: Among the native trees of India, palmyrah palms are unique in the fact that there are male and female trees among them. Female cows are more useful because they yield milk and calves. Likewise, female palm trees are much stronger and yield 50% more toddy when compared with male palms. Also, of course, only the females produce fruits. All these are recorded in Tamil poems for 2 millennia: "ERRai" is one name for the male palmyrah, while "peNNai" (< "peN" female) is a very common name for the more productive female palmyrah. Additionally, English word, Toddy, and Sanskrit word, TaaDaGkam are traced to a Dravidian name for the palmyrah tree. Even in the Indus valley times, palm trees have been celebrated. Sindhu itself means date palm, and Indus seals have depictions of many species of palms ( e.g., Jaggery palm, Corypha urens). Taazhai (pandanus), palmyrah, date palm, coconut palm are "grass" plants that are soft in the center compared to outer shells (puRa-k-kAz) and it is suggested that ERRai-t-taazhai and peNnai-t-taazhai be used as names for the male and female pandanus bushes following Tamil tradition. Weaver birds build their hanging nests usually in female palms as seen in Tamil literature. Birds like Andril (Skt. Krauncha), their relationship to female palm tree (called "god-tree" in a Sangam poem) at the house front yard or at the courtyard in the village center and their crying sound during separation with their lover and how this motif is employed in Tamil akam ("interior landscape") poems is mentioned. Renunciation in Indic shramaNa religions often involve renouncing any relationship with women and this is symbolically expressed by (1) Jain monks making mats from female palm trees, and (2) Buddhist monks dyeing their monastic robes with Marutam tree flowers. Jain monks sitting on female palm mats can be compared with the riding mock-horse made of female palms by the hero in order to make his girlfriend accept him in the public. Why Marutam flowers for Buddhist monk dress? Marutam, a symbol of the Marutam landscape in Sangam literature where the main theme is rich land lords enjoying extra-marital relationships with many parattais. These flora symbolism from classical Tamil and in Indian religions shows a pointer to the important roles played by plants and animals in ancient Indian life.


நா. கணேசன்

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


வேந்தன் அரசு

unread,
Jun 20, 2011, 9:43:06 PM6/20/11
to thami...@googlegroups.com
எத்தனையோ ஓலைகள் இருந்தும் பனை ஓலையில்தான் எழுதுறாங்க அதுஏன்?


 

இரவா

unread,
Jun 20, 2011, 10:51:39 PM6/20/11
to thami...@googlegroups.com
நம்முடைய வழக்கங்கள் என்பது, நாம் தொன்றுதொட்டு பழக்கத்தில் வைத்திருக்கும் பொருள்களைச் சார்ந்தே அமையும். பனையின் விளைச்சலும் பயனும் நமக்குத் துணையாக அமைந்ததால், எழுதத்தொடங்கிய நாளில் பனை ஓலையிலேயே எழுதத் தொடங்கி, அதன் உறுதித்தன்மையைக் கருத்திற்கொண்டு தொடர்ந்திருக்கலாம்.

மேலும் பனை ஓலையையைப் போல வேறு ஓலைகள் ஏடுகள் போல இருக்கக் காணோம்.

எத்தனையோ பானைகள் இருக்க மண் பானையின் பயனுக்கு ஈடு ஏதுமுண்டோ?
அதைப் போல, பானை ஓடுகள், பாறைகள், துணி,களிமண் போன்றவற்றிலெல்லாம் எழுதினார்கள். ஆனால், பனைக்கு ஈடாக அவை அமையவில்லை.


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


21 ஜூன், 2011 7:13 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
எத்தனையோ ஓலைகள் இருந்தும் பனை ஓலையில்தான் எழுதுறாங்க அதுஏன்?


 

--

வேந்தன் அரசு

unread,
Jun 21, 2011, 7:51:33 AM6/21/11
to thami...@googlegroups.com


20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

நம்முடைய வழக்கங்கள் என்பது, நாம் தொன்றுதொட்டு பழக்கத்தில் வைத்திருக்கும் பொருள்களைச் சார்ந்தே அமையும். பனையின் விளைச்சலும் பயனும் நமக்குத் துணையாக அமைந்ததால், எழுதத்தொடங்கிய நாளில் பனை ஓலையிலேயே எழுதத் தொடங்கி, அதன் உறுதித்தன்மையைக் கருத்திற்கொண்டு தொடர்ந்திருக்கலாம்.

மேலும் பனை ஓலையையைப் போல வேறு ஓலைகள் ஏடுகள் போல இருக்கக் காணோம்.
 
 
கணேசர் ஐயா
 
ஏன் பனைஓலையை மட்டும் தாலியாக்குகிறார்கள் என வினவுகிறார்
 
எனக்கு இன்னும் பெண்ணை என்பது பெண்பால் என்ற நம்பிக்கையை அவர் கட்டுரை ஏற்படுத்தவில்லை
 
அவர் வழியில் நின்று இனி சிந்திக்கணும்
 
பனைவெல்லம் என்பதை பெண்ணை வெல்லம் என ஏன் விளிப்பது இல்லை?
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Ganesan, N.

unread,
Jun 21, 2011, 3:19:24 PM6/21/11
to தமிழாயம்

On Jun 21, 6:51 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:


>
> > நம்முடைய வழக்கங்கள் என்பது, நாம் தொன்றுதொட்டு பழக்கத்தில் வைத்திருக்கும்
> > பொருள்களைச் சார்ந்தே அமையும். பனையின் விளைச்சலும் பயனும் நமக்குத் துணையாக
> > அமைந்ததால், எழுதத்தொடங்கிய நாளில் பனை ஓலையிலேயே எழுதத் தொடங்கி, அதன்
> > உறுதித்தன்மையைக் கருத்திற்கொண்டு தொடர்ந்திருக்கலாம்.
>
> > மேலும் பனை ஓலையையைப் போல வேறு ஓலைகள் ஏடுகள் போல இருக்கக் காணோம்.
>
> கணேசர் ஐயா
>
> ஏன் பனைஓலையை மட்டும் தாலியாக்குகிறார்கள் என வினவுகிறார்
>
> எனக்கு இன்னும் பெண்ணை என்பது பெண்பால் என்ற நம்பிக்கையை அவர் கட்டுரை
> ஏற்படுத்தவில்லை
>
> அவர் வழியில் நின்று இனி சிந்திக்கணும்
>
> பனைவெல்லம் என்பதை பெண்ணை வெல்லம் என ஏன் விளிப்பது இல்லை?
>

பெண்ணை மாத்திரம் வெல்லம் தருவதில்லை.
ஆண்பனையில் இருந்தும் வெல்லம் வருகிறது.

கட்டுரையில் சொல்லவில்லையா?

நா. கணேசன்

Ganesan, N.

unread,
Jun 22, 2011, 7:46:12 AM6/22/11
to தமிழாயம்

கவிஞர் இரவா,

வேந்தனின் ஜூன் 3-ஆந்தேதி மடல்:
> On Jun 3, 7:13 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > விலங்குகளில் ஆணுக்கு பெண்ணுக்கு என
> > தனிப்பெயர்கள் உள
> > பயிர்களில் உளதாக அறியேன்.
> > நாம் வேணுமுனா தென்னை எனில் ஆண்,
> > தெங்கு எனில் பெண் என இனிமேல் வச்சுக்கலாம்

தென்னையில் ஆண், பெண் பாற்பகுப்பு இல்.

பனையிலே பெண்ணை, ஏற்றை உள.
இரண்டிலிருந்து வரும் சாற்றில் வெல்லம் செய்வதுண்டு.
ஆண், பெண் பூங்கள்ளை வெல்லம் செய்யும்போது
பகுப்பதில்லை.

நா. கணேசன்

> > வள்ளுவம் என் சமயம்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

இரவா

unread,
Jun 22, 2011, 10:18:38 AM6/22/11
to thami...@googlegroups.com
அன்பு நா.க.

தென்னையில், ஆண் பெண் போல இரண்டு பகுப்புகள் இருப்பதாகத் தென்னை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அது தென்னை மட்டையில் ஓலை அமைந்திருக்கும் அமைப்பைக் கொண்டு அறியப்படுகிறதாம்.
இரண்டு வகைத் தென்னையில் ஒரு வகை அதிக விளைச்சலைத் தருவதாகவும் மற்றொருவகை அவ்வளவாக விளைச்சலைத் தராததாகவும் இருக்கும் என்கின்றனர்.

நான் அறிந்தவரையில், அனைத்துவகைத் தாவரங்களிலும் ஆண் பெண் பாற்பகுப்பு இருக்கின்றன என்பதேயாகும்.

மூலிகைத் தாவரங்களை ஆராயும் போது, ஒரு வகைத் தாவரம்  ஒரு நோய்க்கு மருந்தாக அமைந்தாலும், ஆணுக்கு வந்த நோய்க்கு ஆண் மூலிகைத் தாவரத்திலிருந்தும் பெண்ணுக்கு வந்த நோய்க்குப் பெண் தாவரத்திலிருந்தும் மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்று முன்னோடி மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


22 ஜூன், 2011 5:16 pm அன்று, Ganesan, N. <naa.g...@gmail.com> எழுதியது:

Ganesan, N.

unread,
Jun 22, 2011, 10:32:09 AM6/22/11
to தமிழாயம்

On Jun 22, 9:18 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> அன்பு நா.க.
>
> தென்னையில், ஆண் பெண் போல இரண்டு பகுப்புகள் இருப்பதாகத் தென்னை ஆய்வாளர்கள்
> கூறியுள்ளனர்.
> அது தென்னை மட்டையில் ஓலை அமைந்திருக்கும் அமைப்பைக் கொண்டு அறியப்படுகிறதாம்.
> இரண்டு வகைத் தென்னையில் ஒரு வகை அதிக விளைச்சலைத் தருவதாகவும் மற்றொருவகை
> அவ்வளவாக விளைச்சலைத் தராததாகவும் இருக்கும் என்கின்றனர்.
>

http://answers.yahoo.com/question/index?qid=20070912151019AAyh44a

> நான் அறிந்தவரையில், அனைத்துவகைத் தாவரங்களிலும் ஆண் பெண் பாற்பகுப்பு
> இருக்கின்றன என்பதேயாகும்.
>
> மூலிகைத் தாவரங்களை ஆராயும் போது, ஒரு வகைத் தாவரம்  ஒரு நோய்க்கு மருந்தாக
> அமைந்தாலும், ஆணுக்கு வந்த நோய்க்கு ஆண் மூலிகைத் தாவரத்திலிருந்தும்
> பெண்ணுக்கு வந்த நோய்க்குப் பெண் தாவரத்திலிருந்தும் மருந்துகள் தயாரிக்க
> வேண்டும் என்று முன்னோடி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
>
>  இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்
>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>

> 22 ஜூன், 2011 5:16 pm அன்று, Ganesan, N. <naa.gane...@gmail.com> எழுதியது:

> >              விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!- Hide quoted text -

இராமகி

unread,
Jun 22, 2011, 2:09:02 AM6/22/11
to தமிழாயம்
அவர் ஏற்றைப் பனை (ஆண் பனை) என்ற ஒரு நாலடியார் பாட்டை வைத்து ஏற்றை
என்றாலே ஆண் பனை என்ற பொருளுக்கு வந்து விட்டார். அது முற்றிலும் தவறு.
ஏற்றை என்றால் ஆண் என்ற பொருள் மட்டுமே உண்டு. அது, விலங்குகளிற்
சிலவற்றிற்கும், பயிர்களிற் சிலவற்றிற்கும் உரிய முன்னொட்டுப் பெயர்.
தனித்த பொருள் ஆண் என்பதே. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்குப் பெண்பனை
என்ற பொருள் இருந்தாலும், இருபாலிற்கும் பொதுவான பெயராகவும் இந்தச் சொல்
பயன்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரையில் பல்வேறு செய்திகளைத்
தொகுத்திருக்கிறாரே ஒழிய சொல்ல வந்த கருத்தை ஏரணத்தோடு தருக்கவில்லை.

அன்புடன்,
இராம.கி.

On Jun 21, 4:51 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:

iraamaki

unread,
Jun 23, 2011, 4:45:58 AM6/23/11
to தமிழாயம்
ஏற்றை என்ற சொல்லிற்கு தனித்து ஆண்பனை என்ற பொருளில்லை. ஏற்றைப் பனை என்ற
கூட்டுச் சொல்லிற்குத் தான் அந்தப் பொருள் உண்டு. ஏற்றை என்ற சொல்லிற்கு
ஆண் என்ற பொருள் மட்டும் தான் உண்டு. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்கு
பெண்பனை என்பதோடு, பனை என்ற பொதுப்பொருளும் உண்டு. சரியான ஆதாரம் இல்லாது
பல்வேறு குழுமங்களிலும், தன் வலைப்பதிவிலும் கணேசன் எழுதிக் கொண்டு
போகிறார். பெண்ணை என்ற சொல் இரண்டிற்கும் மேற்பட்ட வகையில் எழுந்தது.
வெறுமே பெண்மைத் தன்மையைப் பிடித்துக் கொண்டு நீட்டிப் பார்ப்பது
சரியாகாது. பனையின் பல்வேறு புதலியற் (botany) குணங்களைப் பார்த்து பனஞ்
சொற்களின் பெயற்காரணங்களைக் குறிக்கவேண்டும். நூ.த.லோ.சு பனை என்ற
பொதுமையைக் காட்டியது சிறப்பாக இருந்தது.

அன்புடன்,
இராம.கி.

On Jun 21, 4:51 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:

Ganesan, N.

unread,
Jun 23, 2011, 7:24:03 AM6/23/11
to தமிழாயம்

On Jun 22, 1:09 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:

> தனித்த பொருள் ஆண் என்பதே. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்குப் பெண்பனை
> என்ற பொருள் இருந்தாலும், இருபாலிற்கும் பொதுவான பெயராகவும் இந்தச் சொல்
> பயன்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரையில் பல்வேறு செய்திகளைத்
> தொகுத்திருக்கிறாரே ஒழிய சொல்ல வந்த கருத்தை ஏரணத்தோடு தருக்கவில்லை.
>

ஆ, பெற்றம், கறவை, சுரப்பி என்றாலும் பெண் பசுதான்.
பலன் மிகுதி காரணமாக, இச் சொற்கள் (ஆ, ... ) பொதுவாகப்
பசுக்களைக் குறிக்கின்றன. அதேபோல், பெண்ணை என்னும்
பெண்பனை இருபால்களுக்கும் பொதுவாக சில சமயம் சொல்லலாம்.

இதனை என் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.

பாவாணர் அதனால்தான் குறிப்பிடுகிறார்:


"பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை”

ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே. பனை பெண்ணை
தான் குலைதரும். தென்னையில் ஆண், பெண் இல்லை, (தென்னை - எல்லா மரமும்
காய்ப்பன.)


நா. கணேசன்

Ganesan, N.

unread,
Jun 23, 2011, 7:32:38 AM6/23/11
to தமிழாயம்

> > பனைவெல்லம் என்பதை பெண்ணை வெல்லம் என ஏன் விளிப்பது இல்லை?
>
> > --
> > வேந்தன் அரசு
> > வள்ளுவம் என் சமயம்

ஏற்றை-வெல்லம் செய்யலாம் என்கிறார் பனைவாரியத் தலைவர்
குமரி அனத்தன். பெண்ணையை நுங்குக்குப் பயன்படுத்தலாம்
என்கிறார்.

”தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை
அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண்
பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால்,
பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது,
பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது.” - குமரி அனந்தன்.

நா. கணேசன்

http://yousufansari.blogspot.com/2010/12/blog-post_4330.html

வீணாகும் பனைமரங்கள்!

குமரி அனந்தன்First Published : 21 Dec 2010 01:58:08 AM IST

இந்தியாவில் 8 கோடி பனைமரங்கள் நிற்கின்றன என்றும், அவற்றுள்
தமிழ்நாட்டில் 5 கோடி இருப்பதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு
புள்ளிவிவரம் சொல்லிற்று. இப்போது நிச்சயமாக அவ்வளவு மரங்கள் இருக்கும்
என்று கூற முடியாது. ஆனால், இருப்பவைகளையாவது முறையாகப் பயன்படுத்த
வேண்டாமா? பனைமரத்தைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். இதன்
பயன்களும், முக்கியத்துவமும் ஏன் யாருக்கும் புரிவதில்லை.
÷தாலசாஸ்திரம் என்ற நூல் பனைமரத்தால் 801 பலன்கள் கிடைக்கின்றன என்று
கூறுகிறது. எத்தகைய நிலத்திலும் வளரும் தன்மையுடையது பனை. மழை பெய்யும்
காலத்தில் கிடைக்கும் நீரையும், தன்வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சும்
நீரையும் கொண்டே பனைமரம் வாழ்கிறது. இதற்கென நீர் பாய்ச்சுவதோ,
உரமிடுவதோ, பூச்சி மருந்து தெளிப்பதோ கிடையாது. இவ்வாறு இயற்கைதரும்
அற்புத மரத்தைக் கற்பகத்தரு என்றே அழைத்தார்கள்.
பனம் பழச்சாற்றை வெயிலில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி
"பனாட்டு' என்ற பெயரில் இனிப்புப் பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள்.
தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை
அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண்
பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால்,
பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது,
பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது.
பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு கிழங்காகிறது, கிழங்கை எடுக்காமல்
அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது. எனவே பெண் பனைகளைவிட
ஆண் பனைகளில் பதநீர் எடுப்பதே நல்லது.
÷பதநீர், உடலுக்கு நலம் தருவது, பலம் தருவது. இரவு முதல் அதிகாலை வரை,
விண்மீன்களும், நிலாக் கதிர்களும் ஒளிபாய்ச்சுகின்றன. காலை முதல் ஞாயிறு
தன் கதிர்களால் குளிப்பாட்டுகிறது. தொழிலாளி பாளையைச் சீவிச் சுரக்கும்
நீரில் கடல்வயிற்றுச் சிப்பியின் சுண்ணாம்பும் சேர்ந்து
பதப்படுத்துகிறது.
÷இந்தப் பதநீரைக் குடித்தால் உடல் வெப்பமடையும் நேரத்தில்
குளிர்ச்சியூட்டுகிறது. உடல் குளிர்ச்சியாயிருந்தால் வெப்பமூட்டுகிறது.
÷நரம்பும் சதையும் பழுதடைந்தால் இதயத்தின் செயல்பாடு முடங்கிப்போகும்.
இவ்வாறு நிகழ்ந்துவிடாமல் பதநீரிலுள்ள சுண்ணாம்புச் சத்து பாதுகாக்கிறது.
பல்லும் எலும்பும் பதநீரால் உறுதிப்படுகின்றன.
÷பதநீரிலிருக்கும் இரும்புச் சத்து நரம்பு மண்டலத்துக்குச் செயலூக்கத்தை
அளிப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.
÷பதநீரிலிருக்கும் தையமின் என்ற உயிர்ச்சத்து, மூளையைச் சுறுசுறுப்பாகச்
செயல்பட வைக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
÷வைட்டமின் பி2 எனப்படும் "ரிபோபிளேவின்' என்கிற சத்து, குளுக்கோமா
என்கிற கண்நோய் வராமல் தடுத்துப் பாதுகாக்கிறது. பதநீரிலிருக்கும்
நியாசின் எனும் மூலக்கூறு மனத்தடுமாற்றம் வராமலும், வாய்ப்புண் வராமலும்
காக்கிறது.
÷மண்ணில் எந்தவித முதலீடும் இல்லாமல், பராமரிப்பும் இல்லாமல், உரமிடுதல்
நீர்பாய்ச்சுதல் என்று செலவே இல்லாமல் வளர்ந்து நிற்கும் மரங்களிலிருந்து
இத்தனை நலன்களைத் தரும் பதநீரை நாம் எடுக்கிறோமா? எடுக்காமல் இருப்பது
மடமை அல்லவா?
÷பனையைச் சார்ந்த காகமும் அமுதுண்ணும் - என்ற பழமொழியே தமிழ்நாட்டில்
உண்டு.
÷பதநீரைக் கூழாக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்பட்டி,
கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில
நாள்களில் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம். இவையனைத்தும்
அருமையான சக்தி படைத்தவை.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறைசென்று தளர்ந்து மெலிந்துபோன
ம.பொ.சி.யை அழைத்துக் கொண்டு ராஜாஜி, சென்னையிலிருந்த காந்தி மகானிடம்
அழைத்துச் சென்று, ""இவர் பனை ஏறும் குலத்தைச் சேர்ந்தவர், ஆனால்
கள்ளுக்குப் பரம எதிரி'' என்று அறிமுகப்படுத்தினார்.
காந்தி ஒட்டி உலர்ந்து மார்பு கூடுதட்டிப் போயிருந்த
ம.பொ.சி.யைக்காட்டி ""இவர் பதநீர் குடித்தால் தேறிவிடுவார். நான்
புளித்தகள்ளுக்கு எதிரி. இனிக்கும் பதநீருக்கு நண்பன். நான் கரும்புச்
சீனி சாப்பிடுவதில்லை, இனிப்புக்குக் கருப்பட்டிதான் சாப்பிடுகிறேன்''
என்றார்.
குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகளுக்குத்
தெரிந்திருந்தது பனையின் பெருமை. பதநீரின் அருமை.
÷ஒரே ஒரு மாவட்டத்திலிருந்து நான் பெற்ற அதிகாரபூர்வமான புள்ளிவிவரத்தைத்
தருகிறேன் . விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அன்புடன் எனது
வேண்டுகோளை ஏற்றுத் தந்த தகவல்.
÷பருவமடைந்த 72,555 மரங்களில் மட்டுமே தொழிலாளர்கள் ஏறிஇறங்கிப் பயனைக்
கொண்டு வருகிறார்கள். பருவமடைந்துவிட்டோம்; பதநீரும், நுங்கும் தருவதற்கு
நாங்கள் தயாராய் இருந்தும் எங்களைப் பயன்படுத்துவாரில்லையே; உலக
மக்களுக்கு நாங்கள் உதவ முடியவில்லையே என்று ஓலைக்கரங்களால் தங்கள்
தலைகளில் அடித்துக் கொண்டு அழுது அரற்றும் மரங்கள் 14,22,099.
÷நாம் பயன்படுத்துவது ஒரு லட்சத்துக்கும் குறைவு. பயன்தரத்
தயாராயிருந்தும் நாம் எடுத்துக் கொள்ளாத மரங்கள் 14 லட்சத்துக்கும்
அதிகம். இது ஒரே ஒரு மாவட்டத்தில். அதுவும் சிறிய மாவட்டமாகிய
விருதுநகரில்.
இவ்வாறாயின் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் இவ்வாறு நாம்
பயன்படுத்தாமல் நிற்கும் பனைமரங்கள் எவ்வளவு?
÷வீட்டுமுன் நின்றாலும், தோப்புத்துறவுகளில் நின்றாலும் சும்மாதானே
பயனற்று நிற்கின்றன என்று 200, 300 ரூபாய்க்கும் வெட்டி
விற்றுவிடுகிறார்கள். அவை செங்கல்சூளைகளில் விறகாகி எரிகின்றன. இந்நிலை
தொடருமானால், வருங்காலச் சந்ததிகளுக்கு பனை மரங்களைப் படம் வரைந்துதான்
காட்ட வேண்டிவரும்.
÷10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற நான், அங்கிருந்து நுங்கு குழம்பு
(நுங்கு ஜாம்), பனம்பழச்சாறு கொண்ட டப்பாக்களை வாங்கிவந்து தமிழக
முதல்வர் கருணாநிதியிடம் காட்டினேன். அதிகாரிகளை அழைத்து இவைபோல்
செய்யுங்கள் என்று ஆணையிட்டார். செய்தார்கள். மகிழ்ச்சி பொங்க அவற்றைச்
சுற்றுலாப் பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடலில் காட்சிக்கும்,
விற்பனைக்கும் வைத்தேன். மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார்கள்.
அதோடு நின்றுவிட்டது.
இத்தனைக்கும் தமிழக முதல்வர் பனைத்தொழிலின் மீதும், தொழிலாளர்கள் மீதும்
மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். பனை ஏற உரிமம் பெறவும்,
நலவாரியத்தில் உறுப்பினராவதற்கும் விதித்திருந்த கட்டணங்களையே
நீக்கிவிட்டார்.
நலவாரிய உறுப்பினர்கள் வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உள்படாமல் கலைஞர்
காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த உரிமை அளித்துவிட்டார்.
அரசு சார்ந்த பனைவெல்லக் கூட்டுறவுச் சம்மேளனங்கள் தொழிலாளிகள் மரமேறி
இறக்கிக் கொண்டுவரும் பதநீருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வீதம்
வாங்குவது, உழைப்புக்கேற்ற வகையில் இல்லை; அதிக விலை கொடுக்க வேண்டும்
என்று முறையிட்டதை ஏற்று இரண்டரை மடங்கு உயர்த்தி இப்போது லிட்டர் ரூ.10
வீதம் வாங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
இந்தக் கொள்முதல் தமிழகமெங்கும் நடைபெற வேண்டும்; அதற்குக் கணிசமாக நிதி
ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒரு பனைமரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், ரூ.3,000 வருமானம்
கிடைக்கும். இப்போது தமிழகமெங்கும் தோராயமாக 3 கோடி பனைமரங்கள் நிற்பதாக
வைத்துக்கொண்டால், ஆண்டொன்றுக்கு ரூ.9,000 கோடி வருமானம் பெறலாம்.
இந்த மரங்களில் ஏறி இறங்கப் போதுமான ஆள்கள் இல்லை. அனுபவசாலிகளைக்
கொண்டு புதியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி
அளிப்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுக்கும் போக்குவரத்துச் செலவு,
உணவு, உறைவிடம் கொடுத்து ஊக்க ஊதியமும் கொடுக்க வேண்டும்.
நமக்கு முந்தைய தலைமுறை செய்த இந்த அற்புதப் பணியை நாமும் செய்ய
முடியும் என்ற நம்பிக்கையோடு புதியவர்களை உடல் உழைப்பாலேயே மரங்களில்
ஏறிப் பயன் பெற ஒருபுறம் பயிற்சி அளிக்க வேண்டும்.
இன்னொருபுறம், பனை ஏறக் கருவியொன்று மிக அவசரமாகக் காண வேண்டும். பல
ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் குட்டம் என்ற ஊரில் பசுபதி
மார்த்தாண்டன் என்பவர் பனையில் பொருத்த சைக்கிள் மிதிப்பதுபோல் மிதித்து
மேலே செல்லும் கருவியொன்றைக் கண்டுபிடித்தார். அம் முயற்சி முழுமை பெறும்
முன் அவர் மறைந்துவிட்டார்.
இப்போது கோபிச்செட்டிபாளையம், கோயமுத்தூர் போன்ற இடங்களில் சிலர் இந்த
முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கும்
எல்லாவிதமான ஊக்கமும் நாம் கொடுக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் கருவியை நான்
இருமுறை நேரில் சென்று காணும் வாய்ப்பைத் தந்தார்கள். தொடர்ந்து அக்
கருவியை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்.
கனமற்ற - ஆனால் உறுதியான - உலோகத்தால் இதைச் செய்ய வேண்டும். ஒருவர்
தூக்கிச் செல்லும் எடைதான் இருக்க வேண்டும். சக்கரங்களைப் பொருத்தி
பனந்தோப்பில் இழுத்துச் செல்லும் வகையிலும் அமைக்கலாம்.
மிக எளிதில் பொருத்த, பயன்படுத்திக் கழற்றி அடுத்த மரத்துக்கு எடுத்துச்
செல்லும் வகையில் ஒரு கருவியை நம்மால் செய்ய முடியும் என்று தொழில்நுட்ப
வல்லுநர்கள் இதை ஒரு சவாலாக ஏற்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் கருவிகளை ஆய்வுசெய்து தேர்வு செய்யப்படுவனவற்றுக்கு
நல்ல பரிசுகளை அரசும், தொண்டுள்ளம் கொண்ட அறக்கட்டளைகளும் கொடுக்கலாம்.
இத்தகைய கருவிகள் பரவலாகச் செய்யப்பட்டால் பலர் பயிற்சி பெற வருவர்;
மக்கள் பனை மரங்கள் மூலம் பலன் பல பெறுவர்.
இப்போது குளிர்பானம் மற்றும் சோடா விற்கும் கடைகளிலெல்லாம் பதநீர்
கிடைக்க வேண்டும். அரசும் பனை வளர்ச்சி வாரியமும், தொழிலாளர் நல
வாரியமும், சம்மேளனங்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இதை தேசபக்தியோடு
அணுகி, நாட்டுத் தொண்டெனக் கருதிச் செயலில் முனைய வேண்டும்.
ஆம், மண்ணின் மரத்தில் கிடைக்கும் அமுது பதநீர். சிறுகடைகளிலும்
கிடைக்கும் வகையில் பதநீரைக் கொடுப்போம். இப்போது விஞ்ஞான முறையில்
பக்குவப்படுத்த 20 நாள்களுக்கு மேலாகவும் பதநீரைக் கெட்டுப் போகாமல்
வைத்திருக்கும் காகித டப்பாக்கள் கிடைக்கின்றன. அவற்றையும் குப்பிகளையும்
பயன்படுத்தி, பதநீரை எங்கும் விநியோகிப்போம்.
பெட்டிக்கடைகள் முதல் பெரிய விடுதிகள் வரை பதநீர் கிடைக்க வழி காண்போம்.
இதைப் பதப்படுத்தி, ஏற்றுமதிக்கு வழிகோலினால் தமிழகம் செழிக்கும்.
தமிழகக் கிராமப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும்.
வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோமே என்பதை
இனியும் உணராமல் இருந்தால் எப்படி?

iraamaki

unread,
Jun 23, 2011, 8:56:11 AM6/23/11
to தமிழாயம்
"ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே."

ஏரணத்தின் படி மேலேயுள்ள உங்களது கூற்று ஒரு வெற்றகத் தருக்கம் (vacuous
argument.) உங்களுக்குத் தெரிந்தது ஆண்பனை. அதனால் ஏற்றை ஆண்பனை
ஆகிவிடாது. தாழையிலும், பப்பாளியிலும் ஆண், பெண் என்ற வேறு பாடு உண்டு.
பலாவிலும் ஆண், பெண் வேறுபாடு உண்டு. ஆண் பலா காய்க்காது. வெறும் பூக்
கொடுத்து உதிர்ந்து போகும். பெண்பலா மட்டுமே காய்க்கும். ஆண், பெண்
வேறுபாடு பல மரங்களுக்கு உண்டு. புதலியற் கட்டுரைகளைத் தேடிப்
படியுங்கள். ஏற்றை என்பது பொதுச்சொல். அது பொதுவாய் ஆண் மரத்தையும்,
புதரையும் குறிக்கும். அது பனைக்கு மட்டுமே உரிய விதப்புச் சொல் அல்ல.
அப்படிப் பாவிப்பது தவறான பயன்பாடு.

பெண்ணை என்பதும் பாவாணர் சொல்லிவிட்ட காரணத்தாலேயே பெண்>பெண்ணை என்று
ஆகிவிடாது. பெண்மரம் என்பது ஒரு பொருள். நான் மறுக்கவில்லை. ஆனால்
அதுமட்டுமே ஒற்றைப் பொருளல்ல. பொதுவான பனையைப் பெண்ணை என்ற சொல்
குறிக்கும் சான்றுகள் மிகப்பல உண்டு. பெண்ணை என்ற பெயர் பொதுவான பனையைக்
குறிக்க எப்படிப் பிறந்திருக்கும் என்று ஓர்ந்து பாருங்கள். உங்கள்
பார்வை வழியாகப் பார்த்தால் அதுமட்டுமே சரியென்று தோன்றும். உங்கள்
பார்வையை விட்டு வெளியே வந்து சொற்பிறப்பை ஓர்ந்து பாருங்கள்.
அப்பொழுதுதான் பலரும் ஏற்கும் வகையில் சரியான சொற்பிறப்புக் காரணம்
கிடைக்கும். நூ.த.லோ.சு கொடுத்த சான்றுகள் பலவும் பெண்ணை என்ற சொல்லாற்
பொதுப் பனையைக் குறிப்பவை.

அன்புடன்,
இராம.கி.

Ganesan, N.

unread,
Jun 23, 2011, 9:35:02 AM6/23/11
to தமிழாயம்

On Jun 23, 7:56 am, iraamaki <iraam...@bsnl.in> wrote:
> "ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
> ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே."
>
> ஏரணத்தின் படி மேலேயுள்ள உங்களது கூற்று ஒரு வெற்றகத் தருக்கம் (vacuous
> argument.) உங்களுக்குத் தெரிந்தது ஆண்பனை. அதனால் ஏற்றை ஆண்பனை
> ஆகிவிடாது. தாழையிலும், பப்பாளியிலும் ஆண், பெண் என்ற வேறு பாடு உண்டு.
> பலாவிலும் ஆண், பெண் வேறுபாடு உண்டு. ஆண் பலா காய்க்காது. வெறும் பூக்
> கொடுத்து உதிர்ந்து போகும். பெண்பலா மட்டுமே காய்க்கும்.

மெய்யாலுமா? பலா தென்னை போல என்றுதான் படித்திருக்கிறேன். தென்னை போல்,
பலாவிலும்
ஒரே மரத்தில் ஆண்பூ, பெண்பூ பூக்கின்றன. ஆண் பூக்கள்
சிறு காயாகிப் பின்னர் உதிர்ந்துவிடுவன. ஆனால், பெண்பூக்கள்
அதே மரத்தில் பழமாகப் பெரிதாகும்.

http://lee.ifas.ufl.edu/Hort/Videos_and_Powerpoints/Jackfruit.pdf

Jackfruit:
Artocarpus heterophyllus
• A monoecious species but with separate
male and female flowers on the same tree.

Male fruits emerge first and the female fruits are
pollinated after emergence in the same tree,

> ஆண், பெண்
> வேறுபாடு பல மரங்களுக்கு உண்டு. புதலியற் கட்டுரைகளைத் தேடிப்
> படியுங்கள். ஏற்றை என்பது பொதுச்சொல். அது பொதுவாய் ஆண் மரத்தையும்,
> புதரையும் குறிக்கும். அது பனைக்கு மட்டுமே உரிய விதப்புச் சொல் அல்ல.
> அப்படிப் பாவிப்பது தவறான பயன்பாடு.
>
> பெண்ணை என்பதும் பாவாணர் சொல்லிவிட்ட காரணத்தாலேயே பெண்>பெண்ணை என்று
> ஆகிவிடாது. பெண்மரம் என்பது ஒரு பொருள். நான் மறுக்கவில்லை. ஆனால்
> அதுமட்டுமே ஒற்றைப் பொருளல்ல. பொதுவான பனையைப் பெண்ணை என்ற சொல்
> குறிக்கும் சான்றுகள் மிகப்பல உண்டு. பெண்ணை என்ற பெயர் பொதுவான பனையைக்
> குறிக்க எப்படிப் பிறந்திருக்கும் என்று ஓர்ந்து பாருங்கள். உங்கள்
> பார்வை வழியாகப் பார்த்தால் அதுமட்டுமே சரியென்று தோன்றும். உங்கள்
> பார்வையை விட்டு வெளியே வந்து சொற்பிறப்பை ஓர்ந்து பாருங்கள்.


பெண் என்பதிலிருந்து பெண்ணை சொல் பிறக்கவில்லையா?
அதன் மிகுபயனால் பெற்றம், ஆ பொதுவாகச் சொல்வதையும்
ஓர்வோம்.

அன்புடன்,
நா. கணேசன்


> அப்பொழுதுதான் பலரும் ஏற்கும் வகையில் சரியான சொற்பிறப்புக் காரணம்
> கிடைக்கும். நூ.த.லோ.சு கொடுத்த சான்றுகள் பலவும் பெண்ணை என்ற சொல்லாற்
> பொதுப் பனையைக் குறிப்பவை.
>
> அன்புடன்,
> இராம.கி.
>
> On Jun 23, 4:24 pm, "Ganesan,  N." <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Jun 22, 1:09 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
> > > தனித்த பொருள் ஆண் என்பதே. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்குப் பெண்பனை
> > > என்ற பொருள் இருந்தாலும், இருபாலிற்கும் பொதுவான பெயராகவும் இந்தச் சொல்
> > > பயன்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரையில் பல்வேறு செய்திகளைத்
> > > தொகுத்திருக்கிறாரே ஒழிய சொல்ல வந்த கருத்தை ஏரணத்தோடு தருக்கவில்லை.
>
> > ஆ, பெற்றம், கறவை, சுரப்பி என்றாலும் பெண் பசுதான்.
> > பலன் மிகுதி காரணமாக, இச் சொற்கள் (ஆ, ... ) பொதுவாகப்
> > பசுக்களைக் குறிக்கின்றன. அதேபோல், பெண்ணை என்னும்
> > பெண்பனை இருபால்களுக்கும் பொதுவாக சில சமயம் சொல்லலாம்.
>
> > இதனை என் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
>
> > பாவாணர் அதனால்தான் குறிப்பிடுகிறார்:
> > "பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை”
>
> > ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
> > ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே. பனை பெண்ணை
> > தான் குலைதரும்.  தென்னையில் ஆண், பெண் இல்லை, (தென்னை - எல்லா மரமும்
> > காய்ப்பன.)
>

> > நா. கணேசன்- Hide quoted text -

இரவா

unread,
Jun 24, 2011, 12:37:20 AM6/24/11
to thami...@googlegroups.com
தென்னையில் வலம்புரி, இடம்புரி என இரு வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் வலம்புரியை ஆணாகவும் இடம்புரியைப் பெண்ணாகவும் கருதுகின்றனர். இவ்விரண்டில் இடம்புரி அதிகமான காய்களைக் காய்க்கும் என்றும் தென்னை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
இவ்வேறுபாட்டை அறிய தென்னை மட்டையில் உள்ள சோலைகள் வலத்திலிருந்து தொடங்குகின்றதா அல்லது இடத்திலிருந்து தொடங்குகின்றதா என்பதைக் கொண்டு அறியலாம்.
 
மேலும், தென்னையைப் பற்றிய பல அறிய செய்திகள், திருவள்ளுவரின் பஞ்சமித்திரம் என்னும் நூலில் காணப்படுகிறது. அதனைக் கண்டு பின்னர் எழுதுகின்றேன்.
 
 
 
இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


23 ஜூன், 2011 7:05 pm அன்று, Ganesan, N. <naa.g...@gmail.com> எழுதியது:

Ganesan, N.

unread,
Jun 25, 2011, 10:05:31 AM6/25/11
to தமிழாயம்

On Jun 23, 11:37 pm, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> தென்னையில் வலம்புரி, இடம்புரி என இரு வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள்
> வலம்புரியை ஆணாகவும் இடம்புரியைப் பெண்ணாகவும் கருதுகின்றனர். இவ்விரண்டில்
> இடம்புரி அதிகமான காய்களைக் காய்க்கும் என்றும் தென்னை ஆராய்ச்சியாளர்கள்
> கூறுகின்றனர்.
>

இருக்கலாம். தென்னை ஆராய்ச்சியாளர்களிடம்
படங்கள் பெற்று பதிவிடுங்கள். வலம்புரி, இடம்புரி சங்குகள்
உள்ளன, அதுபோலா? என்று பார்க்கணும். இடம்புரிச்
சங்கே எண்ணிக்கையில் அதிகம் என்பதும் ஒப்பிடலாம்.

ஆனால் ஒன்று:
தோப்பில் எல்லா மரங்களும் காய்க்கும். பலா மரங்களும்
எல்லா மரங்களும் காய்க்கும்.

ஆனால், தாழை எனப்படும் குடும்பத் தாவரங்கள் -
பனை, ஈஞ்சை, தாழம்புதை - ஆண் தாவரம் காய்க்கா,
பெண்ணையே காய்த்துப் பலன் ஈனும்.
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

நா. கணேசன்


> இவ்வேறுபாட்டை அறிய தென்னை மட்டையில் உள்ள சோலைகள் வலத்திலிருந்து
> தொடங்குகின்றதா அல்லது இடத்திலிருந்து தொடங்குகின்றதா என்பதைக் கொண்டு
> அறியலாம்.
>
> மேலும், தென்னையைப் பற்றிய பல அறிய செய்திகள், திருவள்ளுவரின் பஞ்சமித்திரம்
> என்னும் நூலில் காணப்படுகிறது. அதனைக் கண்டு பின்னர் எழுதுகின்றேன்.
>
> இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்
>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>

> 23 ஜூன், 2011 7:05 pm அன்று, Ganesan, N. <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
>
>
> > இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,

> >              விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages