இரட்டைப் புலவர்கள்

1,869 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 12, 2008, 4:14:06 AM12/12/08
to தமிழாயம்

இரட்டைப் புலவர்கள் - ஷைலஜா

 

இன்றைக்கு ஏறத்தாழ ஐநூறு அல்லது அறுநூறு வருடங்கள் முன்பாக, சோழநாட்டில் ஆமிலந்துறை என்னும் ஊரில், செங்குந்தர் மரபில் இரண்டு புலவர்கள் தோன்றினர். ஒருவர் பெயர் மதுசூரியர், இன்னொருவர் இளஞ்சூரியர். உறவு முறையிலும் ஒருவர் மாமன் மகன், மற்றவர் அத்தைமகன். இருவரும் சேர்ந்தே செய்யுள் பாடிவந்ததால் அவர்களை இரட்டையர் என்றே ஊரில் மக்கள் அழைத்தனர்.

இரட்டையர்கள் தங்கள் சமயமாகிய சைவத்தில் பெரும் பற்று கொண்டவர்கள். வாழ்நாள் முழுவதும் சிவத்தலங்களுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடி மகிழ்ந்தனர். இருவரில் ஒருவர் முடவர் இன்னொருவர் குருடர். குருடரின் தோளில் ஏறிக் கொண்டு, முடவர் நடக்கும் பாதைவழி கூற, முன்னவர் அதன்படிச் செல்வார். இருவருக்குமே கலைமகள் அருள் பரிபூரணமாக இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பெரு முயற்சியும் உழைப்புமின்றி எளிதில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

ஒருபாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாடுவார். அதை ஒட்டி மற்றவர் அடுத்த பகுதியைப் பாடி முடிப்பார். வயிறு ஒன்று இருக்கிறதல்லவா, அதை நிரப்பியாக வேண்டுமே. அதற்காக அவ்வப்போது சில செல்வந்தர்களையும் அணுகி அவர்கள் மீது பாடிப் பரிசு பெற்று வாழ்ந்துவந்தனர். திருத்தலங்களுக்குச் சென்று முதலில் இறைவன் மீது பாடிவிட்டுப் பிறகுஅவ்வூரில் உள்ள செல்வந்தர்களைப்பாடிப் பரிசுடன் திரும்புவர்.

ஒருமுறை இரட்டைப்புலவர்கள் சிதம்பரம் பெருமானைத் துதிக்க கோயிலுக்குச் சென்றனர். திரும்பும் வழியில், பெருஞ்செல்வம் படைத்த செல்வந்தன் ஒருவன் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு போவதைப்பார்த்து அவனைப்பற்றிப் புகழ்ந்து முடவர் முதலில் பாட, குருடர் வழக்கம் போல முடித்துக் கொடுத்தார். அறுசுவை மட்டுமேயன்றித் தமிழ்ச் சுவையறியாத அந்த செல்வந்தர் பாடல் கேட்டு நெடுமரம்போலவே நிற்கவும், முடவர்,

'
மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா'

எனப்பாடி நிறுத்தினார்.

அக்குறிப்பினை அறிந்த குருடர்,

'-
ஆடகப்பொற்
செந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித்துஎன்னபயன்
அந்தகனே நாயகனானால்?'

எனப்பாடி முடித்தார்.

அதற்குள் அங்கே மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் இப்பாடலின் உட்கருத்தையும் சொல்நயத்தையும் சிலேடைப் பொருளையும் கண்டு வியந்து இன்னொரு பாட்டு பாடும்படி அவர்களை வேண்டினர்.உடனே முடவர்,

'
பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்கள் நாடானே'

என்றுபாடிநிறுத்த, குருடர்,

'-
சேடன்
இவன் வாழும் வாழ்க்கையிருங்கடல்சூழ் பாரில்
கவிந்தென் மலர்ந்தென்னக்காண்.'

என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தார்.

அங்கே குழுமி இருந்தவர்கள் இப்பாடலைக்கேட்டு ரசித்து அச்செல்வருக்கு இவர்களின் அருமை பெருமையைக் கூறவும் அவனும் அதை உணர்ந்து இரட்டையர்களை உபசரித்து வேண்டிய பரிசினைக் கொடுத்து அனுப்பினான்.

ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,

'
தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'

என்றுபாடவும் குருடர்,

'-
போங்காணூம்
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசையல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்.'

என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.

அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.

இன்னொருமுறை இரட்டைபுலவர்கள் சங்கத்தமிழ் வளர்த்த மதுரைக்குவந்து சொக்கநாதரையும், அங்கையற்கண்ணியையும் வழிபட நினைத்தனர். முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பொற்றாமரைக்குளம் வந்தனர். நீராடிவிட்டு ஆலயப்பிரவேசம் செய்ய நினைத்து முதலில் குருடர் குளத்திலிறங்கினார். படித்துறையில் அமர்ந்து உடையைத் துவைக்கத் தொடங்கினார், நீர்ப்பரப்பில் அதை விரிக்கத் துணி கைநழுவிப் போய்விட்டது. உடை நழுவியதுதெரியாமல் குருடர் கைகளை நீரில் தடவித் தடவிப் பார்க்கவும் கரையில் அமர்ந்த முடவர்,

'
அப்பிலே தோய்த்தடுத்தடுத்துநாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றுபாடினார்.

'-
அப்படியே
ஆனாலுங்கந்தை,அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

என்றார் குருடர். அது கேட்ட முடவர் விடாமல்,

'
கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார்குளிரையுடன் தாங்காதோ?'

என்று கொக்கி போட்டார்.

'-
எண்ணாதீர்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டேதுணை!'

என விடை அளித்தார் குருடர். அந்த ஆடை சிறிது நேரத்தில் தானாகவே காற்றில் திரும்பவும் அவர் கைக்கு வந்தது.

பின்னர் அண்ணாமலையானைத்தொழ ஒருமுறை இவர்கள் திருவண்ணாமலை வந்தனர். அங்கே சக்தியை பூசிப்பவனும், செந்தமிழ்ப்புலவனும், செருக்கு மிக்கவனும், புலவர்களைக் கண்டால் இழிவாகப் பேசுபவனுமான சம்பந்தாண்டான் என்பவனைக் கண்டனர். அப்போது அவன் நாவிதனிடம் தலைசவரம் செய்து கொண்டிருந்தான். வந்தவர்கள் புலவர்கள் என அறிந்துகொண்டவன், இடக்காக, "மன் என ஆரம்பித்து மலுக் என முடிவதுபோல வெண்பா பாடமுடியுமா உங்களால் எனக்கேட்டான். அவனது அறியாமையை எண்ணிப்புலவர்கள் தமக்குள் சிரித்தனர். முடவர்,

'
மன்னு திருவண்ணாமலைச்சம்பந்தாண்டாற்குப்
பன்னுந்தலைச்சவரம் பண்ணுவதேன்'

எனப்பாடலை ஆரம்பிக்க, பின்னவர்,

'-
மின்னின்
இளைத்த இடைமாதர் இவன் குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டாமலுக்கு.'

என்று அவன் தலைக்கே தொடர்புப்படுத்தி, அவனுடைய மனைவியர் இருவரிடமும் அவன் படும்பாட்டை விவரித்து அவன் செருக்கொழியுமாறு வெண்பா பாடிமுடித்தனர் அன்றுமுதல் அவன் செருக்கும் அழிந்தது.

புலவர்களைப்போற்றும் கூவத்துநாராயணன் மீது இரட்டையர்க்கு மிகுந்த அபிமானம் உண்டு. அவரது மறைவில் மனம் வெறுத்துக் காலனையே சாடினர்.

'
இடுவார் சிறிதிங்கு இறப்போர் பெரிது
கெடுவாய் நமனே கெடுவாய்-படுபாவி
கூவத்து நாரணனைக்கொன்றாயே,கற்பகப்பூங்
காவெட்டலாமொ கறிக்கு?'

என்று ஓர் யாப்பு பாடினர்.

ஒருமுறை இரட்டையர்கள் ஆசுகவி பாடுவதில் வல்லவரான காளமேகப் புலவரை சந்தித்தனர். அவருடன் திருவாரூரை அடைந்து, தியாகராயப் பெருமானை வணங்கினர். பெருமாளைப் பாட நினைத்த குருடர்,

'
நானென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம் பாணந்தான்.....' என்று தொடங்கினார்,ஆனால் அதன்மேல் பாடல் தொடர இயலாமல் நிறுத்தினார். முடவருக்கும் அதனை முடிக்க சொல் வரவில்லை. அருகே இருந்த காளமேகப்புலவர், உடனே'மண்தின்ற பாணமே" என்றார். இச்சீரான வார்த்தைகிடைத்ததும் முடவர்,

'-
தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
நேராரூர் செற்ற நிலை?'

என்று வெண்பா பாடிமுடித்தார்.

பின்பு இரட்டைப்புலவர்கள் காளமேகப்புலவரின் அற்புத சக்தியை வியந்து,

'
விண் தின்ற கீர்த்தி விளை காளமேகமே
மண்தின்றபாணமென்று வாயினிக்கக்-கண்டொன்று
பாகொடு தேன் சீனியிடும் பாக்கியம் பெற்றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென்னாம்?'

எனப்பாடிப் புகழ்ந்தனர். அவரிடம் பிரியாவிடை பெற்றுப்பிரிந்தனர்.

காலசக்கரம் சுழன்றது. சில ஆண்டுகள் கழிந்தன. இரட்டையர் திருவானைக்காவல் வந்து இறைவனை வழிபட்டு தங்களது பழைய நண்பரும் பெரும்புலவருமான காளமேகப்புலவரை சந்திக்க விரைந்தனர். அப்போது அவர் இல்லத்தில், "சற்று முன்னர்தான் அவருடைய உயிர்பிரிந்து உடல் தகனத்திற்குப் போய்விட்டது" எனக்கூறினர். இரட்டையர் அதிர்ச்சியுடன் சுடுகாட்டிற்கு வந்தனர் காளமேகப்புலவரின் உடலை நெருப்பு, தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.



'
ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'

என முடவர் கதற, குருடர் உடனே,

'-
பூசுரா
விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'


எனப்பாடி அழுதார்.

இளமையிலே புலமைபெற்ற இந்த இரட்டையர் கலம்பகம் உலா முதலிய அரிய பெரிய ப்ரபந்தங்களைப் பாடியவர்கள். தமிழ் உள்ளவரைக்கும் இவர்கள் பாடல்களும் வாழும் என்பதில் ஐயமில்லை.

 



--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Dec 15, 2008, 10:24:09 PM12/15/08
to thami...@googlegroups.com


>>இடுவார் சிறிதிங்கு இறப்போர் பெரிது
 
இடுவார் சிறிதிங்கு இரப்போர் பெரிது
 
 



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
Reply all
Reply to author
Forward
0 new messages