காந்திஜியே பக்கம் பக்கமாக எழுதிக் குவித்தவர்தான். அவரைப் பற்றியும் பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அந்த அளவுக்குக் காந்திஜியை உலகம் கொண்டாடுகிறது.
சமீபத்தில், காந்தியுகக்காரரான தரம்பால் எழுதிய ‘காந்தியை அறிதல்’ என்ற நூலை வாசித்தேன். 80-களில் PPST புல்லட்டின் என்ற பேரில் ஒரு பத்திரிகை வந்தது. சுதேசியத்தை மீட்டெடுக்க முயற்சித்த பத்திரிகை அது. அந்தப் பத்திரிகையில்தான் முதன் முதலாக தரம்பாலின் பெயர் அறிமுகமானது. தரம்பால் அசலான ஒரு காந்தியவாதி. காந்திஜியின் கிராமப்புறப் பொருளாதாரத் திட்டங்களைப் பெரிதும் நம்பியவர்.
அவர் காந்திஜியின் எழுத்துக்களின் வாயிலாகவே பெரும்பாலும் நாம் அறிந்திராத ஒரு காந்தியை அறிமுகப்படுத்துகிறார். காந்திஜி தமது காங்கிரஸ் உறுப்பினர் பதவியை 1930-லேயே ராஜினாமா செய்து விட்டார் என்ற தகவலைப் படித்து ஆச்சர்யமும், இதுவரை அந்த மகத்தான மனிதரைத் தவறில்லாமல் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருத்தமும் அடைந்தேன்.
காந்திஜியின் கொள்கைகளுக்கு அவரது காலத்திலேயே காங்கிரஸுக்குள் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரது பிரம்மச்சரியம், தொழில்நுட்பம் பற்றிய அவரது கருத்துக்களை எல்லாம் பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நேருஜியே பல காந்திய கொள்கைகளை எதிர்த்தவர்தான். டெக்னாலஜி பற்றி காந்திக்கும் நேருவுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் தரம்பாலின் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
காந்திஜி கனவு கண்ட ராமராஜ்யம் அவரது கனவாகவே முடிந்து விட்டது. அஹிம்சை, சத்தியம் போன்ற விஷயங்களைத் தவிர, காந்திஜியைக் காலம் தாண்டிச் சென்று விட்டது. தரம்பாலின் இந்த நூலில் அவர் காந்திஜியின் மொத்தப் பரிமாணத்தையும் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். எல்லோரும் படித்துப் பார்க்கவேண்டிய நூல்.
--வண்ணநிலவன் (கல்கி விமர்சனம்)