பி.ஏ.கிருஷ்ணனின் ”புலிநகக்கொன்றை” ஓர் அறிமுகம்

75 views
Skip to first unread message

Arvind Swaminathan

unread,
Aug 12, 2011, 9:49:59 AM8/12/11
to tamilvasagan
இந்த நாவல் பற்றி இதற்கு முன்னர் யாரும் அறிமுகம் செய்திருக்கிறார்களா
என்பது தெரியவில்லை. நான் படித்த பல நாவல்களில் இதை முக்கியமான நாவலாகக்
கருதுகிறேன்.

"எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே..."

சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில், மருதத் திணையின் ஞாழல்
பத்தில் 142வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது மேற்கண்ட பாடல். ’ஞாழல்’
என்பது புலிநகக் கொன்றை மரத்தைக் குறிக்கும்.

பி.ஏ.கிருஷ்ணன் அவர்களால் ‘Tiger claw tree’ என்ற பெயரில் ஆங்கிலத்தில்
வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல், தமிழில் ’புலிநகக் கொன்றை’
என்ற பெயரில் வெளியானது. அசோகமித்திரனால், ‘ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற
தமிழ்நாவல்’ என்ற பாராட்டையும் பெற்றது.

1970ல் ஆரம்பித்து முன்னோக்கியும் பின்னோக்கியுமாக நகர்கிறது நாவல்.
தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை கதைக் களமாகக் கொண்டு
நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்னா-ராமன் தம்பதியினரின் குடும்ப
வாழ்க்கையில் ஆரம்பித்து, அப்படியே சிப்பாய் கலகம், கட்டபொம்மு
கிளார்க்கைக் கொன்றது, பாஞ்சாலக் குறிச்சி வீழ்ந்தது, கட்டபொம்மு
தூக்கிலிடப்பட்டது, மருதுபாண்டியரின் அதிரடி அறிவிப்புகள், ஆஷ் கொலை,
வாஞ்சிநாதன் தற்கொலை என்ற வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் கதையினூடே
சம்பவங்களாக, வாழ்க்கை நிகழ்ச்சிகளாகக் கண்முன் விரிகின்றன. சுதந்திரப்
போராட்டம், அதற்குப்பின் நடந்த இந்திய அரசியல் சமூக மாற்றங்கள், அதன்
பின்னணிகள் என விரிகிறது கதை.

நான்கு தலைமுறைகளைப் பற்றிய கதை என்பதால் நாவலில் ஏகப்பட்ட விவரணைகள்
கொட்டிக் கிடக்கின்றன. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிப்பதன் மூலம்
நாவல் காட்டும் பல்வேறு காலகட்டத்து மக்களின் வாழ்க்கை முறை, சமூகப்
பின்னணிகள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என பலவற்றை
அறிந்து கொள்ள இயலுகிறது. நூல் உருவாக்கத்திற்காக ஆசிரியர்
செய்திருக்கும் கடுமையான உழைப்பும் கண்முன் தெரிகிறது.

நாங்குநேரி ஜீயரின் மடப்பள்ளியில் புளியோதரைப் புலியாக விளங்கும்
ஐயங்காரின் மகள் பொன்னா என்கிற பொன்னம்மாள். அவளுக்கும் பிரபல
உண்டியல்காரக் குடும்பத்து லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் செல்ல மகன் ராமன்
என்கிற ராமன் ஐயங்காருக்கும் வானாமாமலை பதினெட்டாம் பட்ட ஜீயரின்
ஆசிர்வாதத்தோடு திருமணம் நடக்கிறது. நம்மாழ்வார், பட்சி என இரு ஆண்
மகவுகளுக்கும், ஆண்டாளுக்கும் தாயாகிறாள் பொன்னா. சாப்பாட்டுப் பிரியனான
ராமனுக்கு மதுப் பழக்கமும் விரும்பத்தக்கதாயிருக்கிறது. ஆண்டாளுக்குத்
திருமணமான கையோடு அவள் கணவன் குளத்தில் மூழ்கி இறந்து விட விதவையாகிறாள்.
ராமன் ஐயங்கார் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க, ஜீயர் அதை ’குல
ஆச்சாரத்துக்கு விரோதம்’ என்று சொல்லித் தடுக்க, அந்தச் சோகத்திலேயே
ராமனும் இறந்து விடுகிறார். பொன்னா தனியளாகிறாள்.

நம்மாழ்வாரையும் பட்சியையும் வளர்த்து ஆளாக்க, நம்மாழ்வாருக்கு காங்கிரஸ்
கட்சியின் மீதான் அபிமானம் அதிகமாகிறது. ஆனால் காந்தியத்தை விட,
புரட்சியே உயர்ந்தது என நினைக்கிறான். திலகரின் கொள்கைகள் அவனை
ஈர்க்கிறது. திலகரை மாதிரி நான்கைந்து தலைவர்கள் இருந்தால் போதும்.
மூட்டை முடிச்சுக்களோடு வெள்ளைகாரன் கப்பல் ஏறி விடுவான் என்பது அவன்
எண்ணமாக இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய பாரதி, நீலகண்ட
பிரம்மச்சாரி வ.வே.சு அய்யர், வாஞ்சி என எல்லோரையும் சந்திக்கிறான்.
பாரதமாதா சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறான். பொன்னாவின் தூண்டுதலால்
லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள, அவளோ, மது என்ற மதுரகவியைப் பெற்றுக்
கொடுத்து விட்டுக் காலமாகி விடுகிறாள். தனியனாகிறான் நம்மாழ்வார்.
இந்தியா புரட்சியால் விடுதலை பெறும் என்கிற அவன் நம்பிக்கையும் கொஞ்சம்
கொஞ்சமாகத் தளர்கிறது.

ஏற்கனவே தளர்ந்திருக்கும் அவனை பொன்னா மறுமணத்திற்குத் தூண்ட, மறுத்து
விட்டு, விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். வடநாட்டுக்குச்
சென்று ஜோஷி மடத்தில் சேர்ந்து அவன் சாமியாராகி விட, அவன் வருவான் என்ற
நம்பிக்கையில் நாட்களைக் கடத்துகிறாள் பொன்னா.

இதுவரை கதையின் ஒரு பகுதி. அடுத்து வரும் பகுதிதான் மிக முக்கியமானது.

நம்மாழ்வாரது மகன் மதுரகவியை அத்தை ஆண்டாள் வளர்க்கிறாள். பின்
வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்க்கப்படுகிறான் மது.
கதையினூடாக குருகுலத்தில் நடந்த ’பந்தி வஞ்சனை’ சம்பவங்கள்
விளக்கப்படுகின்றன. அடுத்து பாபாநாசம் மலை அருவியில் மதுவின் கண்முன்னே
அய்யர் இறந்து படுகிறார். நாளடைவில் காந்தியின் சித்தாந்தங்கள்
பிடிக்காமல் போகிறது மதுவுக்கு. கம்யூனிஸம் ஈர்க்கிறது. கமலாவுடன்
கல்யாணமும் நடக்கிறது. ஒரு பொதுவுடைமைப் போராட்ட ஊர்வலத்தில்
இறந்துபடுகிறான் மது.

பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கிறார். பிரபல வழக்கறிஞர், ராஜாஜியின் அபிமானியும் கூட.
ஆண்டாளோ சித்தம் தடுமாறி மனநோய் விடுதியில் சேர்க்கப்பட்டு இறந்து போய்
விடுகிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி
விரிவுரையாளன். திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த
வழக்கில் கலெக்டருக்கு எதிராகப் பேசி வேலையை இழக்கிறான். அவனுக்கு
பம்பாய்க்காரி உமாவின் மீது காதல். உமா அவனை ஐ.ஏ.எஸ். படிக்கச்
சொல்கிறாள். கண்ணன் வழக்கம் போல சோம்பேறியாக இருக்கிறான்.

மதுவிற்கு பிறந்த நம்பி, ரோசா என்னும் உடல் ஊனமுற்ற வேற்று ஜாதிப் பெண்ணை
மணந்து கொள்கிறான். டாக்டராக இருக்கும் இருவரும் மக்கள்
சேவையாற்றுகின்றனர். நம்பி கம்யூனிஸ்ட் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு
உடையவனாக இருக்கிறான்.

இறந்துபோய் விட்டதாக அனைவராலும் கருதப்பட்ட நம்மாழ்வார்
ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைக்க, நம்பி அவரைச்
சந்திக்க அங்கே செல்கிறான் - நாவலில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய இடம்
பெறுகிறது - அவனிடம் பின்னர் தான் அங்கு வந்து சேர்வதாகக் கூறுகிறார்
நம்மாழ்வார்.

குற்றாலம் செல்லும் நம்பி, பூர்வீக ஊரான புனலூருக்குச் செல்கிறான்.
நக்சலைட் என்ற உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்
வைக்கப்பட்டு சித்திரவதைப் செய்யப்படுகிறான் - அப்போது
வெளிப்படுத்தப்படும் நம்பியின் சிந்தனைகளும், உரையாடல்களும் நாவலை வேறொரு
தளத்தை நோக்கி நகர்த்துகிறது என்றால் அது மிகையில்லை - பின்னர்
குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படும் நம்பி, மர்மமான முறையில் கொலை
செய்யப்படுகிறான். செய்தி கேட்டுக் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. ஒரு
கள்ளி படர்ந்த திருவனந்தபுரம் சுடுகாட்டில் நம்பி புகைந்து போகிறான்,
அவன் லட்சியங்களைப் போலவே.

ஜோஷி மடத்திலிருந்து புறப்பட்டு, தல யாத்திரை செய்து கொண்டே ஊருக்குத்
திரும்பி வரும் நம்மாழ்வார், தன் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். நம்பி
இறந்து போன சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போகிறார். படுத்த
படுக்கையாக இருக்கும் பொன்னாவோ பிள்ளை நம்மாழ்வாரை அடையாளமே கண்டு
கொள்ளாமல் இருக்கிறாள்.

கண்ணன் ரோசாவை மணம் செய்து கொள்ள வேண்டுகிறான் அவள் மறுத்து விடுகிறாள்.
இறுதியில் நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையுடனும் அவள்
வீட்டிலேயே தங்கி விடுகிறார். உமாவின் நினைவுடன் கண்ணன் ஐ.ஏ.எஸ்.தேர்வு
முடித்து டெல்லி செல்கிறான்.

இதுதான் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட புலிநகக் கொன்றையின் கதைச் சுருக்கம்.

ஆரம்பம், நடு, முடிவு என்று நாவலின் முழுமையான அம்சங்கள்
கொண்டிருந்தாலும், நாவல் இறுதியில் ’சென்று தேய்ந்து இருதல்’ என்னும்
வகையிலேயே அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் நம்பியின் மரணத்தோடு,
நம்மாழ்வார் திரும்ப வந்து குடும்பத்துடன் இணைவதோடு நாவல் ஒருவிதத்தில்
முற்றுப் பெற்று விடுகிறது எனலாம். மற்றொரு விதத்தில் பார்த்தால் நாவல்
முடியவில்லை, கண்ணனின் டில்லி பயணத்தோடு தற்காலிகமாக முடிந்திருக்கிறது
அவ்வளவே! கண்ணனின் டில்லி வாழ்க்கை, சீக்கியர் பிரச்சனை, சாகித்ய அகாதமி
விவகாரம், டில்லி அரசியல், காந்திகளின் எழுச்சி-வீழ்ச்சிகள், கழகங்களின்
வீழ்ச்சி என்று சமகாலச் செய்திகளை கண்ணன் மூலமாகப் பதிவு செய்ய
கிருஷ்ணனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. புலிநகக் கொன்றையின்
இரண்டாம் பாகத்தை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை
அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால்
எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய்
இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும்
அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும்
பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக்
கொன்றையைப் போலவே!

புலிநகக் கொன்றை
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை
நாகர்கோவில் - 629001

(முன்னர் என் வலைப்பதிவில் வெளியானதன் சுருக்கம்)

Chandramowleeswaran. V

unread,
Aug 12, 2011, 9:54:15 AM8/12/11
to tamilv...@googlegroups.com
இlல்லை அரவிந்த் இங்கே இது தான் முதல் முறை

நானும் படித்திருக்கின்றெேன்


--
Contact Details:
V.Chandramowleeswaran
Mobile :+91 98406-56627



2011/8/12 Arvind Swaminathan <swam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.


RVSM

unread,
Aug 12, 2011, 9:59:11 AM8/12/11
to tamilv...@googlegroups.com
சார்! இது ஒரு அற்புதமான நாவல். நான் இரசித்துப் படித்தேன்.

// பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை
அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால்
எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய்
இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும்
அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும்
பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக்
கொன்றையைப் போலவே!//

நெஞ்சையள்ளும் வரிகள்!! நூல் நயம் அற்புதமாக செய்கிறீர்கள். நன்றி.

Raj Chandra

unread,
Aug 12, 2011, 9:25:27 PM8/12/11
to தமிழ் வாசகன்
அர்விந்த், இன்று இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதுவதாக இருந்தேன்.
நீங்கள் பதிந்துவிட்டீர்கள்...நன்றி. நல்ல flow-ல் நாவலை
விவரித்திருக்கிறீர்கள்.

Arvind Swaminathan

unread,
Aug 13, 2011, 2:29:57 AM8/13/11
to tamilv...@googlegroups.com
நன்றி ராஜ்

அரவிந்த்

2011/8/13 Raj Chandra <kabi...@gmail.com>
அர்விந்த், இன்று இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதுவதாக இருந்தேன்.
நீங்கள் பதிந்துவிட்டீர்கள்...நன்றி.  நல்ல flow-ல் நாவலை
விவரித்திருக்கிறீர்கள்.

Arvind Swaminathan

unread,
Aug 13, 2011, 2:30:21 AM8/13/11
to tamilv...@googlegroups.com
நன்றி ஆர்வி எஸ்.எம்

அரவிந்த்

2011/8/12 RVSM <r.we....@gmail.com>

Pushparaj

unread,
Aug 13, 2011, 6:08:50 AM8/13/11
to tamilv...@googlegroups.com
பிரமாதமான அறிமுகம். நீண்ட நாட்களாக என் விருப்பப் பட்டியலில் உள்ள புதினம். அதனை உடனடியாக வாங்கிப் படித்திடும் ஆவலை தூண்டி விட்டுள்ளது தங்களது நூல் விமர்சனம். தங்கள் எழுத்து நடை நன்று.

புஷ்பராஜ்

2011/8/13 Arvind Swaminathan <swam...@gmail.com>

Bala Boston

unread,
Aug 14, 2011, 11:58:47 AM8/14/11
to tamilv...@googlegroups.com, bsu...@gmail.com
அக்டோபரில் பிஏகே-வின் அடுத்த நாவல் வெளியாகிறது. அதன் முகப்பு பிடிஎஃப்பாக இணைத்திருக்கிறேன்.
பாலாஜி
பாஸ்டன்


A Muddy River Cover 2.pdf

Raj Chandra

unread,
Aug 14, 2011, 6:01:44 PM8/14/11
to தமிழ் வாசகன்

பிஏகே தன் அஸ்ஸாம் பயணம் பற்றி (அவருடைய சக இன்ஜினியரை மீட்க)
‘அக்கிரகாரத்தில் பெரியாரில்’ எழுதியிருக்கிறார். நேரில் சந்தித்தபோதும்
அஸ்ஸாம் பற்றி நாவல் எழுதுவதாக சொன்னார்.
>  A Muddy River Cover 2.pdf
> 298KViewDownload

Arvind Swaminathan

unread,
Aug 15, 2011, 5:38:28 AM8/15/11
to tamilv...@googlegroups.com
அருமை. அருமை. தமிழில் எப்போது வெளி வருகிறது?

அரவிந்த்

2011/8/14 Bala Boston <bsu...@gmail.com>
அக்டோபரில் பிஏகே-வின் அடுத்த நாவல் வெளியாகிறது. அதன் முகப்பு பிடிஎஃப்பாக இணைத்திருக்கிறேன்.
பாலாஜி
பாஸ்டன்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msg/tamilvasagan/-/SATpTvJ5Z8cJ.
Reply all
Reply to author
Forward
0 new messages